சி. ஜெயபாரதன், கனடா
உறவு என்றொரு பிணைப் பிருந்தால்
பிரிவு என்றொரு முடிவிருக்கும்!
கனவுக்குப் பின்னோர் கதை பிறந்தால்,
சிதைவுக்குக் கதவு திறந்தி ருக்கும்!
உலகுக்கு வழங்கும் ஈசன்,
கொடுத்த வற்றை எல்லாம்
எடுத்துக் கொள்வான் மீண்டும்!
தொட்ட வினைகளை
அற்று விடுவான் முடிக்க விடாமல்!
******
கதறி அழும் ரோமிங்கே!
பயங்கர ரோமிங்கே!
எனது மரண உரையைக் கேட்ட பின்
எப்படி ஏற்பர் மக்கள்,
இரத்த வெறியர் கோரச் செயலை?
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
மரணம் என்பது என்ன?
உணர்ச்சி அதிர்வு கட்கு ஓய்வு!
ஆசைகளின் அந்திமக் கனவு!
சிந்தனைக் கோலங் கட்கு முடிவு!
உடலின் உழைப்புக்கும் ஒரு விடுப்பு!
மார்கஸ் அரேலியஸ் [Marcus Aurelius, Roman Emperor (A.D.121-180)]
வேதனை உலைத்தீ ஒரு பயங்கரச் சக்தி!
செப்பணிடும் பண்பை, அறிவை, ஆத்மாவை!
புதுப்பிக்கும் மானிட மகத்து வத்தை!
அதுவே படைப்பின் கண்படா ஆணிவேர்!
ஆக்கப் படுவது அருக முடியாது
அச்சம் ஊட்டலாம்! நம்பிக்கை நீக்கலாம்!
முரணாகப் புரட்சியாய் மாறலாம்!
பெக் எலியட் மாயோ, பெண் கலைத்துவ மேதை [Peg Elliot Mayo]
கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!
முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
அங்கம்:5 காட்சி:9
நேரம், இடம், கட்டம்: சீஸர் பட்டாபிசேக தினம். மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் சீஸர் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கிறார். ஆண்டனி சீஸர் உடலை ஏந்திக் கொண்டு அங்காடி மேடைக்குப் போகிறார். மனமுடைந்த கல்பூர்ணியாவைக் காண கிளியோபாத்ரா மகனுடன், பாதுகாவலருடன் அவளது மாளிகைக்குச் செல்கிறாள்.
நாடகப் பாத்திரங்கள்: கல்பூர்ணியா, அக்டேவியா, போர்ஷியா கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன், பாதுகாவலர், மற்றும் சேடியர்.
காட்சி அமைப்பு: மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. கண்ணீரும் கம்பலையுமாய்ப் படுக்கையில் கல்பூர்ணியா அழுது கொண்டிருக்கிறாள். ஆண்டனியின் மனைவி அக்டேவியா, புரூட்டஸின் மனைவி போர்ஷியா ஆறுதல் கூறி அருகில் நிற்கிறார்கள். அப்போது கிளியோபாத்ரா நுழைகிறாள்.
அக்டேவியா: [மிகக் கனிவோடு] கல்பூர்ணியா! அழுது, அழுது கண்ணீர் ஆறாய் ஓடுகிறது! கண்ணீர் சுரப்பிகள் காய்ந்து போய் விட்டன! தொண்டை நீர் வரண்டு போனது! ராத்திரி உறக்க மில்லாததால் கண்விழிகள் வெளியே வந்து விட்டன! புலம்பிப் புலம்பி உன் நெஞ்சும் குழிந்து போனது. வயிற்றில் உணவின்றிக் கிடக்கிறாய்! எழுந்து சிறிது பழரசத்தைக் குடி! அல்லாவிட்டால் நீயும் சீஸரோடு சேர்ந்து போய் விடுவாய்.
கல்பூர்ணியா: [சிறிது தெளிவுடன்] சீஸரோடு போகத்தான் ஆசை! எப்படி உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்றொரு வழியைக் காட்டு! நான் எதற்கினி உயிர் வாழ வேண்டும்? பிள்ளையும் கிடையாது! பதியும் கிடையாது. நஞ்சைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வேன். எத்தனை முறை தடுத்தேன் அவரை? மன்றத்துக்குப் போக வேண்டாம், போக வேண்டாம் என்று மன்றாடினேன்! கேட்டாரா? பாவிச் செனட்டர் தீஸியஸ் பதியை ஏமாற்றி இழுத்துச் சென்றான்! இடி, மழை, புயல், மின்னல் எதுவும் அவரை நிறுத்த முடிய வில்லை.
போர்ஷியா: [கண்ணீருடன்] உன் துயருக்கு என் கணவரும் ஒரு காரண கர்த்தா என்று அறிந்து வருந்துகிறேன், கல்பூர்ணியா! நான் கேட்கக் கேட்கச் சொல்லாமல் மர்மாய்ச் செய்த படுகொலை இது! என் பதிக்குக் கிடைக்கும் தண்டனை எனக்கும் கிடைக்க வேண்டும்! செனட்டார் சேர்ந்து படுகொலை செய்ய சீஸர் செய்த குற்றம்தான் என்ன?
கிளியோபாதா: [அழுது கொண்டு] கல்பூர்ணியா! நானும் சீஸரைத் தடுத்தேன்! என் எச்சரிக்கையையும் மீறித்தான் சென்றார்! ரோமாபுரிக்கு மீள வேண்டாம், சற்று பொறுங்கள் என்று எகிப்திலேயே தங்க வைக்க முயன்றேன். கேட்க வில்லை சீஸர்! [போர்ஷியாவை முறைத்து] எதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறாய் நீ? நீ புரூட்டஸைத் தடுக்க நிறுத்தி இருக்கலாம். ஆனால் தடுக்க வில்லை! சதியைப் பிறருக்குத் தெரிவித்திருக்கலாம். ஆனால் தெரிவிக்க வில்லை! புரூட்டஸ் தலைமையில் பல நாட்களாய்ச் சதிக் கூட்டம் மர்மமாய் நடமாடியது உனக்குத் தெரியாதா?
போர்ஷியா: கிளியோபாத்ரா! நான் விடும் கண்ணீர் மெய்யானது! உண்மையைச் சொல்கிறேன்! என் வீட்டில்தான் செனட்டர் கூட்டம் நேற்று நடுநிசியில் குசுகுசுவெனப் பேசி முடிவெடுத்தது! என்ன பேசினார்கள் என்பது மெய்யாகத் தெரியாது எனக்கு! கூட்டம் சென்றபின் புரூட்டஸைக் கேட்டேன். மன்றாடிக் கேட்டேன். பலனில்லை கிளியோபாத்ரா [அழுகிறாள்]. நான் சீஸரைக் காப்பாற்றி யிருக்க முடியும். ஆனால் முடியாமல் போனதே! [கதறி அழுகிறாள்]
கிளியோபாத்ரா: கல்பூர்ணியா! என் பதியாக சீஸர் எகிப்தில் வாழ்ந்தாலும், மெய்யாக சீஸர் உன் பதி! நீ பறிகொடுத்தது என் பதியில்லை! அவர் உன் பதி! சீஸர் எனக்கோர் விருந்தாளி! இப்போது நான் கண்ணீர் விடுவது, என் பதிக்கில்லை! உன் பதிக்கு!
கல்பூர்ணியா: அப்படியானால் சீஸரின் அருமைப் புதல்வன் சிஸேரியன் கதி என்ன? அவன் உன் மகன் அல்லவா? நானிழந்தது போல் சீஸரை நீ யிழக்க வில்லையா?
கிளியோபாத்ரா: எகிப்தை விட்டுச் சீஸர் எப்போது நீங்கினாரோ, அப்போதே எங்கள் உறவும் அற்று விட்டது, கல்பூர்ணியா! ஆனால் சிஸேரியன் என் மகனாயினும் அவன் சீஸரின் வாரிசு! ரோமா புரியின் எதிர்கால வேந்தன்! சீஸர் போனாலும், அவனை உன்னிடம் விட்டுச் செல்லலாமா என்று சிந்திக்கிறேன்!
கல்பூர்ணியா: ஐயோ வேண்டாம் கிளியோபாத்ரா! வேண்டாம்! ரோமா புரியில் வேந்தராய் மகுடம் சூடப் போன சீஸருக்கு என்ன கதி ஆகி விட்டது? அதே கதிதான் சீஸரின் வாரிசுக்கும் கிடைக்கும்! நான் சொல்வதைக் கேள்! சீஸர் போனபின் சிறுவன் உன் மகன் என்பதை மறவாதே! உனக்குப் பகைவர்கள் மிகுதி ரோமா புரியில்! நீயினித் தங்குவது உனக்கு அபாயம்! சிறுவன் சிஸேரியனுக்கும் அபாயம்! சீக்கிரம் போய்விடு கிளியோபாத்ரா! போய்விடு! உன்னுரைக் காப்பாற்றிக் கொள்! உன் மகன் உயிரைக் காப்பாற்றிக் கொள்! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! சீஸருக்கு வந்த கத்திகள் அடுத்துச் சீஸரின் நேசருக்கும் வரும் என்பதை மறவாதே!
கிளியோபாத்ரா: [சிந்தித்துக் கவலையோடு] நல்ல யோசனை கல்பூர்ணியா! ஆம், நாங்கள் தங்கி யிருப்பது நல்லதல்ல! செல்கிறோம் இப்போதே! யாருக்கும் தெரிய வேண்டாம்! ஆனால் ஆண்டனிக்கு மட்டும் சொல்லலாம். நான் வருகிறேன். கடவுள்தான் உனக்கும், ரோமா புரிக்கும் பரிவு காட்ட வேண்டும். [கிளியோபாத்ரா மகனுடன் விரைவாக வெளியேறுகிறாள்]
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan December 21, 2006]
- திண்ணை
- திருக்குறள் ஒரு சமண நூல்தான்
- காதல் நாற்பது எலிஸபெத் பாரட் பிரௌனிங் (1806-1861)
- தி. ஜானகிராமனின் மோகமுள்
- அவள் நடந்த பாதையிலே – சாருஸ்ரீ அவர்களின் ‘நான் நடந்த பாதையிலே’
- இப்படியும் ஒரு தமிழரா ?
- ஐயாசாமியும் தெனாலிராமனும்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 1
- உயிர்மை பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா
- அவதூறு பரப்புதல் ஆய்வாகாது
- பழைய மொந்தையில் பழைய கள்
- ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல்
- பொ. கருணாகரமூர்த்தியின்இருநு}ல்கள் வெளியீடு.
- ப்ரவாஹனின் தொடரும் “போலி சாதி ஒழிப்பு” பிரச்சாரங்கள்
- கடித இலக்கியம் – 37
- ஆளுடையப்பிள்ளையின் புதியன படைத்த திறம். (பதிக எண் 71 முதல் பதிக எண் 80 வரை)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 16
- நீர்வலை (3)
- மடியில் நெருப்பு – 17
- மஜ்னூன்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:9) கிளியோபாத்ரா எகிப்துக்கு மீளல்.
- இஸ்லாமிய சோசலிசம்
- போப் வாயாலேயே பொய்த்துப் போன புனித தோமையார் கதை
- யோசிக்கும் வேளையில்…
- நடை பாதை
- பெரியபுராணம் – 117 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- காதல் நாற்பது (1) – உன்னை நேசிப்பது எவ்விதம் ?
- நுண் துகள் உலகம்
- இலை போட்டாச்சு 7 – எள்ளுப் பொடி
- கடவுளைப் பற்றிய கருத்தாடல்களும் கதைசொல்லல்களும்
- ஈசனுக்கு மறக்குமா அவள் தாட்சாயினி என்பது