நாகரத்தினம் கிருஷ்ணா
DANS LES CAVEAUX D ‘ ‘INSONDABLE TRISTESSE
OU LE DESTIN M ‘A DEJA RELEGUE;
OU JAMAIS N ‘ENTRE UN RAYON ROSE ET GAI;
OU SEUL AVEC LA NUIT, MAUSSADE HOTESSE….
– Charles BAUDELAIRE
இரவு நலிந்த உயிர்களுக்கான சோதனைக்காலம். சபிக்கப்பட்ட மனிதர்களின் வேதனைகள், பகல்களில் உடலோடு சம்பந்தப்பட்டவை, இரவுகளில் உயிரோடு சம்பந்தப்பட்டவை. இரவு என்றவுடன், இருள், நிசப்தம், கலக்கம், அச்சம், இழப்பென்று, மனதிற் தோன்றுவதெல்லாம் எதிர்மறைச் சங்கதிகள். விடிகின்றபொழுது, நம்மில் அநேகருக்கு முந்தைய இரவின் தொடர்ச்சியாக நேருகின்ற சங்கடமும், சஞ்சலமும் ஆயுள் பரியந்தம் தொடர்கின்றது, அதற்குப் பிறகு அனேக இரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு முடியாமலேயே நீள்கிறது, பகல்கூட இருண்டுவிடுகிறது. இரவைச் சொல்வதால், பகல்நேரங்களில் அனர்த்தங்கள் இல்லை என்று ஆகிவிடுமா என்ன ? ஆனால் இவ்வனர்த்தங்களுக்கு, இரவுநேரங்களில் இருக்கின்ற வீரியமும் பலமும், அதிகம். இரவு என்பதே அழிவுகளுக்கான பரணியா ? நம்பிக்கைகளுக்கான சமாதியா ?.
பிரெஞ்சுத் தீவில் இருள் மண்டிக் கிடந்தது. சூரியன் மேற்கில், படுக்கையிலிருந்தான்.
பகல் நேரத்தில் சுற்றித்திரிந்த பறவைகளும், விலங்குகளும் தங்கள் கூட்டிற்கும், இருப்பிடங்களுக்கும் திரும்பியிருந்தன. அவைகளின் அடிமனதிலும் தங்கள் எதிரிகள் குறித்ததான அச்சம் இருக்கவேண்டும். கண்கள் மூடியிருக்க, ஆபத்தை அடையாளம் காணும் எச்சரிக்கை அவற்றின் உடல்களில் இருந்தது.
எந்தநேரத்திலும், மரூன்களில் எவரேனும் பண்ணைகளில் அத்துமீறி நுழைந்து, கபான்களைக் கொளுத்தலாம், தங்களை வெட்டிப்போடவோ அல்லது உயிரோடு எரிக்கவோ செய்யலாம். தங்கள் பெண்களைத் தூக்கிச்செல்லலாம், என்கின்ற அச்சத்தின் காரணமாக, நம்பிக்கைக்குரிய அடிமைகள்- இருட்டும்வரை பண்ணையில் உழைத்த அலுப்போடு திரும்பியவர்கள் – அவசரமாக உண்டு, அவசரமாய் உடல் உறவுகொள்ளுகின்றார்கள்.
ஒப்பந்தக் கூலிகளென்றபோதிலும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்ற தமிழர்களான தச்சர்கள், கம்மாளர்கள், கொல்லத்துக்காரர்கள், கும்பெனி நிர்வாகத்திலிருந்த ஊழியர்கள் பொதுவாகவே குடிசைக்குத் திரும்ப இரவு முதற் சாமம் முடிந்துவிடும். இரவு உணவிற்குப் பிறகு உழைத்த களைப்பில், பெரும்பாலான மலபாரிகள் குறட்டைவிட்டுக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள்.
நாயக்கர் தம்பதிகள் கடந்த அரைமணித் தியாலமாகத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு போனாலும், அந்திசாயும் நேரத்திற்கு முன்பாக, கபானில் இருப்பதை வழக்கப்படுத்தியிருந்த வளர்ப்புமகள் நீலவேணியை எதிர்பார்த்துக் அவர்கள் கண்கள் பூத்துவிட்டன. நாயக்கர் மனைவி குரலெடுத்த அழ இவர் தலையில் கைவைத்துக் கொண்டிருக்கிறார்.
களஞ்சியத்தில் பொன்னிருந்தும்
கழுத்து நிறையலையே!
விளைஞ்ச கதிரிருந்தும்
வீடுவந்து சேரலையே!
நாயக்கர் தம்பதிகள் தீவுக்குத் தேசாந்திரம் வந்த கதைக்கு, கண், காது, மூக்கு எல்லாமுண்டு. நிலம் நீச்சென்று கெளரதையாய் வாழ்ந்தவருக்கு சோதனை தவமாத் தவங்கிடந்து பெற்றெடுத்த சீமந்தப் புத்திரனிடமிருந்து வந்தது. காடு, கரம்பைகளைக் கூத்திக்கும் குடிக்குமாக பங்குபோட்டுக் கொடுத்தவன், அண்டா குண்டாவையும் விட்டு வைக்கவில்லை. அடகுவைக்கக் கொண்டுபோனான். கண்ணுக்கெதிரே பிள்ளை, இப்படிக் குட்டிச்சுவராய் சீரழிந்து நிற்பதைக் கண்டு புருஷனுக்கும் பெண்ஜாதிக்கும் கண்களில் குருதியே சுரந்தது. தலைகுனிந்து வாழலாச்சுது. நாயக்கரிடம் தொழில் இருந்தது. கருங்கற்கற்களை அளவாய் உடைத்து, அடுக்கிச் சுவர் எழுப்பினால், நூல் பிடித்தது போலவிருக்கும். கைகள் பிசகியதில்லை. பிரெஞ்சுத் தீவுக்குப் போனால் பிழைக்கலாமென ஊர் மக்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. காமாட்சி அம்மாள் தீவுக்குப் பிள்ளைகளோடு புறப்பட, அக்குடும்பத்தோடுகொண்டிருந்த உறவு காரணமாகத் தீவுக்கு இவர்களும் வர நேர்ந்தது.
தீவுக்கு வந்தபின்னரும், பிள்ளைப்பாசம் விடமாட்டேன் என்கிறது. ஆனாலும், நாயக்கர் அதன் வாடையினைப் பிறர் அறியாமல் பொத்தி பொத்தி வைத்திருந்தார். கண்கள் கலங்குகின்றபோது, பாரியாள் விசாலாட்சி அறியாமல் தோளில் கிடக்கும் ஈர இழைத் துண்டினால், ஒத்திக்கொள்வார். நாயக்கர் விளையாட்டு விசாலாட்சிக்குத் தெரியாதா என்ன. அவள் தம்பாட்டுக்கு, இவர் வேலைக்குப் போகும்மட்டும் காத்திருந்து, நாள் முழுக்க மூக்கைச் சிந்திக்கொண்டு தண்ணிவென்னி யில்லாமல் சுருண்டு கிடப்பாள்.
நீலவேணி, குடிசைக்குள் அழைத்துவந்தபோது, சந்தோஷம் கூடவே வந்திருந்தது.. தம்பதிகளின் தீவு வாழ்க்கைக்கு அர்த்தம் விளங்கயிருந்தது. தாயை இழந்து தவித்த பெண் நீலவேணியைத் துறைமுகத்தில்வைத்துக் கண்டதும், கபானுக்கு அழைத்துவந்ததும், அதன்பின் தாங்களே அவளுக்குத் தந்தையும் தாயுமாய் மாறிப்போனதும், ஈசன் செயலன்றி வேறல்ல என்பதில் தம்பதிகள் உறுதியாக இருந்தார்கள்.
நீலவேணி துடுக்கான பெண், வெட்டொன்று துண்டு ரெண்டு எனபதான பேச்சு. எவர் மனதையும் நோகச் செய்யாத கிண்டலும், கேளிக்கையும், சுற்றியிருக்கும் மனிதர்களிடமும் சுலபாய்த் தொற்றிக்கொள்ளும். எள் என்றால் எண்ணெய் என்று நிற்பவள். அரிசிகளைந்துகொண்டிருப்பாள், அடுத்த சிலநாழிகைகளில் விறகொடித்து வருவாள். ஆற்றங்கரையில் தண்ணீர் சேந்துவாள், அடுத்தகணம் அக்கறையாய் நாயக்கரிடம், ‘இந்தாருங்களப்பா சுக்குத் தண்ணீர் என்பாள். ‘ அம்மா விசாலாட்சிக்கு, வேணாமென மறுத்தாலும், விடாப்பிடியாக கால்களைப் பிடித்துவிடுவாள், தூக்கமின்றி விசிறிக்கொண்டிருக்கும் நாயக்கருக்குத் திருவாசகம் படிக்க உட்கார்ந்துவிடுவாள்.
கடந்த சிலமாதங்களாக நாயக்கருக்கு பம்ப்ள்மூஸ் பிரதேசத்தில் தேவாலயக் கட்டிடப் பணி.. வேலை முடிந்து போர்லூயி பிரதேசத்திலிருக்கும், மலபாரிகள் குடியிருப்புக்கு வந்துசேர, மிகவும் தாமதமாகிப் போகிறது. இன்றைக்கும் அப்படித்தான் வந்திருந்தார். கபானுக்கு வெளியே குடத்திலிருந்த தண்ணீரைச் சேந்தி, கால்களைக் கழுவுகின்றபோதே, பெண்சாதி விசாலாட்சியின் பதட்டத்தினைக் கவனித்தார். கபானுக்குள் நுழைந்ததுதான் தாமதம்., அவள் வெடித்துக் கொண்டு அழுதாள். நீலவேணி வீட்டிற்க்குத் திரும்பாதாதை, உடைந்தவார்த்தைகளில் அழுகைக்கிடையிற் சொல்லிமுடித்தாள். காத்திருந்தார்கள், அரை மணிநேரமாயிற்று, ஒருமணி நேரமாயிற்று. அக்கம் பக்கமிருக்குமிருக்கும் கபான்களில் காவிளக்குகள் அணைக்கபட்டன. சில குடும்பங்கள் நித்திரைக்கு ஆயத்தப்பட்டார்கள். இரவு மூன்றாம் சாமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது, நீலவேணி கபானுக்குத் திரும்பவில்லை. நாயக்கர் மனத்தில் பயம் தொற்றிக்கொண்டது.
காமாட்சி அம்மாளைத் தேடி ஓடினார். அங்கே, கைலாசம் ஒருபக்கம் தெய்வானை ஒருபக்கம், காமாட்சி அம்மாள் ஒருபக்கமென ஆளாளுக்கு முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டிருந்தனர். பார்த்தமாத்திரத்தில் அவர்களுக்கிடையேயும் என்னவோ நடந்திருக்கிறது என்பதை ஊகித்தார்.
‘தெய்வானை! என்ன நடந்தது ? கைலாசம் நீயாவது சொல்லப்பா ? நீலவேணி வீடு திரும்பாததன் காரணம் தெரியுமா ? ‘ நாயக்கர் கேட்கிறார்.
‘இதென்ன நெஞ்சில் நெருப்பைக் கொட்டுகிறீர். நான் இவனிடம் கள்ளிப் பெட்டிச் சமாசாரத்தினை என்னிடம் மறைத்த முகாந்திரத்தையல்லவா விசாரித்துக்கொண்டிருந்தேன். என்ன நடந்தது ? நீலவேணி கபானுக்கு இன்னும் திரும்பவில்லையா ? வயசு வந்தப் பெண் ஆயிற்றே. ஈஸ்வரா!.. இது என்ன சோதனை ? ‘ -காமாட்சி அம்மாள்.
‘நாயக்கர் மாமா! நாங்களிருவரும் ஒன்றாகத் தானே, கடற்கரையிலிருந்து திரும்பினோம். அவள் எலுமிச்சை நதிக்கரைவரை சென்றுவிட்டு கபானுக்குத் திரும்புவதாக என்னிடம் சொல்லிச் சென்றாளே ? ‘
காமாட்சி அம்மாள் பதறிக்கொண்டு கபானுக்கு வெளியே ஓடினார். ‘கைலாசம் ஓடு..! அக்கம்பக்கத்திலிருக்கிற நமது ஆட்களை எழுப்பு. மதுரை, பாவாடை, நாராயணசாமி கொஞ்சம் எழுந்துவாங்கோ! ‘
காமாட்சியின் குரல்கேட்டுக் கபான்களின் தட்டிக்கதவுகள் திறந்துகொண்டன. கும்பல் சேர்ந்தது. ஆளாளுக்கு ஒரு திசையை வரித்துக்கொண்டு ஓடினார்கள். எட்டியான் எலுமிச்சை நதித் திசைக்காய் ஓடினான். கைலாசம் கடற்கரைத் திசைக்காய் ஓடினான். இதுபோன்ற நேரங்களில் சில்வியின் ஒத்தாசை அவசியம் என நினைத்தான்.
கைலாசம் புறப்பட்ட சில நாழிகைகளில், தெய்வானை ஓடிவந்தாள்.
‘அண்ணா! நில்லுங்கள். லஸ்கர் குடியிருப்பிற்குச் சென்று பொன்னப்ப ஆசாரியை விசாரியுங்கள். அவரை பார்க்கவேணுமென்றே எலுமிச்சை நதித் திசைக்காய் சாயந்திரம் நீலவேணி சென்றாள். பொன்னப்ப ஆசாரி தப்பான மனிதரல்ல. எனக்கென்னவோ பிரான்சிஸ் அஞ்ஞேலை நினைத்துத்தான் கொஞ்சம் அச்சம். ‘
‘தெய்வானை! உன்மீது, அம்மா அதிகமாகப் பிரியம் வைத்து கெடுத்துவிட்டார்கள். இந்தப் பிரச்சினைகள் ஓயட்டும் என் கோபத்தைக் காட்டுகிறேன். போல்பிரபுவின் மகன் பிரான்சிஸ் ஓர் அயோக்கியனாயிற்றே. அவனிடத்தில் உங்களுக்கென்ன வம்பு. ‘
‘அதைச் சொல்ல இதுவா நேரம். நீங்கள் பொன்னப்ப ஆசாரியையும், சில்வியையும் அழைத்துக்கொண்டு எதற்கும் போல்பண்ணைவரை போய்வருவது உத்தமம். கால தாமதம் செய்யவேணாம். ‘
கைலாசம் மேற்கே இறங்கி ஓடுவதைக் கவனித்துவிட்டு, தெய்வானை கபானுக்குத் திரும்பினாள். நீலவேணியைத் தேடிப்போனவர்கள்போக, காத்திருந்த சனங்கள், கதைகளைச் சொன்னார்கள். ஒரு சிலர் பொன்னப்ப ஆசாரியோடு நீலவேணியைப் பலமுறை பார்த்ததாக சத்தியம் செய்தார்கள். சிலர் மரூன்களிடம் பிடிபட்டிருக்கலாம் என்று அபிராயப்பட்டார்கள். சிலர் மனித மாமிசம் சாப்பிடும் கறுப்பர்களிடம் அகப்பட்டிருக்கலாமென உச்சுக் கொட்டினார்கள். காட்டு மிருகங்கள் மனிதர்களை அடித்து இழுத்துப் போனதை தான் கண்ணால் பலமுறைப் பார்த்திருப்பதாக ஒருவன் துண்டைப் போட்டுத் தாண்டினான்.
