சி. ஜெயபாரதன், கனடா
‘சகோதரர் மார்டின் தேவ தூதரே! எனக்கு ஆறுதல் கூறிய உங்களுக்கு நன்றி. ஆனால் இந்த இடத்தை விட்டு என்னருகே நிற்காமல் வெளியேறுங்கள் … இப்போதே! இது என் எச்சரிப்பு! எனக்குக் கேட்ட அசரீரிக் குரல்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை! நான் புரிந்த ஒவ்வொரு பணியும் கடவுள் எனக்கு ஆணையிட்டு நான் நிறைவேற்றியவை. ஏசுவின் சிலுவைச் சின்னத்தை என்கண் முன்பாகக் காட்டுங்கள்! சாகும்வரை நான் அது என் கண்களில் காட்சி அளிக்க வேண்டும். ஏசுவே, ஏசுவே, ஏசு நாதரே! ‘
ஜோன் ஆஃப் ஆர்க் (மே 30, 1431)
[தீ மேடையில் ஜோனின் கடைசிச் சொற்கள்]
எவன் என்னை மேல் வீட்டுக்கு
ஏற்றிச் செல்பவன், நண்பனே சொல்!
எப்போது இஇங்கு வரப் போகிறான் ?
விரைவாக முடியட்டும் எனக்கு,
வலியின்றி, தூயதாக இருக்கட்டும்!
மின்னல் போல அல்லது
கூரிய சிறு கத்தியால்!
ஆனால் அது என்மேல்
துரிதாகப் பாயட்டும்!
கவிதைச் செல்வி லைலா பெப்பர், கனடா [Leila Pepper (1997)]
அலைமோதும் என்மனம் ஆலயத்தில்,
துண்டு துண்டாய்ப் போய்!
கன்னி மாடத்தில் அந்த மங்கை
கண்மூடினாள், பலியாகி!
கண்டும் காணாத மாடத்துப் பெண்டிர்
விண்டு போயிலர்!
சிரம்மேல் வளையம் சுழலும்
செந்நிறப் பொன்னுடைச்
சந்நியாசிகள் புண்பட்டுக்
கண்கலங்கிலர்!
எதுவும் மெய்யில்லை இந்த ஆலயத்தில், அவள்
புது நறுமண நினைவைத்
தவிர!
கவிதைச் செல்வி லைலா பெப்பர்.
கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!
****
இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.
ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்குகி, ஆங்கிலக் காவலர் எரிப்புப் பீடத்துக்கு ஜோனை இழுத்துச் செல்கிறார்கள். அன்றுதான் ஜோனின் கடைசி நாள். ஆணாதிக்க உலகம் 19 வயது அபலைப் பெண்ணை உயிரோடு எரித்து வேடிக்கை பார்க்கிறது!
ஆறாம் காட்சி (பாகம்-13)
காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]
இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டைக்கு அருகில் ஒரு திடல்.
நேரம்: பகல் வேளை
நாடகத்தில் பங்கு கொள்வோர்:
1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor], லாட்வெனு.
5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள் கூட்டம்.
அரங்க அமைப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜோன் கைக்கட்டு, கால் கட்டுகளுடன் தெருவில் அமைக்கப்பட்ட கம்ப மேடைக்குக் காவலரால் இழுத்துச் செல்லப் படுகிறாள். திடலைச் சுற்றிலும் ஆரவாரமுடன் பெருங் கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. படிக்கட்டுகள் அமைந்த பீடத்தின் ஓரத்தில் கம்பமொன்று நிறுத்தப் பட்டுள்ளது. நடுவில் பாதை விடப்பட்டு, கம்பத்தைச் சுற்றிலும் விறகுகள் அடுக்கப் பட்டுள்ளன. ஆங்கிலப் பாதிரி மார்டின் மிரண்டு போய் ஜோனுக்குப் பரிதாபம் காட்டி ஆறுதல் கூறத் தயங்கிக் கொண்டு ஓரத்தில் நிற்கிறார். பெண்கள் கூட்டத்தில் பலர் கண்களில் கண்ணீர் சொட்டிக் கொண்டிருக்கிறது. கூட்டத்தில் பிரெஞ்ச் மக்கள் அதிகமாகவும், ஆங்கில மாந்தர் குறைவாகவும் உள்ளனர்.
கெளஸான்: வார்விக் கோமகனாரே! இன்றைய தினத்தில் இங்கு நடந்த இந்த கோரமான நிகழ்ச்சிக்கு நாமிருவரும் கடவுளுக்குப் பதிலுரைக்க வேண்டும். திருச்சபையும் ஜோனுக்குப் பூரணத் தீர்ப்பளிக்க முடியாமல் திணரி விட்டது! ஆலயச் சட்டம் அறியாத ஓரிளம் மங்கையை, நமது தீர்மானத் திட்டப்படி மாட்ட வைத்து மடக்கி விட்டோம். ஆலயத் தீர்ப்பு ஜோனின் செவிகளில் விழும் முன்பே, ஆங்கிலப் பாதிரி சகோதரர் மார்டின் ஜோனின் கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றார். தீர்ப்பைச் சொல்வதற்கு முன்னே தீவட்டியை உங்கள் காவலர் ஏற்றி விட்டார். இப்போது நாமிருவரும் கடவுளிடம் கேட்டு மன்றாட வேண்டும், நாம் செய்தது சரியா, தப்பா வென்று ? ஜோனுக்கு இத்துணை ஆழத்தில் குழி தோண்டி விட்டு, நாமே அந்தக் குழியில் விழப் போகிறோமோ என்று அச்சம் மேலிடுகிறது!
கெளஸான்: வார்விக் கோமகனாரே! இன்றைய தினத்தில் இங்கு நடந்த இந்த கோரமான நிகழ்ச்சிக்கு நாமிருவரும் கடவுளுக்குப் பதிலுரைக்க வேண்டும். திருச்சபையும் ஜோனுக்குப் பூரணத் தீர்ப்பளிக்க முடியாமல் திணறி விட்டது! ஆலயச் சட்டம் அறியாத ஓரிளம் மங்கையை, நமது தீர்மானத் திட்டப்படி மாட்ட வைத்து முடக்கி விட்டோம். ஆலயத் தீர்ப்பு ஜோனின் செவிகளில் விழும் முன்பே, ஆங்கிலப் பாதிரி சகோதரர் மார்டின் ஜோனின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி இழுத்துச் செல்ல கட்டளை இட்டார். தீர்ப்பைச் சொல்வதற்கு முன்னே தீவட்டியை ஏற்றி விட்டார், உங்கள் காவலர்! இப்போது நாமிருவரும் கடவுளிடம் கேட்டு மன்றாட வேண்டும், நாம் செய்தது சரியா, தப்பா வென்று ? ஜோனுக்கு இத்துணை ஆழத்தில் ஒரு குழியைத் தோண்டி விட்டு, நாமே அந்தக் குழியில் விழப் போகிறோமோ என்று அச்சம் மேலிடுகிறது!
வார்விக் கோமகனார்: நீவீர் எமக்கும் சேர்த்து உமது ஆலயத்தில் பிரார்த்தனை செய்யுங்கள். எமக்கு இதில் ஒன்றும் நம்பிக்கை யில்லை! எங்கள் ஆங்கில வர்க்கம் முடிவு செய்த இந்த தீர்ப்பு ஜோனுக்குத் தக்கதே என்னும் கருத்தை உடையவன் நான். இதுவே எனது முடிவும் கூட! என் மனதை நீவீர் கலைக்க வேண்டாம்!
[கெளஸான் கோபத்துடன் வெளியேறி காத்திருக்கும் வழக்கறிஞருடன் சேர்ந்து கொள்கிறார். தனிமையான, கோமகனார் தனது காவலனை அழைக்கிறார். காவலர் எல்லாரும் ஆரவாரமுடன் தீக்கம்பத்தை நோக்கி ஓடுகிறார்கள். ஜோனை இழுத்துச் செல்லும் காவலரைப் பின்பற்றி பெருத்த ஜனக் கூட்டம் செல்கிறது. மேடைப் படிகளில் ஜோனை ஏற்றிச் சென்று, காவலர் அவளைக் கம்பத்தில் கயிற்றால் கட்டுகிறார்கள். சில காவலர் அவளைச் சுற்றிலும் விறகுகளை அடுக்குகிறார்கள். தீவட்டியைக் கையில் ஏந்தி முன்னும் பின்னும் இரண்டு காவலர் தயாராக நிற்கிறார்கள். ஆங்கிலப் பாதிரி மார்ட்டின் நடுக்கமுடன் ஜோன் அருகில் நிற்கிறார்.]
ஆங்கிலப் பாதிரி: [கனிவுடன்] .. அழாதே ஜோன்! .. அஞ்சாதே ஜோன்! வேதனை எல்லாம் நொடிப் பொழுதில் நீங்கிவிடும்! ஏசுப் பிரபு இருக்கிறார்! நீ அவர் வீற்றிருக்கும் இடத்திற்குத்தான் போகிறாய்! கலங்காமல் தாங்கிக் கொள்! ஏசு உன்னைக் கைவிட மாட்டார்!
ஜோன்: [ஆத்திரமாக] சிலுவையைக் கைப்பிடிக்கும் உமது தேவ கரங்கள் இன்று தீப்பந்தம் ஏந்தி யுள்ளன! புனித பைபிளின் அமுத மொழிகளை கூற வேண்டிய உமது பரிவு உதடுகள் இன்று பாசாங்கு உரைகளை ஒலிக்கின்றன! அந்த இரக்கச் சொற்களுக்கு நன்றி! ஆனால் இது என் கட்டளை! இந்த இடத்தை விட்டுப் போய் விடுங்கள்! இப்போதே! என்னருகில் நிற்காதீர்! என் கண்களில் தென்படாதீர்! எங்காவது ஒழிந்து போய் விடுங்கள்! புனிதத் தீ என்னைக் குளிப்பாட்டும் போது உமது அசுத்த மூச்சு என்மீது பட வேண்டாம். என் கண்கள் காண விரும்புவது இப்போது ஓர் சிலுவை! கனிவுச் சிலுவை! ஏசு நாதரை இறுதியாக ஏற்றிச் சென்ற புனிதச் சிலுவை! கொண்டு வாருங்கள் சிலுவையை! என் கடைசி மூச்சு நீங்கும் போது என் நினைவு எடுத்துச் செல்லப் போவது, ஏசுவின் சிலுவை!
[அருகில் கண்கள் பொங்க நிற்கும் ஓர் ஆங்கிலக் காவலன் இரண்டு சுள்ளிகளைச் சிலுவையாகக் கட்டி ஜோனுக்குக் காட்டுகிறான். விறகுகளின் தீ சுற்றிலும் பெருகவே அவன் சிலுவையைப் போட்டு விட்டு ஒதுங்கிக் கொள்கிறான். அதற்குள் வேறொருவன் நீளமான ஒரு சிலுவைக் கம்பை, ஆலயத்திலிருந்து எடுத்து வந்து, ஜோன் கைகளில் தருகிறான்]
ஜோன்: [அலறிக்கொண்டு] ரோவென் நகர மாந்தரே! நான் சாகத்தான் வேண்டுமா ? தீயிக்கிரையாகி நான் மாய்ந்து போவதற்குக் காரணமான நீங்கள் துன்பப்படப் போகிறீர் என்று கவலைப் படுகிறேன். கடவுளின் தேவ தூதர்களே! என் ஆத்மா பாபத் தீர்ப்படையப் பிரார்த்தனை செய்வீர்! இங்கு நின்று கொண்டிருக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்: உங்களுக்கு நான் ஏதும் பாதகம் விைளைவித்திருந்தால், என்னை மன்னித்து விடுவீர்! தயவு செய்து பிரார்த்தனை செய்வீர் எனக்காக!
அருகில் நிற்பவர் சிலர்: [கண்ணீர் பொங்க] நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் ஜோன். உனக்காகப் பிரார்த்திக்கிறோம். ஏசு உன்னருகில் இருக்கிறார். உன்னைக் கைவிட மாட்டார்.
ஜோன்: [அலறிக்கொண்டு] எனக்குக் கேட்ட அசரீரிக் குரல்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை! நான் புரிந்த ஒவ்வொரு பணியும் கடவுள் எனக்கு ஆணையிட்டு நான் நிறைவேற்றியவை. ஏசுவின் சிலுவைச் சின்னத்தை என்கண் முன்பாகக் காட்டுங்கள்! சாகும்வரை நான் அது என் கண்ணில் காட்சி அளிக்க வேண்டும். ஏசுவே, ஏசுவே, ஏசு நாதரே! ‘
[ஜோனின் தலை சாய்கிறது. பற்றி எரியும் தீயின் நாக்குகள் ஜோனின் உடலை மேய்ந்து தின்கின்றன! கோவென்று அலறும் பலரது குரல்கள் நெஞ்சைத் தொடுகின்றன. பழிவாங்க நினைத்த மாந்தரின் மனதில் வெற்றி முரசுகள் கொட்டுகின்றன.]
[கோமகனாரும் அவர்கள் பின்னால் சென்று பேயடித்தவர் போலிருக்கும் ஆங்கிலப் பாதிரி மார்டினைக் காண்கிறார்]
கோமகனார்: என்ன ஆயிற்று உங்களுக்கு ? ஜோனுக்குத் தீவைக்கப் போவதாகக் கனாக் கண்டவர் அல்லவா, நீங்கள் ? உங்கள் கண்களில் பொங்குவது ஆனந்தக் கண்ணீரா அல்லது வேதனைக் கண்ணீரா ? முகத்தைப் பார்த்தால் பிசாசு உங்கள் முகத்தில் அல்லவா தெரிகிறது ? ஆனால் பார்த்தால் ஜோன் முகத்தில் ஓர் புனித ஒளி தோன்றுகிறது! அவளைப் பிடித்த பிசாசு இப்போது உங்கள் தோள் மீது தாவி விட்டதா ?
ஆங்கிலப் பாதிரி: [தடுமாறி மனத் தவிப்பில் நோகிறார். கண்களில் நீர் கொட்டுகிறது. பெரு மூச்சு விட்டுப் பேதலிக்கிறார். கைகூப்பிக் கும்பிட்டு மேலே காட்டி] எனக்கு இரக்கம் காட்டு ஏசுவே! என்னால் தாங்க முடியவில்லை! கோமகனாரே! நான் என்ன செய்வேன் ? எனக்குக் நரகத்தின் கதவுகள் திறந்துவிட்டன! ஜோன் அங்கே போவதற்குள் அவளை வரவேற்கும் வாசலில் நானும் நிற்பேன்! படிப்பில்லாத ஜோனுக்குப் பாபத்தீர்ப்புக் கிடைத்தாலும், பாதிரியான எனக்குப் பாபத் தீர்ப்பு கிடைக்குமா ? நான் பெரும் பாதகம் நிகழப் பங்களித்து விட்டேன், கோமகனாரே! யார் கண்டார் ? ஜோனுக்கு சொர்க்கபுரி கிடைக்கலாம்! ஆனால் எனக்கு நிச்சயம் நரகக் குழிதான்! ஜோன் நீ சொர்க்கத்தில் வாழ்வாங்கு வாழப் போகிறவள்! நான் மீள முடியாத நரகத்தில் நீண்ட காலம் தூண்டில் மீனாய்த் துள்ளப் போகிறவன்!
கோமகனார்: [முதுகைத் தடவி, ஆறுதலாக] ஜோனுக்கு நீவீர் என்ன தீங்கிழைத்தீர் ? அவள் செய்த பாபத்திற்கு அவளே தீக்கம்பம் நோக்கிச் செல்லும் போது, உமது புனித உடல் ஏனிப்படி நடுங்குகிறது ?
பாதிரியார்: கோமகனாரே! எனக்காக, பாழடைந்த என் ஆத்மாவுக்குக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
கோமகனார்: [பரிவுடன்] செய்கிறேன் உமக்கு! செய்கிறேன் நிச்சயமாய்! செய்கிறேன் உடனே! ஆனால் எனக்கு இந்த பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லை! ஆனாலும் செய்கிறேன் உமக்கு! கவலைப் பாடாதீர்!
பாதிரியார்: கோமகனாரே! நான் நல்லவன், மெய்யாக! உண்மையாக! இதுவரை நான் யாருக்கும் பாபம் இழைத்ததில்லை! இதுதான் முதல் தடவை! ஒரு தடவை செய்தால், அதுவும் உடனே மன்னிப்புக் கேட்டால், கடவுள் எனக்கு மன்னிப்பு அளிப்பார் அல்லவா ? சொல்லுங்கள்! நான் சொல்வது சரியா ?
கோமகனார்: நிச்சயம் கிடைக்கும்! முழங்காலிட்டு கண்ணீர் சொரிய புனிதக் கன்னி மேரி முன்பாக மன்னிப்புக் கேளுங்கள்! கொடுக்கப்படும்! கடவுளின் வாயிற் கதவைத் தட்டுங்கள்! திறக்கப்படும்! … பைபிளில் இந்த இரண்டு பொன்மொழிகள் சிறு வயது முதலே எனக்கு மனப்பாடம்!
பாதிரியார்: தீங்கிழைக்க வேண்டு மென்று நான் இதில் முற்படவில்லை. இப்படி முடியும் என்று நான் நினைக்க வில்லை! நான் அறியாமலே என்னால் இப்பாபம் நிகழ்ந்து விட்டது!
கோமகனார்: [அழுத்தமாக, கடுமையாக] அப்படி யானால் நீவீர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிந்திக்காமல் நிகழ்வதைக் கண்டும் காணாமல் இருந்தீர் அல்லவா ?
பாதிரி: ஆமாம் கோமகனாரே! நானொரு மூடன்! சிந்திக்காமல் செயலில் இறங்கி மூழ்கியவன்! பின் நீந்த முடியாமல் தூக்கிவிட உதவி தேடும் அறிவிலி! நான் செய்த தீராப் பழிக்கு, தீய பாபத்திற்குச் சாகும்வரை மனக்குறையில் தினம் தினம் வெந்து, வெந்து ஜோனைப் போல் நோகப் போகிறேன்!
கோமகனார்: நீ என்ன பிதற்றுகிறாய் ? ஜோன் சாவுக்கு நீ காரண மில்லை! எதற்காகச் சாகும்வரை நீ நோக வேண்டும் ?
பாதிரி: [வருத்தமுடன்] ஆமாம், தீயில் ஜோனை எரிக்கப் போகும் தண்டனை அறிவிப்பை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்! காவலர் கையிலிருந்து ஜோனைப் பிடுங்கித் துண்டு துண்டாய் நறுக்க வேண்டும் என்று நான் முதலில் துடித்தேன்! ஆனால் தீயிலிட்டு உயிரோடு எரியும் போது அவள் அலறியதைக் கேட்டு என்னிதயம் வெடித்துத் தாங்க முடியாமல் இப்போது துடிக்கிறேன்! இன்றைக்கு நான் செய்த பாபத்தை நினைத்தால் சாகும்வரை எனக்குச் சரிவரத் தூக்கமே வராது! அவள் உடல் வேகும் முன்பே, என் நெஞ்சம் வெந்து போனது! அவள் உயிர் பெரும் தீயில் மடிவதற்கு முன்பே என்னுயிர் வெறும் காற்றிலே ஊசலாடியது! [மண்டியிட்டு, கைகளை மேலே தூக்கி] ஏசு நாதரே! இந்தக் கொடும் தீக்காட்சியை என் கண் முன்னிருந்து நீக்கிவிடு! என்னால் போக்க முடிய வில்லை! ஏசுப் பிரபு! எரித்துக் கொண்டிருக்கும் இந்த தீயிலிருந்து என்னைக் காப்பாற்று! தீயில் வேகும் போது ஜோன், ஏசு நாதா, ஏசு நாதா! ஏசு நாதா! வென்று மூன்று முறை அலறி உன்னைத்தான் நாடினாள்! உன் ஒருவனைத்தான் தேடினாள்! இப்போது அவள் உன் இதயத்தில் ஏறி விட்டாள்! ஆனால் நானோ உன்னிதயத்திலிருந்து படுபாதாளக் குழியில் விழுந்து கிடக்கிறேன்!
கோமகனார்: [பாதிரியாரைத் தூக்கி] போதும், போதும் உமது புலம்பல்! எழுந்து நின்று இனி நடப்பதைப் பார்ப்பீரா ? உமது கலக்கத்தை நிறுத்துவீரா! நீவீர் இதைத் தாங்கிக் கொள்ள முடியும்! இந்த ஊர் மக்களே இதைப் பற்றித்தான் சில நாட்களுக்குப் பேசப் போகிறார்! இத்தனைப் பயமுள்ள நீவீர், நீதி மன்றத்தில் அமராமல் என்னைப் போல் ஒதுங்கி இருந்திருக்கலாம் அல்லவா ?
பாதிரியார்: [குழப்பமடைந்து, பணிவாக] தீயில் வேகும் போது ஜோன், ஏசு நாதா, ஏசு நாதா! ஏசு நாதா! வென்று மூன்று முறை அலறிய போது, என் நெஞ்சமே வெடித்தது! அந்த இரங்கல் குரல் என்னைப் பிசாசு போல் துரத்துகிறது இப்போது. காவலர் தீயை மூட்டும் போது, சிலுவை ஒன்றைக் கொண்டுவர ஜோன் வேண்டினாள். காவலன் ஒருவன் இரண்டு சுள்ளிக் கம்புகளைக் கட்டிச் சிலுவையாகக் காட்டினான். அவன் ஓர் ஆங்கில அனுதாபி! அவன் கண்களில் நீர் அருவியாக வழிந்தது! ஆனால் என் கண்களில் நீர் வரவில்லை! அருகில் நின்ற நான் சிலுவையைக் கையில் ஏந்திப் பிடித்திருக்கலாம். ஆனால் ஏனோ நான் அப்படிச் செய்யாது வாளா விருந்தேன்! கோமகனாரே! நானொரு கோழை! பாதிரியாய் வாழத் தகுதியற்ற கோழை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறிய கோழை! நானொரு முட்டாள்! நானொரு வெறிநாய்! ஆனால் ஒரு மகிழ்ச்சி! சிலுவையைக் கடைசியில் காட்டியவன், ஓர் ஆங்கிலேயன்! பித்துப் பிடித்த பிரெஞ்ச்காரன் அல்லன்!
கோமகனார்: முட்டாள்! நல்லது, நீ சிலுவையை ஜோனுக்குக் காட்டாதது! அந்த ஆங்கிலக் காவலன் யார் ? சிலுவையைக் காட்டிய அவன் கையை வாளால் வெட்ட வேண்டும்! நல்ல வேளை! ஆவேசக் கூட்டத்தார் அவனைப் பிடித்து ஜோனுடன் எரிக்காமல் விட்டார்களே! போதும், ஜோனுக்காக நீவீர் கொட்டும் உமது பரிவுக் கண்ணீர்!
பாதிரியார்: [சற்று தெளிவாக] நீங்கள் சொல்வதுபோல் ஆவேசக் கூட்டம் நடந்து கொள்ள வில்லை! கண்ணீர் விட்டு அழுதவரில் அநேகம் பேர் ஆங்கிலேயர்! ஆச்சரியமாக இல்லையா ? ஜோனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தவர், காறித் துப்பியவர், கல்லை விட்டெறிந்தவர் அநேகர் பிரெஞ்ச் மாந்தர்! நிச்சயம் எனக்குத் தெரியும், அவர் அனைவரும் பிரெஞ்ச் மக்கள். ஆச்சரியமாக இல்லையா ? அவர் எள்ளிப் புறக்கணித்தது ஜோனை இல்லை! எல்லாம் வல்ல நமது ஏசுவை, ஏசு நாதரை, ஏசுப் பிதாவை!
கோமகனார்: வாயை மூடுவீர், தேவ தூதரே! யாரோ வரும் அரவம் கேட்கிறது!
[பிரெஞ்ச் நபர் லாட்வெனு கையில் சிலுவையை ஏந்திக் கொண்டு வருத்தமுடன் தலை கவிழ்ந்து வருகிறார்.]
லாட்வெனு: கோமகனரே! எல்லாம் முடிந்து விட்டது! ஜோனின் சிறுகதை முடிந்து விட்டது! நீங்கள் நினைத்தபடியே எல்லாம் நடந்து விட்டது! ஜோன் கடைசில் உச்சரித்தது, ஏசு நாதரின் பெயரைத்தான்! ஆனால் அவள் சிறுகதை இப்போது முடிந்தாலும், இனி அவளது பெருங்கதைத் தொடரப் போகிறது! சிறுகதை பெருங்கதை ஆகப் போகிறது! படிப்பில்லா பணிமங்கை இப்போது புனித மங்கை ஆகப் போகிறாள்! அவளது புனிதக் கதை வரலாற்றில் இனிமேல்தான் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படப் போகிறது!
(தொடரும்) [ஏழாம் காட்சி பாகம்-1 அடுத்த வாரத் திண்ணையில்]
****
தகவல்:
1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)
2. Saint Joan of Arc By: Mark Twain
3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain
4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).
5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)
6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)
7. The New Book of Knowledge By: Grolier International (1984)
8. Britannica Concise Encyclopedia (2003)
9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)
10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)
11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan October 18, 2005]
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-13 )
- டான் பிரவுண் மேசையில் ஒரு கமண்டலம்
- கவிஞர் புகாரியின் கவிதை நூல்கள் வெளியீட்டுவிழா வாழ்த்துரை
- ‘காலம் ‘ இலக்கிய மாலை!
- கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)
- புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை ‘கனடா இலக்கியத் தோட்டத்திற்கு’ அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி
- கவிதை: மூலப்பிரதி வாசிப்பு: முன்னோர் மொழிபொருள்
- ஓரு இளைய தலைமுறை இலக்கியவாதியின்(!); சாட்சியம்
- கடிதம் – (ஆங்கிலம்)
- அழிவைப் போற்றும் கற்பு, காதல் தோல்வி
- சுராவுக்கு அஞ்சலி
- கடிதம்
- குறுந்திரைப்படப் பயிற்சிப் பட்டறை
- நாகூர் ரூமியின் கருத்துகள் பற்றி (ஆங்கிலம்)
- சுந்தர ராமசாமியின் மறைவு
- மிமோஸா அஹ்மதி – ஒரு தேடல்…ஓர் அறிமுகம்…சில கவிதைகள்
- தற்கால சீனத்தின் நவீன ஓவியபாணி
- மனிதாபிமானம்
- திசைமாறும் போராட்டக்களங்கள்
- பங்குச் சந்தை வீழ்ச்சி
- வயது வரும்போது. .
- அட்லஸ்
- கீதாஞ்சலி (45) மங்கித் தேயும் மணம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சுவாசலயம்
- பெரியபுராணம் – 61 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)
- மிமோஸா அஹ்மதி – சில கவிதைகள்
- பொறுப்பு !
- பேரிடர்கள்
- பந்தம்
- இமாலய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம்!
- டாவின்சி கோட்