சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘ஆங்கிலேயர்களே! எங்கள் பிரெஞ்ச் நாட்டை உங்கள் ஆதிக்க வர்க்கம் ஆள்வதற்கு எந்த உரிமையும் கிடையாது! கடவுள் என் மூலமாக அனுப்பிய அரச கட்டளை இது: உங்கள் கோட்டைகளை விட்டுவிட்டு, உங்கள் நாட்டுக்கு மூட்டையைக் கட்டிச் செல்லுங்கள்! இல்லை யென்றால் நாங்கள் உங்களுடன் போர் தொடுப்போம்! நீங்கள் என்றும் மறக்காதபடி, உங்களை எதிர்க்கும் எங்கள் கூக்குரல் ஓங்கி எழும்! இது எனது மூன்றாவது எச்சரிக்கைக் கடிதம்! இதுவே எனது இறுதி எச்சரிக்கை! இனிமேல் நான் எழுதி உங்களை எச்சரிக்கப் போவதில்லை! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘வலுப்படைத்த வர்க்கத்தினரைத் தாக்காத வரை, ஒருவரின் அறிவுத்திறம் (Intellect) உச்ச ஆற்றல் அடைந்ததாகக் கருதப்படுவ தில்லை. ‘

பிரெஞ்ச் எழுத்தாள மேதை: மேடம் தி ஸ்டாயல் [Madame De Stael (1766-1817)]

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று ஆங்கில ஆணாதிக்க வர்க்கம் குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறுவயதிலேயே கடவுளால் ஏவப்பட்டதாகக் கருதியவள். கல்வி கற்காத கிராமத்து நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த்துறைத் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலி, சார்லஸ் மன்னர் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிப் பரவசம் அடைந்த சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்கு உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். கோட்டையைத் தாக்கும் போது வலது நெஞ்சுக்கு மேல் கழுத்தடியில் வில்லம்பு அடித்து, இரும்புக் கவசத்தையும் ஊடுறுவிச் சென்று ஜோன் தரையில் வீழ்ந்தாள்! ஆழமாய் நுழைந்த அம்பை எடுக்கப் பிறர் அஞ்சிய போது, பற்களைக் கடித்துக் கொண்டு ஜோனே தன் கையால் அகற்றினாள்! ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! வயதான ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஜோன் ஆஃப் ஆர்க்கின் முதல் வெற்றியைக் கேள்வியுற்று, அவமானப் பட்டு அவளைப் பழிவாங்கத் திட்ட மிடுகிறார்கள். ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்கத் தேவாலயப் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடுகிறார். ஜோன் ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடித்த பிறகு அடுத்து பாரிஸைப் கைப்பற்றத் திட்டமிடுகிறாள்.

ஐந்தாம் காட்சி (பாகம்-2)

இடம்: ரைம்ஸ் கிறித்துவத் தேவாலயம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. மகுடம் சூடிய சார்லஸ் மன்னர்

2. ஜோன் ஆஃப் ஆர்க்

3. போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ்

4. அரசாங்கப் போர் அதிகாரி லா ஹயர்.

5. புளு பியர்டு எனப்படும் கில்லெஸ் தி ரைஸ்.

6. ஆர்ச்பிஷப்.

அரங்க அமைப்பு: ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன. ஆலய மாளிகையில் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ்ந்து பாராட்டுகள் தெரிவிக்க, முடி சூடிய சார்ல்ஸ் மன்னர் மகிழ்ச்சியிடன் தென்படுகிறார். பிரார்த்தனை மண்டபத்தில் தனியே மண்டியிட்டு, ஜோன் மேரி அன்னையைத் தொழுத வண்ணமிருக்கிறாள். ஆண்களின் கவசப் போருடையைச் சீராக ஜோன் அணிந்திருக்கிறாள். தளபதி துனாய்ஸ் பிரார்த்தனை மண்டபத்தில் ஜோனுடன் உரையாடும் போது, சார்லஸ் மன்னர் உள்ளே நுழைகிறார்.

சார்லஸ் மன்னர்: [ஜோனை நோக்கி] நீ கிராமத்துக்குப் போக விரும்பும் போது, நாங்கள் உன்னைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை. போய் வா ஜோன்! புரட்சி மங்கைக்கு ஓய்வு தேவை. உன் பெற்றோர் கரம் நீட்டி உன்னை வரவேற்பார்.

ஜோன்: [சற்று கசப்புடன்] கிராமத்துக்கு நான் திரும்பிச் செல்வதில் உங்களில் யாருக்கும் கவலை யில்லை! திரும்பி நான் வரக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவரும் இங்கு இருக்கிறார்! திரும்பி வந்தாலும், போருக்கு நான் போகக் கூடாது என்னும் கருத்தைக் கொண்டவரும் உள்ளார்! போருக்குப் போனாலும் திரும்பி நான் மீளக் கூடாது என்னும் நோக்கத்தில் மிதப்பாரும் இருக்கிறார்!

லோ ஹயர்: ஜோன்! அப்படி எல்லாம் நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளாதே! பிரான்ஸை விடுவிக்கப் பிறந்த உன்னைத் தேவ மங்கையாய் நினைத்து மக்கள் ஆராதனை செய்கிறார்! நெடுங்காலம் தங்கி நீ தொடங்கிய பணியை முடிக்க வேண்டும்! நீ இல்லையெனின் தலையில்லா உடம்பினராய் ஆகிவிடுவர் பிரெஞ்ச் மாந்தர்! விடுதலை மங்கை நீ என்பதை மறந்து பேசாதே!

ஜோன்: [வருத்தமுடன்] நெடுங்காலம் தங்கிப் பிரான்ஸ் முழுவதையும் விடுவிக்க எனக்குக் கடவுள் கட்டளை யிட்டாலும், அதை முடிக்கும் முன்பே மனிதர் எனது முடிவுக்கு வழி வகுக்கிறார். ஆராதிக்கும் கூட்டத்தின் அருகே, என்னை அழித்திட அன்னியர் காத்துக் கொண்டிருக்கிறார்! [துனாய்ஸை பார்த்து] … துனாய்ஸ்! நானில்லா விட்டாலும், நாம் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தை, நீ தொடர்ந்து நடத்தி வருவாயா ? ஆங்கில மூர்க்கர்களை நாட்டை விட்டு விரட்ட உணர்ச்சிக் கனல் உன் நெஞ்சிக்குள், அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறதா ?

துனாய்ஸ்: ஜோன், நீ இருக்கும் போதே உன்னுடன் இணைந்து அந்தப் போர்களை நான் முடிப்பேன்! நீ மூட்டி விட்ட கனல் என் நெஞ்சில் மட்டுமில்லை, படையினர் இதயத்திலும் எரியத் துவங்கி இருக்கிறது!

ஜோன்: [அரசர் முன்வந்து] மேன்மைமிகு மன்னரே! நான் கிராமத்துக்குப் போகும் தீர்மானத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.

சார்லஸ் மன்னர்: [ஆச்சரியமடைந்து] ஜோன்! ஏனிந்த மனமாற்றம் ? என்னவாயிற்று இப்போது ?

ஜோன்: [துனாய்ஸைப் பார்த்துச் சட்டென] துனாய்ஸ்! நாமிருவரும் படைகளோடு பாரிஸைப் பிடிக்கச் செல்வோம், கிராமத்துக்கு நான் போகும் முன்பாக! கிராமத்துக்குப் போவதை நான் தள்ளிப் போடலாம்! ஆனால் பாரிஸைப் பிடிக்கப் போகும் திட்டத்தை நாம் தள்ளிப் போடக் கூடாது!

சார்லஸ் மன்னர்: [பயந்து போய்] ஓ! வேண்டாம்! போர் வேண்டாம்! … ஜோன்! நாம் பெற்றவை எல்லாம் முற்றிலும் போய்விடும்! போதும்! போதும்! இந்தக் கோரமான போர்கள்! ஜோன்! நீ கிராமத்துக்குப் போவதை நிறுத்தாதே! ஆனால் போர்களை நிறுத்து! அந்த மரண வேதனைகளை என்னால் தாங்க முடியாது! மக்களும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்! பர்கண்டித் தளபதியுடன் நாம் ஓர் நல்ல உடன்படிக்கை செய்து கொள்ளலாம்!

ஜோன்: [ஆவேசமாக] என்ன ? பர்கண்டியுடன் உடன்படிக்கையா ? அதுவும் நல்ல உடன்படிக்கையா ? அடிமைத்தனத்தில் கூட நல்ல அடிமைத்தனம் என்று வேறு இருக்கிறதா ? ஆங்கிலேயர் நம்முடன் போரிட்டு நம் நாட்டைப் பற்றிக் நம்மை வாசற்தள மிதிப்புக் கம்பளங்களாய் விரித்திருக்கிறார்! தரையிலே மிதிபட்டு ஒட்டிக் கொண்ட கம்பளங்கள், இப்போது வெட்டிக் கொண்டு எழுவதற்கு வலுவிருந்தாலும், மனமில்லை! பர்கண்டியில் ஆட்சி செய்யும் அதிகார வர்க்கம் பிரெஞ்ச் பிறவிகள் ஆயினும், ஆங்கிலேயர் காலைச் சுற்றி நிழலாகக் கிடக்கும் பிரெஞ்ச் துரோகிகள் அவர்கள்! தேசத் துரோகிகளுடன் தேசப் பற்றுடையோர் சேரலாமா ? போரில் இழந்த நகரங்களைப் போரிட்டுதான் நாம் மீட்டுக் கொள்ள வேண்டும்! நாட்டு அமைதி நகரங்களை மீட்டுத் தராது! அமைதியை நாடுவோர், முதலில் வாளெடுத்துப் போரிட வேண்டும். முழு அமைதி நமக்கு இன்னும் வரவில்லை.

சார்லஸ் மன்னர்: ஜோன்! ஜோன்! ஜோன்! உடன்படிக்கை துரோகிகளை நண்பராக்கும்! இதுதான் சரியான தருணம்! மகுடம் சூட்டி எனக்கு நீ மாபெரும் சக்தியை அளித்திருக்கிறாய்! ஒன்றாகச் சேர்ந்து ஆண்டு வர உடன்படிக்கை செய்ய முயல்வதில் இப்போது நமக்குச் சிரமமில்லை!

[அப்போது ஆர்ச்பிஷப் மன்னர் குழுவை நோக்கி வருகிறார். சார்லஸ் மன்னருக்கும், லா ஹயருக்கும் இடையே நிற்கிறார்.]

ஆர்ச்பிஷப்: மாண்புமிகு மன்னரே! நமது போர்கள் நின்று விட்டனவா ? நாடெங்கும் அமைதி நிலவி விட்டதுவா ? எங்கள் மதப்பணிகளைத் துவங்கலாமா ?

சார்லஸ் மன்னர்: [ஏளனமாக] பணிமங்கை ஜோன் மீண்டும் போர் துவங்கத் திட்ட மிடுகிறாள்! பாரிஸைப் பிடிக்கப் போகிறாளாம்!

ஆர்ச்பிஷப்: [கேலியாக] அத்திட்டத்துக்கு உடனே மாண்புமிகு மன்னர் உடன்பட்டிருப்பார்! இதெல்லாம் மீண்டும் வரும் நமக்குத் தெரிந்த வரலாற்றுக் கதை தானே! ஜோன் போரறிவு புகட்டத் தகுதி அற்றவள்.

சார்லஸ் மன்னர்: [சற்று கடுமையாக] ஆர்ச்பிஷப் அவர்களே! அதுதான் இல்லை! இம்முறை வரலாறு மீள வில்லை! பணிமங்கையின் அடுத்த போர்த் திட்டத்துக்கு எனது பூரண மறுப்பு! முற்றிலும் எதிர்ப்பு! முழு மனது வெறுப்பு! அவளுக்கு உடன்படாமல், பர்கண்டி வர்க்கத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள எனக்கு ஏகோபித்த விருப்பம்! நமக்குக் கிடைத்திருக்கும் பகுதிகள் போதுமானவை! ஆயிரக் கணக்கான மாந்தரைப் பலிகொடுத்து, இனியும் நமக்கு நகரங்கள் எதற்கு ? உடன்படிக்கை ஏற்பாடு நடக்கட்டும்! நல்ல தருண மிது! நழுவவிடக் கூடாது இது! நல்ல சமயம் நம்மை விட்டுச் செல்வதற்குள், உடன்படிக்கை செய்து கொள்வோம். ஆர்லியன்ஸ் போரில் அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைத்தது! நாட்டில் அமைதி நிலவ வேண்டும்! போருக்குப் பலிகொடுத்த மாதரின் கண்ணீர் உலர்வதற்குள் அடுத்தொரு போரா ?

ஜோன்: மாண்புமிகு மன்னரே! கடவுள் நம்பக்கம் போரிட்டு வெற்றி பெற்றதையா அதிர்ஷ்ட வசம் என்று ஏளனமாகப் பேசுகிறீர் ? நமது புனித பூமியில் களைகளாய் ஆங்கில மூர்க்கர் இன்னும் உள்ள போது, நான் ஆரம்பித்த விடுதலைப் போரை எப்படி நிறுத்துவது ?

ஆர்ச்பிஷப்: [சற்று சினத்துடன், அழுத்தமாக] ஜோன், ஏனிப்படிக் குறுக்கே பேசுகிறாய் ? மன்னர் என் கருத்துக்களைக் கேட்டார்! உன் கருத்துக்களை அல்ல! நீ உன்னை மறந்து விடுகிறாய்! பக்கத்தில் நிற்கும் பெரிய மனிதர் உன் பார்வையில் தெரிவதில்லை! நானிருக்கும் போது அடிக்கடி நீ என்னை இவ்விதம் அவமானம் செய்கிறாய்! தெரிந்து செய்கிறாயா அல்லது தெரியாமல் செய்கிறாயா என்பது எனக்குத் தெரியாது!

ஜோன்: [கடுமையாக] இடையில் நுழைந்த உங்களுக்கு முதலுரையும் தெரியாது! முடிவுரையும் தெரியாது. .. சரி, மன்னருக்குப் பதில் கூறுங்கள் பாதிரியாரே! ஏரிலிருந்து கையை மன்னர் எடுக்கக் கூடாதென்பது கடவுளின் கட்டளை என்று கூறுங்கள் பாதிரியரே!

ஆர்ச்பிஷப்: [அதட்டலுடன்] மன்னரிடம் நான் என்ன கூற வேண்டும் என்று நீ எனக்குப் பாடம் சொல்லித் தருகிறாயா ? நன்றாக இருக்கிறது வேடிக்கை! கடவுளை நீ சந்திக்கு இழுத்து வருவதுபோல், நான் அவரிடம் நேரடித் தொடர்பு கொள்வதில்லை! தேவாலயத்தின் மூலமாகவே நான் கடவுளிடம் உரையாடுவேன்! ஆலயத்தை மதிக்காத உன்னை போன்ற போலி நபரில்லை, நான்! கிராமத்துப் பாமரக் குடும்பத்தில் பிறந்து கல்வி அறிவற்ற நீ, நேராகக் கடவுளிடம் தொடர்பு கொள்வது மாபெரும் பாபம்! அதைப் பறைசாற்றி வருவதும் மாபெரும் பாபம்! கடவுளிடம் உரையாடும் நீ, கீழ்ப்படியும் பண்பில்லாமல் கர்வத்தோடு திரிவதும் மாபெரும் பாபம்! ….

சார்லஸ் மன்னர்: [குறுக்கிட்டு] மேலும் ஜோன் தனக்குத்தான் மற்றவரை விட மிகையாகத் தெரியும் என்ற பெருமையும் இருக்கிறது!

ஜோன்: [மன வேதனைப்பட்டு] உண்மைதான். உங்கள் அனைவருக்கும் தெரியாத சில அசரீரிக் கட்டளைகளை எனக்கு மட்டும் தான் கடவுள் ஓதுகிறார்! அதை நான் தேடிப் போகவில்லை! கடவுளே என் காதில் சொல்லிக் கட்டளை இடுகிறார்! அது என் தவறன்று! ஆனால் ஆர்ச்பிஷப் கூறுவது போல், எனக்குக் கர்வம் கிடையாது! ஆனால் நான் அதிகாரத்துத் தணிந்து செல்ல மாட்டேன். எனக்கு மெய்யாக, உறுதியாகத் தெரியாததை நான் ஒருபோதும் வெளியே சொல்வதில்லை!

சார்லஸ் மன்னர், புளு பியர்டு: [இருவரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்] ஓ அப்படியா ?

ஆர்ச்பிஷப்: [அழுத்தமாக] அசரீரி எங்கிருந்து வந்தால் என்ன ? அது மெய்யென்று உனக்கு எப்படித் தெரியும் ? நீ கற்பனை செய்வதைக் கடவுளின் கட்டளை என்று பொன்முலாம் பூசுகிறாயா ?

ஜோன்: எனக்கு வரும் அசரீரிக் குரல்களை நான் நன்கு அறிவேன். அவை என் கற்பனை அல்ல! கடவுளின் கட்டளையை என் கற்பனை என்று நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு!

சார்லஸ் மன்னர்: ஓ! உனக்கு மட்டும் ஏன் அசரீரி ஆணைகள் வர வேண்டும் ? கடவுளின் ஆணைகள் எனக்கேன் வருவதில்லை ? நான்தான் மன்னன்! நீ யன்று. உனக்குச் சொல்லும் கடவுள், எனக்கே நேரடியாகச் சொல்லலாமே!

ஜோன்: மன்னரே! அவ்வித ஆணைகள் கடவுளிடமிருந்து உங்களுக்கும் வருகின்றன. ஆனால் உங்கள் காதுகளில் அவை பட்டாலும், காதுகள் அவற்றை ஈர்ப்ப தில்லை! காரணம் நீங்கள் மனம் ஊன்றிக் கடவுளை வேண்டிக் கேட்ப தில்லை! தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நம் புனித நூல் பைபிள் கூறுகிறது. நீங்கள் கடவுளின் வாசற் கதவைத் தட்டுவது மில்லை! கடவுளை மெய்யாக வேண்டிக் கேட்பது மில்லை! உங்கள் ஆத்மாவின் கனல் எழும்பி, நெஞ்சுருகிக் கடவுளை வேண்டினால், அவர் உங்களுக்குக் கட்டளை இடுவார்! வழி காட்டுவார்! இரும்பு தணலில் காய்ந்து தயாராகச் சிவந்துள்ள போதுதான், அதை அடித்து வடிக்க முடியும்! நான் சொல்ல வருவது என்ன வென்றால், பகைவர் எதிர்பாராத இச்சமயத்தில் திடாரென நமது படையினர் சாம்பைன் பகுதியைத் தாக்க வேண்டும். ஆர்லியன்ஸ் கோட்டை நம்மிடம் மீண்டதுபோல், சாம்பைன் பகுதியும் விழுந்து விடும்! அது நாம் அடுத்து பாரிஸைக் கைப்பற்றக் கதவு திறக்கும்! பாரிஸ் தலைநகரை மீட்காமல், முடி சூடிய உங்கள் மகுடத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது ?

லா ஹயர்: [குறுக்கிட்டு] அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்! ஜோன் பணிமங்கை கூறும் ஆலோசனை மிகச் சிறந்த போர்ச் சூழ்ச்சி! பானையைக் கல்லால் அடிப்பதுபோல் சாம்பைனைத் தாக்கி, பாரிஸின் வயிற்றுக்குள் நுழைந்து விடாலாம்! நீ என்ன நினைக்கிறாய், துனாய்ஸ் ?

துனாய்ஸ்: [சற்று கேலியாக] நமது பீரங்கிக் குண்டுகள் உன் மண்டைபோல் சூடேறி இருக்குமே யானால், அவ்விதக் கனல் குண்டுகள் நமக்குப் போதிய எண்ணிக்கையில் கிடைக்குமானால், நாமிந்த பூமியையே பிடித்து விடலாம்! பிடுங்குவதும், வெறிபிடித்துத் தோடுவதும் போருக்குத் துணை புரிந்தாலும், அவை தோல்வி தரும் தன்மைகளே! முன்பு நாம் தோற்றுப் போனதற்கு அத்தன்மைகள்தான் காரணம். நாம் எப்போது, எதனால் அடிக்கத் தோற்றோம் என்பது நமக்குத் தெரியாது! அதுதான் நமது பெரிய தவறு.

ஜோன்: துனாய்ஸ்! நீ ஆர்லியன்ஸில் எப்போது வெற்றி பெற்றாய் என்பது உனக்குத் தெரியாது! அது உனது உச்சத் தவறு. நான் உனக்குச் சொல்ல வேண்டிய நிலை வந்தது. ஆர்லியன்ஸ் முற்றுகையில் நீங்களும் உங்கள் ஆலோசனைக் குழுவினரும் பகைவர் சூழ மாட்டிக் கொண்ட பின்பு, தாக்குவதற்கு வழி தெரியாது தவித்தீர்கள்! அதற்கு வழி வகுத்தவள் நான்! போரை முதலில் தொடங்கத் தெரியவில்லை, உங்களுக்கு! அதைச் சொல்லித் தந்தவள் நான்! கோட்டை முன் பீரங்கிகளை எவ்விதக் கோணங்களில் நிறுத்தி குண்டுகளை ஏவுவது என்பது தெரியவில்லை உங்களுக்கு! அவற்றைக் கூட அமைத்துக் காட்டியவள் நான்!

துனாய்ஸ்: [சற்று வெட்கப்பட்டுத் தலை குனிந்து] ஜோன்! என்னருமை ஜோன்! ஜெனரல் ஜோன்! போதும், போதும் என் மானத்தை மன்னர் முன் வாங்குவது.

ஜோன்: என் போர்த் திறமையைப் பற்றி நான் புகழ்த்திக் கொள்ளக் கூடாது! என்னைப் பற்றி நீயே மன்னரிடம் சொல், துனாய்ஸ்!

(தொடரும்) (ஐந்தாம் காட்சி தொடர்ச்சி பாகம்-3 அடுத்த வாரத் திண்ணையில்)

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain

4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

7. The New Book of Knowledge By: Grolier International (1984)

8. Britannica Concise Encyclopedia (2003)

9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)

10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)

11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan July 4, 2005]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts