சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-3)

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘ஒரு மனிதன் உன்னதக் கருத்தை உரைத்தால், அவன் உயர்ந்த மனிதன். ஆனால் ஒரு மாது அவ்விதம் சிறந்ததோர் கருத்தை மொழிந்தால், அவள் பொட்டைநாய் என்று தூற்றப்படுவாள். ‘

பியடிரிஸ் டேவிஸ் [Beatrice (Bette) Davis (1908-1989)]

‘ஆடவர் அனைவரும் ஒருவகையில் பலாத்காரம் செய்பவரே! அப்படித்தான் அவர் தம்மைக் காட்டிக் கொள்கிறார்! அவரது கண்களால், தமது சட்ட திட்டங்களால், ஆதிக்க வெறியால், ஆடவ நெறியால் நம்மைக் கட்டுப்படுத்தி என்றும் வலுத்தாக்கல் செய்து கொண்டுதான் வருகிறார். ‘

மரிலின் பிரெஞ்ச், நாவல் எழுத்தாளி [Marilyn French]

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.

ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்கி, ஆங்கிலக் காவலர் எரிப்புப் பீடத்துக்கு ஜோனை இழுத்துச் செல்கிறார்கள். ஆணாதிக்க உலகம் 19 வயது (மே மாதம் 30, 1431) அபலைப் பெண்ணை உயிரோடு எரித்து வேடிக்கை பார்க்கிறது!

ஏழாம் காட்சி (பாகம்-3)

[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]

காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)

இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]

2. சகோதரர் மார்டின் லாட்வெனு

3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]

4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]

அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். யாரென்று அறிந்த பின் சார்லஸ் லாட்வெனுவுடன் உரையாடுகிறார். அப்போது ஜோன் ஆஃப் ஆர்க்கின் அசரீரிக் குரல் கேட்டு, சார்லஸ் மன்னர் திகைப் படைகிறார். அவளுடன் உரையாடிக் கொண்டியுள்ள போது, காலம் சென்ற கெளஸான் பாதிரியின் குரலும் பிறகு கேட்கிறது.

ஜோன் அசரீரிக் குரல்: மன்னரே! வெற்றி பெற்ற உங்களையும் கம்பத்தில் கட்டி நெருப்பில் எரித்தார்களா ? நான் வெற்றி பெற்றதற்கு அப்பாவி என்னைப் பிடித்துக் கம்பத்தில் கட்டி எரித்தார்கள்! உங்களை ஏன் எரிக்க வில்லை ?

சார்லஸ்: [சிரிப்பு அடங்கிக் கவனமாக] போப்பாண்டவரை விட்டு நீ எல்லாவற்றையும் உன் கடவுள் பெயரில் செய்தது மாபெரும் தவறு! ஆணுடையில் திரிந்தாலும், நீ பெண்ணாக இருந்தது அடுத்த தவறு! நான் ஆண் மகன்! ஓர் ஆண்மகன் செய்ய வேண்டியதை நான் செய்தேன்! ஆயிரக் கணக்கான ஆண்டுகள், ஆண் வர்க்கம் செய்ததைத்தான் நான் செய்து முடித்தேன். அதில் ஒன்றும் வியப்பில்லை! ஆனால் ஆணாதிக்க உலகில் பெண்ணுருவில் பிறந்த ஆண்மங்கை நீ! ஆண் புரிய வேண்டிய ஒன்றைப் பெண் செய்வது, ஆடவருக்குப் பிடிக்காது! ஆண்படை வீரர்களைத் தளபதியாக ஓர் பெண் நடத்திச் செல்வது வரலாற்றில் காணாத நிகழ்ச்சி! ஆதலால் ஆண்வர்க்கம் உன்னை ஒழித்துக் கட்ட வலை விரித்தது! தேவாலயத் திருவாளரைப் புறக்கணித்துப் போப்பாண்டவரை வணங்காமல் நீ தனியாக உன் கடவுள்களைத் தொழுதாய்! அதனால் நிரந்தர ஆலய விரோதத்தைச் சேமித்துக் கொண்டாய்!

ஜோன் குரல்: உண்மைதான்! கடவுள் ஆணைப்படி செய்ததால், நான் ஆலயப் பகைமையைத் தேடிக் கொண்டேன். போப்பாண்டவருக்கு மண்டி யிடாததால், மதத் துரோகியாகப் பழி சுமத்தப் பட்டேன். நான் எரிக்கப் பட்டதற்கு மெய்யான காரணங்கள் இரண்டு: நான் ஆணுடை அணிந்து உலவியது முதற் காரணம். போர்த் தளபதியாகப் போரை முன்னின்று நடத்தி அடுத்தடுத்து வெற்றி வெற்றது மற்றொரு காரணம்.

சார்லஸ்: ஆயினும் உனக்கு நான் மிகவும் கடமைப் பட்டவன். சாகும் வரை உனக்கு நன்றி சொல்ல வேண்டியவன். என்னை நீ தூண்டா விட்டால் நான் வாளெடுத்துப் போரிட்டிருக்க மாட்டேன். என் நெஞ்சில் நீ நின்று கட்டளை யிடாவிட்டால், நான் என்றும் மண்புழுவாய் பூமிக்குள் பதுங்கிக் கிடப்பேன்! உண்பதும் உறங்குவதும் தவிர வேறு எதிலும் என் மனம் ஈடு பட்டிருக்காது. உன்னைப் பின்பற்றி இப்போது நான் வெற்றிகள் பலவற்றைச் சூடிய வேந்தன். நான் வீரனாக மாறினேன், நீ வீராங்கனை ஆனதால்!

ஜோன் குரல்: உங்களை நான் மாவீரனாக ஆக்கியது உண்மைதானா ?

சார்லஸ்: மூடிப் போன என் கண்களின் இமைகளைத் திறந்தவள் நீ! அதில் சிறிதேனும் ஐயமில்லை! ஆயிரமாயிரம் பிரெஞ்ச் படை வீரர்களின் நெஞ்சில் கனலை எழுப்பி, பிரான்சின் முதல் புரட்சி நங்கை என்று வரலாற்றில் இடம் பெற்றவள் நீ! ஆனால் நீ என்னை விட்டு நீங்கிய பிறகுதான், என் நெஞ்சில் தீக்கனல் எழுந்தது! ஆயினும் ஆக்னெஸ் அக்கனலை அணைக்க முயன்றாள்!

ஜோன் குரல்: ஆக்னெஸ்! அது யார் ? ஆக்னெஸ்! ஆணா ? பெண்ணா ?

சார்லஸ்: அவள் ஒரு மாது! ஆக்னெஸ் ஸோரல் என்பது அவளின் முழுப் பெயர்! என்னைக் கவர்ந்த பெண்ணழகி அவள்! அவள் மீது எனக்குத் தீராக் காதல்! அடங்காக் காதல்! பல இரவுகள் என்னரும் தூக்கத்தைக் கலைத்தவள் அவள்! ஆனால் நான் தூங்கியதும் என் கனவில் வருவாள்! அடிக்கடிக் கனவுகளில் வந்து, பகல் பொழுதிலும் என்னைப் பேயாய்ப் படுத்தினாள்! ஆனால் நீ ஒரு நாளாவது என் கனவில் வந்ததில்லை!

ஜோன் குரல்: [ஏளனச் சிரிப்புடன்] காரணம் தெரியுமா ? ஒருபோதும் நீங்கள் என்னை நேசித்த தில்லை! நான்தான் உங்களை நேசித்தேன்! நீங்கள் மீண்டும்

எங்கள் மன்னனாக முடி சூட வேண்டும் என்று அப்போது கனவு கண்டவள் நான், நீங்கள் மண் புழுவாகத் தூங்கிய போது! மண் புழுக்கள் கனவு காண்ப தில்லை! மாடப் புறாக்கள்தான் கனவு வானில் பறப்பவை! கனவுகள் கண்டு நான் கனவுகளை வெற்றியாக மாற்றினேன்! ஆமாம், ஆக்னெஸ் என்னைப் போல் இறந்து போய் விட்டாளா ?

சார்லஸ் மன்னன்: [மனமுடைந்து வருத்தமுடன்] ஆமாம் ஜோன்! என் அருமைக் காதலி மரித்து விட்டாள். அவள் உன்னைப் போல் இல்லை! தெரியுமா ? அவள் மிக்க பேரழகி! ஆடவரை மயக்கும் அழிலரசி அவள்! நீ அவளைப் போல இல்லை!

ஜோன் குரல்: [குலுங்கிச் சிரித்துக் கொண்டு] அடடா! என்ன பேச்சு இது ? நான் அழகுப் போட்டிக்கு வந்தேனா ? ஆணுடையில் என்னை மூடிக் கொண்ட நான், என்றைக்கு அழகைப் பற்றி நினைக்க எனக்கு நேரம் வந்தது! நான் என்றும் அழகைப் பற்றிக் கவலைப் பட்டவள் இல்லை! அரண்மனை அரசிகளுக்கு அழகு தேவை! பட்டிக் காட்டுப் பாவையான எனக்கு அழகு ஆபத்து அளிக்கும்! அழகு அவளுக்கு அழிவைத் தரும். ஆதலால்தான் நான் படைகள் மத்தியில் பாதுகாப்புக்காக ஆணுடையில் ஒளிந்து கொண்டேன்! ஆனால் என் மூளை எப்போதும் மேல் நோக்கியே சிந்தனையில் இருந்தது. கடவுளின் மகத்துவம் என் மீது படிந்தது! ஆகவே ஆணோ அல்லது பெண்ணோ நான் யாராக இருந்தாலும், மண் புழுவாய் நெளிந்த உங்களை நான் உலுக்கி எழுப்பி மானிட வீரனாக்கி யிருப்பேன்! சொல்லுங்கள் இப்போது! என்னவாயிற்று நான் எரிக்கப் பட்டதும் ?

சார்லஸ்: உன் அன்னையும், சகோதர்களும் வழக்கு மன்றத்தைக் குற்றம் சாட்டி வழக்குத் தொடுத்தனர். மூடிவிட்ட உன் வழக்கை மீண்டும் விவாதிக்க முயற்சி எடுத்தனர். வழக்கு மன்றம் அவரது விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு விசாரணை செய்தது! முடிவு: உனக்குத் தண்டனை யிட்ட வழக்கு மன்ற நீதிபதிகள் அனைவரும் கைப்பணம் வாங்கிக் கொண்டு உன்னைத் தீயிலிட்டு வாட்ட ஆணை யிட்டனர் என்று தெரிகிறது! அத்தனை பேரும் அயோக்கியர் என்பது அறிய வந்தது. அத்தனை பேரும் பைபிளைத் தொப்பிக்குள்ளே வைத்துக் கொண்டு, உன்னைப் பொய்க்குற்றம் சாட்டியதாகக் காணப் படுகிறது.

ஜோன் குரல்: தேவாலயத் திருச்சபைத் தூதர் அப்படிச் செய்தார் என்பதை என்னால் நம்ப முடிய வில்லை. இப்போது எங்கிருக்கிறார்கள் அந்த நீதிபதிகள் ?

சார்லஸ்: அவர்கள் யாவரும் செத்து விட்டார்! இப்போது உயிரோடு நரகத்தில் மண்டி யிட்டு உன்னைத் துதித்துக் கொண்டு நிற்பார்கள்! ஆமாம், நீ இப்போது எங்கிருக்கிறாய் ? நரகத்தில் நீ விழுவாய் என்று திருச்சபைத் தேவர்கள் கனவு கண்டார்! என்னவாயிற்று ? அவர்கள் நரகத்திலும், நீ சொர்க்கத்திலும் இருப்பது இக்கால வரலாறு!

ஜோன் குரல்: எனக்குச் சொர்க்கபுரி பிடிக்க வில்லை! இப்போது நான் விடுதலையான பிரான்ஸின் சூடான காற்றை நுகர வந்திருக்கிறேன்! அத்துடன் என் நிழலைப் பின்பற்றிய உங்களைப் பாராட்டிச் செல்லவும் வந்திருக்கிறேன். என்னைப் பழி சுமத்தித் தண்டித்த நீதிபதிகளை நான் மன்னிக்கிறேன்.

சார்லஸ்: கவலைப் படாதே ஜோன்! நீ விடுதலை செய்யப் பட்டாய், நிரந்தரமாய்! உன் மீது சுமத்திய குற்றங்கள் யாவும் நீக்கப் பட்டன! சுமத்திய பழிகள் யாவும் பொய்யென நிரூபிக்கப் பட்டன! உன்னை பிரெஞ்ச் நாடு புனித மாதாய் ஏற்றுக் கொண்டது, முடிவில்! ஜோன்! மெய்யாக வெற்றி பெற்றது நீதான்!

ஜோன் குரல்: இல்லை! இல்லை! வெற்றி பெற்றது நான் ஆயினும் இனிமேல் உயிரோடு வரப் போவதில்லை! என் ஆயுள் வாலிபத்திலே எரிக்கப்பட்டு விட்டது! என்னைச் சாம்பலிலிருந்து அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா ?

சார்லஸ்: உண்மைதான்! அவர்கள் உன்னை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. ஆனால் உன்னை எரித்துச் சாம்பலாக்கிய திடலில் உன் பணிக்காக, உன் நிரந்தர நினைவுக்காகப் பெரும் சிலுவை ஒன்று நிறுத்தப் பட்டுள்ளது! உனக்கிழைத்த தவறுக்காக, உன்னிடம் நிரந்த மன்னிப்புக் கேட்பதற்காக அந்த சிலுவை நாட்டப் பட்டுள்ளது!

ஜோன்: உயிரோடு ஆணுடையில் உலவிய போது, கடவுளின் உண்மைகளைச் சொல்லிய போது என்னைச் சூனியக்காரி என்று பிரெஞ்ச் மாந்தரும், ஆங்கில மூர்க்கரும் தூற்றினர்! மந்திரக்காரி, பிசாசுகளின் கெட்ட போதனைகளைக் கேட்பவள் என்று கேலி செய்தனர்! ஆனால் இப்போது எப்படி மாந்தர் மாறினர் ? பித்துடன் நாட்டுக்கு உழைத்த என்னைக் காலால் மிதித்தனர்! செத்த பிறகு தமது சிரசில் தூக்கி என்னைத் துதித்தனர்! விசித்திரமான மக்கள்! வேடிக்கையான உலகம்! என்னை எரித்த இடத்தில் ஏசு நாதரின் சிலுவையை எனக்காக நாட்டியதைக் கேட்டுப் பூரிப்படைகிறேன்! ஆனால் என்னை விரும்பி எரித்தவர் கையால் அந்த சிலுவை நிறுத்தப் பட்டிருந்தால் என் ஆன்மா சாந்தி அடையாது! உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் போலி உத்தமரை நான் மனதாற வெறுக்கிறேன்.

சார்லஸ்: ஜோன்! உன் வாயிலிருந்து எனக்கு நன்றி சொல்! கடைசியில் உன் பழிக் குற்றங்களை நீக்க நான்தான் முற்பட்டேன், ஜோன்! நானுக்குச் செய்த பாபத்திற்கு ஈடாக, நீ புனித மாது என்று நிரூபித்துக் காட்டினேன் ஜோன்! அதற்காக உன் கனிவு உதடுகள் நன்றி எனக்குச் சொல்லட்டும்! அப்போதுதான் என் மனப்புண் ஆறும்! என் தூக்கமற்ற இரவுகள் தரும் ஏக்கத்தை ஒருவாறு நீக்கும்!

ஜோன்: [சிரித்துக் கொண்டு] நன்றி மன்னரே! நன்றி! [சிரிக்கிறாள்]

கெளஸான்: [அசரீரிக் குரலில்] பொய்! பொய்! பொய்! ஜோன்! நம்பாதே! சார்லஸ் மன்னர் சொல்வது பொய்! முற்றிலும் பொய்! அவரை நம்பாதே! ஆடவரை நம்பாதே!

சார்லஸ்: [கோபத்துடன்] யாரது ? என்னைப் புளுகன் என்று பழிப்பவர் யார் ?

கெளஸான்: நான்தான் கெளஸான்! பாதிரி பீட்டர் கெளஸான்! ஜோனுக்கு நீதி அளித்த ஆலயத் தேவன்!

ஜோன்: ஆலயத் தேவரே! வணக்கம்! ஆடவரை நம்பாதே என்று சொல்லும் உங்களை மட்டும் எப்படி நம்புவது ? என்னைத் தீ அருவியில் குளிப்பாட்டிய பிறகு, நீர் அருவியில் திளைத்த உங்கள் நெஞ்சத்தில் புத்தொளி ஏதேனும் பிறகு பூத்ததா ?

கெளஸான்: இல்லை! ஜோன் இல்லை! என்னிடம் இருந்த புத்தொளி முற்றிலும் அணைந்து விட்டது! என் தலைமையில் உனக்கு அளித்த நீதியும் தண்டனையும் மனிதர் தந்தவை! தவறாகத் தந்தவை! அது கடவுள் அளித்த நீதியன்று!

ஜோன்: நான்தான் எரிந்து போய் விட்டேன்! கெளஸான் தேவரே! நீங்களாவது உயிருடன் வாழ்கிறீர்களா ?

கெளஸான்: [கவலையுடன்] நான் செத்து விட்டேன்! அத்துடன் சீரழிக்கப் பட்டேன்! என்னைப் புதைத்த பிறகும், என் பாபங்கள் என்னை விடாமல் துரத்தின! புதை பூமியிலிருந்து என்னுடலைத் தூக்கி மக்கள் சாக்கடையில் வீசி எறிந்தனர்! செத்த பின்னும் நான் காலால் மிதிக்கப் பட்டேன்! நீ எரிந்து மரித்தாய்! ஆனால் மீண்டும் எழுந்த நீ புனித மாதாய்ப் பூமியில் புத்துயிர் பெற்றாய்! செத்த பின் நீ தேவக் கன்னியாய் மாறி யாவராலும் துதிக்கப் பட்டாய்!

ஜோன்: உயிருற்ற என்னுடல் தீக்கனலில் துடித்த மாதிரிச் செத்துப்போன உங்கள் உடல் சாக்கடை நாற்றத்தை நுகர்ந்திருக்காது!

(தொடரும்) [ஏழாம் காட்சி பாகம்-4 அடுத்த வாரத் திண்ணையில்]

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain

4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

7. The New Book of Knowledge By: Grolier International (1984)

8. Britannica Concise Encyclopedia (2003)

9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)

10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)

11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 9, 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts