இரா.முருகன்
மாட்சிமையும் மகா வல்லமையும் பொருந்திய, பூவுலகம் ஒரு குடைக்கீழ் அடக்கி ஆளும் சக்ரவர்த்திகள். சக்ரவர்த்திகளின் பிரதானியாக வீற்றிருந்து இந்த பாரத பூமியின் திலகமான மதராஸ் பட்டணத்தையும் அதையொட்டி விஸ்தாரமாகப் பரந்து விரிந்த தட்சிணப் பிரதேசமான நல்லுலகத்தையும் உய்விக்க வந்த சாட்சாத் மகாவிட்டுணு அவதாரமான கவ்னர் துரையவர்கள்.
இந்த மேலோரின் பாதாரவிந்த கமலங்களில் தெண்டனிட்டு, மதராஸ் பட்டணம் மயிலாப்பூர் கஸ்பா வெங்கடேச அக்ரஹாரம் வைத்தியநாத சர்மன் புத்ரனும் மேற்படி பட்டணத்து உன்னத நியாயசபை ஏற்படுத்தியபடி தற்போது பிரதான காராக்ரஹத்தில் தெண்டனை அனுபவிக்கிற அடிமை ஸ்மார்த்த ப்ராமணனுமான மகாலிங்கய்யன், வயது இருபத்தொன்பது, சமர்ப்பிக்கிற கருணை மனு.
இது யாதெனில், இந்தப்படிக்கு நடந்தது நடந்த கிரமத்தில் இது எழுதப்பட்டது. என் புத்தியில் நினைக்கிறபோது மேலே கிளம்பி வரும்படியான ரூபத்தில், சபையில் சொல்லுந் தரமானதோ இதெல்லாம் என்று கிஞ்சித்தும் யோசிக்காது இந்த லிகிதம் அமைந்திருப்பதை பெரியோர் மன்னிக்க வேணும். இப்படி ஆதியோடாந்தமாக உள்ளது உள்ளபடி துரையவர்களின் திவ்ய சமூகத்தில் லிகிதம் சமர்ப்பித்து பாதம் தொட்டு வந்தித்தால், இகத்தில் காராகிரஹ முக்தியும் பரத்தில் கதி மோட்சமும் கிட்டும் என்று மேன்மை பொருந்திய வக்கீல் துரையவர்கள் கடாட்சம் காட்டி அருளியபடி இதை எழுதுவிக்கலானேன்.
ஐயன்மீர். என் தகப்பன் வைத்தியநாத அய்யன் சுய முயற்சியாலும் துரைத்தனத்து உத்தியோக பெலனாகவும் நொங்கம்பாக்கத்தில் கட்டி எழுப்பிக் குடி போந்த ரெட்டை மாடி கிரஹம் ஒன்று உண்டு. அன்னாரும் என் தாயார் மாதுஸ்ரீ கோமதியம்மாளும் கைலாச ப்ராப்தி அடைந்த பிற்பாடு எனக்கும் என் இளைய சகோதரன் நீலகண்டய்யனுக்கும் நடுவில் அந்த வீடு பற்றிய வியாஜ்யம் ஏற்பட்டு கோர்ட்டுக்குப் போனோம். கனம் கோர்ட்டார் விதித்தபடி பாகப் பிரிவினன செய்து வண்ணாரப்பேட்டை பச்சையப்ப முதலியிடம் ரூ ஆயிரம் விலை பேசி விற்கப்பட்டது அந்த நொங்கப்பாக்கத்து வீடு. விற்ற தொகை கைக்கு வந்ததும் நாங்கள் ரெண்டு சகோதரர்களும் அதை சரிசமமாகப் பாகம் செய்து கொண்டோம்.
அப்பால், மகாலிங்கய்யனான நான் என் மனையாள் லலிதாம்பிகையம்மாள் சகிதம் ஏற்கனவே பிரஸ்தாபித்த மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்தில் ஆயிரத்து இருநூறு சதுஸ்ர அடியில் மங்களூர் ஓடு வேய்ந்து, காரைச் சுவர் எழுப்பி ஒரு நூதன கிரஹத்தை ஏற்படுத்திக் கொண்டு அங்கே குடி போனது நாலு கார்த்திகை முந்தைய ஒண்ணாம் தேதி. மேன்மை பொருந்திய துரைத்தனத்து கேலண்டர் படிக்கு அது இங்கிலீசு வருசம் ஆயிரத்து எண்ணூத்துத் தொண்ணூத்தொம்பது. தேதி விவரம் தெரியாததற்கு சர்க்கார் இந்த எளியோனை மன்னிக்க வேணும்.
என் பிதா வைத்தியநாதய்யன் என்னையும் என் சகோதரனையும் மிஷினரி பள்ளிக்கூடத்தில் கிரமமாகப் படிக்க வைத்தும் பதினாலு வயசுக்கு அப்புறம் எனக்கு படிப்பு ஏறாத காரணத்தால் அங்கே நிறுத்திப் போட்டார். பிற்பாடு, எங்கள் பெந்துவும் என் தகப்பனாருக்கு தாயாதி வழியில் ஒண்ணு விட்ட தமையனுமான அரசூர் சங்கரய்யர் மதராஸ் கருப்புப் பட்டணத்தில் ஸ்தாபிதம் செய்த புகையிலைத் தூள் கலந்த நாசீகா சூரணம் மொத்தமாகவும் சல்லி துட்டுக்கும் விற்கிற கடையில் வேலை கற்றுக் கொள்ள என்னை சம்பளம் ஏதுமில்லாத எடுபிடியாளாக இருத்தினார். என் சகோதரனும் ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்டவனுமான நீலகண்டய்யன் மதராஸ் கலாசாலை ஏற்படுத்திய பி.ஏ பரீட்சை கொடுத்து எம் தகப்பனார் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கியாதியோடு வகித்து வந்த நாவிகேஷன் கிளார்க் உத்தியோகத்தில் அமர்ந்து தற்போது நொங்கம்பாக்கத்திலேயே நூதன கிரஹம் ஏற்படுத்திக்கொண்டு பெண்டாட்டி, குழந்தைகள் சகிதம் சுகஜீவனம் செய்கிறான்.
நானோ சொற்பமான பள்ளிக்கூடப் படிப்பும் பொடிக்கடை உத்தியோகமுமாக பிதுர் ராஜ்யமாக பாகம் பிரித்து வந்த சொத்தை வைத்து தரக்கேடு இல்லாமல் வெங்கடேச அக்ரஹாரம் மேலே குறிப்பிட்ட ரெட்டை மாடி வீட்டில் யார் சிரத்தையிலும் படாமல் என்னைக் கட்டிய பெண்டாட்டியான லலிதாம்பிகை சகிதம் சாமான்யமான கிரகஸ்தனாக ஜீவனம் நடத்தி வந்தேன். லலிதாம்பிகை சென்னை ராஜதானி காஞ்சிபுரம் தாலுக்கா திருக்கழுக்குன்றம் கிராமத்தில் புரோகிதம் செய்து வந்து அற்பாயுசில் உசிரை விட்ட ஒரு பிராம்மணோத்தமரின் புத்ரியாவாள். அன்னாருடைய பெயர் எத்தனை யோசித்தும் கிஞ்சித்தும் நினைவு வராமல் தலையில் லிங்கம் முளைத்து நடமாடுகிற விநோதமான ஒரு உருவம் தான் சதா மனசில் வந்து நிற்கிறது. இந்த துர்ஸ்மரணைக்காக துரைத்தனத்தார், தலையில் லிங்கம் உள்ள பெயர் தெரியாத அந்த பிராமணன் மற்றும் என் சகதர்மிணி லலிதாம்பிகை ஆகியோரின் மன்னிப்பை யாசிக்கிறேன்.
எட்டு வருஷம் முன்னால், ரிக் வேத ஆவணி அவிட்டத்துக்கு முந்திய ஒரு சுபயோக சுபதினத்தில் இந்த லலிதாம்பிகை என்ற ஸ்திரியை நான் மாங்கல்யதாரணம் செய்து மனையாளாக்கிக் கொண்டேன். கடந்த எட்டு வருஷம் சதிபதியாக ஜீவித்தும், எங்களுக்கு சந்ததி ஏற்படாது போன கவலையை பொடிக்கடையில் என் கூட அடிமை சேவகம் பார்க்கும் இதரரோடு பகிர்ந்து கொண்டபோது அதிலே ஒருத்தன் கொண்டித்தோப்பு கன்னையா நாயுடு வைத்தியரிடம் போய்க் கலந்தாலோசித்து அவர் சொன்னபடிக்கு மருந்தும் சூரணமும் லேகியமும் சாப்பிட்டு வந்தால் பிரச்சனை விரசாகத் தீர்ந்து விடும் என்று தெரிவித்தான். அவனுடைய சிநேகிதர்களில் சிலபேருக்கு இதேபோல் சந்ததி விருத்தியில்லாமல் கிலேசம் கொண்டு அலைந்து, மேற்படி வைத்தியர் சகாயத்தால் தற்போது வீடு நிறைய குஞ்சு குளுவான்களோடும் சதா வயிற்றைத் தள்ளியபடி சிரம பரிகாரம் செய்யும் பத்னியோடும் ஷேமமாக இருப்பதாகவும் அவன் சொன்னான்.
நான் சொல்லிக் கொண்டு வந்ததில் திரும்பிப் போய் கொஞ்சம் சேர்க்க வேண்டியிருக்கிறது. நீடித்த கலாசாலை அப்பியாசம் இல்லாத காரணத்தால் இப்படி முன்னாலும் பின்னாலும் முட்டி மோதி துரையவர்கள் சமூகத்துக்கு லிகிதம் எழுதி சிரமப்படுத்துவதற்காக இன்னுமோர் ஆயிரம் தடவை மன்னிப்பு வேணும்.
கருப்புப் பட்டணம் பொடிக்கடையில் உத்தியோக நேரம் போக, தங்கசாலை பள்ளிக்கூட தமிழ் வித்வானும் என் இளம் பிராய சிநேகிதனுமான செங்கல்வராய முதலியோடு நூறு இருநூறு வருஷம் முற்பட்ட தமிழ் கிரந்தங்கள் எழுதிய ஓலைச் சுவடிகளை பரிசோதனை செய்து அவற்றை புஸ்தகமாக்க அச்சு யந்திரத்தில் ஏற்றுகிற காரியத்திலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தேன். பழைய ஓலையில் உலா, தூதுப் பிரபந்தம், மடல், குறவஞ்சி இப்படியான வகைகள் தட்டுப்படுவது உண்டு. கட்டளைக் கலித்துறை, வெண்பா, விருத்தம் என்று அமைந்த இவை சிருங்கார ரசம் மிகுதியாகப் பாராட்டுகிற சமாசாரமாக அமைந்து போவது வாடிக்கை. இத்யாதி விஷயங்களோடு நானும் முதலியும் ஆலோசித்து அங்கங்கே புதிதாகச் சேர்த்த காமரசம் சொட்டும் நூதனமான பாடல்களுமாக இந்தப் புஸ்தகங்களை சூளையில் அச்சுப் போட்டு வெளியே கொண்டு வந்தோம். ராஜதானியில் இவை கியாதியோடு விற்றது சகலரும் அறிந்ததே. இன்னும் பத்து புஸ்தகம் இதே ரீதியில் போட்டபின் முதலியோடு கூட்டு வைக்காமல் நானே இதையெல்லாம் புதுசாக இயற்றி அச்சுப் போட்டு விற்று மெச்சக்கூடிய தன ஸ்திதியை அடையலாம் என்று மனசில் திடமாக நம்பினேன். ஆனாலும் இதில் ஒரு சிக்கல் வந்து சேர்ந்தது.
ஸ்திரி புருஷ தேக சம்பந்தம் பற்றிய இந்தப் பாட்டுக்களை எழுதும்போது தளை தட்டாமல் இருக்க ஏகப்பட்ட முஸ்தீபுகள் எடுத்தாலும் எங்கேயாவது ஒரு இடம் ரெண்டு இடத்தில் அதுகள் தாறுமாறாகிப் போனதால், மேற்படி முதலி என்னிடம் பிரஸ்தாபித்தது இந்தத் தோதில் இருந்தது.
ஏனடா மகாலிங்க அய்யனே, பெண்டாட்டி கூடப் படுத்து எழுந்து ஒரு சிசுவைப் பெற மட்டுமில்லை, சிரத்தையாக தளை தட்டாது சிருங்கார விஷயமாக பாட்டு எழுதக்கூட உனக்கு யோக்யதை இல்லை. இதையெல்லாம் திருத்தி ஒட்டுவேலை செய்வித்து அச்சேற்றுவதற்குள் எனக்கு பிராணன் போகிறது. தயவாக இந்த சங்காத்தத்தை நாம் இத்தோடு முடித்துக் கொள்ளலாம்.
முதலிக்குத் தெரியாத ஒரு சங்கதியையும் இங்கே ஏற்கனவே உத்தேசித்தபடி மனசில் நினைவு வந்த தோதில் எடுத்துரைக்க சர்க்கார் உத்தரவு தயவாக வேண்டியிருக்கிறது. அது என்னவென்றால் முதலிக்காக இப்படியான பாட்டுக்களை நூதனமாக இயற்றிக் கொண்டிருக்கும்போது எனக்கு இந்திரிய ஸ்கலிதம் ஏற்பட்டு அரையை நனைத்துக் கொண்டதால்தான் அவற்றில் தளை தட்டிப் போனது. மற்றபடிக்கு எட்டு வகுப்பு முடிவதற்குள் கிரமமாகப் பாட்டெழுதக் கற்றவன் அடியேன். அது மட்டும் புத்தியில் படிய மற்ற எல்லாம் பிடிபடாமல் போனது என் கர்ம பெலன் தான் என்று இன்னும் திடமாக நம்புகிறேன்.
சிநேகிதன் யோசனைப்படி கொண்டித் தோப்பு வைத்தியரிடம் போய்ச் சேர்ந்து என் துக்கத்தை உரைத்தபோது அவன் சொன்னான் – பிராம்மணரே, உமக்கு வேண்டப்பட்டதுதான் என்ன? முற்றிலும் சரியான, இலக்கணத்துக்குப் பொருந்தி வருகிற பாட்டு எழுத வசதியாக உம் ஸ்கலிதம் நிற்க வழி செய்வதா இல்லை நீர் வீட்டுக்காரியோடு சுகித்து சந்ததி விருத்தி செய்ய வாகாக மருத்துவம் செய்வதா? ரெண்டும் வேணுமென்றால் அது என்னைக் கொண்டு சடுதியில் எடுத்து முடிக்கிற காரியமில்லை. யோசித்துச் சொல்லும்.
நான் எத்தனை யோசித்தும் புரிபடாது போக, வைத்தியனே உபகாரமாகச் சொன்னான். ஓய் அய்யரே, பாட்டு எழுதும்போது வெளிப்பட்டு வெளிப்பட்டு சுக்கிலம் நீர்த்துப் போவதால் தான் நீர் மற்றைய இடத்தில் ஜெயம் அடைய முடியாமல் போகிறது. இன்னும் ரெண்டு மூணு வருஷம் இப்படியான சிற்றின்ப சாகித்தியம் எழுதுவதை நிறுத்திப் போடும். மாத்திரமில்லை. தேமா, புளிமா இன்னும் ஏதேதோ கிரமப்படி எழுதுவதே புலவர்களுக்கு வழக்கமில்லையோ. அதை முழுக்க மறக்கப் பாரும். உம் நல்லதுக்குத்தான் சொல்கிறேன். எழுதித்தான் ஆகவேண்டும் என்று உச்சி மயிர் சிலிர்த்து நின்றால் வசனமாக அதைச் செய்து விடும். கூடவே நான் கொடுக்கும் இந்த மருந்துகளையும் ஒரு மண்டலம் சாப்பிட்டு வாரும். இந்த எண்ணெய் மயில் றெக்கையிலிருந்து இறக்கியது. ராத்திரி படுக்கப் போகும்முன் இதை அரையில் அழுந்தத் தேய்த்துக் கொண்டால் சீக்கிரம் பெலன் கிடைக்கும்.
கௌபீனம் எல்லாம் எண்ணெய் வழிய அந்த மயில் றெக்கைத் தைலத்தை பூசிக் கொண்டு ஒரு ராத்திரி என் மனையாள் லலிதாம்பிகையை ஆலிங்கனம் செய்தபடி தரையில் கிடத்தினேன். அவள் எழுந்து தீபத்தைத் திரும்பப் பெருக்கி என் அரைக்கட்டை உற்றுப் பார்த்தாள்.
செத்து அழுகிக் கொண்டிருக்கும் ஏதோ ஜந்துவை உம் இடுப்பில் கட்டி வைத்திருக்கிறீரா? இந்த துர்வாடையை நான் எப்படி சகித்துக் கொள்வது. இடுப்புத் துணி அங்கேயே இருக்கட்டும். உருவ வேண்டாம். தற்போது எனக்கு உடம்பு முழுக்க வலியெடுப்பதால் என்னை சிரமப்படுத்தாதீர்.
கோரைப் பாயைச் சுருட்டிக் கொண்டு போய், கரப்பான் ஊரும் சமையல் கட்டில் அவள் அடுத்து நித்திரை போய்விட்டாள். எண்ணெய் வாடைக்கு நடுவே நானும் உறங்கிப் போனதால் அவளிடம் கொண்டித்தோப்பு வைத்தியன் பற்றிச் சொல்ல நினைத்தது நிறைவேறாமல் போய்விட்டது.
சொந்த ஸ்திரி மடியை விரிக்க மாட்டேன் என்றாலும் பரவாயில்லை. காசு கொடுத்தால் சம்போகத்துக்கு பெண் கிடைப்பாள் என்று பொடிக்கடை சக உத்தியோகஸ்தன்கள் சொல்லி சில வேச்யைகளோடு பழக வைத்தார்கள். அவர்களும் மூக்கைச் சுளித்தபடி காசும் வேணாம் உம் சங்காத்தமும் வேணாம் என்று வாடை தாங்காமல் ஓடி விட்டார்கள். பிற்பாடு, சற்று வயதானவளும், பீனிசத்தால் சதா மூக்கடைப்பு ஏற்பட்டு சிரமப்படுகிறவளுமான சூளை பங்காரு என்ற தெலுங்கு தேச தாசி சிநேகிதம் எனக்கு ஏற்பட்டது.
இலையில் கட்டி எடுத்துப்போன தயிர் சாதத்தை கடையில் வைத்துச் சாப்பிட்டுவிட்டு கடைக்குப் பின் சந்தில் இருந்த பங்காரு வீட்டுக்குப் போய் கொஞ்சம் போல் சிரம பரிகாரம் செய்து வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். எண்ணெய் குப்பியையும் அவள் வீட்டிலேயே கொண்டுபோய் வைத்துக் கொண்டேன். போன காரியம் முடிந்து அவசரமாகக் குளித்து உத்தியோகத்துக்குத் திரும்பத் தோதாக வீட்டில் பெரிய பித்தளை அண்டாவில் ஜலம் நிறைத்து வைக்கிறதை தாசி பங்காரு சந்தோஷத்தோடு செய்தாள்.
கொண்டித்தோப்பு வைத்தியன் இடைக்கிடைக்குப் பரிசோதித்து இன்னும் சுக்கிலம் கெட்டிப்படவில்லை என்று சொன்னாலும் எனக்கே பிரத்யட்சமாக அவன் வைத்தியத்தால் ஒரு பெலன் தெரிய வந்தது. அது யாதெனில், பங்காரு என்ற தாசியோடு நான் சுகித்திருந்த பகல் பொழுதுகளில் மனசில் வெல்ல அச்சு போல் அருமையான ஆசிரிய விருத்தப் பாக்கள் முட்டிமோதிப் புறப்பட்டன. அவற்றை குளிக்கும்போது நினைவு படுத்தி கடையில் வேலைக்கு நடுவே காகிதத்தில் எழுதி வைத்தேன். மதியாதார் தலைவாசல் மிதிக்க வேணாம் என்று பெரியோர் சொன்னாலும் பாதகமில்லை என்று முதலியைத் திரும்பப் போய்க் கண்டு காகிதக் கட்டை அவனுக்குக் காண்பித்தேன்.
இவ்வளவு உன்னதமான சிருங்கார செய்யுளை தான் ஆயுசிலேயே படித்ததில்லை என்று சொன்ன முதலி வைத்தியர் தரும் எண்ணையையும், பங்காரு தாசி சிநேகிதத்தையும் எந்தக் காரணத்துக்காகவும் விட்டுவிட வேண்டாம் என்று வேண்டிக் கொண்டான். கூடவே, எந்த பழைய செய்யுளுக்கு நடுவிலும் செருகாமல் நான் எழுதிய விருத்தங்களை புதிய புஸ்தகமாக அச்சுப் போடவும், அதில் வரும் லாபத்தை சரிவிகிதத்தில் பங்கு போடவும் உத்தேசம் தெரிவித்தான்.
ஆனாலும் பீனிசம் முற்றி ஜன்னி கண்டு பங்காரு மரித்ததோடு அந்த வியாபார முஸ்தீபுகள் எங்கும் முன்னேறாமல் முடிவடைந்தன. விருத்தமும் எழுத முடியாமல், லலிதாம்பிகையோடு கூடியிருந்து சந்ததியையும் விருத்தி பண்ண முடியாமல் கையில் அபூர்வமாகத் தங்குகிற துட்டையும் கொண்டித்தோப்பு வைத்தியனுக்குக் கொட்டி அழுது அரையில் துர்வாடையை பூசிக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து அதை நிறுத்திப் போட்டேன்.
ஆனாலும், லலிதாம்பிகை என்னமோ நான் மூச்சுக் காற்று படுகிற தொலைவுக்கு நெருங்கி வந்தாலே உம் அரையில் நெடியைப் பற்றி நினைத்தால் அன்னத் திரேஷமாக இருக்கு என்று சொல்லி அந்தாண்டை போய்ச் சுருணையை விரித்து முடங்குவதையே நித்யக் கிரமம் செய்து கொண்டிருந்தாள்.
இது இப்படி இருக்க, தீபாவளி கழிந்து திருக்கார்த்திகைக்கு கடலையும், பொரியும், அவல் உருண்டையும் செய்து எடுத்துக்கொண்டு மாட்டு வண்டி பிடித்து பட்டணம் வந்தாள் என் மாமியார். பேச்சு வாக்கில் கழுக்குன்றம் மலையில் ஒரு தடவை கழுகுகளை தெரிசனம் செய்து தம்பதி சமேதராக அங்கே திருக்குளத்தில் ஸ்நானம் செய்து பிரார்த்தித்தால் புத்ர பாக்கியம் உண்டாகும் என்று பிரஸ்தாபித்தாள்.
அவள் ஊருக்குத் திரும்பியானபோது நானும் வீட்டு ஸ்திரியும் ஆலோசனை செய்து ஒருவிசை கிழவி சொன்னபடிக்கே திருக்கழுக்குன்றம் போகத் தீர்மானித்தோம். பொடிக்கடை அடைத்து வைத்த போன புரட்டாசி அமாவாசை தினத்தில் அந்தப்படிக்குப் போய் தரிசனம் செய்ய உத்தேசமாக இருந்தது. பங்காரு தாசியின் தம்பியும் கொத்தவால் சாவடியில் காய்கறி விற்கிற கடையில் நிறுத்து அளந்து கொடுக்கிற ஜோலி செய்கிறவனுமான பாலையா மூலம் இங்கேயிருந்து திருக்கழுக்குன்றம் போய் இரண்டு அல்லது மூணு தினத்தில் திரும்பி வர மாட்டு வண்டி ஏற்பாடு செய்து அச்சாரமும் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். தேவரீர், என் கஷ்டம் சொல்லவொண்ணாத படி போனது அந்த நேரத்தில் தான்.
வேளை கெட்ட வேளையில் தூரம் வந்துவிட்டது என்று லலிதாம்பிகை கிணற்றுப் பக்கம் பிரஷ்டையாக கந்தல் சுருணையோடு உட்கார்ந்தபடி சொன்னாள். அவள் வரத் தோதுப்படாது போய் நான் தனியே பிரயாணம் போனது இந்த விதமாகத்தான். அவளுக்கு அன்றைக்கு மாதவிலக்கு ஏற்படாதிருந்தால் காராக்ருஹத்தில் துன்பப்பட்டுக் கிடந்தபடிக்கு இந்த லிகிதத்தை சர்க்கார் பார்வைக்கு அனுப்புகிற துரதிர்ஷ்டம் எனக்கு ஏற்படாமலேயே போயிருக்கும்.
லிகிதம் எழுதுகிற பாராச் சேவகர் கையில் காகிதம் தீர்ந்து விட்டது என்று சொல்கிறார். அரைகுறையாக இதை எழுதி மேன்மை பொருந்திய சர்க்காருக்கு அனுப்ப எனக்கு மன சம்மதமில்லை. ஆனாலும் கீர்த்தி நிரம்பிய வக்கீல் துரையவர்கள் சொன்னபடிக்கு எழுதினவரைக்கும் இப்போது அனுப்ப சித்தம் செய்திருக்கிறேன். சொல் குற்றம் பொருள் குற்றம் பொருட்படுத்தாது தெய்வம் போன்ற தேவரீர் இதை வாசித்து எனக்குக் கருணை செய்ய வேணும். அடுத்த மாதம் எட்டு தேதிக்கு என்னை உசிர் உடம்பிலிருந்து பிரியும் வரை தூக்கில் போட்டுக் கொல்ல மேன்மை தாங்கிய துரைத்தனத்து நீதிமான் விதித்திருக்கிறபடியால் இந்த உயிரைக் காப்பாற்ற தெய்வம் போலும் இப்போது துணையில்லை. சர்க்காரின் கடாட்சத்தை மாத்திரம் தெண்டனிட்டு யாசிக்கிறேன்.
வேணும் பகவத் கிருபையும் ராஜதானி மகாப்ரபு கருணா கடாட்சமும்.
இவ்வண்ணம்,
தங்கள் கீழ்ப்படிதலுள்ள மகாலிங்கய்யன்.
(தொடரும்)
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாலு
- தாகூரின் கீதங்கள் – 45 பிரிந்து செல்வோம் !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
- இந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்
- கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர் இளங்கோ(கனடா) – ஏலாதி இலக்கியவிருது
- அக அழகும் முக அழகும் – 2
- புன்னகைக்கும் இயந்திரங்கள் – 1
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- ‘காற்றுவெளி’ –
- அரிமா விருதுகள் 2008
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்
- எண்ணாமல் துணிக
- வர்ணஜாலம்
- குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள்
- பயங்கரவாத நினைவுச் சின்னங்கள்!
- ஒலிம்பிக்
- “ஆல்பத்தின் கனவுகள்”
- இருக்கவே செய்கிறார் கடவுள்
- போதை நிறைந்ததொரு பின்னிரவில்..
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு ! [கட்டுரை: 39]
- என் காதல்
- “மணமகள் தேவை விளம்பரம்”
- புன்னகைக்கும் இயந்திரங்கள் -2
- சென்னை வந்து சேர்ந்தேன்.
- இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1
- காஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி?
- இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1
- களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்
- மோகமுள்!
- அரசே அறிவிப்பாய் ஆங்கு!
- ஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம்
- போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
- கவிதைகள்
- பிரிந்தும் பிரியாத நினைவுகள்