பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

ஜேம்ஸ் வில்ஸன்(தமிழில்: ஆசாரகீனன்)


[மொழி-பெயர்ப்பாளரின் குறிப்புகள் [..] என்ற வகை அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. தவிர, எண்ணிக்கையிட்ட அடிக் குறிப்புகளும் விவர விளக்கம் தருகின்றன. கட்டுரை ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பும் கீழே தரப்பட்டுள்ளது]

19-ஆம் நூற்றாண்டு வரை, பயங்கரவாதத்தை நியாயப்படுத்தக் கூடிய வழக்கமான காரணமாக மதம் மட்டுமே ஒப்புக் கொள்ளப்பட்டது. அது ஏன் என்று புரிந்து கொள்வது கடினமல்ல: மதம் உண்மையாக நம்புபவர்களுக்கு நல் வாழ்வு பற்றியும், தீமையை அடையாளம் கண்டுகொள்வதற்கும் வழி சொல்கிறது; தவறான நம்பிக்கைகள் மற்றும் தவறான பழக்க வழக்கங்களின் வடிவில் உள்ள தீமை கடவுள் வரையறுத்திருக்கும் வாழ்க்கையை நலிவடையச் செய்கிறது அல்லது ஊழலாக்குகிறது என்று நீங்கள் நம்பினால், அத் தீமையை எதிர்த்துப் போராட வேண்டியது உங்களது இன்றியமையாத கடமையாகிறது. ஒத்த கருத்துடைய நம்பிக்கையாளர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் வன்முறையை, தற்கொலைத் தாக்குதல்களைக் கூட மேற்கொண்டு அத் தீமையை எதிர்ப்பது அவசியம்.

இந்தியாவில் தக்கர்கள் கூட்டம், அவர்கள் இயங்கிய பல நூற்றாண்டுகளில் இந்து மதப் பெண் தெய்வமான காளிக்குப் பலியாக 10 லட்சம் பேர்களைக் கழுத்தை மெதுவாக நெரித்துக் கொன்றிருக்கக் கூடும். தக்கர்களுக்கு அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லாததால், தாம் பிடிபட்டால் கிட்டும் மரண தண்டனையைச் சொர்க்கத்திற்குச் செல்லும் விரைவான பாதை என ஆவலுடன் எதிர் நோக்கினர்[1].

முஸ்லிம் உலகத்தில், முகமது நபி இறந்த சில ஆண்டுகளிலிருந்தே அரசியல் கொலை (assasination) என்ற வகை பயங்கரவாதம் இருந்துவருகிறது. நபிக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்றவர்களில், மூன்று பேர்கள் குறுவாளால் குத்திக் கொல்லப் பட்டனர். ‘அஸாஸின் ‘ [இனி இவர்களை அரசியல் கொலைகாரர் என்றும் குறிப்பிடுவோம்] என்ற ஆங்கில வார்த்தையே ஹஸன் இபின் அல்-ஸப்பாஹ் என்பவரால் தொடங்கப்பட்ட குழுவினரிடமிருந்தே வருகிறது. இவரது சீடர்களால் 11-ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயங்கரவாதம், இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இவர்கள் முற்றிலும் துடைத்து அழிக்கப்படும் வரை, முஸ்லிம் உலகம் முழுவதும் பரவி இருந்தது. இவர்கள் தங்கள் எதிரியரான சுன்னி முஸ்லிம்களைப் பெருமளவில் கொன்று குவித்தனர். ஒருவேளை, மொத்த முஸ்லிம் கலிஃபாக்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டே இருக்கலாம்.

‘அஸாஸின் ‘ என்ற கூட்டத்தாரை இரண்டு விதங்களில் உலகின் முதல் பயங்கரவாதிகளாகக் கருதலாம்[2]. கொலை செய்வதன் மூலம் வெறுமே ஆட்சியாளர்களை மாற்றுவதை மட்டுமே அவர்கள் விரும்பவில்லை. நெறி தவறி களங்கப்பட்டவர்களாக அவர்களால் கருதப்பட்ட சுன்னி பிரிவின் ஆட்சியை மாற்றி, ஓர் ஆதர்ச ஷியா (பிரிவினரின்) ஆட்சியை ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாக இருந்தது. மேலும், அஸாஸின்கள் குறுவாட்களை மட்டுமே தாக்கப் பயன்படுத்தியதால், அவர்கள் பிடிபடுவதும், பெரும்பாலும் கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் கொலை செய்யப்படுவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. பெர்னார்ட் லூயிஸ்[3] கருதுவதைப் போல, கொலை செய்வதென்பது ஓர் இறைப் பற்றுள்ள செயலாகவும், அம் முயற்சிக்குப் பிறகு பிழைத்து உயிர் வாழ்வது அவமானமாகவும் கருதப்பட்டது.

நவீன காலத்தில், கொலைகாரர்கள் ஸிரியா மற்றும் இலங்கை அதிபர்களின் உயிரைப் பறித்திருக்கிறார்கள்; இரான் மற்றும் இந்தியாவில் தலா இரண்டு பிரதமர்களைக் கொன்றிருக்கிறார்கள்; ஏடன், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு யேமன் அதிபர்கள், லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் எகிப்தின் அதிபர், எண்ணற்ற நீதிபதிகள், மேலும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால், மதம் சார்ந்த வன்முறை என்பது இஸ்லாத்துக்கு மட்டும் உரியதல்ல. அமெரிக்காவில், கருச்சிதைவு செய்யும் மருத்துவமனைகளின் மீது குண்டு வீசுவது, அந்த மருத்துவர்களைச் சுடுவது போன்றவற்றைச் செய்பவர்கள் கிருஸ்தவ விவிலியமே அப்படிக் கட்டளை இடுவதாகக் கருதுகிறார்கள். கயானாவில் ஜிம் ஜோன்ஸ் தன்னுடைய முகாமில் இருந்து தன்னைப் பின்பற்றுபவர்களைக் கொன்றார் அல்லது தற்கொலை செய்து கொள்ளச் செய்தார் . மேலும், வாகோ [அமெரிக்கா, டெக்ஸாஸ் மாநிலம்]-வில் டேவிட் கொரெஷ் தன்னைப் பின்பற்றுபவர்களின் ஒட்டுமொத்தமான மரணத்தைத் தடுக்க ஒன்றும் செய்யவில்லை [4]. ப்ளெய்ஸெ பாஸ்கல் சொல்வதைப் போல, ‘மத நம்பிக்கையின் பொருட்டு செய்யும் போது தவிர வேறு எப்போதும் மனிதர்கள் வெளிப்படையாகவும், திருப்தியுடனும் கொடுமை இழைப்பதில்லை. ‘ ரேண்ட் (RAND) நிறுவனத்தில் தீவிரவாதம் பற்றிய நிபுணரான இருக்கும் ப்ரூஸ் ஹாஃப்மன் பிற பயங்கரவாத வடிவங்களை விட தற்கொலைத் தாக்குதல்கள் நான்கு மடங்கு அதிகமான மக்களைக் கொல்கின்றன என்று கண்டுள்ளார்; செப்டம்பர் 2000-த்திலிருந்து இத்தகைய தாக்குதல்கள் 750 உயிர்களைப் பலி கொண்டுள்ளன – 11 செப்டம்பர் தற்கொலைத் தாக்குதலில் இறந்த 3000 பேர் இதில் சேர்க்கப்படவில்லை. மத வழி செல்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மை தான். உதாரணமாக, ஜப்பானியர் அமெரிக்க போர்க் கப்பல்களுக்கு எதிராக அனுப்பிய காமிகாஜி விமானங்களுக்குப் பின்னே எந்த மதவழி உந்துதலும் இல்லை. இலங்கையில் உள்ள பயங்கரவாதிகள் மதத்தால் உந்தப்படுபவர்கள் அல்ல. ஆனால் இன்று, பயங்கரவாதிகளைப் பொறுக்கி எடுக்கும் இயக்கங்களை மத அடிப்படையிலான குறிக்கோள்கள் எதுவும் வழி நடத்தாத நிலையிலும், மத நம்பிக்கைகள் மற்றும் குறிப்பாக, இஸ்லாத்தைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட விளக்கம் ஆகியன தற்கொலை வழி பயங்கரவாதிகளின் உள்நோக்கங்களில் பெரும் இடத்தைப் பிடிக்கின்றன. மத்திய கிழக்கில் [மேற்கு ஆசியாவில்] உள்ள ஃபாடா போன்ற பயங்கரவாத குழுக்கள் மத சார்பற்றவை. மேலும், மத சார்பற்ற காரணங்களுக்காகவும் சிலர் அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களில் சேர்கிறார்கள்.

பயங்கரவாதம் என்பது என்னதான் குறிக்கோளுடன் கூடியதாக இருந்தாலும், மக்களைக் குழப்பம் அடையச் செய்கிறது, ஏனெனில், மக்களால் தாம் இப்படிச் செய்ய முடியும் என்று கற்பனை கூடச் செய்ய முடிவதில்லை. இத்தகைய குழப்பம், பயங்கரவாதிகள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அமைதியற்ற சுற்றுச் சூழலின் காரணமாக உருவாக்கப்பட்டவர்கள் என்று பெரும்பாலும் நம்மைக் கருத வைக்கிறது.

வலுவான கட்டுரை ஒன்றில், ஸிந்தியா ஓஜிக்[5] தங்களைத் தாங்களே வெடித்துச் சிதறடித்துக் கொள்ளும் பணியில் குழந்தைகளை அமர்த்துவது என்ற ‘காட்டுத்தனமான பாலஸ்தீன சமூகக் கண்டுபிடிப்பை ‘ விவரிக்கிறார்: இத்தகைய செயல்கள் ‘உள்ளுணர்வுக்கு எதிரானவை ‘, ஏனென்றால் இவை வாழும் உந்துதலுக்கு எதிரானவை, ஒரு பண்பாட்டின் வக்கிரமான கருதுகோளினால் (லட்சியத்தால்) உற்பத்தியானவை என்பது அவர் வாதம். இத்தகைய ஆள் சேர்ப்பு மனப்பிறழ்வு அல்ல என்று அவர் சொல்வது சரி என்றாலும் இது மனித உள்ளுணர்வை எதிர்த்தல் என்று சொல்வது முழுவதும் சரியல்ல. இது சில உள்ளுணர்வுகளை மீறுகிறது என்றாலும், வேறு உள்ளுணர்வுகளுடன் இசைவதாகவே இருக்கிறது.

மக்கள் இத்தகைய குழுக்களில் ஏன் சேர்கிறார்கள் என்பதை விளக்க, நான் சில மாறுபாடுகளை இனம் காட்ட வேண்டும். ஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெரால்ட் போஸ்ட்[6] குறிப்பிடும் ஒரு மாறுபாடு, கலகக் கொள்கையாளர்களுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையிலானது.

கலகக்காரர்கள் (anarchist) அல்லது கொள்கையாளர்கள் (ideological) குழுக்களுள் ஜெர்மனியிலிருந்த செம்படைக் குழு (பாதெர்-மையின்ஹாஃப் குழு என்று பிரபலமாக அறியப்படுவது), இத்தாலியின் செஞ்சேனை, அமெரிக்காவின் தட்பவெப்பர்கள் (weathermen) ஆகியவை அடங்கும். 1980-களின் தொடக்கத்தில் ஜெர்மன் அரசு செம்படைக் குழு மற்றும் வலதுசாரி பயங்கரவாத குழுக்கள் பற்றி பெரிய அளவிலான விசாரணை ஒன்றை நடத்தியது. (இது நடந்தது ஜெர்மனியில் என்பதால், இது பற்றிய விவரங்கள் நான்கு புத்தகத் தொகுதிகளாக வெளியிடப்பட்டன என்று அறிந்து நீங்கள் வியப்படையப் போவதில்லை.) செம்படை உறுப்பினர்கள் நடுத்தர வர்க்கத்தினராகவும், இவர்களுள் சுமார் 25 சதவீதத்தினர் உடைந்து போன குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். நான்கில் மூன்று பங்கினர் தங்கள் பெற்றோர்களுடன் தங்களுக்கு தீவிரமான பிரச்சினை இருந்ததாகவும் தெரிவித்தனர். சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் இளம் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் பொதுவாக ‘ நிலைத்த அமைப்பையும் ‘ (establishment), முதலாளித்துவ சமூகத்தையும் கண்டனத்துக்கு உள்ளாக்க விரும்பி ஒத்த கருத்துள்ளவர்களின் குழுக்களில் சேரவும், அக் குழுக்களால் நாளாவட்டத்தில் தம் வாழ்வையே முழுமையாகப் பறித்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இத்தாலிய செஞ்சேனையினரும் இத்தகைய பின்னணி கொண்டவர்களே.

கொள்கை அடிப்படையிலான பயங்கரவாதிகள் தாங்கள் உருவாக்க விரும்பும் உலகம் பற்றிய தெளிவான கண்ணோட்டம் எதையும் தருவதில்லை. மக்களைத் தம்மிடையே ஒரு புது வகை உறவு கொள்ள வைக்கப் போவதாகத் தெளிவில்லாத ஒரு கருத்தை முன் வைத்தாலும், அந்த உறவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைப் பற்றி ஒருபோதும் சொல்வதில்லை. அழிப்புதான் அவர்களது இலக்கு, படைப்பு அல்ல. அவர்கள் மார்க்ஸியராக இருக்கும் பட்சத்தில், இத்தகைய தெளிவின்மை சற்றும் வியப்பு தருவதற்கில்லை, ஏனெனில் மார்க்ஸே கூடத் தான் படைக்க விரும்பும் உலகு எத்தகையது என்பதை விவரிக்கவில்லை, ஒரு சில பளபளப்பான, ஆனால் உள்ளீடு இல்லாத வெற்றுப் பொதுமைப்படுத்தல்களை மட்டும் தந்தார்[7].

மற்றொரு முக்கியமான வேறுபாடு: ஜெர்மனியில் செம்படைக் குழு போன்ற இடதுசாரி பயங்கரவாதிகள் நல்ல உயர் கல்வி கற்றவர்கள், உறுப்பினரில் பெரும் பகுதி பெண்களாகக் கொண்டவர்கள். மேலும், வலதுசாரி பயங்கரவாதிகளை விட நன்கு கட்டமைக்கப்பட்டவர்கள். இதே போல அமெரிக்காவிலும் – வெதர் தலைமறைவு இயக்கம் [இடதுசாரி] மற்றும் ஆரிய நாடு [வலதுசாரி] ஆகிய இரண்டுக்கும் இடையில் இத்தகைய வேறுபாடுகள் இருந்தன[8]. இடதுசாரி பயங்கரவாதிகளுக்கு நன்கு செப்பனிடப்பட்ட கொள்கைக் கட்டுமானம் உண்டு; வலதுசாரி பயங்கரவாதம் பெரும்பாலும் நோய் போன்ற, வழக்கப் பிறழ்வாகத்தான் இருக்கும்.

இத்தகைய வேறுபாடு இருக்கக் காரணம் என்ன என்று எனக்கு முழுவதும் தெளிவாகவில்லை. வலதுசாரி பயங்கரவாத இயக்கங்கள், இழக்கப்பட்டதாகத் தாம் கருதும் ஓர் உலகத்தை நோக்கிப் பின்னால் பார்ப்பதும், இடதுசாரியினர் தாம் அவாவுகிற ஓர் உலகம் வர இருப்பதாகக் கருதி முன்புறம் நோக்குவதும் (இவ் வேறுபாடு எழ) ஒரு காரணமாய் இருக்கலாம். ஓர் எதிர்காலத்தைக் கற்பனை செய்ய விரும்புபவர்களுக்கு வேண்டுமானால் உயர் கல்வி பயனுடையதாக இருக்கும். ஆனால், கடந்த காலம் பற்றித் தங்களுக்குத் தெரியும் என்று நினைப்பவர்களுக்கு உயர் கல்வியால் அவ்வளவு பயனில்லை. இடதுசாரியினர் புத்தகங்களிலிருந்தும், பேராசிரியர்களிடமிருந்தும் எதிர்காலம் பற்றிய ஒரு சிறு கீற்றைக் காணப் பெற்று, அதையே படைத்துவிடப் போராடுகிறார்கள்.

வலதுசாரியினரின் அதிருப்தி கடந்த காலம் பற்றிய உணர்வை அடிப்படையாகக் கொண்டது, எனவே, அதை மீட்டு விட அவர்கள் போராடுகிறார்கள். ‘கு க்ளக்ஸ் க்ளான் ‘ (Ku Klux Clan) அல்லது ஆரிய நாடு (Aryan nation) ஆகிய அமைப்புகளில் உறுப்பினராவதற்கு கருப்பர்கள் அல்லது கத்தோலிக்கர்கள் அல்லது யூதர்களை ஒடுக்குவது நல்லதுதான் என்று கருதுவதே போதுமானதாக இருந்தது [இவை வலதுசாரி என்பது கட்டுரையாளர் கருத்து]. வெதர் தலைமறைவு இயக்கத்தில் சேர, பூர்ஷ்வாக்களின் சமூகம் நசித்து வருவதும் ஒடுக்குவதும் என்று புது உறுப்பினருக்கு யாரேனும் சொல்லித் தர வேண்டியிருந்தது [இது இடதுசாரி இயக்கம்].

இதற்கு மாறாக, தேசியவாத மற்றும் மதவாத பயங்கரவாதிகள் என்பவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள். இவர்களைப் பற்றிய இன்னமும் கட்டமைக்கப்படாத உதிரி ஆய்வுகள், பெரும்பாலும் இவர்களுக்குத் தம் பெற்றோருடன் எந்த மோதலும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன; மாறாக, இவர்கள் தங்கள் வீடுகளில் கற்ற கருத்துகளைச் செயல்படுத்த அதி தீவிரமான வழிகளைக் கையாள முயல்கிறார்கள். இதற்கும் மேலாக, இவர்களுக்குப் பெரும்பாலும் தாங்கள் உருவாக்க விரும்பும் உலகம் பற்றி தெளிவும் இருக்கிறது: மத அல்லது தேசியத் தலைவர்களால் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உலகம் இது. இத் தலைவர்களோ தாங்கள் பிரசாரம் செய்யும் கருத்தாக்கங்களை முற்றிலும் திரித்துக் காட்டக் கூடும் என்பது சாத்தியம்தான், ஆனால் இத்தகைய திரிப்புகள் மக்களை அடக்கி ஆளும் சக்தியைப் பெற்று விடுகின்றன.

பென்ஸில்வேனியா பல்கலைக் கழகத்தில் உள்ள மார்க் ஸேஜ்மன்[9], அல்-கய்தா பற்றி இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களை ஆராய்ந்திருக்கிறார். கொள்கை அடிப்படையிலான பயங்கரவாதிகளைப் போல் அல்லாமல், இவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு நெருக்கமானவர்களாக உணர்வதோடு, தங்களை முழுமையானவர்களாகவும், அக்கறை உள்ளவர்களாகவும் கருதுபவர்கள். பெரும்பாலும், இவர்கள் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்ததோடு, இறையுணர்வு மிக்க முஸ்லிம்களாகவும் இருப்பவர்கள். பெரும்பாலானோர் திருமணம் ஆனவர்கள்; பலருக்குக் குழந்தைகள் உண்டு. மன நோய்க்கான வெளிப்படையான அறிகுறிகள் ஒருவரிடமும் காணப்படவில்லை. இவர்களிடையே அல்-கய்தா பிரபலமடையக் காரணம் அது ஒரு சமூகக் கூட்டமைவாக இருந்து, மேலை நாகரிகத்தின் சீரழிந்த மதிப்பீடுகளை இனம் காணவும், எதிர்க்கவும் உதவியதே. மேலை நாடுகளுக்குப் படிக்க வந்து, தனிமைப்பட்டுப் போனவர்களும், தம் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்களும் இந்த அமைப்பால் மிகவும் வலுவாகக் கவரப்பட்டனர்.

பிரபலமான தேசிய பயங்கரவாதியான ஸப்ரி அல்-பனா (அபு நிதால் என்றும் அறியப்படுபவர்), ஜாஃபாவில் ஒரு வசதியுள்ள தந்தைக்குப் பிறந்தவர். இவர் தனது அமைப்பான, அபு நிதால் அமைப்பு என்றும் அறியப்படும் ஃபாடா புரட்சிக் குழுவின் மூலம் இஸ்ரேலை அழிக்கவும், அரசியல் ரீதியிலான தீர்வை ஆதரிக்கும் பாலஸ்தீனத் தலைவர்களைத் தாக்கவும் முயல்பவர். இவர் ஒருக்காலும் பரிதாபத்துக்குரிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லர்.

ஆலன் பி. க்ரூவ்கர்[10] மேலும் ஜிட்கா மலெச்கோவா ஆகியோர், இரானின் ஆதரவு பெற்ற ஷியாக்களின் படைக் குழுவான ஹெஸ்புல்லாவின் சார்பில் லெபனானில் சண்டை போட்டு மடிந்த படையினரைப் பற்றி ஆராய்ந்து இதையொத்த முடிவுக்கே வந்துள்ளனர். லெபனானின் சாதாரண மக்களோடு ஒப்பிடுகையில், ஹெஸ்புல்லா படையினர் வசதியான, நன்கு கல்வி கற்ற இளம் ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏழைகளாகவோ, கல்வியறிவு அற்றவர்களாகவோ இல்லாத இவர்கள், ஜெருஸேலத்திலுள்ள பாறை மசூதியின் விதானத்தைத் தகர்க்க முயன்ற ‘விசுவாசிகளின் குழு ‘ (bloc of the faithful)-வைச் சார்ந்த இஸ்ரேலிய யூதர்களைப் போன்றே நல்ல கல்வி, நல்ல சம்பளம் பெற்றவர்கள் என்பதோடு ஆழ்ந்த மதப் பிடிப்பு உடையவர்களும் ஆவர்.

சிங்கப்பூரில் இருக்கும் ஒரு முக்கியமான பயங்கரவாதிகள் அமைப்பு ‘ஜெமா இஸ்லாமியா ‘ ஆகும். இந்த அமைப்பின் 31 உறுப்பினர்களை ஆராய்ந்த சிங்கப்பூர் உளவியல் நிபுணர்கள், இவர்கள் பல அம்சங்களிலும் சாதாரணமானவர்களாக இருப்பதைக் கண்டனர். இவர்கள் அனைவரும் ஆண்கள், சராசரியிலிருந்து சராசரிக்கு அதிகமான அறிவுத் திறன் பெற்றவர்கள், வாடகைக் கார் (Taxi) ஓட்டுவது முதல் பொறியியல் வரை உள்ள பல வகை வேலைகளையும் இவர்கள் செய்து வந்தனர். அல்-கய்தா மற்றும் ஹெஸ்புல்லா உறுப்பினர்களைப் போலவே இவர்களும் நிலையற்ற குடும்பங்களிலிருந்து வராதவர்கள் என்பதோடு, தற்கொலை நாடும் நடத்தை மீது எந்த வினோத விருப்பையும் காட்டவில்லை. இவர்கள் மத சார்பற்ற கல்வி நிறுவனங்களில் பயன்றவர்கள் என்றாலும், மதத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருந்தனர்.

அண்மையில், வழக்கமாகப் பெண்களுக்குக் கீழ்மட்டப் பணிகளையே கொடுக்கும் இஸ்லாமிய உலகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளதைச் சுட்டுவது போல – பயங்கரச் செயல்களில் ஈடுபட பெண்களையும் சேர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். மிகச் சரியாகச் சொல்வதானால், தங்கள் பாரம்பரிய உடை காரணமாக, பெண் தற்கொலைப் படையினர் தங்கள் அடையாளத்தை எளிதில் மறைத்துக் கொள்ள முடியும் என்பதோடு மேற்கத்திய முறையில் இறுக்கமான ஆடைகளை அணிந்து தங்களை இஸ்ரேலியர்கள் போலவும் காட்டிக் கொள்ள முடியும். தங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட ஏதோ களங்கத்தைப் போக்கிக் கொள்ளவே இப் பெண்கள் தற்கொலைப் படையினராக மாறுவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன. விவாகரத்து, மலடாக இருத்தல் அல்லது கள்ள உறவு போன்ற அவமானங்களை, ஒரு புனிதமான காரணத்துக்காக உயிர் விடுவதன் மூலம் துடைத்தெறிய முடியும். சில பெண்கள் திட்டமிட்டுக் கவரப்பட்டு கெடுக்கப்பட்ட பின்னர் வெளிப்படுத்தப்படுவர் என அச்சுறுத்தப்பட்டு, அதனால் தற்கொலைப் படையினராக ஆக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

ஏழ்மை மற்றும் அறியாமையே பயங்கரவாதத்தின் ஊற்றாக இருக்கிறது என்ற வாதம் தவறானது என்பதை, பயங்கரவாதிகள் வசதியாக வாழ்பவர்கள் என்பது மட்டுமே நிரூபித்து விடாது. பயங்கரவாதிகள் என்பவர்கள் தங்கள் பாதையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட மேல் தட்டினராக இருந்தாலும், வறுமையில் ஆழ்ந்த மற்றும் மனம் சலித்துப் போன மக்களின் தேவைகளை நிறைவேற்ற உழைக்க விரும்புபவர்கள் என்ற பட்சத்தில், மக்கள் கூட்டத்துக்கு பணமும், கல்வியும் அளிப்பது என்பது பயங்கரவாதத்தைத் தடுக்கும் சிறந்த வழியாக இருக்கும்.

இப்போது நமக்கு தெரியும் விவரங்களிலிருந்து, இத் தேற்றம் தவறானது என்று தோன்றுகிறது. க்ரூவ்கரும் (Krueger) மலெச்கொவாவும் (Maleckova), மத்திய கிழக்கின் பயங்கரவாதச் செயல்களையும், அப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் ஒப்பிட்டு, பொருளாதார நிலை மேம்பட மேம்பட பயங்கரவாதச் செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததைக் கண்டறிந்தனர். 2000-ஆம் ஆண்டில் இஸ்ரேலியருக்கு எதிரான பாலஸ்தீனிய வன்முறைப் போராட்டமான இன்டிஃபாடா (intifada) தொடங்குவதற்குச் சற்று முந்தைய கால கட்டத்தில், மேற்குக் கரையிலும் (West Bank) காஜா (Gaza) பகுதியிலும் வசிக்கும் பாலஸ்தீனியர்களிடையே நிலவிய வேலையின்மை விகிதம் குறைய ஆரம்பித்து, பாலஸ்தீனியர்கள் தமது பொருளாதாரம் முன்னேறுவதாக நினைக்கத் தொடங்கினர். 1988-ஆம் ஆண்டு இன்டிஃபாடாவின் போதும் இதே போன்ற பொருளாதார நிலை காணப்பட்டது. பொருளாதார நிலை மோசமடைந்த போது பயங்கரவாதம் பரவவில்லை. ஆனால், பொருளாதாரம் முன்னேறிய போது பயங்கரவாதம் அதிகரித்தது.

இந்த ஆய்வு, புராதன காலத்திலிருந்து 1980-கள் வரை நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களை விவரிக்கும் ‘அரசியல் கொலை ‘ என்ற புத்தகத்தை எழுதிய ஃப்ராங்க்ளின் எல். ஃபோர்ட்-இன் கருத்துகளோடு ஒத்துப் போகிறது[11].

ஐந்தாவது நூற்றாண்டின் ஆதன்ஸ் நகரம், ரோமானியக் குடியரசு காலம், மேலும் 18- வது நூற்றாண்டின் ஐரோப்பா – ஆகியவற்றில் அரசியல் படுகொலைகள் நடைபெறுவது மிக அரிதாக இருந்தது. இக் கால கட்டங்களில் அதிகாரமும் பொறுமையான விட்டுப் பிடிக்கும் தன்மையும் ஒரு வித சமநிலையை எட்டியிருந்தன. கூடவே, மக்களின் வழக்கமான உரிமைகளைப் பாதுகாப்பதில் அப்போது இருந்த கட்டுப்பாடு மிக்க ஈடுபாடும் இந்த சமநிலையை உறுதி செய்தது. பயங்கரவாதம் என்பது பெருமளவிலான அடக்குமுறையுடனோ, சமூக அநீதியுடனோ அல்லது அதிக அளவிலான சாதாரணக் குற்றங்களுடனோ தொடர்பு உடையதாகத் தெரியவில்லை. அரைகுறை சீர்திருத்தம் நடக்கும் காலங்களில், மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு, எதிர்பார்ப்புகள் அதிகரித்து, பொறுமை அற்றுப் போய், துரிதமான மாற்றங்களுக்கான குரல்கள் எழும் கால கட்டங்களில் பயங்கரவாதம் எழுவதாக ஃபோர்ட் கருதுகிறார்.

பயங்கரவாத-தற்கொலைப் படையின் வெடிகுண்டு வைப்பவரும், மேலும், அப்பாவிகளான சாதாரண மக்களைக் கொல்லும் பிற கொலைகாரர்களும் – அவர்கள் இப்படி நெருக்கடியான நிலையில் எழும் வெறியில் இல்லாத காலத்தில், ஒரு வேளை மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கலாம். ஆனால், இதைப் பற்றி ஆராய்ந்து அத்தகைய மனப்பிறழ்வு எதையும் கண்ட எந்தத் தேர்ந்த ஆய்வாளரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பயங்கரவாதிகள் நிச்சயம் பயங்கரவாதிகளாக இல்லாதவர்களிடமிருந்து வேறுபட்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், இதற்குக் காரணம் எந்த வெளிப்படையான நோயும் அல்ல.

சுருக்கமாகச் சொன்னால், மத உணர்வின் அடிப்படையிலோ அல்லது தேசியம் சார்ந்தோ பயங்கரவாதிகளை உருவாக்குவதில், தனிநபரின் மனப் பிறழ்ச்சி, வசதியற்ற வறுமை அல்லது குடும்பத்தினரின் புறக்கணிப்பு ஆகியவை சிறிதும் காரணிகள் அல்ல. பிரபலமான, பெரும் தலைவர்களுக்கும் கூட இதில் அதிகம் பங்கு இல்லை எனத் தெரிகிறது. உதாரணமாக, சமீபத்தில் ஜூன் 2003 வாக்கில் கூட மூன்றில் ஒரு பங்கு பாலஸ்தீனரே யாஸிர் அராஃபத்[12] நன்கு செயல் படுவதாக நம்பிக்கை தெரிவித்தனர். இருந்த போதிலும், மேற்குக் கரை மற்றும் காஜா பகுதி பாலஸ்தீனர்களிடையே தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பெரும் ஆதரவு இருந்ததோடு, பாலஸ்தீன நலன்களுக்கு வன்முறை பெரிதும் உதவியது என்ற பரவலான நம்பிக்கையும் இருக்கிறது. சொல்லப் போனால் இன்டிஃபாடாவின் வன்முறை தொடங்கியதிலிருந்து அராஃபத்தின் செல்வாக்கு சரிந்து விட்டது.

[தொடரும்]

நன்றி: ஸிட்டி ஜர்னல் Winter 2004 இதழ்

பின் குறிப்புகள் – மொ.பெ.

1. 1356-ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட ஃபிரோஸ் ஷா வின் சரிதையில் உள்ள தக்கர்கள் (Thugs) பற்றிய குறிப்பு, முதலில் கிட்டிய குறிப்பாக இருக்கலாம். இதன்படி, 1290ல் தில்லி சுல்தான் ஜலால்-உல்-தீன் கில்ஜியின் அரசு சுமார் 1000 தக்கர்களைக் கைப்பற்றி அவர்களைக் கொல்லாமல் ‘லக்னாவுடி ‘க்கு அருகில் கொண்டு சென்று விட்டுவிட்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. 1835 வரை பல்லாயிரம் பயணிகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற இவர்களின் மூலம் தெளிவாக இல்லை. முஸ்லிம்களும் இந்துக்களும் கலந்த கூட்டமான இது துர்க்கை அல்லது காளியைத் தெய்வமாகக் கொண்டதாகத் தெரிகிறது. தக்கர்கள் பரம்பரையாக வந்த கூட்டம். 1833-ல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்ற வில்லியம் பென்டிங்க், தன் தலைமை ஏஜண்ட் வில்லியம் ஸீமேன் என்பவரின் உதவியைக் கொண்டு இந்த ரகசியக் கொலைகாரர் கூட்டத்தை அழித்து ஒழித்ததாக வரலாறு சொல்லுகிறது. சமீபத்தில் பின்-காலனித்துவ வரலாற்றியல் தலை தூக்கி இருக்கிறது. முன்னாள் காலனிகளாக இருந்த நாடுகளின் வரலாறு எனத் தற்போது பரவலாகக் கிட்டுவது மேலை காலனியாதிக்க நாடுகளின் பார்வையில் எழுதப்பட்ட வரலாறு, அதை மறு பரிசீலனை செய்து எழுத வேண்டும் என்ற மாற்றுப் பார்வையை முன் வைப்பது இது. ஒரு பதிவில் சப்-ஆல்டர்ன் வரலாற்றாசிரியர்கள் தக்கர்களை காலனி ஆட்சி எதிர்ப்பாளர்கள் என்று காட்ட முயல்வதாக ஒரு தகவல் கிட்டியது. இது குறித்து முழுத் தகவல் கைவசம் இல்லை. ஆனால், தேடியதில் ஒரு விமர்சனம் கிட்டியது. வேண்டுவோர் பார்க்க வேண்டிய ஒரு சுட்டி:

http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl ?file=20030411000707300.htm&date=fl2007/&prd=fline&

இங்கு விமர்சனம் செய்யப்பட்ட புத்தகம் – ஒரு ஐரோப்பிய வரலாற்றாசிரியர் எழுதியது. வழக்கம்போல நமது இடதுசாரி விமர்சகர் ஒருவர் விமர்சிக்கிறார். புத்தகமே இடதுசாரி புத்தகமாக இருக்கலாம். படித்துப் பார்த்து யாராவது அது பற்றி இங்கு எழுதுவீர்கள் என்று பார்க்கிறேன்!

The Strangled Traveler: Colonial Imaginings and the Thugs of India by Martine van Woerkens (translated from the French by Catherine Tihanyi); The University of Chicago Press, Chicago and London, 2002; pages xvi + 360, $24.

2. இது சரியான கருத்தல்ல. இஸ்லாம் துவங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே கிரேக்க ரோமானிய சாம்ராஜ்யங்களிலும், மெளரியர், குப்த சாம்ராஜ்யங்களிலும், சீன அரசுகளிலும் அரசியல் கொலைகள் நடந்திருக்கின்றன. கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் எப்படி எதிரி அரசரை தந்திரமாகக் கொல்வது என்பது பற்றியும், அத்தகைய கொலைகளுக்கு ஆளாகாமல் தாம் எப்படித் தற்காப்பது என்றும் ஓர் அரசருக்கு புத்திமதிகள் சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஜூலியஸ் சீசர் போன்ற புகழ் பெற்ற ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டது இந்தக் கட்டுரையாளருக்கு எப்படி மறந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படாதது ஒரு காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் அரசியல் லாபம் கிட்டும் என்று கருதுபவர்களே இக்கொலைகளைச் செய்திருக்கலாம். ஆனால், தாம் நேரில் இருந்து கொல்லாமல் மூன்றாம் நபர் மூலம் தானே இக்கொலைகளைச் செய்திருக்க முடியும். ஸீசர் கொலை செய்யப்பட்டது வேண்டுமானால் பகிரங்கமான கொலையாக இருக்கலாம், மற்றவை அப்படி அல்லவே ? ஆகவே அரசியல் கொலை என்பதை ‘அஸாஸின்கள் ‘ முதலில் கண்டு பிடித்தனர் என்று கூறமுடியாது என்பதே நமது வாதம். மற்றபடி, அஸாஸின்கள் என்னும் கூட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் உள்ளன என்று தெரிகிறது. சுலபமாகப் படிக்க, இந்த வலைக் களத்துக்குச் செல்லலாம். துவக்கப் படிப்பாக இதை வைத்துக் கொள்வது சரியாக இருக்கும்:

http://homepage.ntlworld.com/anthony.campbell1/assassins/hasan.html

சுருக்கமாகச் சொன்னால் முகமது நபியின் மகள், ஃபாத்திமாவின் வழி வந்தவர்களாகத் தம்மைக் கருதிய ஓர் இஸ்லாமியப் பிரிவினரான இஸ்மாயிலிகள், இரு பிரிவாக உடைந்த போது ஒரு பிரிவைச் சார்ந்த ஹாஸன்-இ-ஸப்பாஹ் என்னும் பிரசாரகர், அலமுட் என்னும் இடத்தில் உள்ள ஒரு மலைக் கோட்டையைக் கைப்பற்றி இந்த அரசியல் கொலைகார்களின் பயிற்சிக் கூடமாக அதைப் பயன்படுத்தினார். சுமார் 1090-லிருந்து 1124 வரை ஆண்ட அவர் காலமான பின், இஸ்மாயிலிகளின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. மங்கோலியர்கள் இரானையும் அரேபியாவையும் கைப்பற்றிய போது அஸாஸின்களின் ரகசியக் கூட்டத்தை அறவே ஒழித்தனர். ஆனால் தப்பி ஓடிய சிலர் இந்தியா, ஸிரியா போன்ற நாடுகளில் ஒளிந்தனர். இந்தியாவில் கோஜா என்று அழைக்கப்படும் பிரிவாக இருந்த இவர்கள் பம்பாயில் பெரும் வணிகர்களாக இருந்ததாக வரலாறு இருக்கிறது. தற்காலத்து ஆகா கான் இந்தப் பிரிவின் தலைவர். இஸ்மாயிலிகள் ஷியா பிரிவின் ஒரு பகுதியினர். சுன்னி பிரிவினர் பெரும்பான்மையினராக இருக்கும் பாகிஸ்தானில் இவர்கள் அவதிப்படுகிறார்கள் என்றும் சொல்லப் படுகிறது.

3. Bernard Lewis பெயர் பெற்ற வரலாற்றாசிரியர். அரபு நாடுகள், இஸ்லாமிய சமுகங்களின் வரலாறு பற்றி முக்கியமான புத்தகங்கள் எழுதியவர். இவர் எழுதிய புத்தகங்களில் சில:

The Arabs in History, London 1950;

The Assassins, London 1967

Race and Slavery in the Middle East: an Historical Enquiry, New York 1990

Islam and the West, New York, 1993

Islam in History (2nd edition), Chicago, 1993

The Future of the Middle East, London, 1997

What Went Wrong: Western Impact and Middle Eastern Response, OUP (December 2001)

The Crisis of Islam: Holy War and Unholy Terror: Modern Library; (March 25, 2003)

ஆனால் சமீபத்தில், எட்வர்ட் சய்யீது எழுதிய ‘ஓரியண்டலிசம் ‘ என்ற புத்தகம் பெயர் பெற்ற புத்தகமாகவும், மிகவும் தெரிய வந்துள்ள ஒரு கருத்தாக்கமாகவும் ஆன பின், லூயிஸ் போன்ற பழைய வரலாற்றாசிரியர்கள் ஓரளவு பின் தள்ளப்பட்டிருந்தார்கள். இவர்கள் மேலை நாகரிகத்தின் புகழ் பாடிகள், வஞ்சகமாக எழுதி இதர பண்பாடுகள், நாகரிகங்கள் மேலும் வரலாறுகளை குறையாக்குகிறார்கள் என்பது போன்ற சய்யிதின் வாதங்கள், அதே நேரத்தில் மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களில் பிரபலமாகி வந்த பின்-நவீனத்துவக் கருத்துகளுடன் இசையவே, லூயிஸின் வரலாற்றுப் பணி கவனம் பெறாமல் போக ஆரம்பித்தது. ஆனால் செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின், லூயிஸ் போன்ற வரலாற்றாசிரியர்களின் ‘இஸ்லாத்தில் என்ன கோளாறாகிப் போயிற்று ? ‘ என்ற வகைக் கேள்விகள் மறுபடி உலக அரங்கில் உரக்கக் கேட்க ஆரம்பித்தன. ஆனால், இஸ்லாம் இன்று மேலை நாடுகளில் நிறைய இடங்களில் ஆதரவாளர்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இடதுசாரியினர் ஐரோப்பா முழுவதும் மற்றும் அமெரிக்காவிலும் இஸ்லாம் மீது ஏதேனும் விமர்சனம் எழுந்தால் கண்டனம் தெரிவிக்கவும், முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த விதத்தில் இந்திய இடதுசாரியினர் வெகு காலமாகவே இதைத்தான் செய்து வந்திருக்கின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.

லூயிஸின் சமீபத்திய புத்தகங்களுக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்து ஒரு முஸ்லிம் பேராசிரியர், அமெரிக்காவில் வடகிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிபவர், எழுதிய காட்டமான கட்டுரை ஒன்றின் வலை முகவரி இதோ: http://www.counterpunch.org/alam06282003.html

கெளண்டர்பஞ்ச் என்னும் இந்த வலைப் பத்திரிகை ஓர் இடதுசாரிப் பத்திரிகை. இதில் யூதர்கள், முஸ்லிம்கள், கிருஸ்தவர் என்று பலவகை இடதுசாரியினரும், இடதுசாரியின் தற்காலிக நண்பர்களும் எழுதுகிறார். மேலே கண்ட கட்டுரையை எழுதிய சாஹித் ஆலம் என்பவரும் இடது சாரிப் பார்வையைப் பயன்படுத்தித் தன் வாதங்களை முன் வைக்கிறார் என்பது நிலப் பிரபுத்துவம், விவசாய சமுகம், முதலாளிய-தொழில்மய சமுதாயம் என்ற பதங்கள் இவர் கட்டுரையில் பயன்படுத்தப் பட்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், இஸ்லாமிய சமுதாயங்களை உயர்த்த வேண்டும் என்பது இவரது ஆதங்கம் என்பதும் கட்டுரையில் தெரிய வருகிறது. இவர் மார்ஷல் ஹாட்க்ஸன் என்னும் இஸ்லாமிய வரலாற்றாசிரியரைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆனால் வேறு இடங்களில் ஹாட்க்ஸன் போன்ற வரலாற்றாசிரியர்கள் இஸ்லாமிய சமுகங்களின் அடிவருடி என்று கேலி செய்கிறார்கள். எது உண்மை ? தீரப் படித்தால் ஓரளவு நமக்குப் புரியலாம்.

4. Jim Jones மற்றும் David Koresh ஆகிய இருவரும் தீவிர வகைக் கிருஸ்தவர்கள். இருவருமே தம் ஆளுமை வசீகரத்தால் பல நூறு பேர்களைத் தம் சீடர்களாகப் பின்பற்றச் செய்ய முடிந்தவர்கள். ஜிம் ஜோன்ஸ் ஒன்றும் ஏதோ விளிம்பு நிலைக் கிருஸ்தவ மத போதகர் அல்ல. கிருஸ்துவின் சீடர்கள் என்ற ஒரு பிரிவில் முறையான போதகராக அமர்த்தப்பட்டிருந்தார். இது கிருஸ்தவ மதத்தின் மைய நீரோட்ட அமைப்புதான். ஒரு கட்டத்தில் இவருடைய அமைப்பில் கிட்டத்தட்ட 8000 பேர் இருந்ததாக செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன (பார்க்க SFchronicle, Nov 12, 1998 Michael Taylor). ஒரு முற்போக்குப் பிரசாரகராகக் கருதப்பட்ட இவரது சர்ச்(Church)-ல் பெருவாரியினர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள். நவம்பர் 18, 1978 அன்று சுமார் ஆயிரம் பேர் கொண்ட தனது அமைப்பு உறுப்பினர்களை சயனைட் மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள இவர் கட்டளை இடுகிறார். மறுத்தவர்கள் கொல்லப் படுகிறார்கள். 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டன. மொத்தம் 914 சடலங்கள் கயானாவில் இவரது முகாமில் கண்டெடுக்கப் பட்டன. இறுதி வருடங்களில் ஜிம் ஜோன்ஸ் மன நோய் கொண்டவராக இருந்தார் என்று பின்னர் வெளி வந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. அதை மறுத்து இந்தத் தற்கொலை உளவு அமைப்புகளின் மோதலில் நடந்த சதி வேலை என்றும் சொல்லப்படுகின்றன. ஜிம் ஜோன்ஸ் ஒன்றும் பெரிய போதகர் அல்ல, பெரிய இடதுசாரி புரட்சிவாதியும் அல்ல. அவர் இருந்த கயானாவில் இருந்து ஓர் ஆயிரம் நபர்களை வைத்து, அதுவும் ஆயுதங்கள் எதுவும் இல்லாத ஒரு சமுகக் குழுவை வைத்து அவர் அமெரிக்காவையோ அல்லது சோவியத் ரஷ்யாவையோ கலக்கி இருக்க முடியாது. இதனால் உளவு நிறுவனங்கள் இதில் கை வைத்து ஆயிரம் பேரைக் கொன்றன என்பது ஒரு பீதிக் கதையாகவே தெரிகிறது. இந்தியாவில், சி.ஐ.ஏ.-தான் உலகத்தின் எல்லா நாச வேலைகளுக்கும் காரணம் என்றோ, பின் லாடன் அல்லது பாகிஸ்தான்தான் எல்லா குளறுபடிக்கும் காரணம் என்ற வகைக் கட்டி-தட்டிய சிந்தனைதான் நம்மிடையே நிறைய இருக்கிறதே. அதன் இன்னொரு வடிவம்தான் மேற்படி பீதிக் கதை.

டேவிட் கொரெஷ் என்பவர் ஏழாவது நாள் அட்வென்டிஸ்ட் சர்ச்சில் ஏற்பட்ட பிளவில், ஒரு பிரிவான டேவிடியன் கிளையினர் என்ற அமைப்பை வன்முறையால் கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் சுமார் 1400 பேர் பின்பற்றிய இந்த சர்ச் நாளாவட்டத்தில் சரிந்து வந்தது. இறுதியில் ஏப்ரல் 19,1993 அன்று அமெரிக்க அரசின் எஃப்.பி.ஐ, அனுமதி இல்லாத கள்ள ஆயுதங்கள் குவித்திருந்ததற்கான குற்றச்சாட்டை உறுதி செய்ய வந்த போது ஏற்பட்ட மோதலில், மொத்த முகாமும் எரிந்தது. சுமார் 80 நபர்கள் எரியும் முகாமை விட்டு நீங்காமல் உள்ளேயே இருந்து இறந்தனர். கொரேஷ் தலையில் ஒரு ரைஃபிள் தோட்டா பாய்ந்து இறந்தார். அவரது சீடர் ஒருவரின் அருகே இந்த வகை ரைஃபிள் கண்டெடுக்கப்பட்டது.

5. Cynthia Ozick (பி. 1928) ஓர் அமெரிக்க யூதர். மிகக் கூர்மையான அறிவும், எழுத்தாளரின் எழுத்தாளர் என்றும், ஏராளமான படிப்பறிவும், சிக்கலான பொருள்களைக் கூட லாவகமாகக் கையாண்டு நுட்பங்களை விரிக்கக் கூடிய பெண்ணிய எழுத்தாளர் என்றும் அறியப் படுகிறார். மேல் விவரங்களுக்கான சுட்டி:

http://www.complete-review.com/authors/ozickc.htm

6. Jerrold Post ஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் மனநோய் துறையில் (Psychiatry) பேராசிரியராகப் பணி புரிகிறார். கூடவே அரசியல்-உளவியல், பன்னாட்டு உறவு ஆகிய துறைகளிலும் பேராசிரியர். தலைமை வகித்தல், முடிவுகள் எடுத்தல், அரசியல் வன்முறை, பயங்கரவாதம் ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடத்துகிறார், பயங்கரவாதம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்கிறார். இரு புத்தகங்கள்- தலைவரை நோய் பீடிக்கும்போது (When Illness Strikes the Leader); ‘அரசியல் மன-உளைச்சல்: வெறுப்பை ஒட்டிய மனநோய் அரசியல் ‘ (Political Paranoia: The Psycho Politics of Hatred) எழுதியுள்ளார். மேலதிக விவரங்களுக்கு:

http://www.gwu.edu/~elliott/facultystaff/post.cfm

7. கடந்த நூற்றாண்டுகளில் பெரும் கலகக்காரர்களாகக் கருதப்பட்ட மார்க்ஸ், லெனின், மாஒ இத்தியாதியினர் எதிர்கால சமுகம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்று கறாராகச் சொல்வது அவர்களது கடமை அல்ல என்றே கூடக் கருதினர் என்பது கவனிக்கப்பட வேண்டும். இதற்கு இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். Teleology என்று சொல்லப்படும் வாத முறையை மார்க்ஸ் தவிர்க்கிறார் என்பது மார்க்ஸியரின் ஐதீகம். என்றும் இளமையான கருத்தியல் எங்களது என்று மார்க்ஸியர் உரத்துச் சொல்வது இதனால்தான். அவ்வப்போதைய கால நெருக்கடிகளை ஒத்து அரசியலையும், இலக்குகளையும், அமைப்புகளையும், மதிப்பீடுகளையும், ஏன் சிந்தனை முறைகளையுமே மாற்றிக் கொண்டே இருப்பது தமது தனிப்பெரும் சாதனை என்று உரத்துப் பேசுவார்கள். வழக்கம் போல இதில் தற்காலிக இலக்கு, நெடு நாளைய இலக்கு என்றெல்லாம் முடி பிளக்கும் வாதங்கள் ஒரு சிறு குழுவுக்குள் நடக்கும் – உயர்மட்டக் குழுவுக்குள்தான், வேறென்ன. முடிவுகள் மட்டுமே சாமானியருக்கு. அவருக்குதான் வேறு என்ன வேலை ? வெந்ததைத் தின்று, உழைப்பிற்கு ஆட்களைப் பெருக்கி, இதர நேரம் மடாதிபதிகளான பொலிட்பிரோ சொல்வதைக் கேட்டு ஊர்வலம் போவதைத் தவிர வேறு பங்கெடுத்தல் என்ன தேவை ? அது போகட்டும், என்றும் இளமையான கருத்தாக்கம் என்பது ? பாதி உண்மை, பாதி பொய். எதார்த்தத்தில் எல்லா கூட்டமைப்புகளையும் போலவே, சுத்தப் பஞ்சாங்கங்களும், மாறாக எதையும் ஏற்காத கலகச் சண்டிகளும், ஆபத்தைத் தவிர்த்து பாதுகாப்பான வழிமுறைகளில் செல்வாரும், பிறரைச் சுமை தூக்க வைத்துத் தாம் காலாட்டி ஓய்வெடுப்பவரும் என்று பல தரத்தவரும் மார்க்ஸியக் கூட்டங்களில் வாழ்கிறார்கள், அப் பாதையில் பயணிக்கிறார்கள். மொத்தத்தில் மனிதர் போல இருக்கிறார்கள். சாதாரணத்தைக் கடந்து கடவுள்களாக ஆகிய பிரமை அவர்களுக்கு நிறையவே உண்டு. என்றாலும், அதிலும் அவர்கள் மற்ற பல மனிதர் போலவேதான் என்பதுதான் வருத்தம் தரக்கூடியது. சாதாரணம் என்பதுதான் எத்தனை பரவலாக இருக்கிறது! தவிர்க்க முடியாத பொருள் (சரக்கு ?) உற்பத்திக்கான உழைப்பைப் போலவே!

தொலை(க் காட்சி!) இலக்கு சமுதாயத்துக்கு ஒரு தூல வடிவைக் கற்பிப்பதோ அல்லது அதன் அமைப்பு குறித்த ஊக வடிவுக்கு ஏற்ப தற்காலக் கருத்தாக்கத்தையும், செயல்பாட்டையும் கூட அமைப்பதைத் தவிர்ப்பதன் உள் பொருள் என்னவென்றால், எதிர்காலத்தில் அமையப் போகும் முழு மக்கள் மையச் சமுதாயத்தில் என்ன ஆட்சி அமைப்பு நிலவ வேண்டும், மனிதர் குழுக்களுள் என்ன உறவுகள் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்க அவர்களுக்குத் தான் உரிமை உண்டு. கடும் பயணத்துக்குப் பிறகு அப்படி ஒரு சமுதாயத்தை அடையப் போகும் மனிதருக்குத்தான் எவை சாத்தியம், எவை முன்வைக்கப் பட வேண்டும், எவை எதிர்காலத்துக்கு என்று ஒத்திப் போடப்படவேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்க உரிமையும் ஞானமும் உண்டு என்று மார்க்ஸ் கருதுகிறார் என்பது ஒரு பாடம். அதாவது உண்மையாக மக்கள் கையில் தத்துவம், செயல்பாடு ஆகிய இரண்டிலும் மேலாண்மையை விட்டு வைக்க முயல்கிறார் மார்க்ஸ் என்பது அவரை சற்று பரிவாகப் படிப்போர் கருதுவது. இதிலும் பல தத்துவக் கோளாறுகள் உண்டு. அது கொடுக்கப்பட்ட சட்டகங்களில் இருந்து விலகி யோசித்தால்தான் தெளிவாகும். அது பற்றிப் பிற்பாடு பார்க்கலாம். இங்கு வில்சன் சொல்வது ஓரளவுதான் சரி, தமது பார்வையை முற்படுத்த சில எளிமைப் படுத்தல்களைப் பயன்படுத்துகிறார் வில்சன். அதிலும் தவறுகள் இருப்பதைத் தெரிந்து கொண்டு நாம் மேலே செல்வது அவசியம்.

8. தமிழ் அறிவு ஜீவி என்று தம்மைக் கருதும் எவருக்கும் தலையாய கடமை – தினம் ஒரு முறையாவது பார்ப்பனியம் ஒழிக என்று முழங்குவது. இது நமக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் இங்கு சொல்லப்படும் ஆரிய நாடு என்ற அமைப்புக்கும் பார்ப்பனருக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று தெரிவித்து நமது ஆதர்ச பார்ப்பனிய எதிர்ப்பாளரான வாசகருக்குச் சிறிது சங்கடத்தை அளிக்க நேர்கிறது. இந்த அமைப்பு ஒரு கிருஸ்தவத் தீவிரவாத வெள்ளையரின் இனவெறி பிடித்த அமைப்பு. அமெரிக்கா, அமெரிக்காக்கள், ஐரோப்பா, பிறகு முடிந்தால் உலகின் இதர பகுதிகளில் இருந்து வெள்ளை-கிருஸ்தவர் அல்லாத மற்ற மக்களை எல்லாம் விரட்டி விட்டு ஒரு பெரும் ஆரிய சாம்ராஜ்யத்தை, தவறு – எம்பயரை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் ஆழ்ந்த விருப்பம். எத்தனை நூற்றாண்டு ஆகுமென்றாலும் காத்திருந்து இதைச் சாதிக்க என்று அமெரிக்காவின் ஆட்கள் அதிகம் இல்லாத சில சிறு நகரங்களில், மலைப் பிரதேச கிராமங்களில் சில நூறு பேர்கள் இருக்கிற அமைப்பு இது. கிருஸ்தவத்தின் மையக் கருத்தையே புரட்டிப் போட்டிருக்கிறோம் என்று சிறிதும் பிரக்ஞை இல்லாத விசித்திரப் பிறவிகள்.

9. Marc Sageman பென்ஸில்வேனியா பல்கலைக் கழகத்தில், சமுக இனங்களிடையே அரசியல் மோதல்களைப் பற்றி ஆராயும் கூடம் ஒன்றில் பேராசிரியர். இவரைப் பற்றிய தகவல்களுக்கு:

http://www.nixoncenter.org/publications/Program%20Briefs/PBrief%202003/Vol%209%20no%2031%20Gunaratna-Sageman.htm

இவரும், குணரத்னே என்பவரும் ‘அல்-கய்தா: தற்கால நிலை மேலும் எதிர்கால வாய்ப்புகள் ‘ என்ற தலைப்பில் பேசியவை இந்த முகவரியில் கிடைக்கும்.

10. Alan Krueger, Jitka Maleckova. இணையம்தான் எவ்வளவு வசதி தருகிறது. கூகிளில் கேள்வியைப் போட்டதும் இங்கு சொல்லப்படும் கட்டுரையே கிட்டியது – சில வினாடிகளில்.

http://www.wws.princeton.edu/~rpds/downloads/paxson_krueger_comment.pdf

11. Franklin L. Ford ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் வரலாற்றாசிரியராக இருந்தவர். 2003 ஆம் வருடம் தனது 82 ஆவது வயதில் இறந்தார். அவரது கடைசி புத்தகம், ‘அரசியல் கொலை: கொடுங்கோலர் ஒழிப்பு முதல் பயங்கரவாதம் வரை (Political Murder: From Tyrannicide to Terrorism) என்பது. இவர் ஐரோப்பிய வரலாறு பற்றிய பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

12. மொகம்மது யாசிர் அப்துல் – ராவுஃப் கித்வா அல்-ஹுஸைனி என்னும் யாசிர் அரஃபாத் 1929 ம் வருடம் பிறந்தவர். 1951 இல் எகிப்தில் அரசர் ஃபெளத் பல்கலைக் கழகத்தில் கட்டிடக் கலைப் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் தலைவர். 1996-லிருந்து பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள தற்காலிக அரசுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றுகிறார். 2003ல் பாலஸ்தீனியருக்கு இவருடைய செயல்பாட்டின் மீது நம்பிக்கை அற்றுப் போகவும், இவரது அதிகாரங்கள் மிகக் குறைக்கப்பட்டு விட்டன. என்றாலும் இஸ்ரேல் – பாலஸ்தினியர் இடையே எந்த உடன்படிக்கையும் இவர் கையொப்பம் இடாமல் நிகழாது என்பது வெளிப்படை.

aacharakeen@yahoo.com

Series Navigation

author

ஆசாரகீனன்

ஆசாரகீனன்

Similar Posts