தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
காதலிக்கும் மாதரின் பேதளிக்கும் இதயம்
கணக்கிலா முறையில் கவலை உட்பட்டுக்
காதலுக்கு இரையாகிப் போகும் !
பேச்செல்லாம் எமது இனிய
வேதனை பற்றி இருக்கும் ! பெரு
மூச்சைப் பற்றியும் இருக்கும் !
என்ன சொல்லிப் போனாலும்
விட்டு விடுதலை ஆவதுபோல்
இனிமை தருவ தெதுவும் இல்லை ! — (நாடகம் : செம்மையாகப் போகும் கனவான்)
மாலியர் வாய்மொழிகள்
முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.
மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.
பேராசைக் கஞ்சன்
அங்கம் 2 காட்சி 2
பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:
எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.
கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.
எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.
ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.
மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.
வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.
கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..
சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.
மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.
ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.
வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்
***************
இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை
நேரம்: பகல் வேளை
காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை இல்லம். வேலைக்காரன் வின்சென்டு வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறான். அப்போது திருமண ஒப்பந்த மாது கிளாடியா உள்ளே நுழைகிறாள்.
கிளாடியா: (உள்ளே புகுந்து கதவைத் தட்டி) ஹலோ ! கனவான் எட்வேர்டு இருக்கிறாரா ?
வின்சென்ட்: (துடைப்பதை நிறுத்தி வாசல்புறம் நோக்கி) மேடம், யார் நீங்கள் ? டிப் டாப்பா ஆடை அணிந்து விருந்துக்கு வந்த கோமகளைப் போல் தோன்றுகிறீர் ! வாருங்கள் உள்ளே ! அமருங்கள் இங்கே !
கிளாடியா: (நாற்காலியில் அமர்ந்த வண்ணம்) மிக்க நன்றி ! நான் விருந்துக்கு வரவில்லை ! வீட்டு எஜமானரைத் தனியே சந்திக்க வந்திருக்கிறேன் !
வின்சென்ட்: (சிரித்துக் கொண்டு) ஓ ! . தனியே சந்திக்கவா ? . . அதற்கா . . . வந்துள்ளீர் ?
கிளாடியா: (புன்னகையுடன்) . . நீ நினைக்கும் அந்த . . சந்திப்புக்கு நான் வரவில்லை !
வின்சென்ட்: அழகாக இருக்கும் நீங்கள் புதிராகப் பேசுகிறீர் ! பிறகு எதற்கு வந்தீராம் ? யார் உம்மை அழைத்தது ? இத்தனை அழகான ஒரு மாது எங்கள் எஜமானரைத் தனியே ஏன் பார்க்க வேண்டும் ?
கிளாடியா: கனவான் எட்வேர்டுக்குக் கன்னிப்பெண் பார்த்து வந்திருக்கிறேன் ! என் தொழிலே அதுதானே ! பெண் வீட்டைத் தேடுவேன் ! பின்னந்தத் தகவலைத் தெரிவிப்பேன் ! மாப்பிள்ளை
வீட்டார் பதிலை எடுத்துச் செல்வேன் ! என்னைப் போன்ற மாதருக் கெல்லாம் இறைவன் இந்த மாதிரி வேலையைத்தான் கொடுத்திருக்கிறான்.
வின்சென்ட்: (ஆர்வமுடன்) வீடு துடைப்பதை விட இது நல்ல வேலை ஆயிற்றே ! . . . . அது சரி ! எனக்கொரு பெண் வேண்டும், பார்த்துச் சொல்வாயா ?
கிளாடியா: (சற்று சினத்துடன்) செல்வந்தருக்குப் பெண்ணமைக்கவே நேரமில்லை எனக்கு ! மேலும் ஊழியர் சம்பாதிக்கும் பணம் என் கூலிக்குப் போதாது !
வின்சென்ட்: (சிரித்துக் கொண்டு) நீ கேட்கும் பணத்தை நான் கொடுக்க முடிந்தால் !
கிளாடியா: நான் பெரும் செல்வந்தருக்குப் பெரிய மீனைப் பிடிப்பவள் ! எனது வலை பெரியது ! அதில் சின்ன மீன்களைப் பிடிக்க முடியாது ! . . . ஆமாம், உங்கள் எஜமானர் எப்படி ? பெரும் புள்ளியா ? சிறு புள்ளியா அல்லது இரண்டு மில்லாத இடைப் புள்ளியா ?
வின்சென்ட்: (சிரித்துக் கொண்டு) கரும்புள்ளி எங்கள் எஜமானர் ! கோபுரத்தின் மேலிருக்கும் கோமகனார்தான் ! ஆனால் காசு, பணம் என்றால் அடிவாரத்துக்கு வந்து விடுவார் !
கிளாடியா: நான் கொண்டு வந்திருக்கும் செய்தி அவர் காதில் தேனை ஊற்றுவது ! அவரை எப்படிக் கைவசப்படுத்துவது என்பது நன்றாகத் தெரியும் !
வின்சென்ட்: எஜமான் ஒரு கொடாக் கண்டன் ! மகுடி ஊதி அந்த பாம்பை ஆட வைப்பது அத்தனை சுலபமல்ல !
கிளாடியா: பார் ! அவரைப் பம்பரமாக நான் எப்படி ஆட்டப் போகிறேன் என்பதை !
வின்சென்ட்: (அரவம் கேட்டு) யாரோ வரும் சத்தம் கேட்கிறது ! ஒருவேளை எஜமானராக இருக்கலாம். நான் உள்ளே போகிறேன் ! என்னைக் கண்டால் இரண்டாகப் பிளந்து விடுவார் !
கிளாடியா: ஹலோ மிஸ்டர் ! நில்லப்பா ! உனக்குப் பெண்பார்த்தால் எனக்கு என்ன தருவாய் ? சொல்லி விட்டுப் போ !
(எட்வேர்டு நுழைகிறார். வின்சென்ட் விரைவாகப் பின்வாசல் வழியே ஓடி மறைகிறான்)
எட்வேர்டு: (கிளாடியாவைப் பார்த்து) வருக, வருக என்னருமைக் கிளாடியா ! நல்ல செய்தியா ? பொல்லாத செய்தியா ?
கிளாடியா: (சிரித்துக் கொண்டு) இன்று நீங்கள் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றுகிறீர் ! உங்கள் உடல்நலத் தெளிவு பளிச்செனத் தெரியுது பார்ப்போருக்கு !
எட்வேர்டு: (முகம் மலர) யார் ? நானா ? அப்படியா தோன்றுகிறேன் ! உண்மையாகவா ?
கிளாடியா: உண்மையாகத்தான். இப்போது இளமையாக உள்ளதுபோல் எப்போதும் நீங்கள் இருந்தது கிடையாது ! நாற்பது வயதில் நரைத்துத் தள்ளாடும் வாலிபரைதான் நான் சந்திக்கிறேன். அறுபது வயதுடைய உங்களை விட அவரெல்லாம் முதியவராய் முதுகு கூனித் தோன்றுகிறார் !
எட்வேர்டு: (வெட்கமுடன்) கிளாடியா ! நான் அறுபதைக் கடந்து விட்டேன் ! ஆனால் எழுபதைத் தொடவில்லை ! அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட வயது ! அறுபத்தி நான்கு !
கிளாடியா: அப்படி எனக்குத் தோன்றவில்லை ! அறுபத்தி நாலைத் திருப்பிப் போட்டால் என்ன வரும் ? நாற்பத்தி ஆறு ! அதுதான் உங்கள் வயது என்று சொல்வேன் நான் ! அப்படித்தான் பெண் வீட்டாரிடம் சொல்லி இருக்கிறேன். எங்கே உங்கள் கையைக் காட்டுங்கள் ? (எட்வேர்டு வலது கையைப் பற்றி) அடே அப்பா ! நீளமான வாழ்க்கை ரேகை ! குறைந்தது நூறு வயது வரை வாழ்வீர் ! நூற்றி ஐந்தைக் கூடத் தொடாலாம் ! அடடா ! காதல் மேடு எப்படி உப்பி உள்ளது பார்த்தீரா ? மங்காத தாகம் ! பொங்கும் போகம் !
எட்வேர்டு: எங்கே ? எங்கே ? காட்டு. (ரேகைகளைக் காட்டுகிறாள்) அதற்கு விளக்கம் என்ன ?
கிளாடியா: உங்களுக்கு நீண்ட ஆயுள் மட்டுமல்ல ! நீண்ட இல்வாழ்கையும் தெரியுது ! பொங்கிப் பூத்திடும் தாம்பத்தியம் காணுது ! போக வாழ்க்கை மீண்டும் பூக்குது ! புது மணப்பெண் வாசலில் நிற்கிறாள் !
எட்வேர்டு: (பூரித்துப் போய் வெளியே எட்டிப் பார்த்து) பெண்ணைக் கையோடு அழைத்து வந்து விட்டாயா ?
கிளாடியா: இல்லை ! அப்படி உங்கள் கைரேகை சொல்லுது !
எட்வேர்டு: என் கைரேகையே களிப்பான மணவாழ்வைக் காட்டுதா ? . . . அதெல்லாம் சரி ! போன காரியம் வெற்றியா ? பெண்ணுக்கு என்னைப் பிடிக்கிறதா ? என்னைப் பற்றி என்ன கேட்டாள் உன்னிடம் ? தாயிக்குச் சம்மதமா ?
கிளாடியா: சம்மதம் பெறாமல் விடுவேனா ? நான் யார் தெரியுமா ? பலே கைக்காரி இந்தப் பணியில் ! நினைப்பதைச் சாதிப்பவள் ! என் திறமை யாருக்கும் தெரியாது ! எனக்கே தெரியாது ! இணை சேர்க்கிறதிலே யாரும் என்னை மிஞ்ச முடியாது ! எந்த இரண்டு பேருக்கும் பந்தம் உண்டாக்கி விடுவேன் ! எந்த இரண்டு பேருக்கும் பிரிவை உண்டாக்கி விடுவேன் ! நான் பெண்ணோட அம்மாவிடம் உங்களைப் பற்றி ஒரு மணிநேரம் பேசினேன். மொரீனை மணந்தால் என்ன என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர் என்று பொழிந்து தள்ளி விட்டேன் ! பெண் வீட்டு வீதியில் நீங்கள் போனதையும், பலகணி வழியே மொரீனைப் பார்த்ததையும் கூறினேன் ! ஒருநாள் கன்னி மொரீன் உங்கள் கனவில் வந்ததையும், நீங்கள் அவளது கரத்தைப் பிடித்ததையும் நான் சொல்லி இருக்கிறேன்.
எட்வேர்டு: (சற்று சிந்தித்து) கிளாடியா ! நான் அப்படிக் கனா கண்டதில்லையே ! அப்படிக் கண்டாலும் என் கனா உனக்கு எப்படித் தெரிந்தது ?
கிளாடியா: அதுதான் என் திறமை ! என் உள்ளக் கண்ணாடித் தெரிசனத்தில் இவை எல்லாம் தெரியும் ! என் மனதில் வெளிப்பட்டதை எல்லாம் கொட்டிக் குவித்து விடுவேன் ! எட்வேர்டுக்கு ஜோடி மொரீன் ! மொரீனுக்கு இணை எட்வேர்டு ! அப்படி நான் தீர்மானித்து விட்டால் இவை எல்லாம் தானாக என் மனத் திரையில் தெரிகின்றன ! நான் சொன்னதை எல்லாம் தாயும், மகளும் நன்றாகக் காது கொடுத்துக் கேட்டார்கள்.
எட்வேர்டு: முடிவில் என்ன நடந்தது ? மொரீன் என்னை மணந்து கொள்ள விரும்புகிறாளா ?
கிளாடியா: இந்த சம்பந்தத்தை அவர்கள் வரவேற்கிறார். அதில் சற்றும் ஐயமில்லை. இன்றிரவு உங்கள் மாளிகையில் திருமண ஒப்பந்தம் கையெழுத்திடும் போது, மொரீனும் அருகில் இருக்க வேண்டும் என்று சொல்லும் சமயத்தில் தாய் உடன்பட்டாள் ! என்னை நம்பி மகளை என்னுடன் பேச அனுமதித்தாள்.
எட்வேர்டு: மிக்க மகிழ்ச்சி கிளாடியா. நான் திருவாளர் ஆப்ரஹாம் அவர்களுக்கு விருந்தளிக்கும் போது, உடன் மொரீனும் வர வேண்டுமென ஆசைப் படுகிறேன். ஏற்பாடு செய்வாயா ?
கிளாடியா: அதுவும் நல்ல விருப்பம்தான். முதலில் மொரீன் உமது மகள் எலிஸபெத்தைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் ! பிறகு மொரீன் சந்தைக் கடைக்குப் போக வேண்டுமாம். அப்புறம் மாளிகை விருந்தில் அவள் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்.
எட்வேர்டு: நான் என் வண்டியை அனுப்புகிறேன் மொரீனை அழைத்து வர ! அதிலே அவள் சந்தைக் கடைக்கும் போகலாம். விருந்துக்கும் வரலாம்.
கிளாடியா: அது சரி நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர் பெண் வீட்டாரிடம் ?
எட்வேர்டு: கிளாடியா ! அதைப் பற்றி மொரீன் தாயிடம் பேசினாயா ? திருமணச் சீர்வரிசையில் பெண்ணுக்கு என்ன என்ன செய்வார் என்று மறக்காமல் கேட்டாயா ? வெறுங்கையுடன் மணப்பெண் வீட்டுக்குள் வரக்கூடாது ! ஏதாவது புதுமனைக்குக் கொண்டு வரவேண்டும் அல்லவா ? ஒன்றும் இல்லாத மாதை ஓர் ஆடவன் எப்படி மணப்பான் இந்த காலத்தில் ?
கிளாடியா: என்ன ? ஒன்று மில்லாத ஒருத்தியையா உமக்குக் கொண்டு வருவேன் ? கேளுங்கள் ! ஓராண்டுக்கு பனிரெண்டாயிரம் டாலர் கொண்டு வரும் பெண்டல்லவா மொரீன் ?
எட்வேர்டு: பனிரெண்டாயிரம் டாலரா ஆண்டுக்கு ! எப்படி முடியுது அது ? பெண் எங்காவது வேலை செய்கிறாளா ?
கிளாடியா: வெளியில் போகாமல் வீட்டில் இருந்து கொண்டே சம்பாதித்துக் கொடுப்பாள் உமக்கு ! எப்படித் தெரியுமா ? பெண் மிகவும் சிக்கனம் ! உடுத்துவது எளிய உடை ! உண்பது எளிய உணவு ! அறவே ஆடம்பரத்தை வெறுப்பவள் ! நூறு சதம் ஏற்றவள் உமக்கு ! எதையும் வீணாக்க மாட்டாள் ! உடைகள் கிழித்தால் உடனே தைத்து உடுத்துவாள் ! புதிய ஆடை வாங்கும்படி ஒருநாளும் உம்மைத் தொந்தரவு செய்ய மாட்டாள் ! அவளை மணப்பதால் உமக்கு கோடிப் பணம் மிச்சம் ! ஒரு செலவையும் இழுத்துவிட மாட்டாள் ! நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அத்தகைய புனித மாதை மணம்புரிய !
எட்வேர்டு: [தலையைச் சொரிந்து கொண்டு] கிளாடியா ! கிளாடியா ! பெரும் புதிரைப் போடுகிறாயே கிளாடியா ! எனக்குப் புரியவில்லையே கிளாடியா ! சிக்கனப் பெண்தான் வேண்டும் எனக்கு ! ஆனால் சிக்கனப் பெண்ணும் வரும் போது வெறுங்கையை வீசிக்கொண்டு மணப்பெண்ணாய் வரக் கூடாது ! நீ கூறிய முறைகளில் எப்படி ஒரு வருடத்தில் பனிரெண்டாயிரம் சம்பாதித்துக் கொடுப்பாள் ? அவளுக்கு நான் உண்ண ரொட்டி தர வேண்டும் ! உறங்க மெத்தை தர வேண்டும் ! தங்க ஓர் இல்லம் தர வேண்டும் ! இதற்கெல்லாம் ஆகும் செலவில் அவள் பங்கைக் கொண்டு வர வேண்டும் அல்லவா ?
(தொடரும்)
************************
தகவல் & படங்கள்
Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre
Based on The Play
Moliere’s Miser (1922-1673)
1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”
2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)
3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference
4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.
5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)
6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 18, 2007)]
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)
- சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது
- இஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்
- காதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை ?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7
- சாருவின் ஜனனி:
- கோரேகான் தமிழ்ச் சங்கம் – எஸ் ஷங்கரநாராயணனுடன் ஒரு சந்திப்பு
- பொது ஒழுக்கம்
- இறந்தது யார்?
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 32
- கால நதிக்கரையில்……(நாவல்)- 28
- சும்மா
- எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா
- Tamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre
- பன்னாட்டுக் கருத்தரங்கு – தமிழின் ஓருலகக் கருத்துணர்வு
- காந்தி மக்கின்ரையர் வழங்கும் இரு நாடகங்கள்
- நிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் பட்டி மன்றம்
- நாக்குநூல்
- தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு
- வாசம்
- “ நிற்பவர்கள்”
- வஞ்சியென்றால் என்னை…
- வெள்ளைக்காதல்
- எங்கள் தாய் !
- திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்
- கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா
- கரிசல் கிருட்டிணசாமி (17.12.1959)
- புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
- படித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்
- குற்றாலம் பதிவுகள்
- சிறுகதையில் என்ன நடக்கிறது?
- வானப்பிரஸ்தம்