தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
“எந்த விதத்திலும் வெள்ளை இனத்துக்கும் கறுப்பு இனத்துக்கும் இடையே சமூக அரசியல் சமத்துவம் கொண்டு வருவதை நான் ஆதரிக்க வில்லை. கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்குவது, ஜூரராய் நியமிப்பது, உயர்ந்த பதவி அளிப்பது, வெள்ளையரைக் கலப்பு மணம் புரிவது ஆகியவற்றையும் நான் ஆதரிக்க வில்லை. இந்த இரண்டு இனங்களும் சமூக அரசியல் சமத்துவமோடு ஒருமைப்பாடுடன் வாழ முடியாதபடித் தடுக்கும் வேறுபாடுகள் பல உள்ளன. அப்படி அவர்கள் சேர்ந்திருக்க இயலாத நிலையில் வாழ நேர்ந்தால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் அமைப்பாட்டில்தான் வசிக்க முடியும் என்பது என் எண்ணம். வெள்ளை இனத்துக்குத்தான் உயர்ந்த நிலை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் மற்றவர் கருத்துக்கு நானும் ஆதரவு அளிக்கிறேன். ஆனால் வெள்ளைக்காரனுக்கு உயர்ந்த நிலை அளிக்கப்படுவதால், நீக்ரோக்களின் உரிமைகள் அனைத்தையும் மறுக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.”
ஆப்ரஹாம் லிங்கன் (Fourth Debate with Stephen A Douglas at Charleston, Illinois) PP 145-146 (September 18, 1858)
Fig. 1
Coffin of the Unknown Soldier
முன்னுரை:
ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று.
வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.
Fig. 2
Civil War Cannons & Soldiers
ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.
1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.
1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !
அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள மகிழ்ச்சிகரமான அந்த வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !
*************************
Fig. 3
Civil War Picture -9
ஆப்ரஹாம் லிங்கன்
(வரலாற்று நாடகம்)
(பத்து மாதங்களுக்குப் பிறகு)
காட்சி -3 பாகம் -3
பங்கெடுப்போர் :
ஆப்ரஹாம் லிங்கன், மேடம் லிங்கன், பணிப்பெண் சூஸன், மற்றும் இரண்டு விருந்தினர்.
இடம் : வாஷிங்டன் D.C. ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் ஒரு வரவேற்பு அறை.
(இதுவரை நடந்தது)
ரிப்பபிளிகன் குழுத் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்க ஆப்ரஹாம் லிங்கன் ஒப்புக் கொள்கிறார். லிங்கன் தேர்தலில் நின்று முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்கிறார்.
இப்போதைய காட்சி: லிங்கனின் ரிப்பபிளிக்கன் கட்சி அரசாங்கப் பொதுச் செயலாளர் (Secratary of State) வில்லியம் ஸீவேர்டு தன் அறையில் அமெரிக்கத் தென்பகுதிக் கூட்டு மாநிலங்களின் கமிஷனர் (Commissioners of Southern Confederate States) ஜான்ஸன் வொயிட், காலெப் ஜென்னிங்ஸ் ஆகியோருடன் அமர்ந்து அடிமைத்தன ஓழிப்பைப் பற்றியும் வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றியும் பேசிக் கொண்டிடுருக்கிறார். திடீரென்று லிங்கன் ஸீவேர்டு அறைக்குள் நுழைகிறார். தென்னகத்தின் பிடிவாதத்தை வெளியிடும் வொயிட், ஜென்னிங்ஸ் உரையாடல்கள் லிங்கனுக்கு வெறுப்பூட்டுகின்றன. வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றி இருவருக்குள்ளும் தர்க்கம் நடக்கிறது. அப்போது சம்டர் கோட்டை முற்றுகை செய்யும் மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய படைத் தூதுவன் அதிர்ச்சித் தகவலைக் கொண்டு வருகிறான். பிறகு நிதிப் பொறுப்புச் செயலாளர் ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase) அஞ்சல் துறை அதிபர் மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair) இருவரும் நுழைகிறார். மற்றும் அரசாங்க உறுப்பினர் சிமான் காமரான் (Simon Cameron), காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர் வருகிறார்கள். அவரோடு கலந்து போர் சம்மந்தமாக உரையாடி சம்டர் கோட்டை முற்றுகையைத் தொடர்வது என்று முடிவு செய்கிறார் லிங்கன். உள்நாட்டுப் போர் துவங்கி மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது.
Fig. 4
Civil War Picture -10
(இரண்டு ஆண்டுகள் கடந்து)
வெள்ளை மாளிகை விருந்தினர் வரவேற்பு அறையில் ஆப்ரஹாம் லிங்கன் சில விருந்தினருடன் போரைப் பற்றி ஆவேசமாய் உரையாடுகிறார். விருந்தினர் போன பிறகு வயதான ஒர் நீக்ரோ உள்ளே வருகிறார்.
ஆப்ரஹாம் லிங்கன்: நாமெல்லாம் பலவீன மனிதர் மிஸிஸ் பிளோ ! என் மீது மாதராகிய நீங்கள் ஓரளவு பரிவு காட்டினால் போதும்.
மிஸிஸ் பிளோ: பரிதாபப் படுகிறேன் நான் மிஸிஸ் ஆதர்லிக்கு ! மகன் போருக்கு போவதைத் தாயால் நிறுத்த முடிய வில்லை ! அதனால் உள்நாட்டுப் போரைப் பிரசிடெண்ட் நிறுத்த வேண்டும் என்று கண்ணீர் சிந்திவிட்டுப் போகிறாள் ! போரை நிறுத்தினால் தேசம் பிளவுபட்டுப் போகும் என்று கவலை யில்லை அந்த மாதுக்கு ! நீங்கள் நிமிர்ந்து நின்று ஒரே சிந்தனையில் போரை நடத்துவதற்கு மெச்சுகிறேன் உங்களை மிஸ்டர் பிரசிடெண்ட் ! உள்நாட்டுப் போர்தரும் தொல்லைகளை விட உங்களுக்குக் குடிமக்கள் தரும் எதிர்ப்புக் கலவரங்கள் பயங்கரமானவை. என் கணவர் சொல்கிறார்: தென்னாட்டாருக்குப் பின்னால் எந்தக் கருணையும் காட்டக் கூடாதென்று ! தென்னவர் மடியட்டும் ! அழியட்டும் ! போருக்குப் பின் அவரோடு நான் எந்தப் பேச்சும் உறவும் வைத்துக் கொள்ள மாட்டேன் !
Fig. 5
Lincolns Greeting the Generals
ஆப்ரஹாம் லிங்கன்: அப்படிப் பேசாதீர் மேடம் ! தென்னவர் சண்டை யிட்டாலும் நம்மவர்தான் ! எனக்குத் தென்னவர் மீது வெறுப்புக் கிடையாது ! போர் முடிந்த பிறகு தென்னவர் வடவர் என்னும் பிரிவினை நம்மை விட்டு மறைய வேண்டும். அனைவரும் அமெரிக்கராய் மீண்டும் நடத்தப்படுவார் ! இரு குடிமக்களும் என்னிரு கண்கள் ஆவார் மிஸிஸ் பிளோ !
மிஸிஸ் பிளோ: ஆனாலும் ஒரு கண் மறு கண்ணைக் குத்தலாமா ? அவரைப் பழி வாங்க வேண்டும் ! என் கணவர் காத்திருப்பார் ! நான் போய் வருகிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !
(மிஸிஸ் பிளோ கை குலுக்க கரத்தை நீட்டுகிறார். ஆனால் லிங்கன் கை நீட்டவில்லை )
ஆப்ரஹாம் லிங்கன்: (வருத்தமுடன்) போவதற்கு முன் என் அறிவுரையைக் கேளுங்கள் மிஸிஸ் பிளோ ! (வெளியே போகும் மிஸிஸ் பிளோ திரும்பிப் பார்த்து நிற்கிறாள்) பரிவுள்ள அந்த மாது மிஸிஸ் ஆதர்லி தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினாள். அவள் கருத்துக்கு நான் உடன்படா விட்டாலும், நான் அதை மதிக்கிறேன். அவள் கூறியது தவறுதான். ஆனால் அது பெருந்தன்மையான பண்பு. அதே சமயம் உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ! உங்களைப் போன்ற நபரால் நான் அவமானப் படுகிறேன். நீங்கள் யாரும் எந்தத் தியாகமும் செய்ய வில்லை. மற்றவர் தென்னவரைத் தாக்கி வெற்றி பெறும் போது, உங்களைப் போன்றோர் அவரை வீழ்த்தி அழிக்க முற்படுகிறீர் ! நானிந்தப் போரை ஏற்றுக் கொண்டது, வெந்த இதயதோடுதான் ! தினமும் நொந்து நொந்து நொறுங்குகிறது என் நெஞ்சம் ! நானிந்தப் போரை ஏற்றுக் கொண்டது மனித நேயத்தை முன்னிட்டுத்தான் ! மனித நேர்மைக்கு வழி வகுக்கத்தான் ! மனித நீதிக்கு தலை வணங்கித்தான் ! வையக நன்னெறிக்குத்தான் ! மானிட அன்பு மயத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தான் ! ஆனால் நீவீர் என்முன் வந்து தென்னவரைப் பழிவாங்கச் சொல்கிறீர் ! பகைக்கச் சொல்கிறீர் ! வெறுக்கச் சொல்கிறீர் ! ஒழிக்கச் சொல்கிறீர் ! இந்தக் கனிவான தென்னவரைப் பற்றித் தவறான முறையில் கருதி அவமதிக்கிறீர் ! உம்மைப் போன்றவர்தான் உண்மையாக நான் கடைப்பிடிக்கும் நல்ல காரணத்தை அவமதிக்கிறீர் ! நமது மேலான காரணத்தைக் கீழான நிலைக்கு இழுத்து விடுகிறீர் ! போய் வாருங்கள் மிஸிஸ் பிளோ !
Fig. 6
Slaves Driven South during the
Civil War
(மிஸிஸ் பிளோ சட்டென வெளியே போகிறார்)
ஆப்ரஹாம் லிங்கன்: (மணி அடிக்கிறார். பணிப்பெண் சூஸன் வருகிறாள்) சூஸன் ! மிஸிஸ் பிளோ இனி ஒருமுறை வந்தால் உள்ளே அனுமதிக்காதே ! வெளி அறையிலே உட்கார வை.
சூஸன்: அப்படியே செய்கிறேன் ஐயா. வேறு எதுவும் செய்ய வேண்டுமா ஐயா ?
(மிஸிஸ் லிங்கன் வந்து கொண்டே சூஸனை முறைத்துப் பார்க்கிறாள்)
சூஸன்: வேறு ஏதாகிலும் வேண்டுமா மிஸ்டர் பிரசிடெண்ட் ?
ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! மிஸ்டர் வில்லியம் கர்டிஸ் வாசலில் வந்தால் உள்ளே அழைத்து வா. நான் போய் என் கோட்டை மாற்றிக் கொண்டு வருகிறேன்.
சூஸன்: அப்படி செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட்.
(சூஸன் மேஜையில் இருக்கும் தேனீர் கிண்ணங்களைத் தட்டில் எடுத்து வைக்கிறாள். அவள் கதவோரம் போகும் போது எதிரே தலைமுடி நரைத்த ஒரு வயதான நீக்ரோ நிற்பதைக் கண்டு தடுமாறுகிறாள்)
நீக்ரோ: (மிக மெதுவாக அமைதியாக) உள்ளே நான் வருவது அனுமதிக்கப்படுமா ?
சூஸன்: (சற்று வெறுப்புடன்) நீ யாரென முதலில் சொல் ! வாசலில் நான் வந்து அழைப்பதற்குள் இத்தனை அவசரமா ? யார் நீ ?
Fig. 7
Civil Torture during the
Civil War
நீக்ரோ: என் பேர் கர்டிஸ் ! வில்லியம் கர்டிஸ் ! மிஸ்டர் லிங்கன் வரச் சொன்னார் ! வந்தேன் ! வாசலில் யாருமில்லை ! உள்ளே நுழைந்தேன் மிஸ்டர் லிங்கனைப் பார்க்க ! மிஸ்டர் லிங்கன் இங்கேதானே இருக்கார் ? இல்லை யென்றால் போய் விடுகிறேன் !
சூஸன்: (சமாளித்துக் கொண்டு) ஓ ! நீ தான் வில்லியம் கர்டிஸா ? உள்ளே வரலாம். மிஸ்டர் லிங்கன் வந்து விடுவார். உட்கார் இங்கே வரும்வரை !
நீக்ரோ: மிஸ்டர் லிங்கன் இங்குதான் வசிக்கிறாரா ? நீ அவருடைய வேலைக்காரியா ? மிஸ்டர் லிங்கனுக்கு வேலை செய்யக் கொடுத்து வைத்த சின்னப் பொண்ணு !
சூஸன்: ஆமாம் நான் மிஸ்டர் லிங்கனுக்கு வேலை செய்யும் பணிப்பெண்தான் !
நீக்ரோ: அடிமையாகத் தென்னகத்தில் வேலை செய்வது கொடுமை ! படு கொடுமை !
சூஸன்: இதோ பார் வில்லியம் ! என்னை அடிமைகளுக்குச் சமமாக எடை போட வேண்டாம் !
கர்டிஸ்: நீ என்னைப் போல் அடிமை இல்லையா ? வேலைக்காரி நீ ! ஆனால் விடுதலைப் பெண்ணு ! ஏழை வேலைக்காரி ! ஆனா விடுதலை உண்டு !
சூஸன்: இதோ பாரு ! எனக்குப் பரிதாபப் படாதே உன்னைப் போன்ற அடிமையாய் நினைத்து !
கர்டிஸ்: உனக்குப் பரிதாபப் படலே சின்னப் பொண்ணே ! நீ சாமர்த்தியக்காரி !
சூஸன்: அப்படி இல்லாவிட்டால் நான் வெள்ளை மாளிகையில் கால் வைக்க முடியுமா ?
கர்டிஸ்: எல்லாரும் உன்னைப் போல் விடுதலையோடு வேலை செய்ய முடியாது ! அதனாலேதான் நீ சாமர்த்தியக்காரி என்னு சொன்னேன்.
சூஸன்: நான் அடிமைப் பெண்ணு விடுதலைப் பெண்ணு என்றெல்லாம் சிந்திப்பது இல்லை !
Fig. 8
Sumter Fort Soldiers
Prayer
கர்டிஸ்: நான் அடிமை வேலையைப் பத்திதான் எப்போதும் வேதனைப் படுவேன்.
சூஸன்: இப்போ நீ அடிமையாக வாழ வில்லை அல்லவா ?
கர்டிஸ்: ஆமாம். ஆனால் ஒரு காலத்தில் அடிமையா பிறந்தேன். அடிமையா வளர்ந்தேன். சிறுவனாக இருந்த போது சவுக்கடிகள் பல வாங்கி யிருக்கேன். (சட்டையை எடுத்துத் தடத்தைக் காட்டுகிறான்) தப்பி ஓடியதுக்கு என் தகப்பன் தூக்கிலே தொங்கினார் ! தாய் இன்னும் அலபாமாவில் அடிமை வேலைக்காரியா இருக்கிறாள். நான் தப்பி ஓடி வந்திட்டேன் ! என்னை எங்க எஜமான் ஆள் வைத்து தேடிக் கொண்டிருப்பதாகத் தெரியுது ! தலை மறைவா திரியுறேன் !
சூஸன்: கேட்கவே பொறுக்கவில்லை எனக்கு ! பாவம் நீ உன் தகப்பன் தாய் ! இதோ மிஸ்டர் லிங்கன் வருகிறார். நீ அஞ்ச வேண்டியதில்லை ! அடிமைக் கெல்லாம் விடுதலை கிடைக்கப் போகுது !
(அப்போது ஆப்ரஹாம் லிங்கன் வருகிறார். வில்லியம் கர்டிஸ் எழுந்து தலை குனிந்து மரியாதை செய்கிறார். சூஸன் வேகமாகப் போகிறாள்.)
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play
Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)
1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html
2. Chambers Encyclopedia (1968 Edition)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
7. The Wordsworth Dictionary of Quotations (1997)
8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)
9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)
10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).
11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)
12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)
13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)
14. The American Civil War – A History By : Mark Saunders (1993)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 4, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 22
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
- என் காது செவிடான காரணம்
- மோந்தோ -3-2
- ஒரு நேசத்தின் மிச்சம்
- நாகேஷ் – ஒரு கலை அஞ்சலி
- உள் பயணம்
- அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
- சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை
- ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்
- தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.
- பகத்சிங் நூற்றாண்டு விழா பொங்கல் விழா
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3
- காந்தியின் மரணம்
- நாகேஷ்
- ஏதேதோ…
- திருப்புமுனை -1
- திருப்புமுனை – 2
- “மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”
- பரிமள விலாஸ்
- தட்சணை
- சிநேகிதனைத் தொலைத்தவன்
- மோந்தோ -3 – 1
- ஆறாம் விரலும் புகை மண்டலமும்
- இரயில் பயணங்களில்
- சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- சாத்தான்களின் உலகம்
- மெளனமாய் இருந்ததில்லை கடல்.
- பேச்சுத்துணை…
- எல்லைகள் இல்லா உலகம்