இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினைந்தாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

அலெக்ஸாந்தர் சோல்செனிட்ஸன் தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


கண்காணிப்பு கோபுரத்திலிருந்து இரண்டு சக்திவாய்ந்த விளக்க ஒளி அந்த முகாம் முழுவதையும் அளந்தது.எல்லை விளக்கு முதற்கொண்டு உள்விளக்குகள் கூட அந்த முகாமில் எறிந்துகொண்டிருந்தது.நட்சத்திரங்களுக்கே சவால் விடக்கூடிய அளவிற்கு அங்கு விளக்குகள் எறிந்துகொண்டிருந்தது.

காலுக்கடியில் பனி சரசரக்க கைதிகள் தங்கள் வேலையில் மும்முரமாக விரைந்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் தபால் அறைக்கும், வேறுசிலர் சிற்றுண்டியை கையில் எடுத்துக்கொண்டு சூடுசெய்ய விரைந்துகொண்டிருந்தனர்.எல்லோரும் தங்கள் தலையை மேல்சட்டைக்குள் குனிந்து புதைத்திருந்தனர். அப்போதைய குளிரை விட, நாள் முழுதும் அந்த குளிரில் இருக்கவேண்டியதை நினைத்ததால் ,அக்குளிர் எலும்பை உறைய வைப்பதுபோல் இருந்தது.தன் பழைய ராணுவ உடையணிந்த டார்டர் குளிரை பொருட்படுத்தாதது போல,மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

அந்த முகாமிலிருந்த ஒரே செங்கள் கட்டிடமான உயரமான லாக் அப்பை சுற்றி நடந்தனர்.அம்முகாமின் சமையலறையை சுற்றியிருந்த கம்பிகளைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர்.கண்காணிப்பு விடுதியைத் தாண்டி,அங்கு கம்பத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்த வெப்பநிலைமானியைச் சுற்றி (இந்த வெப்பநிலைமானி குளிர் குறிப்பிட்ட அளவிற்கும் கீழே செல்வதை கண்காணிக்க) சென்றார்கள்.

சுகாவ் நம்பிக்கையுடன் அந்த பால் வெள்ளை குழாயைப் பார்த்தான். -41 வெப்ப அளவு இருந்தால் அவர்கள் வேலைக்கு போக வேண்டியதில்லை. ஆனால் இன்றோ -41 என்ற அளவிற்கு கொஞ்சம் கூட அருகில் இல்லை.

பணியாளர் அறைக்குள் சென்றார்கள். டார்டார் நேராக காவலாளி அறைக்கு சுகாவை கூட்டிச் சென்றான். அப்போதுதான் சுகாவ் ஒன்றை உணர்ந்தான். அவனை லாக் அப் அறைக்கு கூட்டிச் செல்லவில்லை.அந்த காவலாளியில் அறையின் தரையை சுத்தம் செய்யவே அவனை கூப்பிட்டிருந்தார்கள்.அந்த தரையை அழுத்தித் தேய்க்கச் சொல்லிவிட்டு டார்டார் அவனை அங்கே விட்டுவிடப்போகிறான்.

அந்தத் தரையைத் தேய்ப்பது ஒரு முக்கியமான கைதியின் கடமையாகும். அந்த கைதி முகாமில் வெளிவேலைக்கு செல்லாமல், அந்த பணியாளர் அறையில் வேலை செய்பவன். பணியாளர் அறையை எப்போதோ தன் வீட்டைப் போல பாவிக்கத்தொடங்கிவிட்டிருந்தான்.ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு தலைவரான தளபதியின் அலவலகத்திற்குள் அவனுக்கு அனுமதி இருந்தது. காவலாளிக்குத் தெரியாததுகூட வேலை செய்யும்போது அவனுக்கு கேட்கும். சில காலத்திற்குள் அவனுக்கு தலை கனம் ஏறிப்போனது. கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற காவல் அறைகளின் தரையை சுத்தம் செய்வோரை தன்னைவிடத் தாழ்ந்தவராக கருதத் தொடங்கினான்.

வேலைக்கு அவனை பல சமயங்கள் கூப்பிட்டு அலுத்துப்போன காவலாளிகளுக்கு நடப்பவை புரிந்தது. அதற்குப் பிறகு மற்ற கைதிகளை தரை தேய்க்க கூப்பிட ஆரம்பித்தனர்.

காவலாளி அறையிலிருந்த அடுப்பு அனலை கக்கிக் கொண்டிருந்தது.கிழிந்த உடை அணிந்த இரு காவலாளிகள் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தனர். தன் மேல் சட்டை, காலணியை அணிந்து கொண்டிருந்த மூன்றாவது காவலாளி குறுகலான கட்டையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.அந்த அறையின் மூலையில் காலியான வாளி அதனுள் கந்தல் துணியும் கிடந்தது.

சுகாவிற்கு மிக சந்தோசமாக இருந்தது. தன்னை விடுவித்ததற்காக டார்டரிடம் நன்றி சொன்னபோது – ‘இன்றிலிருந்து தாமதமாக எழ மாட்டேன்’ என்றும் சொன்னான்.

இந்த அறையின் விதி மிக சுலபம்; முடித்தவுடன் சென்றுவிடலாம். வேலை கொடுத்தவுடன் சுகாவிற்கு தன் மூட்டு வலி போனதுபோல இருந்தது.தன் கையுறையைக் கூட தன் தலையணைக்கு அடியிலிருந்து எடுக்க மறந்ததால், வாளியைத் வெறும்கைகளில் தூக்கிக்கொண்டு கிணறை நோக்கி ஓடினான்.

பல குழுத்தலைவர்கள் PPD அறைக்குச் செல்லுமுன் வெப்பநிலைமானி அருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் சிறுவனான , சோவியத் யூனியனின் பழைய நட்சத்திரம் பிரகாசத்துடன் அந்தக் கருவியைத் துடைத்துக்கொண்டிருந்தான்.

சிலர் கீழிருந்து அலோசனையைக் கத்திக்கொண்டிருந்தனர்.

சுகாவ் காய்ந்த துணியால் நன்றாக தரையைச் சுத்தம் செய்தான்.பின்னர் அதை பிழியாமலேயே அடுப்பிற்கு பின்னால் தூக்கி எறிந்தான்.தன் வாலன்கி காலணிக்குள் நுழைந்து, மீதமுள்ள தண்ணீரை அதிகாரிகளின் பாதைவழியே இரைத்துவிட்டு,குளிக்கும் அறை வழியே குளிரான கிளப்பைத் தாண்டி சாப்பாட்டு அறைக்குள் சென்றான்.

இன்னமும் மருத்துவரிடம் சென்று விடுப்பு வாங்குமளவு உடம்பு சரியாகவில்லை. அவன் உடம்பு முழுவதும் ஒரே வலி. அந்த சாப்பாட்டு அறைக்கு வெளியே இருந்த காவலாளியை வேறு ஏமாற்றவேண்டும். அந்த முகாமின் தளபதி விடுத்த கட்டளை படி – சுதந்திரமாக முகாமில் சுற்றும் கைதிகளை பிடித்து லாக்-அப்பிலுள் அடைக்க வேண்டும்.

அவன் நல்ல நேரம் – அந்த காலை வேளையில், சாப்பாட்டு அறைக்கு முன் கூட்டமில்லை, வரிசையுமில்லை. நடந்து நுழைந்தான்.

குளியல் அறைப் போல காற்று கனமாயிருந்தது. அறைக்குள் இருந்த வெட்பத்தை வெளியிலிருந்து வந்த குளிர் காற்று சந்தித்தது. குழுக்கள் மேஜையில் உட்கார்ந்துகொண்டோ, கூட்டமாய் நின்றுகொண்டோ, சாப்பாட்டு மேஜை காலியாவதற்கு காத்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவருக்கொருவர் கத்திக் கொண்டே குழுக்களிலிருந்து இரண்டு, மூன்று கைதிகள் குவளைகளில் கூழ் மற்றும் ரொட்டியை எடுத்துக்கொண்டு காலியான் மேஜையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.பார்த்துப் போய்யா.அவனுக்குக் கேட்கவில்லை.டமார்,டமார்! ஒரு கை காலியாகத்தானே உள்ளது, அவன் பிடரியிலே ஒன்று போடவேண்டியதுதானே? வழியில நிக்காதீங்கப்பா, எதையாவது தட்டிவிடப் பார்க்காதீங்க!

ஒரு மூலை மேஜையில் ஒரு இளைஞன் உட்கார்ந்துகொண்டு தன் சாப்பாட்டிற்கு முன் பிரார்தனை செய்து கொண்டிருந்தான். அதாவது,மேற்கு உக்ரேனியன் – முகாமிற்கு புதியவன்.

எந்தக் கையால் சிலுவை குறி செய்து பிரார்த்திப்பது என ரஷ்யர்கள் மறந்திருந்தாகள். ஆதலால் இவன் மேற்கு உக்ரேனியன்.

அந்த குளிரான சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துகொண்டு, தொப்பிக்களோடு பலரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சின்ன மீன்களை கோஸ் இலைகளுக்குக் கீழிருந்து பொறுக்கித் தின்று கொண்டும், அதன் எலும்புகளை மேஜையின் மேல் துப்பிக் கொண்டும் இருந்தனர். அந்த எலும்புகள் சின்ன மலை போல் குவிந்ததும், அடுத்து உட்காரும் குழு அதை தரையில் பெருக்கித் தள்ளிவிடும்.ஆனால் நேராகத் தரையில் துப்புவது அநாகரிகச் செயலாகக் கருதினர்.

104ஆம் பிரிவைச் சேர்ந்த ஃபெடிகோவ் நடுவில் இருந்த இரு குழுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.சுகாவின் சிற்றுண்டியை அவன் தான் வாங்கி வைத்திருந்தான்.குழுக்கு வெளியேயிருந்து பார்க்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் – எண் போட்ட அவ்ர்களின் மேல்சட்டை ஒரேபோல இருக்கும் – ஆனால் குழுக்குள்ளே வெவ்வேறுமாதிரி இருப்பர். அவர்களுக்குள்ளே பல பதவிகள் உண்டு. உதாரணத்திற்கு, புய்நோஸ்கி அடுத்த கைதிகளின் உணவை பாதுகாத்துக் கொண்டிருக்கமாட்டான். சுகாவ் எந்தவிதமான வேலையையும் செய்ய மாட்டான். அவனுக்கு கீழே பலரும் இருந்தனர்.

ஃபெடிகோவ் சுகாவைப் பார்த்து அவன் இடத்தில் ஒரு பெருமூச்சுடன் உட்கார்ந்துகொண்டான்.

‘மிகவும் குளிராக இருக்கிறது. உன் சாப்பாட்டையும் சாப்பிட்டிருப்பேன். உன்னை லாக்-அப்பில் அடைத்துவிட்டார்கள் என நினைத்தேன்’

அவன் அதிக நேரம் அவனுடன் இல்லை. சுகாவிடம் தப்பி எந்த உணவும் அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை.

சுகாவ் தன் காலணிக்குளிருந்து ஸ்பூனை எடுத்துக்கொண்டான். அவனின் சிறிய புதையல். இது அவன் மேற்கே இருந்ததிலிருந்து அவனுடன் இருக்கிறது. அவன் கையாலேயே காய்ச்சிய அலுமினிய கம்பிகள். ‘Ust-Izhma 1944’ எனப் பொறித்துக் கொண்டான்.

எவ்வளவு குளிர் இருந்த போதிலும் தொப்பியுடன் அவன் சாப்பிடுவதில்லை. அதை கழட்டி வைத்துவிட்டு, தன் குவளையில் இருக்கும் சாப்பாட்டை உற்று பார்த்தான்.ரொம்பச் சுமாரான சாப்பாடு. சூப்பை அடியிலிருந்தும் எடுக்காமல், மேலிருந்தும் எடுக்காமல் நீர்க்கக் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் சூப்பிலிருந்து உருளைக் கிழங்குகளை எடுக்கக்கூட ஆள்தான் ஃபெடிகோவ்.

Series Navigation

author

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

Similar Posts