கேட்ட நாயக்கருக்கு துக்கம் பீரிட்டுக்கொண்டு வெளிப்பட்டது.
‘ஈஸ்வரா இது என்னடா சோதனை!. இப்படி வாரிக்கொடுக்கவா அந்தப் பெண்ணை எங்களிடம் சேர்ப்பித்தாய்! துண்டை வாயில் அடைத்துக்கொண்டு குமுறிக் குமுறி அழுதார். விசாலாட்சி அழுதாள். தம்பதிகளைத் தேற்றும் வகை தெரியாது காமாட்சி அம்மாள் அழுதாள். கூட்டம் முழுக்க அழுதது.
போல்பிரபுவின் பண்ணை. குதிரைகள் அடைத்துவைத்திருந்த கொட்டடி. கோரைப் புற்களைத் தெளித்து காத்தமுத்துப் படுத்திருந்தான். குதிரைகளின் சாணமும், மூத்திரமும் கலந்து மணந்தது. கொசுக்களின் கடி. சாயந்திரம் தம்பிரான் புறப்பட்டுப்போனதிலிருந்து, கொட்டடி வேலைகள் நித்திரை கொள்ளும்வரை அவனுக்கெனக் காத்திருந்தன.
பண்ணையிலிருந்த கறுப்பன் ஒருவன், குதிரைலாயத்தில் செய்யவேண்டிய வேலைகளைச் சமிக்ஞையில் காட்டப் புரிந்துகொண்டு செயல்பட்டான். மூத்திரமும் சாணமுமாக சொதசொதவென்றிருந்த கோரைப்புற்களை அகற்றினான். ஒவ்வொரு குதிரையாய் அவிழ்த்துச்சென்று சுனைநீரில் தேய்த்துக் கழுவினான். மார்பளவு தண்ணீரில் குதிரைகளை நடக்கச் செய்தான். ஒரு பாக்கு மட்டையைக்கொண்டு குதிரையின் உடலில் ஒட்டியிருந்த நீரினை வழித்தெடுத்தான். கொட்டடிக்குக் கொண்டுவந்தான். குதிரைக்கு வேண்டிய வைக்கோலும், மரத்தொட்டியில் தீனியும் வைத்துமுடிக்க, கமலா கிண்ணியொன்றில் கோதுமைக் கஞ்சி கொண்டுவந்திருந்தாள். அவளை மறுபடியும் பார்க்க நேர்ந்ததில் அலுப்பனைத்தும் நொடியிற் பறந்துபோயிற்று. ஆகாரமிட்டுவிட்டுச் சென்றவளை, ‘கமலா..! ‘வென்று மனதிலேற்பட்டக் கிளர்ச்சியுடன், இவன்அழைத்ததை அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
அயர்ந்து தூங்கியவன், அர்த்தராத்தியில் விழித்துக்கொண்டான். அவன் முகத்தில் நெருக்கமாக உஷ்ண மூச்சு. இருளில், மையில் நனைத்த மற்றொரு முகம். பிரமையோ ?, கைகளை மார்புக்குக்கு நேராய் கொண்டுவந்தான். மனித உடல், பெண்ணுடல். மோகினிப் பிசாசோ ? திடுக்கிட்டு எழுந்தான். கமலம்.
‘நீயா ? ‘
‘உஸ். ‘. அவன் வாயைப் பொத்தினாள். ‘என் பின்னால் வா ‘. சொன்னவள்பின்னே, வேறு வார்த்தையேதுமின்றி நடந்தான். இருவரும் போல்பிரபுவுடைய வில்லாவின் பின்புறம் இருந்த வராண்டாவை அடைந்தார்கள். இடதுபுறத்திலிருந்த மரப்படிகளை உபயோகித்து மேலே வந்தார்கள். தளங்களின் நடக்கின்றபோது மரப்பலகைகள் கிரீச்சிடும் ஓசைக்குப் பயந்து மெல்ல நடந்தார்கள். இருளில், அவள் நடந்து சென்றவிதம், அவ்வீட்டின் கட்டமைப்பினை நன்கு அறிந்தவள் என்பதை உணர்த்தியது. சிறிது நேரத்தில் இடப்புறத்திலிருந்த சிறிய கதவினைத் திறந்து காத்தமுத்துவை உள்ளே வாங்கிக்கொண்டாள். தாழ்ப்பாைளைப் போட்டாள். உள்ளிருந்த மெழுவர்த்தியைக் கொளுத்தினாள். சிறிய அறை, அடைத்துக்கொண்டு தட்டுமுட்டு சாமான்கள்.
மெழுகுவர்த்தியின் மங்கலான ஒளியில் பளபளக்கும் அவளது கன்னங்கள். மார்புகள், விம்முவதும் தணிவதுமாகவிருக்கின்றன. கண்களைப் பார்க்க, உடையார் பெண்ஜாதி, சிறுக்கி மனோரஞ்சிதம் ஞாபகத்திற்கு வருகிறாள். இவனுக்கு அவளது தேவையென்ன என்பது விளங்கிப்போனது. தோளில் ஆர்வத்தோடு கைகளைப் போடுகிறான். அனுமதித்தவள், இருகைகளினாலும் முகத்தினைப் புதைத்துக்கொண்டாள். இதற்கெனவே காத்திருந்ததுபோல மார்பை மறைத்திருந்த சேலை நழுவுகிறது. விறைத்திருந்த முலைக் காம்புகளில் பசியோடிருந்த குழந்தையின்வேகத்தோடு செயல்பட்டான். உடலின் கீழ்ப்பகுதியில் நாபிக்குக் கீழே விரல்களைக் கொண்டுபோய் சுற்றியிருந்த புடவையை அவசர அவசரமாகக் களைந்து, எறிகிறான். அவளது வலதுகை அவனது இடையிலிருந்தத் துண்டினை வேகமாய்க் களைந்து, கீழே பயணிக்கிறது.. அவனுக்குப் பித்தம் உச்சத்திலிருந்தது. ஆவேசத்துடன் வாரி அணைத்துக்கொண்டான். இருவரது கால்களிலும் உதைபட்டதில் பாத்திரங்கள் உருண்டன..
இவர்களிருந்த அறைக்கதவின் பின்புறம், தளத்தின் நடைபாதையில் எவரோ தடதவென்று ஓடிவரும் சத்தம்., தாழ்ப்பாளிட்ட கதவருகே வந்ததும் நின்றது.. சுவசத்தின் தன்மையும், ஓடிவந்த காலடி ஓசைகளின் மென்மையும் அவள் பெண்ணென்று அனுமானம் செய்விக்கிறது. அடுத்த சில நொடிகளில், சற்று அழுத்தமான ஆனால் தடுமாறிக்கொண்டு முன்னேறும் ஓர் ஆணின் காலடிகள்.
காத்தமுத்துவும், கமலாவும் அவசரகதியில் தங்கள் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள். கலக்கமும், குழப்பமும் சேர்ந்துகொள்ளக் காத்திருந்தார்கள். கதவருகே நிற்கும் பெண்ணிடமிருந்து, இந்த முறை விசும்பி அழும் குரல்.
‘துரை.. வேணாம் ஐயா, கையெடுத்து கும்பிடறேன்! …என்னை விட்டுடுங்கய்யா. இந்தச் சித்திரைவதையை என்னாலத் தாங்கமுடியலையா.! .என்னைக் .கொண்ணுப்போட்டுடுங்கோ… ‘
‘அம்மா..! வேணாம்மா.. என்னை அடிக்காதேம்மா. நான் இனிமேல் மரத்திலெல்லாம் ஏறமாட்டேம்மா ‘- கமலா, இந்து தேசத்திலே, தனது குடிசையிலே, கேட்டுப்பழகிய நீலவேணியின் குரல்.
‘நீலவேணி..! ‘ கமலம் வெறிபிடித்தவள் போல கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்தாள். காத்தமுத்துவும் அவள் பின்னே வெளிப்பட்டு நின்றான்.
நீலவேணி – தீவிற்கு வந்த முதல்நாளிலிருந்து தேடிக்கொண்டிருக்கிற கமலாவின் அருமை மகள் நிர்வாணமாக நிற்கிறாள். தொடைகளின் இருபுறமும் இரத்தம் வடிகின்றது. சிதைந்திருக்கும் மார்புகள், உடலெங்கும் சிராய்ப்புகள், இரத்த விளாறுகள். எதிரே பிரான்சிஸ், போல்பிரபுவின் மகன், நிர்வாணத்துடன் அருவருப்பாய் பல்லை இளித்துக்கொண்டு, இவர்களிருவரும் பார்த்துக்கொண்டிருக்க, நீலவேணியின் மீதுபாய்கிறான். அவள் தலை ‘நச் ‘ என்று சுவற்றில் மோத, கீழே விழுந்து மூர்ச்சை ஆகிறாள். அவள்மீது படிந்து, தன்னுடல் அவஸ்தையை வெளிபடுத்தியவனாய், ஒரு மிருகத்தைப்போல இயங்குகிறான்.
கமலம் ஆவேசம் கொண்டவளாய், அவன் மீது பாய்ந்து பிறாண்டினாள். பலம் கொண்டமட்டும் முயன்று அவனை நீலவேணியிடமிருந்து பிரிக்கமுயன்றாள். அவன் இவளுடலைக் குறிவைத்துத் திரும்புகிறான். பட்டினிகிடந்த நடந்த நாய் மாமிசத்தைக் கவ்விப் பிடிப்பதுபோல, இவளது மார்பைக் கவ்வுகிறான். காத்தமுத்து, பின்புறம் தட்டுமுட்டு சாமன்கள் கிடந்த அறைக்குள் நுழைந்தவன், கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு கோடரியோடு வெளிப்பட்டான். பிரான்சிஸ்சுவின் பிடறியில் ஓங்கி அடித்தான். மண்டை உடைந்து மூளை தெறித்துவிழ, இரத்தம் பீச்சியடிக்கிறது. கமலம் இறந்தவனைப் புரட்டிப்போட்டுவிட்டு எழுந்திருக்கமுயற்சிக்கிறாள். காத்தமுத்து அதிர்ச்சியில் உறைந்துபோகிறான்.. கோடறி கைகளிலிருந்து நழுவுகிறது.
திபுதிபுவென மனிதர்கள் ஓடிவரும் சத்தம். மரப்படிகளேறி மேலே வருகின்றார்கள். பண்ணைக்காவலர்கள் சூழ வந்து, மெழுகுவர்த்தீயுடன் போல் பிரபு.
/தொடரும்/
- துர்நாற்றம்
- மாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- கடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே!
- தென் இலங்கை கவிதை நூல் வெளியீடு
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…
- கருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு
- சொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு
- ஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
- மெய்மையின் மயக்கம்-15
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- யேசுமாதா போன்ற முகம்
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- ஈரடி கவிதைகள்
- நம்பிக்கை துரோகி
- நிலாச் சோறு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- வீடு
- வலை
- வலை
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வேறுபாடு….!
- பெரியபுராணம் – 7
- சாகர புஷ்பங்கள்
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- ஊருப்பொண்ணு
- தோல்விக்குப்பின்
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- எங்க ஊரு காதல பத்தி…
- பதவி உயர்வு
- அன்புடன் இதயம் – 30
- விடியும்
- ஊரறிய மாலையிட..
- பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
Thinnai – Weekly Tamil Magazine - சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- கவிக்கட்டு 23
- நூல் வெளீயிடு
- வலை
- காதலன்
- வலை
- தவறாக ஒரு அடையாளம்