வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 17

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இரவு உணவுக்கென்று அப்பாவும் நானுமாக மேசைமுன் அமர்ந்திருந்தபோது, மீண்டுமொருமுறை பதட்டத்துடனேயே சந்தித்திருந்தோம். எனக்குச் சுத்தமாக பசியில்லை, அப்பாவுடைய நிலைமையும் அதுதான். ‘ஆன்’ மறுபடியும் திரும்பி வரவேண்டிய அவசியத்தினை, இருவருமே உணர்ந்திருந்தோம். புறப்படுவதற்கு முன், ‘ஆன்’னிடம் கண்ட கலவரமடைந்த முகம் மீண்டும் மீண்டும் கண்ணிற் தெரிகிறது, தொடர்ந்து அவளுற்ற துயரங்கள், அனைத்திற்கும் நானே காரணமென்கிற உறுத்தல், தவிக்கிறேன். மிக நிதானமாக செயல்பட்டதையும், திட்டங்களை அரங்கேற்றியதையும் மறந்தாயிற்று. தலைச்சுற்றுகிறது, என்வசம் நானில்லை. என் தகப்பனார் முகத்தைப் பார்க்க அவரும் என்னைப்போலவே வேதனையின் உச்சத்திலிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.

” என்ன நினைக்கிற, அவள் திரும்ப வர நாளாகுமா?

– அவங்க நிச்சயம் பாரீஸ¤க்குத்தான் போயிருக்கவேண்டும். – நான்

– பாரீஸா..,.கனவுகளுடன் முணுமுணுப்பதுபோல தெரிந்தது.

– இனி அவங்களைத் திரும்பவும் பார்ப்போமேன்று நினைக்கலை…”

அப்பா நிலை தடுமாறினார், எனது கையை எட்டிப்பிடித்தார்.

“- என்னோட இந்த நிலைமைக்கு நீதான் காரணம். எனக்கு என்ன நடந்ததென்று தெரியலை. ஊசியிலைத் தோப்புக்குள்ளே ‘எல்ஸா’வும் நானுமாகப் போனோம்…அவளென்னை…கடைசியில் நானும் முத்தமிடவேண்டியதாயிற்று, அநேகமாக ஆன் அதைப் பார்த்திருக்கணும் பிறகு…”

அவர் சொன்னதெதுவும் காதில் விழவில்லை. மனதில், அடர்ந்த ஊசியிலைத்தோப்பு, அதன் நிழலில் ஆணுபெண்ணுமாய் பின்னிய இரு உடல்கள், ‘எல்ஸா’வோ, அப்பாவோ என்கண்ணுக்குத் தெரியவில்லை. மாறாக சம்பவம் நடந்த அன்றைக்கு, கொடூரத்தைச் சந்தித்த ஜீவனாக, உயிர்ப்புள்ள ஒரே ஜீவனாக என் மனக்கண்களில் கடைசியாகப் பார்த்த ஏமாற்றமும், துயரமும் குடிகொண்ட ‘ஆன்’னின் முகம். அப்பாவுடைய சிகரெட் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டொன்றினை எடுத்துப் பற்றவைக்கிறேன். ‘ஆன்’ இருந்திருந்தால், தனது ஆட்ஷேபத்தைத் தெரிவித்திருப்பாள். உணவு நேரத்தில் புகைபிடித்தலை அவள் விரும்புவதில்லை. என் தகப்பனாரைப் பார்த்து மெல்ல சிரித்தேன்.

” நடந்ததெதற்கும் உங்களைச் குற்றம் சொல்லமுடியாது… சில நேரங்களில், உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறோம். ஆனா, நம்மை ‘ஆன்’ மன்னித்துத்தான் ஆகணும், அதாவது ‘உங்களை’.

– என்ன செய்யலாம்?- அப்பா.

அப்பாவை பார்க்க பரிதாபமாக இருந்தது, ‘எனக்குக் கருணை காட்டுங்களேன்’ என்பது போல, நானும் இரக்கப்பட்டேன். ச்சே, என்ன இருந்தாலும் ஆன் சுத்த மோசம், இப்படி எங்களை அந்தரத்தில் நிறுத்திவிட்டு போனதேன்? நாங்கள் எல்லை மீறிபோய்விட்டொமென்பதற்காக ஒருவேளை இந்த தண்டனையா? எங்களுக்காகச் சில பொறுப்புகள் அவளுக்கு இருக்கிறதென்பதை மறந்துவிட்டாளா?

” அவளுக்குக் கடிதமொன்று எழுதலாம், அதில் நம்மை மன்னிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளலாம்”

– மிக நல்ல யோசனை” அப்பா உரத்துச் சொன்னார்.

கடந்த மூன்றுமணிநேரமாக, என்ன செய்வதென்று புரியாமல் கலங்கிக்கொண்டிருந்த நிலையில், கடிதமெழுதும் யோசனை அவருக்கு சரியாகப்பட்டது.

உணவை முடிக்கவில்லை, எழுந்துகொண்டோம். மேசை மீதிருந்த விரிப்பையும் மற்றவற்¨றையும், ஓரமாக ஒதுக்கினோம். அப்பா, ஒரு பெரிய மேசைவிளக்கு, பால்-பாயிண்ட் பேனா, கடிதம் எழுதுவதற்கான தாள்களென்று, வேண்டியதனைத்தையும் கொண்டுவந்தார், எதிரெதிராக அமர்ந்தோம், இருவருடத்திலும் மகிழ்ச்சி, ஏதோ நடத்துகிற இந்த நாடகத்தால் நாளைக்கே, ‘ஆன்’ திரும்பிவிடுவாளென்கிற நினைப்பு எங்களுக்கு. துரிஞ்சிலொன்று சன்னலுக்கு முன்னால் ஒரு சில நொடிகள் அழகாய் பறந்துவிட்டு மறைந்தது. அப்பா குனிந்து எழுத ஆரம்பித்தார்.

அன்றைய இரவு, ஆன்னுக்கு உருகி உருகி, நாங்கள் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கையை இன்றைக்குக்கு நினைத்தால்கூட அபத்தமாக வேதனையாகவும் இருக்கிறது. ‘ஆன்’னை எப்படியாவது அடைந்தே தீருவதென்கிற ஆவேசத்துடன் நாங்கள் எழுத உட்கார்ந்தது ஏதோ முட்டாள் மாணவர்களிருவர், மிகவும் கடினமான வீட்டுப்பாடத்தைச் செய்ய உட்கார்ந்ததைப்போல, கவனமெடுத்துக்கொண்டோம்.. அதில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவை இரண்டு கடிதங்கள், முடிந்த இடங்களில் மன்னிப்பு கேட்டு, அன்பைப் பொழிந்து, வருந்தி மிக உருக்கமாக எழுதப்பட்டவை, முடித்தபோது ‘ஆன்’ கடிதத்தைப் படிக்கநேர்ந்தால், உடனே புறப்பட்டு வருவாளென்று உறுதியாக நம்பினேன். அப்போதே ‘ஆன்’ திரும்ப வந்திருப்பதைப்போல நினைப்பு, தொடர்ந்து ‘மன்னிப்பு’ நாடகத்தின் காட்சிகள், அரங்கேறுமிடம்: பாரீஸ், எங்கள் வரவேற்பறை, நிறைய சந்தோஷம், வெட்கம், தயக்கம்…’ஆன்’ உள்ளே வருகிறாள்…

இரவு மணி பத்திருக்கும், தொலைபேசி ஒலித்தது. இருவரும் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம், பெரிய சுமை குறைந்ததுபோல, ஒரு நம்பிக்கை: நிச்சயம் அது ‘ஆன்’னாகத்தான் இருக்கவேண்டும். எங்களை ‘ஆன்’ மன்னிக்கவும், திரும்பவும் வருகிறேன் எனச் சொல்வதற்காகவுமே அது ஒலிக்கிறது, தொலைபேசியில் வேறு யார்? ‘ஆன்’ அப்படித்தான் நம்பினோம். வேகமாய் ஓடிச்சென்று கையிலெடுத்த அப்பாவின் குரலில், இதுவரை காணாத சந்தோஷம், “அல்லோ…”

வேறு வார்த்தைகளில்லை, தொடர்ந்து” ம்…ஆமாம், சொல்லுங்க? எங்கே? அப்படியா”, குரலில் சுரத்தில்லை, சோர்ந்து ஒலிக்கிறது. சட்டென்று எழுந்துகொண்டேன், பயத்தில் உடல் நடுங்குகிறது. அப்பாவைப்பார்க்கிறேன், அவரது கரம் எந்திரத்தனமாக முகத்திற் படிந்தது. கடைசியில் தொலைபேசியை வைத்துவிட்டு என்பக்கமாய்த் திரும்பினார்.

” அவளுக்கு விபத்து, எஸ்த்தெர்ல்(Esterl) போகிற வழியில் நடந்திருக்கிறது. முகவரியைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டிருக்கிறார்கள். பாரீஸ¤க்கு போன் செய்து பார்த்திருக்கிறார்கள், பிறகு நமது தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது, இங்கே தொடர்புகொண்டிருக்கிறார்கள்.”

அவர் கடகடவென்று எந்திரம்போல, குரலில் ஏற்ற இரக்கமின்றி, சொல்லிக்கொண்டு போனார், குறுக்கிடுவதற்கு எனக்கு அச்சம்.

” விபத்து நடந்த இடம் மிகவும் மோசமான இடம். ஏற்கனவே பலமுறை அங்கு விபத்து நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். கார் ஐம்பதடி ஆழத்தில் விழுந்திருக்கிறது. உயிர்பிழைத்தால் ஆச்சரியம்.”

எஞ்சிய இரவு எத்தனை பயங்கரத்துடன் கழிந்ததென்பது நினைவிலிருக்கிறது. காரின் முன் விளக்கு வெளிச்சத்தில் வளர்ந்துகொண்டுபோன சாலை, உணர்ச்சிகளேதுமற்ற அப்பாவின் முகம், மருத்துவமனையின் கதவு… அவளை, நான் பார்ப்பதை அப்பா தவிர்த்தார், காத்திருக்கும் அறையில், பெஞ்சொன்றில் அமர்ந்திருந்தேன், எதிரே சுவற்றில், செதுக்கிய ஓவியமாக ‘வெனிஸ்நகரக் காட்சி. மனம் உறைந்து கிடந்தது. செவிலிப்பெண்ணொருத்தி, கோடையில் மாத்திரம், அதுவரை அங்கே ஆறுவிபத்துகள் நடந்திருப்பதாக என்னிடம் தெரிவித்தாள். ‘ஆன்’னைப் பார்க்கவென்று சென்ற அப்பா வெகுநேரமாகியும் திரும்பவில்லை.

எல்லாம் முடிந்தது, இனியவள் நிரந்தரமாகத் திரும்பப்போவதில்லை. மீண்டுமொருமுறை ‘ஆன்’ , தான் யாரென்று நிரூபித்திருந்தாள். எங்களுக்கும் அதாவது எனக்கும் என் தந்தைக்கும் – மனத்திடமுமிருந்து, தற்கொலை செய்திருப்போமென்றால், எங்கள் தலையில் குண்டு பாய்ந்திருக்கும், கூடவே சம்பந்தப்பட்ட மனிதர்களின் நிம்மதியையும், உறக்கத்தையும் வாழ்நாள் முச்சூடும் குலைக்கவென்று விபரமாக ஒரு தாளில் எழுதியும் வைத்திருப்போம். விபத்து நடந்த இடத்தையும், கார் தடம்புரண்டிருந்தவிதத்தையும் வைத்து பார்க்கிறபோது, நடந்ததை விபத்தென்று நம்புவதற்கான சாத்தியங்களை, ஓர் அதிசயப்பரிசாக ‘ஆன்’ எங்களுக்கு, வழங்கியிருந்தாளென்று சொல்லலாம். எதிர்காலத்தில், அப்பரிசினை ஏற்றுக்கொள்வதற்குரிய பரிதாபகரமான நிலையில் நாங்களுமிருக்கலாம். அன்றையதினம், தற்கொலை குறித்து பேசுகிற மனநிலையில்தான் நானுமிருந்தேன். இறந்தவரோ, வாழ்பவரோ எங்களுக்கு ஒருவரும் வேண்டாமென்று நினைக்கிற நாங்களாவது தற்கொலைசெய்துகொள்வதாவது? அடுத்து என் தகப்பனாரும் நானும் அச்சம்பவத்தை விபத்தென்று கருதினோமேயொழிய, வேறொன்றாகப் பார்க்க மனம் இடந்தரவில்லை.

மறுநாள், மதியம் மூண்றுமணி அளவில் வீட்டிற்குத்திரும்பினோம். ‘எல்ஸா’வும் ‘சிரிலும்’ வாயிலில் படிகளில் அமர்ந்து எங்களுக்காகக் காத்திருந்தார்கள். அர்த்தமற்ற காதல் விளையாட்டுக்கு இருவருமே சொந்தக்காரர்கள்கள், இருவரிடத்திலும், வழக்கம்போல எவரையும் வசீகரித்து சங்கடத்துக்குள்ளாக்குகிற கவர்ச்சி, எங்களைப் பார்த்ததும் எழுந்து நிற்க, அர்த்தமற்ற அரூபமனிதர்களாய் தெரிந்தார்கள், அவர்களுக்கு ‘ஆன்’ அறிந்தவளுமல்ல, விரும்பியவளுமல்ல. சிரில், என்னைக்கண்டதும் முன்வந்து எனது கரத்தைப் பற்றினான். அவனை நேரிட்டுப் பார்த்தேன். ஒருபோதும் உண்மையாய் அவனை, நேசித்ததில்லை. பார்க்க நல்லவனாகவும், இலட்சணமாகவுமிருந்தான். எனது இச்சையை அவன் பூர்த்திசெய்தவிதம் பிடித்திருந்தது, அதற்காகத் தொடர்ந்து எனக்கவன் வேண்டுமென்பதில்லை. விடுமுறை முடிந்தது நான் புறப்படவேண்டும், கோடைகாலம், வில்லா, சிரில் இனியெனக்கு வேண்டியதில்லை, எனது தந்தை, தந்தை மாத்திரம் உடனிருப்பார். எனது எண்ணங்களைப் புரிந்துகொண்டவர்போல, எனது கரத்தை அவர் வாங்கிக்கொள்ள இருவருமாக, வில்லாவுக்குள் நுழைந்தோம்.

வில்லாவில், ‘ஆன்’னை நினைவுபடுத்துகிற அவளுடைய பெரிய மேலாடை, அவள் கொண்டுவந்திருந்த மலர்கள், மலர்கொத்துகள், அவள் தங்கியிருந்த அறை, அவள் உபயோகித்த வாசனை தைலம். அப்பா, சன்னல் இலைத்தட்டிகளை(Les volets) இறக்கினார். குளிர்ப்பதனப்பெட்டியிலிருந்து, ஒரு மதுபாட்டிலையும் இரண்டு கண்ணாடி தம்ளர்களையும் எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தார். மன ஆறுதலுக்கு, கைக்கெட்டும் தூரத்திலிருந்த எங்களது ஒரே நிவாரணம். ‘ஆன்’னிடம் எங்கள் வருத்தத்தைத் தெரிவித்து எழுதிய கடிதங்கள் இன்னமும் மேசையில் கிடந்தன, அவற்றைத் தள்ளியதில், கீழே விழுந்து காற்றில் தடுமாறுகின்றன. மதுவை நிரப்பிக்கொண்டு எழுந்த அப்பா, தரையில் கிடந்த கடிதங்களைக் கண்டு தயங்கி நின்றார், பின்னர் மிதித்திடாமல் கவனமாக என்னிடத்தில் வந்தார். அப்பாவிடமிருந்து கண்ணாடித் தம்ளரை வாங்கியவள் ஒரு மிடறை விழுங்கினேன். அறையெங்கும் சன்னமான இருட்டு, சன்னலொட்டி அருவமாக அப்பா. திரும்பத் திரும்பத் கரையில் மோதிச்சிதறும் கடல்.


nakrish2003@yahoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts