இரா.முருகன்
3 அக்டோபர் 1900 – சார்வரி வருஷம் புரட்டாசி 18, புதன்கிழமை
சாரட் வண்டி அரசூர் கடை வீதியில் சாவகாசமாக ஊர்ந்து கொண்டிருந்தது.
சாயந்திர நேரமானதால் பரபரப்போடு இருந்தது தெரு. ஊரில் சந்தை கூடுகிற தினமும் ஆனபடியால் கூட்டத்துக்குப் பஞ்சம் இல்லை.
நீ இங்கே வந்து இருபது வருஷம் ஆகியிருக்குமா வேதையா?
வண்டிக்குள் சாமா எதிர் வசமிருந்த வேதையனை விசாரித்தான்.
இருபத்து ரெண்டு வருஷம்.
வேதையன் பதில் சொல்லி விட்டு திரும்ப வேடிக்கை பார்ப்பதில் மூழ்கினான். அவன் பக்கத்தில் ராஜா முகம் கொள்ளாத சிரிப்பும் சந்தோஷமுமாக உட்கார்ந்திருந்தார்.
ராஜா கண்ணில் பட்ட பிரஜைகளுக்கு எல்லாம் கையை அசைத்து அனுக்கிரகம் செய்தபடி வந்தார். செய்து என்ன பிரயோஜனம்? அந்த நாசாமாப் போனவன்கள் ஒருத்தனும் இப்பேர்க்கொத்த பெரிய மனுஷன் வலிய வந்து முகமன் சொல்கிறதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அவனவன் ஜோலி மயித்தைப் பார்த்தபடி இருந்தான்கள்.
ஆனாலும் ராஜா உள்ளத்தில் கும்மாளம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. வண்டிக் கூட்டுக்குள் நின்றால் தலை இடிக்கும். கூரை மட்டும் கொஞ்சம் உசரத்தில் இருந்தால் அவர் எழுந்து நின்று பட்டு வேஷ்டியை அரைப் பாகம், காலே அரைக்கால் பாகமாக் கோவணம் தரிசனப்பட உடுத்திக் கொண்டோ, இல்லை குண்டித் துணியை அவிழ்த்து வீசிவிட்டோ ஆடக்கூட தயாரான ஆனந்தம் அது.
எல்லாம் அவர் பயிர்த் தொழில் செய்ய ஆரம்பித்ததில் தொடங்கியது.
காலையில் வெகு சீக்கிரமே முழிப்புத் தட்டி நித்திய கர்மங்கள் நேர்த்தியாக நடந்தேறுகிற படியால் நிறைய நேரம் கையில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறது அவருக்கு.
செயலோடு இருந்த காலத்தில் உதய நேரத்தில் அரண்மனை காரியஸ்தன் தஸ்தாவேஜுகள் சகிதம் வந்து நின்று எத்தையோ கூட்டி எழவைக் கழித்து கணக்கு வாசிப்பான். இல்லை, அக்கம்பக்கத்து, பக்கத்து ஊர் பட்டி தொட்டி வம்பு வழக்கு எதையாவது சுவாரசியமாகக் கண்ணும் மூக்கும் வைத்துக் கதைப்பான். அது ஒண்ணும் இப்போ இல்லை.
பழனியப்பன் மூலமாக அய்யர் வீட்டம்மா காப்பித் தண்ணி வைச்சுக் கொடுத்து விடுகிறதில் தான் ராஜாவுக்கு காலைப் பொழுது மெய்யாலுமே தொடங்குகிறது. வல்லாரை லேகியத்தை விழுங்கியோ விளக்கெண்ணெயில் காய்ச்சிய வெண்டைக்காய் தைலத்தை ஆசனவாயில் வழித்துப் பூசியோ எல்லாம் மெனக்கெடாமல் அந்தக் காப்பித் தண்ணி என்ற மந்திர பானம் பண்ணிய மாத்திரத்தில் கொல்லைப் புறம் வாவா என்று புஸ்தி மீசைக் கிழவன் மாதிரி களேபரமாகக் கூச்சல் போட ஆரம்பித்து விடுகிறது.
காப்பித் தண்ணி பிரசாதத்துக்கும் அப்புறம் வரப் போகிற பலகாரத்துக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழனியப்பன் விளாவி வைத்த வென்னீரில் தலை நனையாமல் ஒரு காக்காக் குளியல். ஈரத் துண்டோடு நின்று ஒரு பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து. அப்புறம் ஞாபகம் இல்லை. மிச்சத்தை புஸ்தி மீசையான் நேரே ஆண்டவனிடம் சொல்லி விடட்டும். அங்கே இருந்தால்.
ஆக ஏகப்பட்ட நேரம் சும்மா இருக்க வேண்டி வந்த ராஜா போன பவுர்ணமி அன்றைக்கு உதயத்தில் எழுந்திருக்கும்போதே விநோதமான யோஜனையோடு தூக்கம் விழித்தார். முன்னோர்கள் விடிகாலைக் கனவில் அவரை புகையிலை சாகுபடி செய்யச் சொல்லியிருந்த தினம் அது.
காப்பி உபசாரமும், வயிறு சுத்தப்படுத்துதலும் குளியலும் பொன்னார் மேனியனும் முடித்து ராஜா அரண்மனை தோட்டத்தில் காலாற நடந்தபோது தென்மேற்கு மூலையில் ஒரு நிமிடம் நின்றார். ஒரு காலத்தில் அரண்மனை ஜோசியக்கார அய்யர் யந்திரப் பிரதிஷ்டை செய்திருந்த இடம் அது.
கடுங்கோடை காலத்திலும் புல் முளைத்துக் காணப்படும் அந்த மண்தரையில் ஏழெட்டு செடிகள் ஒரே அளவுக்கு வளர்ந்து நிற்பதைக் கண்டார் ராஜா. ஒன்றில் மஞ்சள் நிறத்தில் பூ கூட விட்டிருந்தது.
ஒரு ராத்திரிக்குள் விதையூன்றி, அது வெடித்துப் பிளந்து மண்ணில் சூல் கொண்டு தாவரமாகக் கிளை விட்டுப் பூப்பூத்து நிற்பது மனுஷப் பிரயத்தனத்தால் ஆகுமோ?
அதிகாலைக் கனவில் சாகுபடி செய்யச் சொன்னது இதைத்தான் போலிருக்கு.
ராஜா காலில் போட்டிருந்த வார்ச் செருப்பை ஓரமாக விட்டுவிட்டு அந்த செடிகள் பக்கமாக பயபக்தியோடு நடந்து போனார். இதுகள் என்ன தாவர வர்க்கமாக இருக்கும் என்று யோசித்தார். மூலிகை? மஞ்சனத்தி? இங்கிலீசு புதர்ச்செடி? ஒண்ணும் அவருக்கு அர்த்தமாகவில்லை.
காலைச் சாப்பாட்டோடு வந்த பழனியப்பனிடம் உனக்குத் தெரியுமோடா என்று விசாரித்தார் ராஜா.
அவன் சகலமும் அறிந்த பண்டிதன் போல செடியில் ஒரு இலையைப் பறித்து வாயில் போட்டு மென்றான்.
உடனே சாப்பாட்டுப் பார்த்திரத்தை பக்கத்தில் வைத்து வேட்டியை வரிந்து கட்டினான். தைப்பூசத்துக்கு நேர்ந்து கொண்டு பால் காவடி எடுக்கிறவன் போல் ஏக ரகளையாக ஆட ஆரம்பித்தான்.
மழ பெஞ்சு ஊரெல்லாம் தண்ணி – ஆமா
மலயப்பன் மகனுக்கு உடம்பெல்லாம்
எலே மயிரா. நிறுத்துலே. காலையிலேயே குடிச்சுட்டு வந்துட்டியா. கெட்ட வார்த்தை என்னமா வருது பாரு வாயிலே. எருமைச் சாணியைப் போட்டு மெளுக.
ராஜா அவனை அறைந்திருப்பார். கிழட்டுக் கடன்காரன் ஆட்ட வேகம் தாளாது தானே தரையில் விழுந்து வைத்தான். அப்படியோ உருண்டு புரண்டு கெக்கெக்கே என்று சிரிக்கவும் செய்தான் அவன்.
அந்தச் செடியில் தான் சூக்குமம் இருக்கு. ராஜாவுக்கு க்ஷணத்தில் புரிந்து போனது.
தாயில்லாரைக் கூட்டிட்டு வாடா தாயோளி.
பழனியப்பனை எழுப்பி அரையில் வேட்டியை உடுக்க வைத்து புகையிலைக்கடை வீட்டில் இருந்து டெபுட்டி தாசில்தார் சாமாவை ஒரு நிமிஷம் வந்து போக முடியுமா என்று விசாரித்து வரும்படி அனுப்பினார் ராஜா.
சாமா வந்து பார்த்து விட்டு சொன்னது –
என்ன மாமா, எப்போ இருந்து புகையிலை சாகுபடி ஆரம்பிச்சீங்க?
புகையிலையா? இந்த மண்ணுலே இது எப்படி வேர் பிடிச்சுது?
ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. சாமாவுக்கும் தான்.
அவன் என்ன சந்தேகம் என்றாலும் தன்னுடைய ஆப்த சிநேகிதனும் காலேஜு பண்டிதனுமான மருதையனை விசாரித்து அதைத் தீர்த்துக் கொள்கிற வழக்கம் என்றபடியால் தாசில் கச்சேரிக்குப் போன மறு நிமிஷம் லிகிதம் எழுதி மதுரை பிரயாணமாகக் கிளம்பிக் கொண்டிருந்த உத்தியோகஸ்தர் வசம் கொடுத்து அனுப்பினான். கூடவே செடியில் இருந்து கிள்ளிய இரண்டு இலையையும் பொட்டலமாக மடித்து வைத்திருந்தான்.
மருதையனும் அது புகையிலை தான் என்று உறுதி செய்தான். ஆனால் இந்த ரகமான ஒன்றை இந்தப் பிரதேசத்தில் மட்டுமில்லை வேறு எங்கேயும் பார்த்த அல்லது அது பற்றிப் படித்த ஞாபகம் இல்லை அவனுக்கு.
அதை மதறாஸ் பட்டணத்துக்கு அனுப்பி வைத்து அங்கே காலேஜ் பண்டிதர்களான துரைமார்களிடம் தகவல் விசாரித்து எழுதிய கடுதாசிக்கு இன்னும் பதில் இல்லை.
கடந்த ரெண்டு வாரத்தில் அரண்மனை தோட்டத்தில் அந்தச் செடிகள் அமோகமாக வளர்ந்தன. எல்லாம் ஒரே மாதிரி மேற்கே பார்த்து சாய்ந்து, எப்போதும் லகரியான ஒரு வாடையை சுற்று பிரதேசத்தில் பரப்பிக் கொண்டு, சொல்லி வைத்தாற்போல் ஒரே உயரம், கன பரிமாணத்தோடு இருந்தன.
அதுகளுக்கு தினசரி தண்ணீர் சேந்தி விடுகிற கைங்கர்யத்தை ராஜா தவறாமல் மேற்கொண்டிருந்தார். இன்றைக்கு நீர் இறைக்கும் போது ஏதோ தோன்ற அந்த இலைகளில் நாலைந்தைக் கிள்ளி வாயில் போட்டு மென்றார்.
நாள் முழுக்க அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருப்பது அதற்கு அப்புறம் தான்.
எலே சௌக்கியமாடா? மயில் எண்ணெ விக்கறதை விட்டுட்டியா?
ராஜா சாரட் வண்டி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த யாரையோ விசாரித்தார். அந்தப் புறம்போக்கு ஏதோ நாறின வார்த்தை தினுசில் முனகியபடி கம்புக்கூட்டில் சொரிந்து கொண்டு ராஜாவுக்கு பின்புறத்தைக் காட்டி நின்றான்.
எதுக்கு வற்ரவன் போறவனை எல்லாம் குசலம் விசாரிக்கணும் அப்பாரு? எவனும் மதிக்கறதில்லே.
ராஜாவுக்கு நேர் எதிரே சாரட்டில் வேதையன் பக்கமாக உட்கார்ந்திருந்திருந்த மருதையன் ராஜா கையை அசைக்க விடாமல் தன் கையால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சொன்னான்.
போகட்டும்’டா மருதையா. அவனுக பதில் சொல்லாட்டாலும் எனக்கு விசாரிக்கறது சந்தோஷம். நல்லா இருக்கட்டும் எல்லாப் பயபுள்ளையும்.
ராஜா கையை விடுவித்துக் கொண்டு கடைத் தெருவையே பொதுவாக அனுக்கிரகித்தார். அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த டெபுட்டி தாசில்தார் சாமா சிரித்தான்.
மருது. மாமாவை அவர் இஷ்டத்துக்கு விடேன். என்ன இருந்தாலும் இந்த ஊருக்கு அவர்தானே மகாராஜா? ஆயிரம் பேர் வந்து போனாலும் ராஜா ராஜாதானே?
ராஜா ஆதரவாக சாமா தோளில் சாய்ந்து நரைமீசைக்குள் கம்பீரமாகச் சிரித்தார். ராணி கூட இருந்து இதை எல்லாம் அனுபவிக்காமல் அரண்மனைக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் பாவம்.
சாமா, நீயும் மருதையனும் நம்ம அரண்மனை தோட்டத்தை விருத்தி பண்ண வழி பாருங்களேன். இன்னும் கொஞ்சம் புகையிலை பயிர் பண்ணினா உங்க கடையிலே வச்சு வித்துடலாம் இல்லே? லச்சுமி வரேன் வரேன்கிறா. எதுக்கு வேண்டாம்டி பொண்ணே. சாவகாசமா வா இப்போதைக்கு உங்க அக்காளை அனுப்பி வைன்னு தலையிலே அட்சதை போட்டுக்கணும்?
ராஜா சாமாவிடம் கேட்டார்.
நான் கவர்மெண்டு உத்யோகஸ்தன் மாமா. வேறே ஜீவனோபாயம் எதுவும் வச்சுண்டா சட்டப்படி தப்பு. மருதையனும் சர்க்கார் காலேஜ் வாத்தியார்ங்கறதாலே அதே படிக்குத்தான்.
அப்ப பழனியப்பனை கூடமாட வச்சுக்கிட்டு நானே பாத்துக்கறேன் போ.
ராஜா விரக்தியாகச் சொன்னார்.
சாமா நினைத்தால் தாயில்லார் ஆபீசு டவாலி சேவகன், குமஸ்தன் என்று நூறு பேரை ஒத்தாசை செய்யும்படியாக ஆக்ஞை பிறப்பித்து ராஜா முன்னால் கொண்டு வந்து நிறுத்தலாம். மாட்டேன் என்கிறான்.
சாரட் ஒரு நிமிடம் நின்றது.
அட, இதானே நம்ம புகையிலைக் கடை? தலையாட்டி பொம்மை கூட அப்படியே அன்று கண்ட மேனிக்கு அழியாம இருக்கே.
வேதையன் ஆச்சரியத்தோடு உரக்கச் சொல்லியபடி வண்டித் தட்டில் இருந்து குதித்து இறங்கினான்.
புகையிலைக் கடை மாறவே இல்லை.
கல்லாவுக்குப் பின்னால் பூ மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்து தெய்வப் படங்கள். கூடவே ரெண்டு சித்திரங்கள்.
கடையின் ஸ்தாபகர் அரசூர் சுப்பிரமணிய அய்யரும், பக்கத்தில் அவருடைய மகனும் டெபுட்டி தாசீல்தார் சாமாவின் தகப்பனாரும் அரசூர் பிரமுகருமான சங்கர அய்யரும் எழுதி வைத்த படங்களாகத் தொங்கி சகலரையும் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார்கள்.
மருதையன் ஏற்பாடு செய்து வங்காளத்தில் இருந்து தருவித்த ஓவியக்காரன் எழுதிய ஓவியங்கள் அது ரெண்டும். பகவதியம்மாளும், சாமாவும், ராஜாவும், மருதுவும், ஏன் சமையல்கார பழனியப்பனும் சொன்னதை வைத்து உத்தேசமாக வரைந்து கொடுத்திருந்த அந்த ரெண்டு படங்களும் சாமாவுக்கு திருப்தியாக வந்திருந்தாலும் பகவதிக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அவளுக்குத் தெரிந்த சங்கரனைப் படமாக எழுத யாருக்கும் முடியாது.
கடையை லீசுக்கு விட்டிருக்கேன் வேதையா. சர்க்கார் உத்யோகஸ்தன் கடை நடத்தலாகாதே?
சாமா படி ஏறும்போது சொன்னான்.
மாமா, நீங்களும் எறங்கறேளா?
ராஜா வேண்டாம் என்று கை காட்டினார்.
இறங்க ஏற உதவி தேவைப்படும். கடைக்குள் குரிச்சி போட்டு உட்கார எல்லாம் சவுகரியப்படாது. அதுக்கு, வண்டிக்குள் இருந்தபடிக்கே சாயந்திரம் தீர்ந்து ராத்திரி இருட்டு கவிகிற வரைக்கும் வேடிக்கை பார்க்கலாமே.
ஒரு பெரிய கூட்டமாகப் பெண்டுகள் தெருவில் நடந்து போனார்கள். முன்னால் நாதசுவரமும் பொய்க்கால் குதிரையுமாக அமர்க்களப்பட்டது. நடந்து போன எல்லாப் பெண்டுகளும் தலையில் மானாமதுரை மண்பானையில் முளைப் பாலிகை எடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.
என்ன விசேஷம்?
ராஜா ஜன்னல் பக்கமாகப் போன ஒருத்தனை தோளைப் பிடித்து நிறுத்தி விசாரித்தார்.
கொட்டகுடி மாதாவுக்குப் பொங்கல் பெரியப்பூ. ஆத்தா சமாதியான் தினமாச்சே புரட்டாசி பதினெட்டு.
ராஜாவுக்கு நினைவு வந்தது.
அட, கொட்டகுடி தாசி செத்துப் போன நாள் இல்லையா இது?
(தொடரும்)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
- சுவர்க்கம்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4
- “மாற்றம்”
- தமிழ் சேவைக்கு இயல் விருது.
- நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
- சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை
- மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”
- வயதாகியும் பொடியன்கள்
- எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்
- மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு
- பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு
- பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்
- விருட்ச துரோகம்
- என்றாலும்…
- திமிர் பிடிச்சவ
- பட்டறிவு
- ஞாபக வெளி
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு
- கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்
- மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)
- ஸெங் ஹெ-யின் பயணங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3
- வேத வனம் விருட்சம் 36
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>
- மலைகளின் பறத்தல்
- வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்