இரா.முருகன்
10 ஜூன் 1910 – சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை
நீங்க யார்யார்னு எனக்குத் தெரியலே. நான் பேசற பாஷை உங்களுக்கு அர்த்தமாகுமான்னு கூடத் தெரியாது. முதல்லே நான் இருக்கேன், உயிரோடு கூட சுவாசிச்சுண்டு இருக்கேன், எங்கேயோ இருந்து வேறே எங்கேயோ வந்து சேர்ந்திருக்கேன்கறதை எல்லாம் நீங்க நம்பணும்.
உங்களைப் பார்த்தா அதை சந்தேகிக்கறவா மாதிரி தெரியலை. வெள்ளைக்காரி சீமாட்டி, கூட அவளோட ஒத்தாசையா இருக்கற வேலைக்கு நிக்கற பொண்ணு. அப்படித்தானே.
இல்லையா? நீங்க வேறே வேறே பூமண்டல பிரதேசத்துலே இருந்து வரப்பட்டவாளா? எங்க தெரிசா அக்காவுக்கு வேண்டப்பட்டவா இல்லையா?
பார்த்திருக்கேன். ரெண்டு நாளா பின்னாலேயே அலைஞ்சுண்டிருக்கேனே. தெரிசா அக்கா என்னைப் பத்தி உங்க கிட்டே ஒண்ணும் சொல்லலியா?
பேய் அலையற ராத்திரியிலே நீங்க இப்படி வந்தது எனக்கும் என் கொழந்தைக்கும் கொஞ்சமும் பிடிக்கலே.
பொம்மனாட்டின்னா தைரியம் இருக்க வேண்டியதுதான். கொஞ்ச நஞ்சம் அது இருந்தா, நான் எங்காத்துக்காரர் கொல்லூர் போகலாம்னு கிளம்பினபோதே அஸ்து கொட்டியிருக்க மாட்டேனா?
காசர்கோட்டுலே தேமேன்னு சோத்துக் கடை நடத்திண்டு குடும்பத்தை சம்ரட்சணம் பண்ணிண்டு கோவில், குளம், அடுத்து அயல்லே வம்பு, சின்னதா சண்டை. கோலத்துலே கூட சண்டை வந்திருக்கு தெரியுமோ.
நம்மாத்து வாசல் வரைக்கும் அடைச்சு சூனிய மாசத்துலே கோலம் போட்டுட்டா அந்த ராயர் மாமி சட்டமா. நானும் கொழந்தையும் பெரிய தோதிலே எழுபது புள்ளி நூறு வரிசை ஏற்பாடு பண்ணி ஒரு கோல நோட்டு முழுக்க வரைஞ்சு பார்த்து பொடி எல்லாம் திரிச்சு எடுத்துண்டு விடிகாலையிலே வாசலுக்கு வந்தா, ராயச்சி நடுவாசல் வரைக்கும் கோடு இழுத்து வச்சிருக்கா. அதுவும் பிசிறு பிசிறா.
அன்னிக்கு வந்த வாக்குவாதம் முத்தி ரெண்டு நாள் பேசலே அந்தப் பக்கத்து வீட்டுலே. ஆனாலும், தன் கொழந்தைக்கு திரண்டுகுளி வந்திருக்குன்னு ராயர் மாமி நம்மாத்து வாசல்லே நின்னு சொன்னதும் மனசே கரைஞ்சு போச்சு.
என் குழந்தை மாதிரின்னா ராதையும். ஓடிப் போய் குழந்தையை வாரி அணைச்சுண்டேன். ராயச்சி கிறுக்கச்சி. ஏண்டி சண்டை போட்டேன்னு கூட கேட்க வாயில்லாம, அஸ்காவைக் கொண்டு வந்து என் வாயிலே கொட்டி முழுங்குடி முழுங்குடிங்கறா,
எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்ண்டு இருக்கேன் பாருங்கோ. நீங்க ரெண்டு பேரும் தைரிய லட்சுமி அவதாரம் தான். தைரிய லட்சுமி தெரியாதா? அக்கா கிட்டே கேட்டுப் பாருங்கோ. மறந்திருக்க மாட்டா இன்னும்.
சின்ன வயசுலே இருந்து அம்பலத்துலே புராணம் கேட்டு, படிச்சு பழகினது எப்படி மறக்கும்?
அவளையும் வேறே பிரேத ஆத்மாக்களைப் பார்க்க கூட்டிண்டு வந்துட்டேளா? சரியாப் போச்சு. ஏற்கனவே பூஞ்சை சரீரம், இப்படி ராத்திரி அலைஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்? உங்களுக்கும் தான் சொல்றேன். தைரியத்துக்கும் ஒரு பரிதி உண்டல்லே?
நீ ஏண்டி எந்த தைரியத்திலே இப்படி ஊர் விட்டு ஊர் வந்து காலம் விட்டு காலம் மாறி ராத்திரியா பகலான்னு இல்லாம திரிஞ்சிண்டு இருக்கேன்னு கேட்கறேளா? என்ன பண்ணச் சொல்றேள். எல்லாம் இந்த வயத்துக்குத்தான்.
எனக்கு இன்னும் பசியும் தாகமும் தெரியும். நான் பிரேத ஆத்மா இல்லே. உசிர் இன்னும் இருக்கு. வாதனைப் படறதுக்குன்னு இன்னும் இருக்கு. உடம்பும் இருக்கு. எனக்கு மட்டும் இல்லே. என் பொண்குழந்தைக்கும். குட்டியம்மிணியும் பசியோட தான் இருக்கா.
கொஞ்சம் நான் சொல்றதை உட்கார்ந்து கேட்கறேளா. பிசாசு பார்க்கறதுக்கு இன்னும் நேரம் இருக்கு. அதுகள் வந்து இருந்தாலும் இந்த மனுஷா தாகசாந்தி பண்ணிண்டு செருப்புலே காலை நொழச்சுண்டு கிளம்ப வேணாமா?
அந்தக் கிழவன் உங்களை எல்லாம் கூட்டிண்டு போறேன்னு காசை வாங்கி பையிலே போட்டுண்டு நிக்கறானே, அவன் சொல்றதை எல்லாம் முழுக்க நம்ப வேணாம். அம்புட்டு பேய் இந்த ஊர்லே கிடையாது. நான் தான் சுத்திண்டு இருக்கேனே. எனக்கு தெரியாதா?
ரொட்டி கொண்டு வந்திருக்கேளா? அக்கா கையிலே வச்சிருப்பாளே அந்தப் பையிலே எப்பவும் நாலு துண்டு ரொட்டியும் கிச்சிலி பழப் பாகுமா எடுத்து வச்சிருப்பா. எப்போ எங்களைப் பார்த்தாலும் கூட்டி வச்சு, கொடுத்துட்டுத்தான் போவாள்.
சித்த சிரமத்தைப் பார்க்காம அவ பையை இங்கே எடுத்துண்டு வரேளா? ஒண்ணும் தப்பா நினைச்சுக்க மாட்டா. நீங்க அவளுக்கு ஆப்த சிநேகிதிகளாச்சே. அவ பணம் எல்லாம் பையிலே எடுத்துண்டு போக மாட்டா. ஒரு பொல்லாப்பும் உங்களுக்கு வராது. நான் ஜவாப்தாரி.
உங்க பேரு சாரான்னு தெரியும். இங்கிலீஷ் காரா மாதிரி உங்க ஊர் பாஷையிலும் இதுக்கு நன்னி சொல்றது எப்படின்னு சொல்லிக் கொடுங்கோ. சொல்லிடறேன்.
இங்கே வந்த புதுசுலே தெற்கே ஒரு தெரு, பெயர் கூட, ஆமா, கார்வர் தெருவோ என்னமோ, அங்கே ஒரு கிழவன் திரிஞ்சிண்டிருக்கான். அவன் கண்ணுலே பட்டேன் பாருங்கோ. எச்சூஸ் மீ எச்சூஸ் மீன்னு சொல்லிண்டே பின்னாலே வந்துட்டான்.
பிரேதமாம். யாரைப் பார்த்தாலும் மரியாதை விலகாமல் அப்படி மன்னிப்பு கேட்டுண்டே இருப்பானாம்? என்னத்துக்காம்? எனக்கு என்ன தெரியும்? நீங்க தான் பார்க்கப் போறேளே. அவன் வந்து உங்க கிட்டேயும் சொல்வானா இருக்கும்.
இவ தான் குட்டியம்மிணி, என் ஒரே பொண்ணு, அஞ்சு வயசா? அதெல்லாம் எந்தக் காலத்திலேயோ. நாங்க இப்படி அலைய ஆரம்பிச்சே கொல்ல வருஷம் பத்து ஆயிடுத்து.
இவ இப்போ பெரியவளாயிட்டா. அதான் அக்காவோட சல்லாத் துணியை இடுப்புலே குறுக்கே சுத்தி விட்டிருக்கேன். வயசு வெளியிலே தெரியாட்டாலும் பெத்தவளுக்குத் தெரியாதா என்ன? அப்படியே நம்மாத்துக் குழந்தையை பொறத்தியான் கொள்ளிக் கண்ணை வச்சுண்டு வெறிச்சுப் பார்க்க விட்டுடுவோமா என்ன? உங்க ஊர்லேயும் இதானே நடைமுறை?
இந்த மாமி வெள்ளைக்கார தேசமில்லையோ? அமெரிக்கையான ஊரா அது? பெயர் தான் வாயிலே நுழையலே. எனக்கு என்னத்து இங்கிலீஷும் மத்ததும். உள்ளதையே உபயோகப்படுத்திக்கத் தெரியாம கோட்டை விட்டுட்டு நிக்கறேன்.
ஆனா இங்கே எப்படியோ வந்து சேர்ந்துட்டேன். அக்கா கிட்டே போ போன்னு என் மாமியார் தான் கொண்டு வந்து தள்ளினா போல இருக்கு. ஒண்ணும் புரியலை.
மாமியாரா? அவளைத்தான் ஒரு குடத்துலே கொல்லூருக்குக் கொண்டு போனோம். நன்னாப் பேசிண்டு தான் வந்தா. அவ பிள்ளை மேலே ரொம்ப பிரியம். ஒத்தைக் குழந்தை ஆச்சே. நான் கல்யாணம் ஆகி வரதுக்கு முந்தியே அவ சிவலோகப் பிராப்தி அடைஞ்சுட்டா. அக்கா அதுக்கும் முந்தியே அம்பலப்புழையிலே இருந்து கிளம்பியாச்சு. அக்காவோட அப்பா வேதத்துலே ஏறினதுக்கு அப்புறமாம் அது.
எங்க மாமியார் பேரு விசாலாட்சி அம்மாள். மாமனார் பேரு குப்புசாமி அய்யர். பெரியவா பேரை எல்லாம் சொல்றது எங்க பக்கத்துப் பழக்கம் இல்லே. ஆனா, நீங்க அக்காவோட சிநேகிதிகள். என்னை மாதிரி, குட்டி அம்மிணி மாதிரி பெண் ஜன்மம் எடுத்தவா.
நாங்க படற சித்ரவதை உங்களுக்கோ அக்காவுக்கோ இதுலே லட்சத்துலே ஒரு பங்கு கூட ஏற்படக்கூடாது. பாவம் தாங்க மாட்டேள் நீங்க.
இங்கே விண்ட்போர்ட் தெருவிலே சுத்திண்டு இருக்கற சீமாட்டி ஒருத்தி இப்படித்தான் ஆதரவு வார்த்தை சொன்னா. ஆமா, ஆவி தான். இவா எல்லாம்.
நானும் என் குழந்தையும் இவாளைப் போல இன்னொரு தரத்திலே இருக்கப்பட்டவான்னு நினைச்சோ என்னமோ எங்களோட நன்னா பழகறா.
இப்போ உங்க கிட்டே நான் பேசறது புரியற மாதிரி, நீங்க சொல்றது எனக்கு அர்த்தமாகிற மாதிரி இந்த ஊர்லே இருக்கற அமானுஷ்ய ஆத்மாக்களும் பேசப் பழகச் செய்யறா.
என்ன சொல்லிண்டு இருந்தேன். ஆமா, விண்ட்போர்ட் தெரு சீமாட்டி. அவ தான் சொன்னா, இப்படி நீயும், குழந்தையுமா ஒரு பக்கம், எங்கே திரிஞ்சிண்டிருக்கான்னு தெரியாம உங்காத்துக்காரன் இன்னொரு பக்கம். உங்க மட்டுலே உங்க மூணு பேரை மட்டுமாவது சேர்த்து வைக்கறதுக்கு பிரயத்தனம் பண்ணச் சொல்லி மகாராஜாவுக்கு மகஜர் கொடுங்களேன்.
நான் சொன்னேன். அது மட்டும் இல்லே, என் மாமியார் நல்ல கதிக்குப் போகணும். அவ இருக்கப்பட்ட ஸ்தாலிச் சொம்பு கிடச்சு அதை கங்கையிலோ வேறே நீர்நிலையிலோ கரைக்கணும்.
அது எல்லாம் அப்புறமாடியம்மா. மகாராஜா கிட்டே மகஜர் கொடுத்தா சர்க்கார் சிலவிலே விக்ஞானம் படிச்ச பண்டிதர்களை நியமிச்சு உன்னோட காலத்தை நேராக்கிடக்கூட முடியும்னு தோணறது. அட, பத்து வருஷம் உனக்குத் திரும்ப கிடைக்கலேன்னாலும் அதுலே பாதி, முக்கால் வாசி கிடைச்சாலும் பிரத்யட்சமான காலபோதம் வந்துடுமே. அப்புறம் அலையாம கொள்ளாம, உங்க ஊர்லேயே போய் வேதத்துலே ஏறி ஊழியம் பண்ணலாமேன்னு கேட்டா அவள்.
வேதத்துலே எல்லாம் ஆயிரம் ருபாய் தட்சிணை வச்சாலும் எங்காத்துக்காரர் ஏற மாட்டார். கொல்லூர், மங்கலாபுரம், அம்பலப்புழை. ஒரு அம்பலம் விடாம தொழுதுட்டு நாங்க பாட்டுக்கு தேமேன்னு காசர்கோட்டுலே சாப்பாட்டுக்கடை திரும்ப தெறந்து வச்சு ஒத்தருக்கும் விரோதம் இல்லாமே நடத்திண்டு வருவோம்.
நான் சொன்னதை எல்லாம் பெட்டிஷனா எழுதி எடுத்திண்டு போய் மகாராஜா கிட்டே கொடுக்கச் சொன்னா சீமாட்டி.
எங்க ஆத்துக்காரர் சாயல்லே லண்டன் பட்டணத்துலே யாரையோ யந்திரம் பூட்டின சாரட் வண்டியிலே பார்த்தேன்னு அக்கா கூட சொல்லியிருந்தா. அவர் அங்கே தான் இருக்காரோ, வேறே எங்கே எல்லாம் அலைஞ்சுண்டு இருக்காரோ.
அவர் பெயரா, மகாலிங்க ஐயர். பெயரைச் சொன்னா ஆயுசு குறைச்சல்னு சொல்வா. அது எதுக்குக் குறையப் போறது? என்றும் முப்பது அவர். இருபத்து நாலு நான். என் குழந்தை நாலு வயசு.
இது மாதிரி தண்டனை வேறே யாருக்காவது உங்க கிறிஸ்து மகாரிஷி உபதேசிக்கற புராணத்திலே சொல்லி இருக்கா?
எங்க புராணத்துலே இருக்கான் ஒருத்தன். மார்க்கண்டேயன். ஆனா, அவனை எங்களை மாதிரி காலத்திலே பறிச்சுப் போட்டு எங்கேயோ இருந்து எங்கேயோ இழுத்துண்டு போய் பசியோட, தாகத்தோட சுத்த வச்சதா எந்த பௌராணிகனும் சொல்லலே. நான் தான் எத்தனை கதை கேட்டிருக்கேன் கோவில்லே.
ரொட்டி தேவாமிர்தமா இருந்தது. கொஞ்சம் வெள்ளம் தரேளா? பரவாயில்லே. நீங்க குடிச்சு மீந்ததுனாலும் சரிதான். தண்ணிக்கு என்ன தீட்டும் மத்ததும்? அதெல்லாம் பார்க்க ஸ்திதியிலா நாங்க இருக்கோம். சொல்லுங்கோ.
மகஜர் எல்லாம் எழுத ஆள் கிடைக்காததாலே, நீயே நேர்லே ராஜாவைப் பார்த்துச் சொல்லிடு, அவர் லண்டன் பட்டணத்துலே இருந்து கிளம்பி இந்த ஊருக்கு வந்துண்டு இருக்கார்னு சீமாட்டியும், இன்னொரு அழுகை மூஞ்சி ஆசாமியும் சொன்னாங்க.
ஆமா, அவர் விண்ட் தெருவிலே இருக்கப்பட்டவர். உங்க கண்ணுலே இன்னிக்குப் பட்டாலும் படுவார். ஐயரம்மான்னு கேட்டுப் பாருங்க. நன்னாத் தெரியுமேம்பார்.
ராஜா வந்த ரயில் வண்டியிலே ஏறி நானும் குழந்தையும் ஆளொழிஞ்ச ஒரு பெட்டியிலே காத்திண்டு இருந்தோம். மருத்துவன் ஏதோ கலக்கி எடுத்துண்டு போய்ப் போய் ராஜாவுக்கு ராத்திரி முழுக்கக் கொடுத்துண்டே இருந்ததாலே திருமனசை தரிசிச்சு பிரார்த்தனை சொல்ல நேரமே வாய்க்கலை. ராஜாவும் தான் பாவம் என்ன பண்வார்? கடுத்த அஜீர்ணத்தோடு லண்டன்லேருந்து கிளம்பி வந்தாராமே?
வண்டியிலே ஸ்நான, மூத்ரம் ஒழிக்கற சௌகரியம் எல்லாம் நன்னா இருந்ததாலே, குட்டி யம்மிணிக்கும் குளிச்சு விட்டு நானும் குளிச்சேன். இங்கே இல்லாட்டா கடல் ஸ்நானம்தான் அனுதினமும்.
அஜீர்ணமா? எனக்கா? காலம் மறிஞ்சு இப்படி ஆனதிலே ஒரே நல்ல விஷயம் மல மூத்ர விசர்ஜனம் பத்தின கவலைக்கே இடம் இல்லாம உடம்பு நேராயிடுத்து. தூரம் கூட நின்னு போயிடுத்து எனக்கு. இருந்தா மட்டும் என்ன பண்ணப் போறேன்.
குட்டி அம்மிணிக்கு வந்தாத்தான் பிரச்சனை. இந்த ஸ்திதியிலே இருந்துண்டு எங்கே போய் எப்படி மாப்பிள்ளை பார்க்கறது?
யாரோ படி ஏறி வர்ற மாதிரி இருக்கு. சித்தெ இருங்கோ. பார்க்கறேன். எல்லாம் அந்த வழிகாட்டுற கிழவன் தான்.
இங்கே ரெண்டு சின்ன வயசுப் பசங்களுக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து நிலவறைக்கு அனுப்பி வச்சிருக்கான். நிலவறை தெரியாதா? நீங்க போய்ப் பார்க்கத்தானே போறீங்க. அங்கே ஏழெட்டு பிசாசு இருக்கு. எல்லாம் சாத்வீகமானவா தான்.
ஆனா, அப்புறம் அதுலே என்ன சுவாரசியம்? நீங்க நிலவறையிலே நிக்கும்போது பிசாசு தூங்காமா இருந்து பொழுது போகாம இருந்தா ஒரு ஓரமா வந்து நின்னு பார்த்துட்டுப் போயிடும். ஆனா இருட்டுலே உங்க கையிலேயோ, தோள்ளேயோ ஒரு கீறல் விழறதுக்கு வாய்ப்பு உண்டு.
பிசாசு பண்றது இல்லே. கிழவன் அனுப்பின பசங்க இருட்டுலே உட்கார்ந்து உத்தேசமா யாரையாவது இப்படிப் பண்ணிடுவா. வாச்சி வாச்சியா கையிலே நகம் வச்சுண்டு இருக்கு இந்த பசங்கள்.
ஒரு நாள் இல்லாட்ட ஒரு நாள் பாருங்கோ, நான் இதுகள் கை நகத்தை பழம் நறுக்கற கத்தியாலே முழுசா மழிச்சுத் தள்றேன். அது என்ன அன்னிய ஸ்திரி தோள்லே நகக்குறி வைக்க இவன் யாரு கட்டிண்ட புருஷனா?
நகக்குறி தெரியாதா? கொஞ்சம் இருங்கோ. அப்பாடா, அம்மணி தூங்கிட்டா.
நகக்குறிங்கறது கொக்கோக சாஸ்திரம். புஸ்தகம், ஓலைச்சுவடி எல்லாம் எங்க நாட்டுலே பிரசித்தம். நீங்க எங்க ஊர்லே போனா இங்கிலீஷ்லே அச்சுப் போட்டதே கிடைக்க்கும். பாவாடை சாமி, கன்யாஸ்திரி இல்லியே உங்க கூட்டத்துக்கு வந்தவா? குடும்பஸ்தரா இருந்தபடி ஸ்வாமி கும்பிடறவா தானே? நகக்குறி தெரிஞ்சுக்க வேண்டிய ஒண்ணுதான் அப்போ.
என்ன சொல்லிண்டு வந்தேன்? ரயில்லே மகாராஜாவை தரிசனம் பண்ணி குறை தீர்க்க பரிகாரம் கேட்டு பிரார்திச்ச்க்கற உத்தேசத்தோடு நான் ரயில்லே ஏறினதுதானே?
குளிச்சுட்டு படுத்து நானும் குஞ்சுவும் தூங்கியே போய்ட்டோம். எவனோ பத்திரிகைக்காரனாம், சட்டமா ஏறி நாங்க படுத்துண்டு இருந்த இடத்துக்கு பக்கத்துலே ஒண்டிண்டு உக்காந்து புகை விட ஆரம்பிச்சான் படுபாவி.
குடலைப் பிடுங்கற நாத்தம். நான், கொழந்தையை கூட்டிண்டு இறங்கிட்டேன். ராஜா ஆயுசோடு இருந்தா மகஜரை அப்புறமாக் கொடுத்துக்கலாமே?
உங்க மகாநாட்டுக்கு அவர் வருவாரா? வேறே யாராவது பெரிய மனுஷா வந்திருந்தா, எங்க துன்பத்தை அவா கிட்டே சித்தெ சொல்லி தீர்த்து வைங்கோ அக்கா. புண்ணியமாப் போகும். சரி நான் கிளம்பறேன். தெரிசா அக்கா வரா.
(தொடரும்)
- எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor) (கட்டுரை -2)
- தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்
- முள்பாதை 27
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986)
- எப்போதும் நம் வசமே
- வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12
- ஆற்றுப்படைநூல்களில் வறியோர் வாழ்க்கை
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
- அமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்
- மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று
- ஆதலினால்..
- மின்னல் விழுதுகள்!
- வேத வனம்- விருட்சம் 83
- தூக்கம் …
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது
- பேசாதவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15
- நினைவுகளின் தடத்தில் – (46)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1
- எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!
- 27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு
- 108எண் வண்டி
- எழுத்தின் வன்மம் .
- குறத்தியின் முத்தம்
- இரவுகளின் சாவித்துவாரம்
- சுஜாதா 2010 விருது வழங்கும் விழா
- அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு