சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-5)

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘உங்கள் தடை உத்தரவை நான் ஒப்புக் கொள்ள முடியாது. நான் சிறையிலிருந்து தப்பி ஓடினால், உறுதி மொழியை மீறியதாக யாரும் என்னைக் குற்றம் சாட்டக் கூடாது! ஏனென்றால் நான் யாருடைய உறுதி மொழி ஒப்பந்த விதிமுறைக்கும் உடன்பட்டவள் இல்லை. ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.

ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். அவளுக்கு விசாரணை நடத்த வழக்கு மன்றம் தயாராகிறது.

ஆறாம் காட்சி (பாகம்-5)

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]

2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]

3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]

4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]

5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]

6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்

7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடுகிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்கமான உரையைத் தொடர்ந்து கூறிய பின்பு, வழக்கு மன்றம் துவங்குகிறது.

ஜோன்: மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு! நான் சூனியக்காரி யில்லை! வாய்ப்புக் கிடைத்தால் எந்தக் கைதியும் கொடுமைச் சிறையிலிருந்து ஏன் தப்பிச் செல்ல மாட்டான் ? மூடர்கள், முரடர்கள் கையில் சித்திரவதை செய்யப்படும் ஓரிளம் பெண் ஏன் தப்பி ஓட மாட்டாள் ?

தி எஸ்டிவெட்: [கடுமையாக] பெண்ணே! மூடு வாயை! நீதி மன்றத்தில் நீ கேள்வி கேட்பது தவறு! கேள்வி கேட்பவர் நாங்கள்! பதில் சொல்ல வேண்டியது நீ! கேள்விகள் கேட்க உனக்கெந்த உரிமையும் இல்லை! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்! உன் கேள்விக்கு மன்றத்தில் பதிலைத் தேடாதே! தெரிந்தாலும் நாங்கள் பதில் தர வேண்டு மென்று ஒரு நியதியும் கிடையாது! … இதற்குப் பதில் சொல். கோபுரத்திலிருந்து ஏன் கீழே குதித்தாய் ?

ஜோன்: கோபுரத்திலிருந்து நான் குதித்தது உங்களுக்கு எப்படித் தெரியும் ?

தி எஸ்டிவெட்: கோட்டை அகழியின் புழுதிக்குள்ளே நீ கிடந்ததைப் பலர் பார்த்திருக்கிறார்கள். கோபுரத்தை விட்டு ஏன் வெளியில் வந்தாய் என்பதற்குக் காரணத்திச் சொல்.

ஜோன்: தப்பிச் செல்ல வழியுள்ள போது, ஒருவர் ஏன் சிறையை விட்டு நழுவ மாட்டார் ?

தி எஸ்டிவெட்: நீ தப்பிச் செல்ல முயன்றாயா ? இல்லையா ? சொல்! உண்மையைச் சொல்! எத்தனை முறை நீ சிறையிலிருந்து தப்பியோட முயற்சி செய்தாய் ?

ஜோன்: ஆம் அது உண்மை. நான் தப்பிச் செல்ல முயன்றது உண்மைதான். ஒரு முறை அன்று. எத்தனை தடவை என்று நான் சொல்ல மாட்டேன். கூண்டுக் கதவு திறந்திருந்தால், பறவை ஏன் பறந்து செல்கிறது என்று என்னை நீவீர் கேட்பது வியப்பாக இருக்கிறது.

தி எஸ்டிவெட்: சிறையிலிருந்து நீ தப்பிச் செல்ல முயன்றது, மாபெரும் குற்றம். அதை நீ பலர் முன்பாக ஒப்புக் கொண்டதால், அதை மதத் துரோகக் குற்றமாக நாங்கள் எடுத்துக் கொள்ள இடமிருக்கிறது. .. மன்றத் திருவாளர்களே! இம்மாபெரும் குற்றத்தை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஜோன்: கேளுங்கள் பெரியோர்களே! அது என்ன மதத் துரோகமா ? அப்படிக் கூறுகிறார் திருச்சபை வழக்கறிஞர். சிறையில் நான் தப்பிச் சென்றது எப்படி மதத் துரோக மாகும் ? அதற்கு விளக்கம் தேவை, வழக்கறிஞரே! மதத்துரோகம் என்றால் என்ன என்று விளக்கவுரை தருவீர்களா ?

தி எஸ்டிவெட்: விளக்கம் சொல்கிறேன், கேள். நீ தேவாலயக் கைதியாய் இருக்கும் போது, வேண்டு மென்றே அதன் பிடியிலிருந்து வெட்டிக் கொள்ள முயன்றால், கிறித்துவ ஆலயத்தைப் புறக்கணிப்பு செய்கிறாய் என்று அர்த்தமாகிறது. அது மதத்துரோகம்! தப்பிச் செல்ல முயன்றதை நீ ஒப்புக் கொண்டதால், மதத்துரோகக் குற்றம் இரட்டிப்பு அடைகிறது!

ஜோன்: அது முற்றிலும் அர்த்தமற்ற வாதம்! அவ்விதம் காரணம் காட்டுவது முட்டாள்தனம்! சட்டங்கள் தெரியாத பட்டி மகள் ஆயினும் முட்டாள்தனமாய்ப் பேசி என்னை மட்டம் தட்ட நினைக்காதீர், வழக்கறிஞரே! குற்றவாளி சுற்றி வளைக்காமல் ஒப்புக் கொண்டால், குற்றத்தின் தீவிரம் குறைந்து, பாதியல்லவா ஆக வேண்டும்!

தி எஸ்டிவெட்: [மனமுடைந்து] கேட்டார்களா, மேன்மை மிகு கெளஸான் அவர்களே! நான் கண்ணும் கருத்துமாய்க் கடமை புரிவதைக் கேலி செய்கிறாள், இந்த கல்வி கற்காத காட்டுக் கன்னி! … (ஜோனைப் பார்த்து) உன் கணக்குப்படி பாதி குற்றம் என்பதை மன்றம் ஏற்றுக் கொள்ளாது. குற்றத்தின் எடையைத் தராசில் நிறுப்பவர் நாங்கள். குற்றக் கூண்டில் நிற்கும் உனக்குத் தகுதியும் இல்லை! உன்னிடம் தராசும் இல்லை! [வேதனையுடன் நாற்காலியில் அமர்கிறார்.]

கெளஸான்: [சினத்துடன் எழுந்து] பலமுறை நானுனக்கு எச்சரிக்கை செய்திருக்கிறேன். இன்னும் நீ அகந்தையுடன் பேசி எங்களுக்கு ஆத்திரம் ஊட்டுகிறாய். இந்த முரண்டு வாதங்கள் உனக்கு எந்த உதவியும் செய்யா. உன்னைக் காப்பாற்றி விடுவிப்பதற்குப் பதிலாக, மீண்டும் சிறையில் தள்ளித் தாழ்ப்பாள் இடப் போகின்றன.

ஜோன்: திருச்சபைத் தேவரே! நீங்கள் பேசுவதில் ஞானம் இல்லை! உங்கள் அதட்டல், மிரட்டல், விரட்டல் எனக்கு எந்த உதவியும் தருவதில்லை. நீங்கள் நியாயமாகப் பேசினால், நானும் நியாயமாகப் பேசுவேன்.

திருச்சபை வழக்கறிஞர்: [இடையே எழுந்து] இந்த வழக்கு மன்றம் இன்னும் ஒரு கட்டுப்பாட்டு நிலைக்கு வந்ததாகத் தெரிய வில்லை. எஸ்டிவெட் திருவாளரே! ஜோன் பைபிள் மீது உண்மை கூறுவதாக இன்னும் உறுதிமொழி அளிக்க வில்லை! அதற்குப் பிறகுதான் நீவீர் கேள்விகள் கேட்டு உண்மையை அறிந்து கொள்ள முடியும். இப்போது அவள் உண்மை கூற வேண்டும் என்று சட்டமில்லை!

ஜோன்: ஒவ்வொரு தடவையும் இதைத்தான் என்னிடம் கேட்கிறீர். நான் திரும்பத் திரும்ப உறுதி மொழி எடுத்திருக்கிறேன். இந்த வழக்குக்குச் சம்பந்தப் பட்ட தகவலைத் தவிர வேறு எதையும் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. எல்லா உண்மைகளையும் உங்களுக்கு உரைக்க மாட்டேன். முழு உண்மையைக் கூற வேண்டாமெனக் கடவுள் எனக்குக் கட்டளை இட்டுள்ளார். நான் அவற்றைக் கூறும் போது உண்மையா, பொய்யா வென்று உமக்குப் புரியாது. நானறிந்த ஓரு பழமொழி இது: எவன் ஒருவன் மிகுந்த உண்மைகளைச் சொல்கிறானோ, அவன் நிச்சயமாய்த் தூக்கிலிடப் படுவான்! நான் பைபிள் மீது ஒன்பது முறை உறுதி சொல்லி, சலித்துப் போய்விட்டேன். இனி ஒரு முறை உங்கள் முன்பு உறுதி எடுக்க இப்போது நான் மறுப்பேன். இனி எப்போதும் எடுக்கப் போவதில்லை என்று உறுதியாக, இறுதியாகச் சொல்வேன் நான்!

உதவி வழக்கறிஞர்: [பொறுமை இழந்து] மாண்புமிகு கெளஸான் அவர்களே! இது என்ன ? சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது! [அழுத்தமாக] பைபிள் மீது சத்தியம் செய்ய மறுத்தால், அவளைச் சித்திரவதை செய்ய வேண்டும்.

கெளஸான்: [பொறுமையாக] அவள் இன்னமும் ஒரு சிறுமிதான்! ஆனால் அந்த சிறுமிக்குள் உறுமிக் கொண்டிருப்பது ஓர் சிங்கம்! சிங்கத்தைப் பிடிக்க வலைதான் தேவை! சித்திரவதை தேவையா ?

திருச்சபை வழக்கறிஞர்: கேள், சொல்வதைக் கேள் ஜோன்! உறுதிமொழி எடுக்க மறுப்பவர் நிச்சயம் தண்டிக்கப் படுவார். சிந்தித்துப் பேசு. [காவலரைப் பார்த்து] சித்திரைவதை செய்யும் ஆயுதங்களைக் அவளுக்குக் காட்டி இருக்கிறீர்களா ?

காவலன்: அவை எல்லாம் தயாராக அருகில் உள்ளன. ஆயுதங்களை அவள் பார்த்திருக்கிறாள். அவற்றில் அடியும் வாங்கி அனுபவமும் பெற்றிருக்கிறாள்.

ஜோன்: [ஆங்காரமுடன்] ஆணாதிக்க சிங்கங்களே! கையிலும், காலிலும் விலங்கிட்டு ஓர் அபலைப் பெண்ணை ஆயுதத்தால் அடிக்கும் உங்கள் வல்லமையை மெச்சுகிறேன். என் அங்கங்களைத் துண்டு துண்டாய் வெட்டி, என் ஆத்மா உடலை விட்டு வெளியேற்றப் பட்டாலும், நான் இதுவரை சொன்னதற்கு மேல் இனி எதுவும் சொல்லப் போவதல்லை. நீங்கள் புரியும்படி இனி சொல்வதற்கு என்ன இருக்கிறது ? உங்கள் முரட்டுக் காவலர் அடிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அடி பொறுக்காமல் நீங்கள் கேட்கும் எதையும் சொல்லி விடுவேன். வலி தீர்ந்ததும் அவற்றை எல்லாம் நான் சொல்லவில்லை என்று திருப்பி வாங்கிக் கொள்வேன். ஆகவே அடிமேல் அடிவைத்து என்னைப் புண்படுத்தினாலும், நான் சொன்னவற்றைத் தவிர மேற்கொண்டு எதுவும் என்னிட மிருந்து பெற்றுக் கொள்ள இயலாது.

லாட்வெனு: ஜோன் சொல்வதில் சிறிது உண்மை உள்ளது. அவளை அடித்து, மிதித்துக் கக்க வைக்கும் போலி உண்மைகளை வழக்கு மன்றம் எடுத்துக் கொள்வதில் எந்த பயனுமில்லை.

உதவி வழக்கறிஞர்: ஆனால் பைபிள் மீது உறுதிமொழி எடுக்காதவரைத் தண்டிப்பது நமது வழக்கம் அல்லவா ?

திருச்சபை வழக்காளி: சிறைக் கைதியை வேண்டு மென்றே சித்திரவதை செய்வது முறையில்லை. குற்றவாளி தானே முன்வந்து எல்லாவற்றையும் சொல்லும் போது, ஆயுதத்தால் அடிப்பது நியாயமில்லை.

கோர்ஸெலஸ்: ஆனால் இந்தக் கதை வேறு மாதிரி அல்லவா போகிறது. ஜோன் உறுதிமொழி எடுக்க மறுக்கிறாளே!

லாட்வெனு: [வெறுப்படைந்து] அதனால் வழக்கப்படி அபலைப் பெண்ணைச் சித்திரவதை செய்து பேருவகை பெறுவதற்குச் செய்யலாம் என்று சொல்கிறாயா ?

கோர்ஸெலஸ்: [வியப்புடன்] அது ஒன்றும் எமக்குக் கேளிக்கை யில்லை! சட்டப்படி அவள் நீதி மன்றத்தில் உறுதிமொழி எடுக்காவிட்டால், தண்டனை உண்டு! அதைத் தவிர்க்கவும் கூடாது! தடை செய்வதும் தவறு!

திருச்சபை வழக்காளி: கனமான் அவர்களே! அவ்விதம் சொல்வது முறையில்லை. நமது ஆலயச் சட்டங்கள் அறியாத, தனது உரிமை விதிகளைத் தெரியாத அபலைப் பெண்ணை அவ்விதம் சித்திரவதை செய்வது அநியாயம்.

கோர்ஸெலஸ்: [ஆத்திரமாய்] ஆலய வழக்கறிஞரே! அந்தப் பெண் ஒரு மதத்துரோகி என்பதை மறந்து பேசுகிறீர்! அவள் தண்டனை அடைய வேண்டியவள்! அவள் தண்டிக்கப்படுவாள் என்பதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன்.

கெளஸான்: கனமான்களே! அந்த வெஞ்சினம் இங்கு நிறைவேறாது. மதத்துரோகக் குற்றம் இன்னும் நிரூபிக்கப்பட வில்லை. ஆகவே தண்டனைகளை இப்போதே தயாரிக்க வேண்டாம். இன்றைக்கு ஜோன் சித்திரவதை செய்யப்பட மாட்டாள். சித்திரவதை செய்து பதிவாகும் ஜோனின் வாக்கு மூலம் சட்டப்படிச் செல்லாது.

கோர்ஸெலஸ்: மாண்புமிகு பாதிரியார் எப்போதும் கருணையின் வடிவாய் கனிவு மழை பொழிகிறார். உண்மை மறந்து வழக்கத்திற்கு மாறாக பொறுப்பற்று நடப்பது சரியாகுமா ?

ஜோன்: [கோர்ஸெலஸைப் பார்த்து] நீவீர் ஒரு புதுவித மேலதிகாரி! முன்னால் என்ன செய்தீரோ அதையே பின்னாலும் செய்ய வேண்டு மென்னும் விதியைக் கடைப்பிடிக்கிறீர்.

உதவி வழக்காளி: சரி அது போகட்டும். ஆடு மேய்த்த பட்டிக்காரியின் கனிவுக் கதையில் மயங்காது, அவளது கரடு முரடான நாக்கின் மறுபுறத்தை இப்போது நோக்குவோம்.

ஜோன்: நான் ஆடு மேய்த்தவள் இல்லை! ஆனால் ஆட்டு இடையருக்கு எவரையும் போல் உதவி செய்திருக்கிறேன்! எனக்கு ஏது நேரம் ஆடு மேய்க்க ? வீட்டில் பெண்ணுடையில், பெண்ணைப் போல் எனது அன்னைக்கு உதவியாக வேலை செய்வேன். … நீங்கள் சிறுவயதில் ஆடு மேய்த்தீர்களா ?

உதவி வழக்காளி: [கோபமாக] கேலியாகப் பேசிக் கொள்ளும் வேளையா இது ? போதும் உன் விளையாட்டு! சிறையில் உதைபட்டும் உன் கர்வம் இன்னும் ஒடுங்க வில்லை. பார் மங்கையே பார்! நீயே உன்னைப் பெருந் தண்டனைக்குள் தள்ளிக் கொண்டு செல்கிறாய்!

ஜோன்: எனக்குத் தெரியும் அது! எனது கர்வத்துக்காக நான் தண்டிக்கப்பட வில்லையா ? நானொரு முட்டாளைப் போல் எனது போருடையை அணியாதிருந்தால், பர்கண்டி படைவீரன் என்னைப் பின்னே தாக்கிக் குதிரையிலிருந்து பிடித்திருக்க மாட்டான். இப்படி உங்களிடம் மாட்டிக் கொண்டு நான் வாதாட வேண்டி யிருக்காது!

பாதிரியார்: பெண்டிர் வேலை செய்வதில் சாமர்த்தியசாலியான நீ, வீட்டிலே ஒண்டிக் கொண்டு ஏன் வீட்டு வேலையில் ஈடுபடாமல் இருந்தாய் ?

ஜோன்: [சிரித்துக் கொண்டு] திருவாளரே! வீட்டு வேலைகள் புரிய ஏராளமான பெண்டிர் இருக்கிறார்! ஆனால் மாபெரும் எனது வேலையைச் செய்ய இங்கு யாரும் இல்லையே!

கெளஸான்: வெட்டிப் பேச்சுகள் போதும், நிறுத்துங்கள்! [ஜோனைப் பார்த்து] நானொரு முக்கிய வினாவைக் கேட்கப் போகிறேன்! நீ கனவமாகச் சிந்தித்துப் பதில் தர வேண்டும். ஏனெனில் அந்தக் கேள்விக்குப் பதில் கூறுவதில்தான் உனது வாழ்வின் நீட்சியும், பாபத்தின் நீக்கமும் ஒருங்கே தீர்மானிக்கப்படும். இறுதியில் உன் தலையில் விழப் போவது பாறாங் கல்லா அல்லது பசுமைப் பூவா எதுவானாலும், பூமியில் கிடைக்கும் புனிதக் கோயிலின் முடிவான தீர்ப்பை நீ ஏற்றுக் கொள்வாயா ? அதற்கு உனது சார்பாக நீ வழக்காடும் பொறுப்பில், ஆலயத்தின் தீவிரப்படைக் குழுவினருத் தலைவணங்கி வாதாடுவாயா ?

ஜோன்: நான் திருக்கோயிலுக்குப் பணியும் ஓர் வாலிப மங்கை. நான் அதற்குக் கட்டுப்பட்டவள். அதில் நீங்கள் கவலையுற வேண்டாம்….!

கெளஸான்: [எழுந்து நின்று மிக்க வியப்போடு] … என்ன சொன்னாய் ? நீ புனிதக் கோயிலின் ஆட்சிமைக்குத் தலை வணங்குவாயா ?

ஜோன்: [வேகமாக இடையில் குறுக்கிட்டு] ஆம் தேவாலயத் தேவரே! செய்ய முடியாத செய்கைகளைச் செய்யத் திருக்கோயில் என்னை ஆணையிட்டு அமுக்காமல் இருந்தால்….!

[கெளஸான் தலையில் கையை வைத்துக் கொண்டு பெரு மூச்சோடு நாற்காலில் சாய்கிறார். லாட்வெனு மனம் நொந்து தலையை அசைக்கிறார். வழக்காளர் வெகுண்டு உதட்டை பிதுக்குகிறார்]

(தொடரும்) [ஆறாம் காட்சி பாகம்-6 அடுத்த வாரத் திண்ணையில்]

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain

4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

7. The New Book of Knowledge By: Grolier International (1984)

8. Britannica Concise Encyclopedia (2003)

9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)

10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)

11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan August 23, 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts