தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
“தனக்குள் எதிராகப் பிளவு பட்ட ஓர் அரசாங்க மன்றம் நிலைத்து நிற்காது. இந்த அரசாங்கம் பாதி விடுதலையிலும் பாதி அடிமைத்தனத்திலும் இயங்கிக் கொண்டு நிரந்தரமாக நிலைக்காது என்பது என் நம்பிக்கை ! நமது அமெரிக்க ஐக்கியம் முறிந்து போகும் என்று நான் எதிர்பார்க்க வில்லை ! நமது அரசவை மன்றம் வீழ்ச்சி அடைந்திடும் என்றும் நான் எதிர்பார்க்க வில்லை ! ஆனால் அது துண்டாவது தடுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒன்று எல்லா மாநிலங்களும் சேர்ந்து விடுதலையை ஏற்கும் அல்லது மாறாக (அடிமைத்தனம் நிலவும்) மாநிலங்களாய் எல்லாம் வேறுபடும் !
ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்பிரிங்•பீல்டு பேருரை, இல்லினாய்ஸ் ஜூன் 16, 1858)
“எனது பதவி ஏற்புரை ஆற்றிய மாதத்தின் ஆரம்பத்தில் நான் கூறினேன் : எனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதிக்க உரிமை அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமித்துக் கைக்கொள்வதற்கும், சுங்கவரி, வருமான வரி வசூலிக்கவும் பயன்படுத்தப்படும். நமது கோட்டைகளை முடிந்த அளவு எந்த முறையிலும் வலுப்படுத்த வேண்டும் என்று நான் உடனே ஜெனரல் ஸ்காட்டுக்கு ஆணை இட்டது மேலும் உங்கள் பூரண சம்மதத்தை அப்போது பெற்றது. அதற்கு முற்றிலும் விதிவிலக்காக நீங்கள் இப்போது என்னை வற்புறுத்துவது : சம்டர் கோட்டை முற்றுகையை விட்டு நாம் விலக வேண்டும் என்பது !”
ஆப்ரஹாம் லிங்கன் (ஏப்ரல் 1, 1861)
“யார் மீதும் தீய எண்ணமின்றி, எல்லோருக்கும் நியாய நெறியோடு, கடவுள் நமக்குப் புலப்படும்படி அளித்திருக்கும் நேர்மையைக் கடைப்பிடித்து நாம் மேற்கொண்ட பணியை முடிக்க முயற்சி செய்வோம். அப்போதுதான் தேசத்தின் காயங்களுக்கு நாம் கட்டுப்போட முடியும். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர் விதவைகளுக்கும், அனாதைக் குழந்தைக்கும் நாம் கவனமுடன் கண்காணிப்பு செய்வோம். நமக்குள்ளேயும் மற்றும் அனைத்து தேசங்களுக் குள்ளேயும் நியாயமான நிரந்தர அமைதியை நிலைநாட்ட அது ஏதுவாகும்.”
ஆப்ரஹாம் லிங்கன் (இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்பு உரை) (1865)
முன்னுரை:
ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று.
வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.
ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.
1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.
1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !
அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள மகிழ்ச்சிகரமான அந்த வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !
*************************
ஆப்ரஹாம் லிங்கன்
(வரலாற்று நாடகம்)
(பத்து மாதங்களுக்குப் பிறகு)
காட்சி -3 பாகம் -1
பங்கெடுப்போர் :
ஆப்ரஹாம் லிங்கன், மேடம் லிங்கன், பணிப்பெண் சூஸன், மற்றும் இரண்டு விருந்தினர்.
இடம் : வாஷிங்டன் D.C. ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் ஒரு வரவேற்பு அறை.
(இதுவரை நடந்தது)
ரிப்பபிளிகன் குழுத் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்க ஆப்ரஹாம் லிங்கன் ஒப்புக் கொள்கிறார். லிங்கன் தேர்தலில் நின்று முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்கிறார்.
இப்போதைய காட்சி: லிங்கனின் ரிப்பபிளிக்கன் கட்சி அரசாங்கப் பொதுச் செயலாளர் (Secratary of State) வில்லியம் ஸீவேர்டு தன் அறையில் அமெரிக்கத் தென்பகுதிக் கூட்டு மாநிலங்களின் கமிஷனர் (Commissioners of Southern Confederate States) ஜான்ஸன் வொயிட், காலெப் ஜென்னிங்ஸ் ஆகியோருடன் அமர்ந்து அடிமைத்தன ஓழிப்பைப் பற்றியும் வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றியும் பேசிக் கொண்டிடுருக்கிறார். திடீரென்று லிங்கன் ஸீவேர்டு அறைக்குள் நுழைகிறார். தென்னகத்தின் பிடிவாதத்தை வெளியிடும் வொயிட், ஜென்னிங்ஸ் உரையாடல்கள் லிங்கனுக்கு வெறுப்பூட்டுகின்றன. வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றி இருவருக்குள்ளும் தர்க்கம் நடக்கிறது. அப்போது சம்டர் கோட்டை முற்றுகை செய்யும் மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய படைத் தூதுவன் அதிர்ச்சித் தகவலைக் கொண்டு வருகிறான். பிறகு நிதிப் பொறுப்புச் செயலாளர் ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase) அஞ்சல் துறை அதிபர் மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair) இருவரும் நுழைகிறார். மற்றும் அரசாங்க உறுப்பினர் சிமான் காமரான் (Simon Cameron), காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர் வருகிறார்கள். அவரோடு கலந்து போர் சம்மந்தமாக உரையாடி சம்டர் கோட்டை முற்றுகையைத் தொடர்வது என்று முடிவு செய்கிறார் லிங்கன். திட்டப்படி உள்நாட்டுப் போர் ஆரம்பிக்கிறது.
(இரண்டு ஆண்டுகள் கடந்து)
வெள்ளை மாளிகை விருந்தினர் வரவேற்பு அறையில் மேடம் லிங்கன் சில விருந்தினர் வருகையை எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறார். மணி அடித்து பணிப்பெண் சூஸனை விளிக்கிறார். சூஸன் அறைக்குள் வருகிறாள்.
மேடம் லிங்கன்: சூஸன் ! பலருக்கு அழைப்பு அனுப்பி யிருக்கிறேன். வருபவர் யாராயினும் உள்ளே அழைத்து வா ! பிரசிடெண்ட் தேனீர் விருந்தில் கலந்து கொள்வாரா என்று கேள் !
சூஸன்: மிஸ்டர் லிங்கன் இங்கு வருவதாக இப்போதுதான் தகவல் அனுப்பி இருக்கிறார்.
மேடம் லிங்கன்: நல்லது தேனீர் விருந்துக்கு அவரே இங்கு வருகிறார்.
(சூஸன் போகிறாள்)
மேடம் லிங்கன்: சூஸன் ! இங்கே வா ! உன்னிடம் இதைச் சொல்ல வேண்டும்.
சூஸன்: (திரும்பிப் பார்த்து) இதோ வருகிறேன்.
மேடம் லிங்கன்: இன்னும் நீ “மிஸ்டர் லிங்கன்” என்றே சொல்லி வருகிறாய். உன் பழைய புத்தி போக வில்லையே ! “மிஸ்டர் பிரசிடெண்ட்” என்று நீ சொல்ல வேண்டும் தெரியுதா ?
சூஸன்: அப்படியே சொல்கிறேன் மேடம். பதினைந்து வருடமாக மிஸ்டர் லிங்கன் என்றே அழைத்த பழக்கத்தை மாற்ற முடிய வில்லை மேடம் !
மேடம் லிங்கன்: மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் மிஸ்டர் பிரசிடெண்ட் என்றுதான் அவரை அழைக்கிறார். நீயும் அதை வழக்கத்துக்குக் கொண்டு வா.
சூஸன்: இல்லை மேடம் ! பலர் அவரைக் கடைவீதிகளில் “பிதா ஆப்ரஹாம்” என்று விளிக்கிறார். அவரை விரும்பும் பலர் அதை விட இன்னும் கனிவுடன் அழைக்கிறார். இன்று கடை உரிமையாளர் மிஸ்டர் கோல்டுபென்னி என்னைப் பார்த்துக் கேட்டார், ” சூஸன் ! எப்படி வயது முதிர்ந்த ஆபி (Abe) நலமா ?
மேடம் லிங்கன்: அதை யெல்லாம் நீ ஆதரிக்கக் கூடாது ! மிஸ்டர் பிரசிடெண்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.
சூஸன்: சரி மேடம். நான் இதற்கு முன் எப்போதும் அவரை மிஸ்டர் லிங்கன் என்றுதான் அழைப்பேன்.
மேடம்: இல்லை சூஸன் ! அப்படித்தான் அழைக்கக் கூடாது என்றுனக்கு அறிவுரை கொடுத்தேன். அதற்குள் மறந்து விட்டாயே ! மிஸ்டர் பிரசிடெண்ட் என்றுதான் இனி நீ சொல்ல வேண்டும்.
சூஸன்: இந்த மண்டைக்குள் அது ஏறாது மேடம் ! அந்த வழக்கத்தைக் கற்றுக் கொள்ள முடியவில்லை மேடம் ! தவறிப் போய் எப்படியாவது வாயில் வந்து விடுகிறது.
மேடம் லிங்கன்: தனியாக இருக்கும் போது அதைச் சொல்லிச் சொல்லிப் பழகு, அடிக்கடி பயிற்சி செய் !
சூஸன்: அப்படியே பயிற்சி செய்கிறேன் மேடம்.
மேடம் லிங்கன்: சரி வருபவர் யாராயினும் உள்ளே அழைத்து வா !
சூஸன்: முன்னறையில் ஒரு மேடம் காத்திருக்கிறார்.
மேடம் லிங்கன்: அதை அல்லவா முதலில் எனக்குச் சொல்ல வேண்டும். சரி அவரை உள்ளே அழைத்து வா.
(சூஸன் வெளியே சென்று மிஸிஸ் கோலியாத் பிளோவை அழைத்து வருகிறாள்.)
கோலியாத் பிளோ (Goliath Blow) வணக்கம் மிஸிஸ் லிங்கன். பிரசிடெண்ட் எப்படி இருக்கிறார் போர் மும்முரத்தில் ?
மேடம் லிங்கன்: வந்தனம் மிஸிஸ் பிளோ, அமருங்கள். பிரசிடெண்ட் மிகவும் களைப்போடு இருக்கிறார். இரவில் தூக்கம் இல்லை ! சரியாக உண்பதில்லை ! சதா போரைப் பற்றித்தான் நினைவு ! தினமும் நமது மக்கள் இருபுறமும் சாவதை அவரால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை ! மன வேதனையில் வாடி எலும்புக் கூடாய் போய்விட்டார்.
மிஸிஸ் பிளோ: இந்தப் போர் பயங்கரமானது ! இன்னும் எத்தனை பேர் பலியாகப் போகிறாரோ ? ஆனாலும் பிரசிடெண்ட் போரிடுவதில் மட்டும் களைப்படைய வில்லை !
மேடம் லிங்கன்: வெற்றியோடு போர் முடியாதா என்றுதான் கவலை அவருக்கு ! ஆனால் போரை நடுவழியில் எப்படி நிறுத்துவது ? யூனியனில் பலர் அடிமை விடுதலைக்காக உயிரைப் பலிகொடுத்தது வீணாகப் போகாதா ?
மிஸிஸ் பிளோ: மிஸிஸ் லிங்கன் ! அவர் வேதனைப்பட விடக் கூடாது நீங்கள். தென்னக அரக்கரை (Monsters) மிதித்துக் காலால் நசுக்க வேண்டும் !
மேடம் லிங்கன்: கவலைப் பட வேண்டாம் ! பிரசிடெண்டுக்கு மன ஊக்கம் மிகுதி !
மிஸிஸ் பிளோ: நான் நேற்று என் கணவரிடம் சொன்னேன். இந்த தென்னவர் கதறிக் கதற நோக அடித்து நொருக்க வேண்டும் என்று ! வடக்கு சரியான பாடம் தென்னவருக்குக் கற்பிக்க வேண்டும் !
(சூஸன் வருகிறாள்)
சூஸன்: மேடம் ! மிஸிஸ் ஆர்தலி (Mrs. Otherly) வந்திருக்கிறார்.
மேடம் லிங்கன்: உள்ளே அழைத்துவா !
மிஸிஸ் பிளோ: யார் மிஸிஸ் ஆதர்லியா ? அந்த பயங்கர மாதா ? போரை நிறுத்த வேண்டும் என்று ஊரில் முரசடிப்பவள் ஆயிற்றே !
(மிஸிஸ் ஆதர்லியை அழைத்து வருகிறாள் சூஸன்)
மேடம் லிங்கன்: வந்தனம் மிஸிஸ் ஆதர்லி ! உட்காருங்கள். மிஸிஸ் பிளோவைத் தெரியுமல்லவா உங்களுக்கு ?
மிஸிஸ் ஆதர்லி: ஆமாம் தெரியும் ! வந்தனம் இருவருக்கும். (அமர்கிறாள்)
மிஸிஸ் பிளோ: மிஸிஸ் லிங்கன் ! இன்னும் மூன்று வருடத்துக்குப் போர் நீடிக்கும் என்று என் கணவர் சொல்கிறார் !
மிஸிஸ் ஆதர்லி: மூன்று வருடமா ? அப்படியானால் அது பயங்கர யுத்தமாச்சே !
மிஸிஸ் பிளோ: நாமெல்லாம் நமது தேவைகளைத் தியாகம் செய்ய வேண்டும், இப்போது !
மிஸிஸ் ஆதர்லி: மாந்தரெல்லாம் உயிரைத் தியாகம் செய்கிறாரே அதற்கு மேல் எதைத் தியாகம் செய்ய வேண்டும் ?
மிஸிஸ் பிளோ: என் இரத்தம் கொதிக்கிறது உயிரிழப்போரை நினைத்தால் !
மிஸிஸ் ஆதர்லி: மரண மடைந்தவரில் பலரை நான் அறிவேன் ! அவரெல்லாம் கருணை மிக்கவர் ! நல்லவர் ! உயிரைக் கொடுத்தோர் கவலை ஒரு வகையில் தீர்ந்தது ! கணவனைப் பலிகொடுத்தோர் இழப்புதான் இப்போது தீராதது பெரிது ! மகனைப் பலி கொடுத்தோர் இழப்போ தாங்க முடியாதது ! மகனையும், பதியையும் பறி கொடுத்த மாதரின் இரட்டை இழப்புக்கு ஈடு இணை கிடையாது !
மிஸிஸ் பிளோ: நமக்குள்ளே சிலர் தேசத் துரோகிகளாக உளவி வருகிறார். நாடு பிளவு படக் கூடாதென்று நாம் போரிட்டு நமது மக்களைப் பலி கொடுக்கிறோம். நாடு துண்டாக வேண்டும் என்று தென்னவர் நம்மைத் தீவிரமாக எதிர்த்து அவரது மக்களைப் பலி கொடுத்து வருகிறார். யார் பக்கம் நியாயம் உள்ளது ? ஐயமின்றி நம் பக்கம்தான் என்பது என் கருத்து. . . . சரி இன்று நாங்கள் வந்ததே முதலில் நமது பிரசிடெண்டைக் கண்டு பேசத்தான் ! இப்போது இங்கு வருகிறாரா ?
மேடம் லிங்கன்: ஆமாம் சில நிமிடங்களில் பிரசிடெண்ட் வந்து விடுவார். சற்று பொறுப்பீரா ?
மிஸிஸ் பிளோ: போரால் இழப்பு : உயிர்கள் மட்டுமல்ல ! பொருள்களின் விலைகள் ஏறிக் கொண்டே போகின்றன. நானும் என் கணவரும் செலவுகளை எல்லாம் குறைத்து விட்டோம். உணவு, உடை, பொழுது போக்கு எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டோம்.
(அப்போது ஆப்ரஹாம் லிங்கன் வருகிறார். மாதர் இருவரும் எழுந்து நின்று ஆப்ரஹாமின் கையைக் குலுக்கி வந்தனம் தெரிவிக்கிறார்)
ஆப்ரஹாம் லிங்கன்: வந்தனம் இருவருக்கும். (எல்லாரும் உட்காருகிறார். சூஸன் அனைவருக்கும் சிற்றுண்டி தேனீர் வழங்குகிறாள்)
மிஸிஸ் பிளோ: அதிர்ச்சிச் செய்தி ஏதேனும் உண்டா மிஸ்டர் பிரசிடெண்ட் ?
ஆப்ரஹாம் லிங்கன்: மேடம் ! ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது என் காதில் விழும் முதல் அறிவிப்பு : நூறு, இருநூறு அல்லது ஆயிர எண்ணிக்கையில் என் தேச மாந்தர் கொல்லப்படுவது எல்லாம் என் நெஞ்சைத் தாக்கும் அதிர்ச்சிச் செய்திதான் !
மிஸிஸ் பிளோ: அது உண்மைதான். அது சரி ! நல்ல செய்தி ஏதாயினும் உள்ளதா ?
ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! வெற்றிச் செய்தி இது ! தென்னவர் இறப்பு : 2700 பேர் ! நம்மவர் இழப்பு : 800 பேர் !
மிஸிஸ் பிளோ: மகிழத் தக்க செய்திதான் !
ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியா ? நமது பக்க மரணம் : 800 அல்ல ! 3500 பேர்கள் !
மிஸிஸ் பிளோ: அப்படிச் சொல்லாதீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ! கொல்லப்பட்டவர் மெய்யாக 800 பேர்தானே ? சொல்லுங்கள் எத்தனை என்று !
ஆப்ரஹாம் லிங்கன்: மேடம் ! உங்கள் இதயத்தை விட உலகம் பெரியது !
மிஸிஸ் பிளோ: (முறுவலுடன்) மிஸிஸ் லிங்கன் ! பிரசிடெண்ட் நம்முடன் நகைப்பாகப் பேசுகிறார் !
(சூஸன் வந்து இரண்டாவது தடவை அனைவருக்கும் கிண்ணத்தில் தேனீர் ஊற்றுகிறாள்)
மிஸிஸ் ஆதர்லி: மிஸ்டர் பிரசிடெண்ட் ! உங்க தேசப் பொறுப்பு எல்லோரை விட அதிகமானது ! உங்கள் வேலை மிகக் கடுமையானது ! உங்களை நான் குறைகூற முடியாது ! நானொரு கேள்வி கேட்கலாமா ?
ஆப்ரஹாம் லிங்கன்: (கூர்ந்து கவனிப்புடன்) கேளுங்கள் மேடம் !
மிஸிஸ் ஆதர்லி: வேதனைப் படும் இந்த தேசத்தின் நலத்தைக் கருதி நானிதைக் கேட்கிறேன் ! இந்தக் கொடூர உள்நாட்டுப் போரை உங்களால் நிறுத்த முடியாதா ?
ஆப்ரஹாம் லிங்கன்: அந்தக் கேள்வி இந்த மண்டையில் ஒருபோதும் எழுந்ததில்லை மேடம் !
(மிஸிஸ் லிங்கன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார்.)
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play
Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)
1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html
2. Chambers Encyclopedia (1968 Edition)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
7. The Wordsworth Dictionary of Quotations (1997)
8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)
9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)
10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).
11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)
12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)
13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)
14. The American Civil War – A History By : Mark Saunders (1993)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 21, 2009)]
- 2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தைக் கருமைச் சக்தி பிழைத்திடச் செய்யுமா அல்லது பிளந்திடச் செய்யுமா ?
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -3 பாகம் -1
- எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
- அகப்பாடல்களில் புறச் செய்திகள்
- ‘வண்ணநிலவனி’ன் கடல்புரத்தில் ஒரு பார்வை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்:39. ராஜாஜி.
- கதிரையின் நுனியில் எறும்பு
- வேத வனம் விருட்சம் 20
- புத்தகம்
- ஆசை
- கேள்விகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -20 << காம வெறி ! >>
- தாகூரின் கீதங்கள் – 65 ஒளிக்கதிராய்ப் பரவுகிறாய் !
- சென்ரியு கவிதைகள்
- பொய்
- மரணச் சமாதியின் குருவி
- உயிர் ஊறும் ஒற்றைச் சொல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திநாலு
- ஈரம்
- அந்த இரவை போல்