ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
பெருந்தீனி தின்பது என் ஆத்மா ! அது இன்னிசையைத் தின்னும், ஓவியத்தைத் தின்னும் ! உயர்ந்த புத்தகங்களைத் தின்னும் ! அழகிய ஆடை ஆபரணங்களைத் தின்னும் ! குன்றுகள், ஏரிகள் உள்ள இயற்கைக் காட்சிகளைத் தின்னும் ! இந்த நாட்டில் பணச் செழிப்பின்றி எதையும் நாம் வாங்க முடியாது ! அதனால்தான் நமது ஆத்மாவின் கோரப் பசி அடங்குவதில்லை !
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Ms. Ellie in The Heartbreak House)
மேதமைத்தனம் பற்றிய என் கருத்து இன்னலுற்றுத் தியாகம் புரியும் ஓரளவு மானிடத் துன்பியலைக் குறிக்கிறது. நேர்மைப்பாடு சுமைப்புக்கு முழுப் பொறுப்பு ஏற்ற டால்ஸ்டாயின் முறிந்த தசைகள், நரகரத்தில் சிக்கிய ஸ்டிரின்ட்பெர்க், சிந்தனைச் சிலுவையில் இறந்த நியட்சேயின் தியாக மரணம் ஆகியவையே துன்பியல் மதிப்புக்கு நம்மை ஊக்குவிக்கறது. ஆனால் அவ்விதம் பெர்னாட் ஷாவின் வாழ்க்கையில் நிகழவில்லை. அவற்றுக் கெல்லாம் அவர் அப்பாற் பட்டவரா ? அல்லது அவை யெல்லம் அவருக்கு அப்பாற் பட்டவையா ?
தாமஸ் மான் (Thomas Mann) ஜார்ஜ் பெர்னாட் ஷாவைப் பற்றி
++++++++++++++++
இந்த நாடகத்தைப் பற்றி :
ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.
1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனை களோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !
நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.
நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.
++++++++++++++++++++++
நாடக உறுப்பினர்:
1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)
2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை
3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை
4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)
5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி
6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்
8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)
9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.
10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்
11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.
12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)
13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.
***************************
(இரண்டாம் காட்சி)
இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.
நேரம் : இரவு
அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான். திருடனை முன்பு மணந்த வேலைக்காரி கின்னஸ் அவனை அழைத்துச் செல்கிறாள். திருடன் போனதும் மிஸ் எல்லியும் காப்டனும் தனியே உரையாடுகிறார்.
+++++++++++++++++++++
அங்கம் -2 பாகம் -14
(மூவங்க நாடகம்)
(சென்ற வாரத் தொடர்ச்சி)
காப்டன்: என் மகளின் கணவரைப் போலிருக்கும் ஒருவனை மணப்பது மிகவும் அபாயகர மானது மிஸ் எல்லி ! அவன் எப்போதும் வீட்டு நரகத்துக் குள்ளே முடங்கிக் கிடப்பான், சாபம் இடப்பட்டுச் சிதைந்த ஆத்மாவைப் போல் !
மிஸ். எல்லி: அதைப் பற்றி நான் நினைத்துக் கூடப் பார்த்த தில்லை !
காப்டன்: நீ பணத்துக்காக ஒரு வணிகனை மணந்தால், உன் வாழ்வு வணிகமாக மாறிப் போவதை திருத்த முடியாது.
மிஸ் எல்லி: சொல்லுவீர் காப்டன் ! ஏன் மாதர் எப்போதும் மற்ற மாதரின் கணவனையே விரும்புகிறார் ?
காப்டன்: குதிரை திருடுவோன் ஏன் காட்டுக் குதிரைக்குப் பதிலாக கையில் பிடிபட்ட குதிரையை விரும்புகிறான் ?
மிஸ் எல்லி: எப்படிக் கேடு கெட்டுப் போனது இந்த உலகம் ?
காப்டன்: அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை ! நானதைக் கைகழுவி விட்டேன் !
மிஸ் எல்லி: அப்படி நான் அறிந்து கொள்வது எனக்கு ஆரம்ப நிலையே!
காப்டன்: ஆதலால் மேல் நோக்கிச் செல் எல்லி ! உலகத்தைக் கைக் கொண்டு உன்னத ஆத்மாவை இழப்பது ஒருவருக்குச் சாத்தியமாகும் ! ஆனால் இதை மறக்காதே ! உன் ஆத்மா உன்னோடு ஒட்டிக் கொள்ளும், நீ அத்துடன் ஒட்டிக் கொண்டால் ! ஆனாலும் இந்த உலகம் எப்படியாவது உன் விரல்களுக்கு இடையே நழுவிப் போய் விடும்.
மிஸ் எல்லி: அப்படி யெல்லாம் என்னிடம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை ! பண்டை நாகரீகத்தில் வாழும் பாமரனால் ஒரு பயனும் கிடையாது. பழைய பாமரன் நினைக்கிறான் பணமின்றி ஆத்மாவைப் பராமரிக்கலாம் என்று ! சிறிது பணம் இருந்தால் பெரிதாய் ஆத்மாவை வளர்க்கலாம் என்று நினைக்கிறான். ஆத்மாவை வளர்ப்பது, பராமரிப்பது, வைத்துக் கொள்வது விலை மிக்கது ! ஒரு மோட்டர் வாகனம் ஓட்டுவதை விடச் செலவானது !
காப்டன்: அப்படியா ? உன் ஆத்மா தினமும் எவ்வளவு தீனியைத் தின்னும் ?
மிஸ். எல்லி: பெருந்தீனி தின்பது என் ஆத்மா ! அது இன்னிசையைத் தின்னும், ஓவியத்தைத் தின்னும் ! உயர்ந்த புத்தகங்களைத் தின்னும் ! அழகிய ஆடை ஆபரணங்களைத் தின்னும் ! குன்றுகள், ஏரிகள் உள்ள இயற்கைக் காட்சிகளைத் தின்னும் ! இந்த நாட்டில் பணச் செழிப்பின்றி எதையும் நாம் வாங்க முடியாது ! அதனால்தான் நமது ஆத்மாவின் கோரப் பசி அடங்குவதில்லை !
காப்டன்: பணக்காரர் மாங்கனின் ஆத்மா பன்றித் தீவனத்தில் வளர்கிறது !
மிஸ். எல்லி: ஆமாம் அது உண்மை காப்டன் ! அவரிடம் பணத்துக்கு மேல் பணம் குவிகிறது. அவரது ஆத்மா சிறு வயது முதலே தீரப் பசியில் வாடியதாய்த் தெரிகிறது. ஆனால் அவர் என்மீது பணத்தை வீசி எறிய மாட்டார் ! பணத்துக்காகத்தான் நான் அவரை மணக்கிறேன் ! நான் செய்வது நியாய மானது ! அப்படிச் செய்து நான் என் ஆத்மாவைக் காப்பாற்றுவேன் ! அறிவுள்ள மாதர்தான் அப்படிச் செய்வார்.
காப்டன்: பணத்தைத் தேட பல வழிகள் உள்ளன ! நீ ஏன் திருடக் கூடாது ?
மிஸ். எல்லி: (சிரித்துக் கொண்டு) நான் சிறைக்குச் செல்ல விரும்ப வில்லை !
காப்டன்: அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நீ திருடப் போவதில்லையா ? நேர்மைத்தனம் என்பது ஒன்று இருப்பது உனக்குத் தெரியாதா ?
மிஸ். எல்லி (புன்னகையோடு) நீங்கள் பண்டைக் காலத்து மனிதர் காப்டன் ! எந்த நவீனப் பெண்ணாவது நம்புவாளா சட்டப்படி பெறும் செல்வம் நேர்மையானதாய் இருக்கு மென்று ? மிஸ்டர் மாங்கள் என் தந்தையிடம் திருடினார் ! என் தந்தையின் நண்பரிடமும் களவாடினார் ! நான் மாங்கனின் எல்லாப் பணத்தையும் திருட வேண்டும், போலீசார் அனுமதித்தால் ! போலீஸ் அனுமதிக்கப் போவதில்லை. ஆதலால் நானவரை மணந்து கொண்டு அந்த பணத்தை எல்லாம் பறிக்க வேண்டும் !
காப்டன்: நான் வாதாடப் போவதில்லை ! வயதாகி விட்டது எனக்கு ! என் மனம் தீர்மானித்து முடிவு செய்து விட்டது. பழைய முறையோ, நவீன முறையோ, உன்னை நீயே விற்றுக் கொண்டால் உன் ஆத்மாவுக்குச் சவுக்கடி கொடுக்கிறாய் ! உனது இன்னிசை, ஓவியம், உயர்ந்த நூல், இயற்கைக் காட்சி, இசைக் கச்சேரிகள் எல்லாம் உன்னைக் குணப்படுத்த முடியாது ! (எழுந்து தோட்டத்தின் பக்கம் நடக்கிறார்)
மிஸ். எல்லி: (காப்டனைப் பின்தொடர்ந்து சட்டையைப் பற்றிக் கொண்டு) அப்படி யானால் ஏன் நீங்கள் ஸான்ஸிபார் பிசாசுக்கு (Devil in Zanzibar) உம்மை விற்றுக் கொண்டீர் ?
காப்டன்: என்ன ? ஒன்றும் புரிய வில்லை நீ சொல்வது. நான் போகிறேன்.
மிஸ். எல்லி: எனக்குப் பதில் சொல்லாமல் ஓடாதீர் ! நீவீர் செய்யும் குசும்புத்தனம் இது ! எனக்குத் தெரியும் இந்த யுக்தி ! நீங்கள் உம்மைப் பிறருக்கு விற்கும் போது நான் ஏன் என்னைத் திருமணத்துக்கு விற்கக் கூடது.
காப்டன்: என்னிடம் ஊழியம் செய்தோரில் சிலர் அயோக்கியர் ! அவர் சொற்படி நடக்க மாட்டார். நான் அசிங்கமாக அவரைத் திட்ட வேண்டிய தருணம் வந்தது ! ஆதலால் நான் அவரைத் திட்டினேன் ! கைமுட்டியால் அவரது மூக்கை உடைத்தேன் ! எட்டி உதைத்தேன் ! கன்னத்தில் அறைந்தேன் ! சில முட்டாள்கள் திருடரைக் காப்பாற்றினார். அவரைப் பிடித்துக் கொண்டு போய் கப்பல் பயிற்சி நிலையத்தில் சேர்த்தார். அங்கே அவரை எல்லாம் பிரம்புக்கு அஞ்ச வைத்தார், கடவுளுக்கு அல்ல ! அவரை நான் காலால் எற்றி வாயால் பழித்து என் ஆத்மாவைக் காப்பாற்றிக் கொண்டேன் ! அந்தச் சம்பவம் என் நெஞ்சை இன்னும் உறுத்துகிறது !
மிஸ். எல்லி: சீமான் மங்கனுக்கு என்னை விற்றதாய் நான் பாசாங்கு செய்ய வேண்டும். அப்போது என் ஆத்மா வறுமையிலிருந்து காப்பாற்றப் படும் ! வறுமை என் நெஞ்சை இன்னும் உறுத்துகிறது !
(தொடரும்)
*******************************
தகவல் :
Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)
(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(D) Heartbreak House By : Elyse Sommer.
(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)
(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)
(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 20, 2010)
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25
- புத்தனின் இரண்டாம்வருகை
- ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு
- நீங்கதான் சாவி..:-
- தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா
- அறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு
- ” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்
- தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்
- ராஜநீதி.
- உடைகிறக் கோப்பைக்குள்
- நேற்றைய நள்ளிரவு என்பது..
- தொலைந்த நான் …
- கண்ணாமூச்சி
- நட்ட நடு இரவு!
- இருந்து
- பயணி கவனிக்கிறாள்.
- வாழ்வு
- வாழ்க்கைச் சக்கரம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14
- கணினி மேகம் Cloud Computing – Part 3
- ஆனந்தக் கூண்டு
- கேமராவிலிருந்து….
- அவள்..அவன்..அது..
- பூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)
- வேண்டுதல்
- விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:
- இந்தியாவின் 50 அடி பிளவு
- சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்
- ஒரு குழந்தை மழை.
- அந்த முத்துக்களை
- வலியொன்று…!
- நிலவும் அந்த நினைவும் மட்டும்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)
- ராஜா கவிதைகள்
- ஒரு சோகம்…..!
- பறவைகளைப் போல வாழ்வோம்