ஜோதிர்லதா கிரிஜா
ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லியிருந்த நல்ல நேரத்தில் பத்மநாபன் தேவராஜனின் வீட்டை யடைந்தார். அவர் சென்ற நேரத்தில் தேவராஜன் வாசல் திண்ணையை ஒட்டினாற்போலிருந்த தமது அறையில் உட்கார்ந்து சுதேசமித்திரன் படித்துக்கொண்டிருந்தார்.
செருப்புகளை வாசலுக்கு வெளியே உதறிவிட்டு, பத்மநாபன் தொண்டையைச் செருமினார். தேவராஜன் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துவிட்டு, “யாரு ?” என்றவாறு எழுந்துவந்தார்.
“சிலுக்குப் பட்டியிலேர்ந்து வறேன். என் பேரு பத்மநாபன். ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லியிருப்பாரே ?” என்றபடி தயக்கமாய் நின்ற பத்மநாபனை நோக்கிப் புன்னகை செய்த தேவரஜான், “அடேடே! நீங்கதானா அது ? வாங்கோ, வாங்கோ! உங்களை நான் ஒரு தரம் கோவில் திருவிழாவில பாத்திருக்கேன். உள்ள வாங்கோ.. ..”
சிரிப்புடன் தேவராஜனைப் பிந்தொடர்ந்து பத்மநாபன் அவருடன் வீட்டுக்குள் சென்றார். பெரிய பணாக்காரரா யிருந்தும் தேவராஜன் கச்சலா யிருந்ததைக் கவனித்த பத்மநாபன் வியப்படைந்தார். பணக்காரச் செழுமை இல்லைதான். ஆனால் அவரது நடையில் ஒரு கம்பீரமும், ‘எனக்கு நிகர் யார் ?’ என்று வினவும் ஒரு தோரணையும் தென்பட்டன. உடம்பு கச்சலா யிருந்தாலும், முகத்தில் பணக்காரக் களை தெரியவே செய்தது. ஒரு மினுமினுப்பும் தெரிந்தது. ‘பணக்காரர்களுக்கே உரிய மினுமினுப்பு’ என்று பத்மநாபன் தமக்குள் எண்ணிக்கொண்டார். அவரளவுக் கில்லாவிட்டாலும், ஓரளவு பணக்காரரேயான தன் முகமும் அப்படித்தான் பளபளக்கிறதோ என்னவோ என்று தமக்குள் எண்ணி அவர் நகைத்துக்கொண்டார்.
“உக்காருங்கோ!”
தேவராஜன் உட்கார்ந்த பிறகு, அவரும் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். சில நொடிகளுக்கு இருவரும் எதுவும் பேசவில்லை. அத்தனை பெரிய வீடு ஆரவாரமின்றி அமைதியா யிருந்ததைப் பத்மநாபன் கவனித்தார்.
அவர் எண்ணங்களை ஊகித்தவர் போல், “என் மூத்த பிள்ளை வயக்காட்டுக்குப் போயிருக்கான். ரெண்டாவது பிள்ளை அசலூருக்குப் போயிருக்கான். என்னோட பொண்ணுகள் ரெண்டுக்கும் கல்யாணமாயி, ஒருத்தி தஞ்சாவூர்லயும், இன்னொருத்தி நெல்லூர்லயும் இருக்கா. ஆத்துல, இப்ப சத்தியா- அதாவது நீங்க வந்திருக்கிற இந்த நிமிஷத்துல- எங்காத்துக்காரியும் நானும் மட்டுந்தான் இருக்கோம். . .. .. பார்வதி! பார்வதி! ஒரு நிமிஷம் இப்படி வந்துட்டுப் போ!” என்ற தேவராஜன் கழுத்தைத் திருப்பி உள்ளே பார்த்தார்.
அடுத்த நிமிடம் அவருடைய மனைவி பார்வதி அங்கு வந்து நின்றாள். அவள் தேவராஜனுக்கு நேரெதிரா யிருந்தாள். மூக்கிலும், காதுகளிலும் வைரங்கள் டாலடித்தன. கழுத்தில் எக்கச்சக்கமாய்ச் சங்கிலிகள் அணிந்திருந்தாள். கைகளில் பொடியும் தடியுமாய் ஏழெட்டு வளையல்கள் அணிந்திருந்தாள். பெரிய குங்குமப் பொட்டு அவளது சின்ன நெற்றிக்குப் பொருந்தவில்லை என்று சொல்லமுடியவில்லை. ஏனெனில் முகம் முறம் போல் அகலமா யிருந்தது. எடுப்பான மூக்கும், பெரிய கண்களுமாகப் பார்ப்பவரை அயர்த்துகிற தோற்றத்தைப் பார்வதி கொண்டிருந்தாள்.
“நமஸ்காரம்மா! இந்தாங்கோ!” என்றவாறு எழுந்து நின்று வணக்கம் தெரிவித்த பத்மநாபன் உடனெடுத்து வந்திருந்த பழப்பையை அங்கே இருந்த குட்டை மேசை மீது வைத்தார்.
“எதுக்கு இதெல்லாம் ?”
“இருக்கட்டும். பெரிய மனுஷாளைப் பாக்க வரப்போ, வெறுங்கையோட வரலாமா ? அதுக்காகத்தான்னு வெச்சுக்குங்களேன்!”
“நேத்து நீங்க சொன்னேளே- ரங்கநாத சாஸ்திரிகள் சொன்னார்னு- அவர்தானே ?”
“ஆமா. அவரேதான். சிலுக்குப்பட்டியிலேர்ந்து வந்திருக்கார்.. .. சொல்லுங்கோ பத்மநாபன் சார்! உங்களுக்கு ஒரே பொண்ணுன்னு சொன்னார் சாஸ்திரிகள்.”
“ஆமா, சார். நேக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டுந்தான். உங்க பணங்காசோட ஒப்பிட்டா, நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லே. இருந்தாலும், அதுக்குன்னு நான் ஏப்பை சாப்பையுமில்லே. ஜாதகம் திவ்யமாப் பொருந்தி யிருகுன்னு சாஸ்திரிகள் சொன்னார். எல்லாப் பொருத்தங்களும் நன்னா அமையறதுங்கிறது அபூர்வமாச்சே! அதான் நேக்கு ஒரு பேராசை- உங்களோட எப்படியாவது சம்பந்தம் பண்ணிண்டுடணும்னு- நான் அதுக்குத் தகுதி யில்லாதவனா யிருந்தாலும்!”
பார்வதி, “இதுல தகுதி என்ன வந்தது தகுதி ? நீங்க எந்த அளவுக்குச் செய்வேள்னு சொல்லுங்கோ. எங்களுக்குத் தோதுபட்டா மேற்கொண்டு பேசுவோம். இல்லேன்னா விட்டுட்டுப் போறோம். அவ்வளவுதானே ? .. ..ஏன்னா ?” என்றாள் இடைமறித்து.
“ஆமாமா.. .. நீங்க சொல்லுங்கோ, பத்மநாபன் சார்!”
“நீங்கதான் சொல்லணும். என்னென்ன எதிர்பார்க்கறேள்ங்கிறதை யெல்லாம் சொல்லுங்கோ. என்னோட சக்திக்கு உட்பட்டதா யிருந்தா மேற்கொண்டு பேசுவோம்.”
பார்வதியும் தேவராஜனும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“நீதான் சொல்லேன், பார்வதி!”
பார்வதி தொண்டையைக் கனைத்துக்கொண்டாள்: “வரதட்சிணை பத்தாயிரம் குடுத்துடுங்கோ. அம்பது சவரன் நகை போட்டுடுங்கோ. காதுக்கும் மூக்குக்கும் வைரம் போட்டுடுங்கோ. எங்க குடும்பத்துல வைரத்தோடுதான் போட்டுக்குறது! காசு மாலை கண்டிப்பா வேணும்.”
“அது.. .. நீங்க சொன்ன அம்பது பவுனுக்குள்ளதானே ?”
“ஆமாமா. அதுக்குள்ளதான். ஆனா, அம்பது சவரனுக்கும் மேல அதிகப்படியாக் காசுமாலை போட்டேள்னா நாங்க வேணாம்னா சொல்லப் போறோம் ? எல்லாத்தையும் வெச்சிண்டு உங்க பொண்ணுதானே ஆளப்போறா ? உங்களுக்கு இருக்கிறதும் ஒரே பொண்ணுதானே ?”
“ஆமாம்மா. ஒரே பொண்ணுதான். அதனாலதான், அவ கண் கலங்காம இருக்கக் கூடிய நல்ல எடமாப் பாத்துக் குடுக்கணும்னுட்டு ஆசை. நீங்க இப்ப சொன்னதை யெல்லாம் எங்களால செய்ய முடியும்மா.”
“மத்தப்படி, மேற்கொண்டு வழக்கமாச் செய்யற சீர்செனத்திகள்தான், உங்களுக்குத் தெரியாதா என்ன ? கல்யாணத்தை நாலு நாளுக்கு நன்னா, நிறக்கப் பண்ண்ணும். எங்க வழியில் சொந்தக்காரா ஜாஸ்தி.”
“எத்தனை பேர் வேணும்னாலும் வரட்டும்மா. நான் சிலுக்குபட்டி ஜனங்கள் முழுக்கவும் கூப்பிட்டுச் சாப்பாடு போடலாம்னு இருக்கேன். “
“ரொம்ப சந்தோஷம்.. நான் வரட்டுமா ? உள்ள கைக்காரியமா யிருக்கேன்.. .. .. நீங்க பேசி முடியுங்கோன்னா!”
“சரிம்மா, செய்யுங்கோ.. .. பொண்ணை என்னிக்குப் பாக்க வறேள் ?”
“அதெல்லாம் அவர் தீர்மானிப்பர். நான் வறேன்.”
பத்மநாபன் தலை யசைக்க, அவள் அசைந்து அசைந்து உள்ளே போனாள். நடையிலேயே ஒரு பணக்கார மிடுக்குத் தெரிந்தது. அவளை ஒரு நல்ல பெண்மணியாகப் பத்மநாபனால் கணிக்க முடியவில்லை. எனினும் அக்கம்பக்கத்தில் விசாரிக்கவேண்டும் என்று தமக்குள் எண்ணிக்கொண்டார். ‘வேறு யாரை விசாரிப்பது ? அந்த ரங்கநாத சாஸ்திரிகளைத்தான். அவர் பொய் கிய் சொல்லாமல் இருக்கவேண்டும். என்ன விசாரித்தாலும் கொண்டாலும், துர்க்காவுடைய தலையிலே பிரம்மா என்ன எழுதியிருக்கிறானோ, அதன்படிதான் நடக்கும். பார்க்கலாம். பையன் பட்டணத்தில் ஏதோ பிசினெஸ் பண்ணப் போறதாய்ச் சொன்னாரே சாஸ்திரிகள் ? அப்படி யானால், அவன் மெட்றாசுக்குப் போய்விடக்கூடும். பெரியவர்கள் இருவரும் இந்தக் கிராமத்தை விட்டு வெளியே போகமாட்டார்கள். அப்படி நேர்ந்தால், துர்க்கா அதிருஷ்டக்காரிதான். பக்கத்திலேயே இருந்தால்தானே மாமியர்-நாத்தனார் படுத்தல் எல்லாம் ?’
பத்மநாபன் தம் சிந்தனையிலிருந்து விடுபட்டுத் தொண்டையைக் கனைத்தபோது, தேவராஜன் அவரைப் பார்த்தார்.
“என்னிக்குப் பொண் பாக்க வறேள்னு அப்புறமாத் தகவல் சொல்லியனுப்புங்கோ. எம் பொண்ணைப் பத்தி நானே பீத்திக்கப்படாது. பொண்ணு பேரு துர்க்கா. அதான் ஜாதகத்துல பாத்திருப்பேளே ? ரதின்னா ரதியேதான்.”
“எம்பிள்ளையும் மன்மதன்தான்காணும்! என்னைக்கொண்டிருந்தா அப்படி இருக்க மாட்டான். என் சகதர்மிணியைக் கொண்டிருக்கான். அதான்!” என்று கூறிய தேவராஜன் சத்தமாய்ச் சிரித்தார்.
“சேச்சே! நீங்க மட்டுமென்ன ? லட்சணமாத்தான் இருக்கேள்!.. .. அப்ப நான் வரட்டுமா ? அவா கிட்ட சொல்லிடுங்கோ.”
“ஒரு நிமிஷம் உக்காருங்கோ. உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கணும்.”
தேவராஜன் இவ்வாறு சொன்னதைக் காட்டிலும், அப்படிச் சொன்னபோது அவர் குரலில் ஒலித்த தோரணை பத்மநாபனைத் திகைப்படையச் செய்தது. அவர் விழிகளை மலர்த்தி, ‘என்ன ?’ என்பது போல அவரை ஏறிட்டார்.
“சம்பந்தம் பண்ணிக்கிறவாளுக்கு மத்தியிலே எந்த ரகசியமும் இருக்கப்படாதில்லையா ? அதாவது நாம ஒருத்தருக்கொருத்தர் உண்மையா நடந்துக்கணுமில்லையா ?”
பத்மநாபன் எச்சில் விழுங்கினார். தேவராஜன் எதைப் பற்றிக் கேட்கப் போகிறார் என்பது உள்ளுணர்வாய் அவருக்குப் புலப்பட்டுவிட்டதால், அவர் விழிகளில் ஒரு கலக்கம் உடனே வந்து உட்கார்ந்துகொண்டது.
சட்டென்று தம் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “இப்ப நாம பேசப் போறது என் சகதர்மிணிக்குத் தெரிய வேண்டாம். தெரிஞ்சா அவ இந்தச் சம்பந்தமே வேண்டாம்னுடுவா. . .. .. “ என்ற தேவராஜன், “பார்வதி!.. நான் இப்பிடி கொஞ்சம் இவரோட வேளியில போயிட்டு ஒரு அரை மணியில வந்துட்றேன், ” என்றவாறு எழுந்துகொள்ள, பத்மநாபனும் எழுந்துகொண்டார்.
“சரின்னா! .. ..பெரியசாமி! ஏ, பெரியசாமி! அய்யா வெளியில போறராம். வாசக்கதவைச் சாத்தித் தாப்பாப் போடு.”
தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெரியசாமி ஓடி வந்தார்.
அடுத்த நிமிடம் இருவரும் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. எனினும் தேவராஜன் சிறிது நேரம் மவுனமாகவே நடந்தார்.
ஒரு நிமிடத்துக்குப் பிறகு, “சொல்லுங்கோ, சார். தயங்காதங்கோ. எதுவானாலும் பரவாயில்லே. மனசு விட்டுக் கேளுங்கோ. கடவுள் அனுக்கிரகம் இருந்து, நாம சம்பந்தமும் பண்ணிண்டதுக்கு அப்புறம் நமக்குள்ள மனஸ்தாபம் வரக்கூடாது. ஆரம்பத்துலேயே எதுவானாலும் பேசிப்பிட்றது நல்லது. அதனால தயங்காததங்கோ, சார்!” என்று பத்மநாபன் அவரைத் தூண்டினார்.
“என்னோட அபிப்பிராயமும் அதுவேதாங்காணும். அதனாலதான் அந்தப் பேச்சையே எடுத்தேன். எனக்கு எப்பவுமே பளிச்னு பேசித்தான் பழக்கம்.. .. உங்களுக்கு ஒரு அண்ணாவோ தம்பியோ இருந்தாராமே ? அவர் ஒரு சேரிப் பொண்ணை வெச்சிண்டிருந்தாராமே ? நிஜந்தானா ?”
