மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 9

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ரங்கநாத சாஸ்திரியின் பூசிமெழுகினாற்போன்ற பேச்சு தேவராஜனைப் புருவம் உயர்த்த வைத்தது.

“நீர் என்ன சொல்றீர், சாஸ்திரிகளே ? வரதட்சிணைப் பணத்தை ஏத்திட்டாப் பாராட்ட வேண்டாத கொறைன்னா, அதுக்கு என்ன அர்த்தம் ? அந்தப் பொண்ணுகிட்ட ஏதாவது ஒச்சம், ஊனம்னு இருக்கா, என்ன ?” என்றார், தம் விழிகள் விரிய.

“அதெல்லாமில்லே. பொண்ணு, கிளின்னா, கிளி. சும்மாச் சொல்லப்படாது. நல்ல நெறம். ரம்பை மாதிரி அழகு. நன்னாப் பாடுவ. சிலுக்குப்பட்டியில ஒவ்வொரு நவராத்திரியப்பவும் அவளைக்கூப்பிட்டுப் பாடச் சொல்லாத வீடே இல்லேன்னு சொல்லலாம். அப்ப்டி ஒரு கொரல். எல்லாம் கேள்வ்ி ஞானம்தான். அந்தப் பட்டிக்கட்டுல பாட்டுக் கத்துகுடுக்கிற பாகவதாளுக்கெல்லாம் எங்க போறது ?”

“சரி, சரி. விஷயத்தைப் பளிச்னு சொல்லும்.”

“அந்தப் பொண்ணுகிட்டவோ அவளைப் பெத்தவா கிட்டவோ எந்த ஒச்சமும் கிடையாது, ஊனமும் கிடையாது. நான் சொல்ல வந்தது அவா குடும்பத்துல இருக்கிற ஒரு கறை பத்தி. , .. ..”

“என்னது! கறையா ?”

“ஆமா. பத்மநாபனுக்கு அண்ணா ஒருத்தான் இருந்தான். கேசவன்னு பேரு. .. ..”

“அவருக்கு என்ன ?”

“அவனைத் தெரியுமா உமக்கு ?”

“ஓய், சாஸ்திரிகளே! நேக்கு யாரையும் தெரியாதுங்காணும். சட்டுப்புட்டுனு சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லும். அவருக்கும் இந்தச் சம்பந்தத்துக்கும் என்ன சம்பந்தம் ?”

“அவன் இப்ப உசிரோட இல்லே. தவறிப்போய்க் கொஞ்ச நாளாச்சு அவனுக்கு இந்த ஊர்ல ஒரு அருவருப்பான தொடர்பு இருக்கு.”

“இதே ஊர்லயா ? அதாவது, வத்தலப்பாளையத்துல ?”

“ஆமா.”

“அருவருப்பான தொடர்புன்னா ?”

“இந்த ஊர்த் தெக்குத் தெருவில ஒரு கொசவனோட பொண்ணை அவன் வெச்சிண்டிருந்தான். அரசல் புரசலா விஷயம் சிலுக்குப்பட்டியில இருக்கிற எல்லாருக்குமே தெரியும்னு சொல்லலாம்.”

“அவரோட அண்ணா கல்யாணம் ஆனவரா ?”

“இல்லே. அதான் வேடிக்கையே. சின்ன வயசுல அந்தக் குட்டியோட ஏற்பட்ட பழக்கம். கடேசி வரைக்கும் அந்தக் குட்டி வீட்டுக்குப் போய் வந்துண்டு இருந்தான். அவன் வேற யாரயும் கல்யாண்மே பண்ணிக்கல்லே. அவளோடவே ஆயுசு முழுக்கவும் வாழ்ந்து செத்தான்.”

“அது சரி. அந்தப் பத்மநாபன் தன் அண்ணாவோட போக்குவரத்து வெச்சிண்டிருந்தாரா ?”

“இல்லேல்லே. நம்ம அக்கிரகாரத்து வழக்கப்படி அவரோட பத்மநாபன் எந்தப் போக்குவரத்தும் வெசுக்கல்லே. தண்ணி தெளிச்சு விட்டுட்டார்னே சொல்லலாம். இருந்தாலும் ஒரு ‘சூத்திர’ப்பொண்ணோட அவரோட தமையன் சம்பந்தம் வெச்சுண்டிருந்தார்ங்கிறது மானக்கேடான விஷயம்தானே ? விஷயம் தெரிய வந்தா யாரும் அவரோட சம்பந்தம் வெச்சுக்க மாட்டாளோன்னோ ?”

“சரி, சரி. இந்த விஷயம் இப்ப சத்தியா உமக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்ச சங்கதியா யிருக்கட்டும். எம் பொண்டாட்டி காதுக்கெல்லாம் போகவேண்டாம். தெரிஞ்சுதா ? அது போகட்டும், அந்தப் பத்மநாப அய்யர் செல்வாக்கெல்லாம் எப்படி ? அதாவது என்ன தேறும் அவருக்கு ?”

“நம்மாத்தோட சம்பந்தம் வெச்சுக்கிற அளவுக்குப் பணங்காசு இருக்கு அவருக்கு. உங்க அளவுக்குச் சொத்து, சுகமில்லாட்டாலும், ச்ிலுக்குப்பட்டியில அவர்தான் பெரிய புள்ளி. நான் சொல்லித்தான் அவர் இங்க வரார்.”

‘அப்ப. தொடையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிட்றதுல நீர் தேர்ந்த ஆசாமின்னு சொல்லும்!”

“ஹிஹி! .. .. அதெல்லாம் ஒண்ணுமில்லே சிவகுருவோட ஜாதகத்தைக் குடுத்தவன் நான்தான்.. நாளைக்கு நான் எதையோ மறைச்சுட்டதா நீர் நினைக்கப்படாதோன்னோ ? அதுக்காகத்தான் உண்மையைச் சொல்லிவைக்கிறேன்.”

“ரொம்ப சரி. ஆனா, இதெல்லம் நேக்கு ஒரு பொருட்டே இல்லே. என்னோட சகதர்மிணிதான் ஏதானும் சொல்லுவா. அதனாலதான் அவளுக்குத் தெரிய வேண்டாங்கறேன். .. .. நிறையச் செய்யக் கூடியவர்தானே ?”

“செய்வா. இல்லென்னா உங்க பிள்ளை ஜாதகத்தை நான் அவாளுக்கு சிபாரிசு செய்வேனா ? அவர்தான் சம்பந்த்ம் பேச வருவாரா ? ஏன்னா, உங்க அந்தஸ்து பத்தி நான் அவருக்கு நன்னாவே சொல்லியிருக்கேன். உங்களுக்கு பெரிய மனசு. அதான், இவ்வளவு பெரிய கறையைக் கொறையா நினைக்காம பெருந்தன்மையா இருக்க நினைக்கிறேள்.”

“அவரோட அண்ணா பண்ணின தப்புக்கு -அது தப்புன்னே வெச்சுண்டாலும்- அவரெப்படிப் பொறுப்பாவார், சாஸ்திரிகளே! என்னைப் பொறுத்தவரை, அந்தப் பத்மநாப அய்யரே தப்புப் பண்ணினவரா யிருந்தாலும் கூட, அதுக்காக நான் அவரோட பொண்ணை வேண்டாம்னு சொல்ல மாட்டேன். மகாத்மா காந்தி நம்ம கோவில்களை யெல்லாம் தீண்டத்தகாதவாளுக்குத் தொறந்து விடணும்னு சொல்லிண்டிருக்கார். அப்படி இருக்கிறச்சே இதைப் போய்ப் பெரிசுபடுத்தலாமா, ஓய் ?”

‘மகாத்மா காந்தி வரதட்சிணை வாங்கறது அசிங்கம்னு கூடத்தான் பிரசாரம் பண்ணிண்டிருக்கார்! அதுக்காக, இவர் வாங்கப்போறதில்லையா என்ன ?.. .. அப்படின்னா, இவர் வரதட்சிணைன்னு ஒரு தொகையைக் கேட்டு வாங்கமாட்டாரோ ? அப்ப, என்னோட பொண்ணையே இங்க தள்ளி விடலாம் போல இருக்கே ? .. .. ஆனா, நிறையச் செய்வாரான்னு விசாரிக்கிறாரே! சரி. எதுக்கும் நைஸாப் பேச்சுக் குடுத்துப் பாக்கறேன். .. ..’

‘ஹி..ஹி..ஹி! நீர் உண்மையிலேயே பெரிய மனுஷர்தான்காணும்! நான் கூட நேத்து சுதேசமித்திரன்ல பாத்தேன்.. .. நீங்க தப்பா எடுத்துக்கல்லேன்னா.. ..”

“சொல்லும்.”

“காந்தி வந்து.. வந்து.. வரதட்சிணை யெல்லாம் கூட வாங்கப்படாதுன்னு பிரசாரம் பண்ணிண்டிருக்கார், இல்லையா ? அப்படின்னா, நீங்க வரதட்சிணை வாங்கறதா இல்லியா ?.. .. ஒரு ‘இது’க்குத்தான் கேக்கறேன். நீங்க தப்பா எடுத்துக்கப்படாதுன்னு அதான் மொதல்லயே கேட்டுண்டுட்டேன்.”

தேவராஜனின் முகம் சிறுத்துவிட்டதைக் கவனித்த ரங்கநாத சாஸ்திரிகளுக்கு இலேசாய் அச்சம் ஏர்பட்டது. மிரட்சியோடு அவரை ஏறிட்டார்.

“இல்லேங்காணும். அந்த அளவுக்கெல்லாம் போக முடியாது. நடைமுறைன்னு ஒண்ணு இருக்கோல்லியோ ? எங்க அந்தஸ்துக்கு ஏத்தபடிதான் நாங்களும் நடந்துக்க முடியும். இல்லேன்னா, இளிச்சவாய்னு நெனைச்சு எங்க தலையிலெ மொளகா யரைச்சுடுவா! காந்தி சொல்றார்ங்கிறதுக்காக அன்னாடங்காய்ச்சிகளோ டெல்லாம் சம்பந்தம் வெச்சுக்க முடியுமா என்ன!”

ரங்கநாத சாஸ்திரிகளின் உற்சாகம் அது தோன்றிய விதமாகவே கணத்துள் மாயமாய் மறைந்தது. “ஆமாமா. நியாயந்தான். காந்திக்கு என்ன! போகாத ஊருக்கு வழி சொல்ற கதையா என்னத்தையானும் பெனாத்திண்டு கிடப்பார்! அவர் சொல்ற எல்லாத்தையும் நாம கேக்கணும்னுட்டு ஒண்ணுமில்லே. தாலியறுத்த பொண்ணுகளுக் கெல்லாம் மறுகல்யாணம் பண்ணிவைக்கணும் னெல்லாம் கண்டமேனிக்குப் பிரசாரம் பண்ணிண்டிருக்கார். சொல்றதுக்கே நாக்குக் கூசறது. கேக்கறதுக்கும் நாராசமா யிருக்கு! இந்த தேசத்தை உருப்படி யில்லாம பண்ற்துக்கோசரந்தான் வேலை மெனக்கெட்டு அந்த மகானுபாவன் தென்னாப்ரிக்காலேர்ந்து கெளம்பி வந்திருக்கார்னு தோண்றது. எல்லாம் நம்ம தேசத்தோட துர்ப்பாக்கியம்! கலி முத்திண்டிருக்கோன்னோ ? இனிமே அது மாதிரியான கண்ராவிகள்ளாம் நிறையவே நடக்கும்!”

“இத பாரும், சாஸ்திரிகளே. அவர் மகாத்மா. அவரைப் பத்தி என் காதுபட தூஷணையா எதுவும் சொல்லாதேயும். என்னால தாங்கிக்க முடியாது. அவர் சொல்றதெல்லாம் நியாயம்தான். ஆனா எல்லாத்தையும் கொண்டுசெலுத்தறது இப்போைதைகு சாத்தியம் இல்லே. மெதுவா, பொறுமையா, ஒண்ணொண்ணாத்தான் செயலுக்குக் கொண்டுவரணும். வரதட்சிணை வேண்டாம்னு நான் சொல்லிடுவேன். ஆனா என் சகதர்மிணி கேப்பாளாங்காணும் ? அதுக்கு அப்புறம் குடும்பத்துல நிம்மதி இருக்குமா ? தவிர, எம் பிள்ளை பட்ணத்துக்குப் போய் ஏதோ பெரிசா பிசினஸ் பண்ணணும்னு சொல்லிண்டிருக்கான். காந்தி சொல்றார்ங்கிறதுக்காக ஒரு பிச்சைக்காரக் குடும்பத்தோட நான் சம்பந்தம் பண்ணிக்க முடியுமா ?’

“கரெக்டு, கரெக்டு.. .. ..”

‘பொண்ணாத்துக்காரா கிட்ட ஆயிரக் கணக்குல பணம் பிடுங்கித்தான் இவன் பிள்ளை பிசினெஸ் பண்ணணுமாக்கும்! அதான் இவன்கிட்டவே கொட்டிக்கெடக்கே! மனுஷாளுக்குப் பேராசை! தனக்கு வசதியாயிருக்கிறதை மட்டும் காந்தி சொல்றார்ங்கிறதுக்காக ஏத்துப்பார் போலேருக்கு! ஜாதியில நம்பிக்கை இல்லாதவர் மாதிரி நடிச்சுண்டு, தீண்டத்தகாதவாளை யெல்லாம் கோவிலுக்குள்ள விடணும்னு சொல்ற மனுஷன் பேசாம ஒரு சேரியிலேர்ந்து மாட்டுப்பொண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே! எல்லாருமே பெரிய ஆள்கள்தான்.. .. ..’

“லெளகீக விஷயங்கள் பத்திச் சொன்னீர்தானே ?”

“நிறையச் செய்ய வேண்டியிருக்கும்னு ஒரு கோடி காமிச்சேன். அவர் நேர்ல வரச்சே நீங்களே விவரமாப் பேசிடுங்கோ!”

“சரி. நானே சொல்லிக்கிறேன்.”

“அப்ப, நான் கெளம்பட்டுமா ?’’

“ஒரு நிமிஷம் இருங்கோ!”

தேவராஜன் தாமே எழுந்து உள்ளே போய் ஒரு தம்ளரில் மோர் எடுத்துவந்து சாஸ்திரிகளிடம் கொடுத்தார். அதைக் குடித்துவிட்டு மலர்ச்சியாய்ப் புன்னகை செய்த ரங்கநாத சாஸ்திரிகள், “இந்த வெய்யிலுக்கு மோர்தான் எவ்வளவு எதமாயிருக்கு! ரொம்ப தேங்க்ஸ். .. .. சரி. நான் கெளம்பறேன்,” என்றவாறு கையை ஊன்றிக்கொண்டு எழுந்த அவரைக் கையமர்த்திய தேவராஜன் தமது இடுப்பின் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவரிடம் நீட்டினார்.

சாஸ்திரிகள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டாாலும், அவரது முகத்தில் சிரிப்பில்லை என்பதைக் கவனித்த தேவராஜன், ‘இந்தாரும். இதையும் வெச்சுக்கும், கல்யாணம் முடியட்டும். அப்புறம் இன்னும் தறேன்.. .. ..” என்று இன்னொரு பத்து ரூபாய்த் தாளை நீட்டினார்.

அதையும் பெற்றுக் கொண்டபின்னர் சாஸ்திரிகளின் முகத்தில் இலேசாய்ப் புன்சிரிப்புத் தோன்றியது. “எத்தனை நாளத்துப் பழக்கம் நமக்குள்ள ? பணமா பெரிசு ? சரி, தேவராஜய்யர். நான் அப்புற்மா ஒரு நாள் வந்து பாக்கறேன். என்ன ?” என்றவாறு கிளம்பிச் சென்றார்.

.. .. .. கண்களுக்குத் தெரிந்த வரையில் நாகலிங்கத்தின் நடமாட்டம் தெரியாததால், அவன் எங்கேனும் வெளியே போயிருக்கக்கூடும் என்றுதான் பங்கஜம் நினைத்தாள். எனினும் அடுக்களைக்குள் முழுவதுமாக நுழைவதற்கு முன்னால் உள்ளே எட்டிப் பார்த்துப் பார்வையால் நன்கு துழாவினாள். பாயும் புலியாய் அவன் கதவின் மூலையில் பதுங்கி யிருப்பானோ என்னும் ஐயத்தில் கதவை இலேசாய் அசைத்துப் பார்த்து அவன் அங்கு இல்லை என்பது தெரிந்ததும், ‘அம்மாடி!’ என்று வாய்விட்டே முனகிய பின்னர் உள்ளே போய் அடுப்பைப் பற்ற வைத்தாள்.

காமாட்சி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது அவளுள் ஒரு வியப்பை ஏற்படுத்தியது. காப்பிப்பொடி போட்டு வடிகட்டுகிற வெள்ளைத் துணி அதற்குரிய சாயத்துடன் அகப்பைத் தூக்கியில் தொங்கிக்கொண்டிருந்தது. அதை எடுத்து நீவிய பின், உயரமான பாத்திரத்தில் அதைச் சற்றே செருக்ினாள். அதன் குழிவில் காப்பிப் பொடியைப் போட்டபின் அடுக்களையைவிட்டு வெளியே வந்து சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள்.

எந்த அடிப்படையும் இன்றி அவள் நெஞ்சுக்கூட்டுக்குள் இதயம் தடதடத்தது. வீட்டில் நிலவிய அந்த அமைதி நல்லதுக்கில்லை என்று எதனாலோ அவளுக்குத் தோன்றியது. அவளது பீதி விநாடிக்கு விநாடி அதிகரித்துக்கொண்டே போயிற்று.

‘பட்டினி கிடந்து செத்தாலும் சாகலாமே தவிர, இது மாதிரி வெறி பிடித்த ஆண்பிள்ளை இருக்கிற வீட்டில் வேலைக்கு வந்துவிட்டு, சதா சர்வதா மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டது மாதிரி கிலியடித்துப் போய் ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி நகர்த்திக்கொண்டிருக்க முடியாது. பெண்டாட்டிக்காரி படுத்த படுக்கையாக இல்லாது நன்றாய் நடமாடிக்கொண்டிருக்கிற வீடாய்ப் பார்த்துத்தான் வேலையில் அமர வேண்டும்.. .. ஆனால், வீட்டுப் பெண்பிள்ளை ஆரோக்கியமாக நடமாடிக்கொண்டிருக்கிற வீட்டில் சமையல்காரியை ஏன் வைக்கப் போகிறார்கள் ? .. .. அந்தக் கடன்காரன் கொடுத்த முன்பணத்தைக் கழித்துவிட்டு வேலையிலிருந்து நின்றுவிட வேண்டும். இது போல் தினமும் என்னால் செத்து பிழைத்துக்கொண்டிருக்க முடியாது!.. .. ‘

கூடத்துக் கெடியாரம் ‘டங் டங்’ என்று ஏழு முறை அடித்த மணியோசை அவளது கிலியை மேலும் அதிகப்படுத்தியது.

வால்கிண்ணத்தில் வைத்திருந்த தண்ணீர் இன்னும் நன்றாய்க் கொதிக்கத் தொடங்கவில்லை. இன்னும் சில விநாடிகளில் தளதளவென்று கொதிக்க ஆரம்பித்துவிடும். அவள் விறகுகளைச் சரியாக அடுக்கித் தீயைப் பெரிதாக எரியவிட முற்பட்ட கணத்தில், பின்னால் காலடியோசை கேட்டது. அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

அடுக்களை வாயிலை மறைத்துக்கொண்டு நாகலிங்கம் நின்றுகொண்டிருந்தான். ‘கடைசிக் காலடியோசை மட்டுமே கேட்டது என்றால் அவன் கவனமாய்ப் பூனை போல் நடந்து வந்திருக்கிறான் என்றுதான் அர்த்தம். இவனது நோக்கமும் கெட்டதுதான் என்றும் அர்த்தம். அயல் பொம்மனாட்டி வேலை செய்கிற போது அடுக்களை வாயில் முழுக்கவும் அடைத்துக்கொண்டு ஒருவன் நிற்கிறான் என்றால் அவன் நல்லவன் அல்லன் என்றும்தான் அர்த்தம். கண்ணியமான ஆண்பிள்ளை எவனும் அப்படிச் செய்யமாட்டான். அதிலும் முகத்தில் எதற்கு இப்படி ஒரு சிரிப்பு ? கண்களில் விஷமும் விஷமமும் சொட்டிக்கொண்டிருக்கின்றன. பார்வை அலைகிற தினுசில் துளியும் கண்ணியமே இல்லை. இந்த அதிகாலை நேரத்தில் இப்படி இளித்துகொண்டு வந்து நிற்கிறான் என்றால், அதற்கு இவனுடைய வெட்கங்கெட்ட தனம் மட்டுமே காரணமாயிருக்க முடியாது.. .. ..’

இப்படி எல்லாம் கணத்துக்கும் குறைவான நேரத்துள் யோசித்து முடித்த பங்கஜத்தின் பார்வை வாசலை அடைத்துக்கொண்டு அவன் நின்ற போதிலும், அவனது தோளுக்கு உயரே இருந்த இடுக்கின் வழியே வாசற்பக்கம் சென்றது. வாசல்கதவு சாத்தித்தான் இருந்தது. அவள் நுழைந்த போதும் அது சாத்தித்தான் இருந்தது. ஆனால் அதைத் தாழிடாமல் வெறுமே சாத்திவிட்டுத்தான் உள்ளே வந்தாள். அது அப்படியே இருந்ததா அல்லது அவனால் தாழிடப்பட்டுவிட்டதா என்பதை அவளால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.

“என்ன பாக்கறே ? வாசல் கதவை நன்னாத் தாப்பாப் போட்டுட்டேன்.!”

மிக மெதுவாய் அவன் இப்படிச் சொன்ன சொற்களில் ததும்பிய விரசம் அவளது முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்தது. அவளது தொண்டைக் குமிழ் ஏறி இறங்கியது. நா வறண்டது. கண்களில் பாம்பை மிக அருகில் பார்த்தாற்போன்ற பீதி வந்து அமர்ந்துகொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இந்தக் காமாட்ச ி ஏன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாள் ?’ எனும் வியப்பு அதிகமாயிருந்தது. ‘செத்துக் கித்துப் போய் விட்டாளா என்ன ? இல்லாவிட்டால், இவ்வளவு தைரியமாக இந்தப் பொறுக்கி ராஸ்கல் இங்கே வந்து வழியை அடைத்துக்கொண்டும் பல்லைக் காட்டிக்கொண்டும் நிற்பானா ?’

முந்திய நாள் அவள் வேலைக்கு வந்த போது குளித்து முடித்துவிட்டிருந்த காமாட்சி இன்று தூங்கிக்கொண்டிருந்தது இயல்பானதாய் அவளுக்குத் தெரியவில்லை. ‘இவன் என்னமோ பண்ணி யிருக்கிறான் அவளை! .. .. .. ஆனால் திடாரென்று முளைத்தவன் மாதிரி வந்து நிற்கும் இவன் இது வரையில் எங்கே பதுங்கியிருந்தான் ?’

“பயப்படாதே, பங்கஜம்! நான் முரடன் இல்லே. நீ முழு மனசோட இணங்கினா ஒரு பூவைக் கையாள்ற மாதிரி உன்னைக் கையாளுவேன். இத்தனை நேரமும் இவன் எங்கெ இருந்தான்னு தானே யோசிக்கிறே ? மொட்டை மாடியில இருந்தேன். நீ வந்தது தெரிஞ்சதும் கீழே எறங்கி வந்தேன். வா. மாடியில எனக்கு ஒரு ரூம் இருக்கு. அங்க போயிடலாம்.. .. காமாட்சி இப்போதைக்கு முழிச்சுக்க மாட்டா. அவளுக்கும் கொழந்தைக்கும் தூக்கமருந்து குடுத்திருக்கேன். அதனால பயப்படாம வா. புருஷனை விட்டு வந்து எத்தானை நாளாச்சு! ஏங்கிப் போயிருப்பேல்லே ?”

பங்கஜத்தின் அருவருப்பு, ஆத்திரம் ஆகிய உணர்ச்சிகள் அவற்றின் உச்சத்துக்குப் போயின. ‘அடப்பாவி! நாசகாரா! நீ நன்னாருப்பியா ? இப்ப நான் குய்யோ முறையோன்னு கத்திக் கூச்சல் போட்டு ஊரைக் கூட்டினா உன் கதி என்ன வாகும் ?’- இப்படி யெல்லாம் கத்த நினைத்தாலும் பங்கஜத்தால் தன் உதடுகளைக்கூடப் பிரிக்க முடியவில்லை.

பங்கஜம் இயல்பாய்த் துணிச்சல்காரி யல்லள்தான். அவள் வளர்க்கப்பட்டதும் ஒரு கோழையாகத்தான். ஆனால் அவளது அச்சத்தை மீறி ஒரு திடார்த் துணிச்சல் அந்தக் கணத்தில் அவளை உடனே ஆட்கொண்டது. ‘இவன் மகா முரடன். ஆஜானுபாகு. படு பொறுக்கி. இவனோடு போராடித் தப்புவது என்பது முடியாமல் போகலாம். எனவே தந்திரமாக ஏதாவது செய்துதான் இவனை வெல்லவேண்டும்.. ..’

வெட்கப் படுபவள் போல் தன் இமைகளைச் சற்றே தாழ்த்திய பின், மறுபடி விழிகளை மலர்த்திக்கொண்டு, “மாடியில எல்லாம் வேண்டாம். யார் கண்ணுலயாவது பட்டுடும்!” என்றாள்.

அவன் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி காமாட்சியின் படுக்கைப் பக்கம் பார்க்கத் தன் தலையைத் திருப்பிய கணத்தில், தனது திடார்த் திட்டத்தைப் பங்கஜம் செயல்படுத்தினாள். கண நேரமே யென்றாலும், மிக விரைவாய் இயங்கியதால், அதை அவளால் செயல்படுத்த முடிந்தது. அவளுக்கே தன்னை எண்ணி வியப்பாக இருந்தது.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts