உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


ஆக்க சக்தி, கூரிய யுக்தி, சுயமதிப்பு உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறம்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தி உன்னத குறிக்கோளை நோக்கி மக்களை ஒன்றுபடுத்தி வெற்றி பெறும் போது அப்புரட்சியின் தளபதி உன்னத மனிதனாக உயர்கின்றான். (உதாரணம் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஆப்ரஹாம் லிங்கன், மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், லெனின், மாசேத்துங், அன்னை தெராஸா, விவேகானந்தர் போன்றோர்)

உன்னத மனிதனைக் காணும் ஒரு குறிக்கோள் இருப்பது நமது வாழ்வுப் பணிக்கு வெகுமதி அளிப்பது. அது நம்மை உயர்த்துவது. உன்னத மனிதர் ஒருவருக்காக ஒருவருடன் ஒருவர் பரிவுடன் வாழ்வது நமக்கொரு குறிப்பணியாக அமைய வேண்டும். நாமெல்லாம் உன்னத மனிதன் ஒருவனுக்கு அன்புடன் பணிந்து வேலை செய்வோம். அவனுக்கு ஒரு கருவியாக இருந்து நாம் உதவி செய்வோம்.

இன்று தனித்துவம் கொண்ட பண்பாளர் நீவீர் ! சமூகத்திலிருந்து விலகி நின்று தனிச் சிந்தனையுடன் செயல் புரிகிறீர் நீவீர் ! ஒருநாள் நீவீர் புதியதோர் குழுவை அமைப்பீர் ! உமது குழுவிலிருந்து உதயமாவான் ஓர் உன்னத மனிதன் !

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

ஐரோப்பிய நாடுக:ள் சமூகப் பேராற்றல் படைப்பிற்கும், ஆசியா நாடுகள் ஆன்மீக சிந்தனைக்கும் மூலாதாரமாக இருந்து வருகின்றன. உலக வரலாறுகள் முழுவதும் இவ்விரண்டு ஆற்றல்களின் கூட்டியக்கக் கதைகள் காணப்படுகின்றன. பெருந்திரள் உண்டாக்குவதில் எந்த சிறப்பு மில்லை ! ஒரு நூற்றாண்டு காலத்தில் பெருந்திரள் கூட்டம் ஒன்று சாதிப்பதை விட, உடலும் உள்ளமும் ஊன்றி, சக்தி வாய்ந்த ஒரு சில உன்னத மனிதர் பேரளவு சாதிக்க முடியும்.

என் தனிப்பட்ட வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். எங்கள் குருநாதரின் (இராம கிருஷ்ண பரஹம்சர்) ஆத்மா பிரிந்த பிறகு பணம் காசில்லாமல், யாரும் அறியாத பன்னிரெண்டு வாலிபராய் நாங்கள் இருந்தோம். எங்களை எதிர்த்து முளையிலே வெட்டி விடக் கடுமையாக முயற்சி செய்தவை சக்தி வாய்ந்த நூறு நிறுவனங்கள் ! ஆனால் இராம கிருஷ்ணர் எங்களுக்கு அளித்திருந்த உன்னத கொடைகள் : ஆத்ம இச்சை ! ஆயுள் நீடித்த போராட்டம் ! வெறும் உபதேசமற்ற மெய்யாக வாழும் வாழ்வு !

இன்றைக்கு இந்தியா முழுவதும் மக்கள் குருநாதரை அறிவார். குருநாதரை மதிக்கிறார். அவரது உன்னத மெய்ப்பாட்டு அறிவுரைகள் காட்டுத் தீபோல் பரவி வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு அவரது பிறந்தநாள் விழாவுக்கு நூறு பேரை அழைத்த வர முடியாது ! சென்ற ஆண்டு விழாவில் (1894) கலந்து கொண்டவர் எண்ணிக்கை ஐம்பதினாயிரம் !

வெறும் மனித ஆற்றல், மாபெரும் செல்வம், மேம்பட்ட படிப்பு, சொற்பொழிவுத் திறமை அல்லது பின்பற்றுவோர் எண்ணிக்கை மட்டும் ஒருவர் செல்வாக்கைக் காட்டுவ தில்லை ! உள்ளும் புறமும் தூய்மை கொண்டு உண்மை வாழ்வை வாழ்ந்து காட்டுவதே நிலைபெற்ற மதிப்பை அளிக்க வல்லது.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 7
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 7)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: ஆக்டேவியசும் ஆன்னியும் தனியாகப் பூங்காவில் உரையாடுகிறார்.)

ஆன்னி: தெளிந்த ஞானமும், உயர்ந்த நெறியும், உறுதி உள்ளமும் கொண்டவர் ஜான் டான்னர் ! அவரை நான் மணந்தால் எங்களுக்கு உன்னத குழந்தைகள் பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது ! இது தேர்ந்தெடுப்புப் திருமணம் ! உயர்ந்த சிந்தனை உடையவர், உறுதியான உள்ளங் கொண்டவர், ஒப்பிலா மனநோக்கு உடையவர் தம்பதிகளானால் இல்வாழ்வில் உன்னத சிசுக்களைப் பெறுவர் என்பது என் அழுத்தமான நம்பிக்கை.

அக்டேவியஸ்: நேசிக்கும் நண்பனைப் புறக்கணித்து விட்டு நாடோடி ஒருவனை நீ மணப்பது என்னால் தாங்க முடியாது ! நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன். நீயும் என்னைக் காதலிக்கிறாய். இல்லா விட்டால் நீ இப்படி தர்க்கம் புரிந்து கொண்டு நிற்க மாட்டாய் !

ஆன்னி: உன் மனக்கனவை நான் கலைக்க மாட்டேன். நான் உன்னைக் காதலித்தாலும் திருமணம் புரிய விருப்பமில்லை ! ஏனென்று கேளாதே ! சில வினாக்களுக்கு எனக்கே விடை தெரியாது. நீ உணர்ச்சி வசப்பட்ட பிரமச்சாரி ! நீயும் நானும் இப்போது காதலித்தாலும் ஒருநாள் அந்தச் சங்கிலி அற்றுவிடும் ! அது எனக்கு மிக்க வேதனை அளிப்பது !
நமக்கிடையே நெருக்கம் உள்ளதை விடத் தூரம் இருப்பது நல்லது ! நெருக்கத் தொடர்பு நம்முள் பிணக்கை உண்டாக்குவது ! நீயும் நானும் பிரிந்திருப்பதே நலம் தருவது. நெடுங்காலம் நண்பராய் வாழலாம் !

அக்டேவியஸ்: அந்தப் பிரிவு வாழ்வு எனக்கு நரக வேதனை அளிப்பது ! நீண்டகால நண்பராய் இருப்பதை விடக் குறுகிய காலத் தம்பதிகளாக வாழ்வது சொர்க்கமாகத் தோன்றுகிறது. உன்னை நான் இழந்தால் நானிந்த உலகை விட்டே நீங்கி விடுவேன்.

ஆன்னி: இப்படியெல்லாம் பயமுறுத்தி என்னை இழுக்க முயலாதே ! நான் உன்னிடம் பரிவாக இல்லா விட்டாலும் உன் உயிர்மீது நீ இரக்கம் கொள்ள வேண்டும். எனக்காக நீ ஏன் உயிரை விடுகிறாய் ? நானந்தத் தகுதி பெறாதவள் ! நான் வெறுத்தாலும் நீ வாழ வேண்டும் !

அக்டேவியஸ்: நான் சாவதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ! இத்தனை அன்பு என்மேல் உள்ள போது ஏன் என்னை மணக்க வெறுக்கிறாய் ?

ஆன்னி: அப்படித்தான் ஏனென்று கேட்காதே வென்று சில விநாடிக்கு முன்பு கூறினேன். என்னால் பதில் சொல்ல முடியாது. நான் உனக்குக் கண்மருட்சி தருவதாக அஞ்சுகிறேன் !

அக்டேவியஸ்: என்னை நீ வெறுக்க வெறுக்க உன்மீது எனக்கு விருப்பம் அதிகமாகுது ! ஆனால் நீ டான்னருக்குக் கண்மருட்சி தர அஞ்சுவ தில்லையே !

ஆன்னி: அங்குதான் நீ தவறி விடுகிறாய் அக்டேவியஸ் ! டான்னருக்கு என்மேல் எந்த மருட்சியுமில்லை. நான் அருகில் நின்றாலும் அவரது கண்கள் என்னை முற்றுகை போடுவ தில்லை ! என் விழிகளும் அவரை வேட்டை ஆடுவதில்லை !

அக்டேவியஸ்: உனக்கு நானொரு உதவி செய்யட்டுமா ? அதற்காவது அனுமதி அளி ! நீ டான்னரை நேசிப்பதாக நான் போய்ச் சொல்லட்டுமா ?

ஆன்னி: அப்படிச் சொன்னால் அவர் மறுபடியும் என்னை விட்டு ஓடிப் போய்விடுவார் ! பிறகு திருமணப் பந்தலில் நான் தனித்துப் போய் விடுவேன். நான் விரும்பா விட்டாலும் நீ என்னைத் தியாகம் செய்யத் துணிகிறாய் ! நான் புறக்கணித்தாலும் நீ என்னைத் திருமணம் செய்ய விழைகிறாய். நீயொரு விந்தை மனிதன் ! வேடிக்கை மனிதன் ! எனக்கு உன்னைப் போன்ற தியாகிகள் மீது அனுதாபம் உண்டாகுதே தவிர ஏனோ அன்பு எழுவதில்லை ! நீ ஒரு கவிஞன் ! அதனால் உன்மேல் எனக்கு மதிப்பு உண்டு ! ஆனால் அது காதலில்லை ! வெறும் மரியாதை !

அக்டேவியஸ்: நீ ஒரு மதில்மேல் பூனை ! எங்கே பூனை தாவும் என்று யூகிக்க முடியாது ! ஞானப் பெண்டிர் அனைவரும் மதில்மேல் உலவும் பூனைகள்தான் ! என் மனம் எளியது ! நான் உன்னை நேசிக்கிறேன் ! நீ என்னை நேசிக்க வில்லை ! ஆதலால் நான் உனக்கு உற்சாகம் அளிக்க முடியாது ! ஆனால் வேறொருவன் உனக்கு உவப்பளிக்க நான் உதவி செய்ய முடியும் !

ஆன்னி: அக்டேவியஸ் ! இப்படி நீ அறிவில்லாது பேசுவாய் என்று நான் எதிர்பார்க்க வில்லை. உனக்கு மாதரைப் பற்றித் தெரியாது ! நீ கற்பனை உலகில் மிதக்கும் ஓரு கவிஞன் ! பெண்ணின் மனம் உன் கண்களுக்கு ஏனோ தெரியவில்லை ! நீ உடலை வர்ணிக்கும் உடலை மோகிக்கும் ஒரு கவிஞன் ! அதனால் என் உள்ளத்தில் நீ நடமாட வில்லை !

அக்டேவியஸ்: நீ சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை ! நான் நானேதான் ! என்னை நான் மாற்றிக் கொள்ள முடியாது ! எப்படி நானிருந்தாலும் என்னை நான் நேசிக்கிறேன்

ஆன்னி: (அழுத்தமாக) அக்டேவியஸ் ! நான் உன்னை மணக்க முடியாது ! உன்னை நான் ஏமாற்ற மாட்டேன் ! உண்மையைச் சொல்வேன் நீ என்னை வெறுத்தாலும் !

அக்டேவியஸ்: என் துரதிருஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறேன் ! நீ என் இதயத்தை நார் நாராகக் கிழிப்பது உனக்கே தெரியவில்லை ! நீ ஒரு கல் நெஞ்சக்காரி !

ஆன்னி: உன் நெஞ்சு ஒரு பஞ்சுக் கூடு ! உன் சகோதரி வயலெட் போல் உனக்கு இரும்பு இதயமில்லை ! அவள் எண்ணியதை சாதிப்பவள் ! ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்பவள்.

அக்டேவியஸ்: நான் எண்ணியதை இழப்பவன் என்று மறைமுகமாகச் சொல்கிறாய் ! வயலெட் போல் நான் வைர நெஞ்சம் படைத்தவன் அல்லன். நான் வாழ்விலும் கோழை ! காதலிலும் கோழை !

ஆன்னி: உன்னைத் துணிந்து மணப்பவளுக்குத் தெய்வம்தான் துணை யிருக்க வேண்டும் !

அக்டேவியஸ்: ஏன் அப்படிச் சொல்கிறாய் ஆன்னி ? நீதான் என்னை விரும்பவில்லை என்றால் மணக்க வரும் மாதையும் ஏன் தடுத்து நிறுத்துகிறாய் ?

ஆன்னி: அறிவுள்ள ஒருத்தி உன்னை விரும்ப மாட்டாள் ! அறிவில்லா ஒருத்தியும் உன்னை வெறுப்பாள் ! நானிந்த வாதத்தை இனித் தொடர விரும்ப வில்லை ! அதற்கொரு முற்றுப் புள்ளி வைக்கிறேன் ! என்னை மன்னித்து விடு உன்னைப் புண்படுத்தியதற்கு !

அக்டேவியஸ்: என்னைப் புண்படுத்தியது உனக்குப் பூரிப்பளித்தால் நான் பொறுத்துக் கொள்கிறேன் ! காதலிலே நான் தோல்வியுற்றேன் (கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறேன்)

ஆன்னி: அதனால்தான் என்னைக் காதலிக்காதே என்று உன்னை எச்சரித்தேன் ! நீ கேட்க வில்லை ! மலைமேல் மோதும் அலைபோல் முயன்றாய் ! போதும் அலைகள் ஓயட்டும் ! நான் போகிறேன் அக்டேவியஸ் ! (கன்னத்தில் முத்தம் கொடுக்கப் போனவள் திரும்பி முத்தமிடாமல் விரைகிறாள். அக்டேவியஸ் மனமுடைந்து பூங்கா பெஞ்சில் தளர்ந்து போய் உட்காருகிறான்)

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 3, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts