ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
"அரசக் கிரீடம் என்பது வெல்வெட்டுத் துணியால் சுற்றப்பட்ட ஒரு வெறும் மரக்கட்டை !"
"போரில் தோல்வி அடைவதற்குக் காரணம் போரிடும் படைவீரர் அல்லர். அவரை வழி நடத்திச் செல்லும் போர்த் தளபதிகள்தான்."
"போர்ப் படை வீரர்கள் தமது வயிறு நிரம்பியதைப் பொருத்தே போரில் தீவிரப் பங்கு கொள்வார்"
"போரின் வெற்றிக்குப் படைவீரர் போர்க் குணமும் ஒருவருக் கொருவர் இணைந்த தொடர்பும் முக்கால் பங்கு. படையாளர் எண்ணிக்கையும், தளவாடச் சாதனங்களும் மீதிக் கால் பங்கு."
நெப்போலியன்,
Fig. 1
Napoleon Waiting for the Soldier
நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:
ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் "சனிக்கிழமை கருத்திதழில்" (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :
1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !
அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.
நாடகத்தில் பங்கெடுப்பாளர் :
1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)
2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)
3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)
4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)
காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.
இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)
ஆரம்பக் காட்சி :
(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.
உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். நெப்போலியனைக் கண்டதும் நிமிர்ந்து நின்று சல்யூட் செய்கிறான்.)
(முன் வாரத் தொடர்ச்சி)
நெப்போலியன்: (பொறுமை இழந்து) கடைசியாய் வந்து சேர்ந்தாயே ! என்ன ஆயிற்று ? ஏனிந்தத் தாமதம் ? காலையில் வர வேண்டிய கடிதங்கள் பகல் பொழுது கடந்தும் எனக்கு வரவில்லையே ? ஏன் தடுமாறுகிறாய் ? என்ன நடந்தது ? குதிரையில் போனவன் கால் நடையில் வந்தாயா ? விரைவாய்ப் போகும் குதிரையை ஓட்டிச் சென்றாய் நீ ! குதிரைக்கு ஒரு கால் போனதா ? அல்லது உனக்கு ஒரு கை போனதா ?
லெ·ப்டினென்ட்: (நடுங்கிக் கொண்டு) குதிரை காணாமல் போனது பிரபு ! நடந்து வர வில்லை ! ஓடி வந்தேன் ! களைத்துப் போய் வாய் குழறுகிறது.
நெப்போலியன்: எங்கே இராணுவக் கடிதங்கள் ? குதிரை எப்படிக் காணாமல் போகும் ?
லெ·ப்டினென்ட்: (தடுமாற்றமுடன்) கடிதங்கள் களவு போய் விட்டன பிரபு !
நெப்பொலியன்: கடிதங்களுக்கு இறக்கை இல்லை ! அவை எப்படிக் களவு போகும் ?
லெ·ப்டினென்ட்: எனக்குத் தெரியாது பிரபு !
நெப்போலியன்: உனக்குத் தெரியாமல் களவு போனது என்று தெளிவாகச் சொல்கிறாய் ?
லெ·ப்டினென்ட்: நான் பண்ணியது தவறுதான் பிரபு ! தண்டனை கொடுப்பீர் முதலில் எனக்கு ! படைக்குழு மன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர் என்னை ! அதுதான் எனக்கு உகந்தது பிரபு !
நெப்போலியன்: என் வேலையை நீ எனக்குச் சொல்லாதே ! உன் வேலை என்ன ?
லெ·ப்டினென்ட்: தகவல் கடிதங்களைத் தவறாமல், தாமதிக்காமல் கொண்டுவந்து தருவது !
நெப்போலியன்: அதை ஏனின்று செய்யத் தவறினாய் ?
லெ·ப்டினென்ட்: பிரபு ! என்னை ஒரு கயவன் ஏமாற்றிவிட்டான். அவன் என் கையில் கிடைத்தால் அவன் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன் ! வஞ்சகன், வாயாடி, மோசக்காரன் அவன் ! பார்த்தால் ஆடு போல் தெரிவான் ! பாசாங்குக்காரன் !
நெப்போலியன்: எப்படி நீ ஏமாந்தாய் என்று சொல் ? குதிரை எப்படிக் காணாமல் போனது ? இரகசியக் கடிதங்கள் எப்படிக் களவு போயின ? அந்தக் கயவன் ஓர் ஒற்றன் போல் தெரிகிறது ! ஒற்றனிடம் எல்லாக் கடிதங்களையும் இழந்து விட்டு நீதான் வெட்கமின்றி ஆடு போல் வந்து நிற்கிறாய் !
லெ·ப்டினென்ட்: அந்த வஞ்சகனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன் பிரபு ! அதுதான் எனது முதல் வேலை !
நெப்போலியன்: உன் முதல் வேலை இரகசியக் கடிதங்களை என்னிடம் கொண்டு வருவது. போ முதலில் அதைச் செய் ! நான் காத்திருக்கிறேன். போ ! நில்லாதே என் முன்பு !
லெ·ப்டினென்ட்: அந்தக் கயவன் என் சகோதரன் போல் நடித்தான். அவன் சகோதரியின் கண்கள் போல் என் கண்கள் இருக்கிறதாம் ! என் காதலி அஞ்சலிகா பிரிந்து போனதைக் கேட்டு உண்மையாகக் கண்ணீர் வடித்தான் அந்த வஞ்சகன் ! ஹோட்டலில் என்னுடன் உள்ள போது என் ஒயின் மதுவுக்கும் காசு கொடுத்தான் அந்தக் கயவன் ! ஆனால் உண்ணும் போது பிரெட்டை மட்டும் தின்று ஒயினை அவன் குடிக்கவில்லை ! அதையும் நீயே குடியென்று அன்பாகக் கொடுத்தான் எனக்கு அந்தப் பாசாங்குக்காரன் !
நெப்போலியன்: அதாவது உனக்கு ஒயினை ஊற்றிக் குடிபோதையை உண்டாக்கி விட்டான் அந்த ஒற்றன் !
லெ·ப்டினென்ட்: அது மட்டுமில்லை ! அவனது கைத் துப்பாகி, குதிரை, கடிதங்களை என் கையில் கொடுத்தான் !
நெப்போலியன்: ஏன் அப்படிக் கொடுத்தான் உன்னிடம் ?
லெ·ப்டினென்ட்: என் நம்பிக்கையைச் சம்பாதிக்க பிரபு !
நெப்போலியன்: அறிவு கெட்டவனே ! உன் மூஞ்சில் ஒற்றன் ஒருவன் கரியைப் பூசி உன் கண்களைக் கட்டுவது எப்படித் தெரியாமல் போனது ?
லெ·ப்டினென்ட்: அவன் என் மீது நம்பிக்கை காட்டியதும் நான் பதிலுக்கு என் நம்பிக்கையை அவன் மீது காட்டினேன் ! என் குதிரை, கைத் துப்பாக்கி, கடிதங்களை எல்லாம் அவனிடம் கொடுத்தேன் !
நெப்போலியன்: மதி கெட்டவனே ! அவன் உன்னை ஒரு மந்தியாக மாற்றியது கூடத் தெரிய வில்லையே உனக்கு ! உன் கடிதங்களை அபகரிக்க ஒற்றன் செய்த தந்திரம் கூடத் தெரிய வில்லையே ! எங்கே காட்டு, அவன் உனக்குக் கொடுத்த கடிதங்களை ?
லெ·ப்டினென்ட்: அவற்றையும் அந்தக் கயவனே திருடி விட்டான் பிரபு ! அந்த வாலிபன் ஒரு நய வஞ்சகன் ! அகப்பட்டால் அவன் கையை முறித்து அடுப்பில் போடுவேன் ! காலை முறித்துக் கழுக்குக்கு இரையாக்குவேன் !
நெப்போலியன்: அதை எத்தனை முறைச் சொல்லுவாய் ? போ போய் அவன் காலில் விழுந்து நமது கடிதங்களைப் பெற்று வா ! கையை முறிக்கவும் வேண்டாம். காலை வெட்டிக் கழுகுக்கு இடவும் வேண்டாம் ! அந்த ஒற்றன் யார் என்றாவது தெரிந்து கொண்டாயா ?
Fig. 2
Napoleon with his soldiers
லெ·ப்டினென்ட்: அவனைப் பிடித்து வந்தவுடன் கேட்டுச் சொல்கிறேன் பிரபு ! அவனைப் பிடித்து வராமல் அதை எப்படி என்னால் சொல்ல முடியும் ?
நெப்போலியன்: ஒற்றன் ஒருபோதும் தான் யாரென்று சொல்ல மாட்டான் ! அவன் நகத்தை உரித்தாலும் சரி அல்லது தோலை உரித்தாலும் சரி யாருக்கும் சொல்ல மாட்டான் ! நீதான் மூடத்தனமாக ஒற்றனிடம் மாட்டித் தோல்வி அடைந்திருக்கிறாய் !
லெ·ப்டினென்ட்: அத்தனை பழியையும் என்மேல் போடாதீர் பிரபு ! அவன் எப்படிப் பட்டவன் என்று முதலிலே நான் எவ்விதம் அறிய முடியும் ? நான் இரண்டு நாள் பட்டினி பிரபு ! எதுவும் உண்ணாமல், இரவில் உறங்காமல் கால் நடையில் இங்கு வந்திருக்கிறேன் (பெஞ்சில் மயங்கி உட்காருகிறான்.)
நெப்போலியன்: (உரக்கப் பேசி) கியூஸெப் ! இங்கே வா ! உடனே வா !
கியூஸெப்: (ஓடி வந்து பணிவுடன்) அழைத்தீரா பிரபு ?
நெப்போலியன்: (ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு) இந்த அதிகாரியை உள்ளே அழைத்துச் செல் ! முதலில் உண்பதற்கு உணவைக் கொடு ! ஓய்வெடுக்க அறையை ஏற்பாடு செய் ! இரண்டு நாள் பட்டினியாய் நடந்திருக்கிறான்.
கியூஸெப்: அப்படியே செய்கிறேன் பிரபு ! வாருங்கள் தளபதி ஐயா !
(லெ·ப்டினென்ட் மேஜை மீது உடைவாளைப் போட்டு விட்டு கியூஸெப் பின்னால் செல்கிறான்.)
லெ·ப்டினென்ட்: (தனக்குள் முணுமுணுத்து) முதலில் உண்பதா ? அல்லது படுக்கையில் விழுவதா ?
கியூஸெப்: முதலில் உங்கள் அறையைக் காட்டுகிறேன் ! படுக்கையில் விழுந்தால் உமது பட்டினி வயிறு தூங்க விடாது. உண்ட பிறகு உறங்கலாம் !
லெ·ப்டினென்ட்: உண்ணும் போதே மேஜையில் நான் உறங்கி விடுவேன் !
கியூஸெப்: தளபதியாரே ! ஆஸ்டிரியன் யாராவது உம்மைத் தாக்கியுள்ளானா ?
லெ·ப்டினென்ட்: என்னைத் தாக்குவானா ஓர் ஆஸ்டிரியன் ? அவன் முதுகெலும்பை முறித்து விட மாட்டேனா ? என்னை ஏமாற்றியவன் ஓர் ஆஸ்டிரியனாக இருக்கலாம் ! என்னை உயிர் தோழன் என்று வாய்ச் சொற்களால் குளிப்பாட்டினான் ! என்னைப் போல் ஒருவனைச் சந்திக்க வில்லை என்று இனிமையாய்ப் பேசிக் கவர்ந்தான். தன் கைக் குட்டையால் என் கழுத்தைச் சுற்றி அணிந்தான் ! இதோ அந்தக் கைக்குட்டை ! (பையிலிருந்து எடுத்துக் காட்டுகிறான்.)
கியூஸெப்: (கைக்குட்டையை உளவி, மோந்து பார்த்து) கமகமவென மணக்கிறது. ஒரு பெண்ணின் கைக்குட்டைபோல் தெரிகிறது !
நெப்போலியன்: (நடந்து போய் கைக்குட்டையை வாங்கி, முகர்ந்து) ஆமாம் ! நறுமணமுள்ள இது ஒரு பெண்ணின் கைக்குட்டைதான் ! (முன் பைக்குள் அதை வைத்துச் சிரித்துக் கொண்டு) என் காதலியை நான் மறக்காமல் இருக்கக் கைக்குட்டை நறுமணம் நினைவூட்டும் !
லெ·ப்டினென்ட்: ஜெனரல் ! என் உறுதி மொழி இது! அந்த வாலிபன் மட்டும் என் கையில் அகப்பட்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது !
மாடியிலிருந்து பெண்ணின் குரல்: கியூஸெப் ! மேலே சற்று வருவீரா ?
லெ·ப்டினென்ட்: யார் அரவம் அது ? குரல் இனிமையாக உள்ளது !
Fig. 3
The Young Lady Helena
கியூஸெப்: அது மாடிப் பெண்ணின் இசைக் குரல் தளபதி !
லெ·ப்டினென்ட்: யார் அந்த மாடிப் பெண் ?
மாடிப் பெண்: எங்கே இருக்கிறாய் கியூஸெப் ? மேலே வா ?
லெ·ப்டினென்ட்: (கியூஸெப்பைத் தொடர்ந்து லெ·ப்டினென்ட் மாடிப்படியில் ஏறி) கியூஸெப் ! மேஜை மீதுள்ள என் வாளை எடுத்துக் கொடு !
கியூஸெப்: சொல்வது உமது காதில் விழவில்லையா ? அவள் ஓரிளம் மங்கை ! உடைவாள் எதற்கு ?
லெ·ப்டினென்ட்: அவன் குரல் போல் கேட்கிறது ! என்னை ஏமாற்றியவன் ! என் குதிரையைக் களவாடியவன் ! அரசாங்கக் கடிதங்களை அபகரித்தவன் ! (வாளை உருவிக் கொண்டு அறை திறப்பதைப் பார்க்கிறான்.)
(நெப்போலியன் மாடிப் படி அருகில் நின்று நோக்குகிறான். அறைக்கதவு திறந்ததும் ஓரிளம் அழகி மெல்ல வருகிறாள். ஒய்யாரமாக நிமிர்ந்து நிற்கிறாள். நல்ல உயரம். பளிங்குச் சிலைபோல் எடுப்பான தோற்றம். கண்களில் அறிவுச்சுடர் வீசுகிறது. அவளது பொங்கும் இளமை மேனியில் பெண்மை பளிச்செனத் தெரிகிறது. கவர்ச்சியான உடை அணிந்திருக்கிறாள். கம்பீரமாக நடந்து வருகிறாள். மங்கையின் மயக்கும் விழிகளைக் கண்டதும் நெப்பொலியனின் மனம் வல்லமை இழந்து அவளிடம் சரண்டைகிறது ! வாளை ஓங்கி வந்த லெ·ப்டினென்ட் வாளைத் கீழே தணித்துக் கொள்கிறான். அவன் கண்களை அவன் நம்ப முடியவில்லை. மங்கை அவனைக் கண்டும் காணாத போல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். அவள் லெ·ப்டினென்ட் முகத்தைக் கூர்ந்து நோக்கியதும் அவன் மூஞ்சில் கோபம் கொதித்தெழுகிறது. எதையும் காட்டிக் கொள்ளாமல் இளம் மங்கை அவனைக் கடந்து செல்கிறாள்.)
கியூஸெப்: மிஸ் மேடம் ! நீ ஓர் அழகி ! வந்தனம் ! சக்ரவர்த்தி நெப்போலியன் சார்பாக உன்னை நான் வரவேற்கிறேன்.
மாடிப் பெண்: நன்றி கியூஸெப் ! பிரெஞ்ச் சக்ரவர்த்தியா இந்த விடுதியில் தங்கியுள்ளார் ?
கியூஸெப்: (சிரித்துக் கொண்டு) ஆமாம் மிஸ் மேடம் !
மாடிப் பெண்: என் பெயர் ஹெலினா !
நெப்போலியன்: (முணுமுணுத்து) ஹெலினா ? தோற்றத்தைப் போல் இனிய பெயர் !
(நெப்போலியன் புன்னகை செய்கிறான். பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து நுகர்ந்து பார்க்கிறான்.)
லெ·ப்டினென்ட்: (ஆவேசமாய்) ஆகா ! அகப்பட்டுக் கொண்டாய் அயோக்கிய வாலிபனே ! பெண்ணைப் போல் வேடம் போட்டாலும் நீ தப்ப முடியாது ! உன் வேடத்தைக் கலைத்து உன் கழுத்தை நெரிக்கிறேன். (கோபமாய்ப் பெண்ணை நெருங்குகிறான்)
கியூஸெப்: பொறுப்பீர் தளபதி ! என்ன சொல்கிறீர் ? அவளொரு வனிதை ! வாலிபன் என்று ஏன் சொல்கிறீர் ?
ஹெலினா: (பயந்து போய் நெப்போலியன் பின்னால் ஒளிந்து கொண்டு) ஜெனரல் ஸார் ! காப்பாற்றுவீர் என்னை ! இந்தப் பயங்கரவாதி என்னைச் சீண்டுகிறான் ! நான் ஓர் அப்பாவிப் பெண் ! யாரையோ நினைத்து என்னை ஆடவனாய் நினைக்கிறான் ! காப்பாற்ற மாட்டீரா என்னை ?
நெப்போலியன்: நெருங்காதே அவளை ! அறிவு கெட்டவனே ! கத்தியைக் கீழே போடு ! புத்தியின்றி ஒரு பெண்ணிடமா உன் வீரத்தைக் காட்டுகிறாய் ! வழியில் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு வனிதை மேல் ஏன் பாய்கிறாய் ? எட்டி நில் ! அவளைப் பார்த்தால் ஆணைப் போல் தெரிய வில்லை ! அவள் ஓர் அழகிய மாது ! நமது மதிப்புக்கும் பரிவுக்கும் உரிய மங்கை அவள் ! (பெண்ணைப் பார்த்து) கவலைப் படாதே ஹெலினா ! அவன் மதி இல்லாத லெ·ப்டினென்ட் ! குதிரையைப் பறிகொடுத்துப் பட்டினியோடு கால் நடையில் வந்திருக்கிறான் !
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Play :
(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)
(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)
(C) The Horizon Book of The Age of Napoleon (1963)
(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 11, 2010)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -1
- மொழிவது சுகம்: ஒளியும் நிழலும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -4
- ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- ஒளிமழை
- நிரப்பிச் செல்லும் வாழ்க்கை அசோகமித்திரனின் “நினைவோடை”
- ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்
- பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார்
- முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்
- வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.
- எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா
- சிதறிய கவிதைகள்
- மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு
- முள்பாதை 16
- கலியாணம் பண்ணிக்கிட்டா……
- யார் கூப்டதுங்க…?
- கலைஞர் தாக்கரே ஜெயராம் – இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும்
- கடைபிடி; முதல் படி!
- மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் – ஒரு விலாங்கு மீன்
- முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!
- இடர்மழை
- வேத வனம் -விருடசம் 72
- ஊமை மொழிகள்..
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)