நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-16) (Based on Oscar Wilde ‘s Play Salome)

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மயிலாடி ஓய்ந்த திங்கே!

மாற்றி விட்டாள் மதியை யிங்கே!

மானாடி முடிந்த திங்கே!

மன்னவரின் பரிசை எங்கே ?

தானாக ஆணை யிடு,

தட்டிலவர் தலையைக் கொடு!

நானாகக் கேட் பதை நீ

நடுங்காமல் முடித்து விடு!

++++

‘புதல்வருக்குள்ளே, காட்டு வெளியிடை மரங்களுக்கு ஊடே வளர்ந்த ஆப்பிள் மரம் போன்றவன், என்னரும் காதலன். அவனது நிழலில் அமர்ந்து நான் பூரிப்புடன் சுகங் காண்கிறேன். அவனது கனி என் சுவைக்கு ஏற்றதாக இனிமை தருகிறது. ‘

‘என் காதலன் எனக்கு மட்டும் உரிமை யானவன். அதுபோல் நான் அவனுக்கு மட்டும் உரியவள். அவன் அல்லி மலர்களின் ஊடே என் பசிக்கிரை தருகிறான். ‘

சாலமன் பாடல் [Song of Solomon]

‘ஒரு மாது அடுத்த முறை திருமணம் செய்யும் காரணம், அவள் முதல் கணவனை வெறுத்ததால். ஆனால் ஓர் ஆடவன் மறுமணம் செய்வதற்குக் காரணம், அவன் முதல் மனைவியை ஆராதனை செய்ததால். மாதர் தம் அதிர்ஷ்டத்தை நம்பி திருமணத்தை முயல்கிறார். ஆனால் ஆடவர் திருமணத்தில் வெற்றி பெறுவதைச் சூதாடும் முடிவாக [Risk] நோக்குகிறார். ‘

‘கடவுள் நம்மைத் தண்டிக்க விரும்பும் போது, நாம் கேட்கும் வரங்களை அது அளிக்கிறது. ‘

‘பெண் மீதிச்சை கொண்டு ஆண் முயலும் போது, அவனை எதிர்த்துத் தள்ளுகிறாள்! ஆனால் அவளை விட்டு ஆண் விலகிச் சென்றால் அவனைத் தடுத்து நிறுத்துகிறாள்! ‘

‘பெண்டிர் நேசிக்கப் பட வேண்டியவர்; புரிந்து கொள்ளப் படுபவர் அல்லர். ‘

‘ஒவ்வொரு மனிதனும் தான் காதலிக்கும் பெண்ணை ஒருவகையில் அழிக்கிறான்! எல்லாரும் இதைக் கேட்க வேண்டும்! சிலர் கசப்பான பார்வையில் காட்டுகிறார்! சிலர் கவர்ச்சியான மொழியில் உரைப்பார்! கோழைகள் முத்தமிட்டுச் செய்வார்! தீரர்கள் தம் வாளால் செய்வார். ‘

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொகானன் (Jokanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

யூதர்கள்: மூவர்.

நாஸரீன் [Nazarene], மற்றும் ரோமாபுரி டைஜெல்லினஸ் [Tigellinus]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன! மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொகானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொகானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்! சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது. போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொகானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார். ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார். ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொகானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள். ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான். ராணி அதைத் தடுக்கிறாள். முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அவள் கேட்கும் வெகுமதி என்ன ? கோர வெகுமதி! வெள்ளித் தாம்பாளத்தில் ஜொகானன் தலை!

****

ஸாலமி: [நடனத்தை சற்று நிறுத்தி] எனக்கு வேண்டியது தலை! வெறும் தலை போதும்! வாளால் சீவிய தலை! யாருடைய தலை ? ஜொகானன் தலை! கர்வம் கொண்ட கர்த்தரின் தலை! துண்டிக்கப் பட்ட தலை! குருதில் மூழ்கிய தலை! நான் காதலித்தவர் தலை! வெள்ளித் தாம்பாளத்தில் ஜொகானன் தலை வேண்டும்!

ஏரோத்: [பயங்கரக் குரலில்] அடி பாவி! அடி பாதகி! என்ன கேட்டாய் ? புனித மனிதர் தலையா ? [தலை சுற்றி ஆசனத்திலிருந்து கீழே விழுகிறார்.] காவலர் அருகில் போய் ஏரோதைப் பிடித்துக் கொண்டு கவனிக்கிறார்கள். ஏரோதியாஸ் எழுந்து கணவர் பக்கத்தில் மண்டி யிடுகிறாள்.]

ஏரோதியாஸ்: [ஸாலமியை நோக்கி] ஸாலமி! நான் வேடிக்கையாய்ச் சொன்னதை நிஜமாக எடுத்துக் கொள்வாயா ? அறிவு கெட்ட மகளே! அதிர்ச்சி வருமாறு இப்படியா திடாரென்று கேட்பது ? மன்னருக்கு எதுவும் வந்து விட்டால் என் கதி என்னாகும் ? உன் கதி என்னவாகும் ? சற்று சிந்தித்துப் பார்த்தாயா ? நம்மிருவருக்கும் எதிர்காலம், கேடு காலம்!

ஸாலமி: [ஆச்சரியப் பட்டு] ஓ! நீ வேடிக்கையாகக் கேட்டாயா ? எனக்குத் தெரியாதே! நீ மெய்யாக நினைத்ததாக நான் நிஜமாக நம்பினேன்! புனிதர் எனது சொத்து! அவர் மீது மாலை முதல் எனக்கொரு பித்து! நீ ஏன் அவர் கழுத்தைப் பிடித்தாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் ஏன் அவர் தலையைத் தேடுகிறேன் என்பது உனக்குத் தெரியாது.

ஏரோத்: [மெதுவாகக் கண் திறந்து மெல்ல எழுகிறான். படியில் அமர்ந்து கொண்டு, ஸாலமியைப் பார்த்துக் கனிவு மொழிகளில்] ஸாலமி! என் கண்மணி! ஒரு வெள்ளி தட்டா ? ஓராயிரம் வெள்ளித் தட்டுகள் தருகிறேன்! கறை பிடிக்கும் போகும் வெள்ளி தட்டு எதற்கு ? தகதகவென மினுக்கும் தங்கத் தட்டு தருகிறேன்! எத்தனை வேண்டும் கேள்!

ஸாலமி: சரி, தங்கத் தட்டே தாருங்கள்! வெள்ளித் தட்டு வேண்டாம். ஒரு தட்டு போதும் எனக்கு! ஆனால் தங்கத் தட்டில் ஜொகானன் தலை வேண்டும்!

ஏரோத்: [கோபத்தைக் காட்டி மெதுவாக] ஸாலமி! தாய்ச்சொல் தட்டாமல் கேட்டாய்! அது உன் வாய்ச்சொல் என்று சொல்கிறாய்! ஆச்சரிய மாயிருக்கே! உண்மையைச் சொல்! அது தாய்ச்சொல்லா ? அல்லது உன் வாய்ச்சொல்லா ? யார் மூல காரண மென்று நானறிய வேண்டும்!

ஸாலமி: நான் தாய்ச்சொல்லைத் தட்டுபவள்! என் மனதில் தூங்கிக் கிடந்த வேட்கையைத் தூண்டி விட்டவள் என் அன்னை! நன்றி தாயே! நன்றி. நானிப்போது கேட்கும் தலைப்பரிசு உனக்கில்லை தாயே, எனக்கு! உனக்காக நீ வேண்டினாலும், எனக்காக நான் கேட்பது தலைப்பரிசு! முதலில் நானும் தயங்கினேன்! கேட்கத் தடுமாறினேன்! என்னை முறிக்கி விட்டவள் நீ! மூட்டி விட்டவள் நீ! விலை மதிப்பில்லாத தலைப்பரிசில் உனக்கும் சிறிது பங்குண்டு! ஏனிப்போது பயப்படுகிறாய்! பின்வாங்குகிறாய்! அஞ்சாமல் கேள் என்று எனக்கு நெஞ்சுறுதி திணித்தவள் நீ அல்லவா ? வீரத்தாயே! நீதான் எனக்குத் தூண்! என்னோடு சேர்ந்து கொள்! வரட்டும் தலைப்பரிசு தங்கத் தட்டிலே!

ஏரோத்: [இருவர் முன்பாக மண்டி யிட்டு] தாயும் சேயும் சேர்ந்து கொண்டு அப்பாவியின் தலையை அறுத்துத் தண்டிக்க அப்படி என்ன தவறிழைத்தார் ? அவர் ஒரு நாடோடி! அவர் ஓர் அனாதை! ஏழை! ஆசை யில்லாதவர்! பாச பந்தமில்லாதவர்! அவர் தலையை அறுத்துப் போடுவதில் உங்களுக்கு வரும் ஆதாயம் என்ன ?

ஸாலமி: [ஏளனமாக நோக்கி] மன்னாதி மன்னரே! சொல்லுங்கள்! என்ன தவறிழைத்தற்காக நீங்கள் அவரைச் சிறையில் அடைத்து வைத்துள்ளீர் ? கொள்ளிக் கட்டையை தலைக் கருகில் வைத்திருப்பவர் யார் ? அவரது சாபச் சொற்கள் அன்னையின் காதில் விழும்படி காலடியில் வைத்தது யார் ? ஒவ்வொரு தினமும் என்னருமைத் தாயின் உறக்கத்தைக் கலைத்தவர் யார் ? என்னிளம் நெஞ்சில் காதலை விதைக்கப் போதகரை கண்ணெதிரே கவர்ந்திட வைத்தவர் யார் ?

ஏரோத்: [கனிவாக] ஸாலமி! குற்றவாளி நான்தான்! ஒப்புக் கொள்கிறேன்! உண்ண உணவின்றி, தங்குமிடமின்றி, ஊர் ஊராய்ச் சுற்றி உபதேசித்து வந்த போதருக்கு ஓரிடமிங்கு அளித்தேன்! அரசாங்க விருந்தாளியாக, அறிவுரை கேட்பதற்காக அழைத்து வந்தேன்! அடைத்துப் போட்டேன்! திட்டினார் என்னை! பொறுத்துக் கொண்டேன்! பாபி என்றார் என் மனைவி ஏரோதியாஸை! மன்னித்தேன் அவரை! ஆனாலும் நானவரைக் கொல்ல விரும்ப வில்லை! கோபட்ட நான் கொன்றிருக்கலாம்! ஆனாலும் நான் கொல்ல வில்லை! நீங்களிருவரும் சேர்ந்து கொண்டு அவரது தலையை அறுக்கச் சொல்கிறீர்! என்னால் முடியாது! அந்த உத்தமர் தலையை வாளால் அறுக்க உத்தரவு தர முடியாது!

ஏரோதியாஸ்: என் தலை மீது கைவைத்துச் சத்தியம் செய்தீர்! மறுக்கிறீர் இப்போது. மறந்து போனீரா ? என் தலைமேல் உறுதி மொழி உரைத்தது உண்மையா ? அல்லது அவரது தலையை அறுக்காமல் தப்பிக் கொள்ள முயல்வது உண்மையா ?

ஸாலமி: [மன்னரைக் கவர்ச்சியாக நோக்கி அருகில் சென்று, மடிமீது அமர்ந்து கன்னத்தைத் தடவுகிறாள்] எனது நளின நடனம் கண்டு களித்தது போதாதா ? மறுபடியும் ஆடவா ? நடன மாது நான் வேறு என்ன செய்தால் ஜொகானன் தலைப்பரிசு தருவீர் ? [மதுக்கிண்ணத்தைப் பார்த்து] உங்கள் மதுக்கிண்ணம் காலியாக உள்ளதே! நான் அதை நிரப்புகிறேன்! தெளிவற்ற உள்ளம் மதுபானம் அருந்தினால் தெளிவுற்றுத் தேர்ச்சி அடையும்! [பக்கத்தில் உள்ள மதுக் கூஜாவை எடுத்துக் கிண்ணத்தில் ஊற்றுகிறாள்] அருந்துவீர் மன்னரே! தள்ளாடும் உங்களை மதுப்பானம்தான் நிமிர்த்தி உட்காரச் செய்யும்! [மதுக்கிண்ணத்தை எடுத்து ஏரோத் வாயில் ஊட்டுகிறாள்] என் தந்தக் கையில் தரும் மது தனிச் சுவையாக யில்லையா ?

ஏரோத்: [மதுவைச் சுவைத்துக் கொண்டே விழிகள் மூட] சொர்க்கபுரி அரசியே! மதுவை விட உன் மேனிக் கனலே சுகம் தருகிறது! உலையிலிட்ட இரும்பாய் உருக்குகிறது! [ஸாலமியைத் தன்னுடன் அணைத்துக் கொள்கிறான்] ஸாலமி! என்னை விட்டு நீ விலகாதே! கண்மணி! உன்னையேதான் இராப் பகலாக நினைத்துக் கொண்டிருந்தேன். கழுத்தணியாக என்னை அணிந்து கொள்! இந்த இனிய நேரத்தை நிரந்தர மாக்குவாயா ?

ஸாலமி: [கெஞ்சலுடன்] நிச்சயம் செய்வேன் மன்னா, ஜொகானன் தலையைக் கொய்து தட்டில் கொண்டு வந்தால்! உறுதி மொழி தருகிறேன் உங்களுக்கு ? என் உறுதி மொழி வலுவானது! உங்கள் உறுதி மொழிக்கு முதுகெலும்பு கிடையாது! மண் புழுவைப் போல் அது நெளிவது!

ஏரோத்: [கோபமாக ஸாலமியைத் தள்ளி விட்டு எழுந்து] ஸாலமி! அது நடக்காது! உன் வெகுமதியை மாற்றிக் கேள்! போதகர் புனித கர்த்தா! என் அரண்மனையில் அவரது சிரம் துண்டிக்கப் படாது! வேறு ஏதாகிலும் கேள்! உன்னை மணந்து கொள்ளவா ? கேள் உன்னை மணந்து கொள்கிறேன்! உன்னைப் பட்டத்தரசி ஆக்கவா ? கேள், உன்னைப் பட்டத்தரசியாய் அறிவிக்கிறேன்! உனக்கோர் மாட மாளிகை, கூட கோபுரம் வேண்டுமா ? கேள், உனக்குச் சொர்க்க மாளிகை கட்டித் தருகிறேன்! அற்பத் தலைக்கு ஆசைப் படுகிறாய்! என்னால் செய்ய முடியாத சிரச் சேதம் செய்யத் தூண்டுகிறாய்! தாயும், மகளும் சேர்ந்து ஓர் புனிதரைக் கொல்ல திட்டம் போடுகிறீர்! ஏன் ? எதற்கு ? எதற்கு ? என்ன பாபம் செய்தார் அவர் உங்களுக்கு ?

(தொடரும்)

[காட்சி-1, பாகம்-17 அடுத்த வாரத் திண்ணையில்]

****

தகவல்:

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York

2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)

3. The Desire of Ages By: Ellen G. White

4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)

5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)

6. The New Testament & Psalms, Placed By the Gideons.

7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)

8. Encyclopaedia of Britannica [1978]

9. Student Bible, The New International Version (2002)

10 The Artist ‘s Way (A Spiritual Path to Higher Creativity) By: Julia Cameron (1992)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan April 12, 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts