முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

விவேகன்


1. யோகம் ஒரு முன்னுரை

இத்தகைய ஒரு நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது . யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது . யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.

நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன . ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை . நம்முடைய லெளகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது .ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம் . நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும் , ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம் ,தத்துவம் ,மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை .

அதைவிட அபாயகரமானது , அரைகுறையான புரிதல்கள் கொண்டவர்கள் அல்லது முற்றாக ஏதுமறியாதவர்கள் அவர்களுடைய கருத்தியல் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் பெரும்பாலான விஷயங்களை தவறாகச் சொல்லிப் பரப்பி வருவது . நம் சூழலில் நாம் மேலோட்டமாக அறிந்து , பரிசீலனை இல்லாமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் பல விஷயங்கள் அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பபட்ட பொய்கள் என்பதை சற்று முயற்சி செய்தால் நம்மால் அறியமுடியும் . தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நம் மரபு சார்ந்த பல விஷயங்கள் அவற்றை பற்றி எள்முனைகூட அறியாத அரசியல்வாதிகளால் திரிக்கப்பட்டு பரப்பப் பட்டுள்ளன. அவற்றை களைவது நாம் உண்மையான அறிவை அடைவதற்கு அவசியமாக ஆகியுள்ளது . இதற்கு முக்கியமான வழிமுறை மூலநூல்களை பயில்வதுதான். குறைந்தது ஐம்பது நூல்களையாவது இந்திய சிந்தனையின் மூலநூல்களாக கொள்ளமுடியும், பதஞ்சலி யோக சூத்திரம் அவற்றில் முக்கியமானது . மிதமிஞ்சி விளக்கி விரிவாக்கம் செய்து அவற்றை அணுகமுடியாமல் செய்வதை தவிர்த்து நவீனகாலத்துக்கு உரிய சிந்தனைகளுடன் பொருத்தி மூலநூல்களை புரிந்துகொள்வது அவசியம். இது அதற்கானமுயற்சி.

ஆன்மீகம் ,தத்துவம், மதம்

முதலில் ஆன்மீகம் தத்துவம் மதம் ஆகிய மூன்றும் வேறு வேறானவை என நாம் திட்டவட்டமாக புரிந்துகொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படையான கேள்விகளுக்கு உள்ளுணர்வின் மூலம் விடைதேடும் முயற்சி ஆகும். ‘ ‘நான் யார் ? எனக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவென்ன ? இங்குள்ள ஒவ்வொன்றும் எதனால் எப்படி ஏன் உருவம் கொண்டுள்ளன ? எப்படிச் செயல்படுகின்றன ? ‘ என்றெல்லாம் தொடங்கும் முடிவற்ற அடிப்படைக் கேள்விகள் சிந்திக்க ஆரம்பித்த காலம் முதல் மனித மனத்தில் எழுந்து கொண்டிருப்பவை. மனிதனின் அறிவெல்லாமே இவ்வினாக்களுக்கு பதில் தேடி அவன் மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளே . அறிவியல் அக்கேள்விகளுக்கு புறவயமான தளத்தில் விடை தேடுகிறது . நேர் எதிர் திசையில் ஆன்மீகம் பயணம் செய்கிறது .அது அக்கேள்விகளுக்கு அகவயமான தளத்தில் விடைதேட முயல்கிறது .நுண்ணுணர்வுள்ள எவருமே இவ்விரு வழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஏற்று பிறிதை நிராகரிக்க மாட்டார்கள். ராமகிருஷ்ண பரம ஹம்சர் அறிவியலை நிராகரிக்கவில்லை ,ஐன்ஸ்டான் ஆன்மீகத்தையும் நிராகரிக்கவில்லை .

இப்படிச் சொல்லலாம் . இந்திய மரபில் ‘இதம் ‘ என்ற சொல் ஆன்மீகத்தேடலின் முதல் கண்ணி ஆகும் . ‘இது ‘ என்று அதற்கு பொருள். ‘இது என்ன ? ‘ என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது ஆன்மீக தேடல் . இதற்கு அறிவியலாளன் அப்பொருளை எடுத்து புறவயமாக ஆராய்ந்து விடைகாண முயல்வான் .அப்பொருளை அவன் பல கூறுகளாக பகுத்து அறியலாம் . அப்பொருள் சிலிகன் இரும்பு போன்ற தாதுக்களினாலானது என்று அவன் சொல்லலாம். அத்தாதுக்கள் எந்தெந்த மூலக்கூறுகளினாலானது என அவன் விளக்கலாம் .அணுக்களாக அம்மூலக்கூறுகளை பிரிக்கலாம் . அணுவை துகள்களாகப் பிளக்கலாம். இது பகுத்தல்முறை . நேர்எதிர் திசையில் சென்று அப்பொருளை அவன் பிரபஞ்சத்தின் பிற பொருட்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை மலையுடனும் நிலத்துடனும் சம்பந்தப்படுத்தி அதன் இயல்புகளை அறியலாம். இது தொகுத்தல் முறை .இவ்விரு முறைகளையும் சேர்த்தேகூட அவன் செய்யலாம் .

ஆனால் ஆன்மீகவாதி அப்பொருளை நோக்கி தன் கவனத்தை குவிப்பதில்லை . அப்பொருள் ஏன் அப்படி தனக்கு தெரிகிறது என அவன் யோசிப்பான். தன் புலன்கள் அப்படி அதை காட்டுகின்றன. புலன்கள் மூலம் அப்பொருளை அறிவது எது ? அப்பொருளை அது ஏன் கடினமானது என்கிறது – காரணம் மேலும் மென்மையான ஒன்றை அது அறிந்திருக்கிறது . அப்பொருளை அது ஏன் வடிவமற்றது என்கிறது – காரணம் அது வடிவம் என்றால் என்ன என்று அறிந்திருக்கிறது . ஆகவே அறிதல் என்ற செயலே அறிபடும்பொருளை தீர்மானிக்கிறது .அந்த அறிதலின் இயல்புகள் என்ன ? இவ்வாறெல்லாம் ஆன்மீகம் தனக்குள்ளே ஆழ்ந்து தன்னை ஆராய்ந்து உள்ளே செல்லும் . ஆன்மீக அம்சமில்லாத அடிப்படைச் சிந்தனை இருக்க முடியாது .

ஆன்மீகம் தன் உள்ளுணர்வால் அறிந்ததை தனக்குத்தானே சொல்லும்போதே அது தத்துவமாக ஆகிவிடுகிறது .காரணம் அறிதலானது அந்த அறிதல் நிகழக்கூடிய அக்கணத்தில் கட்டற்றதாக வடிவமற்றதாக இருக்கிறது .அறிவாக அது மாற்றப்படும்போது அதற்கு எல்லையும் வடிவமும் உருவாகிவிடுகிறது .பேசப்பட்ட ,கேட்கப்பட்ட விவாதிக்கப்பட்ட ஆன்மீகம் உடனேயே தத்துவமாகிவிடுகிறது .அனுபவ நிலையில் அகவயமாக நிற்கும் ஆன்மீகமே தூயது . ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆழ்ந்த மனநிலை ஆன்மீகம் . அதை பிறருக்கு விளக்க அவர் சொல்லும் கதைகள் தத்துவம் ஆகிவிடுகின்றன .

தத்துவம் மூலம் சொல்லப்பட்டதை வாழ்க்கைமுறையாக மாற்றும் பொருட்டு நெறிகளும் ஒழுக்கங்களும் மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிலைநிறுத்தவே கோவில் , மடம் , புனிதநூல் போன்ற பல அமைப்புகள் உருவாகின்றன. இந்த நெறிகளும் மரபுகளும் அமைப்புகளும் சேர்ந்ததே மதம் ஆகும் . மதம் எப்போதுமே சில விடைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம் .அவ்விடைகள் காலவதியாகும் போது மதமும் பழையதாகலாம். தேங்கிய மதம் பொருந்தாத பிடிவாதங்களும் மரபுகளும் நம்பிக்கைகளும் கொண்ட தீய சக்திகூட ஆகலாம்.

தத்துவம் மதத்தைப்போல சில விடைகளுடன் நின்று விடுவதல்ல . தத்துவவாதி கேள்விகளுடன் முன்னகர்கிறவன்தான். ஆனால் அவனுக்கும் ஓர் எல்லை உண்டு . தத்துவம் தன்னுடைய ‘உண்மையை நிர்ணயிக்கும் முறைக்கு ‘ கட்டுப்பட்டது . அம்முறை மறுக்கப்படுகையில் அதுவும் மறுக்கப்படுகிறது.ஆன்மீகம் எந்த கட்டுப்பாடும் இல்லாதது .காரணம் அது முழுமையாகவே அகவயமானது. அதற்கு எந்த நிரந்தரமான அமைப்பும் இல்லை .அதற்கு வடிவமும் இல்லை . ஆகவேதான் குப்பையில் கிடக்கும் சித்தனும் ஐந்துவேளை குளிக்கும் பக்தனும் ஒரே சமயம் ஆன்மீகவாதிகளாக இருக்க முடிகிறது .

யோகம் , தியானம் ,பிரார்த்தனை

நம்மில் பலர் இம்மூன்று விஷயங்களையும் ஒன்றாகவே இதுவரை எண்ணி வருகிறார்கள் . அதற்கேற்ப இன்று யோகம் மற்றும் தியானம் ஆகியவற்றை எளிமைப்படுத்தி கற்பிக்க முயலும் பல நிறுவனங்கள் இம்மூன்றும் ஒன்றே என்பது போன்ற ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கி வருகின்றன. இவை முற்றிலும் வேறு வேறானவை என்பதை வாசகர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை என்பது கடவுள் என்ற கருத்தை ஏதேனும் வடிவில் ஏற்றுக் கொண்டவர்கள் அச்சக்தியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாகும் . கடவுளை ஒரு ஆதி சிருஷ்டிகர்த்தர் என்றோ , பிதா என்றோ , ஆக்கி காத்து அழிக்கும் சக்தி என்றோ ,ஒவ்வொன்றிலும் உறையும் அறியமுடியாத மர்மமான வல்லமை என்றோ , பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் பெருநியதி என்றோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் . பிரார்த்தனை என்பது அச்சக்தியிடம் செய்யப்படும் உரையாடல். அதனிடம் செய்யப்படும் வேண்டுகோள்.

தியானம் என்பது பிராத்தனையின் ஒரு நிலையாக கைகூடுவதாயினும் அதற்கு கடவுள் என்ற ஒருவர் இருந்தாக வேண்டிய அவசியமில்லை . நாத்திகர்களும் தியானம் செய்யலாம் .அடிப்படையில் மனதை ஒருமை படுத்துதல்தான் தியானம் என்பது . முதலில் மனதை கூர்ந்து கவனித்தல் . அதன் இயங்கு முறையை அறிந்து மெல்ல அதை கட்டுக்குள் கொண்டுவந்து அதன் சிதறுண்ட இயக்கத்தை சீரான வழியில் ஆற்றுப்படுத்துதல். தியானம் மனவல்லமையை அதிகரிக்கிீறது .

ஆனால் யோகம் என்பது தியானத்தை விட மேலான ஒன்று . யோகத்தின் தொடக்கப்புள்ளி தியானமே. ஆனால் யோகம் மனம் என்ற செயல்பாட்டை அதற்கு நேர் எதிர் திசைக்கு போய் இல்லாமலாக்க முயல்கிறது . தியானம் மனநதிக்கு கரைகட்டி சீராக ஓட செய்கிறது . யோகம் அந்நதியை திரும்ப அதன் உற்பத்தியிடத்துக்கே கொண்டு செல்ல முயல்கிறது . ஆகவே தியானம் எல்லாருக்கும் உரியது ,அவசியமானது . ஆனால் யோகம் அதன் பொருட்டு பிற அனைத்தையுமே விட்டு விட்டவர்களுக்கு மட்டுமே உரியது . வேறு செயல்களில் ஈடுபட்டபடி யோகத்தை செய்ய முடியாது . அறிவுப்பயிற்சிகூட யோகத்துக்கு தடையே .

யோகம் மத வழிபாடா ?

தியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே . யோகம் இந்தியமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று . அடிப்படையில் இது நாத்திக தரிசனமாகும் . வெகுகாலம் யோகம் லெளகீக தரிசனமாகவே கருதப்பட்டது .பிற்காலத்தில் , குறிப்பாக சொல்லப்போனால் பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன. அதை விரிவாக பிறகு காணலாம் .யோகத்தின் மூல நூல்கள் எதிலுமே கடவுளுக்கு இடமில்லை . பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூட யோகப் பயிற்சியாளன் தன்னை தயாரித்துக்கொள்ள மேற்கொள்ளும் மனப்பயிற்சிகளில் ஒன்றாக மட்டுமே இறைவணக்கம் சொல்லப்பட்டுள்ளது . மேலும் யோகம் தத்துவ அடிப்படையிலே கூட கடவுள் என்ற கருதுகோளுக்கு எதிரானதாகவே இருக்கிறது . அது ஆதி இயற்கை என்ற கருதுகோளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாக வைத்த சாங்கிய மெய்ஞான மரபின் ஒரு பகுதி.

பழமையில் என்ன இருக்கிறது ?

தமிழ் சூழலில் இத்தகைய பழைய நூல் ஒன்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்போது எழக்கூடிய முக்கியமான கேள்வி எதற்காக பழைய விஷயங்களை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்பதுதான். இது ஒருவகையில் சரிதான். ஒரு சாதாரண வாசகனுக்கு பழைய விஷயங்கள் தேவை இல்லைதான். எளிய முறையில் தியானம் செய்யவோ, யோகம் பயிலவோ முயலும் ஒருவருக்கு கூட அவர் சார்ந்துள்ள அமைப்பு அளிக்கும் அறிமுகமே போதுமானது .

ஆனால் சுயமாக சிந்திக்க முயலக்கூடிய எவரும் பழைமையில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏனெனில் எந்த சிந்தனையும் ஒரு தொடர்ச்சியின் விளைவாக உருவாவதேயாகும். ஏதாவது ஒரு துறையில் சுயமாக சிந்திக்கும் பயிற்சி கொண்டவர்கள் அத்துறையில் அதுவரை உள்ள மரபை உதாசீனம் செய்துவிட முடியாது என்பதை அறிவார்கள். . நமது மரபை கற்று விமரிசித்து மீறிவளர்ந்து முன்னெழவேண்டும். சாக்ரடாஸையும் ஸ்பினோசாவையும் ஹெகலையும் நீட்சேயையும் கற்று முன்னகர்ந்தவர்கள்தான் மேலை சிந்தனையை உருவாக்கியவர்கள் . நமது சுயமான சிந்தனையை நாம் அடையவேண்டும் , வெறும் மொழிபெயர்ப்புப்பணியே சிந்தனை என்று அமைந்துவிடக்கூடாது என்று இப்போதுபரவலாகசொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் நம் மரபுடன் ஆக்கபூர்வமான உறவைமேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயம் இங்கே பேசப்படுவதே இல்லை. சிந்தனைகளை எவரும் அந்தரத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியாது.

பழைமை என்றால் காலாவதியானது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் நாம் இந்திய பழைமையை ,தமிழ் பழைமையைமட்டுமே அப்படி சொல்வோம். மேலைபழமையை அப்படிச் சொல்லும் துணிச்சல் நமக்கு வராது, காரணம் மேலைப்பழமை மேலைநாட்டு புதுமையை தொடர்ந்து உருவாக்கியபடி இருப்பதை நாம் காண்கிறோம். இம்மானுவேல் காண்ட் பழையவர் என்று இன்று சொல்ல முடியாது, பின்நவீனத்துவக் கருதுகோள்கள் பல அவரிலிருந்து உருவாகி வருகின்றன. நீட்சே, ஹெகல் முதலியோரும் இன்றைய பின் நவீனசிந்தனைகளுக்கு உடனடி முன்னோடிகளாக இருக்கிறாகள். அந்தகோட்டை பின்னகர்த்தினால் ஸ்பினோஸாவின் வினாக்கள், சீனோவின் புதிர்கள், ஐயவாதிகளின் தர்க்க ஒழுங்குமுறை வரை செல்லும். நமது பழைமை ஏன் நமக்கு காலவதியானது என்று படுகிறது என்றால் ஒன்று நாம் அதனை கற்றதேயில்லை என்பதனால்தான். அவற்றை நவீனச்சூழலில் வளர்த்தெடுக்கவும் இல்லை .

தமிழில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் நமக்கு முன்னோடியான சிந்தனையாளர்கள் நம் மரபில் யார்யார் ? வைணவ சைவ உரையாசிரியர்கள், திருமூலர், ராமானுஜர், நம்மாழ்வார், திருவள்ளுவர் என அது பின்னோக்கி செல்லும். இவர்களில் பிற்கால சிந்தனையாளர்களான சைவ வைணவ ஆசாரியார்களை புரிந்துகொள்ள சில மூலநூல்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானது பதஞ்சலி யோக சூத்திரம். நியாய சூத்திரங்கள், பிரம்மசூத்திரம் , சாங்கிய காரிகை மற்றும் முக்கியமான ஐந்து உபநிடதங்கள் ஆகியவை மற்ற நூல்கள். குறள், மணிமேகலை போன்ற சமண பெளத்த நூல்களை பயில அம்மதங்களுக்கு உரிய மூலநூல்களுடன் இம்மூல நூல்களும் அவசியமாக கற்கப்படவேண்டும். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் வேதாந்தம் மீமாம்சை ஆகிய ஆறு தரிசனங்களும் இந்தியமரபில் உள்ள எல்லா சிந்தனை ஓட்டங்களிலும் அவற்றை தீர்மானிக்கக் கூடிய அடிப்படைக் கூறுகளாக உள்ளன.

உதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரங்கள் மீது பயிற்சி இல்லாத ஒருவர் திருமந்திரம், சிவஞானபோதம் இரண்டையும் எளியமுறையில்கூட புரிந்துகொள்ள முடியாது . நியாய தர்க்கமுறையில் சில அடிப்படைகளையேனும் அறியாமல் ஒருவர் வைணவ உரைகளுக்குள் நுழையவே இயலாது. அதாவது நாம் நம் மரபில் நமக்கு முன்புவரை இருந்த சிந்தனைகளை புரிந்துகொள்ள அச்சிந்தனைகளின் அடிப்படைத்தர்க்கங்களை அமைத்த சிலமூலநூல்களை முதலில்பயிலவேண்டியுள்ளது.

பழமை வழிபாடு மிக ஆபத்தானது .பலகாலம் நாம் அந்தச்சேற்றில் புதையுண்டு கிடந்தோம். பிறகு அதிலிருந்து மீண்டு பழமையை உதாசீனம் செய்யும் புதிய சேற்றில் சிக்கிக் கிடக்கிறோம். உலக சிந்தனையில் தங்கள் பங்களிப்பினை ஆற்றிய எந்த கலாச்சாரமும் தன்னுடைய பழைமையை போற்றியதும் அல்ல, உதாசீனம் செய்ததுமல்ல, சமகாலத்தேவைக்கு ஏற்ப ஆழ்மாக பயின்று விமரிசன ரீதியாக எதிர்கொண்டதே என்பதை நாம் காணலாம்.

எல்லாமே நம் மரபில் உள்ளது என்ற மூடநம்பிக்கை கொண்ட பலர் இன்று உண்டு. எல்லா சிந்தனைகளும், அறிவியல் கண்டுிடிப்புகள் கூட

நம் முன்னோருக்கு தெரிந்திருந்தன என்ற பேச்சு அடிக்கடி நம் காதில் விழும். அதுவும் மரபை அறியாமல் வெறுமே வழிபட்டபடி இருப்பதன் விளைவே. இன்றைய தத்துவமும் அறிவியலும் பலமடங்கு வளர்ந்தவை என்பது உண்மையே. அதற்குக் காரணம் இந்நூற்றாண்டு அடைந்துள்ள மாபெரும் தகவல் தொடர்புவசதி. உலகம் முழுக்க உள்ள சிந்தனைகளை நாம் வீட்டில் இருந்தே கற்கமுடியும். கல்வி பரவலாக்கப்பட்டு விட்டிருக்கிறது. உயர்கல்விக்கான அமைப்புகள் பெருகியுள்ளன. ஆகவே நாம் இன்றைய சிந்தனைகளையே முதன்மையாகவும் முக்கியமாகவும் கற்று தெளியவேண்டும். அவற்றில்தான் நம் கால்கள் ஊன்றிருக்கவேண்டும்.அப்படியானால் எதற்காக பழைய சிந்தனைகளை கற்கவேண்டும் ?

அறிவியலுக்கு சமகாலத்தன்மை முக்கியமானது. காரணம் அதன் அறிதல்முறைகளில் , அறிவமைப்பில் சீரான வளர்ச்சி உள்ளது. நியூட்டனுக்கு பிறகு ஐன்ஸ்டான் கண்டிப்பாக ஒரு வளர்ச்சிநிலையே. இன்றைய இளம் அறிவியலாளன் கண்டிப்பாக நியூட்டனை விட பலமடங்கு விஷயம் தெரிந்தவனே. ஆனால் இலக்கியம் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் இது பொருந்தாது.இலக்கியத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சிப்போக்கு என்று ஒன்று இல்லை என்பதே நாம் காண்பது. மாறுபட்ட கோணங்கள் வரலாம், மேலும் நுட்பமான தர்க்கங்கள் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான மூலதத்துவநூலின் பார்வை ஏறக்குறைய நிலையாகவே இருக்கும். அதன்பின்வந்த எல்லா விவாதங்களிலும் அதன் தரப்பு ஒலித்தபடியே இருக்கும். சாக்ரடாசின் ‘குடியரசு ‘ அதற்குப்பின் வந்த சிந்தனைகளால் வலிமைபெறுமேயல்லாது காலாவதியாகாது. இலக்கியமும் அதைப்போலத்தான்.கம்பனை பாரதி காலவதியாக்குவது இல்லை. இன்றைய புதுக்கவிதைகள் சங்க இலக்கியத்தை தாண்டிச்சென்றிருப்பதாக சொல்ல எவருமே துணியமாட்டார். ஆகவே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பழைமை என்பது எப்போதும் செல்லுபடியாக கூடிய ஒரு அடிப்படைக் கட்டமைப்புதான்.

மேலும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இலக்கியத்திலும் சரி தத்துவத்திலும் சரி முற்றிலும் புத்தம்புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனிதமனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்ப நாட்களிலேயெ சிந்தனையின் அடிப்படைக்கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றில் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.உதாரணமாக இன்றைய பின்நவீனசிந்தனைகளில் எந்தச் சரடையும் நாம் பின்னோக்கி நீட்டி கிரேக்க மரபுக்கு கொண்டு சென்று ஒரு துவக்கப்புள்ளியைக் காணமுடியும். மனிதன் சில அடிப்படைக் கோணங்களில்தான் பிரபஞ்சத்தை பார்க்கமுடியும் என்பது அவனது சிந்தனையின் எல்லையாக இருக்கலாம், அல்லது பிரபஞ்சத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.

ஆகவே நாம் பழைய மூலநூல்களைப் பயிலும்போது விதைகள் அடங்கிய ஒரு களஞ்சியம் நமக்கு கிடைக்கிறது. நமக்கு கற்பனை, தர்க்கத்திறன் ஆகியவற்றின் ஈரம் இருந்தால் அவைமுளைத்து நமது சிந்தனைகளை உருவாக்க கூடும்.

[தொடரும் ]

Series Navigation

author

விவேகன்.

விவேகன்.

Similar Posts