உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


நியட்ஸே தன் படைப்பைப் படிப்போன் ஒவ்வொருவனும் ஓர் உன்னத மனிதனாகத் தன்னை நினைத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்தது தெரிகிறது. அதனைத் தவிர்க்கும் பொருட்டு உன்னத மனிதன் இன்னும் உதிக்க வில்லை என்று அவர் வெளிப்படுத்திக் கொள்கிறார் ! நாம் உன்னத மனிதனின் முந்தைய வழித்தோன்றல் ! இந்த மண்ணகம் அவனுக்கு உரியது ! உன் உடல் வலுவுக்கு உட்படாதது எதுவும் இல்லை. அத்துடன் உன் சக்திக்கு மீறிய பண்பாட்டில் இறங்காதே என்றும் எச்சரிக்கிறார்.

நமக்கு உன்னத மனிதன் உணரும் உள்மகிழ்ச்சி வேண்டிய தில்லை. நமது முக்கிய குறிக்கோள் : உலக மாந்தருக்குப் பணி புரிவது. நீண்ட காலமாக நான் மகிழ்ச்சி நாடிப் போவதை நிறுத்திக் கொண்டேன் ! இப்போது நான் பணி புரிவதை மேற்கொள்ள முயல்கிறேன்.”

(உதாரண உன்னத மனிதர் சிலர் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், லியோ டால்ஸ்டாய், விவேகானந்தர், இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, மாசேத்துங், மார்டின் லூதர் கிங், நெல்ஸன் மாண்டேலா, ஆல்பர்ட் ஸ்வைஸர், அன்னை தெராஸா போன்றோர்)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

“கோழைத்தனத்தை விடப் பெரிய பாபம் எதுவுமில்லை ! கோழைகள் தப்பிக் கொள்ள முடியாது என்பது மெய்ப்பாடு ! அதைத் தவிர நான் எதையும் தாங்கிக் கொள்வேன். ஒருவன் ஓரடி கொடுத்தால் உனது சினத்தை இரட்டித்து அவனுக்குப் பத்தடி தரவேண்டும் பதிலுக்கு ! அப்போதுதான் ஒருவன் மனிதனாகிறான் ! கோழை ஒருவன் இரக்கத்துக்கு உரியவன் ! நீ சாகப் போனாலும் சரி, சண்டை இட வேண்டும் நீ ! படை வீரனைப் போல் கட்டளைக்குப் பணிந்து போரில் உயிரை விடு ! ஆனால் கோழையாக மட்டும் ஒதுங்கி நிற்காதே !

நாம் நூலைப் படிக்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். நீளமாகப் பேசலாம். ஆனால் அனுபவம் ஒன்றே கண் திறக்கும் ஓர் ஆசிரியன் ! எல்லாவற்றிலும் அனுபமே உயர்ந்தது. துயரிலும், சிரிப்பிலும் நாம் கற்றுக் கொள்கிறோம்.

என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட, எல்லாவற்றிலும் உயர்ந்த பாடம் : ஒருவன் பணி முடிவுக்குத் தரும் மதிப்பு, கவனம், உடற் உழைப்பு அதை நோக்கிச் செல்லும் வழிநெறிக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே ! வெற்றிப் படியின் இரகசியம் அந்த வழி முறையில்தான் உள்ளது !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 10
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 10)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: அக்டேவியஸ், மிஸிஸ் வொயிட்·பீல்டு, ஜான் டான்னர்.

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: பூங்காவில் ஆன்னியும், ஜான் டான்னரும் தமது திருமணம் பற்றித் தர்க்கம் செய்கிறார்.)

ஆன்னி வொயிட்·பீல்டு: கேட்டாயா ஜான் ? வயலட் உன்னைத் திருமணம் செய்து கொள்ள என்னைத் தூண்டுகிறாள் ! என் அன்னையும் உன்னைத்தான் நான் திருமணம் புரிய வேண்டும் என்று என்னைத் துளைக்கிறாள் ! அடுத்து அக்டேவியசும் நான் உன்னைத்தான் மணக்க வேண்டும் என்று என்னைக் கைவிட்டு விட்டான் ! இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ சொல் ! உனக்கோ திருமணம் என்றால் வெறுப்பு !

ஜான் டான்னர்: அவர் மூவரும் உளறுகிறார் ! உனக்கேற்ற ஆடவன் இந்த ஊரில் இல்லை ! நானுனக்கு ஏற்றவன் இல்லை ! நானோர் ஊர் சுற்றி ! ஓரிடத்தில் தங்கி வாழ்பவன் இல்லை ! என்னை நீ மணக்க வேண்டாம் என்பது என் ஆலோசனை ! நீ என்ன சொல்கிறாய் இதற்கு ? உனக்கோ திருமணம் என்றால் கரும்பு !

ஆன்னி: உனக்கு விருப்பம் இல்லை என்று மறைமுகமாகச் சொல்கிறாய் ! திருமணத்தில் உனக்கு விருப்ப மில்லை ! நீ திருமணம் செய்ய முன்வந்தாலும் உன்னை ஒரு பெண்ணும் விரும்ப மாட்டாள் ! மூவர் எனக்கு ஆலோசனை கூறினாலும் நான் உன்னை மணக்க மாட்டேன் ! கவலைப் படாதே ! நான் ஏற்கனவே ஒருவனைத் தேர்ந்தெடுத்து விட்டேன் !

ஜான் டான்னர்: ஏனப்படி என்னை உதாசீனம் செய்கிறாய் ? நீ யாரைத் தீர்மானம் செய்திருக்கிறாய் ? அக்டேவியஸ்தானே !

ஆன்னி: என்மீதுதான் உனக்கு விருப்பமில்லை ! நான் யாரை மணந்தால் என்ன ? நான் தேர்ந்தெடுத்த வாலிபன் பெயர் இரகசியமாகவே இருக்கட்டும் ! யாருக்குச் சொன்னாலும் நானுனக்குச் சொல்வதாக இல்லை !

ஜான் டான்னர்: எனக்குத் தெரியும் யாரென்று ! நானில்லை என்றால் அது அக்டேவியசாக இருக்க வேண்டும். நல்ல தேர்ந்தெடுப்புதான் ! என்னினிய பாராட்டுகள் ஆன்னி !

ஆன்னி: அக்டேவியஸை நேற்றுத்தான் மறுத்தேன் ! அவரது விழிகளில் நீர்த் துளிகள் விழ வைத்து விட்டேன் ! இன்னும் அவை உலர்ந்து கூடப் போயிருக்காது ! யாரை மணந்தாலும் நான் அக்டேவியசை மணக்கப் போவதில்லை ! ஆயினும் அவர் நல்லவர் ! என்னைத்தான் மணப்பேன் என்றவர் ! ஏமாற வைத்தவள் நான் ! ஆயினும் பெண்ணைப் பற்றித் தெரிந்தவர் அவர் ! எல்லாரும் என்னைக் கை விட்டால் அவரிடம்தான் சரணடைவேன் !

ஜான் டான்னர்: அவன்தான் உனது ஆத்மாவின் இரட்டை ! நீ ஒரு கல்நெஞ்சக்காரி ! ஆடவன் இதயத்தைப் பிளக்கும் கோடரி ! எனக்குப் பெண்ணைப் பற்றிச் சரியாகத் தெரியாது.

ஆன்னி: பெண்ணைப் பற்றித் தெரியாத ஆணைத்தான் நான் மணக்க உத்தேசம் ! ஆனால் அந்தப் பட்டியலில் நீ இல்லை ! உணர்ச்சி வசப்படாத ஆடவனை நாடுபவள் நான் !

ஜான் டான்னர்: ஆச்சரியமாய் இருக்கிறது ! பெண்களில் நீ ஒரு புதிரானவள் ! ஆடவனைச் செக்கிலிட்டு கசக்குபவள் நீ ! உன்னை மணப்பவனுக்கு என்னுடைய இரக்கம் உண்டு. என்னுடைய வருத்தமும் உண்டு.

ஆன்னி: என் நிபந்தனைகள் அவை மட்டுமல்ல ! திருமணத்துக்கு ஒரு குறிக்கோள் உண்டு ! அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற விரும்பும் ஆடவனைத்தான் நான் மணப்பேன் !

ஜான் டான்னர்: அப்படியா ஆன்னி ! நல்ல எண்ணம்தான் ! உன் திருமணக் குறிக்கோள் என்ன வென்று எனக்குச் சொல்ல மாட்டாயா ?

ஆன்னி: யாருக்குச் சொன்னாலும் உனக்குச் சொல்லப் போவதில்லை ! என்மீதுதான் அக்கறை இல்லை உனக்கு ! என் திருமணக் குறிக்கோளைத் தெரிந்து நீ என்ன செய்யப் போகிறாய் ?

ஜான் டான்னர்: ஆன்னி ! தயவு செய்து சொல் ! நானும் தெரிந்து கொண்டால் உனக்கேற்ற கணவனைக் கண்டுபிடித்துத் தருவேன் !

ஆன்னி: (ஆச்சரியமாக) என்மீது உனக்கு அக்க¨றை உள்ளதா ?

ஜான் டான்னர்: உன்மீது எனக்கு அக்கறை உண்டு ! ஆனால் காதல் இல்லை ! உனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும். ஆனால் அவன் நானாக இருக்கக் கூடாது. அதுதான் எனது குறிக்கோள் !

ஆன்னி: பைத்தியகாரனைப் போல் பேசுகிறாய் ! உன்னைப் புரியவில்லை ! உள்ளத்தில் ஒன்றும் சிரத்தில் வேறொன்றும் உள்ளன ! ஒரு சமயம் உள்ளத்தின் இச்சையைக் காட்டுகிறாய் ! வேறு சமயம் மூளையின் இச்சை வெளிப்படுகிறது. நான் ஒன்று உன்னைக் கேட்கிறேன். அதற்குப் பதில் சொல். ஆண், பெண் இல்வாழ்க்கை தொடங்குவதின் அர்த்தம் என்ன ? ஆணும் பெண்ணும் ஏன் இல்லத்தில் தம்பதிகளாய் வாழ வேண்டும் ?

ஜான் டான்னர்: ஆண் இச்சிப்பது பெண்ணிடம் உள்ளது. பெண்ணுக்குத் தேவையானது ஆணிடம் இருக்கிறது ! இரண்டும் பிணைந்து கொள்ளத் தூண்டுகிறது இயற்கை ! அதற்கு வேண்டிய அடிப்படைச் சக்திதான் “வாழ்க்கை உந்துசக்தி” (Life Force) ! அந்த ஆக்கும் சக்தியை முதலில் ஊக்குவது பெண்மை ! அதற்கு உதவுவது ஆண்மை ! ஆடவனைக் கவர்ந்து வாழ்க்கை உந்துசக்தியை மலர வைப்பது பெண்மை !

ஆன்னி: அப்படியானால் அதைக் கண்டு நீ ஏன் ஓட வேண்டும் ? ஆண் பெண் உடல் உறவோடு வாழ்க்கை உந்துசக்தியின் நீட்சி நின்று போவதில்லை. இல்வாழ்க்கையின் மகத்துவம் வெறும் ஆண் பெண் உடலுறவு மட்டுமில்லை ! உடலுறவு ஒர் வினையூக்கி ! வாழ்க்கையின் பிறவிப்பயன் அறிவுள்ள ஒரு மகவைப் பெறுவது ! அதன் உடற்நலம் பேணி, உயர்ந்த கல்வி புகட்டி, உன்னதப் பிறவியாய் ஆக்குவதே தம்பதிகளின் பணி ! அப்படி ஒரு குறிக்கோள் இல்லா விட்டால் வாழ்க்கை உந்துசக்தி தோல்வி அடைகிறது ! தக்கார் தகவிலர் என்பது அவரவர் மக்களால் காணப்படும் !

ஜான் டான்னர்: (பேராச்சரியம் அடைந்து) நானொரு முறைக் கண்ட கனவிலே, காதல் மன்னன், தாஞ் சுவான் இப்படிச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது ! எப்படி உனக்கு இந்த உயர்ந்த வாசகம் தெரியும் ? நானதை மறந்து போய் விட்டேன் ! நன்றி எனக்கு நீ நினைவூட்டியது ! இல்வாழ்வின் குறிக்கோள் உன்னத மனிதர் ஆக்குவது ! உயர்ந்த வாசகம் ! உன்னத வாசகம் ! ஒப்பிலா வாசகம் !

ஆன்னி: இந்த உண்மை வாசகத்தைப் பின்பற்றும் ஓர் ஆடவனைத்தான் நான் மணப்பேன் ! அவன் ஆண் அழகனாய் இருக்க வேண்டிய தில்லை ! அவன் பட்டதாரியாக இருக்க வேண்டிய தில்லை ! அவன் என்னைக் காதலிக்க வேண்டிய தில்லை ! என் குறிக்கோளை ஒப்பி அவன் என்னை விரும்பினால் போதுமானது !

ஜான் டான்னர்: (வியப்புடன்) யார் அவன் ? எங்கிருக்கிறான் அவன் ? சொல் ஆன்னி ! என் ஆவலை அடக்க முடிய வில்லை !

ஆன்னி: இன்னும் அவன் காணப்பட வில்லை. நான் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஜான் டான்னர்: கிடைக்கா விட்டால் என்ன செய்வாய் ? அதற்கு ஒரு கால வரையறை ஏதேனும் உள்ளதா ? அவனைத் தேடுவதற்குள் நீ கிழவி ஆகிவிடுவாய் !

ஆன்னி: கிடைக்கும் வரை தேடுவேன் ! கிழவி ஆனாலும் தேடுவேன் ! எனக்கென ஒருவன் பிறந்திருக்கிறான் ஜான் ! என் குறிக்கோள் உடைய ஓர் ஆண்மகன் எங்கோ ஒளிந்திருக்கிறான் ! என்னை அவனும் தேடிக் கொண்டிருக்கிறான் ! நாங்கள் ஒருநாள் சந்திப்போம் பார் ! தம்பதிகள் ஆவோம் பார் ! அந்தத் திருநாள் வரத்தான் போகிறது ! நம்பிக்கை உள்ளது எனக்கு !

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy – A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 23, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts