நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மயிலாடிக் கேட்கு மிங்கே!
மன்னருக்கு அதிர்ச்சி யிங்கே!
மான் விழையும் பரிசை எங்கே?
மன்னர் தர மறுப்ப திங்கே!
வீணாகப் பிடிவாத மிங்கே
வெள்ளித் தட்டில் சிரசு எங்கே?
தேனாகப் பேசி விட்டுத்,
திணருகிறார் மன்ன ரிங்கே!

+++++++++++++++

“காதலானது நீண்ட காலத் தோழமையாலும், நெருக்கமுடன் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதாலும் உண்டாவது என்று சொல்வது தவறு! ஆத்மீகப் பிணைப்பில் பிறப்பதுதான் உன்னதக் காதல். நொடிப் பொழுதில் அப்பிணைப்பு உருவாகிப் பிடித்துக் கொள்ள வில்லை என்றால் எத்தனை ஆண்டுகளிலும், ஏன் எத்தனை பிறவிகளிலும் அது தோன்றப் போவதில்லை!”

“கனவுகள், சாதனை ஆசைகள் எதுவுமில்லாத செல்வக் குழுவினருடன் வாழ்வதைக் காட்டிலும், தாழ்ந்த குடியினரிடையே ஒளிக்கண் [Vision] கொண்டு நிறைவேறக் கூடிய கனவுகளைத் தொடரவே நான் விழைகிறேன்.”

கலில் கிப்ரான் [Kahlil Gibrahn (1883-1931)]

“ஓர் எழுத்தாள மேதையின் மகத்தான படைப்புகளில் அவரது ஆத்மாவின் இரகசியங்கள், வாழ்வின் ஒவ்வோர் அனுபவம், மற்றும் அவரது மனத்தின் தரப்பாடும் [Quality of Mind] காணப்படும்.”

“பிரச்சனைகள் வரும் போது சிலர் மதக் குருக்களை அணுகுவர்; சிலர் கவிதை எழுதப் போவார்; நான் நண்பரை அண்டிப் போவேன்.”

வெர்ஜீனியா உல்·ப் [Virginia Woolf (1882-1941)]

ஒளிவீசிய அவள் பொன் கூந்தல்,
கறை படிந்து துருப் பிடிக்கிறது!
நளினம் மிக்கவள், இளமை பெற்றவள்,
களி மண்ணாய்ப் போகிறாள்!

சவப்பெட்டியும், கனக்கும் கற்களும்
அமுக்கும் அவளது மேனியை!
தவிக்கு தென் நெஞ்சு தனியாக!
தங்கை ஓய்வெடுத் துறங்குகிறாள்!

அமைதி! அமைதி! அச்செவிகள் கேளா,
கீதமோ, பாக்களோ அச்செவிகள் கேளா!
என்னுடை வாழ்வும் புதைந்த திங்கே,
மண்மூடிப் போன மயான பூமியில்!

[ஒன்பது வயது தங்கை ஐஸொலா நோயில் மரித்த போது ஆஸ்கர் வைல்டு எழுதியது]

“பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது என் வகுப்புத் தோழர்களால் நானொரு ஞானச் சிறுவனாகக் கருதப் பட்டேன். அதற்குக் காரணம்: போட்டி ஒன்று வைத்தால் மூன்று நூலடுக்கு நாவலை அரை மணி நேரத்தில் படித்து முடித்து, அதன் கதைக்கருவைச் சொல்லி விடுவேன். ஒரு மணி நேரத்தில் படித்து முடித்தால் கதையில் வரும் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதோடு, சிறப்பு வசனங்களையும் எடுத்துக் கூற முடியும்.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee
ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி
ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ·பிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.
(·பிளிப்: ஏரோத் ஆன்டிபாஸ¤க்கு மாற்றாந்தாய் சகோதரன்)
ஜொகானன் (Jokanan): ஜான், புனித நீராட்டி
ஏரோதியாஸின் சேடியர், காவலர்
ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்
சேனைக் காவலர்.
கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.
நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.
யூதர்கள்: மூவர்.
நாஸரீன் [Nazarene], மற்றும் ரோமாபுரி டைஜெல்லினஸ் [Tigellinus]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன! மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொகானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொகானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்! சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது. போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொகானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார். ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார். ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொகானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள். ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான். ராணி அதைத் தடுக்கிறாள். முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அவள் கேட்கும் வெகுமதி என்ன? கோர வெகுமதி! வெள்ளித் தாம்பாளத்தில் ஜொகானன் தலை!

