தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Socrates with His Students
“ஒப்பிடும் வகையில் உணர்ச்சி வசப்பட்ட ஒழுக்க முறைப்பாடு அர்த்தமற்ற வெறும் போலித்தனமே. அது உண்மை யில்லாத நியாய மில்லாத ஓர் ஆபாச மனக் கருத்தே.”
“திருமண இல்வாழ்வோ அல்லது பிரமச்சரியத் தனி வாழ்வோ ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் பின்னால் அதற்கு நிச்சயமாக வருத்தம் அடைவான் !”
“சாதாரண மாந்தருக்குப் பேரளவு இன்னல் தரச் சாமர்த்தியம் உள்ளது போல், பெருமளவில் நல்வினை புரியவும் அவருக்குத் திறனிருக்கலாம் என்பதை எண்ணத்தான் முடியும் என்னால்.”
“மனிதனுக்குச் சமமாக மாதருக்குச் சம உரிமை அளித்தால், மனிதனுக்கு மேலதிகாரியாக மாதர் ஆகி விடுவார்.”
சாக்ரடிஸ்
முன்னுரை:
உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது ! அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).
சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.
சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.
சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ! ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.
பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்
பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.
சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம் :
இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.
ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !
******************************
Fig. 2
Socrates & Alcibiades
சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -3
இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.
காலம் : கி. மு. 399
பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.
அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார்.
***********************
டிரிப்டோல்மஸ்: பொறு ! நாங்கள் சகுனத் தடைகளை மதிப்பவரில்லை ! துவங்கட்டும் நமது கடமைப் பணிகள் ! நியாய மன்றத்தில் தர்க்கம் நிகழட்டும் !
(மாஜிஸ்டிரேட்டுகள் நாற்காலியில் அமர்கிறார். சைரஸ் பின்தங்கி லைகானோடும், மெலிடஸோடும் உரையாடுகிறான்.)
சைரஸ்: லைகான் ! மெலிடஸ் ! நீங்கள் இருவரும் ஒன்றாக நிற்பீரா தெய்வத் தீர்ப்பு வாசிக்கப்படும் போது ?
மெலிடஸ்: அது போகட்டும், நமது திட்டம் மாஜிஸ்டிரேட் ·பிலிப்புக்குத் தெரியுமா ?
சைரஸ்: அவருக்குத் தெரியாது, நான் நிச்சயமாக அப்படிச் சொல்வேன்.
லைகான்: வேறு யாரெல்லாம் இந்த திட்டத்தில் நமக்கு உடந்தையாக இருப்பவர் ?
சைரஸ்: ஆச்சரியப் படாதீர் ! சாக்ரடிஸைக் குற்றம் சாற்றும் மூன்றாவது நபர் யார் தெரியமா ?
மெலிடஸ்: சாக்ரடிஸின் நண்பர்களில் ஒருவர்தானே.
(மன்றத்தில் தீர்ப்பைக் கேட்கச் சில மாதரும் ஆங்கே வருகிறார்.)
விவசாயி ஒருவரின் மனைவி: கூட்டம் பெரியது ! நின்று நின்று என் கால்கள் கடுக்கின்றன ! எப்போது மன்றம் துவங்குமோ ? சூடாக இருக்குது இடம் ! எங்கு பார்த்தாலும் தூசி மயம் !
உடம்பெல்லாம் கூடத் தூசி !
இரண்டாம் மாது: ஆடவர் சிலரது முழங்கைகளைப் பார்த்தால் கோடரித் தண்டுபோல் தெரிகிறது. எப்படித்தான் அவரது மனைவிமார் அவரோடு குடித்தனம் நடத்துவாரோ ?
சைரஸ்: கூட்டத்தில் என் கண்களைக் கவ்வி இழுப்பவள் ஒரு காரிகை ! (இரண்டாம் மாது சைரஸை பக்கப் பார்வையில் நோக்குகிறாள்)
இரண்டாம் மாது: (சலிப்புடன்) அது ஒருவிதக் குருட்டுக் கண்ணோட்டம்தான் ! (சைரஸை நோக்கி) நீ யாரென்பது எனக்குத் தெரியும் ! ஏன் நீ மாஜிஸ்டிரேட்டுகள் கூட மன்ற முன்னிலையில் உட்கார வில்லை ? உலகில் உன்னத ஞானி யாரென்று அறிய உனக்கு விருப்பம் இல்லையா ?
சைரஸ்: உன்னத ஞானி யார் ? உன்னத மாதை மணந்து கொண்டவர் உன்னத ஞானி !
இரண்டாம் மாது: நீ யார் ? உன்னத ஞானியா ? அல்லது மூட மானிடனா ?
சைரஸ்: அதாவது என் மனைவி அறிவாளியா அல்லது மூட மாதா என்று நீ கேட்கிறாய் ? நான் என் மனைவியைப் பற்றிப் பேச விரும்ப வில்லை ! அது தனிப்பட்ட என் சொந்த ரகசியம் !
இரண்டாம் மாது: அதாவது உன் மனைவி அறிவாளி இல்லை என்பதைச் சொல்லக் கூசுகிறாய் ! இல்லாவிட்டால் இந்த மன்றத் தீர்ப்பைக் கேட்க நீ உன் மனைவியை அழைத்து வந்திருப்பாய் அல்லவா ? அது சரி ! மேடையில் அமராமல் இங்கென்ன செய்கிறாய் நீ ?
சைரஸ்: (மாதின் காதில் முணுமுணுத்து) இந்த அறிவாளிகளோடு சேர்ந்து நானொரு சிறு சதித் திட்டத்தைச் செய்யக் காத்திருக்கிறேன் !
இரண்டாம் மாது: யாரையாவது தீர்த்துக் கட்டப் போகிறாயா ?
மெலிடஸ்: (கோபத்தோடு) சைரஸ் ! மூடு வாயை ! சதித் திட்டத்தைச் சொல்லி நீ சட்ட வலைக்குள் சிக்கிக் கொள்வாய் ! மௌனம் கலகத்தை நிறுத்தும் ! வாய்ப் பேச்சுக் கலகத்தை மூட்டும் !
இரண்டாம் மாது: (முதல் மாதைப் பார்த்து) பார்த்தாயா ? இதுதான் ஆடவர் லட்சணம் ! உண்மை பேச மாட்டார் ! சரி விரைவாகப் போ ! முன்னால் இடம் பிடிக்க வேண்டும் ! கூட்டத்தில் முன்னால் போவது சிரமம்தான் !
(அப்போது இதைக் கேட்டுக் கொண்டு பின்னால் வருவது ஷாந்திப்பி சாக்ரடிஸின் மனைவி. ஒரு காலத்தில் அழகாய் இருந்தவள். இப்போது வயது முதிர்ச்சியில் அழிந்த ஓவியம் போல் காணப் படுகிறாள்.)
ஷாந்திப்பி: (இரண்டாம் மாதைப் பார்த்து) நீ என்ன சொல்கிறாய் ? மேடைக்கு முன்னால் யாரும் போக முடியாதா ?
இரண்டாம் மாது: வணக்கம் அம்மா ! நலமா ? கூட்டத்தில் நெருக்கியடித்து நீங்கள் போக முடியாது ! இங்கு நின்றால் கூட மாஜிஸ்டிரேட் பேச்சு காதில் விழும் ! பெரியவர் சாக்ரடிஸ் நலமா ? எங்கே அவரைக் காணோம் ?
ஷாந்திப்பி: பெரியவர் நலம்தான் ! அதோ பின்னால் வருகிறார் ஆமை வேகத்தில் ! தாமதமாகி விட்டது ! என்னருமைக் கணவர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டு நேரத்தை நழுவ விட்டார்.
(சாக்ரடிஸ் கூட்டத்தில் நெளிந்து கொண்டு வருகிறார். வயது எழுபதுக்கும் மேலிருக்கும் (72). ஆனால் தள்ளாடாமல் அவர் நிமிர்ந்து நடக்கிறார். கால் வலித்து ஒரு வீட்டோரப் படியில் சற்று அமர்கிறார். கையில் காரட் ஒன்றைக் கடித்துத் தின்கிறார். எளியராகவும் வறியராகவும் அருவருப்பான முகத்துடன் காணப்படுகிறார்.)
இரண்டாம் மாது: எழுபது வயதானலும் வெள்ளைக் கிழங்குபோல் இருக்கிறார். முகம்தான் சறு விகாரம் ! ஆனால் அவர் மேதமைத்தனம் கண்களில் பளிச்செனத் தெரிகிறது.
ஷாந்திப்பி: (சாக்ரடிஸ் இருக்கும் இடத்தை நெருங்கிக் கோபமாக) நான் முதலில் என்ன சொன்னேன் ? நாம் தாமதித்து விட்டோம் ! பேசிப் பேசி உங்கள் நாக்குதான் மொட்டையானது ! நாக்கு சுருங்கிப் போனது ! வாய் வலிக்காதா ? ஆமை வேகத்தில் தாமதமாய் வந்திருக்கிறோம் ! என்ன கனவு இப்போது கண்டு மெதுவாக வருகிறீர் ? மண்டை பூராவும் ஒட்டடை நிரம்பிக் கிடக்குது !
சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) அப்படியா ? உனக்கு எப்படித் தெரியும் ? நூல்களைப் படித்து என் மூளையை நிரப்பி யிருக்கேன் ! அது உனக்கு நூலாம்படையாகத் தெரிந்தால் உன்னை நான் எதிர்க்கப் போவதில்லை ! ஒன்றும் தெரியாது எனக்கு ! ஒட்டடையாய்த் தெரியுது உனக்கு !
ஷாந்திப்பி: நீங்கள் உட்கார்ந்து நூல் எதுவும் எழுதுவதில்லை ! நின்று கொண்டே பேசத்தான் தெரியும். உங்கள் உரையாடலை அப்படியே நகல் எடுத்து உங்கள் சீடர் பிளாடோ எழுதிப் பணம் சம்பாதிக்கிறார் ! அவர்தான் சாமர்த்தியசாலி ! நீங்கள் ஓர் ஏமாளி ! கிழிந்த உடை அணிந்து வாய் கிழியப் பேசி வறுமையில் உழல்கிறீர் ! பிளாடோவைப் பாருங்கள் ! பணச் செழிப்பு உடலும், நடையிலும் வழிகிறது ! பிழைக்கத் தெரிந்தவர் பிளாடோ !
சாக்ரடிஸ்: என் உரையாடலுக்கு நான் பணம் வாங்குவதில்லை ! வறுமையில் நான் மரணம் அடைந்தாலும் வசனத்துக்குப் பணம் நான் வாங்க மாட்டேன் ! பிழைத்துக் கொள்வது எப்படி என்று உன்னிடம் நான் கற்றுக் கொள்கிறேன் ! சொல்லிக் கொடு எனக்குத் தெரியாது !
ஷாந்திப்பி: எழுபத்தியிரண்டு வயதாச்சு ! ஒன்றும் தெரியாது என்று சொல்ல உமக்கு வெட்கமாய் இல்லையா ?
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Plays :
(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.
(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)
(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)
++++++++++++++
ஆதாரங்கள் :
1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)
2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
7. The Great Quotations Compiled By : George Seldes (1967)
8.. The Wordsworth Dictionary of Quotations (1997)
9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)
10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)
11. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)
12. The Trial of Socrates By : Douglas Linder (2002)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 20, 2009)]
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9
- ஈசா விண்வெளியில் ஏவிய ஹெர்செல்-பிளாங்க் பூதத் தொலைநோக்கிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3
- மே 2009 வார்த்தை இதழில்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1
- திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு
- நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்
- இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”
- சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்
- கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா
- தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
- வேத வனம் -விருட்சம் 35
- கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்
- பூ உதிர்ந்த ரோஜாச் செடி
- சைவம்
- நினைவுகளின் தடத்தில் – (31)
- புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
- என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
- ஏற்புடையதாய்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2