இரா.முருகன்
29 நவம்பர் 1900 – சார்வரி வருஷம் கார்த்திகை 15, வியாழக்கிழமை
வேல்ஸ் இளவரசரின் ஸ்கோட்லாண்ட் விஜய யாத்திரையை வர்ணிக்கும் இந்தப் பத்திரிகைக் குறிப்பை நேற்று நம் பயனியர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வாசகர்கள் படித்து மகிழ்ந்திருக்கலாம். அதைப் படித்து விட்டு நேரில் நம் பத்திரிகைக் காரியாலயத்துக்கு வந்த லண்டன் வாசகர் ஒருவர் நம் விசேஷ நிருபர் ஸ்ரீமான் ஜான் க்ளீ அவர்கள் பயனியர் பத்திரிகையில் உத்தியோகம் செய்கிறவரா அல்லது ரயில்வே நிர்வாகம், க்ரேட் நோர்த்தர்ன் ரயில்வே கம்பேனி இப்படி வெளியே உத்தியோகத்தில் இருக்கப்பட்டவரா என்று கேட்டார்.
ரயில் கம்பேனி, ரயில்வே நிர்வாகம் பற்றி தன் மனதில் பட்ட நல்ல கருத்துகளை திருவாளர் ஜான் க்ளீ தன் வியாசத்தில் சொல்லியிருப்பத்தால் அவர் அந்த ஸ்தாபனங்களில் வேலை செய்கிறவர் அல்லது அவற்றை ஸ்தோத்ரம் செய்து எழுதி ஜீவனோபாயத்தை மேற்கொள்கிறவர் என்று நம் ப்ரியமான வாசகர்கள் யாரும் அந்த நேயரைப் போல நினைக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
மேலும் இன்று நம் பத்திரிகை காரியாலத்துக்கு வந்த இன்னொரு வாசக அன்பர், பக்கிங்ஹாம் அரண்மனையில் சக்ரவர்த்தினி அம்மையார், வேல்ஸ் இளவரசர், எடின்பரோ மகாப்ரபு இன்னும் இவர்களின் சகுடும்பம் முழுவதற்கும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான சின்னச் சின்ன வாயு ரோகங்கள் ஏற்படுவது வழக்கம் என்றும் மகா கனம் பொருந்திய வேல்ஸ் இளவரசர் நேற்று யாத்திரை கிளம்பும்போது வயிற்றில் மந்த நிலைமை காரணமாக முகம் இறுகியிருந்திருக்கலாம் என்றும் அபிப்ராயம் தெரிவித்தார்.
அவருக்கு வந்தனம் தெரிவித்துக் கொள்வதுடன், ராஜ குடும்பத்து ஆரோக்கியம் குறித்த வியவகாரங்களை நம் பத்திரிகை சர்ச்சை செய்யாது என்பதை இன்னொரு முறை வாசகர்களுக்குத் தெளிவு படுத்திக் கொள்கிறோம். நம் விசேஷ நிருபர் ஜான் க்ளீ எழுதிய வியாசத்தின் தொடர்ச்சி கீழே தரப்படுகிறது – ஸ்காட்டீஷ் பயனியர் பத்திரிகை அதிபர் ஹென்றி டூலிட்டில்.
ஜான் க்ளீ அவர்களின் வியாசத் தொடர்ச்சி –
நேற்றைய பத்திரிகைக் குறிப்பில் ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டதற்கு வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம். ஸ்கோட்லாண்ட்டில் அமைக்கப்படும் மிகப் பெரும் பாலங்களை வடிவமைத்து கட்டித்தரும் பெரும் பொறுப்பில் மகாராணி அவர்களால் நியமிக்கப்பட்ட மிஸ்ஸே ஈபல் என்ற பிரான்சு தேசத்து எஞ்சினியரும் அவருடைய சீஷர்களான கிட்டத்தட்ட பத்து உப எஞ்சினியர்களும் வேல்ஸ் இளவரசரின் யாத்திரா கோஷ்டியில் அங்கமாக வந்திருக்கிறார்கள்.
பாலம் நிர்மாணக் கம்பேனியான நார்த்தன் பிரிட்ஜஸ் பிரைவேட் லிமிடெட் கம்பேனியின் சேர்மன் கால்வில் பிரபுவும் அவருடைய இளைய சகோதரர் கர்னல் லீ கார்வில் அவர்களும், கம்பேனி டயரக்டர்கள் ஸ்ரீமான் ஆண்ட்ரூ பேர்பாரின், ஸ்ரீமான் ப்ரோபின் ஆகியோரும் கூட யாத்திரா கோஷ்டியில் உண்டு.
கிரந்தம் ரயில்வே ஸ்டேஷனை நம் விசேஷ ரயில் அடைந்தபோது ராத்திரி எத்தனை மணி என்று இடுப்பு கடியாரத்தில் பார்த்தோம். நடுராத்திரி தாண்டி ஐந்து நிமிஷம் ஆகியிருந்தது.
கிரந்தம் ஸ்டேஷனில் வழக்கமில்லா வழக்கமாக அந்த ராத்திரியில் வண்டி நின்றது ஏன் என்று நாம் பெட்டிக்கு வெளியே வந்து பார்க்க, நார்த்தன் ப்ரிட்ஜஸ் கம்பேனி துணைத் தலைவர் ஹிண்ட்லிப் பிரபு அங்கே வண்டி ஏறக் இருப்பதாகத் தெரிந்தது.
ப்ளாட்பாரத்தில் காத்து நின்ற உயர்ந்த ஸ்தானம் வகிக்கும் ரயில்வே உத்தியோகஸ்தர் ஒருவரை நாம் விசாரித்தபோது வண்டி யார்க் ஸ்டேஷனை ராத்திரி ஒரு மணி நாற்பது நிமிஷத்துக்கு அடையும், ஆனால் அங்கே நிற்காது என்றும் தெரிய வந்தது.
அதேபடி பெர்விக் ஸ்டேஷன் விடிகாலை நாலு மணி ஐம்பத்தொன்பது நிமிஷத்துக்கு வந்து சேரும். எடின்பரோ நகரை இந்த விசேஷ ரயில் அடையும்போது பொலபொலவென்று விடிந்து காலை ஆறு மணி பத்து நிமிஷம் ஆகியிருக்கும்.
தினசரி பகலில் யாத்திரையாகும் ப்ளையிங் ஸ்கோட்மேன் ரயில் போல் இல்லாமல் வேல்ஸ் இளவரசரும் கோஷ்டியினரும் பிரயாணம் செய்யும் இந்த விசேஷ ப்ளையிங் ஸ்கோட்மேன் ரெண்டு ரயில் லண்டனுக்கும் ஸ்கோட்லாண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தை கொஞ்சம் மிதமான வேகத்திலேயே கடந்தது.
அதாவது முதல் இருநூறு மைல் தொலைவு வண்டியின் வேகம் மணிக்கு நாற்பத்தைந்து மைல் வேகம் வீதமும், யார்க் – பெர்விக் இடையே மணிக்கு நாற்பத்தெட்டு மைல் வேகம் வீதமும், மேட்டுப் பாங்கான பெர்விக் – எடின்பரோ இடைப்பட்ட தூரத்தை அதி ஜாக்கிரதையாக மணிக்கு முப்பத்தாறு மைல் வேகத்திலும் இந்த வண்டி கடந்தது.
வேகமாக நகர்ந்து அசம்பாவிதம் ஏதும் சம்பவிக்காமல் இருக்க முன்னேற்பாட்டு நடவடிக்கையே இந்த வேகக் குறைப்பு என்று பெயர் குறிப்பிட விரும்பாத ரயில்வே உயர் உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார். (அடுத்த வாக்கியத்தை நீக்கவும் – பத்திரிகாசிரியர்). அப்படி ஏதும் தெய்வ கோபம் காரணமாக நடந்தால் ரயில்வே உத்தியோகஸ்தர்களில் பெரும்பாலானோருக்கு உத்தியோகச் சீட்டு கிழிந்து விடும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(பத்திரிகாசிரியர் குறிப்பு – இனி வரும் ஐந்து பத்திகளைப் பிரசுரிக்க வேண்டாம். நம் நிருபர் ஸ்ரீமான் ஜான் க்ளீ அவர்களை வேலை நேரத்தில் அதிகமாகக் குடிக்க வேண்டாம் என்று கோர வேண்டியது உதவி ஆசிரியர்கள் செய்ய வேண்டியதாகும்.)
நாம் பிரபுவின் வருகைக்குக் காத்திருந்தபோது முப்பது வயது மதிக்கத் தகுந்த ஓர் இந்திய அல்லது ஆப்பிரிக்க ரீதியில் உடுத்திய ஸ்திரியும் சிறுமியான பெண் குழந்தையுமாக ரெண்டு பேர் வண்டியில் காலியாக இருந்த புகை பிடிக்கும் பெட்டிக்குள் நுழைந்ததைப் பார்த்தோம்.
நடு ராத்திரி நேரமானதால் யாரும் சுருட்டு பிடிக்க உள்ளே செல்லாத அந்தப் பிரதேசத்தில் அர்த்த ராத்திரியில் ஏறிய ஸ்திரியை நான் வியப்போடு பார்க்க, அவள் இந்த இடமும் சூழ்நிலையும் ஏற்கனவே பழக்கமானது போல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்கைகளுக்கு இடையே வெறுந்தரையில் குழந்தைப் பெண்ணோடு படுத்து நித்திரை போய்விட்டாள்.
உள்ளே போய் அவளை எழுப்பி வெளியே அனுப்பலாம் என்று நாம் உத்தேசித்தபோது, ஹிண்ட்லிப் பிரபு வருகை நிகழ்ந்ததால் அவருக்கு முகமன் கூறும் ரயில்வே உத்தியோகஸ்தர்களோடு நாமும் சேர்ந்து கொண்டோம்.
பிரபு வந்ததும் வேல்ஸ் இளவரசர் நல்ல வண்ணம் உறங்குகிறாரா என்று அரண்மனை மருத்துவர் எல்லீஸ் பிரபு அவர்களை விசாரித்து தகுந்த வார்த்தை பதிலாகக் கிடைக்கத் திருப்தியுற்று தானும் நித்திரை போக இருக்கையை சித்தம் செய்யச் சொன்னார்.
நாமும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு நித்திரை போகத் தொடங்கினோம். ரயிலில் ஏறிய கருப்பு ஸ்திரி பற்றியும், ராஜாங்க யாத்திரை கோஷ்டி பிரயாணம் செய்யும் வண்டியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பங்கப்படுவது குறித்தும் யோசித்தபடி நாம் நல்ல உறக்கத்தில் ஆழ வெகுநேரம் செல்லவில்லை.
(பத்திரிகாசிரியர் குறிப்பு – இனி வரும் பத்தியில் இருந்து பிரசுரத்தைத் தொடரலாம்)
நாம் உறக்கத்தில் இருக்கும்போதே யார்க் ஸ்டேஷனைக் கடந்து போனதால் அங்கே வண்டி நின்றதா என்று நினைவு இல்லை. ஆனால் பெர்விக் வந்து சேர்ந்து வண்டி நின்றபோது நமக்கு விழிப்பு தட்டியிருந்தது. இடுப்பு கடியாரத்தை ராத்திரி அங்கியின் பையில் வைத்தது மறந்துபோய் ரயில் பெட்டி முழுக்க, கழிப்பறைகளிலும் விடாமல் தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்து மணி பார்க்க, நேரம் காலை ஐந்து மணி பதினெட்டு நிமிஷம்.
அந்த அதிகாலை நேரத்திலேயே வேல்ஸ் இளவரசர் துயில் எழுந்ததாகவும், பெர்விக் ஸ்டேஷன் காபி வழங்கும் நிலையத்தில் நல்ல காபி கிடைக்கும் என்பதை அவர் அறிந்திருந்த காரணத்தால் அங்கேயிருந்து சூடான ஒரு கோப்பை பால் சேர்க்காத காப்பி வரவழைத்துக் குடிக்க இஷ்டம் தெரிவித்ததாகவும் ராஜாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் ஓட்டத்துக்கு நடுவே சொன்னதைக் கேட்க நமக்குப் பெருவியப்பாக இருந்தது.
ஒரு சாதாரண பிரஜை போல் எட்வர்ட் இளவரசரும் இம்மாதிரி விஷயங்களில் ஆர்வம் காட்டுவது அவருக்கும் பிரஜைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இல்லாமல் இருக்க காரணமாக அமைந்திருப்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இளவரசருக்காக தயாரிக்கப்பட்ட காபியின் சேஷ பாகத்தை நாமும் குடித்துப் பார்த்தோம். நல்ல தரமானதாகவே அது அமைந்திருந்தது என்றாலும் சற்று நீர்க்க இருந்தது. தண்ணீரையும் இன்னும் அதிக நேரம் சுட வைத்திருக்கலாம்.
இளவரசருக்கு காலை நமஸ்காரம் சொல்லலாம் என்று நாம் உத்தேசித்து முன்னால் நடந்தபோது அது தற்போது சாத்தியமில்லை என்றும் இளவரசருடைய ஆஸ்தான நாவிதர் (இவரும் யாத்திரா கோஷ்டியில் உண்டு) முகம் மழிக்கும் முன்னர் யாரையும் சந்திப்பதில்லை என்றும் மன்னரின் அந்தரங்க காரியதரிசி அறிவித்ததால் நாம் முயற்சியைக் கைவிட்டு புகை பிடிக்கும் பெட்டியை நோக்கி நடந்தோம்.
(இனி வரும் பத்தியை வெட்டி விடவும் – பத்திரிகாசிரியர்)
நேற்று ராத்திரி நாம் பார்த்த இந்திய அல்லது ஆப்பிரிக்க கறுப்பு இன ஸ்திரியையும், சிறு வயதுப் பெண்ணையும் பார்க்க முடியவில்லை. அவர்கள் ரயில் பெட்டியின் கழிப்பறை ஒன்றில் ஒளிந்திருக்கலாம் என்றும் வண்டியில் வருகிறவர்களின் மூக்குக் கண்ணாடி, பொடி டப்பா, சிகரெட் பெட்டி, இடுப்பு கடியாரம் போன்ற வஸ்துக்களையும் பணம் வைத்த பர்ஸ்களையும் திருடிப் போக உத்தேசித்து வந்தவர்களாக இருக்கும் என்று தோன்றியது. க்ரேட் நோர்த்தர்ன் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது எல்லா வண்டிகளிலும் பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டியதன் அவசியம் பற்றி தனியாக ஒரு வியாசம் எழுதி வெளியிட உத்தேசம்.
(இனி வரும் பத்தியில் இருந்து பிரசுரத்தைத் தொடரலாம் – பத்திரிகாசிரியர்).
நோர்த் பிரிட்டீஷ் கம்பேனி சேர்மன் ட்வீட்டேல் பிரபு, காரியதரிசி ஸ்ரீமான் வீய்லாண்ட், பயணிகள் யாத்திரா சவுகரியப் பொறுப்பு வகிக்கும் ஸ்ரீமான் மக்லாரன் ஆகியோரும் பெர்விக் ஸ்டேஷனில் காப்பி குடித்துவிட்டு வண்டி ஏறினார்கள்.
குறிப்பிட்ட நேரத்துக்குப் பத்து நிமிடம் தாமதமாக, சரியாக காலை ஆறு மணி இருபது நிமிஷத்துக்கு எடின்பரோ வேவர்லி ஸ்டேஷனை நம் விசேஷ யாத்ரா ரயில் அடைந்தது. அந்த விடியற்காலை நேரத்திலும் குளிரைப் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட நானூறு பேர் அடங்கிய ஒரு கூட்டம் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நெம்பர் ஒண்ணு ப்ளாட்பாரம் தெற்கு வசத்தில் காத்திருந்தது.
ஸ்காட்டீஷ் தேசிய உடுப்பான கில்ட் அணிந்து குளிர் உறைக்காமல் இருக்க உச்ச ஸ்தாயியில் தேசீய இசைக் கருவியான ஸ்காட்டீஷ் பேக் பைப் ஆகிய பைக்குழல் வாத்தியத்தை ஊதிக் கொண்டே ஏழெட்டு வித்துவான்கள் ஸ்டேஷனை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது பார்க்கப் ரம்மியமாக இருந்தது.
எடின்பரோ நகரின் திலகம் போன்ற வேவர்லி ஸ்டேஷனில் வேல்ஸ் இளவரசருக்கு அரசாங்க வரவேற்பு வைக்காமல் அதற்கு அடுத்த வைக்கோல் சந்தை ரயில் நிலையத்தில் அந்த வைபவம் நிகழவிருப்பதில் ஆச்சரியும் கொஞ்சம் அதிருப்தியும் அடைந்தவர்களாக அங்கே கூடியிருந்த கூட்டத்தில் பலரும் இருப்பதைக் காண முடிந்தது.
எடின்பரோ நகர போலீஸ் சூப்ரண்டண்ட் ஸ்ரீமான் பெய்ன் அவர்கள் வரவேற்க, தன் சொகுசு ரயில் பெட்டியின் வடக்கு ஓரத்து கழிப்பறையை ஒட்டிய தாழ்வாரத்தில் வேல்ஸ் இளவரசர் நின்று கரத்தை கூட்டத்தை நோக்கி அசைத்தார். அவர் முகத்தில் இறுக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் நிறைவான மகிழ்ச்சி தெரிந்தது.
கழிப்பறையை உபயோகித்து விட்டு அவர் வெளியே வந்தபோது எடின்பரோ வேவர்லி ஸ்டேஷனுக்கு வண்டி வந்து சேர்ந்திருக்கக் கூடும்.
(கீழ்க்கண்ட பத்தியை வெட்டவும். இப்படியான கருத்துகளை வைத்து வியாசம் எழுதும்போது நாசுக்கான மொழியில் எடுத்துச் சொல்லும்படிக்கு நிருபர்கள் கையேட்டில் ஒரு ஷரத்து புதிதாகச் சேர்க்கவும் – பத்திரிகாசிரியர்)
பொது ஜனங்கள் தன்னை வரவேற்க வந்த மகிழ்ச்சியில் அவர் முகத்தில் இறுக்கம் காணாமல் போனதாக நாம் சொன்னபோது, தான் ராத்திரி கலக்கிக் கொடுத்து இளவரசரைக் குடிக்க வைத்த மருந்து நன்றாக வேலை செய்வதாகவும், இளவரசர் எந்த கஷ்டமும் இன்றி மலஜல விசர்ஜனம் நடத்தி முடிந்ததால் அவருக்கும் மற்ற பிரஜைகளுக்கும் சொல்லொணா சந்தேஷம் என்றும் மருத்துவர் கர்னல் எல்லீஸ் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார். பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் முழுவதற்கும் இது சந்தோஷம் அளிக்கும் விஷயம் ஆயிற்றே.
(இனி வரும் பத்தியில் இருந்து பிரசுரத்தைத் தொடரவும் – பத்திரிகாசிரியர்)
நாமும் வேல்ஸ் இளவரசரின் ரயில் பெட்டிக்கு வெளியே போலீஸ் சூப்ரண்டெண்ட் குழுவோடு நின்று பார்க்க, உள்ளே ஆசனங்களில் வேல்ஸ் இளவரசரின் சகோதரர்கள் எடின்பரோ மகாபிரபுவும், ஜார்ஜ் இளவரசரும், அவர்களோடு ஃபைஃப் நகர பிரபுவும் அமர்ந்து வேலைப்பாடு அமைந்த போர்சிலீன் கோப்பைகளில் தேநீர் அருந்திக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. பெர்விக் ஸ்டேஷனில் காப்பி குடிக்கக் கிடைத்து வைக்காமல் அவர்கள் உறங்கியிருக்கலாம்.
எடின்பரோ மகாபிரபு தேநீர்க் கோப்பையை அருகில் அமைந்த ஆசனத்தில் வைத்துவிட்டு வேல்ஸ் இளவரசரின் அனுமதியோடு ஒரு புகையிலை சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு வெளியே திரண்டிருந்த கூட்டத்தை சுவாரசியமாக கவனித்தபடி இருந்தார்.
நாம் அவருக்குக் காலை வந்தனம் சொல்லிக் கையசைக்க, நாமும் சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்ள விருப்பமா என்று விசாரித்தார். நாம் புகை வலிப்பதில்லை என்பதால் அவருடைய அன்பான உபசரிப்பை வருத்தத்தோடு மறுக்க வேண்டி வந்தாலும், வேறு எந்த லண்டன் மற்றும் எடின்பரோ பத்திரிகைகளின் விசேஷ நிருபர்களையும் பக்கிங்ஹாம் அரண்மனைவாசிகளான ராஜ பரம்பரையினர் தங்கள் கூட இருந்து புகைச் சுருட்டு பிடிக்க இதுவரை அழைத்ததில்லை என்ற முக்கியமான தகவலை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறோம்.
இன்னொரு ஏழு நிமிஷம் வண்டி வேவர்லி ஸ்டேஷனில் நின்றது. வேல்ஸ் இளவரசர் தன்னை தரிசிக்க வந்த பெருங் கூட்டத்தின் கரகோஷத்தையும் வந்தனங்களையும் அடிக்கடி தொப்பியைக் கழற்றியும், கையை அசைத்தும் சிரித்தும் தெரிவித்தார்.
(பின்வரும் பத்தியை வெட்டவும் – பத்திரிகாசிரியர்)
அவர் முகம் மழுமழுவென்று சவரம் செய்யப் பட்டிருந்தாலும், தாடையில் ஒரு சிறிய ரத்தக் காயம் தட்டுப் பட்டது. அரையிருட்டில் ஆஸ்தான நாவிதர் மழித்து விட்டபோது ஏற்பட்டதாக இருக்கக் கூடும் அது. இளவரசரின் முகத்தில் தோல் கரடு முரடாக அமைந்திருப்பதால் ரோம வளர்ச்சி சீராக இல்லாததும் காரணமாக இருக்கலாம்.
(இனி பிரசுரத்தைத் தொடரவும் – பத்திரிகாசிரியர்)
நம் விசேஷ ரயில் சரியாகக் காலை ஆறு மணி இருபத்தெட்டு நிமிஷத்துக்கு எடின்பரோ வேவர்லி ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு ஹே மார்க்கெட் என்ற வைக்கோல் சந்தை ஸ்டேஷனை அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அடைந்தது.
காலை நேரக் குளிரையும் பனி விழுவதையும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாது எடின்பரோ நகரமே வைக்கோல் சந்தை ஸ்டேஷனில் வேல்ஸ் இளவரசரை வரவேற்கக் கூடியிருந்தது.
நமஸ்காரத்துக்கு அருகதையுள்ள நகர மேயர் ஜான் பாய்ட் மற்றும் உயர் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் காலை ஆறு மணிக்கு முன்னரே கில்ட் தரித்து ராஜாங்க உத்தியோக சின்னங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து நகர மன்றத்தில் ஆஜராகி அவர்களின் வருகைப் பட்டியல் சரிபார்க்கப் பட்டதாகவும் அப்புறம் எல்லோரும் ஒரே நேரத்தில் கிளம்பி வைக்கோல் சந்தை ஸ்டேஷனை காலை ஆறு மணி பதினைந்து நிமிஷத்துக்கு அடைந்ததாகவும் ராஜாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் சொன்னார்.
இந்த சுறுசுறுப்பை நகர பரிபாலன நடவடிக்கைகளில் மேயரும் மற்றவர்களும் காட்டினால், எடின்பரோ நகரம் எலிப் பொந்து போல் அங்கங்கே குண்டும் குழியுமாக இருக்காது என்று ஒரு வயோதிக நகரக் குடிமகனார் சொன்னது நம் காதில் விழத் தவறவில்லை.
வைக்கோல் சந்தை ஸ்டேஷன் முழுக்க பல நிறக் காகிதத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, அழகான விளக்குகள் ஆங்காங்கே தாற்காலிகமாகப் பொருத்தப்பட்டு சூழ்நிலையை சுவர்க்க லோகமாக்கிக் கொண்டிருந்தன. விசேஷ நிகழ்ச்சிக்காக உத்தியோகஸ்தர்கள் தரித்து வந்த உடுப்புகள் அந்த வெளிச்சத்தில் கம்பீரமாக ஒளிர்ந்தது தனி சோபையை அளித்தது.
இவர்களோடு நகரப் பிரமுகர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அழகான பெண்கள் அற்புதமான உடுப்புகளோடு காத்திருந்தது அந்த ஸ்தலத்தையே ரம்மியமாக்கியது. (அடுத்த வாக்கியத்தின் பிற்பகுதியை வெட்டவும் – பத்திரிகாசிரியர்) அவர்களின் குயில் நாதம் போன்ற பேச்சுகள் காலை நேரத்துக்கு இதமாக இருந்ததோடு காற்றில் அசைந்த இந்த அழகான சீமாட்டிகளின் வர்ண மயமான இடுப்புப் பாவாடைகள் உள்ளார்ந்த பேரழகுக்குக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருந்தன.
(இனி பிரசுரத்தைத் தொடரவும் – பத்திரிகாசிரியர்)
ஸ்டேஷனுக்கு உள்ளே வடக்கு ஓரமாக கேமரான் ஹைலாண்டர் படைப் பிரிவைச் சேர்ந்த நூறு ராணுவ வீரர்கள் வேல்ஸ் இளவரசருக்கு அணிவகுப்பு மரியாதை தரக் காத்திருந்தார்கள். காப்டன் ஆண்ட்ரூ உருஹார்ட் தலைமையில் அமைந்த இந்தப் படைப்பிரிவுக்கு மகாராணியார் வழங்கிய ரெஜிமெண்ட் கொடியை ஏந்திப் பிடித்தபடி லெப்டினண்ட் பிண்ட்லேயும் லெப்டினண்ட் மக்வெயினும் முன் வரிசையில் நின்றிருந்தார்கள். ஸ்கோட்லாண்ட் படைத் தலைவரான மேஜர் ஜெனரல் லைட்டில்டன் – அன்னெஸ்லி அவர்களும் அங்கே இருந்தைக் காண முடிந்தது.
விசேஷ வண்டி வந்து நிற்கும்போது வேல்ஸ் இளவரசர் வீற்றிருக்கும் ரயில் பெட்டி வந்து சேரும் இடம் என்று தீர்மானித்த இடத்தில் ப்ளாட்பாரத்தில் ஒரு பெரிய மேடை அமைத்து மரியாதை செலுத்தி உபசார வார்த்தை படித்துக் கொடுக்கவும், வரவேற்பு பிரசங்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த இடத்தில் நகர முக்கியஸ்தர்கள் பலரும் கூடியிருந்தார்கள். அவர்களின் ஜாப்தா வருமாறு – ஸ்ரீமான் ஸ்கின்னர் (நகரசபை குமாஸ்தா), ஸ்ரீமான் டர்ன்புல் (பொக்கிஷதாரர்), ஸ்ரீமான் பெய்லீஸ் வால்காட் (செண்ட் ஜான் தேவாலய தலைமை பிஷப்) மற்றும் தேவ ஊழியம் செய்ய லண்டனில் இருந்து எடின்பரோ வந்த ஸ்ரீமதி தெரிசா மெக்கன்ஸி (பிறப்பால் இந்தியரான இவர் மதராஸ் மற்றும் லண்டன் சர்வகலாசாலைகளில் தத்துவ சாஸ்திரம், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர் என்பதைம், இவரது கணவர் மேஜர் மெக்கன்ஸி தற்போது ஆப்பிரிக்காவில் நிகழும் போயர் யுத்தத்தில் முக்கியப் பொறுப்பேற்று வெற்றி வாகை சூடி வருவதையும் நேயர்களுக்கு அறிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்).
தேவ ஊழியம் செய்ய வந்து தங்கியிருந்த இடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தான் வாடகைக்கு எடுத்த பியானோ மற்றும் மதப் பிரசாரத்துக்கான பைபிள் பிரதிகள் மற்ற புத்தகங்கள், ஏழைக் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக அளிக்க எடுத்து வந்த குளிர்கால உடுப்புகள், போர்வைகள் ஆகியவை எரிந்து போனதாகவும், விடுதிக் காப்பாளருக்கும் தீவிபத்தில் பேரிழப்பு ஏற்பட்டதாகவும் திருமதி தெரிசா தெரிவித்தார். வேல்ஸ் இளவரசர் பாலங்களைப் பார்வையிட்டு முடித்து எடின்பரோ ஹோலிராட் அரண்மனையில் வரும் புதன்கிழமை தங்கும்போது அவரை ஐந்து நிமிடம் சந்திக்க அனுமதி கோரும் விண்ணப்பம் ஒன்றையும் ஸ்ரீமதி தெரிசா மெக்கன்ஸி கொண்டு வந்திருந்தார்.
விசேஷ ரயில் கொஞ்சம் முன்னால் போய் நின்றதால் நேரடியாகப் பிரசங்க மேடையில் அடியெடுத்து வைத்து வேல்ஸ் இளவரசர் இறங்க முடியாமல் போனது. அவரை ஒரு பல்லக்கில் சுமந்து போக சித்தமாக நாலைந்து உத்தியோகஸ்தர்கள் ஓடி வந்தபோது, இளவரசர் கனிவாகச் சிரித்து தான் திடகாத்திரமாக இருப்பதாகவும் நாலு அடி நடப்பதால் ஆரோக்கியத்துக்குக் கேடு ஏதும் ஏற்படாது என்றும் நகைச்சுவை ததும்பச் சொன்னார்.
ராணுவ அணுவகுப்பு வீரர்கள் கொம்பு வாத்தியம் முழங்க காலணிகளை அழுத்த நிலத்தில் பதித்து இளவரசருக்கு வந்தனம் தெரிவிக்க, மேஜர் ஜெனரல் அவர்களும் மேயர் அவர்களும் கைலாகு கொடுத்து பிரயாண சவுகரியம் குறித்து மன்னர் பெருமானை விசாரித்து தகுந்த விடை பெற்று திருப்தி அடைந்தார்கள்.
பின்னர் மற்றப் பரிவாரங்கள் பின் தொடர பிரமுகர்கள் மேடை ஏறும் முன், திருமதி தெரிசா மெக்கன்ஸி அவர்கள் மேல் மதிப்புக்குரிய இளவரசர் அவர்களின் பார்வை பட்டது. அவர் இந்திய வம்சாவளியினர் என்பதைத் தன் நுண்ணறிவின் மூலம் ஒரு வினாடியின் அரைக்கால் பகுதி நேரத்துக்குள் அறிந்து கொண்ட வேல்ஸ் இளவரசர் இவ்வம்மையாரை இந்திய முறைப்படி கை குவித்து சேவிக்க, அங்கே குழுமியிருந்த பெருங்கூட்டம் ஆரவாரமாகக் கைதட்டி மகிழ்ந்தது.
பிரிட்டனுக்கு சற்றே பிற்பட்ட சரித்திரம் உடைய இந்தியப் பெருநாட்டை அறியாமை மற்றும் ஏழ்மை இருளில் இருந்து மீட்க பிரிட்டீஷ் அரசாங்கம் நல்லெண்ணம் கொண்டு நிர்வாகத்தை மேற்கொண்டு சீரும் சிறப்புமாக நடத்தி வரும் வேளையில் இளவரசரின் இந்த இந்திய முறையிலான வணக்கம் இந்தியர்கள் மேல் பக்கிங்க்ஹாம் அரண்மனையும் பிரிட்டீஷ் பாராளுமன்றமும் வைத்திருக்கும் பேரன்பை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியது.
திருமதி மெக்கன்ஸி தன் கையில் வைத்திருந்த மனுவை இளவரசரின் அனுமதியோடு எடின்பரோ மகாபிரபு அவர்களிடம் கொடுத்தார். மகாபிரபு புகைத்துக் கொண்டிருந்த புகையிலை சிகரெட்டை அந்த நொடியில் காலடியில் போட்டு மிதித்து அணைத்து விட்டு மனுவைப் பணிவோடு கையில் வாங்கிக் கொண்ட கரிசனம் எடின்பரோ நகர மக்களின் பெருங்கூட்டத்தை நெகிழச் செய்தது.
அணிவகுப்பு மரியாதை முடிந்து பிரசங்கங்கள் ஆரம்பமாயின. (தொடரும் வாக்கியத்தை வெட்டவும் – பத்திரிகாசிரியர்). வேல்ஸ் இளவரசர் இருந்த ரயில் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் இருந்து முப்பது வயது மதிக்கத்தக்க இந்திய அல்லது ஆப்பிரிக்க உடுப்பு அணிந்த பெண்ணும், சிறுமியும் இறங்கி கூட்டத்தில் கலந்ததை நாம் கவனித்தோம்.
(தொடரும்)
eramurukan@gmail.com
- கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்
- ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1
- துரோகிக்கு மிகவும் நன்றி
- வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்
- சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்
- வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
- நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)
- பால்டிமோர் கனவுகள்
- இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
- ” புறநானூற்றில் கைக்கிளை “
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்
- இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்
- ஒரு பதிவை முழுமை செய்கிறேன்
- மழை கோலம்
- வேத வனம் விருட்சம்- 43
- உதிரிகள் நான்கு
- ஜாதி மல்லி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- விரியும் வலை
- காதலிக்க ஒரு விண்ணப்பம்
- சோறு
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து
- அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து
- மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்
- அடிவானத்திலிருந்து நகரத்திற்கு
- குதிரைகள் கடந்து செல்லுதல்
- ஆரோக்கியத்தின் பாடல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1
- அலைதலின் பின்னான குற்றச்சாட்டு