ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“தேசப்பற்று : நீ பிறந்திருக்கும் ஒரு காரணத்தால் அந்த தேசம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று நீ கொண்டிருக்கும் அழுத்தமான கருத்து”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (The Public : A Journal of Democracy 1910)
“உன்னால் உனது குடும்ப எலும்புக் கூட்டை (Family Skeleton) நீக்க முடியாவிட்டால், நீ அதை நாட்டியம் ஆடச் செய்யலாம்.”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Preface to Immaturity)
++++++++++++++++
நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:
ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ•ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
+++++++++++++++++++++
இந்த நாடகத்தைப் பற்றி :
ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.
1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !
நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.
நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.
++++++++++++++++++++++
நாடக உறுப்பினர்:
1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)
2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை
3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை
4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி
5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterwood) : காப்டனின் இளைய புதல்வி
7. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வுட் : (Sir Hastings Utterwood) எரியட்னியின் கணவர்.
6. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர்
7. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர்.
8. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்
9. ஆல்•பிரெட் மங்கன் (Alfred Mangan) – Mr. Mazzini Dunn’s Employer Boss
10 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)
11 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.
***************************
இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). பழைய இல்லம் உயர்ந்த பீடக் கப்பல் போல் கட்டப் பட்ட மர வீடு. மின்சார விளக்குகள் காணப்படுகின்றன. வரவேற்பு முன்னறையில் சோ•பாக்கள், நாற்காலிகள் உள்ளன.
நேரம் : மாலை ஆறு மணி, குளிர்ந்த தென்றல் வீசும் செப்டம்பர் மாதம்.
அரங்க அமைப்பு : காப்டன் இல்லத்து முன்னறையில் ஓரிளம் மாது (மிஸ் எல்லி டன்) சோ•பாவில் அமர்ந்திருக்கிறாள். மாலை நேரம். சுவர்க் கடிகாரம் 6 மணி அடிக்கிறது. மிஸ். எல்லி பொறுமை இழந்து எழுந்து நின்று அங்குமிங்கும் பார்த்து வருத்தம் அடைகிறாள். இள மாது அழகு பொங்கி உடல் நளினமோடு காணப் படுகிறாள். முகத்தில் அறிவுச் சுடர் ஒளிர்கிறது. அணிந்துள்ள ஆடை பகட்டாக இன்றி நடுத்தரக் குடும்பப் பெண்ணாகக் காட்டுகிறது. மறுபடியும் சோ•பாவில் அமர்ந்து ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை எடுத்துப் படிக்கிறாள். அப்போது ஒரு வயதான மாது (Nurse Guinness) தட்டில் மூன்று கிளாஸ் தம்ளரில் மதுபானம் எடுத்துச் செல்கிறாள். அவள் குறுக்கிட்ட போது மிஸ் எல்லியின் நூல் தவறிக் கீழே விழுகிறது. வயதான மாது வாலிப மாதை வியப்போடு முதன்முறை பார்க்கிறாள். விருந்தாளிக்கு வேலைக்காரி டீ கொடுப்பதைக் காப்டன் வெறுக்கிறார். அப்போது திடீரெனப் பல வருடங்களுக்குப் பிறகு வரும் அவரது இரண்டாம் புதல்வியை அவர் வரவேற்காது வெறுப்புடன் புறக்கணிக்கிறார்.. ஹெஸியோன் தாமதமாக வந்து மிஸ். எல்லியை வரவேற்கிறாள். அடுத்து வரும் மிஸ் எல்லியின் தந்தை மாஜினியைக் குறைகூறுகிறாள் ஹெஸியோன். மாஜினியின் எஜமானர் மங்கன் எதிர்பாராமல் நுழைகிறார்.
+++++++++++++++++++++
அங்கம் -1 காட்சி -8
(மூவங்க நாடகம்)
எல்லி: என்னைக் கேலி செய்கிறாய் நீ. உனக்கு அந்தத் தகுதி இல்லை. என் தந்தையின் வணிகம் மீண்டும் நொடித்துப் போனது. என் இதயம் நொறுங்கும் நிலைக்கு நெருங்கியது. தந்தையார் தன் நண்பர்கள் உதவுவார் என்று நம்பி ஏமாந்தார். அவர் உதவினால் மீண்டும் மேலே வர முடியும் என்று நினைத்தார். ஆனால் மிஸ்டர் மங்கன் உதவி இல்லாது போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் எங்கள் கதி ?
ஹெஸியோன்: என்ன ? தனது பங்குமுதல் நாசாமாகப் போன பின் மறுபடியும் பண உதவி செய்தாரா மிஸ்டர் மங்கன் ?
எல்லி: ஆமாம் அப்படித்தான் செய்தார் அந்த உத்தமர் ! ஒரு வார்த்தை சொல்லி இகழ வில்லை அவர் என் தந்தையை ! நொடித்த தொழிற் துறையின் யந்திரங்களையும் வணிகச் சாதனங்களையும் பணங் கொடுத்து வாங்கினார் மிஸ்டர் மங்கன். கடன்காரருக்குப் பணத்தைக் கொடுத்து அவரது வாயை மூடினார். பிறகு ஒரு தொழிற்துறையை மிஸ்டர் மங்கனே துவக்கி என் தந்தையாரை மானேஜராய் நியமித்து எங்கள் பசியைப் போக்கினார். எங்கள் வறுமையை நீக்கினார். அப்போது நான் சம்பாதிக்க ஆரம்பிக்க வில்லை.
ஹெஸியோன்: நல்ல காதல் கதை எல்லி ! எப்போது மிஸ்டர் மங்கனின் மோக விழிகள் வாலிப மங்கை உன் மீது விழுந்தன ?
எல்லி: (புன்முறுவலோடு) அது பல நாட்கள் கடந்து பிறகு ! அப்போது ஒரு சமயம் மிஸ்டர் மங்கன் ஓர் இசைக் கச்சேரிக்குத் தலைமை தாங்க நேரிட்டது. அந்த நிகழ்ச்சியில் எனக்குப் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தப் பாட்டைக் கேட்டு மயங்கிய மிஸ்டர் மங்கன் நான் வீட்டை நோக்கிச் செல்லும் போது என்னுடன் வழிநடக்க விழைந்தார் ! இருவருக்கும் அந்த வழிநடப்பு இனிதாக இருந்தது. வீட்டில் அனைவருக்கும் நான் அவரை அறிமுகப்படுத்தி வைத்தேன். தந்தை அவரது நேர்மையான போக்கை மெச்சிப் பேசினார். என்னுள்ளத்தில் பூரிப்பு பொங்கியது. அவர் எத்தகைய செல்வந்தர் ! எங்கள் இருவரது இதயங்களும் அப்போதுதான் ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டன ! அதைத் திருமண நிச்சயதார்த்தம் என்றே எடுத்துக் கொள்ளலாம். (அவள் தொண்டை அடைத்துக் கொண்டு பேச முடியாமல் தடுமாறியது.)
ஹெஸியோன்: நீயாகத் திசை திரும்பிக் கொண்டாய். அது மீண்டும் மாறிப் போகும் எல்லி !
எல்லி: அப்படி இல்லை ! திருமணத்தை நான்தான் தீர்மானித்து விட்டேன் ! திசை மாறப் போவதில்லை நான். என்னவாயினும் நான் பின்வாங்கப் போவதில்லை !
ஹெஸியோன்: உனக்கு நிச்சயம் தெரியும். நீ விரும்பாத ஓர் ஆடவனைத் திருமணம் செய்வது பெரு மதிப்பாகவோ அல்லது செய்நன்றியாகவோ இருக்கக் கூடாது. உன் தந்தைக்கு உதவிய இந்தச் சீமான் மங்கனை உண்மையாக நீ நேசிக்கிறாயா ?
எல்லி: (சிரிப்புடன்) ஆமாம் ! நான் மங்கனை நன்றிக் கடமைக்காக நேசிக்கிறேன். தங்க மோதிரம் அல்லவா மிஸ்டர் மங்கன் ?
ஹெஸியோன்: எல்லி ! அதாவது அது நிஜக் காதல் இல்லை என்று சொல்கிறாய் ! உன்னைப் போன்ற வாலிபப் பெண்டிர் தங்கப் பல்லைக் கண்டாலும் கை விரலை நீட்டுகிறார் ! சிந்திப்பதில்லை ! வயதான மனிதன் மேல் ஏன் உனக்கு வாஞ்சை உண்டாகிறது ?
எல்லி: (புன்னகையுடன்) எனக்கு மிஸ்டர் மங்கன் மீது மோகம்தான் ! என் மனதில் எப்போதும் அவர் நினைவுதான் ! நான் அவருக்கு மிகவும் கடமைப் பட்டவள் !
ஹெஸியோன்: உன் தந்தை பட்ட கடனை நீ மிஸ்டர் மங்கனுக்கு வட்டியோடு கட்டுகிறாய். அதற்கு நீ கடமைப் பட்டவள் என்று சொல்லிக் களிப்படைகிறாய் ! சரி ! வேறு யார் மீது எல்லாம் உனக்கு . . . . ?
எல்லி: ஏன் அப்படிக் கேட்கிறாய் ?
ஹெஸியோன்: வேறு யார் மீதும் விருப்பம் இருக்கிறதா ? ஒருவரையே நம்பி ஏமாந்து போகக் கூடாது நீ !
எல்லி: இல்லை ! நிச்சயம் மிஸ்டர் மங்கன் என்னை ஏமாற்ற மாட்டார் !
ஹெஸியோன்: இல்லை எதையோ நீ மறைக்கிறாய். நீ ஒரு நடிகரை நேசிக்கவில்லையா ?
எல்லி: எதை வைத்து அப்படிக் கேட்கிறாய் ?
ஹெஸியோன்: (எல்லி படிக்கும் நூலைப் பிடுங்கி) இதென்ன ? ஏன் ஒத்தெல்லோ நாடகத்தை படிக்கிறாய் ?
எல்லி: ஷேக்ஸ்பியர் நாடகத்தை நான் படிக்க வேண்டும் என்று என் தந்தை எப்போதும் என்னை வற்புறுத்துவார்.
ஹெஸியோன்: அப்படியா ? உன் தந்தைதான் உனக்கு எப்போதும் வழிகாட்டியா ?
எல்லி: ஆம். அவரது பெற்றோர் இருவரும் கவிஞர். என் தந்தைக்கு நாடகக் காவியங்கள் மிகவும் பிடிக்கும். நீ ஷேக்ஸ்பியர் நாடகம் படிப்ப தில்லையா ஹெஸியோன் ? எனக்கு மிகவும் பிடித்தது ஒதெல்லோ !
ஹெஸியோன்: உண்மையாகவா ? ஒத்தெல்லோ பொறாமை பிடித்தவன் இல்லையா ?
எல்லி: அப்படி நான் எண்ண வில்லை. பொறாமையைப் பற்றி வருவ தெல்லாம் எனக்கு வெறுப்பூட்டும். ஒதெல்லோ நாடகத்தில் தெஸ்தோமோனாவுக்கு அது ஓர் அற்புத அனுபவம் இல்லையா ? இல்லத்தில் அவளுக்கு ஒத்தெல்லோவை விரைவில் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததல்லவா ? அவன் வெளி உலகில் வீராதி வீரனாகவும் தீரச் செயல்களைச் சாதிப்பவனாகவும் தெரிகிறான் ! அவனுக்கு அவள் மீது ஒரு கவர்ச்சி ஏற்பட்டு அந்தத் தீரச் செயல்களை அவளுடன் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறான் !
ஹெஸியோன்: (சிரித்துக் கொண்டு) அது காதல் புனைவு (Romance) பற்றிய உனது கண்ணோட்டம் அல்லவா ?
எல்லி: அது காதல் புனைவில்லை ! அப்படி நடக்கலாம் மெய்யாகவே !
ஹெஸியோன்: (சோபாவில் அமர்ந்து சாய்ந்து கொண்டு) எல்லிக் கண்மணி ! நீ அதைப் பார்த்தாயா ? தெஸ்தோமோனாவுக்கு ஒத்தெல்லோ சொன்ன சில கதைகள் எல்லாம் மெய்யாக நிகழ்ந்திருக்க முடியாது !
எல்லி: அப்படி இல்லை ! அவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்று ஷேக்ஸ்பியர் நினைத்தார்.
ஹெஸியோன்: ஆமாம். தெஸ்தோமோனா அவை எல்லாம் நிகழ்ந்திருக்கலாம் என்றே நினைத்தாள் ! ஆனால் அவை மெய்யாக நிகழ வில்லை !
எல்லி: ஏன் புதிராகப் பேசுகிறாய் ஹேஸியோன் ! புரியவில்லை எனக்கு !
ஹெஸியோன்: தெஸ்தோமோனா உயிரோடு இருந்திருந்தால் ஒத்தெல்லோவின் புளுகை எல்லாம் அறிந்திருப்பாள் ! அவளை ஒத்தெல்லோ கொன்றதற்கும் அதுவே காரணம் !
எல்லி: ஒத்தொல்லோ பொய் சொல்லவில்லை !
ஹெஸொயோன்: உனக்கு எப்படித் தெரியும் எல்லி ?
எல்லி: அப்படியானால் ஷேக்ஸ்பியர்தான் புளுகு விட்டிருக்க வேண்டும் ! உன்னத வினைகள் புரிந்த எண்ணற்ற ஆடவர் உள்ளார் ஹெஸியோன் ! ஒத்தெல்லோவைப் போன்ற மிக அழகிய, வெள்ளை ஆடவன்தான் அப்படி . . . . !
ஹெஸியோன்: ஆஹா ! வா அப்படி வழிக்கு ! மங்கனைப் பற்றி எல்லாவற்றையும் சொல் ! நீ வேறொருவரை நேசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியுது ! இல்லாவிட்டால் நீ ஏன் மங்கனை எண்ணி எண்ணி ஏங்குகிறாய் ? நீ பணக்கார மங்கனை மணக்கப் போகும் பாட்டுக் குயிலாக நினைக்கிறாய் !
எல்லி: (முகம் சிலிர்த்து நாணி) ஹெஸியோன் ! நீ பயங்கரமாகப் பேசுகிறாய் ! இதில் நான் ஒன்றும் மறைக்க வில்லை ! ஆனால் நான் யாரிடமும் இதைச் சொல்லிக் கொள்வதில்லை ! அத்துடன் எனக்கு மிஸ்டர் மங்கனைப் பற்றி சரியாகத் தெரியாது !
ஹெஸியோன்: (பெரு வியப்புடன்) என்ன ? நீ மணக்கத் தீர்மானம் செய்த மங்கனைப் பற்றிச் சரியாகத் தெரியாதா ? இப்படித்தான் இல்வாழ்வில் ஆழம் தெரியாமல் காலை விடுகிறார் வாலிப் பெண்டிர் !
(தொடரும்)
*******************************
தகவல் :
Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)
(A) The Portable Bernard Shaw By : StanleyWeintraub (1977)
(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(D) Heartbreak House By : Elyse Sommer.
(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)
(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)
(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 10, 2010)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8
- தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா
- பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்
- சிரிக்கும் தருணங்கள் ….!
- எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது
- நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி
- பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்
- லெனின் விருது வழங்கும் நிகழ்வு
- காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு
- மலைகள்
- சாத்தான் படலம் !
- அகோரி
- மானுட பிம்பங்கள்
- தனித்தில்லை
- நீலத்தில் மனம் தோயும்போது…
- ரகசியங்களின் ஒற்றை சாவி
- மூன்றாமவன்
- முள்பாதை 42
- இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8
- சிறகும், உறவும்!
- நட்பு
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3
- மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்
- பூரண சுதந்திரம் ?
- உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6
- வேத வனம்- விருட்சம் 99
- நானை கொலை செய்த மரணம்
- ஜெயபாரதன் கவிதை பற்றி
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)