இரா.முருகன்
எரிந்து கருகும் வாடையோடு ஒரு மச்சு வீடு, அங்கேயும் ஊஞ்சல் அசைகிறது. போகம் போகம் என்று மனசு கொள்ளாத சந்தோஷத்தோடு ஊஞ்சலில் வேதையன் ஒரு பெண்ணாகக் கிடக்கிறான். அவளை ஆலிங்கனம் செய்து கலக்கிற திடபுருஷனும் வேதையனே தான். ஊஞ்சலுக்கு மேல் தோரணம் கட்டின மாதிரி வௌவால் தூங்குகிறது. ஒண்ணு ரெண்டு இல்லை. அழுகின வாழை மொக்குகளை வரிசையாகக் கட்டி தொங்கவிட்டது போல். அதெல்லாம் ஒரே நெரத்தில் முழித்து எலி மாதிரி தலையை நீட்டி கீழே நடக்கிற விநோதத்தை எல்லாம் கண்கொட்டாமல் பார்க்கின்றன. வக்கிரமான வௌவால்கள் அவை. திறந்த வாயில் வாச்சி வாச்சியாக பல் வேதையனை பயமுறுத்துகிறது. பெண்ணாக அவன் ஊஞ்சலில் இருந்து சாடி எழுந்திருந்து அந்தாண்டை போக பிரயத்தனம் செய்கிறான். ஆணாக அவனே பிடித்திழுத்து மாரில் சார்த்திக் கொள்கிறான். கூம்பிய யோனிகளாக வௌவால்கள் வெறிக்கூச்சல் போடுகின்றன. வேதையனின் வலது கையில் ஆறாவது விரல் உயர்ந்து விரைத்த குறியாக மேலே கிளம்பி வருகிறது. உடம்பெல்லாம் நடுக்கம். எந்த உடம்பு அது? ஆவி ரூபமான பெண் உடம்பா, மெலிந்து கருத்து உயர்ந்த ஆண் உடலா? ரெண்டும் தானா?
வேதையன் கண் திறந்து பார்த்தான். விடுதியில் அவன் படுத்திருந்த ஊஞ்சல் மெல்ல பக்கவாட்டில் அப்படியும் இப்படியுமாக அசைந்து கொண்டிருந்தது. பகலில் தூங்கியிருக்கிறான். இப்படி ஒரு போதும் அசந்து தூங்கியதே இல்லை அவன்.
அண்ணா, கிளம்பலாமா? மங்கலாதேவி க்ஷேத்ரத்துக்கு இப்பப் புறப்பட்டா ராச்சாப்பாட்டு நேரத்துக்கு திரும்பிடலாம். விடிஞ்சா கொல்லூர் தான் அப்புறம்.
துளுவன் ஊஞ்சல் தலைமாட்டில் நின்றபடி மெல்லச் சொன்னான். இடுப்பில் இருந்து நழுவி தரையில் புரண்டு கிடந்த உடுதுணியை அவன் குனிந்து எடுத்து வேதையனிடம் கொடுக்கும்போது வேதையன் தன் ஆறாம் விரலை ஜாக்கிரதையாக மறைத்துக் கொண்டான். பீஜத்தை வெளியே எடுத்துக் காட்டுகிறது போல் அந்த விரல் அசங்கியமானதாக அவனுக்குப் பட்டது.
கொஞ்சம் முன்னாடியே எழுப்பியிருக்கக் கூடாதா நீர்?
வேதையன் துளுவனை விசாரிக்கத் திரும்பியபோது அவனைக் காணோம். உள்ளே இருந்து ஒரு பரிசாரகன் தட்டு நிறைய ஏதோ பரத்தி எடுத்துக்கொண்டு வேதையன் பக்கம் வந்து நின்றான். வெல்லமும் தேங்காயுமாகக் கலந்து நெய்யைக் உருக்கிக் காய்ச்சி மேலே கொட்டிப் பிடித்த லட்டு உருண்டைகள் அதெல்லாம்.
இந்தப் பிரதேசத்தில் இனிப்பு சாப்பிட கால நேர வர்த்தமானம் ஏதும் இல்லையோ.
பரிசாரகனை விசாரித்தபடி தாம்பாளத்தைக் கையில் வாங்கிக் கொண்டான் வேதையன். அவன் பதில் சொல்லாதே சேவித்துவிட்டுத் திரும்பிப் போனான்.
மதியம் அச்சு வெல்லம் கரைத்துப் போட்ட புளிக் குழம்பும், அசட்டுத் தித்திப்பாக அஸ்கா சர்க்கரை கலந்த கத்தரிக்காய் துவட்டலும் போதும் போதும் என்று நிறுத்தச் சொல்லிக் கையைக் காட்டினாலும் லட்சியமே செய்யாது பரிமாறியவன் இந்த உக்கிராணக்காரன். சோறு தவளைக்கண்ணன் அரிசி கொண்டு உண்டாக்கியதில்லை. அதன் சிவப்பு தென்படாமல் வெளுத்து இருந்த சாதம்.
இதையெல்லாம் உண்ட பிறகு கொஞ்சம் அங்கே இங்கே நடந்துவிட்டு வந்திருந்தால் அசௌகரியம் இல்லாமல் போயிருக்கும். ஊஞ்சலில் கண் அயர்ந்தது ஏதேதோ துர்சொப்பனங்களை கிளப்பிவிட்டிருக்கிறது. இனித்து வழிகிற சாப்பாடு வயிற்றிலும் மனதிலும் என்னவெல்லாம் செய்யுமோ? வெல்லத்துக்கு இப்படியும் ஒரு சக்தி உண்டா என்ன? ஆணைப் பெண்ணாக நினைக்க வைக்கிறது அதுவா? இல்லை, புளிக்குழம்பில் கள்ளு கலந்திருந்ததா? பட்டன்மார் கள்ளு எல்லாம் குடிக்கிறதில்லைதான். வெளிப்படையாகவாவது. தேச ஆச்சாரத்தில் சாப்பாட்டில் அதைச் சேர்த்துக் கொள்லலாம் என்று இருக்குமோ?
ஓய் மாத்வரே, நான் தேவி க்ஷேத்திரத்துக்குப் போய் என்ன பண்ணப் போகிறேன்? உள்ளே கேரித் தொழக்கூட எனக்கு வாய்க்காது. அப்படியே அங்கே புரோகிதன் அனுமதி கொடுத்தாலும் உள்ளூர் பாதிரி கண்ணில் பட்டால் நரகம் நரகம் என்று பிறுபிறுத்து உசிரை எடுத்து விடுவார். அதுவும் இங்கிலீஷில் மூச்சு விடுகிற வெள்ளைக்கார கத்தனார்கள் உடுப்பை மாட்டிக் கொண்டு திரியும் பிரதேசம் இது. துரைத்தனத்து உத்தியோகத்தில் இருக்கப்பட்ட எனக்கு சரிப்படாதே ஒண்ணும். வயிறு வேறு ஏதோ உபாதைப்படுத்துகிறது. நான் சும்மா இங்கே விச்ராந்தியாகக் கிடந்துவிட்டு விடிகாலையில் வண்டி ஏறி கொல்லூருக்குக் கிளம்பிக் கொள்கிறேன். நீர் போகிறதானால் போம். உமக்கு உதவி செய்த வகையில் எவ்வளவு தரணும் என்று மட்டும் சொல்லிப் போடும். குடிக்க இத்திரி வென்னீர் கிடைக்குமா கேளும்.
வேதையன் மடியில் சஞ்சியைத் தடவிக் கொண்டே பெரிய ஏப்பத்தோடு காலித் தட்டை ஊஞ்சலில் விழுந்து விடாமல் வைத்தான்.
உங்களை விட்டுட்டு எங்கேயும் போகப் போறதில்லே அண்ணா. சித்தே இருங்கோ.
துளுவன் உள்ளே இருந்து பித்தளையில் செய்த முந்திரிங்காய் கூஜா ஒன்றை எடுத்து வந்தான். அதை உயர்த்திப் பிடித்து பிரியைச் சுற்றி மூடியைக் கழற்றினான். கொதிக்கக் கொதிக்க உள்ளே ஏதோ பானம்.
வெள்ளைக்காரன் காப்பியைப் பார்த்து நம்ம ஜனங்கள் உண்டாக்கினது. சுக்கு தட்டிப் போட்டு ஏலமும் கலந்த காப்பி. பால் எல்லாம் சேர்க்கலை. வயிற்றில் வேதனை இருந்தால் சமனப்படுத்தத இதுமாதிரி இன்னொண்ணு கிடையாது.
ஒரு நசுங்கிய லோட்டா முழுக்க நிறைத்து துளுவன் வேதையனிடம் நீட்டினான்.
குடிச்சுட்டு சுறுசுறுப்பா முகத்தை அலம்பிண்டு கிளம்புங்கோ அண்ணா. மங்கலாபுரம் க்ஷேத்திரத்துக்கு உள்ளே போக வேண்டாம். தென்மேற்காக சும்மா ஒரு மைல்கல் தூரம் நல்ல காற்றாக சுவாசித்துக் கொண்டு நடந்துவிட்டு வரலாம். பாதிரியும் புரோகிதனும் எல்லாம் பார்த்தாலும் குறைச்சல் ஏதும் ஏற்படப் போவதில்லை. பாதிரி உம்மை பிராமணன் என்று நினனத்துக் கொள்வான். புரோகிதனும் நாலு காசுக்கு ஒரு பூணூலை உம் தலையில் கட்டப் பார்ப்பான். துரைத்தனத்துத் துட்டு ஜெயவிஜயீபவ சொல்லி அட்சதை போட வைக்குமே.
வேதையன் மங்கலாதேவி கோவில் பிரதேசத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது கொஞ்ச நஞ்சம் பாக்கி இருந்த மலையாள வாடை காற்றில் இருந்து முழுக்க மறைந்து விட்டிருந்தது தெரிய வந்தது. பக்கத்தில் தான் எங்கேயோ கடல் இருக்க வேண்டும். அந்த திசையிலிருந்து உப்புக் காற்று சீராக வீசி எங்கும் மீன் வாடையைப் பரத்திக் கொண்டிருந்தது.
பரிபூரணத்துக்குப் பிடிக்கும் அந்த வாடை. கிட்டாவய்யன் சகித்துக் கொள்ள மாட்டான் என்பதால் வீட்டில் அது நுழையவில்லை. வைக்கம் போகும்போதெல்லாம் பிறந்த வீட்டில் மூணு வேளை மாமிசமும் மீனும் நண்டும் இன்னும் என்னென்னமோ எல்லாம் வெகு விமர்சையாக சாப்பிட்டு இடுப்பைச் சுற்றி கொஞ்சம் மினுமினுவென்று சதை போட்டு வருவாள் பரிபூரணம். வேதையனுக்கு மீன் ஆகாவிட்டாலும் அந்தச் சதை ரொம்பப் பிடிக்கும்.
இந்தப் பிரதேசத்துக்கு போலூர்னு பெயர் சொல்வா. எல்லாம் சுல்தான் கட்டினது.
ஓய் மாத்வரே, துலுக்க சுல்தான் இங்கே எதுக்கு வந்து கோவில் கட்டினான்?
சுல்தான் கோவில் எல்லாம் கட்டலை. அது துவாபர யுகத்திலேயே வந்த ஒண்ணு. பித்து சுல்தான் வெள்ளைக்காரன் வரானான்னு பார்க்க கோட்டை தான் கட்டினான்.
காற்று இதமாக இருந்தது. நடக்க நடக்க அது முகத்தில் மோதி சுவாசம் முட்டி வேதையனை உற்சாகப்படுத்தியது. குழந்தை மாதிரி தறிகெட்டு ஓடவேண்டும். இப்பவே. இந்தக் காற்று கொஞ்சம் உதவி செய்தால் பறக்கக் கூடச் செய்யலாம்.
ஓய், அது திப்பு சுல்தான். வயித்துலே அவருக்கு அஜீரணம் இருந்தா பித்து சுல்தான். தெலுங்குலே அதான் அர்த்தம். துளுவிலேயும் அப்படித்தானே?
சென்னைப் பட்டணத்திலிருந்து வந்த தெலுங்கு தேச உபாத்தியாயர்கள் வேதையனோடு கூட அனந்தை கலாசாலையில் கற்பிக்கிறார்கள். அவர்கள் புண்ணியத்தில் நல்லதாக நாலும் நாற்றமடிக்க நாலுமாக தெலுங்கு வார்த்தைகள் வேதையனுக்கும் தெரியும்.
கோவில் வந்துவிட்டது போலிருக்கே.
வேதையன் வலப்புறம் நாலைந்து லாந்தர் விளக்குகள் ராத்திரியைப் பகலாக்கிக் கொண்டு எரிந்த பக்கமாகக் கையை நீட்டிச் சொன்னான்.
கோவில் இல்லே. மேளா லாவணி. கோவிலுக்கு இன்னும் நடக்கணும்.
அப்ப நீர் மேற்கொண்டு போய் தரிசனம் முடிச்சு வாரும். நான் லாவணி பார்க்கறேன் சித்த நேரம்.
துளுவன் கோவிலுக்குப் போய்விட்டு வர நாம் ஏன் காத்திருக்க வேணும் என்று வேதையனுக்குப் புரியவில்லை. அவனை விட்டுவிட்டு தனியாக கிழக்கோ மேற்கோ நடையை எட்டிப் போடவும் மனசு வரவில்லை.
லாவணிக் கொட்டகை முழுக்க மல்லிகைப்பூவும் அத்தருமாக வாடை வந்தது. புஷ்பம் வேணுமா என்று அவனிடம் பூக்கூடையோடு வந்து யார்யாரோ விசாரித்தார்கள். கையில் செண்டாகப் பிடித்தபடி அவனவன் ஏதோ படுத்து உறங்கப் போகிறதுபோல் கண்ணில் லகரி தெரிய கொட்டகைக்கு உள்ளே போய்க் கொண்டிருந்தான்.
காசு எவ்வளவு தரணும்?
அவன் கொட்டகை வாசலில் காசு வசூலித்து ஆட்களை உள்ளே விட்டவனிடம் கேட்டான்.
முன் வரிசையில் உட்கார்ந்தால் நாலணா. பின்னாலே என்றால் அரையணா போதும். முன் வரிசை பரம சௌகரியம். போறீரா?
என்ன மாதிரியான சௌகரியம் அதெல்லாம் என்று தெரியாமலேயே வேதையன் மடியில் கட்டிய தோல்பையில் இருந்து நாலணாவை எடுத்துக் கொடுத்தான்.
இடுப்பில் கச்சத்தை முறுக்கிக் கட்டி, காலில் சதங்கையோடு யௌவனமான பெண்கள் உள்ளே குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் தலையை இறுக்கப் பின்னி முடித்து பிச்சோடா வைத்து தழையத் தழைய மல்லிகைப்பூ சூடியிருந்தார்கள். சந்தியை இறுக்கி இடுப்புக்குக் கீழே எடுப்பாகக் காட்டுகிற மாதிரி காலோடு சேலையை இறுகச் சுற்றி தார்பாய்ச்சி உடுத்தி இருந்தார்கள். உடுக்கும் தாள வாத்தியமும் டமடம என்று முழங்க ஆரம்பிக்க, முன் வரிசையில் கிட்டாவய்யன் வயதுக் கிழவர்கள் ஆர்ப்பாட்டமாக கைதட்டினார்கள். லாவணி ஆட வந்த இன்னும் எட்டும் பத்தும் திகைந்து புஷ்பவதி ஆகாத பெண்குட்டிகளை இந்த வயசன்மார் மடியில் ஏற்றி உட்கார்த்திக் கொண்டு அசங்கியமாகப் பலதும் செய்து கொண்டிருந்தது வேதையன் கண்ணில் பட்டது.
நாலணா நாசமாகப் போகட்டும். அவன் பின் வரிசையிலேயே உட்கார்ந்தான். கொஞ்ச நேரம் சங்கீதமும் நாட்டியமும் பார்த்துவிட்டு நடையைக் கட்ட வேண்டியதுதான். நேரம் கூடி இருந்தால் வேறே ஏதெதோ இங்கே வைத்தே நடக்கலாம் என்று தோன்றியது. பெண்குழந்தையை இம்சிக்கிறவர்கள் நரகத்துக்கும் கீழே கிடந்து வாதனைப்படட்டும். கிருஷ்ண பகவானோ, கிறிஸ்து நாதரோ அவர்களை இன்னொரு ஜன்மம் நரகல் புழுவாகப் பிறக்க சாபம் தரட்டும்.
விட்டுவிட்டு நாலு தடவை கண்டாமணி முழக்கம். முன்னால் திரை உயர்ந்து ஜல்ஜல் என்று சத்தம். சின்னப் பெண்டுகள் குரூரமான கிழவர்களிடமிருந்து சுதந்திரப்பட்டு படுதாவுக்குப் பின்னால் ஓடினார்கள். அவர்கள் ஆடும் நேரம் இது.
இரண்டு கோஷ்டியாக அந்த நடனப் பெண்கள் பிரிந்து ஆடிக் கொண்டிருந்தது வேதையனுக்குப் புரிந்தது. இரண்டு வரிசையிலும் முன்னால் நிற்கிற ஸ்திரிகள் பரிபூர்ணம் வயசில் இருக்கப்பட்டவர்கள். கச்சுக்குள் இருக்கும் ஸ்தனபாரம் அற்றுப் போய் விழட்டும் என்று யாரோ ஆக்ஞை பிறப்பித்தமாதிரி எதுக்கோ ஆவேசத்தோடு அதுகளைக் குலுக்கி கீச்சென்று பாட வேறு ஆரம்பித்திருந்தார்கள்.
ஓரமாகப் போய் எட்டிப் பார்க்கிற மாதிரி ஒருத்தி அபிநயம் பிடித்தாள். அவள் பரங்கி சிப்பாயாம். வீடு வீடாக வாசல் கதவில் சாவி நுழைகிற துளையில் கண் வைத்து உள்ளே பெண்பிள்ளை இருக்கா என்று தேடுகிறானாம். சிரிப்பும் கொம்மாளமுமாக வந்த பாட்டு வேதையனுக்கு மேலோட்டமாக அர்த்தமாகியது.
எழவெடுத்த பாராக்காரா
எட்டி எட்டிப் பாக்காதே
குட்டி இல்லே வீட்டுக்குள்ளே
குடுகுடுத்த கிழவி இவ
தொட்டா விடமாட்டா
தீட்டு விட்டுப் போனாலும்.
கிட்டாவய்யன் பக்கத்தில் இருந்து யாரோ ஒருத்தன் எழுந்து முன்னால் ஓடினான். மேடையில் ஏறி குனிந்து பார்க்கிற அபிநயம் பிடித்தவளின் முலைக் குவட்டில் நாலணாவை வைத்து அழுத்தினான். அவள் அதைப் பிடுங்கி கீழே எறிந்துவிட்டு ஆவேசமாக முன்னாலும் பின்னாலும் நகர்ந்து ஆடத் தொடங்கினாள். கோ கோவென்று கொட்டகை முழுக்கக் கூச்சலும் சிரிப்புமாகச் சத்தம் எழுந்தது.
வேதையன் பக்கவாட்டில் பார்த்தான். தட்டி வைத்து அடைத்த படலில் அங்கங்கே ஓலை பிரித்து இடைவெளி ஊடாக வெளியில் வெளிச்சம் தெரிந்தது. கண்ணைக் கவிந்து கொண்டு ஒரு இடைவெளியில் அவன் பார்க்க, வெளியெ சட்டென்று விளக்கெல்லாம் அணைந்து அந்தகாரம் ஆனது.
இல்லை. ஒரே ஒரு வெளிச்சம் மட்டும் மெல்லிசாக தூரத்தில் தெரிந்தது. காற்றோடு சேர்ந்து அதுவும் முன்னேறிக்கொண்டிருந்தது. மேலும் கீழும் அசைகிற விளக்கு அது. வண்டியில் வைத்ததாக இருக்கலாம்.
வெளியிலே உம்ம தம்பி ஹெண்டத்தி உடுப்பை வழிச்சுக்கிட்டு குதிக்கறாளா என்ன? இப்படிப் பார்க்கறீரே.
பக்கத்தில் இருந்தவன் வேதையன் தோளில் தட்டிக் கேட்டான். அவன் குடித்திருந்தான்.
வேதையன் அவனை முறைத்துப் பார்த்தான். உன் பெண்டத்தியை. வேணாம். ஒழிஞ்சு போ பட்டீ.
வேதய்யா வேதய்யா. மேடையிலிருந்து பெண்கள் ஒரே சுருதியில் கூவினார்கள்.
வெளியே பார்க்க என்ன இருக்கு? இங்கே பாரு. பரிபூரணத்துக்கு இடுப்பு இதுமாதிரி மழமழன்னு இருக்குமா? வா, வந்து தடவிப் பார்த்துச் சொல்லு.
முன் வரிசை வயசன்மார் பின்னால் திரும்பி வேதையனைக் கையைக் காட்டி அழைத்தார்கள்.
அங்கேயே இருங்கோ அண்ணா, இதோ வந்துட்டேன்.
துளுவன் சிரித்தான். இவன் கோவிலுக்குப் போனவன் இல்லை. காலையில் ஊத்தைப் பல்லோடு எதிர்ப்பட்டு பெண் சிநேகிதம் வேணுமா ராத்திரிக்கு என்று கேட்டவன். வெளியே ஓடி, தட்டிக்கு நடுவே இடைவெளியை அவனுடைய சந்தி மறைக்க அழுக்கு வஸ்திரத்தைத் திரைத்துக் கொண்டு நின்றான்.
போடா புல்லே, உனக்கும் சமாதியாகிற நேரம் நெருங்கியாச்சு. விலகுடா.
வேதையன் இடைவெளி வழியாக கையை விட்டு அவனை ஓரமாகத் தள்ளினான். கை பனிக்கட்டி பட்டது போல் குளிர்ந்து விரைத்தது. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் முன்னால் இப்படித்தான் சம்பவிக்கும் என்றது மனது.
அந்த விளக்கு முன்னால் வந்தபோது வேதையன் ஒரு சக்கரத்தை மட்டும் பார்த்தான். காலையில் மாதாகோவிலில் பரங்கி பாதிரி வரைந்து கொண்டிருந்த நீலமும் சிவப்புமான சக்கரம் அது. நிற்காமல் அது வேகமாகச் சுழல புனிதமான யாரெல்லாமோ வானத்தில் நட்சத்திரத்தைப் பார்த்தபடி வண்டிக்கு வழிவிட்டு நின்றார்கள். சத்தம் போடாதே என்றான் பாதிரியின் சேவகன். அவன் குழைத்து வைத்திருந்த வர்ணம் ரத்த நிறத்தில் இருந்தது. இல்லை ரத்தம் தானோ அது?
வேதையா, வேதையா. வெளியே இருந்து பலத்த குரலில் கூவுகிற சத்தம்.
வேதையா, ஓடி வா. ரட்சிக்கணும்.
குடுமி வைத்த பிராமணப் பிள்ளை சொல்கிறான். கூடவே வண்டிக்குள் இருந்து எட்டிப் பார்த்து ஒரு இளைய வயது ஸ்திரி கூப்பாடு போடுகிறாள்.
மூத்தாரே, நான் உம்ம தம்பி பெண்டத்தி. தயவு செஞ்சு எங்களைக் காப்பாத்தும். புண்ணியமாப் போகும். புடவையை வழிச்சுண்டு எவளோ குதிக்கறதை எல்லாம் பாக்கணுமா என்ன? உசிரு போயிண்டு இருக்கு இங்கே. வாரும் தயவு செய்து.
அந்த பிராமணன் கையில் காகிதக் கட்டாக எதையோ மடக்கிப் பிடித்திருந்தான். அதைக் காட்டிக் காட்டி அவன் ஏதோ சொல்ல முற்பட, லாவணிப் பெண்டுகள் அதைக் கேட்க விடாமல் சதங்கை அணிந்த கால்களைத் தரையில் ஓங்கி மிதித்துச் சுழன்றார்கள். சாவித் துவாரம் வழியாக எட்டிப் பார்க்கிற துரைகள் பெண் மாதிரி புடவை உடுத்திக்கொண்டு ஓரமாக எக்கிப் பார்த்தார்கள். வேதையா, வேதையா. அவர்களும் கூப்பிட்டார்கள். பரிபூரணம் கூட இங்கே ஆடிட்டு இருக்கா திரும்பிப் பாரு. மூக்குத்தி போட்ட ஒரு ஆட்டக்காரி வேதையன் முகத்தில் கச்சுப்பட மார்பைக் குலுக்கினாள். அது பரிபூரணம். மீன் வாடை கொட்டகை முழுக்கச் சூழ, என்ன சுகம் என்று பரிபூரணம் வேதையன் இடுப்பை வளைத்துப் பிடித்து மடியில் சரித்தாள். ஓவென்று சூறாவளி சுழன்றடிக்கும் சத்தம். வெளியே ஒற்றை விளக்கு அணைந்து போனது. வேதையா, வேதையா, காப்பாத்து. ஓடிவா. காப்பாத்து. அந்த பிராமணன் காற்றின் இரைச்சலை மீறிக் கத்தினான். வண்டியில் இருந்து செம்பு ஒன்று வெளியே உருண்டது. கடகடத்து அது குழந்தே குழந்தே என்று இருட்டில் சத்தமிட்டபோது தூரத்தில் அந்த பிராமணன் இன்னும் விடாது வேதய்யா வேதய்யா என்று வாதனையோடு கூப்பிட்டபடி இருந்தான். அந்தப் பெண்ணும் கையெடுத்துக் கும்பிட்டாள். மூத்தாரே, மூத்தாரே, வாரும். புண்ணியமாப் போகும். உம் பங்கு சொத்து உம் அண்ணார் பாகம் பண்ணி வச்சிருக்கார். தஸ்தாவேஜிலே கையெழுத்து போட்டாச்சு. கால போதம் இல்லாம குடும்பத்தோடு எங்கேயோ நீங்கிண்டு இருக்கோம். இப்பவே வந்து ரட்சியும். புண்ணியமாப் போகும். அந்த ஸ்திரி அழுகைக்கு நடுவே சொன்னாள். கொல்லூருக்கு நாளைக்கு வரேன் என்றான் வேதையன்.
எதுக்கு? லாவணிப் பெண்டுகள் கன்னத்தில் கை வைத்து ஆச்சரியப்பட்டார்கள்.
அண்ணா, போகலாமா, ஏன் இப்படி கட்டை மாதிரி உறைஞ்சு போயிருக்கீர், அண்ணா, அண்ணா.
துளுவன் சுத்தமான வாயில் பல் வெளியே தெரிய அவனை எழுப்பினான். அந்தப் பல் வாச்சி வாச்சியாக வளர்ந்து வேதையனை மிரட்ட, அவன் மயங்கிச் சாய்ந்தான்.
அவன் எழுந்த பொழுது அந்த இடமே காலியாக இருந்தது. விடிந்திருந்தது.
துளுவா, துளுவா. ஓய் மாத்வ பிராமணரே. பிராம்மணோத்தமரே. எங்கே போனீர்?
அவன் கூப்பிட்டபடி நடந்தபோது வரிசையாக பழைய கல்லறைகளுக்கு நடுவே அந்தப் பாதை நீண்டு போனது.
இது காசர்கோடு போகிற வழி. யாரோ பாதையைக் காட்டினார்கள். பலிக் காக்கைகள் எவ்விப் பறந்து அவன் தலையில் எச்சமிட்டபடி தொடர்ந்தன. வெய்யிலும் மழையுமாக வானம் விட்டுவிட்டு விளையாட்டுக் காட்டியபடி இருந்தது.
(தொடரும்)
- தாகூரின் கீதங்கள் – 51 மீண்டும் உனக்கு அழைப்பு !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -6
- பிம்பங்கள்.
- அண்ணலே நீக்குவாய் இன்னலே
- கடவுளானேன்.
- வனாந்திரத்தின் நடுவே..
- வேதவனம் -விருட்சம் 6
- “கிளர்ச்சி”
- அண்டவெளியில் நீந்திய முதல் ஆசிய விண்வெளித் தீரர் !
- நீர் வளையங்கள்
- இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும்
- கிராமியப் பாடல்களில் கட்டபொம்மன்
- எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய “நான் கண்ட அண்ணா “
- பெண் படைப்புலகம் – இன்று – விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம்
- இசைபட…!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 11 (இறுதிக் காட்சி)
- மனிதமென்னும் மந்திரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பத்து
- சுமை
- உதவி
- என் பெயர் ஒளரங்கசீப்!
- அப்பாச்சி
- அப்பாச்சி -2
- நினைவுகளின் தடத்தில் – (20)
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 2
- நவராத்திரி – பசுமையான நினைவுகள்
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 3
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 4
- ஒளியூட்டுவிழா