*********************

ஏரோத்: [கோபமாக ஸாலமியைத் தள்ளி விட்டு எழுந்து] ஸாலமி! அது நடக்காது! உன் வெகுமதியை மாற்றிக் கேள்! போதகர் புவியில் வாழ வேண்டிய ஓர் புனித கர்த்தா! என் அரண்மனையில் அவரது சிரம் துண்டிக்கப் படாது! என் ஆணையில் அது நிறைவேறாது! வேறு ஏதாகிலும் கேள்! …கண்மணி! தேன்மொழி! உன்னை நான் மணந்து கொள்ளவா? கேள், உன்னை மணந்து கொள்கிறேன்! உன்னைப் பட்டத்தரசி ஆக்கவா? கேள், உன்னைப் பட்டத்தரசியாய் அறிவிக்கிறேன்! உனக்கோர் மாட மாளிகை, கூட கோபுரம் வேண்டுமா? கேள், உன்னத சொர்க்க மாளிகை கட்டித் தருகிறேன்! அற்பத் தலைக்கு ஆசைப் படுகிறாய்! என்னால் செய்ய முடியாத சிரச் சேதம் செய்யத் தூண்டுகிறாய்! தாயும், மகளும் சேர்ந்து ஓர் புனிதரைக் கொல்ல திட்டம் போடுகிறீர்! எதற்கு? எதற்கு அவரைச் சிரச் சேதம் செய்ய வேண்டும்? என்ன பாபம் செய்தார் அவர் உங்களுக்கு?

ஏரோதியாஸ்: [ஆத்திரமோடு] என்ன பாபம் அவர் செய்தாரா? நல்ல கேள்வி யிது. என்னைப் பிறரிடமிருந்து பறித்துக் கொள்ள, நீங்கள் என்ன செய்தீர் தெரியுமல்லவா? என் முதல் பதியைக் கொன்று போட்டீர்! நீங்கள் பிறன் மனைவியைக் பறித்துக் கொண்டீர்! அது பாபமா? அது தர்மமா? சொல்லுங்கள். அது தவறு என்று தம்பட்டம் அடித்தவரைப் பிடித்துச் சிறையில் அடைத்து விட்டீர்! அப்படியும் அவர் நச்சு வாயை மூட முடிந்ததா? வெளியே ஊதிக் கொண்டிருந்த சங்கை, வீட்டுக்குள்ளே ஒலிக்க வைத்தீர்! போதகர் உம்மைத் திட்டியது போதாமல் எம்மையும் திட்டிக் குவிக்கிறார்! உம்மைத் திட்டியதற்குச் சிறைவாச தண்டனை கொடுத்தீர்! ஆனால் எம்மைத் திட்டியதற்கு … ? என்ன தண்டனை?

ஏரோத்: என்னைத் திட்டியது உண்மை! ஆனால் அத்தவறுக்குத் தலையை அறுக்க தண்டனை நான் கொடுக்க வில்லை! நீயும், உன் மகளும் கேட்கும் தண்டனை, தவறுக்கு ஏற்ற தண்டனை யில்லை!

ஏரோதியாஸ்: நீங்கள் முதலிலேயே அவர் தலையைக் கொய்திருந்தால், எங்கள் மானம், மதிப்பு காப்பாற்றப் பட்டிருக்கும். அவரைச் சிரச்சேதம் செய்ய நாங்கள் போராட வேண்டிய தில்லை. என் மகள் கேட்ட வெகுமதியைக் கொடுப்பது உங்கள் கடமை! உறுதி அளித்து விட்டு மறுப்பது நீதியா? நியாயமா? நெறியா? சொல்வீர் மன்னவரும் நீரோ? என் மேல் என் மகளுக்கு நேசம், பாசம், மிகுந்துள்ளது! நான் சொன்னபடிக் கேட்டாள். என் மானத்தைக் காப்பாற்றக் கேட்டாள். கணவராயினும் உமக்கு நான் கூறும் காரணம் புரியவில்லை! நீவீர் என் மானத்தைக் காப்பதில் ஆவல் காட்ட வில்லை! சொல்வீர், கணவரும் நீரோ? என் புதல்வி என்னை எப்போதும் கைவிட மாட்டாள். என் மானத்தைக் காப்பது உங்கள் பொறுப்பல்லவா?

ஏரோத்: தாயும் மகளும் சேர்ந்து உங்கள் சுயநலப் பாதுகாப்புக்காக என்னைக் கொலைகாரனாய் ஆக்கிவிட முற்படுகிறீர். தவறைச் செய்ய வைத்து தப்பிக் கொள்ள முற்படுகிறீர். பாப வினையில் பங்கு பெறாமல் பலாபலனை மட்டும் அனுபவிக்கத் துணிந்து விட்டீர்.

ஏரோதியாஸ்: ஏன் அப்படிச் சொல்கிறீர்? உங்கள் பாபத்தில் எனக்கும் பங்குண்டு. என் மகளுக்கும் பங்குண்டு. உங்கள் தண்டிப்பில் எனக்கும் பங்கு உண்டு. நாங்கள் தப்பிச் செல்ல விரும்ப வில்லை.

ஸாலமி: ஆமாம் மன்னா! உங்கள் பாபத்தில் எனது கூட்டுறவும் உண்டு! கவலை வேண்டாம். போதகர் சொர்க்கபுரிக்குப் போவார் நிச்சயம். நாமெல்லாம் போவது நரகத்துக்குத் தானே! … அதெல்லாம் போகட்டும். முதலில் நான் கேட்ட வெகுமதி வெள்ளித் தட்டில் வரட்டும்! பாபத்தைப் பிறகு பங்கிட்டுக் கொள்வோம்! உத்தரவிடுவீர் மன்னரே! வேலை செய்தவன் வியர்வை உலர்வதற்குள் வெகுமதியைக் கொடுக்க வேண்டும் என்னும் முதுமொழி உங்களுக்குத் தெரியாதா?

ஏரோத்: [ஸாலமியைப் பார்த்து] பிடிவாதம் செய்யாதே ஸாலமி! போதகர் தலையைத் துண்டிக்க என் மனம் தயங்குகிறது! தவறு நிகழக் கூடாதென்று என் மனம் தவிக்கிறது! கண்மணி! என் காதலைப் பெற்றவள் நீ! என் பட்டத்து ராணியாய்ப் பக்கத்தில் அமரத் தகுதி பெற்றவள் நீ! நான் பணிந்து கேட்கிறேன். போதகர் தலைக்குப் பதிலாக வேறு எதனையும் கேள்! அவசரப் பட்டு நாம் தவறு செய்யக் கூடாது. மீள முடியாமல் பிறகு தவிக்கக் கூடாது. மூடத்தனமாக மாட்டிக் கொள்ளக் கூடாது!

ஸாலமி: சரியாகச் சொன்னீர்கள்! மூடத்தனமாக நான் மாட்டிக் கொள்ள வில்லை! மாட்டிக் கொண்டது நீங்கள் [சிரிக்கிறாள்]. போட்டியில் யாரும் என்னை வெல்ல முடியாது மன்னரே! கேட்டதைக் கொடுத்தால் நான் பூரிப்படைவேன். உறுதி தந்த உங்களுக்கு நிம்மதி! உறக்க மில்லாத என் அன்னைக்கு நிம்மதி! வெகுமதி பெறும் எனக்கும் நிம்மதி! மூன்று பேருக்கும் நிம்மதி! கடைசியில் போதகருக்கும் நிம்மதி! சிறையிலிருந்து நிரந்தர விடுதலை! உங்கள் மறுப்பால் நால்வரின் அமைதிக்குப் பங்கம் விளைகிறது.

ஏரோத்: [மகிழ்ச்சியுடன்] ஸாலமி! என்னிடம் ஏராளமாய் எமரால்டு கற்கள் உள்ளன! வித விதமான பதக்கங்கள் உள்ளன. ரோமாபுரித் தளபதி சீஸர் வைத்திருக்கும் எமரால்டை விட எனது எமரால்டு கற்கள் மிகவும் பெரியவை! உலக எமரால்டு எல்லாவற்றையும் விடப் பெரியதென்று பொற்கொல்லன் உறுதி சொன்னான். விலை உயர்ந்தவை! வேண்டுமா கேள்! எத்தனை வேண்டும் கேள்! உன் மேனி முழுவதும் எமரால்டு கற்களால் ஆடை செய்து அணிவிக்கிறேன்.

ஸாலமி: எனக்கு எதற்கு ஆபரணம்? என்னழகுக்கு எந்த அணியும் தேவை யில்லை! நான் வேண்டுவது தலை! ஜொகானன் தலை! வெள்ளித் தட்டில் அவரது தலை! விலை மலிவான ஒற்றைத் தலை! விலைக்கு விற்க முடியாத அற்பத் தலை! எனக்கு எதற்கு எமரால்டு கற்கள்? செத்துப் போன என் தந்தை எனக்கு விட்டுப் போன எமரால்டுகள் உங்கள் எமரால்டு போன்று பெரியவை, விலை உயர்ந்தவை! எனக்கு எதற்கு உமது எமரால்டுகள்? என் அன்னைக்குச் சேர்ந்தவை அவை! எனக்குத் தேவை யில்லை அவை!

ஏரோத்: [கவலையுடன்] ஸாலமி! நீ பேராசைக்காரி என்பது தெரியாமல் போனது. நீ ஒரு பேய் என்பது எனக்குத் தெரியாமல் போனது! நான் உன்னை நேசித்தது தப்பு! உன்னழகில் மயங்கியது தப்பு! உன்னழகை வைத்து நீ பகடை ஆடும் பாவை என்று அறியாமல் போனது தப்பு! மதுவருந்தி மதிகெட்டுப் போனது தப்பு! பரிவு, பாசமில்லாத மங்கை மீது மோகம் கொண்டது தப்பு! [தலையில் அடித்து விம்முகிறான்].

ஸாலமி: என்னழகில் அந்த வாலிபன் மயங்கினான். அவன் தன்னுயிரையே வெகுமதியாக அளித்தான், அவன் கையாலே! மன்னரே என்னழகில் மயங்கி என்முன் மண்டியிட்டார்! அதற்கு வெகுமதி எனக்குக் கிடைத்தே ஆக வேண்டும். ஆனால் என் பேரழகு மயக்க முடியாமல் போனது, ஒரே ஒருவரை! ஜொகானனை! தேக்கு உத்தரம் போன்ற உடம்பும், தெய்வீகத் தோற்றமும் உள்ள அக்காட்டு மனிதர் என்னைக் கவர்ந்தார்! ஒளிவீசும் அந்த ஞானக் கண்கள் ஏனோ என் மேனியை நாடவில்லை! ஆனால் என் நெஞ்சம் அவரிடம் அடிமை ஆனது! என் கால்கள் என்னை அறியாமல் அவரிடம் மண்டி யிட்டன! என் கைகள் எனக்குத் தெரியாமல் அவரைத் தழுவிடச் சென்றன. என் கண்கள் என்னை விட்டு அவரை முற்றுகை யிட்டன! என் ஆத்மா அவரது உருக்குக் கவசத்தை ஊடுறுவ முடியாமல் வலுவிழந்தது! கண்கள் காதல் நிறைவேறாது கண்ணீர் விட்டன! ….ஆனால் என்னால் தாங்க முடியாதது புறக்கணிப்பு! அதுவும் ஆடவன் ஒருவன் புரியும் புறக்கணிப்பு! என் ஏமாந்த ஆத்மா பலிவாங்கப் புறப்பட்டு விட்டது! உள்ளே உறங்கிக் கொண்டிருந்த வேங்கை எழுத்து விட்டது! அதற்குத் தீனி கிடைக்கா விட்டால் என்னையே தின்றுவிடும்! மன்னரே ஆணை யிடுவீர்! வெள்ளித் தட்டில் வரட்டும் தலை!

(தொடரும்)

[காட்சி-1, பாகம்-18 அடுத்த வாரத் திண்ணையில்]

**********************************

தகவல்:

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York
2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)
3. The Desire of Ages By: Ellen G. White
4. The Story of Jesus By: Reader’s Digest (1993)
5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader’s Digest (1994)
6. The New Testament & Psalms, Placed By the Gideons.
7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)
8. Encyclopaedia of Britannica [1978]
9. Student Bible, The New International Version (2002)
10 The Artist’s Way (A Spiritual Path to Higher Creativity) By: Julia Cameron (1992)
11 Oscar Wilde By Richard Ellmann [1988]
12 Collected Works of Oscar Wilde [1997]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan April 18, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts