நாகரத்தினம் கிருஷ்ணா
என்னைப் பற்றியும், ‘ஆன்’னைப் பற்றியும் நான் சொன்ன அளவிற்கு, என் தகப்பனாரைபற்றி உங்களிடத்தில் கூறியிருப்பது குறைவென்று சொல்லலாம், அதற்குக் காரணம், அவரிடத்தில் எனக்கு அக்கறையில்லையென்றோ, நான் சொல்லிகொண்டிருக்கிற கதையில் அவருக்கு முக்கியத்துவமில்லையன்றோ பொருளல்ல. அவரை நேசித்த அளவு வேறொருவரை ஒருபோதும் நான் நேசித்ததில்லை. என் மனதில் அப்பாவிற்கென நிரந்தர இடமிருந்தது, அது ஆழமான அன்பு, அக்காலக்கட்டத்தில் என்னை ஆட்டுவித்த அத்தனை உணர்வுகளிலும் பார்க்க, மேப்பட்டது, பத்திரமாக போற்றியும் வந்தேன். அவரைப்பற்றிச் சொல்வதற்கு மூட்டைமூட்டையாய் தகவல்களிருந்ததுபோல, அவரிடத்தில் மட்டுமே, “எனது மனதுக்குப் பிடித்தமாதிரி நடந்துகொள்ளுங்களேன்”, எனச் சொல்லவும் வேண்டியிருந்தது. அவர் சுயநலவாதியுமல்ல, வீம்பான ஆசாமியுமல்ல. ஆனால் எதையும் யோசனையின்றி செய்யக்கூடியவர், மனம்போனபோக்கு, அதைத் திருத்த முடியாது. ‘நல்லுணர்வுகளுக்கு அவர் அருகதையற்றவர், பொறுப்பற்றவர்’, என்பதும் சரியல்ல. என்னிடத்தில் அவர் காட்டிய அன்பை, ஒரு தகப்பனுக்கும் மகளுக்குமுள்ள சராசரி பாசமாக நீங்கள் கருதக்கூடாது. என்னால் நிறைய இன்னல்களை அவர் அனுபவித்திருக்கக்கூடும்? உலகில் வேறொருவர் அவரளவிற்கு வருந்தியிருக்கமாட்டார்கள். என்னுடைய வருத்தமும் குறைந்ததாயென்ன? அன்றொருநாள், எனக்கேற்பட்ட ஏமாற்றத்திற்கு, என்னை நிராகரிக்கும் அவரது மனப்பாண்மையும் அல்லது முகத்தை அவ்வப்போது அவர் திருப்பிக்கொள்வதுமாத்திரமா காரணங்கள்? நான் முக்கியமா, அவரது சொந்த இச்சைகள் முக்கியமாவென்றால், அவரது தேர்வு எனக்காகவே இருக்கும். சில இரவுகளில் என்னோடு வீட்டிற்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில், ‘மிஸியே வெப்'(Webb) மொழியில் சொல்வதென்றால், ‘வாய்த்த நல்ல சந்தர்ப்பங்களை இழந்திருக்கிறார்”. அது தவிர மற்ற நேரங்களிலெல்லாம், சந்தோஷம், சபலம், மனம்போனபோக்கென்று வாழ்ந்துவந்தவரென்பதையும், மறுக்கவில்லை. பிரச்சினைகளை உடல்ரீதியாக அணுகினார். காரணகாரியத்துடன் பதிலிறுப்பார். “என்ன முடியலையா? எரிச்சல் வருதா? மதுவை குறைத்துக்கொள், நிம்மதியாகத் தூங்கு”. பெண்ணொருத்திமீது அவருக்கு வருகிற விபரீதமான ஆசைக்கும் அந்த நிலைமைதான், அதனைக் கூடாதென்று தவிர்ப்பதுமில்லை, அதனை வளர்த்துக்கொண்டு அவதிப்படுவதுமில்லை. யதார்த்தவாதி, பக்குவமாக அணுகும் குணம், அடுத்தவர் மனம் புரிந்து நடப்பவர், மிக மிக நல்லவர்.
எல்ஸா மீதான மோகத்தினால், துன்பத்திலிருந்தார். அதற்காகப் பெரிதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளவேண்டாம். “‘ஆன்’னை ஏமாற்றப்போகிறேன் என்றவுடனே, இனி அவளை நேசிக்கப்போவதில்லையென்று பொருளல்ல. எல்ஸா மீதான தாபம், என்னை மிகவும் வாட்டுகிறது. ஏதாகிலும் செய்தாகவேண்டும், அல்லது ‘ஆன்’னிடம் எனக்கினி ஒத்துவராது”, என்றெல்லாம் என் தகப்பனார் சொல்லிக்கொண்டது கிடையாது. உண்மையில், ‘ஆன்’னை மிகவும் நேசித்தார், அவளைக் கொண்டாடினார். ‘ஆன்’னும் படிப்பறிவற்ற, மோசமான பெண்கள் பின்னால் சுற்றும் அப்பாவின் குணத்தை மாற்றியிருந்தாள். அவரை நன்கு புரிந்து வைத்திருந்ததால் அவளால் என் தகப்பனாருடைய வீண்பெருமைகளுக்கும், உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஈடுகொடுக்கவும் முடிந்தது, தனது புத்திகூர்மையையும், அனுபவத்தையும் அவரோடு பகிர்ந்துகொண்டாள். அப்பாவின் மனமோ, வேறுவிதமாக ‘ஆன்’னைப்பற்றி கணக்குப்போட்டது. அவள், அவருக்கு ‘பொருத்தமான ஆசைநாயகியாக’வும், எனக்கு ‘இலட்சிய தாயாகவும்’ இருக்கமுடியுமென்று நினைத்திருக்கவேண்டும். ‘இலட்சிய மனைவியாக’ அவளைக் கைப்பிடித்து, நியதிகள்படி வாழ்வதற்கு அவரால் முடியாதென்பது உறுதி.. நாசூக்காகச் சொல்லவேண்டுமென்றால், என் தகப்பனாரும் என்னைப் போலவே கிறுக்குப் பிடித்த ஆசாமியென்பது ‘ஆன்’னுடைய தீர்மானம், சிரிலுடைய கருத்தும் அதுதான். யார் எப்படி நினைத்துக்கொண்டலும், சோபையற்ற வாழ்க்கைக்கு, முடிந்த அளவு ஒளிசேர்ப்பது அவசியமென்றெண்ணுகிற என் தகப்பனாரை தடுக்கவியலாது.
எப்படியாவது எங்கள் வாழ்க்கையிலிருந்து ‘ஆன்’னை ஒதுக்க நினைத்தேனேயன்றி, என் தகப்பானருக்கு அதனால் நேரக்கூடிய சாதக பாதகங்களைக் கணக்கில் கொள்ள தவறிவிட்டேன். எனக்கென்னவோ அப்படியொரு நிலைமை ஏற்பட்டாலும், அப்பா சமாளிப்பாரென்றே தோன்றியது. இதற்கு முன்பு எத்தனையோ விடயங்களில் அவர், தன்னைத் தேற்றிக்கொண்டிருக்கிறார். ஆக ‘ஆன்’னுடன் முரண்பிடித்தால், மனம்போன போக்கிலே அவர் வாழமுடியுமென்பதால் ஒருவகையில் அப்பாவுக்கு இலாபம். என்ன செய்வது, அப்பாவும் நானும் ஒரே இனம், சொல்லப்போனால் ஊர்மேயும் கூட்டம், சந்தோஷம் சந்தோஷமென்று, வாரி இறைத்துவிட்டு புலம்பிக்கொண்டிருக்கு இனம்., என்னைபோலத்தானே என் தகப்பனாருமிருப்பார், வழக்கம்போல காத்திருந்தார், மனதிலுள்ளதை செயல்படுத்தாது வாடிக்கொண்டிருந்தார்.
ஆக அப்பா மிகவும் சஞ்சலத்திலிருந்தார், எல்ஸாமீதான கோபமும் தணியாமலிருந்தது: அப்பாவைப் பொறுத்தவரை, எல்ஸா அவரது கடந்தகால அடையாளம், இளமையின் அடையாளம், குறிப்பாக அவரது இளமையின் அடையாளம்.. “அன்பே ஒரு நாள், கட்டாயம் “எல்ஸாவைச்” சந்திக்கணும், நான் கிழவனில்லைண்ணு அவளிடத்தில் நிரூபிச்சாகணும். எனக்கு நிம்மதி வேண்டுமென்றால், மெத்தனத்தை அவளது சரீரத்திடமிருந்துதான் கற்றாகணும்”, என்றெல்லாம் ‘ஆன்’னிடத்தில் அப்பா சொல்லக்கூடுமோ, என்று நினைத்தேன். ஆனால், ஆன் பொறாமைகொள்வாளென்றோ, நற்பண்புகள்கொண்ட அவளிடத்தில் அவ்வாறெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது என்றெண்ணியோ, கேட்டால் கோபமுறக்கூடுமென்பதாலோ அவர் சொல்லவில்லை. ‘குடி, கூத்தியென்று கூடாது, தான் விடலைப் பையனில்லை என்பதை உணர்ந்தாகணும், ‘ஆன்’னும் அப்பாவை வளர்ந்த ஆண்பிள்ளையாக நினைத்துத் தன்னை ஒப்படைத்திருக்கிறாளேயன்றி அவரது விடலைப் பையன் குணத்திற்கல்லவென்பதை புரிந்து கொண்டு, ஒழுங்காக இருக்கவேண்டும், அதைவிடுத்துக் கண்டதற்கும் ஆசைப்படும் பரிதாபத்திற்குரிய மனிதராக இருக்கக்கூடாது’, என்றெல்லாம் ‘ஆன்’ன்னும் தன்னுடன் வாழ்வதற்கென்று சில நிபந்தனைகளை என் தகப்பனாருக்கு விதித்திருக்கக் கூடும். அதற்காக ‘ஆன்’னை நாம் குற்றம் சொல்ல முடியாது, மனிதர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டுமெனில், சில விதிமுறைகளைக் கடைபிடித்தாகவேண்டும், ஆனால் அவள் விதித்திருந்த கட்டுப்பாடுகளால் ‘எல்ஸா’ மீதான அவரது தாபத்தைக் குறைக்க முடிந்ததாவென்றால், இல்லை. ‘எல்ஸா’ மீது கொண்டிருந்த அவரது காதல், ஒரே நேரத்தில் இரு பொருள்கள் மீது கொள்கிற கூடாத ஆசை, அவ்வாசை, எல்லா ஆசைகளையும்போலவே கூடிகொண்டுபோனதேயன்றி, குறையவில்லை.
அந்தநேரத்தில்தான், பிரச்சினைக்கு என்னால் தீர்வு காணமுடியுமென்று தோன்றியது. ‘பின்னேரத்தில் ஒருநாள், ‘ஆன்’னை அழைத்துக்கொண்டு ‘நீஸ்'(Nice) நகரத்திற்கோ அல்லது வேறெங்காகிலுமோ, நான் செல்கின்ற நேரத்தில் ‘எல்ஸா’ அப்பாவைச் சந்திக்கவேண்டும்’, என்கிற திட்டத்தை அவளிடத்திற் தெரிவிப்பது. அவ்வாறு நடந்தால், ‘நீஸ்'(Nice) நகரத்திலிருந்து திரும்பும்போது, முறையான கலவிக்குவேண்டிய அல்லது விடுமுறைகழித்து நாங்கள் தொடங்கவிருக்கிற வாழ்க்கைக்குத் தேவையான, புத்தம்புது காதலுணர்வுகளில் மிதமிஞ்சியவராய் அப்பா இளைப்பாறி கொண்டிருக்கக்கூடும். திட்டத்தில் உள்ள குறை, தற்காலிகமாகவென்றாலும், அதற்கு உடன்படுகின்றபொழுது ஆசைநாயகிகள் கூட்டத்தில் ‘ஆன்’னும் ஒருவளாகிறாள், எனவே அவள் மறுக்கக்கூடும். ‘ஆன்’ன்னுக்கு பிறர்மதிக்க வாழ்ந்தாகவேண்டும், அப்படித்தான் அவள் வாழ்கிறாளென்கிற நினைப்பு நிறைய அவளுக்குண்டு, அவ்வாறு நினைத்தே, எங்கள் வாழ்க்கையையும் அவதிக்குள்ளாக்கியிருந்தாள்.
ஆனால் திட்டத்தோடு எல்லாம் சரி, ‘எல்ஸா’விடம், ‘அப்பாவுடைய மனமறிந்து நடந்துகொள்’, என்று சொல்லவுமில்லை, ‘ஆன்’னை அழைத்துக்கொண்டு ‘நீஸ்'(Nice) நகருக்குச் செல்லவுமில்லை. ‘எல்சா’ மீதான அப்பாவின் விருப்பம் முற்றிப்போய், அதன்காரணமாக அவர் தவறிழைக்கவேண்டுமென்று மனம் விரும்பியது. அதுவும் தவிர, சமீபகாலம்வரை எனக்கும் என் தந்தைக்கும் மகிழ்ச்சியைத்தந்த எங்கள் மேம்போக்கான கடந்தகால வாழ்க்கையை இழிவாக நினைக்கும் ‘ஆன்’னுடைய மனப்போக்கையும் என்னால் சகித்துகொள்ள முடியாது. அந்த விடயத்தில் எனக்கொன்றும் ‘ஆன்’ மனதைப் புண்படுத்தவேண்டுமென்கிற எண்ணமேதுமில்லை, ஆனால் ‘நாங்கள் தீர்மானித்துகொண்ட வாழ்க்கை இதுதான்’ என்பதை அவளுக்குப் புரியவைக்கவேண்டும். என் தகப்பானரும் அவளை ஏமாற்றக்கூடும், அப்படி நடந்தால், இன்னொருத்தியோடு அவர் சென்றால், ‘ஆன்’ அதனை, அதற்கான கருதுகோளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கவேண்டும், மனித உடல் எதிர்பார்க்கிற தற்காலிக இன்பமென்றே கொள்ளவேண்டும், பதிலாக சொந்த மதிப்பீடுகள், தமது உன்னதம், கண்ணியமென்கிற அடிப்படையில் பார்த்தல்கூடாது. தனது தரப்பு நியாயத்திற்காக தான், எதற்கும் தயாரென்றால், அவள் செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான், எங்களை திருத்தியாகவேண்டுமென்கிற ஆசைகளெல்லாம் கூடாது. எங்கள் போக்கிலேயே விடவேண்டும்.
என் தகப்பனாருடைய மனதிலிருந்த குழப்பங்களை புரிந்தும், புரியாதவள்போல நடந்துகொண்டேன். எக்காரணத்தை முன்னிட்டும், அப்பாவுக்காக ‘எல்ஸா’விடத்தில் பரிந்துரைக்கவோ, ‘ஆன்’னை அவரிடமிருந்து விலக்கிவைக்கவோ நான் துணைபோக முடியாது, அப்பா தனது மனவருத்தங்களை என்னிடத்திற் புலம்ப அனுமதிக்கவும் கூடாது.
‘ஆன்’னைப்போலவே, அவள்மீது அப்பா கொண்டிருந்த காதலையும் உயர்வானதென்று கருதுபவள்போல என்னை நான் காட்டிக்கொள்ளவேண்டும். அதில் எனக்கேதும் வருத்தமில்லையென்றும் சொல்லவேண்டும். ஆனால் சிலநேரங்களில் ‘ஆன்’னையும் ஒரு நாள் என் தகப்பனார் ஏமாற்றக்கூடுமென்பதை எண்ணிபார்த்தபோது அச்சமும், பிரம்மிப்பும் கலந்தேயிருந்தன. ‘ஆன்’ முகத்தைக் கண்டதும், மனத்திலுண்டாகிற கவலைகள் குறைந்தன. யதார்த்தத்தையுணர்ந்து, அப்பாவுடைய காரியங்களுக்கு அவள் இணங்கிப்போகலாம், அதன்மூலம், எங்கள் வாழ்க்கைமுறையோடு ஒத்துப்போகலாமென்றும் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. இதற்கிடையில், ‘சிரிலும்’ நானுமாக யாருமற்ற இடங்களாகத் தேடித் தேடி காதல் செய்தோம், ஊசியிலைகளின் வாசம், கடலோசை, அவனது உடல் தந்த நெருக்கம்… இப்போதெல்லாம் அவனும் வேதனைப்பட ஆரம்பித்திருந்தான். எங்கள் இருவர் காதலுக்காக, நான் கேட்டுக்கொண்டதுபோல நடிப்பதாகவும் மற்றபடி நடக்கின்ற நாடகத்தில் தனக்கு துளியும் விருப்பமில்லை என்பதுபோலவுமிருந்தான். உண்மைதான் சிரத்தையின்றி உருவான நாடகம், நிறைய பொய்கள், நிறைய வேடங்கள். அவைகள், அந்தச் செய்கைகள் மாத்திரமே, என்னை புரிந்துகொள்ளவும் உதவிற்று.
இதிலிருந்து மீண்டாகவேண்டும், இந்த நிலைமை நீடிக்கக்கூடாது, கொஞ்சம் அதிகமாக யோசித்தால்கூட, பழைய நினைவுகளில் விழுந்து சோர்ந்து போகிறேன். ‘ஆன்’னுடைய சிரித்த முகம், என்னிடத்தில் அவள் காட்டிய பரிவு’ என நினைத்தால் போதும், இடிந்து போகிறேன், வலிபொறுக்கமாட்டாமல் துடிக்கிறேன், எனது மூச்சுக்குழலை நானே நெறித்துக்கொள்வதுபோல எண்ணம். மனசாட்சி உறுத்த, அதிலிருந்து விடுதலைபெற நினைத்து, சிகரெட் பற்ற வைத்தல், இசைதட்டொன்றை கேட்டல், நண்பனொருவனுக்குத் தொலைபேசி எடுத்தல்போன்ற சில்லைரை காரியங்களில் இறங்குகிறேன். கொஞ்சகொஞ்சமாக வேறு விடயத்திம் மனம் அக்கறை கொள்ள, எனக்கதில் விருப்பமில்லை. எனக்கேற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள, அதனை வெல்லாமல் கடந்தகாலத்தை மறக்கமுயல்வதோ, எதையும் மேம்போக்காக பார்க்கிற மனபான்மைக்கு மீண்டும் திரும்புவதோ தீர்வாகாது, அப்படி தற்காலிகமாக நெருக்கடிகளிலிருந்து மீளநினைக்கிற எனதுசாதுர்யத்தை மெச்சிக்கொண்டாலும் எனக்கதில் விருப்பமில்லை.
nakrish2003@yahoo.fr
- அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்
- கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி
- ஆசை என்றொரு கவிஞர்
- கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!
- புற்று நோய்க்கு எதிராக வயாகரா
- மடியில் நெருப்பு – 16
- அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்
- இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி
- ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.
- ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்
- கடித இலக்கியம் – 36
- கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?
- குன்றத்து விளக்கு காளிமுத்து
- மியாம்மாவில் திருவள்ளுவர் விழா
- ஃபிரான்சில் தமிழர் திருநாள்
- பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்
- கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்
- தொலைநோக்கிகள்!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15
- நீ ர் வ லை (2)
- அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்
- உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்
- கறுப்பு இஸ்லாம்
- பாரதி உன்னைப் பாரினில்
- தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்
- பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- சின்னண்ணே! பெரியண்ணே!
- சரி
- காம சக்தி
- கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி