பி.கே. சிவகுமார்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்:
மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிற புதிய கூட்டணி அரசாங்கம் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. கலவரங்களுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. சிறுபான்மையினருக்கெதிராக அரசாங்கங்களே கண்டும் காணாமல் நடத்துகிற கலவரங்களைத் தடுக்கவும், அதற்குத் துணைபுரிபவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தரவும், அக்கலவரங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்கவும் உதவும் வகையில் இச்சட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று வேண்டுவோம். கலவரங்களை நடத்துவோரும் தூண்டுவோரும் எவராக இருந்தாலும் பாரபட்சம் காட்டாத சட்டமாக இது அமைய வேண்டும். அதே நேரத்தில் ‘பொடா ‘விலிருந்த ஓட்டைகள் போன்று எதுவும் இல்லாமலும், மாநில அரசுகள் துஷ்பிரயோகம் செய்து பழிதீர்த்துக் கொள்ள உதவாத வகையிலும் இச்சட்டம் வடிவமைக்கப்படும் என்று நம்புவோம்.
ஒருகாலத்தில் தமிழ்நாட்டை மொழிவெறி பிடித்து உலுக்கியது போல இந்தியாவை மதவெறி பிடித்து உலுக்காமல் இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அதற்கு இத்தகைய சட்டங்கள் உதவுமானால் அவற்றை வரவேற்க வேண்டும். மொழிவெறியானது தமிழ்நாட்டுக்கு இழைத்த பாதகங்களிலிருந்து தமிழ்நாடு இன்னமும் முழுமையாக வெளியேற முடியாமல் நின்று கொண்டிருக்கிறது. அதனால், மதத்தின் பெயரால் கிளப்பப்படும் குறுகிய உணர்வுகளும் பாதகங்களையே இந்தியாவுக்கு விளைவிக்கும் என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. எந்தப் பற்றுமே வெறியாகாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை.
சல்மான் ருஷ்டி போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கிடையேயான தவறுகளை மட்டும் கண்டிக்கவில்லை. குஜராத்தில் நடந்த படுகொலைகளையும் கண்டிக்கிறார்கள். எழுதுகோல் எடுத்த எவரும் மதம், மொழி, நாடு, இனம் போன்ற குறுகிய உணர்வுகளுக்கு அப்பால் மனிதநேய அடிப்படையுடன் பிரச்னைகளை அணுக முடியுமானால், அடுத்தவர் புண்ணைப் பார்த்து அழுகிற அதே நேரத்தில் நம்முடைய அழுக்குகளையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்; அழுக்குகளைப் பற்றி விமர்சித்து எழுதவும் முடியும்.
அதே நேரத்தில் – மதவாத இயக்கங்களை தடை செய்வது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். காமராஜர் தி.மு.க. விஷயத்தில் சொன்னதுபோல் அவற்றை அரசியல் ரீதியாகவே மதச்சார்பற்ற அமைப்புகள் சந்திக்க வேண்டும். மதம் சார்ந்த தேசீயம் என்கிற பெயரில் பா.ஜ.க செய்து வருகிற காரியங்கள் எப்படி இந்து மதத்தின் தொன்மைக்கும் கொள்கைகளுக்கும் எதிரும் முரணுமானவை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். மதம் பற்றிய சரியான அறிவும் அணுகுமுறையும் இல்லாதவர்களே மதம் சார்ந்த தீவிரப் போக்கை அனுஷ்டிக்கிறார்கள் என்பதால், மதம் குறித்த சரியான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். மதவாத இயக்கங்களை தீண்டத்தகாத இயக்கங்கள் என்று தள்ளி வைப்பதைவிட அவர்கள் வைக்கிற வாதங்களுக்கு அறிவுபூர்வமான எதிர்வாதங்கள் வைப்பதும், இந்து மதம் என்றால் என்ன, அதன் சிறப்புகளும் குறைகளும் யாவை என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வதும் உதவும். எந்த மதமும் – ஏன் எந்த – வரலாறும் ஆராதிக்கத்தக்க அம்சங்கள் மட்டுமே நிரம்பியது அல்ல. கடுமையான விமர்சனங்கள் முன்வைக்க வேண்டிய அம்சங்கள், அவசியங்கள் நிறைந்தவையே அனைத்தும். அவற்றை அறிந்து – பொதுவான மனிதகுல வளர்ச்சிக்கு உதவுகிற, சிந்தனையை முன்னெடுத்துச் செல்கிற விமர்சனங்களும் அலசல்களும் மதம் உள்ளிட்ட நிறுவன மற்றும அரசியல்மயமாகி வரும் கூறுகளின் மீது வைக்கப்படுவது குறுகிய உணர்வுகளில் அரசியல் கட்சிகள் குளிர் காயாமல் தடுக்க உதவும்.
**** **** ****
அமெரிக்க இந்தியர்களும் பா.ஜ.க.வும்:
குஜராத் படுகொலைகளுக்குக் காரணமாக கோத்ரா ரயில் தீவைப்பைக் காட்டிப் படுகொலைகளை நியாயப்படுத்துவது இந்திய அமெரிக்க அறிவுஜீவிகளுக்கு வசதியாக இருக்கிறது. கோத்ரா ரயில் தீவைப்பு கண்டிக்கப்படக் கூடியது. அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதைக் காரணமாக வைத்து – மாநில அரசாங்கம் உடந்தையாக இருக்க – குஜராத்தில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கெதிரான வன்முறையும் அராஜகமும் கட்டவிழ்த்து விடப்பட்டதாலேயே அதை அரசாங்கம் ஏற்பாடு செய்த பயங்கரவாதம் என்று எழுதுகிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதுவது எவ்வளவு ஆபத்தானதோ, அவ்வளவு ஆபத்தானது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஈராக்கில் அபு காரிப் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். புஷ்ஷீம் ரம்ஸ்பீல்டும் மன்னிப்பு மட்டும் கேட்டுவிட்டு நடந்தவற்றுக்கு வருந்துகிறார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கென்னவோ தேர்தல் சமயத்தில் குஜராத் படுகொலைகளுக்காக வருந்திய வாஜ்பாய் மற்றும் அத்வானி முகங்கள் நினைவுக்கு வருகின்றன.
புஷ்ஷீக்கு எதிராக தேர்தலில் நிற்கும் ஜான் கெர்ரி கூட இதை ஒரு முக்கியப் பிரச்னையாகப் பார்த்து கேள்வி எழுப்பாமல், பட்டும் படாமலும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டுப் போகிறார். அது குறித்து எழுதிய பத்திரிகைகள், ஜான் கெர்ரியின் சுபாவமும் வியூகமுமே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்கின்றன. எந்தப் பிரச்னையும் அது முற்றுப் பெறும்வரை காத்திருந்து, பொதுமக்கள் ஒட்டுமொத்த கருத்து அதற்கு எதிராகத் திரும்பியபின் அதைப் பயன்படுத்திக் கொள்கிற தேர்ந்த அரசியல்வாதியாக கெர்ரி இருந்து வந்திருக்கிறார் என்று எழுதுகின்றன. ரம்ஸ்பீல்டு பதவி விலக வேண்டும் என்று யாரும் மல்லுக்கட்டுவதாகத் தெரியவில்லை. ஆனால், அரசியல்வாதிகள் பேசுகிறார்களோ இல்லையோ இங்கே பொதுமக்களிடையே ஈராக் மீதான போர் ஒரு முக்கிய விவாதமாக ஆகிவருகிறது. அதற்குச் சார்பாகப் பேசுபவர்கள், எதிர்ப்பாகப் பேசுபவர்கள், என்ன செய்திருக்க வேண்டும் என்று அலசுபவர்கள் என்று மக்கள் இவ்விஷயத்தில் காட்டுகிற ஆர்வத்தைப் பார்க்கும்போது நவம்பர் தேர்தலில் மக்களின் முடிவை நிர்ணயிக்கிற ஒரு விஷயமாக இது வளர்ந்து வருகிறது என்று எண்ணுகிறேன். அலுவலகக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்னரும், மதிய உணவின் போதும், சகஜமான சம்பாஷணைகளிலும் பேஸ்கட்பால், பேஸ்பால் அல்லது புட்பால் என்று இம்மூன்றில் ஒன்றைப் பற்றிப் பேசுவார்கள் என்று அறியப்பட்ட அமெரிக்கர்கள் ஈராக்கைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் குடியரசு கட்சி நிகழ்த்துகிற அரசியல், செய்கிற பிரசாரங்கள், பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் செய்கிற உரிமை மீறல்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது அந்தக் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால், அமெரிக்காவில் இருக்கிற இந்தியர்கள் பெரும்பாலும் குடியரசுக் கட்சியைச் சாராமல் ஜனநாயகக் கட்சி கொள்கைகளை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் தவறுகளை தைரியமாக விமர்சிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் கணிசமானவர்கள் இந்தியா என்று வந்துவிட்டால் பா.ஜ.க.வுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ கொடி பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆராயத்தக்க முரண்பாடு இது.
ஈராக் சிறை அட்டூழியங்கள் பற்றி சீமோர் ரஷ் நியூயார்க்கரில் எழுதிய கட்டுரையை இங்கே படிக்கலாம். இந்தக் கட்டுரையை மறுத்து அமெரிக்க அரசாங்கம் அறிக்கை விட்டிருக்கிறது.
**** **** ****
திண்ணை களஞ்சியம்:
நல்ல படைப்பானது ஒரு படைப்பாளி குறித்து வருகிற தனிப்பட்ட விமர்சனங்கள், எதிர்மறை கருத்துகள் யாவற்றையும் தள்ளி வைக்கச் செய்துவிடும். யார் எழுதியிருந்தாலும் ‘ஆஹா ‘ என்று படைப்பை வியந்து அனுபவிக்கச் சொல்லும். எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கையோ, குணாதிசயங்களோ, அவர் கைகொள்கிற கொள்கைகளோ படைப்பின்முன் அடையாளமிழந்து போய்விடுகின்றன. விக்ரமாதித்யனைப் பற்றிய பல விமர்சனங்களைப் படித்திருக்கிறேன். சமீபகாலமாக இலக்கியச் சண்டைகளில் கூட அவர் பெயர் அடிபடுவதைப் பார்த்திருக்கிறேன். அவர் கவிதைத் தொகுதி ஒன்றையும் முன்னர் படித்திருக்கிறேன். அவருக்கென்று ஒரு விசேடமான – சொல்லப்போனால் இயல்பற்ற என்பதனால் விசேடமாகிவிட்ட – மனக்கூறு இருக்கிறது. அது அவர் கவிதைகளை தனித்துக் காட்டுகிறது என்று தோன்றியது. இணைய இலக்கியக் குழுமங்களில் அவ்வப்போது யாராவது ஒருவர் குற்றாலத்தில் கண்டெடுத்த ஒற்றைச் சிலம்பு வரைந்த பொற்பாத சித்திரம் பற்றி அவர் எழுதிய கவிதையைச் சிலாகித்து எழுதி வருகிறார்கள். நல்ல படைப்பின் சிறப்பு அதுதான். இந்தப் பக்கத்தில் உள்ள அருவி பற்றிய கவிதையைப் பாருங்கள். கடைசி இரண்டு வரிகளில் சட்டையைப் பிடித்து உலுக்கி, கன்னத்தில் அறைந்து நிற்கிறது. அருவியையும், மனித வாழ்க்கைக்கும் அருவிக்கும் உள்ள வித்தியாசங்கைளையும் விவரிப்பதுபோல தோன்றுகிற கவிதை, அருவிபோல விழ வேண்டிய மனித வாழ்வின் அவலம் சொல்வதாக உணர வைப்பது இதன் சிறப்பு. அதுமட்டுமில்லை – சுதந்திரம், அறிவு, உரிமை, மதிப்பீடுகள் என்று நாம் விரும்பி பூட்டிக் கொள்ளூம் பல தளைகளைப் பற்றிய கேள்விகளை உணர்த்தி நிற்கிறது.
அருவி
யாருக்கும் சொந்தமில்லை
அதனால்
அருவி யாருக்கும் அன்னியமுமில்லை
விழுவது தவிர்த்து
வேறு லட்சியமென்ன உண்டு அருவிக்கு
குளிர்ச்சியும் தெளிவும் அதன்
குணங்களல்ல இயற்கை
அரசுகள் மாறுவதும் ஆட்சியாளர்கள் புதிது புதிதாக வருவதும்
அதற்கொரு விஷயமேயில்லை
அருவியின் எல்லைக்குள் யாரும் செய்தித்தாள் மேய்வதோ
அரசியல் பேசுவதோ இல்லை
அருவியிடம் கோபம் கொள்வோர் யாருமில்லை
அவசியமென்ன இருக்கிறது அதற்கு
அருவி
வாழ்தல் பயமறியாதது
அதனால்
சுரண்டல் தெரியாதது
அருவி
இரை தேடியோ புணர்ச்சிக்கோ அலைவதில்லை
கேள்வி கேட்பதும் குழம்பித்தவிப்பதும்
கிடையவே கிடையாது
பொறுப்பு அலட்சியம்
மகிழ்ச்சி வருத்தம்
பேறு இழப்பு
எல்லாம் கடந்தது அருவி
அத்வைதம் மார்க்ஸீயம் ஸ்டக்சுரலிஸம்
எதுவும் தெரிந்து கொள்ளவேண்டிய ஹிம்சையற்றது அது
ஆயிரம் தடவை அருவியில் குளித்தாலும்
யாருக்கும் ஏன் புத்தி வருவதில்லை
**** **** ****
http://pksivakumar.blogspot.com
- மந்திர உலகின் தந்திரங்கள்
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- ஆயுத எழுத்து பற்றி
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- இருதுளி கண்ணீர்
- தண்டவாளங்கள்
- மெய்மையின் மயக்கம் – 1
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- இல்லம்…
- அறை
- கவிதைகள்
- பூமகன்
- தீவு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- பலியர்களுடன் உரையாடல்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- Dahi pasanday
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- பூமித்தின்னிகள்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்
- வள்ளி வோட்டு போட போறா!
- காத்திருப்பு
- வலை
- இலவசம்
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- பிறந்த மண்ணுக்கு – 3
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- தேனீ – மொழியும் பணியும்
- ரேடியோவின் கதை
- … உலக போலீஸ் …
- கவிதைகள்
- தாய் மனம்
- உள் நோக்கு
- கவிதைகள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- நாய்கள்
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- வதை
- சீதைகளைக் காதலியுங்கள் !