சி. ஜெயபாரதன், கனடா
மன்னித் திடுவாய் என்னை!
மண்ணில் துவளும் குருதித் துண்டமே!
கசாப்புக்கடை கொலைஞர் முன்னே
கனிவாய், கோழையாய்க் காட்டிக் கொண்டேன்!
காலச் சரித்திர அலை யடிப்பில் எப்போதும்
மேலாய் நிமிர்ந்து விழுந்த சிதைவுப் பிண்டமே! … [ஆண்டனி]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
ஓ! பராக்கிரம சீஸரே!
இந்த கீழ் மண்ணிலா கிடக்குதுன் மேனி?
உந்தன் வெற்றி, கீர்த்தி, வீராப்பு, மகிமை
சிறுத்துப் போய் இப்படிச் சீரழிந்ததோ?
எந்த தளமும் எனக்கு உவப்பூட் டாது,
இந்த யுகத்தின் உயர்ந்த ஆத்மா ஏகிச்
சிந்திய குருதி ஓடிய தளம்போல்! … [ஆண்டனி]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
சீஸரை எதிர்த்தது ஏனெனக் கேட்பின்
என் பதிலிதுதான்: நான்
சீஸரைக் குறைவாய் நேசிக்க வில்லை!
நேசித்தேன் ரோமைச் சீஸர்க்கும் மேலாய்!
சீஸர் வாழ்ந்து மாந்தர் அடிமையாய்ச் சாவதினும்,
சீஸர் செத்து ரோமானியர் விடுதலை மேலாம்!
நேசித்த சீஸரை நினைத்து அழுகின்றேன்!
பராக்கிர சீஸரைப் பாராட்டு கின்றேன்,
பேராசை பிடித்ததால், குத்தினேன் வயிற்றில்!
மதிப்பு வல்லமைக்கு! மரணம் பேராசைக்கு!
நாட்டை நேசிக்கா நபரிங்கு உளரோ? …. (புரூட்டஸ் சொற்பொழிவு)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
விதியின் விளையாட்டை அறிவோம்.
ஒருநாள் நாம் சாவது உறுதி!
காலத்தை நீடிக்க மனிதர்
கவனம் திருப்புதல் ஏனோ? …. (புரூட்டஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
மரணம் என்பது என்ன?
உணர்ச்சி அதிர்வு கட்கு ஓய்வு!
ஆசைகளின் அந்திமக் கனவு!
சிந்தனைக் கோலங் கட்கு முடிவு!
உடலின் உழைப்புக்கும் ஒரு விடுப்பு!
மார்கஸ் அரேலியஸ் [Marcus Aurelius, Roman Emperor (A.D.121-180)]
வேதனை உலைத்தீ ஒரு பயங்கரச் சக்தி!
செப்பணிடும் பண்பை, அறிவை, ஆத்மாவை!
புதுப்பிக்கும் மானிட மகத்து வத்தை!
அதுவே படைப்பின் கண்படா ஆணிவேர்!
ஆக்கப் படுவது அருக முடியாது
அச்சம் ஊட்டலாம்! நம்பிக்கை நீக்கலாம்!
முரணாக, முறிவான புரட்சியாய்த் தோன்றலாம்!
பெக் எலியட் மாயோ, பெண் கலைத்துவ மேதை [Peg Elliot Mayo]
நினைவில் வைப்பாய் கடந்திடும் நண்பனே!
உனைப் போன்று நானிருந்தேன் ஒருநாள்!
எனைப்போல் நீயும் ஆவாய் ஒருநாள்!
எனைத் தொடர்ந்து வரத் தயாராய் இரு!
ஒரு கல்லறை வாசகம்
கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!
முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
அங்கம்:5 காட்சி:8
நேரம், இடம், கட்டம்: சீஸர் பட்டாபிசேக தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடியுள்ளது. பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் சீஸர் படுகொலை செய்யப்பட்டு குருதி ஓட விழுந்து கிடக்கிறார்.
நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா மற்றும் பல ரோமானிய செனட்டர்கள்.
காட்சி அமைப்பு: மார்ச் பதினைந்தாம் தேதி பகல் வேளை. தீஸியஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் மற்றும் சில செனட்டர்கள், குத்தப்பட்டுச் செத்துக் கிடக்கும் ஜூலியஸ் சீஸர் உடலைச் சுற்றிலும் நிற்கிறார்கள். செனட்டரும், பொது மக்களும் பயந்து போய் ஓடுகிறார்கள்.
சின்னா: [கையில் வாளை உயர்த்தி] விடுதலை! விடுதலை! ரோமுக்கு விடுதலை! ஏதேட்சை அதிகாரம் ஒழிந்தது! செத்தொழிந்தான் சீஸர்! தெருவெல்லாம் முரசடிப்பீர் செனட்டர்களே! கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது! நாட்டு நேசர்கள் மேடையில் பேசுவார்! வெற்றி நமக்கு! விடுதலை நமக்கு! நல்ல காலம் நமக்கு!
காஸ்ஸியஸ்: மேடையில் ஏறிப் பேசு சின்னா! [வாளை உயர்த்தி] விடுதலை முழக்கம் ரோமாபுரி முழுவதும் ஒலிக்க வேண்டும்! குரலை உயர்த்து! கதவுகளை ஊடுறுவி உன் விடுதலை முழக்கம் செல்ல வேண்டும்!
புரூட்டஸ்: செனட்டர்களே! பொதுமக்களே! பயந்து ஓடாதீர்! உங்கள் உயிருக்குப் பங்கமில்லை! நமது பகைவர் செத்து வீழ்ந்தார்! எங்கள் கடமை முடிந்தது! ஓடாதீர்! உங்களை யாரும் தாக்கப் போவதில்லை! உங்களுக்காக, ரோமா புரிக்காகச் சீஸரை வீழ்த்தினோம்.
காஸ்ஸியஸ்: மேடையில் நின்று பேசுங்கள் புரூட்டஸ்! பண்பாளர் உங்கள் மொழிக்கு மதிப்புண்டு!
புரூட்டஸ்: [திடீரென] எங்கே ஆண்டனி? கடத்திப் போனவர் என்ன ஆனார்? சீஸர் செத்து வீழ்ந்தது தெரியுமா ஆண்டனிக்கு?
திரிபோனஸ்: புரூட்டஸ்! ஆண்டனி தன் இல்லத்துக்கு ஓடி விட்டதாய் அறிந்தேன்! சீஸர் கொல்லப் பட்டதை யாரோ சொல்லி யிருக்க வேண்டும்! பிரளயம் வந்து விட்டதாய் எண்ணி வீதியில் ஆண், பெண், சிறுவர், முதியோர் அலறிக் கொண்டு ஓடுகிறார். ஆண்டனியும் அப்படி ஓடிவிட்டார்.
புரூட்டஸ்: விதியின் விளையாட்டை நாம் அறிவோம். ஒருநாள் நாம் சாவது உறுதி! ஆயுளை நீடிக்க மனிதர் கனவு காண்பது விந்தையே!
காஸ்கா: ஏன் புரூட்டஸ்? இருபது வருட ஆயுளை ஒருவன் வெட்டி விட்டால், அத்தனை வருட மரணப் பயம் அகற்றப் படுகிறது!
புரூட்டஸ்: அப்படியானால் மரணம் வரவேற்கப்பட வேண்டிய நன்மையாயிற்றே! சீஸருக்கு அத்தகைய வெகுமதி அளித்ததைக் கொண்டாடுவோம். அவரது மரணப் பயத்தைக் குறைத்தோம்! நண்பர்களே! சீஸரைச் சுற்றி வட்டமாய் வாருங்கள்! நமது கரங்களைச் சீஸர் குருதியில் குளிப்பாட்டுவோம்! முழங்கை வரையிலும் பூசிக் கொள்வீர்! கை வாளையும் குருதியில் மூழ்க்குவீர்! குருதி சிந்தச்சிந்த அவ்வாளை உயர்த்திக் கொண்டு அங்காடித் தெருவில் நாம் நடந்து செல்வோம்! எல்லாரும் ஒருங்கே முழக்குவோம்: ரோமுக்கு விடுதலை! சமாதானம்! குடியரசு!
காஸ்ஸியஸ்: ரோமாபுரிக்கு விடுதலை அளித்த வீரரென்று நம்மை வருங்காலம் பாராட்டும்! வரலாற்று நூல்களில் நமது பெயரைப் பதிவாக்கி நிரந்தர மாக்கும்! ரோமாபுரி நகரில் நமது சிலைகளை நட்டு மதிப்பளிக்கும்! நம் எல்லாரையும் புரூட்டஸ் வழிநடத்த, அவருக்கு ஆதரவு அளிப்பீர்! ஒதுங்கி நிற்பீர்! முன்னே செல்லட்டும் புரூட்டஸ்! பின்பற்றிச் செல்வோம் நாமெல்லாம்! ரோமாபுரி பெற்றெடுத்த பண்பாளர், பராக்கிரசாலி நமது புரூட்டஸ்! அங்காடி வீதிக்கு அவர் பின்னால் செல்வோம்.
புரூட்டஸ்: [மெதுவான குரலில்] அமைதி! பேச்சை சற்று நிறுத்துவீர்! … யாரிங்கே வருவது? அதோ ஆண்டனியின் வேலைக்காரன்.
[ஆண்டனியின் வேலையாள் நுழைகிறான்]
வேலைக்காரன்: [புரூட்டஸ் முன் மண்டியிட்டு] என் பிரபு இப்படித்தான் உங்களை வணங்கச் சொன்னார். புரூட்டஸ் பண்பாளர், உண்மையாளர், வல்லவர், அறிவாளி என்று பாராட்டுகிறார். சீஸரைத் தைரியசாலி, பராக்கிரசாலி, திறமையான ஆட்சியாளர் என்று போற்றுகிறார். புரூட்டஸை நேசிப்பதாகவும், மதிப்பதாகவும் சொல்கிறார் அவர். சீஸருக்கு அவர் பயந்ததாகவும், ஆனால் நேசித்ததாகவும், மதித்ததாகவும் சொல்கிறார். உங்களைச் சந்திக்க அவர் வருவதில், உங்களுக்கு விருப்பம் உண்டா என்று கேட்கச் சொன்னார். பிரச்சனைகளைத் சமாதானமாய்த் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். சீஸரைக் கொலை பண்ணியது சரியா என்று மனமுடைகிறார். சீஸர் வீழ்ந்ததை மார்க் ஆண்டனி விரும்ப வில்லை! ஆயினும் நன்னம்பிக்கையுடன் உங்களிச் சந்திக்க விழைகிறார் என் அதிபதி! அவர் வருவதற்கு அனுமதி தருவீரா?
புரூட்டஸ்: அனுமதி உண்டு ஆண்டனிக்கு! உன் அதிபதி உயர்ந்த ரோமன்! அழைத்து வா எங்களிடம்! அவருக்கு ஒரு தீங்கும் நேராது! எந்த இடரின்றி அவர் திரும்பிச் செல்லலாம்! போ, அவரை உடனே அழைத்து வா! அன்றும் அவர் எங்கள் நண்பர்தான்! இன்றும் அவர் எங்கள் நண்பர்தான்!
[வேலைக்காரன் போகிறான்]
காஸ்ஸியஸ்: [கவனகாக] புரூட்டஸ்! பழைய ஆண்டனி வேறு! புது ஆண்டனி வேறு! ஆண்டனி எப்படி மாறிப்போய் உள்ளார் என்று நமக்குத் தெரியாது! குத்துப்பட்டு செத்துக் கிடக்கும் சீஸரைப் பார்த்தால், ஆண்டனி இதயம் கொதித்து நம்மை எதிர்த்தால் என்ன செய்வது? தனியாக வராமல், ரோமானியப் படையுடன் வந்து நம்மைத் தாக்கினால் என்ன ஆவது? சிந்திக்காமல் சீஸரின் தோழனை நாம் நண்பன் என்று எதிர்பார்க்கலாமா?
புரூட்டஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! நம்மைத் தாக்கும் திட்டம் உடையவன் முதலில் தன் பணியாளை அனுப்பி நம்மிடம் அனுமதி கேட்க மாட்டான்! திடீரென நம்மைத் தாக்க மாட்டானா? … அமைதி! ஆண்டனி வருவது போல் தெரிகிறது.
[ஆண்டனி தனியாக நுழைகிறார். அவரது விழிகள் கீழே வீழ்ந்து கிடக்கும் சீஸரை முதலில் காண்கின்றன]
ஆண்டனி: [சீஸர் உடலை நெருங்கி மண்டியிட்டுக் கண்ணீருடன்] அந்தோ, பராக்கிரம சீஸரே! படுத்துள்ள இடம் இத்தனைக் கீழான மண் தளமா? உங்கள் வெற்றி, கீர்த்தி, வீராப்பு, மகிமை எல்லாம் குறுகிப் போய் இத்தனை கீழான நிலைக்குச் சிறுத்து விட்டதா? [புரூட்டஸை நோக்கி] பெருந்தன்மை கொண்டவரே! யார் யாரெல்லாம் இன்னும் தம் உயிரைப் போக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளீர்? யார் யார் குருதி எல்லாம் சீஸர் குருதியுடன் கலக்க வேண்டும் என்று வரிசைப் படுத்தியுள்ளீர்? உமது வாளில் குருதி உலர்வதற்குள் வேலையை முடித்து விடுவீர்! ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும், இப்படி ஒரு தருணமும், தளமும் வாய்க்கா எனக்கு! இந்த யுகத்தின் மகத்தான ஆத்மாவின் அருகிலே நானும் அடங்கிப் போவது, பூரிப்பு அளிக்கும் எனக்கு!
புரூட்டஸ்: [பரிவுடன்] அப்படி எண்ணாதே ஆண்டனி! உன் மரணத்தை எங்களிடம் கேட்காதே ஆண்டனி! நீ ஓர் உயர்ந்த ரோமன்! சீஸரை வீழ்த்தி நாங்கள் ரோமின் விடுதலையைக் காத்தோம்! எங்கள் கைவாள் விடுதலை அளிப்பது! கசாப்புக்கடை அரிவாள் போல் ஆடுகளின் கழுத்தை அறுப்பபை அல்ல! குருதி சிந்திடும் எங்கள் கத்தியைப் பார்க்காதே! குணமுள்ள எமதினிய இதயத்தைப் பார்! எமக்கு நீ பகைவன் அல்லன்! நாங்கள் உனது நண்பர்! நம்பிடு எங்களை! நாங்கள் உன்னை மதிக்கிறோம்! எங்கள் புரட்சியை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்! எங்கள் நாட்டு பணிக்கு நீ நல்லாதரவு அளிக்க வேண்டும்.
ஆண்டனி: [கண்ணீர் சொரிய] சீஸர் ஓர் உன்னத ரோமானியர்! உயர்ந்த ரோமானியர் எல்லாம் உயிரைக் கொடுக்க நேரிடுதே! அதனால் உங்கள் கையாலே நானும் உயிரிழக்கத் தயார். சீஸருக்கு நான் வாழ்விலும் தோழன்! சாவிலும் தோழனாக விழைகிறேன்! ஆனால் சாவதற்கு முன்னொரு வேண்டுகோள்! ..[தயக்கமுடன்] .. நீங்கள் ஏன் சீஸரை வீழ்த்தினீர் என்று காரணம் சொல்வீரா?
புரூட்டஸ்: கவலைப் படாதே ஆண்டனி! காரணத்தைச் சொல்கிறேன் உனக்கு! அங்காடி மேடையில் நானின்று பேசப் போகிறேன்! கேட்டுக்கொள் ஆண்டனி! ஆனால் கேட்ட பிறகு நீ உன்னுயிரைக் கொடுக்க வேண்டாம்! உன்னுயிர் எம்மால் நீக்கப் படாது! சீஸரைத் தீர்த்துக் கட்டிய பிறகு, எங்கள் கடமை தீர்ந்தது! நாட்டுக்கு விடுதலை! நாட்டுக்குக் குடியரசு! நாட்டுக்கு நல்ல காலம்!
ஆண்டனி: சீஸர் மடிந்ததால் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்குதா? எனக்குப் புரிய வில்லை! உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும்! குருதி கலந்த உங்கள் கரங்களை நீட்டுங்கள்! ஒவ்வொன்றாக நான் குலுக்க வேண்டும்! நாட்டுக்கு நீங்கள் செய்த நற்பணிக்கு நன்றி! புரூட்டஸ்! பொன்னான உன் கரத்தை முதலில் கொடு! [குலுக்குகிறான்] அடுத்து காஸ்ஸியஸ் உன்கரம். [குலுக்குகிறான்] அடுத்து தீஸியஸ், மெத்தலெஸ், சின்னா, காஸ்கா. உங்கள் மகத்தான செயலுக்கு நன்றி! நண்பர்களே! சீஸரை நேசித்த நான், அவரைக் கொன்ற உங்கள் கைகளைக் குலுக்குவது சரியில்லைதான்! அவரது சடலத்துக்கு அருகில், குருதி உலர்வதற்குள் அவரது எதிரிகளுடன் உடன்படிக்கை செய்கிறேன். [கதறி அழுகிறான்]
காஸ்ஸியஸ்: ஆண்டனி! என்ன சொல்கிறாய் நீ? முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாயே!
ஆண்டனி: மன்னித்துடு காஸ்ஸியஸ்! தெரியாமல் உளறிவிட்டேன்! நண்பர்கள் நீங்கள்! சீஸர் போனபின் நீங்கள்தான் என் நண்பர்! மறந்து விட்டேன், மன்னிப்பீர்!
காஸ்ஸியஸ்: சீஸரைப் பற்றி நீ புகழ்வதை யாம் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் எம்மை மட்டும் திட்டாதீர்! நாங்கள் அனைவரும் ஆழ்ந்து தர்க்கம் செய்து எடுத்த முடிவிது! உனக்குத் தெரியாது!
ஆண்டனி: ஆம், தெரியாது எனக்கு! சீஸரை நீவீர் கொன்றதுக்குக் காரணம் சொல்வீரா? சீஸரால் ரோமுக்கு என்ன அபாயம் நேரும் என்பதை விளக்குவீர் எனக்கு!
புரூட்டஸ்: ஆண்டனி! சீஸரின் புதல்வன் நீ! நிச்சயம் சொல்வேன் உனக்கு! அங்காடி மேடைக்கு வா!
ஆண்டனி: [தயக்கமுடன்] முதலில் ஓர் அனுமதி வேண்டும், புரூட்டஸ்! சீஸரின் உடலை மேடையில் கிடத்திப் பேச வேண்டும் நண்பன் என்ற முறையில்! அனுமதிப்பீரா?
புரூட்டஸ்: அனுமதி உண்டு ஆண்டனி உனக்கு! சீஸரின் பிரேதப் பேச்சை நிகழ்த்த நீயே தகுதி யானவன்! அவரது ஈமக் கிரியைகளை நீ செய்! அனுமதி அளிக்கிறோம்!
காஸ்ஸியஸ்: [மிக்க கவனமாக] பொறு புரூட்டஸ்! தனியாகப் பேச வேண்டும் நான் உன்னுடன்! [தனியாக ஒதுக்குப் புறத்தில் இருவரும் போய்] என்ன செய்கிறீர் என்று தெரிகிறதா? ஆண்டனி அங்காடி மேடையில் பேசுவதற்கு ஒப்புக்கொள்ளாதீர்! சீஸர் பிரேதத்தை முன்வைத்து, ரோமானியர் கல்நெஞ்சைக் கூடக் கரைத்து விடுவான் ஆண்டனி!
புரூட்டஸ்: முதலில் நான் பேசிச் சீஸரைக் கொன்றதின் காரணத்தைக் கூறுவேன்! நம் அனுமதியில் பேசும் ஆண்டனி தடம் மாறினால், தடுப்பேன் நான்! சீஸருக்குப் பிரேத அடக்கம் செய்ய சட்டப்படி ஆண்டனிக்கு அனுமதி அளிப்பதில் நமக்குத்தான் பாராட்டு.
காஸ்ஸியஸ்: என்ன நேருமோ என்பது தெரியாது! புரூட்டஸ்! உமது கூற்றில் நம்பிக்கை யில்லை எனக்கு! ஊமையாகத் தோன்றும் ஆண்டனி ஓர் எரிமலை என்று உமக்குத் தெரியாது!
புரூட்டஸ்: ஆண்டனி! சீஸரின் உடலை நீ தூக்கிச் செல்! அனுமதி உண்டு ஆண்டனி உனக்கு! மேடையில் சீஸரின் மேன்மையைப் பற்றிப் பேசு! பிரேதப் பேச்சில் விடுதலை வீரரைத் திட்டிப் பேசாதே! பேச்சு மீறினால், பிரேத அடக்கம் நிறுத்தப்படும்! உன்னக்கோர் எச்சரிக்கை அது! கவனம் வை! நான் பேசிய அதே தளத்தில் நின்றுதான் நீ உரையாற்ற வேண்டும்! குருதியில் ஊறிய உடலைத் துடைத்துத் தூக்கிக் கொண்டு வா! அல்லாவிட்டால் பார்ப்போர் மயங்கிப் போய் விழுவார்! நாங்கள் போகிறோம். எம்மைத் தொடர்ந்து வா!
[அனைவரும் ஆண்டனியைத் தனியே விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள்]
ஆண்டனி: [சீஸரின் உடலை உற்று நோக்கி] குருதியில் துவண்ட மண் துண்டமே! மன்னிப்பாய் என்னை! கசாப்புக் கடைக் கொலைஞர் முன்னே, கனிவாகக் கோழையாகக் காட்டிக் கொண்டேன்! மேலாக வாழ்ந்து சிதைக்கப் பட்ட மேதை மனிதரே! காலச் சரித்திரம் செதுக்கி வைத்த சிலையே! விலை மதிப்பில்லா உன் குருதியை வெளியாக்கிய கரங்களைக் கைகுலுக்கியதற்கு வேதனைப் படுகிறேன். இந்தக் கொடுமையான நாற்றம் பூமிக்கு மேலே போகும்!
[அப்போது செனட்டர் அக்டேவியஸின் பணியாள் வருகிறான்]
ஆண்டணி: [சட்டென எழுந்து] நீ அக்டேவியஸின் வேலைக்காரன் அல்லவா?
பணியாள்: ஆம், மார்க் ஆண்டனி!
ஆண்டனி: அக்டேவியஸ் ரோமுக்கு வரவேண்டும், பட்டாபிசேகத்தில் பங்கு ஏற்க வேண்டும் என்று சீஸர் அழைப்பு விட்டிருந்தார்.
பணியாள்: ஆம், அந்தக் கடிதம் கிடைத்தது. அக்டேவியஸ் ரோமை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். [அப்போது குனிந்தவன் குருதியில் துவண்ட சீஸரின் உடலைக் காண்கிறான்; ஆ வென்று அலறி] மேதகு சீஸர்! என்ன! செங்கோல் வேந்தருக்குச் செங்குருதிப் பட்டாபிசேகமா இது? [கதறி அழுகிறான்]
ஆண்டனி: அழாதே! திரும்பிப் போ! அக்டேவியஸ் ரோமுக்கு வருவதை நிறுத்து! ரோமில் பயங்கரப் பூகம்பம் ஏற்பட்டுள்ளது! அதற்கு முதற்பலி ஆகிவிட்டார் சீஸர்! அடுத்தது நானாக இருக்கலாம்! அப்புறம் அக்டேவியஸ்! போ! ஓடிப் போ! அக்டேவியஸ் ரோமில் தடம் வைத்தால், அவர் தலை துண்டிக்கப் படலாம்! போ! போ! போ!
[பணியாள் ஓடுகிறான்]
ஆண்டனி: ரோமில் காட்டு மிருகங்கள் வேட்டையாட நுழைந்து விட்டன! ரோம் ஒரு பயங்கர நகரம்! சீஸருக்கு பிறகு ஆண்டனி! ஆண்டனிக்குப் பின்னே அக்டேவியஸ்! சீஸர் சடலத்தின் மீது பேசும் உரையில் நான் கேட்கப் போகிறேன்! சீஸர் உடலைக் குத்திக் குத்திக் கூறாக்கியது ஏனென்று கேட்கப் போகிறேன்! யாரெங்கே? சீஸரை என் கரங்களில் தூக்கிச் செல்ல வேண்டும்! என் கடைசி உரைகள் அவர் காதில் விழவேண்டும்! அவரது ஈமக் கிரியைகளை என் கரங்கள் செய்ய வேண்டும். சீஸரின் புதல்வன் எனப்படும் நான் அவர் உத்தம உடலுக்குத் தீ வைக்க வேண்டும்!
[பணியாள் வந்து உதவி செய்ய, ஆண்டனி சீஸர் சடலத்தைத் தூக்கிச் செல்கிறார்]
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan December 13, 2006]
- அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்
- கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி
- ஆசை என்றொரு கவிஞர்
- கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!
- புற்று நோய்க்கு எதிராக வயாகரா
- மடியில் நெருப்பு – 16
- அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்
- இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி
- ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.
- ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்
- கடித இலக்கியம் – 36
- கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?
- குன்றத்து விளக்கு காளிமுத்து
- மியாம்மாவில் திருவள்ளுவர் விழா
- ஃபிரான்சில் தமிழர் திருநாள்
- பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்
- கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்
- தொலைநோக்கிகள்!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15
- நீ ர் வ லை (2)
- அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்
- உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்
- கறுப்பு இஸ்லாம்
- பாரதி உன்னைப் பாரினில்
- தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்
- பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- சின்னண்ணே! பெரியண்ணே!
- சரி
- காம சக்தி
- கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி