சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மிதந்து செல்லும் யுகம்,

மெதுவாய் நழுவும்

மறைவாய்,

ஒருவரது கண்ணை

ஒருவர் கட்டி!

காலத்தைப் போல

கடிது நகரும் ஒன்றை

ஞாலத்தில் காண்ப தரிது!

ஆயினும் உறுதி,

நன்னெறி விதைத்தவர்

உன்னதம் பெறுவது!

ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி (1452-1519)

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.

ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்கி, ஆங்கிலக் காவலர் எரிப்புப் பீடத்துக்கு ஜோனை இழுத்துச் செல்கிறார்கள். ஆணாதிக்க உலகம் 19 வயது (மே மாதம் 30, 1431) அபலைப் பெண்ணை உயிரோடு எரித்து வேடிக்கை பார்க்கிறது!

ஏழாம் காட்சி (பாகம்-2)

[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]

காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)

இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]

2. சகோதரர் மார்டின் லாட்வெனு

3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]

4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]

அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். யாரென்று அறிந்த பின் சார்லஸ் லாட்வெனுவுடன் உரையாடுகிறார்.

சார்லஸ்: அதெல்லாம் போகட்டும்! எனக்கு மகுடம் சூடியவள் ஒரு சூனியக்காரி, மந்திரக்காரி என்று இகழ்ச்சி ஏற்படாத வரையில் பொய், புரட்டு பழிகளைக் கூறி ஜோனைத் தீயிலிட்டுப் பொசுக்கியதைப் பற்றி நானெதுவும் கவலைப்படப் போவதில்லை! கடைசியில் எல்லாம் முறையாக நடந்திருந்தாலும், ஜோன் அதைப் பொருட் படுத்தி யிருக்க மாட்டாள்! அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் நான் ஒருவனே! அவளுக்குக் கிடைத்தது நல்ல மரணம்! மண்ணுலகை விட்டு அவள் பொன்னுலகுக்குப் போய்விட்டாள்! தீக்கனல் விழுங்கி ஜோன் கரிப் புகையாய் மறைந்து விட்டாள் என்று நினைப்பது நீ! தீயால் புனிதப்பட்டு நறுமணப் புகையாய்ப் புவியெங்கும் நிறைந்து விட்டாள் என்று நினைப்பவன் நான்!

லாட்வெனு: பலருக்குத் தெரியும் நீதிபதிகள் கைப்பணம் வாங்கிக் கொண்டு ஜோனுக்குத் தண்டனை நீதி வழங்கினார் என்று. ஜோனைப் பிடிப்பதற்குப் பணமுடிப்பு பிரெஞ்ச் பர்கண்டி வீரர் சிலருக்குக் கிடைத்திருக்கிறது. ஆங்கிலக் கோமகனார் பெரும் வெகுமதி கொடுத்து, ஜோனைப் பர்கண்டி முரடரிடமிருந்து பெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது!

சார்லஸ்: படிப்பு வாசனை அற்ற அந்தப் பட்டிக்காட்டுப் பணிமங்கைக்கு அத்தனை மதிப்பா ? என்னைப் பிடிப்பதற்கோ அல்லது என்னை எரிப்பதற்கோ ஆங்கிலேயர் இத்தைய வெகுமதி கொடுப்பாரா வென்று தெரியவில்லை எனக்கு! பாழடைந்த பழைய நீதிபதிகளை நினைத்து ஏன் வருத்தப் படுகிறாய் ? அவர்கள் யாவரும் செத்துவிட்டார்! பழைய குப்பையைக் கிளரினால் ஏதாவது புதையல் கிடைக்கும் என்று தோண்டுகிறாயா ?

லாட்வெனு: இப்போது அவளது தண்டனை நியாய மற்றதென நீக்கப் பட்டுள்ளது! நீதி மன்றத்தின் பொய்ச் சாட்சியங்கள், வழக்குகள் மீண்டும் உளவப்பட்டு ஜோனின் குற்றங்கள் யாவும் பொய்யென்றும், புளுகென்றும், நிரூபிக்கப் பட்டன. பழிசுமத்திய பாதிரிகள் யாவரும் வழக்கு மன்றத்துக்கு இழுத்து வரப்பட்டுத் தண்டிக்கப் பட்டனர்! அத்தனை பேரையும் கடவுளும் தண்டித்து நரகத்தில் தள்ளப் போகிறார்!

சார்லஸ்: [வேதனைப்பட்டு] போதும் அந்தக் கதை! பொறுக்க முடியவில்லை என்னால்! திருச்சபைத் தேவர்கள் பைபிள் மீது உறுதி எடுத்துப் மெய்யாகக் கூறிய பொய்களைச் சொல்லியது போதும். திருச்சபைத் தேவர்கள் எரித்து ஒருவகையில் ஜோனுக்குப் பெரும் புகழை, நிரந்தர மதிப்பை அளித்திருக்கிறார்கள்! அப்படிப் பார்த்தால் அவர்களும் நரகத்துக்குப் பதிலாக சொர்க்க புரிக்கே போவார்கள்! …. ஆமாம்.. எனது மகுடத்துக்கு ஏதாவது ஆபத்துள்ளதா ? ஆங்கிலேயர் எனது நாட்டைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாரா ?

லாட்வெனு: உங்கள் தங்க மகுடத்துக்கு எந்த பங்க மில்லை மன்னரே! உங்கள் நாட்டுக்கோ அல்லது ஆட்சிக்கோ எந்த ஆபத்தும் இல்லை! நிம்மதியாக ஓய்வெடுங்கள்!

சார்லஸ்: பணிமங்கை ஜோனுக்கு நான் மிகவும் கடமைப் பட்டவன். என் மகுடத்துக்குப் பங்க மில்லை! அது போதும்! அவளது பொற்கரம் தொட்ட புனித மகுடமிது! வரலாற்றுப் புகழ் பெறும் வணிதாமணி கனிவாய்ச் சூட்டியது இது! அவள் எனது குல தேவதையாகி விட்டாள், இப்போது! எங்கள் பரம்பரையின் புனித மாதாகி விட்டாள் இப்போது! பிரெஞ்ச் நாட்டின் வரலாற்றில் விடுதலை நாயகி ஆகிவிட்டாள்! தன்னுயிரை ஈந்து பொன்னுலகுக்குப் போய் விட்டாள்! ஒரு காலத்தில் எவரும் அறியாத எளிய நங்கையாக இருந்தாள். இப்போது எல்லாருக்கும் தெரிந்த புனித மங்கையாக உயர்ந்து விட்டாள்!

லாட்வெனு: ஜோனுக்கு அது பெருமை அளிக்கும். அவளுக்குக் கிடைத்திருக்கும் உன்னத இடத்தைப் பார்த்தால், ஜோன் பூரிப்படைவாள்!

சார்லஸ்: இப்போது பிரெஞ்ச் மக்கள், அவள் இறந்தபின் அவளைப் புனித மாதாய்த் தொழுகிறார்கள். ஆனால் ஜோன் உயிர்பெற்று மீண்டும் இங்கு வந்தால், ஆறு மாதத்தில் அதே மாந்தர் மறுபடியும் அவளை எரிப்பதற்குத் தயாராவார்! நீவீரும் இதேபோல் சிலுவையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் அலைவீர்! ஜோன் மாய்ந்து போனது, அவளுக்கும் நல்லது, நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது! ஜோன் மயான புரியில் அமைதியாய் ஓய்வு எடுக்கட்டும்! நீவீர் உமது கடமையில் மூழ்குவது உமக்கு நல்லது! நான் என் கடமையில் புகுவது எனக்கு நல்லது!

லாட்வெனு: கடவுள் ஆசீர்வாதம் எனக்கு. ஜோன் பாதையில் நான் குறுக்கிடாதது என் அதிர்ஷ்டமே!

சார்லஸ்: கடவுளுக்கு நன்றி கூறு! அவளிட்ட சாபம் உன்மேல் பாயாது! …. [சற்றும் முற்றும் பார்த்து] எங்கே மறைந்து போனார்கள் என் காவலர் ? ஒருவரையும் அருகே காணோம். …. யாரோ வரும் அரவம் கேட்கிறது. … யாரென்று உனக்குத் தெரியுமா ?

[கதவு பட்டெனத் திறந்து பளிச்சென மின்னலும், பெருங் காற்றும் அடித்து மெழுகுவர்த்தியை அணைத்து விடுகிறது!]

லாட்வெனு: … பலகணியை திறந்து இருட்டில் யாரோ அறைக்குள் நுழைவது தெரிகிறது! … [கூர்ந்து நோக்குகிறான்]

சார்லஸ்: யாராக இருக்க முடியும் ? [மறுபடியும் மின்னல் வெட்டுகிறது. மாயமான வடிவில் மங்கலான உருவம் ஒன்று தெரிகிறது] யாரது அங்கே ? பதில் சொல்! … [பயந்து போய் படுக்கையில் ஏறி அமர்ந்து கொள்கிறார்.] யாரவது எனக்கு உதவி செய்ய வாருங்கள். நான் வாளை எடுக்க மறந்து விட்டேன். மின்னல் கண்ணைப் பறித்து விட்டது. கண்கள் குருடாய்ப் போயின! …. எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை! [கண்களை மூடிக் கொள்கிறார்]

ஜோன் குரல்: மன்னரே! அஞ்சாதீர்! நான்தான் ஜோன்! பணிமங்கை ஜோன்! கீழே இறங்கி வாருங்கள். உங்களுடன் பேச வந்திருக்கிறேன். பார்த்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன! பயப்படாதீர்கள்! முடிவில் உதவி செய்யாமல் என்னைக் கைவிட்டுப் போனாலும், உங்கள் மீது எனக்குக் கோப மில்லை!

சார்லஸ்: உன்னைச் சரியாகக் காண முடியவில்லை! மங்கலாகத் தெரிகிறாய் நீ! பிசாசாக மாறி விட்டாயா ஜோன் ? நீ எப்போது பிசாசாக உருமாறினாய் ?

ஜோன் குரல்: நான் இப்போதும் பிசாசு இல்லை! நான் எப்போதும் பிசாசு இல்லை! நான் உயிரோடு உள்ளபோதுதான் பிசாசு என்னிடம் பேசுவதாக எல்லாரும் சொன்னார்! எரிந்து போன ஒரு மங்கை எப்படி பிசாசாக வருவாள் ? நீவீர் காண்பது ஒரு கனவு! கனவில் வந்திருப்பவள் வேறு யாருமில்லை, பணிமங்கை ஜோன்தான்! மன்னரே! என்னவாயிற்று உங்களுக்கு ? வயது முதிர்ந்து தாடி நரைத்துக் கிழவராய்த் தள்ளாடிப் போனீர்களே! மன்னரான பிறகு பொறுப்புக்கள் பளுவாகிப் போயினவா ?

சார்லஸ்: ஜோன் நீயா ? பார்! நீ குமரிப்பெண்! நான் கிழவன்தான்! கனவில் நீ வந்திருக்கிறாயா ? அப்படி யானால் நான் மெய்யாகத் தூங்குகிறேனா ? எரிந்து போன நீ எப்படி உயிர் பெற்றெழுந்தாய் ? கேலிக் கூத்தாய் இருக்கிறதே!

ஜோன்: நான் மாய்ந்து போனது உங்களுக்குக் கேலிக் கூத்தா இருக்கிறதா ?

சார்லஸ்: ஜோன்! நீ உண்மையாகவே செத்து விட்டாயா ?

ஜோன்: எல்லா பூமி மனிதரைப் போல், எப்போதும் உலகில் ஏற்படுவது போல் என்னுயிர் உடலை விட்டு நீங்கியது உண்மையே!

சார்லஸ்: ஜோன்! உடல் நெருப்பில் எரியும் போது, உயிர் உருவிப் பிரியும் போது உனக்கு மிகவும் துன்பமாக இருந்ததா ?

ஜோன்: எனக்கு நினைவில் இல்லை! முதலில் உடற் புண்கள் எரிந்தன! பிறகு எதுவும் உணர வில்லை!

மன்னரே! இதுவென்ன கேள்வி ? உம்மை நெருப்பு என்றும் சுட்டதில்லையோ ? … சரி.. நான் சென்ற பின்பு இத்தனை வருடங்களை எப்படிக் கடத்தினீர் ?

சார்லஸ்: போருக்குப் பயந்த நான் உன்னைப் பின்பற்றினேன், ஜோன்! படைகளை நடத்திச் சென்று போரிட்டேன்! இடுப்புச் சகதியிலும், மனிதக் குருதியிலும் வீரர்களை கடத்திச் சென்றேன்! உன்னைப் போல் கோட்டைச் சுவர்களில் ஏணியில் ஏறினேன்! கீழே வீழ்ந்தேன்! படு காயப்பட்டேன்! ஆனால் போரில் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்தது! பல பகுதிகளைப் பிடித்தேன்! எல்லாம் உன்னிடம் நான் கற்றுக் கொண்ட உத்திகள்தான்! உன்னைப் பின்பற்றினால், உனக்குக் கிடைத்தது போல், எனக்கும் வெற்றிகள் கிடைத்தன!

ஜோன்: [சிரிக்கிறாள்] ஓர் ஆட்டை மனித வேங்கையாய் மாற்றி விட்டேனே! ஆச்சரியம்தான்! [சிரிக்கிறாள்] மகிழ்ச்சி, மட்டிலா மகிழ்ச்சி! நானிட்ட திட்டங்களை மறக்காது, முடித்து விட்டார்களே! [சிரிக்கிறாள்] ஆங்கிலப் பேய்களை நாட்டை விட்டுத் துரத்திய உமக்கு எனது பாராட்டுகள்! [சிரிக்கிறாள்]

சார்லஸ்: [சிரிக்கிறார்] ஜோன்! ஜோன்!! ஜோன்!!! நீ புரட்சி மாது! நீ புனித மாது! நாட்டில் எங்கும் இப்போது புதிய பிரெஞ்ச் விடுதலைக் கொடி பறக்கிறது! [சிரிக்கிறார்]

ஜோன்: [சிரிப்பு அடங்கி] மன்னரே! ஒன்று கேட்கிறேன், உங்களை! இத்தனை வெற்றிகள் பெற்ற உங்களையும் கம்பத்தில் கட்டி நெருப்பில் எரித்தார்களா ? நான் அத்தனை வெற்றி பெற்றதற்கு என்னைக் கம்பத்தில் கட்டி எரித்தார்கள்! உங்களை ஏன் எரிக்க வில்லை ?

சார்லஸ்: [சிரிப்பு அடங்கிக் கவனமாக] நீ ஒரு பெண்! ஆனால் நானோர் ஆண் மகன்! அந்த வேற்பாடு என்னைக் காப்பாற்றியது! ஓர் ஆண்மகன் செய்ய வேண்டியதை நான் செய்தேன்! ஆயிரக் கணக்கான ஆண்டுகள், ஆண் வர்க்கம் செய்ததைத்தான் நான் செய்து முடித்தேன். அதில் ஒன்றும் வியப்பில்லை! ஆனால் ஆணாதிக்க பூமியில் பெண்ணுருவில் பிறந்த ஆண்மங்கை நீ! ஆண் புரிய வேண்டிய ஒன்றைப் பெண் செய்து முடிப்பதை ஆடவரால் தாங்கிக் கொள்ள முடியாது! ஆண் படை வீரர்களைத் தளபதியாகப் பெண் ஒருத்தி நடத்திச் செல்வது வரலாற்றில் காணாத நிகழ்ச்சி! அதை ஆடவரால் ஏற்க முடியாது! ஆதலால் ஆண்வர்க்கம் உன்னைப் பலிவாங்க வலை விரித்தது! தேவாலயத் திருவாளர்களைப் புறக்கணித்தாய் நீ! போப்பாண்டவரை வணங்க மறுத்தாய் நீ! தனியாக உன் கடவுளை தொழுதாய் நீ! அதனால் ஆலய விரோதத்தைச் சேமித்துக் கொண்டாய்! உன் உடலில் தீவைக்க நீயே உனக்கு விறகுகளை வெட்டினாய்! நீ உயிரோடு உலவி வருவதே பலரது கண்களை உறுத்திக் கொண்டு வந்தது!

(தொடரும்) [ஏழாம் காட்சி பாகம்-3 அடுத்த வாரத் திண்ணையில்]

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain

4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

7. The New Book of Knowledge By: Grolier International (1984)

8. Britannica Concise Encyclopedia (2003)

9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)

10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)

11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 2, 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts