இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – முதல் அத்தியாயம்

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்



எப்போதும் போல காலை ஐந்து மணிக்கு பணியாளர் விடுதியருகே தொங்கிக்கொண்டிருந்த நீளமான இரும்பு மணியில் சுத்தியால் தட்டி சத்தம் போடப்பட்டது.இரண்டு விரல் அடர்த்தியுள்ள காலைப்பனி நேரத்தில்,அந்த சத்தம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே மெல்லியதாக விட்டுவிட்டு முடிந்துக் கொண்டிருந்தது.வெளியே குளிராகயிருந்ததால்,அந்த முகாமின் காவலாளிக்கு அந்த மணியை தொடந்து அடிப்பதில் விருப்பமில்லை.

இரும்பு இடியோசை நிறுத்தப்பட்டாலும், காலைக் கடனை முடிக்க வாளியை தேடி வந்த இவான் டெனிசோவிச் சுகோவ்விற்கு வெளியே தென்பட்ட காட்சி நடு இரவைப்போலவே இருந்தது. முகாமிற்கு வெளியேயிருந்து இரண்டு, உள்ளிருந்து ஒன்று- ஆக மூன்று மஞ்சள் விளக்குகளால் ஜன்னலில் வெளிச்சம் பட்டாலும் மற்றபடி எல்லாமே கும்மிருட்டு.

மேலும் முகாம் குடிசைகளை திறக்க எவரும் வரவில்லை;முகாமின் காப்பாளர்கள் எவரும் மண்ணில் கிடந்த பீப்பாய்களை கம்புகளால் தூக்கிக் வெளியே சென்றுகொண்டிருக்கும் சத்தமும் கேட்கவில்லை.

சுகோவ் எப்போதுமே இந்த மணியோசை மீறி தூங்கியது கிடையாது.மணி அடித்தவுடன் எழுந்து,அடுத்த தொன்னூறு நிமிடங்களும் அவனுக்கே சொந்தமானது.அதிகாரிகளுக்கு அதில் பங்கு கிடையாது.அவர்களனைவரும் வேலைக்காக கூடும் வரை அவன் பல வேலைகள் செய்வான்.பழைய சட்டைக்கையிற்கு தடிமனான உறை தைத்துக்கொண்டிருப்பான்.அல்லது கிழிந்துபோன முட்டியளவு காலணியை அவன் குழுவிற்காக தன் கட்டில்வரை இழுத்துவருவான்.இதனால் பல காலணிகளுக்கு நடுவே தன் காலணியைத் தேட வெறுங்காலோடு நடக்க வேண்டாம். குளிர் அப்படி.

இல்லையென்றால் மற்ற குடிசைகளுக்குச் சென்று தன் சேவைகளை செய்வான் – தரையைப் பெருக்குவது, ஏதாவது கொண்டுவருவது,சாப்பாட்டு அறை மேஜையிலிருந்து கிண்ணத்தை எடுத்து கழுவும் இடத்திற்கு கொண்டுசெல்வது. இந்த அறைகளில் கண்டிப்பாக ஏதாவது சாப்பாடு கிடைக்கும்; இந்த விளையாட்டுகளுக்காக பலபேர் இல்லை, அதற்கு மேலும் ஆட்கள் காத்துக் கிடப்பார்கள். கிண்ணத்தில் ஏதாவது மீதியிருந்தால் அதை நக்காமல் இருக்க வயிறு விடாது. ஆனாலும் சுகோவிற்கு தன் முதல் குழுத் தலைவன், 1943க்குளாகவே பனிரெண்டு வருடம் சிறையில் கழித்த பழுத்த சிறைவாசி குசியோமின் – புதுவரவுகள் நெருப்பின் முன் சூடு காய்ந்துகொடிருந்தபோது- கூறிய வார்த்தைகளை என்றுமே மறக்க முடியாது.

‘இளைஞர்களே நாம் டைகாவின் சட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இங்கும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.முகாமிலேயே வாழ்க்கையை முடித்துகொள்பவர்கள் யார் தெரியுமா? மற்றவர்களின் மீதத்தை நக்குபவர்கள், மருத்துவரிடம் தஞ்சம் கொள்பவர்கள் மற்றும் அடுத்தவன் தூங்கும் பாயில் மலஜலம் கழிப்பவன்’.

அவன் சொன்னது தவறு.அப்படி செயல்படுபவர்களே முகாமில் நல்லபடியாகக் கழிக்க முடியும்.

மற்றவர்களின் ரத்தத்தில் தங்கள் உயிரை காப்பாற்றும் கனவான்கள்.

மணியோசை கேட்டவுடன் சுகோவ் எப்பாதும் எழுந்துவிடுவான்.ஆனால் இன்று எழவில்லை.உடம்பு முழுவதும் வலியுடன் அதற்கு முதல் நாள் தான் ஜுரத்தை உணர்ந்தான்.இரவு முழுவதும் கொஞ்சமும் கதகதப்பு இல்லாமல் இருந்தது.அந்த இரவு முழுவதும் சில நேரம் உடம்பு சரியாவது போலவும்,பல நேரங்களில் ஜுரம் அடிப்பது போலவும் உணர்ந்தான்.விடியால் வரக்கூடாது என ஏங்கித் தவித்தே தூங்கிப்போனான்.

ஆனாலும் வழக்கம்போல விடிந்துவிட்டது.

ஜன்னலில் இருந்த பனிக் கட்டிகளை பார்த்ததும்,தனக்கு இரவு முழுவதும் குளிர்ந்ததற்கான காரணம் புரிந்தது.அந்தக் குடிசை சுவர் முழுவதும் வெள்ளை நிறவலைப் போல உறைபனி படர்ந்திருந்தது!

அவன் படுத்துக் கொண்டேயிருந்தான். அவன் தலையை போர்வை மற்றும் உடுப்பால் போர்த்திக்கொண்டு,இரண்டு கால்களையும் ஒரே காலுறைக்குள் திணித்து கட்டிலின் மேல்தளத்தில் படுத்துக் கொண்டிருந்தான். அந்த முகாம் குடிசைக்குள் நடக்கும் எதையும் பார்க்க முடியாவிட்டாலும்,அவன் காதுகள் தன் குழு இருக்கும் மூலைப் பக்கம் திரும்பியிருந்தது.வெளியே இருக்கும் பாதைவழியே காப்பாளர்கள் கனமான பீப்பாய்களில் மண்ணை அள்ளிப் கொண்டுபோகும் சத்தம் கேட்கிறது.மிக இலகுவாப காரியம், புதியவர் சுலபமாக செய்யக் கூடியது என நினைக்கவேண்டாம்;அதை சிந்தாமல் தூக்கிச் சென்று பாருங்கள் தெரியும். துணிகளை காயப்போடும் அறையிலிருந்து காலணிகளை காய வைக்கும் ஓசை கேட்டது. இப்போது அவன் குழுவும் அதையே செய்தனர் (காலணிகளை காயவைக்க அவன் குழுவின் முறையும் கூட).குழுத் தலைவன் டயூரின் மற்றும் துணைத் தலைவர் பாவ்லோ தங்கள் நீண்ட காலணிகளை உடுத்திக் கொண்டனர்.

இருவரும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

இப்போது பாவ்லோ ரொட்டி கடைக்கும் , டியூரின் பணியாளர் விடுதியிலிருக்கும் PPD(Production Planning Department)க்கும் சென்றுவிடுவார்கள்.

Series Navigation

author

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

Similar Posts