ஜோதிர்லதா கிரிஜா
செங்கல்பாளையம் போய்த் திரும்பிய அன்று முழுவதும் சாமிநாதனுக்குத் தூக்கம் வரவில்லை. இப்படியும் அப்படியுமாய்ப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். கதவு திறந்த பங்ககஜத்தின் நெருக்கத்தில் பார்த்த முகம் அவன் மனக்கண்ணைவிட்டு மறையவில்லை. தனக்கு என்ன நேர்ந்து கொண்டிருந்தது என்று அவன் திகைத்தான். அது வரையில் அவன் எந்தப் பெண்ணையும் பார்த்து, ‘இவள் அழகி’ என்று நினைத்ததில்லை. எனவே, சபலம் என்கிற சொல்லுக்கே அவனது அகராதியில் இடம் கிடையாது. அவனுடைய பெரியப்பாவும் சித்தப்பாவும் துறவறம் பூண்டு முப்பது வயதுக்கும் முன்னாலேயே இமயமலைப் பக்கம் போய்விட்டவர்கள். அதற்குப் பிறகு அவர்களைப் பற்றிய தகவலே வந்ததில்லை. அவனது பாரம்பரியத்துக்குரிய அந்தத் துறவுகொள்ளும் மனப்பான்மை அவனுக்கும் வாலிப வயதிலேயே ஏற்பட்டுவிட்டிருந்தது. அதனால்தான், அவன் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ன பரமஹம்சர் போன்ற மகான்களின் நூல்களை வாசிப்பதிலும், யோகாசனப் பயிற்சியிலும் ஈடுபட்டுத் துறவறமே தன் குறிக்கோள் என்று உறுதியா யிருந்தான்.
சிறு வயதிலேயே பிரும்மசரியத்தில் ஆர்வம் கொண்டுவிட முடிந்த தான் தூய்மையின் இலக்கணம் என்பதாய் அவனுக்குள் ஓர் இறுமாப்பும் இருந்தது. ‘அப்படியானால் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் தூய்மையற்றவர்களா என்ன ?’ என்று தன்னைத்தானே கேட்டு அவன் சிரித்துக்கொள்ளவும் தவறியதில்லை. தன் எண்ணம் சரியானால் தானும் சேற்றில் உற்பத்தியானவன்தானே என்கிற நியாயமான கேள்வியும் அவன் மனத்தில் எழுவதுண்டு. எனவே, ‘இது ஒரு மனப் போக்கு. இதில் “தூய்மை”, “தூய்மை யின்மை” என்கிற பேச்சுக்கே இடமில்லை’ என்று அவன் இறுதியாக முடிவுசெய்தான்! எது எப்படி யானாலும், பிரும்மசரிய ஆர்வம் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவனாய்க் காட்டியதாய் அவன் அதுகாறும் கொண்டிருந்த செருக்கில் பங்கஜம் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாள் என்பதே கண்கூடான உண்மை!
பங்கஜம் தன் துறவு மனப்பான்மையைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்டதை எண்ணி எண்ணி அவன் பிரமித்துக்கொண்டிருந்தான். தனக்கு இப்படி ஒரு சரிவா என்று வியப்பு ஏற்பட்டாலும், அது பற்றிய ஏமாற்றமோ குற்ற உணர்வோ அவனுக்கு ஏற்படவில்லை. மணமான அவளைத் தான் அடைவது என்பது குதிரைக்கொம்பு என்பது நன்றாய்த் தெரிந்திருந்தாலும், அவள் கிடைக்காவிட்டாலும், அவளது நினைவில் வாழ்ந்துவிட அவன் தயாரா யிருந்தான். அவன் அம்மாவுக்கும் பிறர்க்கும் அவன் பிரும்மசாரியாகத்தான் தோன்றப் போகிறான். ஆனால், மனத்தளவில் அவன் பங்கஜத்தோடு வாழ்வதை யாரால் கண்டுபிடிக்க முடியப்போகிறது ? அவளோடு அவன் மானசிகக் குடும்பம் நடத்துவதை யார்தான் தடுக்க முடியும் ?
இப்படியெல்லாம் அவன் குருட்டு யோசனைகள் செய்தாலும், துளியும் பழக்கமே இல்லாத ஒரு பெண்ணிடம் சிக்கித் தன் மனம் இந்தப் பாடு பட்டது அவனுள் அளவுகடந்த திகைப்பையும் தன் உள்மனம் பற்றிய அதிர்ச்சியையும் இடைவிடாது அவனிடம் தோற்றுவித்தவாறா யிருந்தது. ‘இதன் பெயர்தான் விட்ட குறை, தொட்டகுறை என்பதா ? எனக்கென்ன கிறுக்கா பிடித்துவிட்டது ? கணவனால் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் ஒரு மணமான பெண்ணுக்காக மனத்தை அலைய விடுவது அசட்டுத்தனத்தின் உச்சமல்லவா! கனவில் மட்டுமே அவளுக்குத் தன்னால் தாலிகட்ட முடியும் என்னும் கண்கூடான நிலை அவனுக்கு அவ்வப்போது ஒரு தன்னிரக்கத்தையும் சுயவெறுப்பையும் கூட ஏற்படுத்தத் தவறவில்லை.
அவனது அறிவு என்னென்னமோ சொல்லி அவனை மாற்ற முயன்ற போதிலும், அவன் மனமென்னவோ தெறிகெட்டுத்தான் ஓடிக்கொண்டிருந்தது. அதன் தாக்கம்தான் அவன் அடுத்த நாளே செங்கல்பாளையம் போனது.
‘அந்தப் பெண்ணை’ வேலைக்கு வைத்துக்கொள்ளுவது பற்றித் தங்கம்மாவிடம் பேச்செடுப்பதற்குரிய துணிச்சல் உடனே அவனுக்கு வரவில்லை. குற்றமுள்ள நெஞ்சாதலின், வெறும் இரக்கத்தால் மட்டுமே தான் அப்படி ஒரு யோசனையைச் சொல்லுவதாய்த் தன் அம்மா நம்புவாளா என்கிற தயக்கமும் அவநம்பிக்கையும் அவனுக்கு இருந்தன. பகத்து வீட்டுப் பொறுக்கியின் கண்களில் அவள் மறுபடியும் பட்டு அதனால் ஆபத்துக்கு அவள் ஆளாகக்கூடாது என்பதன் பொருட்டே வாடகை வீட்டுக்காரர்களைத் தங்களது தற்போதைய வீட்டில் குடியிருக்கச் செய்துவிட்டு, தாங்கள் அவர்களது வீட்டில் குடியேறலாம் என்று சொல்லுகிற அளவுக்கு வெறும் மனிதாபிமானத்தாலோ அல்லது இரக்கத்தாலோ மட்டும் ஒருவன் நடவடிக்கை மேற்கொள்ளுவானா என்று தங்கம்மா திகைக்கவோ அல்லது சந்தேகப்படவோ மாட்டாள் என்று நிச்சயமாக அவனால் நம்பமுடியவில்லை.
தங்கம்மாவிடம் அது பற்றிப் பேசும் நேரத்தை அவன் தேர்ந்தெடுப்பதற்குள் செங்கல்பாளையத்திலிருந்து பாகீரதி மாமி வந்து அவன் ஜோசியர் வீட்டுக்கு வந்து போனது பற்றிய சேதியை அவளிடம் போட்டு உடைத்துவிட்டாள்.
பாகீரதி போன பிறகு, தங்கம்மா, “என்னடா, இது ? அங்க எதுக்குப் போனே ? எங்கிட்ட ஏன் சொல்லல்லே ?” என்று அவனை ஆழமாகப் பரர்த்தவாறு வினவினாள்.
துணிச்சலுடன் தாயை ஏறிடுவது எனும் முடிவுக்கு அதற்குள் சாமிநாதன் வந்து விட்டிருந்தான்.
‘சமயம் பாத்துச் சொல்லலாம்னு இருந்தேம்மா.’
‘இதுல என்னடா இருக்கு சமயம் பாத்துச் சொல்றதுக்கு ? எதுக்கு அவாத்துக்குப் போயிருந்தே நீ ? ஏன் என்கிட்ட முன்கூட்டி ஒரு வார்த்தை சொல்லல்லே ?”
‘அம்மா! அந்தப் பொண்ணை நீ நம்மாத்துல நோாக்கு உதவியா வெச்சுக்கோம்மா. அதுல அவளுக்குச் சம்மதம் இருக்கான்றது தெரியாம எப்படி அப்படி ஒரு யோசனையை உங்கிட்ட சொல்றது ? அதான் அவாளுக்கு முடியுமா, முடியாதான்றதை மொதல்ல கேட்டுத் தெரிஞ்சுண்டதுக்கு அப்புறம் உங்கிட்ட பேசலாம்னு இருந்தேன். வேற ஒரு காரணமும் இல்லே.’
‘சரி. அப்படியே இருக்கட்டும். செங்கல்பாளையத்துலேர்ந்து திரும்பிவந்த கையோட நீ அங்க போயிருந்ததைப் பத்தி எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே ? அந்த பாகீரதி மாமி வந்து சொல்லித்தானே விஷயம் தெரிஞ்சுது ? அது சரி, என்ன சொன்னா அவ ?’
‘என்னது! என்ன சொன்னா ‘அவ’ளா! சரியாப் போச்சு, போ. அவளை யெல்லாம் பத்துப் பேசற ஆளா நான் ? அவளோட அப்பா – அந்த ஜோசியர் கிட்டதான் பேசினேன். அப்பாவும் பொண்ணுமா அவாத்து சமையல்கட்டுலெ தனியாக் கலந்து பேசிட்டு சரின்னிருக்கா. ஆனா, உன்கிட்ட நான் இன்னும் அதைப் பத்திப் பேசல்லேங்கிறதை அவர் கிட்ட சொல்லிட்டேன். ‘
‘அப்ப, அப்பாவும் பொண்ணும் குண்டு தைரியந்தான். பக்கத்து வீட்டுலயே தன் கிட்ட மே¢ாசமா நடக்கப் பாத்த ஒருத்தன் இருக்கிறப்போ, தைரியமா இங்க வந்து வேலை செய்யறேனிருக்காளே!” – இவ்வாறு கூறிய போது தங்கம்மாவின் குரலில் ஓர் ஏளனம் ஊடாடியது.
‘இல்லேம்மா. ஒடனேயே முடியாதுன்னு சொல்லிட்டா. அப்புறம், நான் தான் அதுக்கு ஒரு யோசனை சொன்னேன்.’
‘என்ன யோசனை ?’
‘வாடகைக்கு விட்டிருக்கிற நம்மளோட இன்னொரு விட்டுக்கு நாம குடி போயிடலாம்மா. அங்க குடியிருக்கிறவா இந்தாத்துக்கு வந்துடட்டும். அப்ப, அந்தப் பொண்ணு இந்த அளவுக்குப் பயப்பட வேண்டாமோல்லியோ ?” – இவ்வாறு கேட்டுவிட்டு அவன் துணிச்சலுடனும், தன் பார்வையில் எந்தக் கள்ளமும் தெரிந்துவ்ிடாத கவனத்துடனும் தங்கம்மாவை நேரடியாகப் பார்த்தான்.
அப்போது தங்கம்மாவின் விழிகள் அவனை ஏதேதோ கேள்விகள் கேட்டு விரிந்தன.
‘இத பாருடா. மொதல்ல – ஆள் வெச்சுக்குற அளவுக்கு என் ஒடம்புல பலம் வத்திப் போயிடல்லே. ரெண்டாவது – அவா மேல இரக்கம்னா அஞ்சோ பத்தோ தர்மம் பண்ணிட்டு வெலகிடணும். கஷ்டப் பட்றவாளைப் பாத்து இந்த அளவுக்கு உருகுறது அசட்டுத்தனம். கஷ்டப்பட்றவா எத்தனையோ பேரு இருக்கா லோகத்துல. அவாளையெல்லாம் கூப்பிட்டு இங்க குடி வைக்க, நம்மாத்தைச் சத்திரமா மாத்துவியா என்ன!’ – தங்கம்மாவின் கேலி அவனைத் தாக்கியது.
‘அப்படி இல்லேம்மா. அந்தப் பொண்ணு என் கண் முன்னால அந்த ராஸ்கல் ஆத்துலேர்ந்து தப்பி ஓடினதைப் பாத்ததுதான் அதுக்குக் காரணம். நீ சொல்றாப்ல, எல்லாரையுமா நாம காப்பாத்த முடியும் ? நேரடியாப் பாத்துட்டதால வந்த ஒரு எண்ணம். அவ்வளவுதான்!’
‘இருக்கட்டும். ஆனா, அதுக்காக வீடு மாத்தற அளவுக்கா போவா ? நன்னாருக்குடா. யாராவது கேட்டா சிரிப்பா!’
‘ஏம்மா, ‘அந்த வீடு கோவிலுக்குப் பக்கத்துல இருக்கு. அங்க போயிடலாம்’னு நீயே எத்தனை தரம் சொல்லி யிருக்கே ? நானும் சரின்னுதானே சொல்லிண்டிருந்தேன் ? என்னமோ அதுக்கு வேளை வரல்லே. இப்ப வந்திருக்குன்னு வெச்சுக்கயேன்.’
தங்கம்மா அயர்ந்து போனாள். ‘துளியும் அறிமுகமே இல்லாத ஒரு பெண்ணின் மேல் ஒருவனுக்கு இந்த அளவுக்கு உதவுகிற எண்ணம் வருமா!’ என்று அவள் மலைத்தது மறுபடியும் அகன்ற அவள் விழிகளில் அவனுக்குப் புலப்பட்டது. அதே சமயத்தில் தன் மகன் மீது அவளுக்கு அவநம்பிக்கை ஏதுமில்லை என்பதையும் அவளது பார்வை புலப்படுத்தியதாக அவன் நினைத்தான். அந்தப் பெண்ணின் மீது தனக்குத் திடாரென்று ஒரு பற்றுதல் – காதல் – ஏற்ட்டிருந்ததை அவனால் தங்கம்மாவிடம் வெளிப்படுத்தவே இயலாது. அது ஓர் ஊமை கண்ட கனவாய்த்தா னிருக்கப் போகிறது.
இப்படி யெல்லாம் நிதரிசனங்களை அவன் மனம் அலசினாலும், தன் மனம் அவளது உறவை – அண்மையை – நாடிய உண்மையிலிருந்து அவனால் நழுவமுடியவில்லை. அந்த மகிழ்ச்சியாவது தனக்குக் கிட்டட்டுமே – அவளை அடிக்கடி பார்க்கிற மகிழ்ச்சி – அவளது அண்மை தனக்கு விளைவிக்கக்கூடிய சிலிர்ப்பு- ஆகியவையேனும் தனக்கு மிஞ்சட்டுமே என்று அவன் நினைத்தான். கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனாய்த் தன்னை மாற்றும் அளவுக்குத் தான் காதல் வசப்படுவான் என்பது அவனது கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயமாகவே இருந்தாலும், அதன் உண்மை அவனை அயர்த்தவே செய்தது.
‘என்னம்மா ? பதிலே சொல்லாம இருக்கே ? நோக்கு இஷ்டமில்லேன்னா மனசு விட்டுச் சொல்லிடு. அந்தப் பொண்ணுக்கும் அவ அப்பாவுக்கும் நான் வேற ஏதானும் ஏற்பாடு பண்ணிக் குடுக்கறேன்.’
‘வேற என்ன ஏற்பாடுடா பண்ணுவே ?’
‘மெட்றாஸ்ல என்னோட அச்சாபீஸ் இருக்கோல்லியோ ? அதுல அவளை வேலைக்கு அமர்த்துவேன். அச்சுக் கோக்கற வேலை பண்ணலாமே ? தமிழும் இருக்கே ? அவ அப்பா அங்கேயே புரோாகிதம், ஜோசியம்னு வண்டியை ஓட்டிட முடியுமே ?’
‘அப்ப – பட்டணத்துக்கே அவாளைக் கூட்டிண்டு போய் வீடு அமத்திக் குடுப்பியா என்ன!’
‘ஆமாம்மா. அதே தான் ! நேக்கென்னமோ அந்தப் பொண்ணு கொள்ளிக்கட்டையும் கையுமா தன்னைப் பத்தின பிரக்ஞை கூட இல்லாதவ மாதிரி ஓடினதைப் பாத்ததுலேர்ந்து மனசே சரியாயில்லே. நம்ம தேசத்துல இது மாதிரி எத்தனை பொண்ணுகள் கஷ்டப்பட்றா, தெரியுமாம்மா நோக்கு ?’
சாமிநாதனின் குரல் கொஞ்சங் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே போயிற்று. அப்படி ஒரு சுருதி ஏற்றத்தோடு அவன் பேசினான் என்றால், அவன் வெளிப்படுத்துகிற எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டான் என்பதை அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்து வைத்திருந்த தங்கம்மாவின் அதிர்ச்சி அதன் உச்சத்துக்குப் போயிற்று. ஒரு வகையில் அவனது உடம்போடு பிறந்த இரக்க சுபாவம் அவளுக்குத் தெரிந்த ஒன்று தான் என்றாலும், அவன் மிகையாய்ச் செயல்பட எண்ணியதாய் அவளுக்குத் தோன்றியது. அதற்கான அடிப்படை என்னவா யிருக்கும் என்கிற புதிருக்கு ஒரே ஒரு பதில்தான் இருக்க முடியும் என்றும் அவளுக்குப் பட்டது. எனினும், இப்படி யெல்லாம் அவன் எண்ணப்போக்கை அலசிய நேரத்தில், பிரும்மசரிய விரதம் பூண்டு முப்பது வயது வரையில் திருமணம் செய்துகொள்ள மறுத்துத் தாக்குப் பிடித்துள்ள மகனைச் சந்தேகிக்கவும் அவளால் இயலவில்லை. தவிரவும், கணவன் உயிருடன் இருக்கின்ற நிலையில், மணமான ஒருத்தியின்பால் அவன் மனம் அப்படி ஒரு “தகாத” நோக்கத்தை ஒருபோதும் கொள்ளாது என்று அவள் உறுதியாக நம்பினாள். அதே நேரத்தில், பஞ்சும் நெருப்பும் பற்றிய உதாரணமே அவளுக்கு நினைப்பு வந்ததால், நடைமுறைத்தனமாகவும் அவளால் யோசிக்காதிருக்க முடியவில்லை.
எனவே, பட்டணத்துக்கு அவன் அவர்களை அழைத்துப் போய்க் குடிவைப்பதைக் காட்டிலும், தன் கண்காணிப்பின் கீழ் அவர்கள் இருப்பது நல்லதென்று அவள் நினைத்தாள்.
‘சரிடாப்பா. உன்னிஷ்டம்!’ என்று அவள் கடைசியில் இறங்கி வர வேண்டியதாயிற்று.
தங்கம்மாவுக்கும் தனக்குகிடையே நடந்த அந்தச் சொல்லாடல் பற்றி அசை போட்டுக்கொண்டிருந்தவனுக்கு முன்னால் வந்து நின்ற அவள், “ நாம குடி வெச்சிருக்கிறவா கிட்ட போய் விஷயத்தைச் சொல்லிட்டு வந்துடு. நம்ம வண்டியிலேயே வேணும்னாலும் அவா தன்னாத்து சாமான்கள் சிலதை எடுத்துண்டு வந்து இப்ப சத்தியா கூடத்துல வைக்கட்டும். அந்த வீடு காலியானதுக்கு அப்புறமா நாம காலி பண்ணலாம். சரியா ?” என்றாள்.
“சரிம்மா!” என்ற சாமிநாதனின் கண்களில் தாயின் பால் பரிவும் நன்றியும் தெரிந்தன. தனது பட்டணத்து அச்சாபீசில் அந்தப் பெண்ணுக்கு வேலை போட்டுத் தர இருப்பதாகத் தான் மட்டும் சொல்லி யிருந்திராவிட்டால், தங்கம்மா தன் வழிக்கு வந்திருக்கவே மாட்டாள் என்றெண்ணி அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
“அந்தப் பொண்ணு இங்க வந்து வேலையில சேர்ற வரைக்கும் நீயா யார் கிட்டவும் அதைப் பத்திப் பேசவேண்டாம்மா. அந்த விஷயம் நாகலிங்கத்தோட காதுக்கு எட்டிடக் கூடாது. அதுக்குத்தான் சொல்றேன்.”
“சரிடா.”
“அது ச ரி, அந்தப் போண்ணு பேரென்ன ? நோக்குத் தெரியுமா ?”
“பாகீரதி மாமி பேச்சுவாக்குல பங்கஜம்னு சொன்னா.”
“சரி. அப்ப நான் இன்னைக்கு சாயங்காலம் செங்கல்பாளையத்துக்குப் போய் அவா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துட்றேன். இப்ப, மொதல்ல நம்ம வாடகைவீட்டுக்காரா கிட்ட சொல்லிட்றேன்.”
“சரி.”
தங்கம்மா சமையற்கட்டுக்குப் போய்த் தன் வேலையில் ஆழ்ந்தாள். அப்படியே சிந்தனையிலும் ஆழ்ந்தாள்: ‘அந்தப் பொண்ணு தாலியறுத்தவாளயிருந்தா, நான் பயப்பட்றதுக்கு ஒரு நியாயமிருக்கும். இவன் பாட்டுக்குக் காந்தி சொல்றார்னுட்டு விதவாவிவாகம் பண்ணிக்கிறேன்னு ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பான். ஆனா அதுவோ இல்லே. அவளோட ஆம்படையான் உசிரோட இருக்கிறதால அந்தப் பேச்சே வராது. .. .. அந்தப் பொண்ணோட அப்பாவும் ஜோசியர் பரம்பரை. ரொம்ப வைதீகம். புரோகிதம் வேற பண்ணின பூர்வீகம். அவர் வளத்த பொண்ணும் வைதீகமாத்தான் இருப்பா! அதனால தப்புத் தண்டா எதுவும் நடக்கிறதுக்கு சாத்தியமே கிடையாது!.. .. ..’
.. .. .. கதவைத் திறந்த பங்கஜத்தின் பார்வையுடன் சாமிநாதனின் பார்வை இரண்டறக் கலந்து அவளை ஒரு தடுமாற்றத்தில் ஆழ்த்தியது. அவள் ஒன்றுமே சொல்லாமலும், புன்னகை கூடப் புரியாமலும், பார்வையை அகற்றிக்கொண்டு, “அப்பா! அப்பா!” என்று கூப்பிட்டுக்கொண்டு ஓடாத குறையாக உள்ளே போனாள்.
பஞ்சாட்சரம் வாசலுக்கு வந்து அவனை வரவேற்று உள்ளே அழைத்துக்கொண்டு போனார். அவனை உட்காரப் பணித்துத் தாமும் உட்கார்ந்துகொண்ட பின், “சொல்லுங்கோ!” என்று அவனை நோக்கிப் புன்னகை செய்தார்.
“என்னது நீங்க ? நான் சொல்லியும் கேக்காம, ‘நீங்க’ ங்கறேள் ?”
“வயசுல சின்னவரா யிருந்தாலும் எங்களுக்குப் படியளக்கப் போறவரில்லியா நீங்க ? அதுக்குண்டான மரியாதையோடதான் நான் பேசணும்! தயவு பண்ணி இந்த விஷயத்துல என்னை வற்புறுத்தாதீங்கோ.”
“ சரி. அப்புறம் உங்க இஷ்டம்.. .. .. எங்கம்மா சரின்னுட்டா. இன்னும் அஞ்சாறு நாளுக்குள்ள நீங்க உங்க பொண்ணைக் கூட்டிண்டு வந்து எங்காத்துல விடலாம். என்னிக்கு வரலாம்கிறதை நான் வந்து சொல்றேன். சரியா ? அக்கிரகாரத்துல சந்நிதித் தெருன்னு இருக்கு. கோவிலுக்கு எதித்தாப்ல. அதுல ஒம்பதாம் நம்பர் வீடு.”
பஞ்சாட்சரம் கண்கலங்கிக் கைகூப்பினார்: “ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு! இந்தக்காலத்துல இப்படி யாரு ஏழைகளுக்கு உதவறதுக்கு இருக்கா ? .. .. ஆனா, ஒரு சின்ன இது.. ..”
“சொல்லுங்கோ.”
“சிலுக்குப் பட்டியில பத்மநாபய்யர்னுட்டு ஒருத்தர். அவர் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. உங்க ஊர் தேவரஜய்யர் பிள்ளைக்குத்தான் குடுக்கறா. கல்யாணம் முடியற வரைக்கும் எம்பொண்ணு அவாத்துக்கு வேலை செய்யப்போறா. அதுக்கு அப்புறம் உங்காத்துக்கு வருவா. ஆட்சேபணை ஒண்ணுமில்லியே உங்களுக்கு ?”
“ஆட்சேபணையே இல்லே. சவுகரியம் போல வரட்டும். தேவராஜய்யர் எங்களுக்குப் பழக்கமானவர்தான். பெரிய குடும்பம். மூத்த பிள்ளைகள், மாட்டுப் பொண்ணுகள் எல்லாருமா ஒண்ணா யிருந்துண்டிருக்கா. .. .. நான் இன்னும் ஒரு மாசம் போல இருப்பேன். அதுக்கு அப்புறம் மெட்றாஸ் போயிடுவேன். அஞ்சாறு மாசம் கழிச்சுத்தான் அடுத்த விசிட். .. அப்ப, நான் வரட்டுமா ?”
“இருங்கோ. ஒரு வாய்க் காப்பியாவது குடிச்சுட்டுத்தான் போணும்.”
“இல்லேல்லே. நன் கெளம்பறேன்.. .. இந்தாங்கோ. இதை எடுத்துக்குங்கோ.”
சாமிநாதன் கொய்யாப் பழங்களும் மாதுளம் பழங்களும் நிறைந்த துணிப் பையை அவரிடம் கொடுத்தான்.
“எதுக்கு இதெல்லாம் ? ஏற்கெனவே ஒரு பை நிறைய குடுத்திருக்கேள்.”
“இருக்கட்டும். அப்ப நான் வரட்டுமா ?”
அவன் எழுந்தான். அவரும் எழுந்தார். அப்போது திடாரென்று வீசிய காற்றில் அடுக்களைக் கதவு அசைய, அதன் அருகே நின்றிருந்த பங்கஜம் அவனுக்குத் தென்பட்டாள். பஞ்சாட்சரம் முதுகு காட்டி நின்றதால், அவன் துணிவோடு அவள் புறம் பார்த்தான். அவன் விழிகளைச் சந்தித்த பின், அவள் சட்டென்று மிக விரைவாக நகர்ந்துகொண்டாள். அது வரையில், அவள் கதவுக்குப் பின்னால்தான் நின்றிருந்திருக்க வேண்டும் என்று சன்ன்மாக ஒரு நம்பிக்கை சாமிநாதனுள் கிளர்ந்தது.
“அப்பா!”
“என்னம்மா ?”
“பாகீரதி மாமிக்கு இந்த விஷயம் இப்ப தெரியலாமா கூடாதான்னு எதுக்கும் கேட்டு வெச்சுக்குங்கோ.”
“தாராளமாச் சொல்லிக்குங்கோ. எதுக்கு வீண் ஒளிவுமறைவு ?” – அவன் நேரடியாகவே பதில் சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே புறப்பட்டான்.
.. .. .. மறு நாள் பத்மநாபய்யர் வீட்டுக்குப் பாகீரதி மாமியுடன் பங்கஜம் போய்க்கொண்டிருந்த போது, வழியில் வள்ளி எதிர்ப்பட்டாள். ‘இவளை எங்கோ பார்த்தாற்போல் இருக்கிறதே ?’ என்று பங்கஜம் யோசித்தாள்.
– தொடரும்
jothuigirija@vsnl.net
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -5 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சித்திரையில்தான் புத்தாண்டு
- பெரியபுராணம் – 84 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- வாழும் என் கவிதைகளில் ( மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் )
- மிஸ்டர் இந்தியா !
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-16) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- கீதாஞ்சலி (68) பன்னிற வடிவப் படைப்புகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… -1
- ஆத்மா, அந்தராத்மா, ம ?ாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- அவுரங்கசீப்
- புதிய காற்று & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல்-கலந்துரையாடல் இருநாள் அமர்வு—2006 மே இறுதிவாரம்
- மலர்மன்னனின் உள்ளுணர்வும், உண்மைக்கு மாறானதும்
- ‘காலத்தின் சில தோற்ற நிலைகள் ‘ : ‘ரிஷி ‘ யின் நான்காவது கவிதைத்தொகுப்பு
- தனுஷ்கோடி ராமசாமி யின் ‘தீம் தரிகிட ‘- சிறுகதைத் தொகுப்பு சுட்டும் மனித உரிமை மீறல்களும், அதற்கான தீர்வுகளும்.
- வேலையின்மை கிளர்ந்தெழும் பிரான்சு இளைஞர்கள்
- எது உள்ளுணர்வு ?
- கடிதம் – ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
- புலம் பெயர் வாழ்வு (7) – தலைமுறை இடை….வெளி
- கற்று மறத்தலும், முன் நோக்கிச் செல்லுதலும் ( மூலம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் )
- புதிய பெயர், புதிய தோற்றம், புதிய குடும்பம் ஏன் ?
- என் பார்வையில் : ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை – ஒரு கேள்விக்குறி – ?
- இரவுகள் யாருடையவை ?
- மீண்டும் வெளிச்சம்
- ஐந்தாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா ஆவணி 2006
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 2
- சிற்றிதழ்களின் சிறந்த படைப்புகள் – 2004
- கோட்டில் குந்தியிருந்த எண்ணற்ற புள்ளிகளின் மனப்பொழுதின் பகிர்வுகள்
- தேவதைகளின் சொந்தக் குழந்தை — விமர்சன கூட்டம்(பன்முக விமர்சனங்கள்)
- இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து
- எடின்பரோ குறிப்புகள் -11
- தவ்ஹீது பிராமணீயம்
- ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 16
- விஞ்ஞானியின் வினோத நாக்கு
- திரவியம்
- பறவை
- எங்கே செல்லுகிறது இந்தியா ?
- ‘நல்லூர் இராஜதானி:நகர அமைப்பு ‘ – அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்!
- நானும், கஞ்சாவும்
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நண்பரே….நண்பரே ….நண்பரே…! – 2
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே…நண்பரே.. நண்பரே….! – 1
- கடித இலக்கியம்
- ஆக்டே ரிபாத்தும் அடியேனும்
- சரத்குமார் விலகல் -திமுகவின் கெஞ்சல்
- காந்தியும் சு.ரா.வும்
- உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு.
- கன்னி பூசை