சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -5

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Trial of Socrates

“ஒரு செல்வந்தன் தனது சொத்து சேமிப்பைப் பற்றிப் பெருமை அடைந்தால், எப்படி அவன் அந்தப் பணத்தைச் செலவழிக்கிறான் என்று அறிவதற்கு முன்னே அவனைப் பற்றி ஒருவர் புகழக் கூடாது.”

“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ அறிவன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் மெய்ஞானிகள் அல்லது தீர்க்க தரிசிகளிடம் காணப்படும் ஒருவகைத் தன்னுணர்ச்சி அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -5

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

சாக்ரடிஸ்: நான் நம்புவதை பிறருக்குச் சொல்லித் தருகிறேன். கடவுளைப் பற்றி அறிவதை உமது சேமிப்புச் செல்வத்துக்கு மேலாக, உயிர் வாழ்வுக்கும் மேலாக மதிக்க வேண்டும். ஏனெனில் சேமிப்புச் செல்வமும், சுகபோக வாழ்வும் நேர்மை நெறியைப் புகட்ட மாட்டா ! கடவுளைப் பற்றி அறியும் உயர்ந்த ஞானமே அவற்றைத் தர வல்லது. நேர்மை நெறியிலிருந்து பொது மனிதப் பண்பாடும் தனி மனிதப் பண்பாடும் உருவாகின்றன. நான் கடவுளைப் பற்றி வாலிபருக்குக் கூறியவை நாட்டுத் துரோகம் என்று கூறப்பட்டால், என்னைக் குற்றவாளி என்பவர் வெற்றி பெற்றவர் ஆவார். நான்தான் தீயவன் ஆவேன். நான் தண்டிக்கபட வேண்டியவன் ஆயினும் அந்தத் தண்டனை என் கருத்துகளை ஒருபோதும் மாற்ற முடியாது.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் கடவுளின் நியதியை முறிக்க வில்லை என்று வாதாடுகிறீர். மனிதர் உமது குற்றத்தை மறந்து விட வேண்டும் என்று பிழைத்துக் கொள்ள நினைக்கிறீர். மனிதரோடு கடவுளும் உம்மை மன்னித்து விட வேண்டும் என்று எதிபார்க்கிறீர். அவை ஒருபோதும் நிறைவேறா !

சாக்ரடிஸ்: ஏன் அப்படிச் சொல்கிறீர் நீதிபதி அவர்களே ?

டிரிப்தோலிமஸ்: இரண்டு கால் மனிதரை நீவீர் வேதாந்த முகில் படிந்த இரண்டு கால் பொதி மூட்டையாய் மாற்றப் பார்க்குகிறீர். ஏதென்ஸ் நகரக் கடவுளை நீவீர் எப்போதும் மதிப்பவதில்லை !

சாக்ரடிஸ்: அது உண்மை நீதிபதி அவர்களே !. வெறுப்பும் பொறாமையும் நிரம்பிய ஏதென்ஸ் நகரத் தெய்வங்கள் எந்தப் புனித மனிதருக்கும் ஏற்றவை அல்ல ! அவற்றைப் புராணக் கதைகளில் ஓய்வெடுக்க விட்டு விடுவீர் !

டிரிப்தோலிமஸ்: இந்த துணிச்சலான தெய்வ அவமதிப்பு சாக்ரடிஸின் தலைக் கர்வத்தைக் காட்டுகிறது. இது தெய்வத் துரோகம் ! தேசத் துரோகம் ! தண்டிக்கப் பட வேண்டிய துரோகம் ! நாங்கள் ஒரு கருவியாய் அதைக் காட்டித் தண்டனையைக் கண்டு களிக்க எமக்கோர் வாய்ப்பு கிடைத்துள்ளது !

லைகான்: கேட்டீரா சாக்ரடிஸ் ? நீதிபதி ஒருவர் இப்போதே உமக்குத் தீர்ப்பளித்து விட்டார் !

சாக்ரடிஸ்: நான் கேட்ட வினாவுக்கு இன்னும் எனக்குப் பதில் கிடைக்க வில்லையே ! உலகக் கடவுள் ஒன்றை நான் மதிப்பது தவறென்று யாரும் கூறவில்லையே ? அந்தக் கடவுள் ஏதென்ஸ் நாட்டுக்கும் தெய்வமே ! அதை நீவீர் நிராகரிக்க வில்லை ! ஆகவே என் போக்கில் தவறில்லை என்பதை நான் சொல்லலாமா ?

லைகான்: பாருங்கள் இந்த வேடிக்கை மனிதரை ! எப்படியெல்லாம் தனது கருத்தைத் திரித்துத் தான் தப்பிக் கொள்ள முனைகிறார் என்று பாருங்கள். ஏதென்ஸ் சும்மா விடாது நம்மை இந்தக் கிழவரை நாமின்று அவிழ்த்து விட்டால் ! குற்றங்களைக் கூறி ஜூரரிடம் விட்டு ஓட்டெடுங்கள் !

(ஒரே ஆரவாரம் ! கூக்குரல் ! “ஓட்டெடுப்பீர்” என்று ஒரே கூட்டொலி ! )

நீதிபதி ·பிளிப்: பயப்படாதே சாக்ரடிஸ் ! உன் சார்பாக நீ வாதாடுவதைத் தொடர் ! உனக்கு ஒன்றும் தீங்கு நேராது இங்கு ! அஞ்சாதே சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: அச்சம் என்றால் என்ன ? எனக்கு அச்சம் என்றால் என்ன வென்று தெரியாது ! என் எதிர்ப்பாளர் தண்டனையை நான் நீதி மன்றத்துக்கு வரும் முன்னே தீர்மானித்து விட்டார் ! நான் சொல்வது அவரது செவிகளில் நுழைவதில்லை ! அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் என்னைக் காயப் படுத்தவும் அவர் தயாராக உள்ளார்.

லைகான்: நாங்கள் ஏதென்ஸ் குடிமக்கள் ! எம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை !

சாக்ரடிஸ்: (சாந்தமாக) நீதிபதி அவர்களே ! என்னை நாடு கடத்துவீர் ! சிறையில் தள்ளுவீர் ! அல்லது கொன்று விடுவீர் ! ஆனால் யாரும் காயப் படுத்த முடியாது என்னை ! காயப் படுத்துவது உடலையன்று, உள்ளிருக்கும் ஆத்மாவை ! தீய வினை செய்து நீவீர் காயப் படுத்துவது என் ஆத்மாவை இல்லை ! உமது ஆத்மாவை !

லைகான்: ஏதென்ஸ் நகருக்கு எதிராகப் பாபங்களைச் செய்து நீவீர் எவரது ஆத்மாவைக் காயப் படுத்துகிறீர் ?

சாக்ரடிஸ்: நீவீர் பாபங்கள் புரிவது கடவுளுக்கு எதிராக ! எனக்கு எதிராக இல்லை. எனது கடவுள் ஏதென்ஸ் நகரத்தில் இல்லை ! எனது கடவுள் எங்கும் பரவி இருக்கிறார்.

லைகான்: சிந்தித்துப் பேசு சாக்ரடிஸ் ! ஏதென்ஸ் நீ பிறந்த பூமி ! உன் தந்தை நாடு ! மகன் தந்தைக்குச் செய்யும் கடமையைச் செய் ! ஏதென்ஸ் நீரைத் தினமும் நீ அருந்துகிறாய் ! அதில் விளைந்த தானியத்தை உணவாகத் தின்கிறாய் ! உன்னைப் பாதுகாக்கிறது ஏதென்ஸ் ! அதன் கலாச்சாரத்தில் மூழ்கியவன் நீ ! நீவீர் அங்கே உறங்குகிறீர் ! உலவுகிறீர் ! உபதேசம் செய்கிறீர் ! விழித்துப் பார் சாக்ரடிஸ் சாவதற்கு முன் ! பார் உன் நாட்டை ! எப்படி நீ அதைத் தூற்றுகிறாய் சீரழிக்கிறாய் என்று சிந்தித்துப் பார் ?

சாக்ரடிஸ்: சிற்பச் சிலைகள் நிரம்பி யுள்ளது ஒரு நகரைக் காட்டாது ! மனித இதயங்களில் நாடும் வாழ்க்கையும் உள்ளன. சில்லிட்ட சிலைகள் வெறும் சின்னங்கள் மட்டுமே ஆகும் ! லைகான் ! நானும் பார்க்கிறேன் ! ஆனால் நான் ஏதெஸில் காண்பது என்ன ? வாழும் மனிதத் தசைகள் எலும்புக் கூட்டில் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நான் காணும் ஏதென்ஸ் உயிரிழந்து கொண்டிருக்கிறது. பளிங்குக் கூண்டு கற்பனைக் காட்சியாக ஏமாற்றிக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் ஒருபோதும் சீராய் இருந்ததில்லை. மனித மூளையில் ஒட்டடை மண்டி உளுத்துப் போயுள்ளது ! அதைத் துடைக்க முயன்றவன் நான் ! என்னை ஒழிப்பதால் அந்த ஓட்டடை நீங்கிப் போகாது ! சிந்தித்துச் செய்வீர் சீமான்களே !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 28, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts