வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 4

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அடுத்துவந்த நாட்களில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எதுவென்று சொன்னால், எல்சாவிடத்தில் ஆன் காட்டிய அளவுக்கதிகமான கரிசனம். அர்த்தமற்ற அவளது பேச்சைக் கேட்டபிறகும் எல்சாவை விமர்சித்து வார்த்தைகளேதுமில்லை. எதையும் இரத்தினச் சுருக்கமாக சொல்லியாகவேண்டும், அதற்கானக் காரணத்தை அவள்மட்டுமே அறிந்திருந்தாள். எனவே அவளது வழக்கப்படி இரண்டொருசொற்களில் எல்சா(Elsa) உடைய அபத்தத்தை மூடிமறைக்க முயற்சித்தும் இருக்கலாம். அவளது பொறுமையையும், கனிவையும் காண பிரம்மிப்பாகவிருந்தது. அவள் சாமர்த்தியக்காரி, அவளது செய்கைக்கான உட்பொருளை உணர்ந்துகொள்ள நான்தான் தவறியிருந்தேன். அப்பா, இதுமாதிரியான பேய்விளையாடல்களுக்கு ஏற்றவரல்ல, எளிதில் களைத்துபோகும் சுபாவம். எனினும், ஆன்(Anne)ன்னிடம் மரியாதை இருந்தது. நன்றி என்கிற சொல்லை அவசியம் உபயோகப்படுத்தவேண்டிய கட்டாயம் அவருக்கிருந்தது. ஒருவகையில் இந்த’நன்றி’கூட பெரிய அளவில் அவள் இவருக்குச் செய்திருக்கும் உதவிக்கு ஒரு சிறு சைகை அவ்வளவுதான். உண்மை, ஆன் அவரது மரியாதைக்குரியவள், அவரது மகளுக்கு இரண்டாவது தாயாகவிருந்து சில கடமைகளை ஆற்றியிருக்கிறாளில்லையா? அதற்காக. தவிர, அவளுடைய பாதுகாப்பில் என்னை விடவும், என்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் ஆன்னைக் குற்றஞ்சொல்லவும், எனக்கும் அவளுக்குமான இடைவெளியைப் பெரிதும் குறைக்கவும், நாங்கள் அன்யோன்யமாக இருக்கவும், ஒருவகையில் அப்பா கொண்டிருந்த மரியாதை, துருப்புச்சீட்டாக அவருக்குப் பயன்பட்டது. ஆனால் அவளை அப்பா பார்க்கிற பார்வைம், அவரது சேட்டைகளும், ஏதோ முன்பின்தெரியாத பெண்ணிடத்தில், அவளைத் தெரிந்துகொள்ள ஆசைபட்டு ஓர் ஆடவன் நடந்துகொள்வதுபோலவிருந்தது. இப்படியான மனோபாவத்தை ‘சிரில்'(Cyril) இடத்திலும் கண்டு வியப்படைந்திருக்கிறேன். அதுபோன்ற நேரங்களில், அவனிடமிருந்து விலகிக்கொள்ளவோ அல்லதுஅவனைச் சீண்டிக் கோபமூட்டவோ செய்வேன். ஆன்(Anne)அளவிற்கு எனக்குத் தைரியம் காணாது, சுலபாய் என்னை ஒருவர் வீழ்த்தலாம், அப்பாவுடைய அத்தனை விளையாட்டினையும் திடமாய் எதிர்கொண்ட அவளதுமனம் ஒருவகையில் எனக்கு நிம்மதியையும் அளித்தது. ஆரம்பத்தில் அவளைத் தவறாகத்தான் எடைபோட்டிருக்கிறேன், ஒருவரும் குற்றம் சொல்லமுடியாத அவளது இந்த நல்லகுணத்தின் காரணமாக அப்பா உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. அவளுடைய அமைதி, அதிலும் இயல்பாக அவளிடமிருந்த நிதானமான குணம், அதை வெளிப்படுத்தும் அழகு… எல்சா இடைவிடாது கீச்சுக்குரலில் எதையாவது சொல்லிக்கொண்டிருக்க, நிழலுக்கெதிரான சூரியனைப்போல, அப்பாவும் ஆன்னும் அவளுக்கெதிராக கைகோர்த்திருந்தார்கள். பாவம் எல்சா, அவளைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறியாமலிருந்தாள். வழக்கம்போல சந்தோஷமும் சஞ்சலமுங்கொண்ட பெண்ணாக, கிடைத்த நேரங்களில் வெயிலிற் கிடந்து உடலைக் வாட்டிக்கொள்பவளாகவும் இருந்தாள்.

ஒரு நாள், எல்சா உண்மையைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும்: மதிய உணவிற்காக நாங்கள் அமர்ந்தோம், அப்பாவின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பியவள் அவரது காதில் என்னைத்தையோ முனுமுனுக்கிறாள்,அடுத்தநொடி, அப்பாவின் முகம் சுருங்கிப்போனது, பிறகு சமாளித்தவராக மெல்ல சிரித்தபடி தலையை ஆட்டினார். உணவிற்குப்பிறகு கடைசியாய் அனைவரும் காப்பியைக் குடித்துமுடித்ததும், எல்சா எழுந்துகொண்டாள், கதவை அடைந்ததும் எதையோ பறிகொடுத்தவளைப்போல எங்களைப்பார்க்க, அமெரிக்க திரைப்படத்தில் வருகிற காட்சிகளை நினைவூட்டினாள். அடுத்து பேசியபோது, குரலில் பிரெஞ்சுகாரர்களுக்கேயுரிய அத்தனை வக்கணையுமிருந்தது.

“- ரெமோன்(Raymond), நீங்கள் வருகிறீர்களா?”

அப்பா எழுந்தார், முகம் கிட்டத்தட்ட சிவந்திருந்தது. தன்னை எல்சா நடத்தும் விதத்தினாலெழுந்த அவமானமா அல்லது கோபமா எனப் புரிந்துகொள்ள கடினமாகவிருந்தது. அவளைப்பின்தொடர்ந்தவர், அதை நியாயபடுத்துவதைபோல, மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் கண்ணயர்வதால் ஏற்படுகிற நன்மைகளை சிலாகித்துச் சொன்னார். ஆன் வாய் திறக்கவில்லை. அவளது விரலிடுக்கில் சிகரெட்டொன்று புகைந்துகொண்டிருந்தது. இறுக்கத்தைக் குறைக்க ஏதேனும் நான் பேசியாகவேண்டும்:

” இப்பல்லாம் பலரும் ஓய்வென்றுசொன்னால் கொஞ்ச நேரமாகிலும் தூங்கணுமென்று நினைக்கிறாங்க, ஆனா அதிலே உண்மையில்லை…”

சட்டென்று பாதியில் நிறுத்திக்கொண்டேன், வாக்கியத்தின் உள்ளர்த்தத்தை உணர்ந்ததால் வந்த வினை.

“‘செஸில், தயவு செய். தத்துபித்தென்று எதையாவதுச் சொல்லிக்கொண்டிராதே” ஆன் வார்த்தைகள் உணர்ச்சிகளற்று ஒலித்தன.

எனது பேச்சை சில்லுண்டித்தனமானதென்று நினைத்தாளேயொழிய, அதில் விகற்பமிருக்குமென்று நினைக்கவில்லை. அவளை நேராகப் பார்த்தேன், விச்ராந்தியான முகம், அமைதியை வலியத் திணித்திருந்தாள். புரிந்துகொண்டதும் மனம் நெகிழ்ந்தது. ஒருவேளை, இந்த நேரத்தில் எல்சாமீது அவளுக்கு ஆசை வந்திருக்குமோ? அவளை சமாதானபடுத்த நினைத்தேன். விஷமத்தனமாக ஒர் எண்ணம் பிறந்தது. வழக்கம்போல மனதிற்குள் சந்தோஷம்: எனக்கு நானே ஏற்படுத்திக்கொள்ளும் ஒருவிதப் பாதுகாப்பு வளையம், ஒருவித போதை, என் உடந்தைக்குற்றவாளி யாரென்று நினக்கிறீர்கள்? சாட்ஷாத் நான்தான். அது உரத்து ஒலித்தபோது, தடுக்க முடியவவில்லை.

“- பார்..வெயிலில் சதா படுத்துபடுத்து எல்சா உடலை எப்படியெல்லாம் வாட்டிக்கொண்டிருக்கிறாள், இந்த லட்சணத்தில், கொஞ்ச நேரம் தூங்கினா அப்படியென்ன பெருசா உதவிடும்? அவளுக்கு மட்டுமில்லை, வேறொருத்தருக்குங்கூட மதியத்துல கொஞ்சம் கண்ணயர்வதாலே, எந்தப் பலனுமில்லை.”

நான் வாயை மூடிக்கொண்டிருந்திருக்கவேண்டும்.

“-இந்தமாதியான அபிப்ராயங்களை எங்கிட்டச் சொல்லாதே. உன்னோடவயசுக்கு, இத்தனை அசட்டுத்தனமா பேசுவேண்ணு நான் நினைக்கலை. கொடுமைடா சாமி.”

எனக்குச் சட்டென்று கோபம் வந்தது.:

-” சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். தப்பென்றால் மன்னிப்பு கேட்கிறேன். உறுதியா நான் நம்பறேன்…அவர்கள் இரண்டுபேரும் உண்மையில் சந்தோஷமா இருக்காங்க.”

கோபாவேசத்துடன் என்னைப் பார்த்தாள். நிலைமையை புரிந்துகொண்டு தாமதமின்றி மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். கண்களை மூடிக்கொண்டவள், தாழ்ந்தகுரலில் நிதானத்துடன் பேச ஆரம்பித்தாள்:

“- உங்களுக்கு காதலென்பது ஒரு விளையாட்டு. பத்தோடு பதினொன்று, தன்னிச்சை உணர்வுகளின் ஒரு பரிமாணமாக அதை நீங்கள் பார்ப்பதில்லை….”

உண்மை, இதுவரை எனக்கேற்பட்ட காதல் அனுபவங்களை அந்த வகையில்தான் சேர்க்கவேண்டும். வசீகரிக்கவல்ல ஒரு முகம், மெய்தீண்டல், ஒருமுத்தம் என ஏதோவொன்றிர்க்காக என்னையே மறந்ததும்…காரணமின்றி பரவசத்தில் திளைத்த கணங்களுமே என்னிடத்தில் காதலனுபவங்களென எஞ்சியிருப்பவை.

– ” செசில், காதலை வேறமாதிரியும் பொருள்கொள்ளலாம்: நிலையான அன்பு, இனிமை, பிரிவாற்றாமை….ம்.. இவைகளைக் குறித்து உன்னிடத்தில் பேசி என்ன ஆகப்போகிறது? உனக்குப் புரியவும் புரியாது.” – ஆன்.

உணர்வுகள் விடயத்தில் எனக்குப் போதிய ஞானமில்லை, ஒத்துக்கொள்கிறேன். அதற்காக கோபத்தோடு என்னைக் கண்டித்திருந்தால்கூட ஏற்றுக்கொண்டிருப்பேன். அதற்குப்பதிலாக, ‘ஆன்’ என்னைத் தவிர்க்க நினைத்தவள்போல கையில், செய்தித்தாளைப் பிரித்துவைத்துக்கொண்டாள். எண்ணிப்பார்க்க, அவள் தரப்பிலும் நியாயமிருந்தது. என்னை முறையுடன் நடத்தவேண்டுமென்று எதிர்பார்ப்பது சரியல்ல. இன்றைய தேதியில் எனக்கு விலங்கினும் கேவலமான வாழ்க்கை, எடுப்பார் கைப்பிள்ளை, கையில் பணமில்லை, அபலைபெண்ணென்று சொல்லிக்கொண்டாலும் தப்பில்லை. இதற்கு முன்பு என்னை நானே நல்லவளென்றோ கெட்டவளென்றோ விமர்சித்துகொள்ளுகிற நெருக்கடிகள் எனக்கு ஏற்பட்டதில்லை. மேலேயுள்ள எனது அறைக்குச் சென்றேன், ஏதேதோ கனவுகள், கட்டிலிற் கிடந்த எனது விரிப்புகள் வெதுவெதுப்பாயிருந்தன, ஆன்னுடைய குரல் இடைவிடாமல் காதில் ஒலிக்கிறது: “செசில், காதலை வேறமாதிரியும் பொருள்கொள்ளலாம்,…ஒரு வகை பிரிவாற்றாமை.” யாரேனும் ஒருத்தரைப் பிரிந்து எப்போதேனும் நான் வாடியதுண்டா?

இந்த பதினைந்து நாட்களாக என்ன நடந்ததென்கிற ஞாபகமில்லை. என்னை அச்சுறுத்திய எதையும் அல்லது ஆழமாக எதனையும் புரிந்துகொள்ளும் ஆர்வம் என்னிடத்திலில்லையென்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் அடுத்துவந்த நாட்களில் என்ன நடந்ததென்பதை வரிசையாகச் சொல்லமுடியும், காரணம் எல்லாவற்றிலும் முழுமனதோடு முடிந்த அளவு நான் பங்கெடுத்திருக்கிறேன். இந்த மூன்று வாரங்களில் அதாவது மொத்தத்தில் சந்தோஷமாக கழிந்த மூன்று வாரங்களில் நிறைய சம்பவங்கள்… ஒருநாள் சிரித்து மழுப்பியபடி தனது உதாசீனத்தை ஆன் வெளிப்படுத்த, அப்பா உரத்தகுரலில் அவளைக் கண்டித்தார். மற்றொருநாள், அரைகுறை ஞானங்கொண்ட எல்சாவினுடைய பேச்சை ஆன்னுடைய சாதுரியத்தோடு ஒப்பிட்டு, சிரிக்காமல் விமர்சித்தார். இவ்விரண்டு சம்பவங்களிலும், ஆன்னை நேரிடையாய் பார்த்து அப்பா பேசியது என்றைக்கென்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். வேறொரு விஷயமும் எனக்குத் தெளிவானால்தான் நிம்மதி: கடந்த பதினைந்துவருடங்களாக அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கறிவர், அவர்களுக்குள் ஆசையிருந்தால் காதலர்களாக இருந்திருக்கக்கூடும். அட… இனிதான் அவர்களிருவரும் காதலிக்கட்டுமே, அதனாலென்ன? மிஞ்சிப்போனால் மூன்றுமாதங்கள் அப்பா தீவிரமாக ‘ஆன்’னைக் காதலிக்கக்கூடும், அதன்பிறகு அவளுக்கு மிஞ்சப்போவது ஒருசில அவமானங்களும், கொஞ்சம் காதல் அனுபவங்களுமன்றி வேறல்ல. எனினும் ஆன் சுலபத்தில் பிறரால் கைவிடப்படகூடிய பெண்மணியல்லவென்று எனக்குத் தெரியாதா என்ன? எனக்கென்று சிரில் இருக்கிறான், எனது பல கேள்விகளுக்கும் அவனிடத்தில் விடையிருக்கையில் வேறென்ன வேண்டும். சிரிலும் நானும் பெரும்பாலும் மாலைவேளைகளில் சென்-த்ரொப்பேஸ் (Saint -Tropez) இரவுவிடுதிகளுக்கு செல்வதுண்டு. அங்கே அவ்வப்போது அடங்கி ஒலிக்கும் கிளாரினெட்டொன்றுக்கு, இரவுமுழுக்க இனிக்க இனிக்க காதல் மொழிகளை பாரிமாறியபடி ஆடிமுடித்து வில்லாதிரும்பினால், மறுநாள்காலை அத்த்னையும் மறந்திருக்கும். பகலில் கடற்கரையையொட்டி விளையாட்டுப் பாய்மரப்படகில் பயணித்து பொழுதுபோக்குவது எங்கள் வழக்கம். சிலசமயம் அப்பாவும் எங்களுடன் கலந்துகொள்வதுண்டு. சிரிலை பெரிதும் சிலாகிப்பார். அதிலும் ஒருமுறை நீச்சலில் இவர் வெற்றிபெறட்டுமென்று அவன்விட்டுக்கொடுத்ததிலிருந்து, கூடுதலாகவே பிரியம் காட்டினார். அப்பா ”மோன் பெத்தி சிரில்”(l), என்றழைக்க பதிலுக்கு அவன் அப்பாவை “மிஸியே”(2) என்றைழைத்தான். இருவரும் வயது வித்தியாசமின்றி பழகினார்கள்.

பிற்பகலில் ஒரு நாள், தேநீர் குடிக்கவென்று சிரில் வீட்டிற்கு அனைவரும் சென்றோம். வீட்டில் சிரிலுடைய அம்மாவைச் சந்திக்க முடிந்தது. வயதுகூடிய பெண்மணி, புன்னகையுடன் கூடிய அமைதி தவழும் முகம், விதவையாகவும் தாயாகவுமிருந்து அவள் படும் இன்னல்களை எங்களிடத்தில் நிறைய பேசினாள். அப்பாவுக்கு மனம் இளகிவிட்டது, ஆன்னை நன்றியுடன் பார்த்தார், சிரிலுடைய அம்மாவை வாய்கொள்ள புகழ்ந்தார். இவ்விடத்தில் ஓருண்மையை உங்களிடத்தில் சொல்லவேண்டும். அப்பாவுக்கு நேரத்தின் அருமை தெரியாது, பேச ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார். நடந்ததை அனைத்தையும் வெறுமனே வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த ஆன், வழியில் ‘சிரிலுடைய அம்மா’ எல்லோராலும் விரும்பத்தக்கப் பெண்மணியென்று, பாராட்டுப்பத்திரம் வழங்கினாள். உலகிலிருக்கிற அத்தனைகிழங்களையும் சாபமிட்டபடி கலகலவென்று சிரித்தேன். உடன் வந்தவர்கள் சிரிப்பில் ஒருவித ஏளனமும், சந்தோஷமும் கலந்திருக்க, நான் என்னை மறந்து கத்தினேன்:

“- அந்தக்கிழத்தை நீங்க சரியா புரிஞ்சுக்கலை. நீங்க நினைப்பதுமாதிரி அவளுக்குப் பிரச்சினைகளில்லை, சந்தோஷமாகத்தான் இருக்கிறாள். ‘தனக்குரிய கடமையை செய்துமுடிச்சுட்டேனென்கிற’’ தற்பெருமை வேற அவளுக்கு பிறகு…

– உண்மைதான். இல்லைண்ணு சொல்லமுடியுமா? ஒரு பெண்ணாக இருந்து ஆற்றவேண்டிய அத்தனை கடமைகளையும் தவறாமல் செய்திருக்கிறாள்: தாயாக, மனைவியாக.. பிறகு அடுத்தது என்ன?” ஆன் சொல்லி முடிக்கவில்லை இடையில் குறுக்கிட்டேன்;

– தெவடியாள் கடமை. அதையும்கூடவிடவில்லை, அப்படித்தானே? – நான்.

– இம்மாதிரி தடித்தவார்த்தைகளை கேட்க நான் தயாரில்லை. ஏட்டிக்குப்போட்டியா எதைச் சொன்னாலும் எனக்குப்பிடிக்காது.

– ஏட்டிக்குப்போட்டியா என்னத்தைச் சொல்லிட்டேன். உலகில் நடப்பதைத்தானே சொன்னேன். விருப்பத்தின் பேரிலோ, விரும்பிய சுகத்தை அடையவேண்டியோ, எல்லாப் பெண்களும் திருமணம் செய்துக்கொள்வதைப்போலவே, அவளும் செய்தாள். பிள்ளையும் பெற்றுக்கொண்டாள். எப்படி பிள்ளை பெற்றுக்கொள்வதென்று உனக்குத் தெரியுமில்லையா?

– உன் அளவுக்கு இல்லையென்றாலும் ஏதோ கொஞ்சம் தெரிஞ்சுவச்சிருக்கேன்.

– பிறகென்ன, பிறந்த பிள்ளையை வளக்கணுமில்லையா? வளர்த்திருக்கிறா. நல்லவேளை, சோரம்போகாம இருந்ததாலே, நெருக்கடிகள், கவலைகள்னு எந்த பிரச்சினைகளிலும் சிக்காம தப்பிக்க முடிந்திருக்கிறது. சராசரி பெண்களுக்கான வாழ்க்கை அவளுக்கும் அமைஞ்சிருக்கு, அதை பெருமையா வேற நினைக்கிறா. இதெல்லாம் உங்களுக்கும் புரிஞ்சிருக்கணும்…மேட்டுக்குடிவர்க்கத்தைச் சார்ந்த ஓர் இளம்மனைவியாகவும், தாயாகவும் வாழ்ந்தவள், அந்த எண்ணத்தில் இன்னமும் ஊறிக்கிடக்கிறாள். அதிலிருந்து கரையேற எந்த முயற்சியும் அவள் மேற்கொள்ளவில்லை. இதைச்செய்யவில்லை அதைச் செய்யவில்லையென அவளால் பெருமைபட்டுக்கொள்ளமுடிகிறதே தவிர எதையாவது செய்து முடித்தற்கு பெருமைப்படமுடிகிறதா?.

– உருப்படியாய் ஏதாவதிருந்தால் சொல்லு – அப்பா.

– வானம்பாடிக்கு கண்ணாடி காட்டறதுபோல(3) உங்களை இரக்கத்தைத் தனது பேச்சு சாதுரியத்தால் கிழம் சுலபமா சம்பாதிச்சிட்டுது. ‘என்னோட கடமையைச் செய்தேன்’ அப்படிண்ணு ஒருத்தர் சொன்னால் , உருப்படியா எதையும் செய்யலைண்ணுதான் அர்த்தம். ஒரு நடைபாதை குடும்பத்தில் பிறந்து, பின்னர் நடுத்தெருவுக்கு வந்தவளுமாக இருந்து, இப்படியான காரியத்தைச் சாதித்திருந்தால், தாராளமாக அவளைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடலாம், -நான்.

– நீயென்ன பண்ணுவ, இப்படியெல்லாம் பேசுவதென்பது சமீபத்தில் ஒரு நாகரீகமாகவே வளர்ந்துட்டுது. ஆனால் இதற்கெல்லாம் எந்த மரியாதையும் இல்லை.- ஆன்

அவள் சொல்வது உண்மையாக இருக்கலாம். தவிர என்னுடைய சிந்தனையும் பேச்சும் ஒன்றாகத்தான் இருந்தது. மற்றவர்களும் என்னை அப்படித்தான் விமர்சித்தார்கள். அப்பாவுடைய வாழ்க்கையும் சரி அல்லது என்னுடைய வாழ்க்கையும் சரி, இதன் அடிப்படையில்தான் அமையவிருந்தன. ஆன் என்னை அநியாயத்திற்கு நிந்தித்து, காயபடுத்தினாள். ஊர்பேர்தெரியாத பிரச்சினைகளில் அக்கறைகொள்கிறபோது உபயோகமற்ற விடயங்களில் அக்கறை கொள்வதில் என்ன தப்பென்று கேட்கிறேன்? இவளுக்கும் சிந்திக்கவருமென்கிற எண்ணம் ஆன்னுக்கு ஒருபோதும் தோன்றாது. ஆன் என்மீது கொண்டுள்ள தவறான அபிப்ராயத்திற்கு, உடனடியாக தீர்வுகாண வேண்டும், மிகவும் அவசரம். அதற்கான சந்தர்ப்பம் இத்தனை சீக்கிரம் எனக்கு வாய்க்குமென்றோ, அதனைச் சரியாக என்னால் பயன்படுத்திக்கொள்ளமுடியுமென்றோ நான் நினைக்கவில்லை. தவிர, நான் ஒருபோதும் நிலையான கருத்துக்குரியவளல்ல, அடுத்த ஒரு மாதத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். எனது புத்தி வேறுவகையில் சிந்திக்கக்கூடும், மாற்று அபிப்ராயங்களை முன்வைக்கக்கூடும். இந்த லட்சணத்தில் என்னை தருமதேவதை என்று சொல்லிக்கொண்டால் எப்படி?
——————————————————————–

1. Mon petit Cyril -My little Cyril
2. Monsieur –sir
3. C’est un miroir aux alouettes

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts