சில்லரை

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

எஸ் ஜெயலட்சுமி


”அம்மா,போயிட்டு வரேன்,”என்று கிளம்பினாள், ருக்மிணி. ”பர்ஸ், செக்புக், கண்ணாடி, குடை எல்லாம் மறக்காமல் எடுத்துக்கோ” என்றாள் அம்மா. அம்மா எப்பவுமே இப்படித்தான் சின்னக்குழந்தைகளுக்குச் சொல்வது போல சொல்லிக்கொண்டே யிருப்பாள்.

கொஞ்சம் எரிச்சல் வந்தாலும் யோசித்துப் பார்த்ததில் அவள் சொல்வதும் நியாயம் என்று
தோன்றியது. ருக்மிணிக்கு வயது ஐம்பது ஆகிறது என்றாலும் அம்மாவுக்கு அவள் என்னவோ ஐந்து வயதுக் குழந்தை தான்.
சில சமயம் ருக்மிணியே ”அம்மா, நாளை இன்னாருக்கு போன் பண்ணணும் கொஞ்சம் ஞாபகப்படுத்து” என்பாள். பிப்ரவரி மாதம் பென்ஷன் வாங்கப் போன அனுபவம் நினைவில் ஓடியது.

ஒன்றாம் தேதியன்று பென்ஷன் பணம் எடுக்கப் புறப்பட்டாள். தனக்கும் அம்மாவுக்குமான பேமிலி பென்ஷனை அவள் தான் எடுத்து வருவாள். பஸ்ஸ¤க்கான சில்லறையை பர்சிலிருந்து எடுத்த போது போன் கால்வரவே கையிலிருந்த பர்சை மேஜை மேல் வைத்து விட்டு போன் பேசினாள். கையெழுத்துப் போட்ட செக்கை அம்மாவிட மிருந்து வாங்கி கைப்பையில் வைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். கையில் சில்லறை தயாராக இருந்ததால் பஸ்ஸில் ஏறி விட்டாள்.

அன்று பாங்கில் நல்ல கூட்டம். கவுண்டரில் இருந்தவர் ஐனூறு ரூபாய் தாள்களாகக் கொடுத்து விட்டார். சாப்பிடப் போகும் அவசரம் அவருக்கு. பரவாயில்லை, மாத சாமான்கள், பால் கூப்பன் வாங்கும் போது மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாள் ருக்மிணி. பாங்கிலிருந்து வெளியே வந்த போது அவள் அப்பாவுடன் வேலை பார்த்த ஒருவர் ருக்மிணியிடம் குசலம் விசாரித்தார். அவரிடம் பேசிவிட்டு பஸ்ஸ¤க்காக சில்லறை எடுக்க பர்சைத் தேடிய போதுதான் பர்ஸை வீட்டிலேயே வைத்து விட்டு வந்தது தெரிந்தது. கையில் சில்லறை எடுத்துக் கொண்டிருந்ததால் பர்ஸைத் தேடவில்லை. ஹேண்ட்பாக் சைடில் தேடிய போது ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே கிடைத்தது.

சரி,பாங்கிலேயே சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்று உள்ளே போனால் எல்லோருமே சாப்பிடப் போய் விட்டார்கள். இன்னும் அரை மணிக்கு மேல் ஆகும். வழியில் கடையில் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால் இரண்டு மூன்று கடைகளில் கேட்டும் ஐநூறு ரூபாய்க்குச் சில்லறை இல்லை என்று சொல்லி விட்டார்கள். பஸ்ஸிலும் இரண்டு ரூபாய்க்கு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுக்க முடியாது. சாப்பாட்டு நேரமானதால் ஆட்டோக் களையும் காணவில்லை. நல்ல முகூர்த்த நாளானதால் ஓடிய ஆட்டோக்களிலும் கூட்டம். மேலும் நாலைந்து கடைகளில் கேட்டதில் கோரி வரை வந்துவிட்டாள்.

இப்படியே நடந்தே போய்விடலாம் போலிருக்கிறதே! கையிலோ குடையிருக்கு. சாமான்களும் இல்லை. ஒரு ரூபாய் இல்லாததால் எவ்வளவு பிரச்சனை?
ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தும் பயனில்லை. ”சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்று இதைத்தான் சொன்னார்கள் போலும்! மனதில் ஒரு வைராக்கியம். நடந்தே தான் போக வேண்டும் என்று தீர்மானித்து விட்டாள். பிப்ரவரி மாதமானதால் வெய்யிலும் அவ்வளவாகத் தோன்ற வில்லை. காலையில் எத்தனை பேர் எவ்வளவு தூரம் வாக்கிங் போகிறார்கள்? தள்ளு வண்டியில் வியாபாரிகள் பழங்கள், காய்கறிகளைத் தள்ளிக் கொண்டே டவுணிலிருந்து வண்ணார்பேட்டை, பாளையங் கோட்டை வரை வரவில்லையா? அவ்வளவு ஏன்? அவளே முன்பு வாக்கிங் போனவள் தானே. கொஞ்சம் வெயிட் போட்டதில்
முட்டு வலி வர, வாக் போவதை விட்டு விட்டாள். இது ஒரு
நல்ல ஆரம்பமாக இருக்கட்டுமே என்று தோன்றியது. தீர்மானம் உறுதியானதும் நடப்பது கடினமாகத் தோன்ற வில்லை.

வீட்டுக்கு வந்ததும் அம்மா, ”நீ போன அப்புறம் போன் கால் வந்தது அப்பத்தான் நீ பர்சை வெச்சுட்டுப் போனது தெரிஞ்சது. எப்படிப் போனே”? என்றாள். கையிலே ரூபாய் இருந்தது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தாள். எப்படி வந்தாள் என்று சொல்லவில்லை

மறு நாளிலிருந்து ஒழுங்காக வாக்கிங் போக ஆரம்பித்தாள்.

——-=========================================

Series Navigation

author

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி

Similar Posts