வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 16

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் – 16

விதிக்கு, கண்ணியமற்ற, அற்ப முகங்களென்றால் தனிப் பிரியம்போலிருக்கிறது. அந்தக் கோடையின் போது அதற்கு ‘எல்ஸா’ கிடைத்திருந்தாள். ஆனால் அவளுடை முகம் மிகவும் அழகானது, கவர்ச்சியிலும் குறைவில்லை. கூடுதலாக, அசட்டு மனிதர்களிடத்தில் மாத்திரமே காணக்கூடிய ஒளிவு மறைவற்ற, கலகலவென்ற சிரிப்பு.

என் தகப்பனார் விடயத்தில், அச்சிரிப்பின் பங்கென்ன என்பதை, விரைவில் புரிந்துகொண்டேன், நாங்களிருவரும், எதிர்பாராமல் ‘சிரிலோடு’ சேர்த்து, ‘எல்ஸா’வைச் சந்திக்கிற நேரங்களிலெல்லாம், அதனை அவள் உபயோகிக்கவேண்டி, அத்தனை உபாயங்களையும் கையாண்டிருக்கிறேன். அவளிடத்தில், “அப்பா, உங்களிருவர் அண்மையில், வருவதை அறிந்தவுடனேயே பேசாதே, சிரி.” எனச் சொல்வதுண்டு. அதன்படி அவள் நிறுத்தாமல், கலகலவென்று சிரிப்பதும், தொடர்ந்து அப்பா ஆத்திரப்படுவதும் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. நடக்கிற நாடகத்திற்கு நானே சூத்ரதாரி என்கிறபோது அத்தனை மகிழ்ச்சி, தொடர்ந்து ஆர்வம் காட்டினேன். வைத்த குறி தப்பியதில்லை, ‘எல்சா’வும் ‘சிரிலு’ம் தங்கள் பொய்யான உறவு நாடகத்தை கனகச்சிதமாக அரங்கேற்றுவதை காண்கிறபோதெல்லாம், அப்பாவும் நானும் முகம் வெளுத்துப்போயிருக்கிறோம், எங்கள் முகத்தில் இரத்தமற்றுபோகும்., இருவருக்கும், அவரவர் உடமைமீதும் ஏற்படுகிற தாபத்தினை, சாதாரண வேதனையென்று சொல்லிவிடமுடியாது, அதற்கும் மேலே. ‘ ‘சிரில்’, எல்சாமீது சாய்ந்தபடி இருக்கிறபோதெலாம்’, என்னுடைய இதயம் சுக்கு நூறாகியிருக்கிறது, இத்தனைக்கும் அக்காட்சியைத் தீர்மானித்தது நானாக இருக்கும், அதைத் தீர்மானித்தபொழுது, அதன் உக்கிரத்தை உணராதது என் தப்பு. அரங்கேறுகிற காட்சிக்குப் பொருத்தமான, எளிமையான இரண்டொரு வார்த்தை பரிமாற்றங்கள்… அதிலும் குறிப்பாக சிரிலின் முகமும், அவனது பழுப்பு நிற, மென்மையானக் கழுத்தும், ‘எல்ஸா’விற்குத் தாரைவார்க்கப்படுவதைப் பார்க்க மனம் பொறுப்பதில்லை, அதைத் தடுத்து நிறுத்த என்னவிலையென்றாலும் கொடுப்பதற்கு தயாராகவே நானிருந்தேன். இதில் ஆச்சரியமென்னவென்றால், பெரும்பாலான நேரங்களில், அக்காட்சிகளுக்கு நான்தான் காரணகர்த்தாவென்பதை மறந்துபோவது.

மேலே குறிப்பிட்டதுமாதிரியான ஏராளமான அசம்பாவிதங்களுக்கிடையிலும், எங்கள் மத்தியில் ஒருவித ‘நம்பிக்கை இழை, நெருக்கம், இனிமை” – இல்லை எனக்குப் பொருத்தமான சொல் கிடைக்கவில்லை, அதாவது ‘ஆன்’னுடைய தயவால் வாய்க்கப்பெற்ற ‘நிம்மதியான’ வாழ்க்கை. ‘நிம்மதி’கூட சரியான சொல்லாகாது, ‘நிம்மதியையொத்த’ என்று, வேண்டுமானாற் சொல்லிக்கொள்ளலாம். அதற்கு முன்பு அப்படி நடந்துகொண்டதில்லை, எங்களைப் பற்றியே நாங்கள் சிந்திந்துக்கொண்டிருந்தநேரத்தில், அவள், எங்கள் நலனை நினத்து செயல்பட்டாள், எங்களது மோசமான ஆசைகளோடும், எனது சின்னத்தனமான திட்டத்தோடும் ஒப்பிடுகிறபோது அவள் மிகவும் உயர்ந்தவள். என் தகப்பனாருக்காக தனது கண்ணியமானத் தோற்றம், புத்திகூர்மை, நேசம் என்பவற்றைத்தவிர, பிறபொய்யான கவர்ச்சிகளை விட்டொழித்தாள். எனது. திட்டத்திற்குப் பெரிது உதவுமென நம்பிக்கொண்டிருந்த அவளுடைய பிரத்தியேக குணங்களான, கல்மனதும், வீம்புங்கூட அவற்றுள் அடங்கும். நான் அவளுக்கென்று வருந்த ஆரம்பித்தேன், சிலவேளைகளில் நமதுணர்வு, படைகளின் அணிவகுப்பில் வாசிக்கப்படும் இசைக்கு ஒப்பானது, விவரிக்க இயலாத பரவசத்தில் நம்மை நிறுத்திவிடும், ‘ஆன்’னுக்காக எனது மனது துடித்தபோது அப்படித்தான் நெகிழ்ந்துபோனேன். அதற்காக என்னை நீங்கள் குற்றஞ் சொல்ல வேண்டாம்.

ஒருநாள் காலை நேரம், மிகுந்த பரபரப்புடன் வேலைக்காரி என்னைத் தேடிவந்தாள், அவள் கையில்: திட்டமிட்டபடி நடக்கிறது, உடனே வரவும்!” என்கிற தகவல். பெரியவிபரீதம் காத்திருக்கிறதென்று மனது எச்சரித்தது. எனது திட்டத்தின் இறுதிக்கட்டத்திற்கு வந்திருக்கிறேன், அதனைச் சந்திக்க பயம். கடற்கரைக்குப் போய் பார்த்தால், அங்கே ‘எல்ஸா’, அவளது முகத்தில், கடைசியில் தான் வென்றுவிட்ட மகிழ்ச்சி.

” – ஒருவழியாக, உன்னோட தகப்பனாரை பார்க்கமுடிந்தது, ஒரு மணிநேரம் ஆகிறது.

– உங்கிட்ட என்ன சொன்னார்?

– அவர் எங்கிட்ட மிருகத்தனமா நடந்துகொண்டாராம், வருத்தம் தெரிவித்தார். உண்மைதானே?”

நான் அனுமதித்ததுபோல, தொடர்ந்தாள்.

” – பிறகு என்னைப் புகழ்ந்து நிறைய வார்த்தைகள், அவருக்கு மாத்திரமே அது வருமென்பதுபோல. கொஞ்சம் ஒட்டுதலற்றகுரல், குழைவான வார்த்தைகள், மனதிலிருப்பதை சொல்ல முடியாமல்…எப்படி சொல்றது..”

நனவுலகிற்கு அவளைக் கொண்டுவர தீர்மானித்தவளாய்:

” – எதற்காக அத்தனையும், கடைசியில் என்னதான் சொன்னார்?

– ஒன்றுமில்லைண்ணு சொல்வதற்கில்லை!… பக்கத்து கிராமத்துக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு வரலாமாவென்று கேட்டிருக்கிறார், எனக்கும், ‘பழிவாங்கணுங்கிற எண்ணமெல்லாமில்லை, எனக்கும் பரந்த மனசிருக்கு, முன்னைப்போலயில்லை, நிறைய முன்னேற்றம் கண்டிருக்கிறேண்ணு’, உனது தகப்பனார்கிட்ட நிரூபிச்சாகணுமில்லையா?.”

என் தகப்பனாருக்கு, தலைமுடி தேன்நிறத்திலிருக்கிற பெண்களின் முன்னேற்றங்கள் குறித்து சில அபிப்ராயங்களுண்டு, அதை நினைத்துப்பார்த்தேன், சிரிப்புவந்தது.

” – ஏன் சிரிக்கிற? அவருடைய அழைப்பையேற்று, போகத்தான் வேண்டுமா?

எனக்கதில் சம்பந்தமில்லையென, சொல்ல நினைத்தேன். அந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முழுக்கமுழுக்க நானே காரணமென்று நினைக்கிறாள், உண்மையிருக்கிறதோ இல்லையோ, வகையாய்ச் சிக்கியிருந்தேன், எனக்குக் கோபம்வந்தது:

” எல்ஸா… இந்த விடயத்திலே என்னை இழுக்காதே, உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய். அடிக்கடி என்னைக்கேட்டுகொண்டு அதன்படி காரியத்திலிறங்கறதும் சரியில்லை, பிறகு, ஏதோ நாந்தான் உன்னை இப்படியெல்லாம் செய்யச்சொல்கிறேனென்று பலரும் நம்பக்கூடும்.

– அதுதானே உண்மை, உன்னுடைய உதவியாலத்தானே இன்றைக்கு இந்த நிலைமை…”

அவளது பாராட்டு மொழிகள், என்னை பரவசபடுத்துவதற்குப் பதிலாகப் பயமுறுத்தியன.

” – உன்னுடைய விருப்பபடி ஆகட்டும், இனி எங்கிட்டே, இதெல்லாம் வேண்டாம், உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்!

” – செசில்… என்ன பேசுற நீ, அந்த பொம்பளையை துரத்தியாகணுங்கிறதை மறந்தாச்சா.

தப்பினால் போதுமென்று அங்கிருந்து புறப்பட்டேன். அவருடைய விருப்பமென்னவோ அதன்படி அப்பா நடந்துகொள்ளட்டும், முடிந்தால் ஆன் நெருக்கடியைச் சமாளித்துக்கொள்ளட்டும், நான் சிரிலை சந்திக்க வேண்டியிருந்தது. எனது அப்போதைய கலவரப்பட்டிருந்த மனதிற்கு சிரிலுடனான உறவு மாத்திரமே மாற்றாக இருக்குமென்று நம்பினேன்.

சிரில், எனது கரங்க¨ளைத் தொட்டு அருகிலிழுத்துக்கொண்டான், வார்த்தையேதுமில்லை. அவனது அண்மையில், அனைத்தும் கைகெட்டும் தூரத்தில், நிறைய உக்கிரம், கட்டுக்கடங்கா சந்தோஷம். சிறிது நேரத்திற்குப்பிறகு அக்கடாவென்று, வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்த அவனது பொன்னிற சட்டையணிந்த மார்பில் கிடந்தேன், புயலிற் சிக்கிய படகுபோல அப்படியொரு களைப்பு, அவனிடத்தில் எனக்கிதில் விருப்பமில்லையென்று சொன்னேன். ஆனால் அதை அவனிடத்தில் புன்னகை செய்தபடிதான் கூறினேன், காரணம் அதை நினைத்தபோது எனது மனதில் வலிகளில்லை, மாறாக ஒருவித இதமான மகிழ்ச்சி. சிரில் நான் சொன்னதைப் பெரிதுபடுத்தவில்லை.

” அதனாலென்ன.. என் விருப்பத்திற்கு இணங்கும் அளவிற்கு எனது காதல் உன்னை மாற்றியிருக்கிறது, உன்னை மிகவும் நேசிக்கிறேன், வெகு ஆழமாக நேசிக்கிறேன்…

” உன்னை மிகவும் நேசிக்கிறேன், வெகு ஆழமாக நேசிக்கிறேன்…” என்றவன் கூறியிருந்தது, சாப்பிட உட்கார்ந்தபோதுகூட எனது காதில் ஒலித்தன, விளைவு மதிய உணவின்போது தெளிவாக என்ன நடந்ததென்கிற நினைவில்லை. ‘ஆன்’ ஊதா வண்ணத்தில் வெளுத்த கவுனொன்றினை அணிந்திருந்தாள், அவளது கண்களிலும், கண்களைச் சுற்றிலுங்கூட கருவளையங்கள் சூழ்ந்து, கவுனைப்போலவே சோபையற்றிருப்பதைபோலத் தோற்றம், அப்பாவின் முகத்திலோ சந்தோஷம், அதை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார், நிலைமை அவருக்குச் சாதகமாகத் திரும்பியிருந்தது. கடைசியில் உணவின் இறுதிக்கட்டத்திற்கு வந்திருந்தபோது, மதியம், அருகிலிருக்கிற கிராமத்திற்குச் சென்று சில பொருட்களை வாங்கிவரயிருப்பதாகக் அப்பா கூறினார், அதைக் கேட்டதும் உள்ளூரச் சிரித்துக்கொண்டேன். எனக்கு முடியலை, உயிர்வேதனையெனச் சொல்வார்களே அந்த நிலமையில்தான் நானுமிருந்தேன். கடலிலிறங்கி நீந்திவிட்டுவரலாமென்று தோன்றியது.

மணி நான்கிருக்கும் கடலில் இறங்கினேன். அப்பாவை மாடியில் வெளியில் நின்றுகொண்டிருந்தார், மதிய உணவின்போது சொல்லியிருந்தது, ஞாபகத்திற்குவந்தது, அருகிலிருந்த கிராமத்திற்குச் செல்ல தயாராகயிருந்தார், அவரிடம் ஏதாகிலும் சொல்லவேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. கு¨றைந்தபட்சம், கவனமாயிருங்கள், அவசரப்படாதீர்களென்று சொல்லியிருக்கலாம்.

கடல்நீர் இளஞ்சூட்டுப் பதத்துடன் சுகமாக இருந்தது. ‘ஆன்’ கடலில் குளிக்கவரவில்லை. அங்கே அப்பா ‘எல்ஸா’வுடன் ஆசைவார்த்தைகளிலிறங்க, ‘ஆன்’ இங்கே தனது விருப்ப சேகரிப்போடு(Collection) பொழுதைக் கழிக்கலாம் அல்லது தனது அ¨றையிலமர்ந்து சித்திரம் தீட்டலாம். இரண்டு மணி நேரம் கழிந்திருக்கும், சூரியனும் எதிர்பார்த்ததுபோல இல்லையென்று தெரிந்தவுடன் மாடிக்கு வந்தேன். செய்தித்தாளொன்றை விரித்தபடி நாற்காலியில் அமர்ந்தேன்.

ஆன் வருவது தெரிந்தது. ஊசியிலைத் தோப்பு திசையிலிருந்து வந்தாள், இல்லை ஓடிவந்தாள், பதட்டத்துடன் ஓடிவந்தாள், அப்படியொரு வேகம், வயதான பெண்மணியொருத்தி ஓடிவருவதும் முடியாமல் தடுமாறுவதும், விழுந்தெழுவதும் மாதிரியான விபரீதமான கற்பனையில் நான். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் அமர்ந்திருந்தேன், வந்தவள் வீட்டின் பின்புறமிருந்த, கார் நிறுத்திவைக்கும் கொட்டகைப்பக்கம் மறைந்துபோனாள். நடக்கவிருப்பதென்னவென்று சட்டென்று புரிந்தது, அவளைத் தடுத்து நிறுத்தவேண்டும், ஓடினேன்.

நான் போனபோது காரில் அமர்ந்திருந்தாள், சாவியைக்கொடுக்க எஞ்சின் உருமுகிறது. ஓடிச் சென்று கதவில் விழுந்தேன்.

” ஆன் அவசரப்பட்டு, எந்தமுடிவும் எடுக்க வேண்டாம். போகாதீங்க. எல்லாத்துக்கும் நான்தான் காரணம், என்னநடந்ததென்று விளக்கமா சொல்றேன்…”

ம்.. அவள் காதில் வாங்கினாளாவென்று தெரியவில்லை, என்னை நேராகப் பார்ப்பதையும் தவிர்த்தாள், கைச் சக்கரத்தடையை (Hand break), தளர்த்தவென்று குனிந்தாள்.

” ஆன்… போயிடாதீங்க. எங்களுக்கு நீங்க அவசியம் இருந்தாகணும்!”

சட்டென்று நிமிர்ந்தாள், உடைந்து அழுதாள். கடைசியில் எனது எதிரியென்று கருதி மோத நினைத்தது வெறும் ஜடமல்ல, இரத்தமும் தசையும் கொண்ட உயிர், அதற்கும் உணர்வெல்லாமுண்டு என்பது புரிந்தது. அவளும் சிறுமி, கொஞ்சம் புதிர், இளம்பெண், பின்னர் பெண்மணியென்று வாழ்க்கையை அறிந்தவள், நாற்பது வயதும், தனிமைவாழ்க்கையும் அவளை, ஓர் ஆணை விரும்பவைத்திருக்கிறது, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, ஒருவேளை இருபது ஆண்டுகளுக்குக்கூட அவனோடு வாழ்க்கையை இனிமையாகக் கழிக்கலாமென்ற கனவுகள் இருந்திருக்கக்கூடும். ஆனால் என்ன செய்திருக்கிறேன், இதோ.. அவளது அவலமான இந்த முகத்திற்கு நான்தானே காரணம்? அதிர்ச்சியில் உறைந்துபோனேன், உடல் நடுங்க கார்க் கதவைப் பிடித்தபடியிருந்தேன்.

” – உங்களுக்கு ஒருவரும் வேண்டாம், உனக்கும் சரி, உன் தகப்பனாருக்குஞ் சரி.” -ஆன்.

எஞ்சின் உருமுவது தொடர்கிறது, எனக்கு ஏமாற்றம், திடீரென்று அவள் புறப்பட நினைப்பது சரியல்ல:

” – ஆன்… தயவு செய், என்னை மன்னிக்கணும். உன்னைக் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன், எங்களோடு இருக்கத்தான் வேண்டும்.

” – எதற்காக மன்னிக்கணும்?”

இரு விழிகளிலிருந்தும், பொலபொலவென்று கண்ணீர், அதைப் பற்றிய அக்கறையின்றி, என்னை வெறித்துப்பார்த்தாள்:

” அசடு அசடு…எதற்காகயிப்படி சின்னப்பெண்போல…”

ஒருசில நொடிகள், அவளது கரம், எனது கன்னத்தில் படிந்திருந்தது, சட்டென்று புறப்பட்டாள். கார் எங்கள் வீட்டினையொட்டி வளைவில் திரும்பும்வரைவரை இருந்தேன், பிறகுச் சுத்தமாக மறைந்துபோனது, போனவிடம் தெரியவில்லை., அனைத்தும் கணத்தில் நடந்துமுடிந்திருந்தது. ஆனால் கடைசியாய் பார்த்த அந்த முகம், ஆன்னின் முகம்…

எனது பின்னால் ஏதோ சத்தம், திரும்பிப்பார்க்கிறேன் அப்பா. சிலநொடிகள் தன்மீது ஒட்டியிருந்த ‘எல்ஸா’வுடைய உதட்டுச் சாயத்தைத் துடைத்துக்கொள்ளவும், தைத்திருந்த ஊசியிலைகளை தட்டிவிடவும் செலவிட்டார், வேகமாய் அவர்பக்கம் திரும்பியவள், அவர் மார்பில் விழுந்தேன்.

” – மிருகம்..மிருகம்!

தேம்பித் தேம்பி அழுகிறேன்,

” – என்ன ஆச்சு? எதற்காக அழற? ‘ஆன்’… ஆன்..எங்கே? செஸில்… அழாம நடந்ததென்னவென்று, சொல்லித் தொலையேன்…”

—————————————-
nakrish2003@yahoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts