விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

இரா.முருகன்


7 செப்டம்பர் 1900 – சார்வரி வருஷம் ஆவணி 23, வெள்ளிக்கிழமை

ராஜா நல்ல தூக்கத்தில் இருந்தபோது நொட்டு நொட்டென்று சயனகிரஹத்துக் கதவில் யாரோ தட்டி உபத்ரவப்படுத்தினார்கள்.

முன்னோர்களாக இருக்கும். பல வருஷம் முன்பு காலம் சென்றவர்கள். வந்துடு வந்துடு என்று சதா நச்சரிக்கிறார்கள். ராத்திரி, பகல் என்று ஒரு விவஸ்தை கிடையாது.

முக்கியமாக புஸ்தி மீசைக் கிழவன். ராஜாவின் மரியாதைக்குரிய மாமனார்.

வெறும் பயல் இன்னொரு ஜன்மம் எடுத்து எருமை மாடாகவோ, நண்டு நரியாகவோ பிறந்து கண்காணாது போகப் படாதா? என்ன இழவுக்கு இன்னும் அலைபாய்ந்து அந்தரத்தில் திரிந்து கொண்டிருக்கிறான்?

அமாவாசைக்கு அமாவாசை இவன் வகையில் கள்ளுத் தண்ணியும் கண்மாய் மீனுமாகப் படைக்கவே கையில் இருக்கிற காசு சரியாக இருக்கிறது.

வந்துடு வந்துடு என்று பிடுங்கி எடுக்கிறானே மயிர்புடுங்கி வக்காளி. வந்தா உனக்கு யாருடா திதி தெவசத்துக்கு கள்ளுத் தண்ணி ஊத்தி இழவெடுக்க?

ராஜாவுக்கு சகிக்க முடியாமல் ஆத்திரம் வந்ததுக்கு கிழவன் நினைப்போடு, வாசல் கதவை உடைக்கிற மாதிரி விடாமல் தட்டுகிறதும் கூடிக் காரணமாக இருந்தது.

வரேண்டா. இரு. நடந்து தானே வரணும். உசிரு இருக்கற கட்டையாச்சே? ஒய்யாரமாப் பறக்கவா முடியும் உன்னய மாதிரி?

கண்ணும் தெரியலை. காதும் சரியாகக் கேட்கலை. ஆனாலும் ராணிக்கு அது ரெண்டும் ரொம்ப சரியாகத்தான் இருக்கிறது. தூக்கம் தான் அதிகம் அவளுக்கு. முழிச்சு இருக்கற பொழுதை விட அந்தக் கிழவி தூங்குகிற நேரம் தான் நிறைய. ராஜா மாதிரி மணி நேரத்துக்கு ஒரு முறை தொண்டை வரட்சிக்குத் தண்ணி குடிக்க, நீர் பிரிய வேண்டி எழுந்திருக்கிற உபத்திரவம் எல்லாம் அவளுக்கு கிடையாது. கிழங்கு மாதிரி இருக்கா இந்த வயசிலும் என்கிறதில் ராஜாவுக்குக் கொஞ்சம் பெருமையும் ரகசியமாக உண்டு.

வந்துடு வந்துடு.

கதவுப் பலகை கடகடக்கிறது. வாசல் கதவைத் தட்டித் தட்டி உடைப்பதை புஸ்தி மீசைக் கிழவனோ வேறே அங்கே விவஸ்தையில்லாத எவனோ நிறுத்தவே இல்லை.

அந்தக் கையை உடைத்து தீயிலே பொசுக்க.

மாமனார்க் கிழவனைப் பொசுக்கி எத்தனையோ காலமாச்சே என்று ராஜாவுக்கு உறைத்தபோது கதவு மட்ட மல்லாக்கத் தன் பாட்டில் தானே திறந்து கொண்டது.

ரெண்டு கையிலும் தூக்குப் பாத்திரமும் கஷ்கத்தில் செருகின வாழை இலையுமாக பொக்கை வாய்ச் சிரிப்போடு நின்றான் அரண்மனை மாஜி சமையல்காரன்.

ஏ பயலே பழனியப்பா, என்ன மயித்துக்கு கதவை உடைக்கறே?

ராஜா தன் பிரியத்துக்குரிய சமையல்காரனை சிநேகிதமாக விசாரித்தார். ராஜாவுக்கும் அவன் நிற்கிற தோரணையைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.

சமூகம் பசியாறற நேரமாச்சே. அய்யரூட்டம்மா தோசை கொடுத்து அனுப்பினாக.

பகவதியம்மா இருக்கிற திசை நோக்கி அந்தப் புகையிலைக்கார வீட்டை நின்றபடிக்கே தொழுதார் ராஜா. மூணு வேளை சாப்பாடு அவருக்கும் ராணிக்கும் அங்கே இருந்து தான் நிமிஷம் தவறாமல் வந்து கொண்டிருக்கிறது.

அரசூர் சங்கரய்யர் ஜீவ்யவந்தராக இருந்தபோதே ஆரம்பமான ஏற்பாடு இப்போது அவருடைய சகதர்மிணி மாதுஸ்ரீ பகவதி அம்மாள் புண்ணியத்தில் ஒரு குறைச்சலும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புகையிலைக்கடை வீட்டில் ஜோசியக்கார அய்யன் குடும்பத்துக்கு பந்து ஜனமான யாரோ வந்து வேளாவேளைக்கு சமைத்துக் கொடுத்து விட்டுப் போகிறது அரண்மனைக்கும் சேர்த்துத்தான். இங்கே ரெண்டு உடம்பு கட்டையில் வேகும்வரை அது நிற்காது.

ராணியம்மா, ஆகாரம் கொண்டாந்திருக்கேன்.

பழனியப்பன் தேக்குமரக் கட்டில் தலைமாட்டு பிரதேசத்தில் கவிந்திருந்த இருட்டைப் பார்த்து உத்தேசமாகக் கத்தினான்.

உன்னைப் பாடையிலே வைக்க. என்ன எளவுக்கு சங்கீதம் பாடுறேன்னேன்?

ராஜா இருமலுக்கு நடுவே அபிப்ராயம் தெரிவித்தார்.

ராணி எழுந்து உட்கார்ந்தாள். பல் எல்லாம் உதிர்ந்து போன காரணத்தால் துலக்குகிற காரியம் அமாவாசை, பௌர்ணமி நேரத்தில் குளிக்கிற போதுதான் அவளுக்கு முடிகிறது. ராஜா அந்த விஷயத்தில் ரொம்பவே நேர்த்தி. தந்த சுத்தி செய்யாமல், தோளுக்குக் கீழே குளிக்காமல் சாப்பிட உட்கார மாட்டார்.

பழனியப்பன் மர பெஞ்சியை கட்டிலுக்கு முன்னால் இழுத்துப் போட்டு இலையைப் பரத்தினான்.

அட கூதற பயலே. தோசையும் இட்டலியும் உன்னோட கம்புக்கூட்டு வேர்வை வாடையோடயா திங்கணும்னு தலையெளுத்து? எலையைக் களுவிப் போடணும்னு தோணாதே. என்ன ஜன்மம்’டா.

தினம் திங்கறது தானே. இன்னிக்கு என்ன புதுசா?

பழனியப்பன் முணுமுணுத்தது ராஜாவுக்குக் கேட்கவில்லை.

ரெவ்வெண்டு தோசை போடுறா போதும். நீயும் தின்னுக்கடா. பயபுள்ளே பசியா இருப்பே.

ராஜா உள்ளபடிக்கே பிரியமாகத் தன் மாஜி சமையல்காரனிடம் சொன்னார்.

ஆனை அடி மாதிரி பெரிசு பெரிசாக பத்து தோசை, துவையல், அய்யமார் வீட்டு சாம்பார் என்று ஏகத்துக்கு அனுப்பியிருந்தாள் பகவதியம்மாள்.

பிராமண போஜனம் சாப்பிட நல்லாத்தான் இருக்கு. தெனைக்கும் மூணு வேளை அதையே தின்னத்தான் பத்தியச் சாப்பாடு ருஜித்த மாதிரி நாக்கு அப்போ அப்போ அலுத்துக் கொள்கிறது.

தோசைக்குக் கருவாட்டுக் குழம்பு பக்க மேளமாக இருந்தால் அமிர்தமாக இருக்கும். இந்தப் பாழாப்போன பழனியப்பன் கைமணத்தில் அது எத்தனையோ தடவை ராஜாவுக்கு சாப்பிடக் கிடைத்திருக்கிறது.

என்ன செய்ய? பழனியப்பனை தற்போது உக்கிராணத்தில் படியேற்றுவது உசிதமில்லை. வயசாகிப் போனதால் சமையலில் திட்டம் தறிகெட்டு மண்டகுண்டமாக எதையோ செய்து வைத்தது நாலு வருஷம் முன்புதான்.

பூசணிப் பத்தையை அறுத்து மிளகும் வெல்லமும் போட்டுப் பொங்கி வைத்துவிட்டு வஞ்சிர மீன் குழம்பு என்று ஆத்தா சத்தியமாகச் சொன்னான் அப்போ. நல்லா இருந்தாலும் அதுக்கு அப்புறம் அவன் சமையலுக்கு உட்பட்டால் புஸ்திமீசைக் கிழவன் கிட்டே வரேன் வரேன் என்று சீக்கிரம் சொல்ல வேண்டி வந்து விடலாம். ராஜாவுக்கு பழனியப்பன் ஒத்தாசையோடு கைலாசம் போக உத்தேசம் எதுவும் கிடையாது.

பெஞ்சன் வாங்கிட்டு அரண்மனையோட கிடடா பயலே.

ராஜா அவன் சமையலை நிப்பாட்டிப் போட்டபோது அவருடைய மகனும் மதுரையில் காலேஜு மகா பண்டிதருமான மருதையன் வெகு மும்முரமாக சமையலுக்கு வேறு ஆள் தேடத் தொடங்கினான்.

நீ ஒரு கல்யாணம் கட்டிக்கிட்டா போதாதா மருதையா? வாற மகராசி வாய்க்கு ருஜியா வடிச்சுக் கொட்டாமப் போயிடுவாளா என்ன?

ராணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், ராஜா கெஞ்சிப் பார்த்தும், மருதையன் நித்தியப் பிரம்மச்சாரியாகவே இருக்கிறதில் ரெண்டு பேருக்கும் ரொம்ப வருத்தம்.

அவர்களுக்கு மட்டும் இல்லை, பகவதியம்மாளுக்கும் அவளுடைய ஒரே புத்ரனும், மருதையனின் ஆப்த சிநேகிதனுமான டெபுட்டி தாசீல்தார் சாமா என்ற சாமிநாதனுக்கும் கூட இது துக்கத்தை விளைவிக்கிற ஒண்ணு.

சாமாவுக்கு நன்னிலத்தில் பெண் எடுத்து அவளும் காலாகாலத்தில் ஒரு பிள்ளைக் குழந்தையைப் பெற்றுத் தவழ விட்டு அந்தப் பிள்ளையும் இப்போ ஓடியாடி நடக்கிற ஆறு வயசுப் பையன்.

மருதையன் மாத்திரம் ராஜ வம்சம் விளங்க வைக்க வேணாம் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

ராஜா முன்னோர்களை எம்புட்டுத் தடவை தான் பரிகாரம் கேட்பார். எந்தக் கிழமும் பிடி கொடுத்துப் பேசமாட்டேன் என்கிறது. புஸ்தி மீசைக் கிழவன் மட்டும் நீ இங்கே வந்துட்டா எல்லாம் தானே சரியாயிடும் என்று ஆசை காட்டுகிறான்.

மருது தம்பி தாக்கல் சொல்லி விட்டாப்பலே.

இன்னொரு தோசையை வேணாம் வேணாம் என்று கை காட்டி மறுத்த ராணியம்மா இலையில் போட்டபடி பழனியப்பன் சொன்னான்.

ராஜாவுக்கு அடக்க முடியாத ஆச்சரியம். நாலு நாள் ஒண்ணுக்கு, வெளிக்கிப் போகாவிட்டாலும் ராணிக்கு கிரமமாகப் பசி எடுக்க ஏதோ தெய்வம் ஆசி கொடுத்திருக்கிறது. ராஜா மாதிரி தின்னு முடிச்சதும் பின்னஞ் சந்து களேபரமாகத் திறக்கிற விவகாரம் எல்லாம் அவளுக்குக் கிடையாது.

என்னலே தாக்கல்?

ராணி தோசையை வாயில் போட எடுத்தபடிக்குக் கேட்டாள். அவளுக்கு இப்போது அவளுடைய அப்பன் புஸ்தி மீசைக் கிழவனின் சாயல் பரிபூரணமாக வந்து விழுந்திருந்ததாக ராஜாவுக்குத் தோன்றியது. மீசை இல்லாவிட்டால் என்ன?

அடுத்த மாசம் ஆயுத பூசை வருதில்லே. தம்பி இங்கன வருதாம். தாயில்லாராப்பீசுக்கு தாக்கல் சொல்லியனுப்பிச்சாப்பலே. அய்யரு சொல்லச் சொன்னாரு.

பழனியப்பன் தோசைப் பாத்திரத்தை நகர்த்தியபடி சொன்னான்.

சாமா என்கிற சாமிநாதன் டெபுடி தாசில்தாராக இருந்ததால் ஆள் அம்புக்குக் குறைவு இல்லை. சதா யாராவது மதுரைக்கும் காரைக்குடிக்கும் போக்குவரத்தாக இருப்பதால் தகவல் தங்குதடையில்லாமல் எல்லா திசையிலும் போய் வந்து கொண்டிருக்கிறது. தபால் கச்சேரி கூட இத்தனை விரசாக செயல்படாது.

இப்பத்தான் சரசுவதி பூஜை வந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே ஒரு வருஷம் ஓட்டமா ஓடிடுத்தே.

ராணி ஆச்சரியப்பட்டாள். அதானே. இப்படி ராவும் பகலும் தூங்கினால் நாள் நட்சத்திரம் கடந்து போகிறது தெரியுமா என்ன? என்னத்துக்கு தெரியணும்?

யாரையாவது விட்டு ஆயுதசாலையிலே கத்தி கபடா எல்லாம் புளி போட்டுத் தொலக்கி வெய்யில்லே காயப்போடச் சொல்லுங்க.

ராணி ஆணையிட்டது ராஜா காதில் நன்றாகவே விழுந்தாலும் சரியாகக் கேட்காத மாதிரி அபிநயித்துக் கொண்டு நேரத்துக்குப் பொருத்தமில்லாமல் தூங்கி விழவும் முற்பட்டார்.

அதானே, வேலை செய்ய ஆளனுப்புங்கன்னு சொன்னா காது டமாரமாயிடுமே. நீங்க என்னத்துக்கு சொல்றது? நானே சொல்றேன்.

ராஜா தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

பளனியப்பா. நீ போய்.

கல்யாணமும் கருமாதியும் எல்லாமே பளனியப்பன் தானா. உங்க தலையிலே இடி விள. ஒருத்தனும் ஆயுத சாலைப்படி ஏற வேணாம். எம்புள்ள மருதையன் வந்து பார்த்துப்பான்.

ராணி தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.

பழனியப்பன் எசகுபிசகாக ஈட்டியையோ பழைய பட்டாக் கத்தியையோ கையாண்டு சுவர்க்கம் புகுந்தால் துரைத்தனத்துக் கோர்ட்டு கச்சேரி என்று ஏறி இறங்க வேண்டிப் போகும். அது கிடக்கட்டும். அப்புறம் அய்யர் வீட்டு பலகாரத்தை யார் வேளாவேளைக்கு இப்படிக் கொண்டு வந்து தருவார்கள்?

மருது தம்பி வரக் கொள்ள, மலயாளத்தார் யாரோ இங்கிட்டு விருந்தாடி அய்யரூட்டுக்கு வராராம். தாயில்லாருக்கும் தம்பிக்கும் சிநேகிதம்முன்னாங்க. வேதக்காரப் புள்ளையாண்டானாமே?

பழனியப்பன் ஒரு குவளையில் நாலு சிராங்காய் தண்ணீரை எடுத்து ராஜாவுக்கு நீட்ட அவர் தாம்பாளத்திலேயே கை கழுவிக் கொண்டு திரைச்சீலையில் ஈரத்தைத் துடைத்துக் கொண்டார்.

ராணி இருந்த திசையில் இருந்து சத்தம் ஏதும் இல்லாததைக் கவனித்துத் திரும்பினார் ராஜா. அவள் எச்சில் கையோடு படுக்கையில் சரிந்திருந்தாள். அதுக்குள் அடுத்த தூக்கம் பலமாகக் கவிந்திருந்தது அவளுக்கு.

தோள் துண்டை பழனியப்பன் கொண்டு வந்த குவளையில் நனைத்து ராணியின் கையை சுத்தமாகத் துடைத்து விட்டு அவள் வாயையும் ஈரத்தால் ஒற்றினார் ராஜா. இன்னும் ரொம்ப நாள் இவள் இருக்க மாட்டாள் என்று அவர் மனசு சொன்னபோது கண்ணில் அந்த ஈரம் குடிபுகுந்து விட்டது.

நீ போய்ட்டா நா மட்டும் என்ன செய்யப் போறேன் புள்ளே? வந்து சேர்ந்துட மாட்டேன் நானும் அங்கிட்டு?

மருதையனுக்கு ஒரு கல்யாணத்தை முடிக்காமல் போகிற துக்கம் அவர் மனதில் பலமாகக் கவிந்தது. எதுக்கும் இப்போ வரும்போது உட்கார வைத்து நல்ல வார்த்தையாக நாலு சொன்னால் என்ன? சம்மதிக்காவிட்டால் கொல்லைப் பக்கத்து கிணற்றில் விழப் போகிறது மாதிரி போக்கு காட்டி மிரட்டினாலும் தப்பில்லை. அவர் விழுவதற்கு பதில் ராணி அப்படி செய்ய முற்பட்டால் வியாஜ்யம் இன்னும் வலுவாக இருக்கும்.

தூங்கிக் கொண்டே இவள் என்னத்தை விழுந்து வைக்க?

பழனியப்பனைப் பிடித்துத் தள்ளினால் என்ன?

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts