இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்



சுகாவ் தான் செய்த தவறுக்கு தகுந்ததுபோல தண்டனை கிடைத்திருந்தால் இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டான்.எப்போதும் முதலில் முழிப்பவன் அவனே. அதனாலேயே இந்த தண்டனை தனக்கு தகுந்ததல்ல என்பதில் மிகுந்த வருத்தமடைந்தான்.டாடரிடம் கெஞ்ச முடியாதெனத் தெரியும்.வெளிப்படையாக எதிர்க்க தைரியமில்லாமல் – தன் கால்சட்டையை உதறி அணிந்து (அழுக்கான ஒரு துணி கால்சட்டையிலிருந்தது; அந்தத் துணியில்தான் அவன் எண் பதிந்திருந்தது), தன் மேல் சட்டைக்குள் நுழைந்து ( இதே சட்டையின் இரு பக்கங்களிலும் அதே எண் இருந்தது), தரையிலிருந்து காலணியைப் பொறுக்கிக்கொண்டு, தன் தொப்பியை அணிந்துகொண்டான் (இதன் மேலுள்ள துணியிலும் அதே எண்).தன் முகாம் குடிசையிலிருந்து டார்டரைத் தொடர்ந்து வெளியேறினான்.

104வது குடிசையே அவர்களைப் பார்த்தது. ஆனாலும் யாரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை: பேசி என்ன ஆகப்போகிறது; அவர்களால் சொல்லக்கூடியதுதான் என்ன? குழுத் தலைவன் ஏதாவது சொல்லியிருக்கக் கூடும். ஆனால் அவனும் அங்கில்லை.சுகாவும் யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.அவன் டார்டரை எரிச்சல் செய்ய விரும்பவில்லை. சிற்றுண்டியை கண்டிப்பாக அவன் நண்பர்கள் தனக்காக வைத்திருப்பார்கள் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.

அவர்கள் இருவரும் குடிசையை விட்டுச் சென்றார்கள்.திடீர் குளிர் சுகாவிற்கு மூச்சுமுட்டியது.

கண்காணிப்பு கோபுரத்திலிருந்து இரண்டு சக்திவாய்ந்த விளக்க ஒளி அந்த முகாம் முழுவதையும் அளந்தது.எல்லை விளக்கு முதற்கொண்டு உள்விளக்குகள் கூட அந்த முகாமில் எறிந்துகொண்டிருந்தது.நட்சத்திரங்களுக்கே சவால் விடக்கூடிய அளவிற்கு அங்கு விளக்குகள் எறிந்துகொண்டிருந்தது.

காலுக்கடியில் பனி சரசரக்க கைதிகள் தங்கள் வேலையில் மும்முரமாக விரைந்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் தபால் அறைக்கும், வேறுசிலர் சிற்றுண்டியை கையில் எடுத்துக்கொண்டு சூடுசெய்ய விரைந்துகொண்டிருந்தனர்.எல்லோரும் தங்கள் தலையை மேல்சட்டைக்குள் குனிந்து புதைத்திருந்தனர். அப்போதைய குளிரை விட, நாள் முழுதும் அந்த குளிரில் இருக்கவேண்டியதை நினைத்ததால் ,அக்குளிர் எலும்பை உறைய வைப்பதுபோல் இருந்தது.தன் பழைய ராணுவ உடையணிந்த டார்டர் குளிரை பொருட்படுத்தாதது போல,மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

அந்த முகாமிலிருந்த ஒரே செங்கள் கட்டிடமான உயரமான லாக் அப்பை சுற்றி நடந்தனர்.அம்முகாமின் சமையலறையை சுற்றியிருந்த கம்பிகளைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர்.கண்காணிப்பு விடுதியைத் தாண்டி,அங்கு கம்பத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்த வெப்பநிலைமானியைச் சுற்றி (இந்த வெப்பநிலைமானி குளிர் குறிப்பிட்ட அளவிற்கும் கீழே செல்வதை கண்காணிக்க) சென்றார்கள்.

சுகாவ் நம்பிக்கையுடன் அந்த பால் வெள்ளை குழாயைப் பார்த்தான். -41 வெப்ப அளவு இருந்தால் அவர்கள் வேலைக்கு போக வேண்டியதில்லை. ஆனால் இன்றோ -41 என்ற அளவிற்கு கொஞ்சம் கூட அருகில் இல்லை.

பணியாளர் அறைக்குள் சென்றார்கள். டார்டார் நேராக காவலாளி அறைக்கு சுகாவை கூட்டிச் சென்றான். அப்போதுதான் சுகாவ் ஒன்றை உணர்ந்தான். அவனை லாக் அப் அறைக்கு கூட்டிச் செல்லவில்லை.அந்த காவலாளியில் அறையின் தரையை சுத்தம் செய்யவே அவனை கூப்பிட்டிருந்தார்கள்.அந்த தரையை அழுத்தித் தேய்க்கச் சொல்லிவிட்டு டார்டார் அவனை அங்கே விட்டுவிடப்போகிறான்.

அந்தத் தரையைத் தேய்ப்பது ஒரு முக்கியமான கைதியின் கடமையாகும். அந்த கைதி முகாமில் வெளிவேலைக்கு செல்லாமல், அந்த பணியாளர் அறையில் வேலை செய்பவன். பணியாளர் அறையை எப்போதோ தன் வீட்டைப் போல பாவிக்கத்தொடங்கிவிட்டிருந்தான்.ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு தலைவரான தளபதியின் அலவலகத்திற்குள் அவனுக்கு அனுமதி இருந்தது. காவலாளிக்குத் தெரியாததுகூட வேலை செய்யும்போது அவனுக்கு கேட்கும். சில காலத்திற்குள் அவனுக்கு தலை கனம் ஏறிப்போனது. கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற காவல் அறைகளின் தரையை சுத்தம் செய்வோரை தன்னைவிடத் தாழ்ந்தவராக கருதத் தொடங்கினான்.

வேலைக்கு அவனை பல சமயங்கள் கூப்பிட்டு அலுத்துப்போன காவலாளிகளுக்கு நடப்பவை புரிந்தது. அதற்குப் பிறகு மற்ற கைதிகளை தரை தேய்க்க கூப்பிட ஆரம்பித்தனர்.

காவலாளி அறையிலிருந்த அடுப்பு அனலை கக்கிக் கொண்டிருந்தது.கிழிந்த உடை அணிந்த இரு காவலாளிகள் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தனர். தன் மேல் சட்டை, காலணியை அணிந்து கொண்டிருந்த மூன்றாவது காவலாளி குறுகலான கட்டையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.அந்த அறையின் மூலையில் காலியான வாளி அதனுள் கந்தல் துணியும் கிடந்தது.

சுகாவிற்கு மிக சந்தோசமாக இருந்தது. தன்னை விடுவித்ததற்காக டார்டரிடம் நன்றி சொன்னபோது – ‘இன்றிலிருந்து தாமதமாக எழ மாட்டேன்’ என்றும் சொன்னான்.

இந்த அறையின் விதி மிக சுலபம்; முடித்தவுடன் சென்றுவிடலாம். வேலை கொடுத்தவுடன் சுகாவிற்கு தன் மூட்டு வலி போனதுபோல இருந்தது.தன் கையுறையைக் கூட தன் தலையணைக்கு அடியிலிருந்து எடுக்க மறந்ததால், வாளியைத் வெறும்கைகளில் தூக்கிக்கொண்டு கிணறை நோக்கி ஓடினான்.

பல குழுத்தலைவர்கள் PPD அறைக்குச் செல்லுமுன் வெப்பநிலைமானி அருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் சிறுவனான , சோவியத் யூனியனின் பழைய நட்சத்திரம் பிரகாசத்துடன் அந்தக் கருவியைத் துடைத்துக்கொண்டிருந்தான்.

சிலர் கீழிருந்து அலோசனையைக் கத்திக்கொண்டிருந்தனர்.

‘அதன் மேல் மூச்சைவிடாதே! வெப்பத்தை அதிகப்படுத்திவிடும்’

‘இன்னும் அதிகமாக்குமா? ஒருக்காலும் நடக்காது.என் மூச்சுக் காற்றினால் எதுவும் செய்ய இயலாது.’

104ஆம் குழுவைச் சேர்ந்த டையூரின் – சுகாவின் குழுத் தலைவன் அங்கில்லை.வாளியை கீழே வைத்து, கைகளை சட்டைக்குள் விட்டுக்கொண்டு சுகாவ் ஆர்வத்தோடு வேடிக்கை பார்க்கத்தொடங்கினான்.

அந்தக் கம்பத்தின் மேலே இருந்தவன் தன் கரகரப்பான குரலில்:

‘இருபத்து ஏழரை. அதைவிட ஒன்றுகூட அதிகமில்லை.’

மேலும் ஒருமுறை சரியாகப் பார்த்துவிட்டு கீழிறங்கினான்.

‘ஹா, இது ஒரு ஏமாற்றுவேலை.எப்போதும் இது பொய்தான் சொல்லும்.’ . கூட்டத்தில் யாரோ சத்தமாக: ‘உண்மையான வெப்பத்தைச் சொல்லும் கருவியை அங்கே யாராவது தொங்கவிடுவார்கள் என நினைத்தீர்களா?’

குழுத்தலைவர்கள் பிரிந்து சென்றனர். சுகாவ் கிணறை நோக்கி ஓட ஆரம்பித்தான். உறை பனி அவன் காதுகளை நறுக்கத் தொடங்கியது. அவன் எவ்வளவு கீழிறக்கியும் முடியவில்லை.

கிணறின் மேல் பனி படர்ந்திருந்ததால் வாளியை உள்ளே விட மிகவும் கடினப்பட்டான்.கயிறோ கம்பிபோல விரைப்பாக நின்றுகொண்டிருந்தது.


girigopalan@gmail.com

Series Navigation

author

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

Similar Posts