வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 12

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மறுநாள்காலை பொடிநடையாக சிறிதுதூரம் நடந்துவிட்டு வரலாமென அப்பாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டேன், வழியில் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை சந்தோஷத்துடன் பகிர்ந்துகொண்டோம். எங்கள் ஜாகைக்குத் திரும்புகையில், ஊசியிலைத் தோப்புவழியாகப் போகலாமே என்றேன், அவரும் சம்மதித்தார். அப்போது நேரம் சரியாக பத்தரை மணி. திட்டமிட்டபடி அங்கிருந்தேன். பாதை குறுகலாக இருந்ததோடு, இருபுறமுமிருந்த முட்செடிகள் கால்களில் பட்டு, நான் சொறிந்து கொள்ளவேண்டியிருந்தது. அதைத் தவிர்க்க நினைத்தவர்போல எனக்கு இடம்விட்டு அப்பா முன்னால் நடந்தார். சிறிது தூரம் சென்றிருப்போம், முன்னால் சென்றுகொண்டிருந்த அப்பா சட்டென்று நின்றார். அவர்களைப் பார்த்துவிட்டாரென்று புரிந்துகொண்டேன். அவரருகில் வந்து நின்றேன். சிரிலும்(Cyril) எல்ஸாவும்(Elsa), ஊசியிலை மிலாறுகளைப் பரப்பி கிராமத்தவர்களைப்போல சுகமாகப் படுத்திருந்தார்கள், இந்த யோசனையைச் சொன்னவள் நானென்றாலும், அவர்கள் படுத்திருந்த காட்சியைப் பார்த்ததில், மனம் உடைந்துபோனது. இருவருமே நல்ல அழகு, வாலிப வயதினர், தவிர கடந்த சிலநாட்களாக அருகருகே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், இந்த லட்சணத்தில் எல்ஸா(Elsa)வுக்கு அப்பாவிடத்தில் உள்ள காதலோ அல்லது சிரிலுக்கு(Cyril) என் மீதுள்ள காதலோ, அவர்களுக்கிடையான அசம்பாவிதங்களுக்கு எப்படி தடைபோட முடியும்?. அப்பாவிடத்தில் எனது கவனம் திரும்பியது, அசையாமல் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்; முகத்தில் அதுவரை நான் காணாதப் பதட்டம்; அவரது கையைப் பற்றியவள்:

” – அவர்களை எழுப்பவேண்டாம், நாம போகலாம்”, என்றேன்.

கடைசியாக ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தார்: எல்ஸா, தனது இளமையின் முழு வாளிப்புடன், முதுகுப்புறமாக படுத்திருக்கிறாள், செக்கசெவேரென்றிருந்த உடல், சொக்கத் தங்கம் போல மினுக்குகிறது, உதட்டில், இளம் வயது விபச்சாரிமாதிரி, புன்னகை, ம்..பரவாயில்லை, தேர்ந்துவிட்டிருந்தாள்…அப்பா திரும்பி வேகமாக நடந்தார்.

” தேவடியா, தேவடியா!… “, அப்பா முனகுகிறார்

– எதனால அப்படிச் சொல்லணும்? அவள் விருப்பப்படி நடந்துகொள்ள சுதந்திரம் இல்லையா என்ன?

– அதற்காக சொல்லலை. ஆனால் சிரிலை(Cyril) அவள் அணைத்துக்கொண்டிருக்கும் விதத்தை, பார்த்தாயே, நல்லாவா இருக்கு?

– நல்லா இருக்குண்ணா நான் சொல்றேன், எனக்குப் பிடிக்கலைதான்- நான்

– எனக்குந்தான். எல்ஸாவை எனக்குப் சுத்தமா பிடிக்கலை- இருந்தாலும் அவளோட கொஞ்ச காலம் நான் இருந்திருக்கிறேன் என்கிற உண்மை இல்லையென்று ஆயிடுமா, என்ன? ஆக மோசம்…”

என் தகப்பனாரை இந்தவிவகாரம் எந்த அளவிற்கு வேதனைப் படுத்துமென்று எனக்குத் தெரியும். அவர் மனதிலும் நான் நினைத்தது போலவே விருப்பங்கள் இருக்கலாம் அதாவது அவர்கள் மீது பாய்வது, இருவரையும் பிரிப்பது, நேற்றுவரை தனக்கு உடமையாக இருந்ததற்கு மீண்டும் சொந்தம் கொண்டாடுவது.

” – ஆன்னுக்குத் தெரியவந்தால் என்ன நடக்குந்தெரியுமா?…

– என்னது? ஆன்னுக்குத் தெரியவந்தாலா?…வரட்டுமே. அவள் இதைப் புரிஞ்சுக்கபோறதில்லை. ஒருவேளை அதிர்ச்சி அடையலாம், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனா நீ, என்னோட மகள்தானே, உனக்கு என்னோட வேதனை என்னவென்று புரியுதா இல்லையா? இந்தக் கண்றாவிகளைப் பார்க்க அதிர்ச்சியாக இல்லை?

அவரது மனதைப்புரிந்துகொண்டு அதை மேய்ப்பது சுலபாமாக இருந்தது. ஆனால் அதை நன்றாக புரிந்துகொள்வதிலேதான், கொஞ்சம் பயம்..

” – எனக்கு அவர்களை அந்த நிலையில் பார்த்ததில் எந்த அதிர்ச்சியுமில்லை. கொஞ்சம் யதார்த்தத்துடன் இதைப் பார்க்கவேண்டும். எல்ஸா(Elsa)வுக்கு மறதி அதிகமென்று நினைக்கிறேன். சிரிலை(Cyril) அவளுக்குப் பிடித்திருக்கிறது. நீங்களாகத் தொலைத்த பொருளை சொந்தமென்று சொல்லிக்கொள்வதிலும் அர்த்தமுமில்லை. அதிலும் அவளுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது…

– சரி நான் விரும்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்”, என்று ஆரம்பித்தவர், வார்த்தைகளின்றி தடுமாறினார்.

“உங்களால் முடியாது, தீர்மானமாகக் கூறினேன்”, ஏதோ எல்ஸாவை(Elsa) மீண்டும், அப்பா தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசுவது நியாயமானது என்பதுபோல, நாங்கள் உரையாடினோம்.

” ம்.. இது சரிவருமென்று நானும் நினைக்கலை, – யதா¡ர்த்தவாதியாகப் அப்பா மாறியிருந்தார்.

– ஆமாம்.. அதுதான் உண்மை,” தோளிரண்டையும் உயர்த்தியவாறு கூறினேன்.

“அடப் பாவி மனிதா, பந்தயத்தித்திலிருந்தே விலகிகொண்ட பிறகு, ஜெயித்தாகணும்ணா எப்படி?”, என்பது அந்தத் தோள் உயர்த்தலுக்குப் பொருள். எங்கள் வில்லாவை அடையும் வரை ஒரு வார்தை பேசவேண்டுமே, ம்… மனிதர் அமைதியாக வந்தார். வில்லாவுக்குள் நுழைந்தோமோ இல்லையோ, ‘ஆன்’னை(Anne) இறுக அணைத்துகொண்டு சிலநொடிகள் மெய் மறந்திருந்தார். என் தகப்பனாரிடத்திலிருந்து அதனை எதிர்பார்க்காததால், அவளுக்கு வியப்பு, புன்னகைத்தபடி, நடக்கட்டுமென அனுமதித்தாள். அங்கிருந்து வெளியேறியவள் கூடத்து சுவற்றில் சாய்ந்தபடி நின்றேன், குற்ற உணவில் எனது உடல் நடுங்கியது.

இரண்டுமணி அளவிற்கு சீழ்க்கை ஒலி கேட்டது. சிரிலென்று(Cyril) புரிந்துகொண்டு, கடற்கரைக்கு இறங்கி நடந்தேன். படகிலேற எனக்கு உதவியவன், ஆழ்கடல் திசைக்காய் அதனைச் செலுத்தினான். கடலில் ஒருவருமில்லை, வெயில் கொளுத்தியது. ஆழ்கடல் சென்றதும், படகு நகராமலிருக்க, பாயினை இறக்கினான், எனக்காய்த் திரும்பினான். சிலநொடிகள் இருவருமே மௌனமாக இருந்தோம், பிறகு முதலில் அவனே பேசத் தொடங்கினான்.

” – காலமே நடந்தது…

– பேசாதே! எங்கிட்ட ஒரு வார்த்தை வேண்டாம், நான் எந்த விளக்கத்துக்கும் தயாரா இல்லை.”

மெல்ல என்னை படகிற்கிடந்த மூடுசீலை (Tarpaulin)யொன்றில் கிடத்தினான். இருவருமே தத்தளிக்கிறோம், வியர்வையில் வழுக்குகிறோம், ஆவேசம், அவசரம்; எங்கள் கலவிக்கு ஈடுகொடுத்து தாலாட்டப்படும் படகு. தலைக்குமேலே தெரிந்த சூரியனைப் பார்க்கிறேன். அடுத்த கணம் சிரில், தனக்குமட்டுமே பேச உரிமையுண்டு என்பதுபோல மென்மையானகுரலில் பிதற்றுகிறான்: “சூரியன் வானத்திலிருக்கிறதென்றுதானே பார்க்கிற, அது எப்போதோ விழுந்துட்டுது, வெடித்து சிதறி, இப்போது எனது உடல்மீதுதான் அத்தனையும் படிந்திருக்கின்றன. சொல்லு.. இப்போது நான் எங்கிருக்கேன்? கரையேறமுடியாமல் வெகு ஆழத்தில் விழுந்து கிடக்கிறேன் என்பது நிச்சயம், ஆனால் எங்கே, கடலிலா? காலத்திலா? காதற் பரவசத்திலா? உரத்த குரலில் சிரிலை, அழைத்தேன். அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

அடுத்து உப்பு நீரின் சிலுசிலுப்பு. இருவருமாகச் சேர்ந்து சிரித்தோம், பரவசத்தில் திளைத்தோம், களைப்புற்றோம், ஒருவரையொருவர் நன்றியுடன் பார்த்துக்கொண்டோம். சந்தோஷமாக இருந்தது. கீழே கடல், ஆகாயத்தில் சூரியன், சிரிப்பு, காதல் அத்தனையும் துணைக்கிருந்தன. அப்படியொரு கோடைவிடுமுறை, மிதமிஞ்சிய குதூகலத்துடன், நி¨றைய செறிவுடன் பயமும், சஞ்சலமும் தயவுபண்ணிய அவைகள் மறுபடியும் வாய்க்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

சிரிலுக்கும் எனக்குமான காதல், எனது உடல் இச்சையை பூர்த்திசெய்திருப்பது உண்மையென்றாலும், நினைத்துப்பாக்க அறிவார்ந்த ஆனந்தத்தையும் எனக்குக் கொடுத்திருந்தது. அவர்களுக்கோ ‘காதல் செய்வது’ ஒரு கவர்ச்சிகரமான சொல், அதைத் தவிர பெரிதாக பொருள்கொள்ள ஏதுமில்லை, அதற்கேகூட அவர்களிடத்தில், முரண்பாடுகள் இருக்ககூடும். பொருள்சார்ந்ததும், நம்பிக்கையும் கொண்ட ‘செய்தல்’ என்கிற சொல் ‘காதல்’ என்ற கவித்துவ கனவுசொல்லில் கலந்து என்னை மெய்மறக்கச் செய்திருந்தது. இதுவரை ‘காதலை’ கொஞ்சங்கூட நாகரீமின்றியும், கூச்சமின்றியும், அதன் இனிமையை உணராமலேயே விமர்சித்து வந்திருக்கிறேன். சிரிலுடனான அனுபவத்திற்குப் பிறகு எனது புத்தி, தன்மையாய் செயல்படுகிறது. என் தகப்பனார் வைத்தவிழிவாங்காமல் ‘ஆன்’னை(Anne)ப் பார்க்க, பார்வையைத் தாழ்த்திக்கொண்டேன். அவள் மறுவிநாடி, சின்னதாய் கொஞ்சங்கூட நாகரீகமற்றவகையில் வேசிபோல சிரிக்க, எங்களிருவர் முகமும் வெளுத்துப்போனது, சன்னலுக்காய்த் திரும்பிகொண்டோம். உன்னுடைய சிரிப்பு சரியில்லையென்று சொல்லியிருந்தாலும் அவள் நம்பியிருக்கமாட்டாள். என் தகப்பனாரோடு அவளுக்கிருந்த உறவினை, ஓர் ஆணுக்கும் அவனது ஆசைக் கிழத்திக்கும் உள்ள உறவென்று சொல்லமுடியாது, வேண்டுமானால் ஓர் ஆணுக்கும், அவனது தோழிக்குமுள்ள உறவென்று கருதலாம். வெறுமனே தோழியென்று சொன்னாலும் சரியாக இருக்காது, ‘பிரியமான தோழி’ என்பதே பொருத்தமான சொல். ஆனால் இரவுநேரங்களிலும் தோழமையோடுதான் பழகியிருப்பார்களா?… என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள். அப்படியான அசிங்கமானக் கற்பனைகளில் இறங்குவதை நிறுத்தியாகவெண்டுமென்றுதான் நினைத்தேன், என் மனதை அலைகழிக்கக்கூடிய எண்ணங்களை அறவே வெறுத்தேன்.

நாட்கள் கடந்திருந்தன. சில நாட்களாக ஆன், அப்பா, எல்ஸாவென அனைவரையும் கொஞ்சம் மறந்திருந்தேன். விழிகள் திறந்திருக்க, நிலவொளியில் காதலில் லயித்தபடி கிடந்தேன். அமைதியாகவும், அன்புக்குரியவளாகவும் இருந்தேன். சிரில் என்னிடத்தில்,”கருத்தரித்துவிடுமென்கிற பயமேதுமில்லையா?”, என்று கேட்கிறான், நான் பதிலுக்கு, “எனக்கென்ன பயம்? உன்னிடத்தில் பிள்ளையைத் தூக்கிக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கப்போகிறேன்.” என்கிறேன். எனது பதிலில் நியாயமிருப்பதுபோல அமைதியாக இருந்தான். ஒருவேளை அந்தத் தைரியத்தில்தான் அவனிடத்தில் தயங்காமல் என்னை ஒப்படைத்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்: அந்த விடயத்தில், என்னை குற்றஞ்சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. மாறாக நானோ, தாயாக நேர்ந்தால், அவனே குற்றவாளியென்று, நம்பினேன். என்னால் இயலாததை, அவன் சுமப்பதற்குத் தயாராகவிருந்தான். என்னுடல் மெலிந்தும், கடினமாகவும் இருந்தது, இந்த லட்ஷணத்தில் பிள்ளைத்தாய்ச்சி பெண்ணாய் என்னுடலை கற்பனைசெய்துபார்க்க, கருமம் கருமம்… எனது பதின்பருவத்து உடல் முதன்முறையாக திருப்தியளித்தது. இப்படியே இருக்க முடிந்தால் மகிழ்ச்சி, என நினைத்தேன்.

‘எல்ஸா’வுக்குப் பொறுமையில்லை. விடாமற் என்னை கேள்விகளால் துளைத்தெடுத்தாள். அவளோடோ அல்லது சிரிலோடோ இருக்கும் சந்தர்ப்பம் அமைந்துவிடபோகிறதென்கிற பயம் எனக்கும் இருந்தது. என் தகப்பனார் எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் அவளும் வந்தாள், அல்லது அதுமாதிரியானச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டாள். அவள் பேச்சிலும், செயலிலும் தான் ஜெயித்துவிட்டதாக நினைப்பு, அவர் என்னிடமிருந்து இனி தப்பமுடியாதென்றாள். சமீப காலம்வரை காதலென்றாலே, எல்ஸாவிற்கு(Elsa) பணத்தோடு சம்பந்தப்பட்டது, அதாவது காதலும்-பணமும் பிரிக்கமுடியாதவை, என்று நினைக்கும் கூட்டத்தைச் சார்ந்தவள். ஆனால் நடந்தது என்ன? அவசரகதியில் இயங்கும் மனிதர்களுடைய பார்வையையும், அசைவையுங்கூட மிக நுணுக்கமாக அவதானித்து, இலக்கிய காதலில் மூழ்கியவள்போல, உணர்ச்சியில் தத்தளித்தது, உண்மையில் ஆச்சரியம். இதுவரை, சாதுர்யமாக ஒரு காரியத்தை செய்வதென்பது, அவளுக்குச் சுட்டுபோட்டாலும் வராது, அத்தகையவளுடைய நடவடிக்கைகள், ஏதோ உளவியல் ரீதியில் நுணுக்கமாக ஆய்ந்து அனைத்தையும் செயல்படுத்துவதுபோல நடந்துகொண்டாள்.

என் தகப்பனாரும் அதற்குப் பிறகு, சதா எல்ஸா(Elsa)வுடைய நினைப்பிலேயே இருந்தாரென்று சொல்லலாம், ஆனால் ஆன்(Anne) இதையெல்லாம், கவனத்திலெடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. அவளிடத்தில் இதுவரை கண்டிராத அன்பும், அக்கறையும் வெளிப்பட, இது எங்குகொண்டுபோய் விடுமோவென்கிற அச்சமெனக்கு, ஒருவேளை அதன்மூலம் கவனமின்றி தன்னைத்தானே வருத்திக்கொள்கிறாளோ என்றுகூட நினைத்தேன். இதில் முக்கியமாக உங்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், அடுத்த மூன்றுவாரங்களிலும் பெரிதாய் எதுவும் நடக்கவில்லை. பாரீஸ¤க்கு எல்லோரும் திரும்பவேண்டியிருந்தது. ஆன்னும்(Anne), என் தகப்பனாரும் திருமணம் செய்துக்கொள்வது உறுதியெனில், எல்ஸா(Elsa)வும் அநேகமாக பாரீஸ¤க்குத் திரும்பிவிடக்கூடுமென நினைத்தேன். பாரீஸில் சிரிலும்(Cyril) இருப்பான். கோடைவிடுமுறையின்போது எப்படி அவனிடம் எனக்குள்ள உறவை தடுக்கமுடியாமற்போனதோ அவ்வாறே, நான் அவனைச் சந்திப்பதையும் ‘ஆன்’ தடுக்க முடியாது. பாரீஸில் அவன், தனது அம்மாவிடமிருந்து பிரிந்து தனியாக வெகுதூரத்தில் இருந்தான். எனது மனம் அவனது அறைபற்றிய கற்பனையில் மூழ்கிப்போனது: சன்னற் கதவு திறந்திருக்க சிவந்தும், ரோஜா வண்ணத்திலும் இருக்கும் வானம், அதாவது பாரீஸ் நகரத்திற்கே உரிய அசாதாரண வானம், சாய்ந்துநிற்க உதவும் கம்பிகளில் புறாக்கள் எழுப்பும் ஓசை, சிரிலும் நானும் கட்டிலில், அருகருகே மிகநெருக்கமாக…


Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts