பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பொய் உரைத்தால் இறைவனே
என்னை அடித்துக் கொல்லட்டும்
சொன்னதைப்
பிறருக்கு உறுதிப் படுத்த !
இதயமும் இதயமும் தழுவிக் கொண்டு
பேசிக் கொள்ள அனுமதி தா !
உனது நட்பரங்கினில்
எனக்கொரு
இடம் கிடைக்கட்டும் !
உலுக்கிடு உனது நெஞ்சை,
எனக்கு
அளித்திட உனது நட்பை ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

Fig. 1
Moreen, Edward, Elizabeth & Giraham

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 4 காட்சி 2

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************
அங்கம் 4 காட்சி 2

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகையில் தனி அறை. புதல்வன் கிரஹாம், புதல்வி எலிஸபெத், மணப்பெண் மொரீன் பேசிக் கொண்டிருக்கும் போது கிரஹாம் மொரீனை முத்தமிடுகிறான். திடீரென உள்ளே நுழைந்த எட்வேர்டு அதைப் பார்த்து விடுகிறார்.

Fig. 2
Quarrel Between Father & Son

எட்வேர்டு: (வந்து கொண்டே கோபமாக) என்ன ? பார்க்கச் சகிக்க முடியவில்லை ! கிரஹாம் வரப்போகும் சிற்றன்னையின் வாயில் முத்தமிடுகிறான் ! மொரீன் அதைத் தடுக்காமல் முத்தம் கொடுக்க அவனை அனுமதிக்கிறாள். ஏதோ தவறு நடந்து விட்டது ! ஏன் கிளாடியா என்னைப் பார்த்ததும் பார்க்காமல் ஓடிச் செல்கிறாள் ? (அலறிக் கொண்டு) நிறுத்துடா கிரஹாம் ! அவள் எனக்குச் சொந்தமாகப் போகிறவள் ! மொரீன் உன் சிற்றன்னை !

கிரஹாம்: மன்னித்து விடுங்கள் அப்பா ! மொரீன் இப்போது தனிப் பெண் ! மொரீன் உங்களை மணக்க இன்னும் ஒப்புக் கொள்ள வில்லை ! ஒப்புக் கொண்டதாகச் சொல்ல வில்லை ! மேலும் நீங்கள் அவளை நேசிக்க வில்லை ! ஆனால் மணக்க விரும்புகிறீர்கள் ! மொரீனை உங்கள் மனைவி என்பதை விட வீட்டு எஜமானி என்று சொல்கிறேன்.

எட்வேர்டு: அயோக்கியப் பயலே மூடு வாயை ! என்ன பிதற்றுகிறாய் ? (மொரீனைப் பார்த்து) இதோ வாகனம் வந்து விட்டது. நீங்கள் விரும்பினால் போகலாம்.

[அப்போது வாகனம் வருகிறது. எலிஸபெத், மொரீன் இருவரும் வெளியேறுகிறார்கள்.]

கிரஹாம்: அப்பா நீங்கள் போகாததால், நான் அவருக்குத் துணையாகப் போகிறேன்.

எட்வேர்டு: நீ அவருடன் போக வேண்டாம் ! நில், பாலுக்குத் துணை பூனையா ? உன்னோடு நான் பேச வேண்டும் ! எனக்குத் தெரியாமல் என்னமோ மறைவில் நடக்கிறது ! மொரீனைக் கடத்திக் கொண்டு போகப் போகிறாயா ? அவளை ஏன் வாயில் முத்தமிட்டாய் ?

கிரஹாம்: பிறகு எங்கே முத்தமிட வேண்டும் ? நீங்கள் அவளை முத்தமிட வில்லை !

எட்வேர்டு: அவள் எனக்கு மனைவியாக வரப் போகிறவள் ! உனக்குச் சிற்றன்னையாக வரப் போகிறவள் ! இதைப் பிறர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் ?

கிரஹாம்: மொரீனை நீங்கள் மணந்தால் பிறர் என்ன நினைப்பார்கள் ? தாத்தாவும் பேத்தியும் தம்பதிகளாய் ஆனதைக் கைகொட்டிச் சிரிப்பார்கள் ! மொரீன் உங்களுக்குத் தகுதி இல்லாதவள் ! அவள் உங்களை அறவே வெறுக்கிறாள் ! அதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறாள் ! மணக்கப் போகும் மனிதருக்கு வாலிப மகன் ஒருத்தன் இருப்பது தெரியாதாம் ! தெரிந்தால் இந்த திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க மாட்டாளாம் ! மொரீனுக்கு உங்கள் மீது சிறிதும் அன்பில்லை ! பரிவில்லை ! பாசமில்லை ! பணத்தின் மீதுதான் கண் ! அது எனக்குத் தெரியுது ! ஆனால் உங்களுக்குத் தெரிய வில்லை ! இந்த வயதில் உங்களுக்குத் திருமணமா ? உங்களுக்கு மூச்சு திடீரென்று நின்று போனால், நேற்று வந்த மொரீன் வீட்டைச் சுருட்டிக் கொண்டு போய் விடுவாள் ! எங்களுக்கு நீங்கள் எதுவும் மரண வில்லில் எழுதி வைக்க வில்லை. நெற்றி வேர்வை சிந்தி நீங்கள் சம்பாதித்த பணத்தில் பாதி மொரீனுக்குப் போனால் எங்கள் கதி என்ன ?

எட்வேர்டு: (சற்று சிந்தித்து) நீ சொல்வதில் உண்மை இருக்கிறது. இந்த வயதில் எனக்குத் தேவை யில்லை திருமணம் ! சரி ! இப்போது என்னிடம் சொல் ! மொரீனை நீ விரும்புகிறாயா ?

கிரஹாம்: இல்லை ! நானவளை விரும்ப வில்லை ! என்னுயிர்த் துணைப் பெண்ணாய் வர வேண்டுமென ஆராதிக்கிறேன் ! அவளில்லை என்றால் என் வாழ்க்கை இருண்டு விடும்.

எட்வேர்டு: அடாடா ! மொரீன் முதலில் வந்த போதே என்னிடம் இதைச் சொல்லி இருக்கக் கூடாதா ? இதற்கு முன்பே அவளைப் பார்த்திருக்கிறாயா ?

கிரஹாம்: ஒரு வருடமாக மொரீனைத் தெரியும். அவளும் நானும் காதலாரப் பழகி வருகிறோம். ஒருவரை ஒருவர் தெரிந்து வருகிறோம். ஆனால் நான் உங்களுடைய புதல்வன் என்பது அவளுக்கு இப்போதுதான் தெரியும்.

எட்வேர்டு: என் முன்னால் நீங்கள் இரண்டு பேரும் ஒன்றும் அறியாதவர் போல் நடித்தீர்களா ? நடிப்பில் கைதேர்ந்தவன் நீ !

கிரஹாம்: அப்பா உங்களிடம் சொல்லப் பயம் எனக்கு ! மொரீனின் தாயார் உங்களைத்தான் மணமகன் என்று சொல்லிப் பார்த்துவர அனுப்பி இருக்கிறாள் ! உங்கள் சொந்த வாழ்க்கையில் மைந்தன் நான் குறுக்கிடலாமா ?

எட்வேர்டு: அவளை மணம் செய்து கொள்வதாய் உறுதியாகச் சொல்லி விட்டாயா ?

கிரஹாம்: ஆமாம் நாங்கள் இருவரும் மணந்து கொள்ளத் தீர்மானம் செய்து விட்டோம். ஆனால் என் விருப்பத்தை உங்களுக்கு நான் சொல்ல வில்லை ! மொரீன் என்னைப் பற்றி அவளது அன்னைக்குச் சொல்ல வில்லை ! எப்படி எங்கள் நாடகம் ? அதற்குள் இடையே
நீங்கள் புகுந்து எங்கள் தீர்மானத்தைக் கெடுத்து விட்டீர்கள் !

எட்வேர்டு: (சட்டெனக் கோபமாக) அயோக்கியப் பயலே ! நீதான் ஊமையாக இருந்து என் திருமணத்தைக் கலைக்கத் துணிந்து விட்டாய். வாயில் முத்தமும் கொடுத்து அவளை மயக்கி விட்டாய். என்னிடமிருந்து அவளைப் பிரிக்க முனைந்து விட்டாய் ! எனக்கு எந்த வித மதிப்பும் நீ காட்ட வில்லை ! எனக்கும் அவளுக்கும் திருமணம் நடந்தால் அன்றிரவே நீ அவளைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவாய் ! என் மாளிகையில் உனக்கினி இடமில்லை ! திருமணத்துக்கு இடையூறாய் நிற்கும் நீ எனக்கினி மகனில்லை ! நான் உன் பிதா இல்லை !

Fig 3
Ed loses Money

கிரஹாம்: காதல் பிரச்சனையில் தந்தை மகன் உறவெல்லாம் அறுந்து போகும். மொரீன் மீது எனக்கும் உங்களுக்கும் போட்டி. அவள் யாரை நாடுகிறாளோ அவர்தான் அவளுக்குக் கணவன். நானெதற்கு என் வாழ்வை உங்களுக்காகத் தியாகம் பண்ண வேண்டும் ? நீங்கள் பெரிய மனது வைத்து எனக்காக மொரீனை ஏன் விட்டுக் கொடுக்கக் கூடாது !

எட்வேர்டு: பத்து வயது பையன் என்றால் பளாரென்று அறைந்திருப்பேன் ! நீ வாலிப மூடன் ! தந்தைக்கு அமைந்த பெண்ணைக் கடத்திச் செல்ல என்னிடம் அனுமதியா கேட்கிறாய் !

கிரஹாம்: அப்பா ! சிந்திக்காமல் பேசுவது நீங்கள் ! நான் உங்கள் மணப் பெண்ணைத் தூக்கிச் செல்ல வில்லை ! நான் ஏற்கனவே மொரீனை நேசிப்பவன் ! என்னை ஏற்கனவே மணம் புரிய மொரீன் விரும்பியவள் ! நீங்கள்தான் இடையே புகுந்து என் மணப் பெண்ணைக் கடத்திச் செல்பவர் ! எனக்காக மொரீனை விட்டுவிடுங்கள் ! அல்லது நாங்கள் எங்காவது ஓடி விடுவோம் !

எட்வேர்டு: எனக்கு இப்படி ஒரு திருட்டு மகன் பிறக்க வில்லை என்று உன்னைப் புறக்கணித்து விடுவேன். மொரீனுடைய தாயிக்குப் பல்லாயிரம் டாலர் சீர்ப்பணம் தந்து மொரீனை நான் மணந்து கொள்வேன் தெரியுமா ? முட்டள் ! உனக்கு வீடில்லை ! வேலை இல்லை ! வேர்வை சிந்திப் பிழைத்த தில்லை ! உன் கையில் ஐந்து விரல்களைத் தவிர ஐந்து டாலர் கூடக் கிடையாது ! வெறுங்கையில் கோலம் போடுவாயா ? தாளம் போடுவாயா ?

கிரஹாம்: அப்படியா சொல்கிறீர் ? நான் கடன்வாங்கிக் கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்து விட்டேன் ! எனக்கு உங்கள் வீடும் வேண்டாம் ! பணமும் வேண்டாம்.

எட்வேர்டு: முட்டாள் ! அறிவோடு பேசு ! உன் கடனுக்கு என் வீடல்லவா நீ அடமானம் செய்ய வேண்டும் ! அந்த அடமானத்துக்கு என் உடன்பாட்டு தேவை ! மரியாதையாக மொரீனை எனக்கு விட்டுவிடு ! எல்லாம் சரியாகப் போய்விடும் ! நான் கையெழுத்திடுகிறேன் உன் பத்திரத்தில். உனக்கு உன் கடன் தொகை கிடைக்கும் நிச்சயம் !

கிரஹாம்: எனக்கு மணப்பெண் பறிபோகும் நிச்சயம் ! நல்ல உடன்பாடு இது, கண்ணிரண்டை விற்றுச் சித்திரம் வாங்குவது ? உங்களுக்குக் கண்ணிருந்தும் பார்வை போனது.

எட்வேர்டு: அடே ! அயோக்கியப் பயலே ! வாழ்க்கையில் பணம்தான் எல்லாம் ! பணமில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை !

[அப்போது வேலையாள் வின்சென்ட் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறான்]

வின்சென்ட்: எஜமான் ! எஜமான் ! உங்கள் குடி மூழ்கிப் போச்சு ! உங்கள் பணத்தை யாரோ களவாடிப் போய்விட்டார் ! தோட்டத்திலே இந்தப் பெட்டி காலியாகக் கிடந்தது ! தடுமாறி விழுந்த நான்தான் அதைக் கண்டுபிடித்தேன். எஜமான் இந்த இழப்பை என்னால் தாங்க முடியாது ! உங்களாலும் தாங்க முடியாது !

[காலிப் பெட்டியைக் காட்டுகிறான்]

எட்வேர்டு: (தலையில் அடித்துக் கொண்டு அலறிய வண்ணம்) அட கடவுளே ! திருட்டு நாய்கள் ! களவாடிப் பயல்கள் ! பெருத்த மோசடி இது ! கொள்ளைக்காரப் பயல்கள் ! எத்தனை ஆண்டு நெற்றி வேர்வைகள் அவை ? காவல் துறைக்கு எப்படிப் புகார் சொல்வது ? போச்சு எல்லாம் போச்சு ! பணமும் போச்சு ! மணப் பெண்ணும் போச்சு ! மானம் போச்சு ! மதிப்பும் போச்சு ! கோடீஸ்வரன் ஒரே நாளில் குடியானவன் ஆகிவிட்டேன் ! (கிரஹாம் தந்தையைப் பிடித்துக் கொள்கிறான்) நான் வீடு வீடாய்ப் போய் பிச்சை கூட எடுக்க முடியாதச் சீமான் ஆயினேன் ! சீமான் ஏமாளி ஆகி விட்டேனே ! யாரந்த திருடன் என்று கண்டுபிடிப்பேன் ! கண்டுபிடித்து அவன் கழுத்தைத் திருகுவேன் ! கழுத்தைத் திருகி அவன் குருதியை எடுப்பேன் ! குருதியை எடுத்து என் செடிகளுக்கு ஊற்றுவேன் ! போகட்டும். காவல் துறைக்குப் புகார் செய்தால் கள்ளனைப் பிடித்து விடுவார் ! கள்ளனைப் பிடித்ததும் பணத்தைக் கறப்பேன் ! பணம் கிடைக்காமல் போனால் அடுத்த கணம் நான் உயிர் துறப்பேன்.

(வேகமாக எட்வேர்டு வெளியே ஓடுகிறார். கிரஹாமைப் பார்த்து மெதுவாக வின்சென்ட் புன்னகை செய்கிறான்.)

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Penguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 22, 2007)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts