இரா.முருகன்
1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை
மனசுக்கு உகந்தவனும் உயிர் போன்றவனுமான ப்ரிய புத்ரன் வைத்தாஸ் என்ற வைத்தியநாதனுக்கு தகப்பன் வரதராஜ ரெட்டி என்ற மகாலிங்கய்யன் எழுதுவதிது.
ஆசீர்வாதம் அனந்தகோடி உனக்கு. அஞ்சு வயசுப் பிராயம் பூர்த்தியான தினம் இல்லையா இன்றைக்கு? ஆடிக் கோடியிலே பிறந்த தலைச்சன் பிள்ளையாச்சே நீ. எல்லா சுபிட்சமும் ஈஸ்வர கடாட்சமுமாக நீ அமோகமாக இருக்கணும்.
அடே வைத்தா.
வைத்தா வைத்தா அப்படீன்னு உன்னை நீட்டி முழக்கிக் கூப்பிடும்போது சுக்கிலமாக என்னைச் சுமந்து என் பூஜைக்குரிய தாயாரின் வயிற்றில் என்னை உயிர் கொடுத்து வளரவிட்ட என் அப்பன் வைத்தியநாதய்யர் ஞாபகம் வந்த படிக்கே இருக்கிறது.
அதுவும் உன்னை அடே என்று சுபாவமாகக் கூப்பிடும்போது அவருடைய மடியில் சிசுவாக உட்கார்ந்தபடிக்கு கழுத்திலே போட்டிருந்த மைனர் செயினைப் பிடித்து இழுத்து அப்படி அவரையும் செல்லமாகக் கூப்பிட்டது மங்கலாக நினைவுக்கு வந்து ஆனந்தம் கொள்ள வைக்கிறது. ஆனால் அந்த ஆனந்தம் கூட வரவில்லை.
நான் கடுதாசு எழுதியே ஜீவிக்கவும் அந்தப்படிக்கே மரிக்கவுமாகச் சபிக்கப்பட்டவன் என்பது உனக்குத் தெரியாதுடா வைத்தா.
ஒரு கன்யகை படுகொலையானதைக் காரணம் சொல்லி என்னைக் காராகிருஹத்தில் வைத்து தூக்கு மாட்டி பரலோக யாத்திரை புறப்பட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் ராஜாங்கத்துக்கு விரசாக என்மேல் பட்சம் வர பிரார்த்தித்துக் கொண்டு நான் எழுத ஆரம்பித்தது அடுத்த பதினைந்து வருஷமாகத் தொடர்ந்தபடிதான் இருக்கிறது.
அந்தக் கருணை மனுக் கடுதாசு லார்டு துரை கைக்குக் கிடைத்ததா, அதைப் படித்துப் பார்த்தானா, பிருஷ்டம் துடைத்து அந்தாண்டை போட்டானா என்பதெல்லாம் தெரியாத சங்கதி. ஆனாலும் சாவிலே இருந்தும் ஜெயிலேலே இருந்தும் நான் ரட்சைப் பட்டது என்னமோ நிஜம்.
உன்னைப் பெற்ற அம்மாவும் என் மாஜி சகதர்மிணியுமான லோலா என்ற லோலிடா விக்டோரியா அம்மையின் மூத்தாளான லலிதாம்பிகா அம்மாளைத் தேடி நான் அலைந்து திரிந்ததும், சமுத்திரம் தாண்டி வந்து கரும்புத் தோட்ட நிலவாரத்தை எல்லாம் அவ்வப்போது அவளுக்கு தெரிவிக்க வேண்டி கடுதாசு எழுதியதும் அப்புறம் கிரமமாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நடந்தேறியது.
மேற்படி லலிதாம்பாளுக்கும் நான் எழுதி அனுப்பிய வர்த்தமானம் எல்லாம் போய்ச் சேர்ந்து அதையெல்லாம் படித்து மனதில் இருத்தி என் ஞாபகம் லவலேசமாவது கொண்டு எங்கேயாவது கையும் காலுமாக ஜீவிக்கிறாளா என்று தெரியாது. ஆனால், அதெல்லாம் கிட்டியிருந்தால் அவள் துடைத்துப் போட மட்டும் உபயோகப்படுத்தியிருக்க மாட்டாள் என்பது திண்ணம்.
ஐந்து வயசு நிறையும் உனக்கு அப்பன் ஸ்தானத்தில் இருந்து அப்த பூர்த்திக்காக கணபதி ஹோமமும் நவக்ரஹ ஆராதனையும் பண்ணிய பிற்பாடு இந்த வருஷம் உபநயனம் நடத்தவும் நாள் குறிக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு.
அதையெல்லாம் துறந்து உன்னையும் உன்னம்மை லோலா சீமாட்டியையும் நட்டாற்றில் விட்டு நடு ராத்திரியில் ஓடி வந்து இப்போது லண்டன் பட்டணத்தில் தெருப் பொறுக்கிக் கொண்டிருக்கிற தறுதலை நான்.
நீ உன் கைக்குக் கிடைத்தாலும் எழுத்து தெரியாத காரணத்தால் இந்தக் கடுதாசைப் படிக்கப் போவதில்லை. ஆனாலும் பத்திரமாக வைத்திருந்து தமிழ் எழுதத் தெரிந்த யாரிடமாவது கொடுத்துப் படித்து அர்த்தமாக்கிக் கொண்டு என்னையும் புரிந்து கொண்டால் எதேஷ்டம்.
மற்றப்படிக்கு நீ பூணூல் மாட்டிக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணி பிராமண சிரேஷ்டனாக இருக்கவேண்டும், நான் மரித்த பிறகு எள்ளும் தண்ணியும் எறச்சு எனக்கு திவசம் கொடுக்கணும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் எனக்கில்லை. அதுக்காக உன்னைப் பெத்துப் போட்ட மகராஜி லோலா மாதிரி லோல்படவும் வேணாம்.
அப்பன் என்ற ஸ்திதிக்கு உனக்கு நான் எதுவும் சேர்த்து வைக்கலைதான். சேர்மானமான தொகையை எல்லாம் அந்தக் கடன்காரி கல்யாணியும் அவளுடைய கையாலாகாத களவாணி வீட்டுக்காரனும் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன இடம் தெரியலேடா என் குழந்தே.
உன் நல்ல அதிர்ஷ்டம், உன்னம்மை லோலா என்னை ரத்துப் பண்ணித் துரத்திவிட்ட அப்புறமாக இதெல்லாம் நடந்தது. இல்லாவிட்டால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மணியாரன் பணியாரத்தைக் கடித்த கதையாக லோலா சொத்தெல்லாம் கூட கோர்ட்டு நடவடிக்கையில் விழுந்து நசித்திருக்கக் கூடும்.
எனக்கு என்ன ஆச்சு என்று நீ இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனாகும்போது அரசல் புரசலாக யாராரோ சொல்ல ஆரம்பிப்பார்கள். அப்புறம் வயசுக்கு வரும்போது அந்தக் கதையெல்லாம் கை, கால், பீஜம் பெருத்து வளர்ந்து போயிருக்கும்.
அவனவன் தன் மனசில் நினைத்து ஏங்கி செய்ய முடியாமல் போன வக்கிரத்தையும் காமாவேச துர்க்காரியங்களையும் ஒண்ணு விடாமல் இதிலே நுழைத்து பூர்த்தி செய்த அந்தக் கதையெல்லாம் நான் சொல்ல வருவதை விட சுவாரசியமாக இருக்கவும் கூடும். ஆனால், அது எதுவும் இது போல் முழு முதல் சத்தியமில்லை.
அடே வைத்தா, உன் பொசைகெட்ட அப்பன் சொல்றேன் கேளு. ஸ்திரி சகவாசமே இல்லாத பூமி ஏதாவது இருந்தால் முதல் காரியமாக அங்கே ஜாகை மாற்றிக் கொள். முடியாத பட்சத்தில் காலாகாலத்தில் உன் மனசுக்குப் பிடித்த கன்யகை யாரையாவது கல்யாணம் பண்ணி உடம்பில் உயிர் இருக்கிற காலம் வரை அவளுக்கு விசுவாசமாக இருந்து உய்யும் வழியை மேற்கொள்வது உசிதம்.
பெண்டாளும் பித்துப் பிடித்து தெரு நாயாக மைதுனதுக்கு ஓடி அலைந்த கழிசடைத்தனம் என்னோடு மண்ணாகி ஒழியட்டும்.
நீ வைத்தாஸாக இருந்தாலும், உன்னம்மை லோலா காப்பிரி எவனையாவது அடுத்த கல்யாணம் பண்ணிக் கொண்டு. செஞ்சிருப்பாள் தடிச்சி. சுற்று வட்டாரத்து காப்பிரி தடியன்கள் பல தரத்திலும் வயசிலும் அவளை மோப்பம் பிடித்து சுற்றி வந்தது எனக்கும் தெரியும். நானும் அதேபடிக்கு வெளியே அலைந்ததால் அதை ஒரு பொருட்டாக கவனத்தில் இருத்திக் கொள்ளவில்லை.
ஏன், உனக்கு நாலு அட்சரம் கஜானனாம் பூத கணாதி சேவிதம் என்று கணபதி ஸ்லோகமும், ஆறுவது சினம் என்று ஆத்திசூடியும் கூடச் சொல்லிக் கொடுக்காமல் உடம்பு திமிர்த்து திரிந்தேன் நான்.
என்ன சொல்ல வந்தேன்? ஆமா, உன்னம்மை காப்பிரிச்சி லோலா அடுத்த கல்யாணம் முடிந்து உனக்குக் கிடைத்த புது அப்பன் உன்னை முழு கிறிஸ்துவனாக வளர்க்க முடிவு செய்திருக்கலாம். நீ யாராக எப்படி இருந்தாலும் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நான் சொல்கிற இந்த புத்திமதி பொருந்தி வரும்.
தோளுக்கு வளர்ந்த பிள்ளை தோழன்னு ஒரு பழமொழி உண்டு. நீ என் உசரமும் அதுக்கு மேலேயும் உன்னம்மை லோலா மாதிரி திடகாத்திரமாக வளர்ந்து சகல ஆரோக்கியத்தோடும் இருக்கணும். உன்னை உற்ற சிநேகிதன் போல் பாவித்து. அப்படி யாரும் எனக்கு இதுவரை கிடைக்கலை. சிநேகிதனாக பாவித்து மனசு திறந்து சொல்கிறது இதெல்லாம்.
நான் பலாத்சங்கம் செய்து படுகொலைப் படுத்தினேன் என்று என்னை தூக்கு மரத்தை தரிசிக்க வைத்த தெலுங்கச்சி கல்யாணி செத்தாலும் எப்படியோ என்னை விடாப்பிடியாகத் தொடர்ந்து தமிழ் மட்டும் பேசுகிற பெண்டாக சமுத்திரம் கடந்தும் வந்த கதையை உனக்கு சாவகாசமாகச் சொல்கிறேன். அதையெல்லாம் நம்புவதும் நம்பாததும் உன் இஷ்டம்.
இவளும் அவளும் கல்யாணி என்கிற பெயரும், ஒரே சாயலும் கொண்ட ரெண்டு பெண் ஜன்மங்கள் என்று நீ எடுத்துக் கொண்டாலும் பாதகமில்லை. ஆனாலும் தெலுங்கச்சியை நான் இச்சித்து திருக்கழுக்குன்றம் பாறையில் பூமியும் ஆகாயமும் தகிக்கும் ஒரு பகல் வேளையில் கிடத்தி அவள் உடம்பில் அடக்கி வச்ச சுகத்தை அனுபவிக்க முற்பட்டது முழுக்க இவளுக்கு எப்படியோ தெரியும்.
ஆனால் என்ன? அதே உடம்பு. அதே சுகந்தமான வியர்வை வாடை. அதே மாதிரி சிருங்காரமான பாவனைகள். ஆக, நான் திரும்ப என் கல்யாணி என்ற மாயச் சுழலுக்குள்ளே ஆனந்தமாக விழுந்தேன். சுற்றிச் சுழற்றி அலையடித்து என்னை கீழே ஒரு வினாடி தள்ளி அடுத்த நொடியில் மேலே எறிந்து விளையாடி உடலை, மனசை, நினைப்பை எல்லாம் எல்லா நேரமும் ஆக்கிரமித்த மோகம் அது.
உன்னம்மை லோலாவைக் கல்யாணம் செய்தாலும் கல்யாணியோடு என் தொடுப்பு தொடர்ந்தபடி தான் இருந்தது. அவள் வீட்டுக்காரனும் அதுக்கு அனுசரணையாக இருந்ததைச் சொல்லியாக வேணும்.
நான் தான் இப்படி வேலை வெட்டி இல்லாமல், இல்லை அதெல்லாம் அம்பாரமாகக் குவிந்திருந்தும் எதையும் சட்டை பண்ணாமல் ரதி சுகத்தில் மூழ்கிக் கிடந்தேன் என்றால் என்னைச் சுற்றி இருக்கிற மொத்த உலகமுமே அந்தப்படிக்கு லகரி லகரியென்று மூச்சு விட்டுக் கொண்டிருக்குமா என்ன?
பாரத தேசத்தில் இருந்தும் லங்கையில் இருந்தும் கொஞ்சம் போல் மிலேயா, சயாமில் இருந்தும் கரும்புத் தோட்ட வேலைக்கு கப்பல் கப்பலாக ஆணும் பெண்ணுமாக வந்து இறங்கியது ரெண்டு வருஷம் முந்தி வரை ஒரு குறைச்சலும் இல்லாமல் நடந்தேறி வந்தது.
சொல்லப் போனால், நம்ம தேசம், என் ஜன்ம பூமியான மதராஸ் பட்டிணத்திலும் சுற்றிப் பரந்து விரிந்த தமிழும் தெலுங்கும் உச்சரிக்கும் துரைத்தனத்து ராஜதானியிலும் உழைக்கிற உழைப்புக்குக் கிடைக்கிறதை விட கூடுதலாக இங்கே கிடைத்ததாலும், அங்கே இருக்கப்பட்ட ஆயிரத்துச் சொச்சம் தீட்டு சமாசாரங்கள் இங்கே இல்லாமல். முழுக்க இல்லேன்னு சொல்ல முடியாது.
ஆனாலும் நான் மகாலிங்க அய்யனா, வரதராஜ ரெட்டியா என்று நதிமூலம் பார்த்து யாரும் ராத்தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளவில்லை. அந்த அளவுக்கு ஜாதி விஷயம் இங்கே பெரிசாக எடுத்துக் கொள்ளப்படாதததாலும், மதராஸ் ராஜதானி, வங்காளம், இந்துஸ்தானி பேசுகிற பிரதேசம் இப்படிப் பல இடத்தில் இருந்தும் தோட்ட வேலைக்கு ஆட்கள் இங்கே வந்த மணியமாக இருந்தது உண்மை.
இதிப்படி இருக்க, போன வருஷம் இந்த நிலைமைக்கு சீர்கேடு உண்டாச்சு. இதுவரைக்கும் இல்லாத தோதில், பூலோகத்து தேசங்கள் எல்லாம் கட்சி கட்டி மோதி சர்வ நாசம் விளைவிக்கிற யுத்தம் ஏற்பட்டதே காரணம். நீ இதைப் படிக்கிற காலத்தில் அதெல்லாம் ஓய்ந்து போய் எல்லோரும் எவ்விடத்திலும் சமாதானமாகித் தத்தம் ஜீவனோபாய அபிவிருத்திக்கு வழி செய்து கொண்டு சகஜமாகப் போய்க் கொண்டிருக்கலாம்.
இன்னும் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில், துப்பாக்கியும் வெடிமருந்தும் கொண்டு லோகமே அழிந்து போகும் என்று பாதிரி ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் சொன்னால் அதையெல்லாம் நம்பாதே. பயப்பட வைத்து காசு பார்க்கிறது எல்லாக் கோவில் பூசாரியும் எங்கேயும் செய்கிறதுதான்.
கிரகணம் பிடித்தால் பீடை. அதுக்குப் பரிகாரம் என்று நெற்றியில் ஓலைச் சுவடியைப் பரிவட்டம் மாதிரிக் கட்டிக் கொண்டு நான் கூட உட்கார்ந்து புகை படிந்த கண்ணாடிச் சில்லு மூலம் ஆகாசத்தில் சூரியன் அஸ்தமிப்பதைப் பார்த்திருக்கிறேன். வேம்பு சாஸ்திரிகள் பரிகாரம் பண்ணிய விதத்தில் வசூலித்த தட்சணையை இடுப்பில் முடிந்து கொண்டு கிளம்பறச்சே சூரியன் திரும்ப வரும்.
சூரிய கிரகணம் கிடக்கட்டும். நான் என்னைப் பிடித்த கல்யாணி கிரகணத்தைப் பற்றி இல்லையோ சொல்லிக் கொண்டிருந்தேன்?
ரெண்டு வருஷம் முன்னால் ஒரு ராத்திரி உன்னம்மை லோலாவை ப்ரீதிப் படுத்தி விட்டு அரையில் வேட்டியைத் தளர்த்தியபடி கல்யாணி இருந்த குச்சுக்கு நடந்தேன். நித்திய கர்மம் மாதிரி இந்த விஷயத்தில் காட்டின சிரத்தையை வேறே கல்வி கேள்வி, தொழில் அபிவிருத்தியில் காட்டி இருந்தால் நான் இன்னேரம் மெச்சத் தகுந்த பெரிய மனுஷனாக ஆகியிருப்பேன். என்ன செய்ய, என் தலைவிதி.
நிலாக் காய்ந்து கொண்டிருந்த நேரம். கல்யாணி தோளில் கை வைத்து உலுக்க அவள் இதுக்காகக் காய்ந்து காத்துக் கொண்டிருந்த மாதிரி என் இடுப்பைப் பற்றி இழுத்து மேலே கிடத்திக் கொண்டாள். அந்தப் பேடிப் பயல் போன இடம் தெரியலை.
ஒரே புழுக்கமாக இருந்ததால் குச்சுக்குள் ரெண்டு பேரும் வெந்து போவானேன், நிலாக் காய, வாசலிலேயே விச்ராந்தியாகப் படுத்து மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போமே என்று நான் யோசனை சொன்னேன். அவளை வெளியே கிடத்தி அனுபவிக்க வேணும் என்று என்னமோ அன்று அடங்கா வெறி.
அர்த்த நக்னமாக வீட்டு முற்றத்தில் ஆகாசத்துக்கும் நட்சத்திரங்களுக்கும் தன் சௌந்தரியம் எல்லாம் காட்டிக் கொண்டு மல்லாந்து கிடந்த கல்யாணிக்குள்ளே நான் அடைக்கலமானேன். தூரத்தில் சமுத்திரம் அலையடிக்கிற சத்தம் ரம்மியமாக காதில் விழ, ராப்பறவை கூவல் அதுக்கு ஒத்தாசையாக அடியெடுத்துக் கொடுக்க, நான் சொர்க்கம் போனதாகக் கற்பனை செய்தபடி அப்புறம் அவள் பக்கத்தில் கிடந்தேன்.
மெல்ல என் காது மடலை முன் பல்லால் கடித்து உதட்டில் முத்தம் ஈந்தாள் கல்யாணி. கண் இமைகளையும் எச்சில் படுத்தி அவள் காதில் குறுகுறுத்தாள்.
நம்ம ஊர்லே இருந்து ஆளுங்களைக் கொண்டு வந்தா கமிஷன் கிடைக்கறதாமே.
ஆமா, கேள்விப்பட்டேன்.
நானும் நாலு காசு பாக்க வேணாமா?
அவள் ஆலிங்கனத்தில் அழுத்தியபடி கேட்டாள்.
நானும் உன்னை முழுசாப் பார்க்கணும்.
ராஜா நீங்க நினைச்சா எல்லாம் நடக்கும்.
அவள் அணைப்பில் உறங்கிப் போனேன் அந்தப்படிக்கே.
(தொடரும்)
- சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ் – நேர்மையும், உதாரண புருஷர்களும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தைந்து
- உஷ்ண வெளிக்காரன்
- நடக்கப்பழகியிருந்தேன்…
- குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?
- செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் இரு வக்கிரச் சந்திரன்கள் ·போபாஸ் & டைமாஸ் (Mars Two Irregular Moons : Phobos & Deimos)
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -18
- அன்புடையீர்
- சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி
- To Kill a Mockingbird
- பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி – போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -3
- நடப்பு
- வேத வனம் விருட்சம் 89 –
- கால தேவன்
- நண்பர்கள் வட்டம்
- நடுக்கடலில்…
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 1 (சைப் டைட்டில் : நித்திய சோதனை)
- காகிதக் கால்கள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -21
- களம் ஒன்று கதை பத்து – 4 ஆப்பிள் அறிவித்த ஏவாள்
- முள்பாதை 33
- அந்தமானில்……
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith
- ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
- குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!
- சுவடு
- ரிஷி கவிதைகள்
- காதலில் விழுந்தேன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3
- ஏ.தேவராஜன் 2 கவிதைகள்