“நிநிநி.. .. நிஜந்தான், சார்! நானே உங்ககிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். பொண்ணை நீங்க பாத்துப் பிடிச்சுப் போயிடுத்துன்னா, அதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு இருந்தேன். இப்பவே எதுக்கு அதைப் பத்திப் பேசணும்னுதான் சொல்லல்லே. மத்தப்படி அதை உங்க கிட்டேர்ந்து மறைக்கணும்கிற எண்ணமெல்லாம் லவலேசமும் இல்லே நேக்கு!”
“சரி, சொல்லும். என்ன விவகாரம் அது ?”
“அதான் நீங்களே சொல்லிட்டேளே ? அதுதான். இந்த ஊர்த் தெக்குத் தெருவிலதான் அந்தப் பொம்மனாட்டி இருக்கா. அவளுக்குப் பதிமூணோ பதிநாலோ வயசுல ஒர் போண்ணும் இருக்குன்னு கேள்வி. இது கொஞ்சம் ரசாபாசமான விஷயந்தான். ஆனா நீங்க பெரிசுபடுத்தாம எங்க சம்பந்தத்தை ஏத்துக்கணும்.”
“என் சகதர்மிணிக்குத் தெரியவந்தா உங்க சம்பந்தமே வேண்டாம்னுடுவா, ஓய்! அதனால, அவ காதுக்கு இதை எட்டவிடக்கூடாது. அரசல் புரசலா ஏதாவது தெரியவந்து அவளாவே அதைப்பத்திக் கேட்டாலும், ‘அப்படியெல்லாம் எதுவும் கிடையாது’ ன்னுதான் சொல்றதா யிருக்கேன்.. .. ஆனா, அதுக்குப் பர்த்தியா, வரதட்சிணையில ஒரு அஞ்சாயிரம் ஏத்திக் குடுத்துடும்!”
ஏற்கெனவே சொல்லப்பட்ட பத்தாயிரமே பத்மநாபனுக்குக் கையைக் கடிக்கிற பெருந்தொகைதான். சுமாரான பரப்பில் நாலு வீடுகள் வாங்கக்கூடிய தொகை. கையிருப்பு முழுவதையும் சுரண்டினால்தான் அதுவே ‘இழுத்துக்கொள் பறித்துக்கொள்’ என்கிற நிலையில் சாத்தியம் என்பதால் அவர் மேலும் ஐயாயிரம் கேட்டது அவருள் ஒரு மலைப்பைத் தோற்றுவித்தது. ‘ஊர் முழுக்கச் சாப்பாடு போட்டுப் புண்ணியம் தேடுகிற எண்ணத்தைக் கைவிட்டால், கொஞ்சம் சமாளிக்கலாம் என்று தோன்ற, பத்மநாபன், வலியத் தோற்றுவித்துகொண்ட உவகையுடன், “சரி. அப்படியே செய்துட்டாப் போச்சு. கொஞ்சம் சிரமந்தான். இருந்தாலும் என்ன பண்றது ?” என்றார்.
“இதை பத்திப் பேசணும்னுதான் வெளியிலெ கூட்டிண்டு வந்தேன்.”
“சரி, சார். அப்ப நான் வரட்டுமா ? .. .. பொண்பாக்க என்னிக்கி வரணும்கிறதை சாஸ்திரிகள் கிட்ட நான் சொல்லியனுப்பட்டுமா, இல்லே, நீங்களே சொல்லி அனுப்பறேளா ?”
“நானே சொல்லியனுப்பறேன்,” என்று தேவராஜன் கூற, பத்மநாபன் கைகூப்பி விடை பெற்றார்.
.. .. .. அந்த அடுக்களைக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. ஒன்று கூடத்துப் பக்கம் பார்த்த வாசல். அங்குதான் காமாட்சி படுத்துக்கொண்டிருந்தாள். இன்னொரு வாசல் கொல்லைப்பக்கத்திலிருந்து உள்ளே நுழைந்ததும் வருகிற பின்புறத் தாழ்வாரத்தில் திறக்கக்கூடிய பக்கவாட்டுக் கதவுடன் இருந்தது.
நாகலிங்கம் கட்டில் பக்கம் திரும்பியது அவள் இன்னும் நன்றாய்த் தூங்கிகொண்டிருக்கிறாளா என்பதைப் பார்க்கத்தான் என்று பங்கஜம் ஊகித்தாள். முன்ஜாக்கிரதையோடு அவன் அவளுக்குத் தூக்கமாத்திரை கொடுத்திருந்தாலும், அவள் தூக்கம் இன்னும் கலையவில்லை என்பதை மேலும் உறுதிப் படுத்திக்கொள்ளத்தான் அவன் கட்டிலின் பக்கம் கவனித்தான் என்பதும் அவளுக்கு புரிந்தது. அது மட்டுமின்றி, அவன் அடுக்களையை விட்டு அகன்று கூடத்துப் பக்கம் போகவும் செய்தான். காமாட்சியை அசைத்துப் பார்ப்பதற்காக இருக்கலாம் என்றும் அவளுக்குத் தோன்றியது. இந்த நல்வாய்ப்பை அவள் எதிர்பார்க்கத்தான் இல்லை.
அவன் கட்டிலின் புறமாய்த் தன் தலையைத் திருப்பியதுமே, அவள் தனது திடார்த் திட்டத்தில் பாதியைச் செயல்படுத்திவிட்டாள். அதாவது, அடுப்பில் செருகி யிருந்த- தகதகவென்று கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த- பெரிய கொள்ளிக்கட்டையை அவள் தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டாள். அவன் தனக்குப் பக்கத்தில் வரும் போது, கூடியவரை குறி பார்த்து, அதனால் அவன் கண்களுள் ஒன்றின் மேல் குத்திவிட வேண்டும் என்பதே அவள் திட்டம். அவன் அடுக்களை வாசலை விட்டு நகர்ந்ததோடல்லாமல், நான்கைந்து தப்படிகள் வைத்து நகர்ந்து கட்டில் பக்கம் போனதால், அவளுக்கு மேலும் அதிக அவகாசம் கிடைத்துவிட்டது.
அவன் திரும்பும் முன், பங்கஜம் கொள்ளிக்கட்டையுடன் பக்கவாட்டுக் கதவின் வழியாகக் கொல்லைப் பக்கத்தையடைந்து பின் பக்கமாய்த் தெருவுக்கு மிக விரைவாக ஓடினாள். தன்னைக் காத்துக்கொள்ளும் அதீதமான தன்னுணர்வுடன் இருந்த அவள் வேறு எதைப் பற்றிய உணர்வும் அற்றவளாய், அந்த நேரத்தில் இருந்ததால்- இன்னது செய்கிறாள் என்னும் பிரக்ஞை யிழந்தவளாக- எரிகிற கொள்ளிக்கட்டையை ஒரு கையில் பற்றிக்கொண்டு தெருவில் ஓடலானாள்.
காமாட்சியைத் தொட்டு அசைத்துப் பார்த்த பிறகு அடுக்களைக்குத் திரும்பிய நாகலிங்கம் அதனுள் பங்கஜம் இல்லை என்பதைக் கண்டான். சமையலறையின் பக்கவாட்டுக் கதவும் திறந்து கிடந்ததைக் கவனித்ததும் அவனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. அவன் ஓடோடிப் போய்க் கொல்லைப்பக்கத் தெருவில் பார்த்தான்.
கையில் பிடித்துக்கொண்டிருந்த கொள்ளிக் கட்டையுடன் பங்கஜம் ஓடிக்கொண்டிருந்தது தெரிந்ததும் அவனுக்குச் சப்பென்று ஆகியது. மனத்தில் சொல்ல முடியாத ஏமாற்றமும் சினமும் பொாங்கி எழுந்தன. அவன் பற்களைக் கடித்துக்கொண்டே கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே வந்தான்.
‘இனிமேல் அவள் வேலைக்கு வரமாட்டாள். எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்தைக் கோட்டைவிட்டுவிட்டேன்! என்ன அழகு அவள்தான்! என்ன செழுமை! உறவுகொண்டாலும் இது போன்றவளுடனல்லவா கொள்ளவேண்டும்! இந்தக் காமாட்சியும் இருக்கிறாளே – எலும்புக்கூட்டுக்குப் புடைவை கட்டினமாதிரி! எல்லாம் போயிற்று. பத்து ரூபாய் வேறு நஷ்டம்! நான் கண்ட பலன் அது மட்டுந்தான்!’
.. .. .. பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் நடை போட்டபடி ஆங்கிலப் புதினம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த பீ.ஏ. சாமிநாதன் கொள்ளிக்கட்டையும் கையுமாக ஒரு பெண் நாகலிங்கத்தின் வீட்டுக் கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு தெருவில் தலை தெறிக்கிறாப்போல் ஓடியதையும், சற்றுப் பொறுத்து நாகலிங்கம் அவசரமாய் ஓடிவந்து தெருப்பக்கம் பார்த்ததையும், இடுப்பில் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு தோள்கள் ஏறிச் சரியப் பெருமூச்சுவிட்டதையும், அப்போது அவன் முகத்தில் ததும்பிய ஆங்காரத்தையும் கவனித்து இன்னது நடந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொண்டான். ‘யார் அந்த அழகான பெண் ? விசாரிக்கவேண்டும்!’
பீ.ஏ. சாமிநாதன் புத்தகத்தை வைத்துவிட்டுக் கீழே இறங்கினான்.
—-
jothigirija@vsnl.net
- ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு
- கடிதம் – ஆங்கிலம்
- 365 நாட்கள் 365 முகாம்கள் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சம்ஸ்க்ருதபாரதி
- அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்
- கடிதம்
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் . . . (1)
- திருவிழாவுக்குப் போன ஒரு கதை
- போயஸ்கார்டன் கேட் அருகில்
- உண்மையின் ஊர்வலங்கள் – ஊர்வலம் 2
- நான் கண்ட சிஷெல்ஸ் – 12. மக்கள் வாழ்க்கையும் – கலாச்சாரமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் – ஆங்கிலம்
- ஒளியின் மழலைகள் புத்தக வெளியீடு – பிப்ரவரி 25,2006
- கடிதம்
- கடிதம் – ஆங்கிலம்
- வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்!
- கீதாஞ்சலி (63) வழிகாட்டித் துணைவன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும்
- புலம் பெயர் வாழ்வு (2)
- அடுத்த இரு வாரங்கள் – ஒரு முக்கிய அறிவிப்பு
- சூபியின் முகமூடி மட்டும்
- தமிழில் உலகப் புகழ் பெற்ற அறிமுக நூல்கள்
- அ.ந.க நினைவு தினக்கட்டுரை (14-02-2006): தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!
- சொற்புணர்ச்சி விளக்கச் சொற்கள் – 4
- அலறியின் கவிதைகள்
- விவேகானந்தர் பாறையும், ராணி மங்கம்மா கடிதமும், மைசூர் மூக்கறுப்புப்போரும்
- ரொமீலா தாப்பர் கூறும் கோவில் வரலாறை முன் வைத்து சில குறிப்புகள்
- விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து.
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-11) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – (இலக்கிய நாடகம் – நான்காம் பகுதி)
- சூது
- அதிசயம்!
- லுா ஸ்
- பட்ட மரம்
- மணிமேகலை பிரசுரம் – தமிழ் சேவையா ? வியாபார தந்திரமா ?
- கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்
- நல்ல அறிகுறி
- கவிதைகள்
- எனது கனவில் சிரித்தவர்கள்
- ஆதிக்கத்தின் நுண்ணரசியல்
- அலகிலா விளையாட்டு
- எனக்கொன்றும் பிடிக்கவில்லை
- பெரியபுராணம் — 78 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- எடின்பரோ குறிப்புகள் – 10
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!
- பழிவாங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 10