சி. ஜெயபாரதன், கனடா
கிரேக்க வனிதை தெஸ்ஸா லியனை மிஞ்சிடும்,
கிளியோ பாத்ராவின் உடற் கவர்ச்சி!
வானத்து நிலவையும் கவ்வி ஈர்த்திடும்!
தேன்குரல் எவரையும் திகைக்க வைத்திடும்!
பேசத் தொடங்கின் இரவு பகலைக் கைக்கொள்ளும்!
வயது அவளைப் பார்த்து மொட்டு விடும்!
வாலிபத்தைக் கண்டு பொங்கி எழும்!
பாதிரியும் வைத்தகண் வாங்காமல் பார்ப்பார்,
பாவை புன்னகை புரிந்தால்!
ஆங்கில நாடக மேதை: ஜான் டிரைடன் [John Dryden (1631-1700)]
வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் குலையாது அவள் வனப்பு!
வரம்பற்றது அவள் விதவித வனப்பு மாறுபாடு! …
அவளது உடல் வனப்பை விளக்கிடப் போனால்,
எவரும் எழுத இயாலாது வர்ணித்து!
தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி!
இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம்!
வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலையவள்!
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]
வாடா மல்லிகை அவள்! விழி வீச்சின்
வலையில் வீழ்ந்தவர்,
சூடா மலருக்குள் தேனாகி விடுவார்!
கண்ணால் கண்டவர் எவரும்
மூடார் தமது கண்களை!
ஒருமுறை பார்த்தவர், திரும்பித்
தேடார் வேறொரு மாதை!
கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!
முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
கிளியோபாத்ராவின் மகன் [வயது ஒன்று]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
அங்கம்:5 காட்சி:1
நேரம், இடம்: பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.
நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் ரோமானியப் பொதுமக்கள், எகிப்திய விருந்தாளிகள். கல்பூர்ணியா, புரூட்டஸ்ஸின் மனைவி போர்ஷியா, காஸ்ஸியஸ், காஸ்கா, சிசெரோ மற்ற செனட்டர்கள். கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன் [வயது 4]
காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் மேடை ஆசனத்தில் கல்பூர்ணியாவுடன் அமர்ந்திருக்கிறார். அருகில் ஆண்டனி, புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா, அக்டேவியஸ் மற்றும் செனட்டர் சூழ்ந்திருக்கிறார். எகிப்தின் எழில் ராணி கிளிபாத்ராவின் வருகை அறிவிக்கப் படுகிறது. அரசாங்கப் பிரமுகர் அனைவரும் கிளியோபாத்ராவையும், சீஸரின் மகன் சிஸேரியனையும் வரவேற்கக் காத்திருக்கிறார்கள். எகிப்தின் நர்த்தகிகளின் ஆட்டம், பாட்டுகளுடன், எகிப்த் ஆடவர், அலங்காரிகள் அணிவகுப்புடன் கிளியோபாத்ரா [ஸ்·பிங்ஸ்] மனிதத் தலைச் சிங்க ரதத்தில் கோலாகலமோடு வருகிறாள். வீதியில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது.
ஜூலியஸ் சீஸர்: என் மகனைப் பார்த்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன! அவனுக்கு என்னை அடையாளம் தெரியாது! அவனைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் நான். கிளியோபாத்ரா என்றைக்கும் வாடா மல்லிகை!
ஆண்டனி: கிளியோபாத்ராவை நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகி விட்டன! அவளைப் பார்க்க ஆவலோடிருக்கிறேன் நான். பதினாறு வயதினிலே பார்த்தது! அப்போதே அவளது உருட்டு விழிகளும், துடுக்கு மேனியும் என்னை மயக்கின! சீஸர்! நீங்கள் மிக்க அதிர்ஷ்டசாலி! அவளைப் போன்ற பாவைக்கு வாழ்நாள் முழுதும், ஓர் ஆடவன் பக்கத்தில் அடிமையாக இருக்கலாம். உங்களுக்கு அப்படி ஓர் வாய்ப்பு கிடைத்தது!
ஜூலியஸ் சீஸர்: கவலைப் படாதே ஆண்டனி! உனக்கும் அப்படி ஓர் வாய்ப்பு வரும்! கிளியோபாத்ரா உன்மீது ஒரு கண் வைத்திருக்கிறாள்! அலெக்ஸாண்டிரியாவில் அவளுடன் படுக்கையில் நானிருந்த போதும், அவள் உன்னைத்தான் நினைத்தாள்! அவள் அதரங்களை நான் முத்தமிட்ட போதும், அவள் மனக்கண்ணில் நீதான் காட்சி அளித்தாய்! எனது வயதான முகத்தில், உன் வாலிப முகத்தைத் தேடினாள்! அவள் வருவது என்னைக் காண்பதற்கு மட்டுமில்லை! என்னைக் காரணமாக வைத்து உன்னையும் காணத்தான். நான் விரும்பியபடி எனக்கோர் ஆண்மகவைக் கொடுத்தாலும், அவளுக்கு வேண்டியவன்
நீதான்! என்னை அவள் மகனுக்காக மணந்தாலும், உன்னைத்தான் அவள் உயிராய் நேசிக்கிறாள்.
ஆண்டனி: அப்படியா? என்னால் நம்ப முடியவில்லையே! அவள் என்னை நேசித்தாலும், நானவளை நேசிக்க வில்லை! அவளின்று சீஸரின் மனைவி. சீஸருக்கு ஆண்மகனை அளித்த எகிப்த் மாது! அவளை நான் பார்க்க விரும்புவது உண்மை. ஆனால் எனது ஆசை நாயகியாக எண்ண முடிய வில்லை!
கல்பூர்ணியா: [காதுகளை மூடிக் கொண்டு] நான் அருகில் உள்ளது தெரியவில்லையா! சீஸர்! ஆண்டனி! போதும் உங்கள் காதல் பேச்சுகள்! கிளியோபாத்ராவை நீங்களிருவரும் பங்கிட்டுக் கொள்வது எனக்குக் கேட்பதற்குச் சங்கடமாக உள்ளது! உங்கள் அருமைப் புதல்வனைக் காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! அவனை என்னிரு கரங்களில் தூக்கி அணைத்துக் கொள்வேன்! கிளியோபாத்ராவைப் பற்றி என் முன்னால் பேச வேண்டாம்! அருவருப்பாய் உள்ளது! வெந்நீர்க் குளியறையில் பேசிக் கொள்வீர்.
[அப்போது சிரித்துக் கொண்டு போர்ஷியா கல்பூர்ணியாவுக்கு அருகில் வருகிறாள். சீஸரும், ஆண்டனியும் மெதுவாக வேறிடத்துக்கு நழுவுகிறார். வீதியில் மக்களின் பலத்த ஆரவாரம் கேட்கிறது.]
போர்ஷியா: எதற்காக மந்தைக் கூட்டம் இப்படிக் கூச்சல் போடுகிறது? கல்பூர்ணியா! சீஸரை மயக்கிய அந்தச் சிறுக்கி கிளியோபாத்ராவுக்கு ரோமாபுரியில் கோலாகல வரவேற்பா? ஆனால் அவளைப் பார்க்க சீஸர் முகத்தில் மலர்ச்சியைக் காணோம்! ஆண்டனியின் கண்கள் இரண்டும் அவள் வரும் திக்கையே நோக்கி யுள்ளன! ரோமானிய செனட்டர் அத்தனை பேரும் அலங்காரமாக வரவேண்டுமா? கிளியோபாத்ராவை மயக்கவா? மாதரெல்லாம் ஒய்யார உடையில் வாசனைத் திரவத்தை வீச வேண்டுமா? மூக்கைத் துளைக்கும் அவை! ரோமானிய ஆண்கள் யாருமே பெண்ணைப் பார்த்ததில்லையா? அவள் என்ன அப்படி ஓர் அதிசயப் பெண்ணா? அவள் மூக்கு சற்று கோணியது என்று கேள்விப் பட்டேனே!
கல்பூர்ணியா: கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் தெரியுமாம்! போர்ஷியா! உனக்கு இத்தாலிய மொழியைத் தவிர வேறென்ன தெரியும்? நீள நைல் ஓடும் மாபெரும் எகிப்த் நாட்டின் மகாராணி அவள்! நீ எந்த நாட்டுக்கு ராணி? சொல், போர்ஷியா! எனக்குப் பிள்ளை உண்டாவதில்லை! சீஸருக்கு ஆண்மகனைப் பெற்றுத் தந்திருக்கிறாள், கிளியோபாத்ரா! எல்லாவற்றிலும் உன்னை விடப் பெரியவள் மட்டுமில்லை, கிளியோபாத்ரா என்னை விடவும் பலபடி உயர்ந்தவள்! ஆம், அவள் ஓர் அதிசயப் பெண்! ஓர் அற்புதப் பெண், ஐயமின்றி.
போர்ஷியா: நிறுத்து கல்பூர்ணியா! என்ன அடுக்கிக் கொண்டே போகிறாயே! கிளியோபாத்ரா ஒரு பரத்தை! அவளை ஓர் அற்புதப் பெண் என்று நீ புகழ்வது தவறாகத் தெரிகிறது எனக்கு! ஏற்கனவே அவள் கூட்டாகப் பட்டம் சூடிக் கொள்ளத் தமையன் டாலமியை மணம் புரிந்து கொண்டவள்! பிறகு டாலமியைக் கொல்வதற்கு சீஸர் உதவியை நாடியவள்! ஆண்மகவைப் பெற்றுத் தருகிறேன் என்று சீஸரைக் கவர்ந்து திருமணம் செய்து கொண்டவள்! கல்பூர்ணியா! சட்டப்படி நீ சீஸரின் மனைவி! அவள் உண்மையாகச் சீஸரின் மனைவி யில்லை! வைப்பு மாது அவள்! உன்னிடத்தில் அவள் அமர்ந்து சீஸரின் பிரதான மனைவி என்று முரசடிப்பதில் உன் உதிரம் கொதிக்க வில்லையா? என்னுதிரம் கூடக் கொதிக்கிறதே!
கல்பூர்ணியா: என் கொதிப்பெல்லாம் அடங்கி என்னாவி திரும்பி விட்டது! கிளியோபாத்ரா மீது துளியும் பொறாமை இல்லை எனக்கு! துளியும் வெறுப்பில்லை எனக்கு! ஆயிரம் இருந்தாலும் அவள் என்னிடத்தைப் பிடிக்க முடியாது! ஆயிரம் இல்லா விட்டாலும் முதல் மனைவி நான் என்பதை யாரும் மாற்ற முடியாது. சீஸருக்கு ஆண்மகனை அளித்த கிளியோபாத்ரா என் மதிப்புக்கு உரியவள்! சீஸர் நேசித்து மணந்தவள் என் பரிவுக்கு உரியவள்!
போர்ஷியா: கல்பூர்ணியா! சீஸருக்கும், காதலுக்கும் வெகு தூரம்! கண்டதும் காதல் கொள்பவர் சீஸர்! சீஸருக்கு ஆசை நாயகிகள் எத்தனை என்பதே அவருக்கே தெரியாது! வனப்பில் மயங்குபவர் சீஸர்! வயிற்றுக்குத் தேவை உணவு! உடலுக்குத் தேவை ஒரு பாவை! அதுதான் அவரது காதல் விதி! பாலை வனத்தில் அவரது தாகத்திற்கு நீர் அளித்த பசுஞ்சோலை அந்த கிளியோபாத்ரா! பஞ்ச வர்ணக் கிளியான கிளியோபாத்ரா வயதான சீஸரை நேசிப்பதாக நீ கனவு காணாதே! உன்னை நேசித்தா சீஸர் திருமணம் புரிந்தார்? ரோமாபுரியில் உன்னில்லம் மேல்தட்டுக் குடும்பம்!
[வீதியில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது. தங்கக் கிரீடம் ஒளிவீச மகாராணி கிளியோபாத்ரா, மகனைக் கையில் பற்றிக் கொண்டு ரதத்திலிருந்து இறங்கிச் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருகிறாள். ரோமானியர் அவள் மீது மலர்களைத் தூவி ஆரவாரம் செய்கிறார்]
கல்பூர்ணியா: [எழுந்து நின்று] அதோ வருகிறாள் கிளியோபாத்ரா! அதோ வருகிறான் சீஸரின் அழகு மகன்! தாமரை மலர்போல் தெரிகிறாள், கிளியோபாத்ரா! மல்லிகை தண்டுபோல் வருகிறான் மகன்!
ஜூலியஸ் சீஸர்: [எழுந்துபோய் முகமலர்ச்சியுடன் வரவேற்கிறார். சீஸர் கிளியோபாத்ராவைத் தழுவிக் கொள்கிறார். மகனைத் தூக்கிக் கொண்டு கன்னத்தில் முத்தமிடுகிறார். அருகில் கல்பூர்ணியா, போர்ஷியா, ஆண்டனி, புரூட்டஸ் வருகிறார். சீஸர் அனைவரையும் அறிமுகம் செய்கிறார்] வருக! வருக! கிளியோபாத்ரா! ரோமாபுரி உன்னையும், என் செல்வனையும் வாஞ்சையோடு வரவேற்கிறது. பார்! உங்களை வரவேற்க ஆயிரக் கணக்கான மக்கள் மணிக்கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்! … இதோ கல்பூர்ணியா! .. ஆண்டனி! .. புரூட்டஸ்! .. புரூட்டஸின் மனைவி போர்ஷியா! அக்டேவியஸ்! என் சகோதரனின் மகன் [கிளியோபாத்ரா அனைவருக்கும் முறுவலுடன் கை கொடுக்கிறாள்]
கல்பூர்ணியா: [சீஸரிடமிருந்து மகனை வாங்கி, பாசமோடுக் கன்னத்தில் பலமுறை முத்தமிட்டு] வாடா கண்ணே வா! நானும் உன் அன்னைதான்! உன் பெயர் என்ன சொல்!
சிஸேரியன்: என் பெயர் சிஸேரியன்! நீங்களும் எனக்கு ஓர் அன்னையா? எனக்கு ஓர் அன்னைதானே! ரோமிலும் ஓர் அன்னை உள்ளது தெரியாது!
போர்ஷியா: [அருகில் வந்து சிறுவன் கன்னத்தைத் தடவி] என்ன அழகாக இத்த்தாலிய மொழியில் பேசுகிறான்? உனக்கு யார் இத்தாலி பேசக் கற்றுக் கொடுத்தது?
சிஸேரியன்: என் தாய்தான்! அம்மாவுக்கு ஏழு மொழி தெரியும்! எனக்கு மூனு மொழி தெரியும். சொல்லட்டுமா? எகிப்து மொழி, இத்தாலிய மொழி, ஹீப்ரூ மொழி!
கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] அரண்மனை ஆசிரியர் சொல்லித் தருகிறார். நான் அவனுடன் இத்தாலிய மொழியிலும் பேசுவேன்.
ஜூலியஸ் சீஸர்: அப்படியா, எனக்குத் தெரியாதே! என் மகன் இத்தாலியில் எப்படி எளிதாகப் பேசுகிறான்! [மகன் கன்னத்தில் முத்தமிடுகிறார்]
அக்டேவியஸ்: [சற்றுத் தள்ளிச் சென்று, காஸ்ஸியஸைப் பார்த்து] காஸ்ஸியஸ்! பார்த்தாயா, சீஸரின் எதிர்கால வாரிசை! இத்தாலிய மொழி எல்லாம் சொல்லிக் கொடுத்துத் தயாராக அழைத்து வந்திருக்கிறாள் கிளியோபாத்ரா! அரை இத்தாலியன் முழு இத்தாலியனை ஆளப் போகிறானா? சிஸேரியன் ஓர் அரைப் பிறவி [Half Breed] தெரியுமா? நானும்தான் பார்க்கப் போகிறேன். ரோமாபுரியைக் கைக் கொள்ளப் போவது ஓர் அரைப் பிறவியா? அல்லது ஒரு முழுப் பிறவியா? அந்த அரைப் பிறவியை நசுக்கிக் குறைப் பிறவியாக ஆக்கா விட்டால், நானோர் ரோமானியன் அல்லன்!
காஸ்ஸியஸ்: அக்டேவியஸ்! நமது பகைவன் நான்கு வயதுப் பாலகனா? [சிரிக்கிறான்] வேடிக்கையாக உள்ளது, நீ உறுதி மொழி உரைப்பது! யானை எதிரியாக உள்ள போது, யாராவது பூனையை விரட்டிச் செல்வாரா?
அக்டேவியஸ்: [வியப்புடன்] யாரை யானை என்று கூறுகிறாய்?
காஸ்ஸியஸ்: நமக்குக் குறி சீஸர்! சிஸேரியன் அல்லன்!
அக்டேவியஸ்: [ஆச்சரியமாக] என்ன பிதற்றுகிறாய்? சீஸர் எனது சித்தப்பா! எனக்கோர் வழிகாட்டி! எனது பகைவன் ஐயமின்றி அந்த நான்கு வயது எகிப்த் பாலகன்தான்! ரோமின் எதிர்கால மன்னன்… ! கிளியோபாத்ரா எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரியுமா? எதிர்கால ரோமாபுரியின் வேந்தன் சிஸேரியனைக் காட்ட வந்திருக்கிறாள் நமக்கு! எத்தனை நாளைக்கு சீஸரோடிருப்பாள் என்பதை நானும் பார்க்கத்தான் போகிறேன்! அவள் சீஸருக்கு மனைவி யானாலும், எகிப்தின் ராணி! ரோமின் அடிமை ராணி!
காஸ்ஸியஸ்: மார்ச் பதினைந்தாம் தேதி ஒரு பெரும் மாறுதல் வருமென்று ஜோதிடன் எச்சரிக்கை விட்டிருக்கிறான்! என்ன நடக்கும் என்பது தெரியாது எனக்கு! எச்சரிக்கை விட்டது நமக்கல்ல! சீஸருக்கு! சீஸரின் ஆசைநாயகி கிளியோபாத்ராவுக்கு! சீஸரின் வாரிசான சிஸேரியனுக்கு!
காஸ்கா: [கிளியோபாத்ராவின் வனப்பில் மயங்கி] சீஸர் அருகில் நிற்காமல் இருந்தால், கிளியோபாத்ராவை நானே தூக்கிக் கொண்டு போயிருப்பேன்! என்ன எடுப்பான உடல்! என்ன மிடுக்கான தோற்றம்! மயில் போன்ற நடை! உடுக்கை போன்ற இடுப்பு! கண்களைக் குத்தும் தூக்கிய மார்புகள்! சீஸர் அதிர்ஷ்டக்காரர்!
காஸ்ஸியஸ்: காஸ்கா! காமம் உன் கண்களைக் குருடாக்குகிறது! ஆண்டனியும் அந்த மாயக்காரி வனப்பில் மயங்கிப் போய் விட்டார்! பார்! அவள் தங்கக் கிரீடத்தில் உள்ளவை என்ன? ஒரு நாகமில்லை! பல நாகங்கள்! கருநாகங்கள்! கவனம் வைத்துக் கொள்! அவளது நச்சு அதரங்களை முத்தமிட்டவர் யாரும் உயிருடன் வாழ்வதில்லை! விரைவில் செத்து விடுவார்! அவளை மணந்த டாலமி நைல் நதியில் மூழ்கினான்! அடுத்து அவளை மணந்த சீஸருக்கு என்ன ஆகுமோ தெரியாது எனக்கு! அடுத்து ஆண்டனி வேறு அதே கோட்டைப் பின்பற்றிப் போகிறார்! கிளியோபாத்ரா, எழில்ராணி யில்லை! விதவை ராணி அவள்! அவள் ஒரு கரும்விதவை! யாரைத் திருமணம் செய்கிறாளோ, அவர் செத்துவிடுவார்! சீக்கிரம் செத்துவிடுவார்!
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan October 26, 2006]
- மௌனத்தின் அலறல்
- துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்
- கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்
- உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்
- தாஜ் கவிதைகள்
- இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்
- தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்
- வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு
- வாணர்களும் விந்தியமலையும்
- கடித இலக்கியம் – 28
- காசும் கரியும் !
- அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்
- பெண்கள் சந்திப்பு 2006
- கடிதம்
- இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!
- கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்
- அஞ்சலிக் கூட்டம் – ஏஜே என்னும் பேரறிவாளன்
- வைதீஸ்வரனின் கவிதைகள்
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8
- இரவில் கனவில் வானவில் – 8
- நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..
- பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி
- பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- சிந்தனையில் சிலநேரம்
- கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!
- அவலம்
- பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1
- நேற்று ! இன்று ! நாளை !
- இலை போட்டாச்சு !
- மடியில் நெருப்பு – 9
- National folklore support center