சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-12)

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘ரோவென் நகர மாந்தரே! நான் சாகத்தான் வேண்டுமா ? தீயிக்கிரையாகி நான் மாய்ந்து போவதற்குக் காரணமான நீங்கள் துன்பப்படப் போகிறீர் என்று கவலைப் படுகிறேன். கடவுளின் தேவ தூதர்களே! என் ஆத்மா பாபத் தீர்ப்படையப் பிரார்த்தனை செய்வீர்! இங்கு நின்று கொண்டிருக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்: உங்களுக்கு நான் ஏதும் பாதகம் விைளைவித்திருந்தால், என்னை மன்னித்து விடுவீர்! தயவு செய்து பிரார்த்தனை செய்வீர் எனக்காக! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘மரணம் பயங்கரமாய்த் தோன்றியது, ஸிஸரோவுக்கு [Cicero]! விருப்பமானதாய்த் தெரிந்தது, காடோவுக்கு [Cato]! கவலை அற்றதாய்க் காணப்பட்டது, சாக்ரடாஷ் வேதாந்திக்கு!

அன்னி பிரின்ஸெஸ் [Anne Princess (1950- )]

‘மரணத்தைப் பற்றி ஒன்றைச் சொல்லத்தான் வேண்டும்! தூங்கி எழுந்து கொண்டு அதைத் தேடிச் செல்ல வேண்டிய தில்லை! எங்கே நீ தங்கி இருந்தாலும், உனக்கு அதை இலவசமாய் அவர்கள் அங்கே கொண்டு வருகிறார்கள்! ‘

அமிஸ் ஸர் கிங்ஸ்லி [AMIS Sir Kingsley (1922-1995)].

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.

ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். அவளுக்கு விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்குகிறது.

ஆறாம் காட்சி (பாகம்-12)

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]

2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]

3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]

4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]

5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]

6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்

7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடுகிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்க உரையைக் கூறி வழக்காடிய பிறகு, கெளஸான் பாதிரி ஜோனை ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜோன் கம்பத்தில் எரிக்கப்பட தெருவில் காவலரால் இழுத்துச் செல்லப் படுகிறாள்.

ஆங்கிலப் பாதிரி: [பெருஞ் சினத்துடன்] போதுமையா, உமது புனித போதனை! யாமிந்த சூனியக்காரிக்குப் பாபத் தீர்ப்போ அல்லது பாப மன்னிப்போ இந்தப் பிறவியில் அளிக்கப் போவதில்லை! எம்மிடம் ஜோனை நீவீர் ஒப்புவித்த பின்பு எந்த தப்பும் இங்கினி நேராது! அவள் நேராக தீக்கம்பத்துக்கு இழுத்துச் செல்லப் படுவாள்! நரகத்தில் விழுந்து புரள்பவளை நீவீர் உமது சிரசில் தூக்கிக் கொண்டு தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தீர்! கொண்டு செல்லுங்கள் இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசை! மந்திரக்காரிக்கு இந்த உலகத்தில் இடமில்லை!

[ஓடிப் போய் ஜோனைப் பிடித்துக் தள்ளுகிறார். பெருங் கூட்டம் பின் தொடரக் காவலர் ஜோனை மாளிகைக்கு வெளியே இழுத்துச் செல்கிறார். வழக்கறிஞர்கள், அவரது உதவியாளர்கள் ஆரவாரம் செய்து கைதட்டி ஆங்கிலப் பாதிரியை மெச்சுகிறார்கள். கெளஸான் நெற்றியில் கைவைத்த வண்ணம் அமர்கிறார். லாட்வெனு முகத்தைக் கைகளால் மூடிக் கொள்கிறார்.]

கெளஸான்: [எழுந்து நின்று கோபமாய்] ஜோனைத் தள்ளிக்கொண்டு போகாதீர்! இது காட்டுமிராண்டித் தனம்! இளம் பெண்ணின் மீது சிறிது பரிவு காட்டுங்கள்! அவள் தப்பி எங்கே ஓடப் போகிறாள் ? அவள் காலம் முடியப் போகிறது! நாங்கள் ஜோனை வார்விக் கோமகனாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆங்கிலப் பாதிரி மார்டினிடம் அவளை அனுப்ப எமக்குச் சிறிதும் விருப்ப மில்லை! மார்டின் சகோதரா! ஓரிளம் பெண்ணைத் தொட்டு ஆசீர்வதிக்கும் தகுதியுடைய உமது புனிதக் கைகள், ஜோனை ஆங்காரத்தில் தள்ளியதால் புண்பட்ட கைகள் ஆயின! புண்ணியத் தேவ தூதரான நீவீர் இத்தகைய நாகரீமற்ற முறையில் நடந்தது எமக்கு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. நெறியோடு, முறையோடு, மனிதத் தன்மையோடு நடந்து கொள்வீரா ?

ஆங்கிலப் பாதிரி மார்டின்: போதும் உமது புனிதப் புலம்பல்கள்! பிரெஞ்ச் தேவதூதரை விட யாம் பேரருள் கொண்டவர், பெண்டிர் மீது! ஆனால், இவளைப் பெண்ணென்று கருதி நீவீர் பரிவு காட்டுகிறீர்! யாம் இவளைப் பிசாசுகளின் இனமென்று தீர்மானித்து, கனல் மூட்டி எரிக்கப் போகிறோம்! எம் வழியில் யாரும் குறுக்கிட வேண்டாம்!

லாட்வெனு: கவலைப் படாதீர் கெளஸான் திருவாளரே! ஜோன் பக்கத்தில் நான் நின்று அவளைப் பாதுகாக்கிறேன். மார்டின் சகோதரரே! தீயில் வாட்டப் போகும் ஜோனுக்கு இரக்கப்பட்டு மென்மையாக, கண்ணியமாக நடத்திச் செல்லுங்கள்! [ஜோன் கூடவே லாட்வெனு செல்கிறார்]

கெளஸான்: [ஆங்காரமாக] இந்த ஆங்கிலேயர் அனைவரும் மூர்க்கமான பிடிவாதக்காரர் என்று தெரிகிறது. பாருங்கள்! ஜோனை நேராகத் தீயில் தள்ளப் போகிறார் இந்த தீவிரவாதிகள்!

[கெளஸான் மன்றத்தின் முற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறார். சற்று சாலை ஓரத்தில் ஒரு மேடையும், மேடை மீது ஒரு கம்பமும் அமைக்கப் பட்டுள்ளன. கெளஸானையும், வழக்கறிஞரைரும் தவிர ஏனையோர் அனைவரும் மேடை நோக்கிச் செல்கிறார்.]

கெளஸான்: குரங்குகள் கையிலே பூமாலைக் கொடுத்து விட்டோமே என்று என்னிதயம் துடிக்கிறது. இந்தக் கோரக் கும்பலை எப்படி மீண்டும் மனிதராக்குவது ? நாமிதை நிறுத்த வேண்டும்.

வழக்கறிஞர்: இந்த வெள்ளத்தை உங்களால் நிறுத்த முடியாது! வெள்ளத்தை நிறுத்தக் குறுக்கிட்டால், இந்த வேங்கைகள் உங்களை அடித்து நசுக்கி விடும்! ஆங்கிலேயர் தவறு செய்தால், நம்மால் திருத்த முடியாது! இந்தப் பிரச்சனை எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை நல்லது, உங்களுக்கும், எனக்கும், ஜோனுக்கும்! பாவம் ஜோன்! காட்டுப் பூனைகளின் வாயில் மாட்டிக் கொண்டாள் ஜோன்! அவளுக்கு இனி மீட்சியே இல்லை! ஜோனை அவளது கடவுள் கூட இப்போது காப்பாற்ற முடியாது.

கெளஸான்: முற்றிலும் உண்மை! நாம் கடைசிவரை இங்கு நின்று நடப்பதை எல்லாம் பார்த்த பிறகுதான் நமக்கும் நிம்மதி!

வழக்கறிஞர்: இம்மாதிரி தீக் கொளுத்தலை வேடிக்கை பார்க்க நமக்குப் பழக்கம் வேண்டும்! இப்புதுப் பழக்கம் நமக்கு வழக்கப்பட வேண்டும்! எனக்கு இதில் பழக்கம் உண்டு. சீக்கிரம் அவள் தகனம் ஆகிவிடுவாள்! சட்ட மறியா ஓரிளம் பெண்ணைப் பிடித்து ஆலயத் திருச்சபையும், ஆங்கில வர்க்கமும் இடையே நசுக்க வேண்டுமா ? ஜோன் என்னும் பணிமங்கை இனி ஒரு புராண இதிகாசமாகப் பெண்ணாகி விடுவாள்! சூனியக்காரி என்று நம்மில் பலர் ஜோனுக்கு நாமம் சூட்டினாலும், இந்தப் பாழும் தீ வேக்காடு அவளை ஓர் புனித மாதாய் ஆக்கப் போகிறது!

கெளஸான்: ஆலய வழக்கறிஞரே! உமது மூளையில் ஏதாவது கோளாறா ? நீர் என்ன சொல்கிறீர் இப்போது ? அவள் பழுதற்ற பாவை என்று பரிவு காட்டுவதற்கா யாம் உமக்குப் பணம் கொடுத்து வழக்காட அழைத்து வந்தோம் ? அவள் குற்றமற்றவளாக நீவீர் எண்ணுகிறீரா ? சொல்!

வழக்கறிஞர்: ஆம், அவள் இரக்கப்பட வேண்டிய ஓர் நிரபராதி! ஆலயத் திருவாளரே! நானினி உலகுக்கு உண்மையை அழுத்தமாகச் சொல்லலாம்! ஆங்கிலப் பாதிரி கையில் ஜோனை விட்ட பிறகு, என் பணி முடிந்து விட்டது! உங்கள் சொற்பக் காசுக்கு நான் செய்யும் அற்பக் கடமை தீர்ந்து விட்டது! படிப்பில்லா பத்தொன்பது வயதுப் பாவைக்கு என்ன ஆலயச் சட்டம் தெரியும் ? நாம் நுணுக்கமாக விளக்கும் திருச்சபை விதிகளில் ஒரு வார்த்தை கூட அவளுக்குப் புரிந்ததாக எனக்குத் தெரிய வில்லை! அவளுக்கு நமது சட்டம் புரிந்ததாக நாமெல்லாரும் நடித்தோம்! அவள் கூறிய விதிகள் நமக்குப் புரிந்தாலும், தெரியாதவாறு நாம் நடித்தோம்! பழுதுற்றோர் அளிக்கும் தண்டனையை, இறுதியில் பழுதற்றவள் அடைகிறாள்!

கெளஸான்: சரி நேரம் போகிறது. போதும் நமக்குள் வாக்குவாதம்! உன்னைப் போல் நான் வருந்த வில்லை. இதுவரை தீ வேக்காடு விழாவை நான் கண்டதில்லை! தண்டனைக் களத்துக்குப் போவோம்.

[அப்போது ஆங்கில அதிபதி, வார்விக் கோமகனார் வருகிறார். குறுக்கிட்ட கெளஸானிடம் பேசுகிறார்.]

வார்விக் கோமகனார்: [ஆச்சரியமுடன்] என்னவாயிற்று ? தீர்ப்பளிப்பைக் கொடுத்து விட்டார்களா ? ஜோனுக்கு என்ன தீர்ப்பு ? ஆட்டை இழுத்துப் போவதுபோல் எங்கே அவளை இழுத்துச் செல்கிறார்கள் ?

கெளஸான்: எல்லாம் முடிந்து விட்டது கோமகனாரே! அவள் ஆலயத் துரோகி என்று குற்றம் சாற்றப்பட்டு தீ மேடையில் ஏற்றப்படப் போகிறாள்! ஆனால் அந்த பயங்கரத் தீர்ப்பை திருச்சபை அளிக்கவில்லை!

வழக்கறிஞர்: திருச்சபை முடிவாகக் கூறிய ஆலயத் துரோகி என்னும் குற்றத்தைச் ஜோன் ஒப்புக்கொண்டு விட்டாள். ஆனால் தன்னைத் தீ மேடையில் எரிப்பதற்குப் பதிலாகத் தன் தலையை ஆறுமுறை வாளால் சீவி வீசி விடும்படி வேண்டிக் கொண்டாள்.

வார்விக் கோமகனார்: குற்றவாளியே தன் தண்டனையைத் தேடிக் கொள்வது, சட்டப்படி தவறு! குற்றம் சாற்றுவதும், தண்டிப்பதும் நீதி மன்றம்.

வழக்கறிஞர்: கோமகனாரே! திருச்சபை தீர்ப்பளித்தாலும், தண்டிப்பது தேவாலயத்தின் பொறுப்பில்லை! நாங்கள் ஜோனுக்குத் தீர்ப்பளித்த உடனே ஆங்கிலச் சகோதர் காவலாளிகளை உசுப்பி ஜோனை இழுத்துக் கொண்டு போய் விட்டார். … சரி நானும் வேடிக்கை பார்க்கப் போகிறேன். [வணங்கிக் கொண்டு வெளியேறுகிறார்]

கெளஸான்: வார்விக் கோமகனாரே! உங்களுக்காக யாம் காத்திருந்தோம். உமது கையில் ஜோனை ஒப்படைக்க வேண்டுமென யாம் விரும்பினோம். ஆனால் மார்டின் சகோதரர் பொறுமையற்று ஜோனை இழுத்துக் கொண்டு போனார்! எங்களுக்கு அது தவறாக, நியாமற்றதாகத் தோன்றியது. உங்கள் கூட்டத்தார் ஜோனை நியாயமான முறையில் சட்டப்படி நடத்துகிறாரா என்பது ஐயப்பாடுடன் தெரிகிறது!

கோமகனார்: நான் கேள்விப்பட்டது, உங்கள் அதிகாரத்துக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த நகரில் ஐயப்பாடாக உள்ளது, என்பதை! அதை நீங்கள் இல்லையென உறுதி கூற முடிந்தால் நான் உங்கள் சொற்படிப் பணிமங்கையை நடத்த ஆணை யிடுகிறேன்.

கெளஸான்: வார்விக் கோமகனாரே! இன்றைய தினத்தில் இங்கு நடந்த இந்த கோரமான நிகழ்ச்சிக்கு நாமிருவரும் கடவுளுக்குப் பதிலுரைக்க வேண்டும். திருச்சபையும் ஜோனுக்குப் பூரணத் தீர்ப்பளிக்க முடியாமல் திணரி விட்டது! ஆலயச் சட்டம் அறியாத ஓரிளம் மங்கையை, நமது தீர்மானத் திட்டப்படி மாட்ட வைத்து மடக்கி விட்டோம். ஆலயத் தீர்ப்பு ஜோனின் செவிகளில் விழும் முன்பே, ஆங்கிலப் பாதிரி சகோதரர் மார்டின் ஜோனின் கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றார். தீர்ப்பைச் சொல்வதற்கு முன்னே தீவட்டியை உங்கள் காவலர் ஏற்றி விட்டார். இப்போது நாமிருவரும் கடவுளிடம் கேட்டு மன்றாட வேண்டும், நாம் செய்தது சரியா, தப்பா வென்று ? ஜோனுக்கு இத்துணை ஆழத்தில் குழி தோண்டி விட்டு, நாமே அந்தக் குழியில் விழப் போகிறோமோ என்று அச்சம் மேலிடுகிறது!

[கெளஸான் கோபத்துடன் வெளியேறி காத்திருக்கும் வழக்கறிஞருடன் சேர்ந்து கொள்கிறார். தனிமையான, கோமகனார் காவலனை அழைக்கிறார்]

(தொடரும்) [ஆறாம் காட்சி பாகம்-13 அடுத்த வாரத் திண்ணையில்]

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain

4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

7. The New Book of Knowledge By: Grolier International (1984)

8. Britannica Concise Encyclopedia (2003)

9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)

10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)

11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan October 11, 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts