தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
ஞானக் கேள்விகள் மனதைத் துளைப்பவை !
முகத்துதி கேட்க ஏங்குவோம் நாம் !
மனிதர் ஒருவர் யாராயினும் சரி
தனது பாடலை வாசித்துக் காட்டின்
தைரியமாய்ச் சொல்வேன் நான்:
“எழுதத் துடிக்கும் அரிப்பு
மனத்துக்கொரு
பொழுது போக்கு ! அதை
நிறுத்திவிட
உறுதி தேவை
நாகரீக மனிதர்க்கு ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)
மாலியர் வாய்மொழிகள்
முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.
மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.
Fig. 1
Police Enquiry
பேராசைக் கஞ்சன்
அங்கம் 5 காட்சி 1
பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:
எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.
கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.
எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.
ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.
மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.
வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.
கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..
சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.
மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.
ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.
வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்
***************
அங்கம் 5 காட்சி 1
இடம்: பாரிஸில் போலீஸ் நிலையம்.
நேரம்: பகல் வேளை
காட்சி அமைப்பு: போலீஸ் அதிகாரிகள், எட்வேர்டு, சமையல்காரன் ஜேகப், வீட்டு வேளையாள் வில்லியம். போலீஸ் உடையில் இல்லாத உளவு அதிகாரி ஒருவர் எட்வேர்டுடன் களவுப் பணம் பற்றி பேசுகிறார்.
போலீஸ் உடையில்லாத உளவு அதிகாரி: (மெதுவாக) மிஸ்டர் எட்வேர்டு ! உங்கள் பிரச்சனையை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான்தான் வீட்டுக் களவுகளை விசாரிப்பவன் ! விசாரித்துக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பவன் ! கண்டுபிடித்துக் கள்ளரைச் சிறையில் தள்ளுபவன். கள்ளனைக் காணும் வரை என் கண்களுக்குத் தூக்கம் வராது !
எட்வேர்டு: இப்போது தூக்கமில்லாமல் இருப்பது நான் ! என் பணப் பெட்டி திருடுபோய் இருபத்தி மணி நேரம் ஆகி விட்டது ! . . . . (அருகில் நெருங்கி) அது சரி, இதுவரை எத்தனை கள்ளரைப் பிடித்திருக்கிறீர் ?
உளவு அதிகாரி: எத்தனை என்றா கேட்கிறீர் ? இதுதானே எனது முதல் கேஸ் ! முதல் கள்ளனைப் பிடிக்க எனக்கோர் வாய்ப்பளித்தற்கு நன்றி மிஸ்டர் எட்வேர்டு !
எட்வேர்டு: [முணுமுணுப்புடன்] என் பண முடிப்பு கையிக்கு வருவது கனவுதான் !
உளவு அதிகாரி: என்ன சொல்கிறீர் ? பண முடிப்பை உமது கையில்தான் கொடுப்பேன் ! அதற்கு முதலில் கள்ளனைப் பிடிக்க வேண்டாமா ? எங்கே இருக்கிறான் என்று சொல்லுங்கள்? இப்போதே அவனைப் பிடித்து பணத்தைப் பறித்து வருகிறேன்.
எட்வேர்டு: எனக்குத் தெரிந்தால் ஏனிங்கு நான் வருகிறேன் ? கையை முறுக்கி பணத்தைக் கறக்காமல் விடுவேனா ? யாரென்று தெரிமால்தான் உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்.
உளவு அதிகாரி: எவ்வளவு பணம் திருடு போனது ? (கிளார்க்கைப் பார்த்து) விபரத்தை எல்லாம் அவர் சொல்லச் சொல்ல எழுது !
எட்வேர்டு: பத்தாயிரம் டாலர்கள் !
உளவு அதிகாரி: பத்தாயிரம் டாலரா ? பெரிய திருடுதான் ! எங்கே திருடு போனது ? யாரைச் சந்தேகப் படுகிறீர் ? உங்களுக்கு எதிரிகள் யாராவது இருக்கிறார்களா ?
Fig. 2
Edward Perplexed
எட்வேர்டு: எனக்கு எதிரிகள் பலர் ! எல்லோரையும் நான் சந்தேகப் படுகிறேன் ! கள்ளன் உள்ளே உள்ளானா அல்லது வெளியே உள்ளானா என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
உளவு அதிகாரி: எதிரிகள் சிலர் என்றால் பிடிப்பது எளிது ! பலர் என்றால் பிடிப்பது கடினம் ! பல மாதங்கள் ஆகும் ! எல்லோரையும் என்றால் எனக்குத் தெரியாது. யார் யாரை என்று பெயரைக் குறிப்பிட்டால் அவரை மட்டும் விசாரிக்கலாம். யாரையும் மிரட்டக் கூடாது. ஆரவாரமில்லாமல் ஆளைப் பிடித்துப் பணத்தைப் பறிக்க வேண்டும். நீங்கள் சந்தேகிக்கும் முதல் ஆசாமி யார் ? சொல்லுங்கள், அழைத்து வருகிறோம்.
எட்பேர்டு: சமையல்காரன் ஜேகப்பை முதலில் விசாரிக்க வேண்டும். நானே அவனுக்குச் சொல்லாமல் அழைத்து வந்திருகிறேன். அதோ அவன் இங்குதான் வந்து கொண்டிருக்கிறான்.
(ஜேகப் பின்னால் திரும்பிப் பேசிக் கொண்டே நுழைகிறான்)
ஜேகப்: நான் திரும்பி வருவேன், கழுத்தை அறுத்துத் துண்டாக்கு. காலிரண்டை வெட்டு ! பிறகு தோலை உரித்துவிடு. கடைசியில் சுட்டுப் பொசிக்க வேண்டும் ! (போலீஸ் அதிகாரியப் பார்த்து) கும்பிடுகிறேன் ஸார் ! உங்களைக் கண்டுபேச வரச் சொன்னார் எங்கள் எஜமானர் எட்வேர்டு !
உளவு அதிகாரி: பயங்கர ஆசாமியா இருக்கிறான் உங்கள் வேலைக்காரன் ! இவன்தான் பணத்தைத் திருடி இருக்க வேண்டும் நிச்சயம் ! மூஞ்சைப் பார்த்தாலே தெரியுது !
எட்வேர்டு: ஜேகப் ! யார் தோலை உரித்துக் காயப் போடுவாய் ? என் பணத்தைத் திருடிய கள்ளனையா ?
ஜேகப்: இல்லை எஜமான் ! உங்களுக்கு மாலை விருந்து தயாரிக்க வேண்டும் ! கோழியை எப்படி அறுப்பது என்று உதவி ஆளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். நான் இங்கு வந்தபின் அவன்தான் சமையல் அறை ராஜா !
எட்வேர்டு: இப்போது சாப்பாடு முக்கியமில்லை ! உனக்காக அவர் காத்திருக்கிறார். அவர் கேட்பதற்குப் பதில் சொல் !
உளவு அதிகாரி: உன் பெயரென்ன ? அதிர்ச்சி அடையாதே ! நான் ஒன்றும் உன்மீது குற்றம் சாட்டப் போவதில்லை ! பரிவாகக் கேட்பேன். பதில் மட்டும் சொல். பயப்படாமல் சொல் !
ஜேகப்: எஜமான் ! யாரிந்த நபர் ? அறிமுகப் படுத்த வில்லையே ? நம் மாளிகை விருந்தாளியா ?
எட்வேர்டு: அவர் கேட்பதற்குப் பதில் சொல். அவர் விருந்தாளி இல்லை ! நீதான் அவரது விருந்தாளியாகப் போகிறாய் !
உளவு அதிகாரி: உனக்கு ஒன்றும் நேராது ! உன் எஜமானர் முன்பு உண்மையைச் சொல். உன்னைச் சிறையில் அடைக்க மாட்டேன், தீர விசாரிப்பது என் தொழில் ! உன்னைச் சிறையில் போடுவது நானில்லை.
ஜேகப்: கேளுங்கள் ஸார் ! எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லுகிறேன். சமையல் திறமையைப் பற்றிக் கேளுங்கள் ! நான் வாகன ஓட்டி. வாகனக் குதிரையைப் பற்றிக் கேளுங்கள் ! எனக்கு நிரம்பத் தெரியும்.
எட்வேர்டு: முட்டாள் ! உன் சமையல் ராஜியத்தைப் பற்றி இங்கு அளக்காதே ! நேற்று நடந்த வீட்டுக் களவைப் பற்றி உனக்குத் தெரிந்ததைச் சொல்.
ஜேகப்: (மனக் கவலையுடன்) என்ன ? யாரோ பணத்தைத் திருடி விட்டாரா ?
Fig. 3
Edward Shocked to hear about
William
எட்வேர்டு: ஆமாடா அயோக்கியப் பயலே ! பணத்தை நீ திருப்பித் தராவிட்டால், தூக்கில் உன்னைத் தொங்க வைத்து விடுவேன் !
உளவு அதிகாரி: [சாந்தமாக] அட கடவுளே ! அவனைத் திட்டாதீர் ! கோபப் படாதீர் ! கோபம் மூட்டாதீர் ! முகத்தைப் பார்த்தால் சாந்தம் தவழ்கிறது ! (ஜேகப்பைப் பார்த்து) உன்னைச் சிறையில் தள்ளுவதற்கு முன்பே உனக்குத் தெரிந்ததைச் சொல்லிவிடு ! உண்மையைச் சொல்லி விடு ! என்னருமை நண்பா ! என்னிடம் சொல்லி விட்டால் உனக்கு ஒன்றும் நேராது ! அதற்கு உத்திரவாதம் தருகிறேன். உன் எஜமான் சம்மானம் அளிப்பார் ! நேற்று யாரோ அவரது பணத்தைத் திருடி விட்டார். அதைப் பற்றி உனக்குச் சிறிது தெரியும் !
ஜேகப்: (முணுமுணுத்து) வில்லியம் இந்த வீட்டுக்கு வேலையாளாய் வந்த பின் எல்லோமே தலைகீழாகப் போய்விட்டது. நம்பிக்கை நாயகனாக வேடம் போட்டு ஏமாற்றிக் கொண்டு வருகிறான். என்னை எஜமானரிடம் காட்டிக் கொடுத்து அடிவாங்க வைத்ததை நான் மறக்க முடியுமா ? அவன்தான் வீட்டில் கன்னக்கோல் இட்டுப் பணத்தைக் களவாடி இருக்க வேண்டும் !
எட்வேர்டு: என்னடா முணுமுணுக்கிறாய் ! காது கேட்கும்படி பேசு !
உளவு அதிகாரி: அதட்டாதீர் அவனை ! அவன் சொல்வதற்குப் பயிற்சி செய்கிறான். யோசித்துச் சொல்லட்டும். அவன் உத்தமன் என்று சொன்னேன் அல்லவா ?
ஜேகப்: உண்மையைச் சொல்லிவிடவா ? எஜமான், என்னை நம்புவீரா ? சொன்னால் கோபப்படக் கூடாது ! உங்கள் பணத்தைத் திருடியவன் யார் தெரியுமா ? வில்லியம் ! உங்கள் மெய்க்காவலன், நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் ! (எட்வேர்டு ஆங்காரமாய்க் கையை ஓங்குகிறார்) இதோ பார்த்தீரா ? கோபப்பட்டு அடிக்க வருவதை ! முன்பே நினைத்தேன், நம்ப மாட்டீர் என்று !
எட்வேர்டு: (கையை ஓங்கி ஜேகப்பை விரட்டிக் கொண்டு ஓடுகிறார்) அயோக்கிய ராஸ்கல் ! பணத்தை நீ திருடிக் கொண்டு பழியை வில்லியத்தின் மீதா போடுகிறாய் ? உனக்கு அவனைப் பிடிக்காது ! எனக்கு அது தெரியும் !
ஜேகப்: ஐயோ எஜமான் ! விட்டிடுங்கள் என்னை ! நிரபராதி நான் ! பத்து வருடமா நான்தான் சமையல் வேலை செய்கிறேன் ! இதுவரை ஒரு டாலர் கூட காணாமல் போனதில்லை ! நேற்று வந்த வில்லியம் மெய்யாக வேலை செய்ய வரவில்லை ! எதற்கு வந்திருக்கிறான் என்பதை இப்போது காட்டி விட்டான் ! பிடியுங்கள் உண்மைக் கள்ளனை ! நான் கள்வனா ? இல்லை ! இல்லை ! இல்லை !
ஜேகப்: பொய் சொல்லித் தப்பிச் செல்லவா பார்க்கிறாய் ? உன் முதுகு எலும்பைப் பிளக்கிறேன்.
உளவு அதிகாரி: (எட்வேர்டைத் தடுத்து) அது சட்டப்படி குற்றம். அது எங்கள் வேலை ! உங்கள் வேலை வில்லியத்தைப் பிடிப்பது. ஏன் வில்லியத்தைக் காப்பாற்ற முனைகிறீர் ? ஜேகப் சொல்வதில் ஏதோ உண்மை காணப் படுகிறது !
எட்வேர்டு: வில்லியம் கள்ளன் என்பதை எப்படிக் கண்டுபிடித்தாய் ?
ஜேகப்: வில்லியம் மாளிகைக்கு வேலை செய்ய வரவில்லை ! அவனைப் பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியாது எஜமான் !
உளவு அதிகாரி: உண்மையா மிஸ்டர் எட்வேர்டு ?
ஜேகப்: எங்கே அவனுடைய தந்தை யாரென்று சொல்லுங்கள் ? எங்கே அவர் வாழ்கிறார் என்று சொல்லுங்கள் ?
எட்வேர்டு: தந்தை பெயர் தெரியாது எனக்கு. ஆனால் வீட்டு விலாசம் சொன்னான். மறந்து விட்டேன் !
ஜேகப்: வில்லியம் நீங்கள் இல்லாத போது வீட்டில் வேலை செய்வது கிடையாது ! தோட்டத்தில் நெடுநேரம் எலிஸபெத்துடன் உல்லாசமாகச் சல்லாபித்துக் கொண்டிருப்பான் ! அவனைக் கண்டால் எலிஸபெத்தின் கண்களில் ஒளி உண்டாகுது. வீட்டில் எல்லா இடமும் தெரிந்தவன் வில்லியம் ஒருவன்தான் !
உளவு அதிகாரி: யாரிந்த எலிஸபெத் மிஸ்டர் எட்வேர்டு ?
எட்வேர்டு: என் புதல்வி ! எலிஸபெத்தைக் கண்காணிக்க நான்தான் வில்லியத்தை வேலைக்கு வைத்தேன். முதலில் ஜேகப் திருடனா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும் ! நேற்று நீ தனியாகத் தோட்டத்தில் திரிந்தாயா ?
ஜேகப்: இல்லை ! எதற்காக அப்படி கேட்கிறீர்கள் எஜமான் ?
எட்வேர்டு: மடையா ! அங்குதான் என் பணத்தைப் புதைத்து வைத்திருந்தேன்.
ஜேகப்: எதில் புதைத்து வைத்திருந்தீர்கள் ?
Fig. 4
Begging Servant Jakob
எட்வேர்டு: மடையா ! ஒரு பெட்டியில் புதைத்து வைத்திருந்தேன்.
ஜேகப்: ஆஹா ! எஜமான் ! வில்லியம் கையில் நேற்று ஒரு பெட்டியைப் பார்த்தேன்.
எட்வேர்டு: ஆஹா ! அப்படியா ? எப்படி இருந்தது அந்தப் பெட்டி ?
ஜேகப்: பணப் பெட்டி போல் தெரிந்தது !
எட்வேர்டு: மடையா ! எப்படி இருந்தது என்று விளக்கமாய்ச் சொல் !
ஜேகப்: பெரிய பெட்டியாய்த் தெரிந்தது !
எட்வேர்டு: இருக்க முடியாது ! நான் புதைத்த பெட்டி சிறியது !
ஜேகப்: ஆமாம் அருகில் பார்த்தால் சிறிய பெட்டியாய் தெரியும் !
எட்வேர்டு: முட்டாள் ! தூரத்தில் பார்த்தால் சிறியதாய்த் தோன்றும் ! அருகில் பார்த்தால் பெரிதாய்த் தெரியும் ! சிறியதா ? பெரியதா ?
ஜேகப்: மாற்றிச் சொல்லி விட்டேன் ! சிறிய தென்றே எடுத்துக் கொள்ளுங்கள் !
எட்வேர்டு: எந்த நிறத்தில் இருந்தது சொல் ?
ஜேகப்: எந்த நிறம் ? சிவப்பு நிறமா ?
எட்வேர்டு: இல்லை ! சாம்பல் நிறம் !
ஜேகப்: இருட்டில் சரியாகத் தெரிய வில்லை ! ஆமாம் அது சாம்பல் நிறம்தான் ! கண்டுபிடித்து விட்டோம் கள்ளனை ! மெச்சுகிறேன் ஜேகப் !
எட்வேர்டு: ஆஹா ! ஆபீஸரே ! சாம்பல் நிறப் பெட்டிதான் ! ஜேகப் ! போடா ! போய் வில்லியத்தை இழுத்து வா !
ஜேகப்: (ஓடிக் கொண்டே) எஜமான் ! வில்லியம் காதைப் பிடித்து இழுத்து வருகிறேன். போலீஸிடம் மாட்டிக் கொண்டான் போக்கிரிப் பயல் !
உளவு அதிகாரி: என் முதல் கள்ளனைப் பிடித்து விட்டேன். சம்பளவு உயர்வைக் கேட்க வேண்டும் !
(தொடரும்)
************************
தகவல் & படங்கள்
Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre
Based on The Play
Moliere’s Miser (1922-1673)
1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”
2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)
3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference
4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.
5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)
6. Moliere’s The Misanthrope & Other Plays By Penguin Classics (2000)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 22, 2007)]
- மும்பைத் தமிழர்களின் அரசியல்…
- படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த
- வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)
- உயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு
- பாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”
- வாஸந்தி கட்டுரைகள்
- மொழி
- அவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று
- கனவு வெளியேறும் தருணம்
- தைவான் நாடோடிக் கதைகள் (3)
- விசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை!
- ஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு
- பூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு
- நேற்றிருந்தோம்
- பெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்
- ஒட்டுப் பீடியில் எரியும் உலகம்
- பஞ்ச் டயலாக்
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்
- தமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:
- லா.ச.ரா.
- கடிதம்
- அடையாளங்களை விட்டுச்செல்லுதல்
- கதை சொல்லுதல் என்னும் உத்தி
- இன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்
- ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது
- மாத்தா ஹரி அத்தியாயம் -39
- மிஸ்கா, என்னைத்தொடர்ந்து வரும்
- அடுத்த முதல்வர்? பதற்றத்தில் ஸ்டாலின்
- ஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்
- ரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…?
- தாய் மண்
- தாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை !
- அக்கினிப் பூக்கள் … !-3
- பாரதி
- கடமை
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)
- அது ஒரு விழாக்காலம்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1
- கணையாழி விழா 2007 (18.11.2007)