நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


All spirits tend towards perfection, and are furnished by God with the means of advancement through the trials of corporeal life; but the divine justice compels them to accomplish in new existences, that which they have not been able to do, or to complete, in a previous trial.

-Allan Kardec

இருபதாம் நூற்றாண்டு….

‘ப்பா என்ன வெய்யில்! இப்படி கொளுத்துதே! வெயில் சுளீரென்று முகத்தில் அறைந்தது.

குப்பென்று மூத்திரவாடை, குறுக்கும் நெடுக்குமாக தொலைத்துவிட்டு ஓடும் மனிதர்கள், சகட்டுமேனிக்கு பஸ் ஹாரனை ஒலித்து, பயணிகள் சிதறு தேங்காய்களாகத் தெறித்து விழுவதை ரசிக்கும் ஓட்டுனர்கள். சோர்ந்திருந்த பழைய ஜோடிகள், உற்சாகத்துடன் வலம்வரும் புதிய ஜோடிகள். கோபத்துடனோ சந்தோஷத்துடனோ தாய்வீட்டிற்குச் செல்லும் பெண்கள். கல்யாணத்திற்குப் போகின்றவர்கள், முடிந்து வருகின்றவர்கள். இழவுவீடு செல்லும் உறவுகள்.காரியம் முடித்து திரும்புகின்றவர்கள். ஆண்கள் பெண்கள், குழந்தைகள் முதியவர்கள், விற்பவர்கள் வாங்குபவர்கள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், பழங்கள்; இடையில் வேலு.

பாகூர் வழியாகப் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த கடலூர் பஸ், பயணிகளைப் பிதுக்கித் தள்ளியது. முண்டியடித்து, கூட்டத்திற் புகுந்து வெளியே வந்தபோது சட்டை கசங்கிக் கிடந்தது. அருகிலிருக்கும் டிரை கிளீனிங் செண்டரில் கொடுத்து அயன்பண்ணிப் போட்டபிறகுதான் மற்ற வேலைகளை கவனிக்கணுமென வேலு தீர்மானித்தான்.

இவனைத் தள்ளிக்கொண்டு ஒருவன் அவசரமாக ஓடினான். அறிஞர் அண்ணா புத்தகத்தினைத் தீவிரமாய் வாசித்தவாறிருக்க, சக பயணிகளிடமிருந்து முடிந்த மட்டும் மறைத்துக்கொண்டதாக பாவலா செய்து ஒண்ணுக்குப் போனான். படுத்துக்கிடந்த மாடொன்று திடுமென்று எழுந்து நின்றது. அவசரமாய் முடித்து, உதறிக் கொண்டு திரும்பிவனின் கன்னத்தில் பளீரென அறைவிழுந்தது. விட்டவன் நம் வேலு, தன் மனதிற்குள். கழுத்துப் பட்டை கசகசவென்று வேர்வையில் நனைந்திருந்தது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தான். குறுக்காய் மடித்துக் கழுத்தில் செருகினான். வேலுவை உரசிக்கொண்டு இருமாடுகள் நடந்து சென்று தள்ளியிருந்த குப்பைத் தொட்டியில் தலையைத் துழாவிக் கொண்டிருந்தன. கோணியுடன் ஓடிவந்த காக்காய் மனிதன், மாடுகளை ஓட்ட முயன்று, முடியாமல் தொடர்ந்து அடுத்தத் தொட்டியைத் தேடி ஓடினான்.

எல்லோரிடத்திலும் தேடல். நேரான பாதையில் அல்லது குறுக்காக அல்லது சுற்றிவந்து முடிந்தவரை இன்றே அல்லது நாளை அல்லது நாளை மறுநாள் அல்லது எதிர்காலத்தில் ஒரு புள்ளியில் எதனையோ எவரையோ சந்தித்தாகவேண்டும். சந்தித்தபிறகு மறுபடியும் தேடல். மறுபடியும் நேராய், மறுபடியும் குறுக்கு வழியில் அல்லது சுற்றிக்கொண்டு பயணம்..பயணம் முடிவற்ற பயணம். மதவாதிகளைக் கேட்டால் கர்மா, பிறப்பென்று நியாயப்படுத்துவார்கள். இவனது மார்க்ஸிய தோழர்கள் ‘தேவை ‘ ‘அளிப்பு ‘ என்பார்கள். ஏதோவொரு விதி, எல்லாவற்றிற்கும் பொருந்துகிறது.

பிரெஞ்சு நண்பன் மையப்புள்ளியில் இவனைக் கரகரவென்று சுற்றிநிறுத்துகிறான். சுற்றுகின்றவரை தெளிவின்மை. மயக்கம் தீர்ந்தபிறகு, இவன் முகவரி என்ன என்பது தெளிவாகிறது. இவனுக்கு வறுமையை நியாயப்படுத்தும் காரணங்கள் புரிகின்றன; ஊகங்கள் புரியமறுக்கின்றன.

இப்பல்லாம் பெர்னார்ஃபோந்தேன் அடிக்கடி மறுபிறவி குறித்து நிறைய பேசறான். அவனோடச் சேர்த்து இவனையும் குழப்பிடறான். பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்பதெல்லாம் ஒரு சிறிய கூட்டத்திற்கானவை. இவனைப்போல கோடானு கோடிகளுக்கல்ல என்பதை புரிந்தும் இப்படி அலைவது சிநேகிதனுக்காக.

அவனை மறுத்துப் பேசுவதே இவனுக்கு வாடிக்கை ஆயிட்டுது. அவன் உண்டுண்ணு ஒன்றைச் சொன்னா, இவன் இல்லைன்னு சொல்லியாகணும். இல்லைன்னா சுவாரசியமில்லை, இருதுருவப் பிடிப்புகள் இரண்டு பேர்கிட்டேயும் நிறைய இருக்குது, தெளிவாகவும் இருக்குது. அதனால கயிற்றை அதிகம் முறுக்காமல் கவனமா இருக்கமுடியுது. இரவு பகல், ஆண் பெண், பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம், ஆண்டான் அடிமை, செல்வம் வறுமை, வரிசையில் உண்டு இல்லையும் இவ்வுலகத்தை நடத்திச்செல்லுகின்றன. பெர்னார்ஃபோந்தேன் நம்புகிறான், இவனும் நம்புகிறான்.

வேம்புலி நாயக்கர் மருமகளைச் சந்தித்தாகவேண்டும். அவளோட அப்பன் ரொம்பக் காலத்துக்கு முன்ன, பெர்னார் குடும்பத்துக்கு எழுதிய கடிதத்திற்குக் காரணமான ஓலை நறுக்குகள் பத்தி விசாரிக்கணும். ‘ஓலை நறுக்குகளை எப்பாடுபட்டாவது கொண்டுவந்திடறேன் கவலைப் படாதேண்ணு ‘ பெர்னார்கிட்ட வாக்குக் கொடுத்து ஒரு மாதத்துக்குமேல ஆகுது. நண்பனிடம் கொடுத்த வார்த்தைக்காக, இவனும் வேம்புலி நாயக்கர் மருமகளைத் தேடி ஒன்றிரண்டு நாட்கள் அலைந்ததும் உண்மை. வேம்புலி நாய்க்கர்காலமானபிறகு சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் எட்டாம் நாள், முப்பது, கசப்பு தலைண்னு இவனுக்கு ஆர்வமில்லாத சடங்குகள், சம்பிரதாயங்கள் வரிசையாக இருந்தன. உறவுகளுக்கு மத்தியில் இறந்தமனிதரது மருமகளைச் சந்திப்பதும் சரியென்று தோன்றலை. அவளது வீடுவரைச் சென்று திரும்பி இருக்கிறான்.

டிரைகிளீனிங் செண்டரில் கொடுத்துக் கசங்கியிருந்த சட்டையை அயன்பண்ணக் கொடுத்து வாங்கி அணிந்தான். பக்கத்திலிருந்த சைக்கிள் ஸ்டோரில், வாடகைக்கு ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டான்.

இந்தமுறை சங்கரதாஸ் தெருவைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. சொல்லப்போனால் கடந்த இரண்டுமாதங்களில் மனதிற் தெளிவாகப் பதிந்திருந்தது. கண்களை மூடினால் சிற்றோடு வேய்ந்த தாழ்ந்த கூரையும், இடது புறமிருந்த ஒட்டுத் திண்ணையும், வாசலும் வலது புறமிருந்த பெரிய திண்ணையும் அதனை மறைத்துக் கட்டியிருக்கும் பெரிய தென்னங்கீற்றுத் தட்டியும், ஈமொய்க்கும் சாக்கடையும், பெரிய வாணலியில், எண்ணெய் காய பஜ்ஜியோ வடையோ சுட்டு அலுமினிய தட்டிலிடும் தொப்பை ஆசாமியும் வந்து போகின்றார்கள்.

—-

நண்பனே! உமதுடல், முற்பிறவியின் நல்வினை தீவினைகளுக்கான இன்பதுன்பங்களை அனுபவித்தற்கேற்றவைகையிற் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவாயா ?

உயிர்கள் அஃரிணை உயர்திணை உடம்புகளுடன் எண்ணிறந்த போகங்களைப் புசிக்கின்றன. புசிக்குங்காலத்தும் புண்ணிய பாவங்களை மீண்டும் ஈட்டுகின்றன. அதனால் பிறத்தல் இறத்தல் மீண்டும் மீண்டும் உண்டாகிறது. இருவினை ஒப்பும், மலபரிபாகமும் வந்த இடத்து அருளால் தனக்குள்ளே சிவஞானம் விளங்கும்.

ஆனால் அதுவரை நீ பிறந்து.. இறந்து.. பிறந்து..இறந்து..

—-

இவன் போய் நின்றபோது, வேம்புலிநாய்க்கர் மருமகள் ரிக்ஷாகார நாகப்பனுடன் சண்டை பிடித்திருந்தாள். ரிக்ஷாவில் பிரசவ வேதனையில் ஒரு பெண். சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டுக் காத்திருந்தான்.

‘இதுவரைக்கும் அட்வான்ஸ் அட்வான்ஸ்னு நானூறுக்கு மேல வாங்கிட்ட. மாசத்துல பாதி நாள் குடிச்சிட்டு, ஒழுங்கா வரமாட்டறே. உனக்காக காத்திருந்திட்டு பிள்ளைகளுக்கு வேற ரிக்ஷா தேடறது எனக்கு வாடிக்கையாப் போச்சு. ‘

‘இல்லைம்மா இனிமே அப்படி நடக்காது. இவ ராத்திரியிலேயிருந்து வயித்துவலிண்ணு துடிச்சிக்கிட்டிருக்கா. இப்பவோ எப்பவோண்ணு இருக்குது. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிண்ணாலும் அம்பதோ நூறோ செலவில்லாமல் நடக்காதும்மா. இனி அட்வான்ஸ்ன்னு வந்து நிண்ணா, ஏண்டா நாயே, எங்கே வந்தேண்ணு கேளு. ‘ தலையைச் சொறிந்துகொண்டு நிற்கிறான். ரிக்ஷாவிலிருந்த பெண், பிரசவவலியிலும் முகத்தைச் சுளித்துக்கொண்டு, ஜாடையாக, காசு கைமாறுகின்றதாவெனக் கவனித்துக்கொண்டிருக்கிறாள்.

‘நீங்க.. ‘

‘நான் இரண்டுமாசத்துக்கு முன்னாலெ உங்க வீட்டுக்கு ஒரு சிநேகிதனோடு வந்திருக்கேன். ‘

‘எங்க மாமா செத்த அன்னைக்கு, ஒரு வெள்ளைக்காரனோட வந்திருந்தீங்க இல்லை ? ‘

‘அம்மா, என்ன அனுப்பிவுடுங்கம்மா ‘ மீண்டும் ரிக்ஷாக்காரர் தலையைச் சொறிந்துகொண்டு நிற்கிறார்.

‘நீங்கள் அவரைக் கவனியுங்கள். பிறகு பேசுவோம். ‘

‘கொஞ்சம் பொறுங்க! இவனை அனுப்பிட்டு வந்துடறேன் ‘- ஜாகெட்டுக்குள் துழாவி, ஒரு கறுப்பு நிற பர்ஸை எடுத்து ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறாள். பணத்தைப் பார்த்தமாத்திரத்தில் ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த பெண் எழுந்து உட்காருகிறாள்.

‘அம்மா வரேம்மா! ஐயா வரேன்ய்யா!.. ரிக்ஷாக்கார நாகப்பன் சந்தோஷத்துடன் வண்டியை உருட்டிக்கொண்டு ஓடுகிறார்.

‘வாங்க! உள்ளே போய் பேசலாம். ‘ என்று கூறி பெண்மணியைத் தொடர்ந்து உள்ளே நுழைகிறான்.

‘உட்காருங்க! ஒரு நிமிஷம் வந்திடறேன் ‘ நடுவாசலை ஒட்டியிருந்த தாழ்வாரத்தில் போட்டிருந்த சோபாவைக் காட்டினாள்.

இவன் உட்கார்ந்து காத்திருந்தான். காத்திருந்த நேரத்தில் கண்கள் வீட்டை மேய்ந்தன.உள்ளே டெலிவிஷன் திரையில் மன்மதராசா. ஏகத்திற்கு குதிபோடுகிறது. அருகே குத்திவைக்கபட்ட லேமினேட் செய்யப்பட்ட கலர் போட்டோவில் கோட்டு, டை, பிரெஞ்சுக்காரர்களின் ஸ்பெஷாலிட்டியான கெப்பி தொப்பியுடன் கறுப்புத் தமிழர். இவன் தலைக்கு எதிரே சுவற்றில், இவனைப் பார்த்து இயற்கையாகச் சிரிக்கும் பிள்ளைகளின் போட்டோ அருகிலேயே அந்தக்கால நடிகையொருத்தியின் தோற்றத்துடன் ஒரு பெண். அநேகமாக வேம்புலிநாயக்கர் மருமகளாக இருக்கலாம்.

கூடத்தின் மத்தியில் வேம்புலிநாயக்கர், நெற்றியில் சந்தணப்பொட்டு உதிர்ந்த குங்குமம், தலையில் பல்பு, பிளாஸ்டிக் மாலையென அலங்காரத்துடன் கலர் போட்டோவில், கூப்பிட்டால் எழுந்துவந்துவிடுவார் என்கிறதுபோல நாற்காலியில் பட்டும்படாமல் உட்கார்ந்திருந்தார். கீழே இருந்த மாடத்தில் மேலே புகைபடிந்தும், கீழே எண்ணெய் வடிந்துகொண்டும் இருந்தது.

ஒட்டணை துடைக்கபடாத சீலிங்பேன் ஒன்று, பூட்டிய நாளிலிருந்தே ஓடிக்கொண்டிருக்கிறதோ என்கின்ற இவனது சந்தேகத்தை உறுதிபடுத்துவதுபோல, டரடரவென்று சுழன்றுகொண்டிருக்கிறது. தெரிந்த அறைகளின் கதவுகளை மறைத்துக் கொண்டு பிரான்சுநாட்டுத் திரைச்சீலைகள். மொசேக் தரையில் திட்டுத்திட்டாய்க் கறைகள்.

‘என்ன குடிக்கிறீங்க ? காபி, டா, கொக்கா, பீர்.. என்ன வேணும் சொல்லுங்க. ‘

‘என்ன ஓட்டல்ல விசாரிக்கிற மாதிரி கேட்கறீங்க ? என்ன இருக்குதோ கொண்டுவாங்க. ? ‘

‘உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க ? வீட்டில எல்லாம் இருக்குது. ‘

‘காப்பி போதும். ‘

‘ஒரு நிமிஷம். ‘ என்று சொல்லிவிட்டுப் போனவள் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காப்பியைக் கோப்பையில் கலந்து கொண்டுவந்து இவனெதிரே இருந்த டாப்பாயில் வைத்துவிட்டு, இவனுக்கு நேரெதிரே போட்டிருந்த, ஒற்றை ஆள் சோபாவில் வசதியாய் உட்கார்ந்துகொண்டாள்.

‘நன்றி ‘, எனச் சொல்லிவிட்டுக் கோப்பையை எடுத்து வாயில்வைத்துகொண்டு அவளைப் பார்க்கிறான். முழங்கைவரை வளையல்கள். கழுத்தில் கல்வைத்த பெரிய டாலர் சங்கிலி. இடதுகை மோதிரவிரலில், பிரெஞ்சுக் கொடிபோட்ட மோதிரம். சிவப்பு பார்டர்கொண்ட கிரே கலர் ஷிஃபான் சாரி. இடுப்பிற்கும் மேலே, தடித்த சதையில் வழிந்து கிடக்கும் வயிற்றை இரண்டாவது முறையாகப் பார்க்கப் பயந்து மேலே நகர்ந்தான். டிரான்ஸ்பெரண்ட் சில்க் பிளவுசை அதிகமாக கீழிறக்கி, மார்பின் எல்லைகளைக் கவனமாய் வெளிப்படுத்தியிருந்தாள். தடித்த உதடுகளில் கருநீலத்திற் சிவப்புச் சாயம். பெரிய மூக்கு, மூக்குவரை இறங்கியிருந்த கண்கள். முதற் தடவை பார்த்தக் கொண்டை. உள்ளே போனவள் பர்ஃபூயூமை அதிகமாகத் தன் மீது தெளித்துத் திரும்பியிருக்கவேண்டும். மூக்கை அடைத்தது. காப்பியைக் ருசித்து குடிக்க இயலாமல் கப்பை மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்தான். அவள் இவன் பேசட்டுமென காத்திருப்பதுபோல, மெல்ல சிரித்தாள்.

‘சூரைத்தேங்கா அடிறா அடிறா…சூரியனைப் புடிறா புடிறா.. ‘

‘டெலிவிஷன் வால்யூமை குறைக்க முடியுமா ? ‘

‘கொஞ்சம் இருங்கள், இதோ வந்துவிடுகிறேனெனப் போனவள் டெலிவிஷனை நிறுத்திவிட்டு வந்தாள்.

‘சொல்லுங்கள் என்ன வேணும் ? ‘

‘இது என்னோட பிரெஞ்சுச் சிநேகிதன் சம்பந்தபட்ட விஷயம். உங்க மாமனார்கிட்டயும் இதைபற்றி அன்றைக்குப் பேசியிருக்கோம் ‘

‘அதான் எனக்கு ஆச்சரியமாயிருக்குது. செத்துபோன என்மாமனார் உங்ககிட்டப் பேசினாரிண்ணீங்க. என்னால நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை. ஆனால் உங்ககிட்ட அன்றைக்கு கை நீட்டிப் பணம் வாங்கியிருக்கார். பின்னாடி அவர்கையில ரூபாய் நோட்டிருந்ததைப் பிணத்தை குளிப்பாட்டும்போது பார்த்து, பிடியைத் தளர்த்தி எடுத்தோம். அதை வாங்கிட்டுப் போக வந்தீங்களா ? ‘

‘நீங்க தவறா நினைச்சீட்டாங்க. இல்லை அதற்காக வரலை. தவிர அன்றைக்கு உங்க மாமனார் எப்போது இறந்திருப்பார் என்பதும் இப்போது பிரச்சினையில்லை. எங்களுக்கு முக்கியமா ஒன்று தெரிஞ்சாகணும். ரொம்ப காலத்துக்கு முன்னாடி உங்க தகப்பனார், பிரான்சில் உள்ள என் சினேகிதன் குடும்பத்துக்கு ஒரு கடிதம் போட்டிருக்கிறார். அக்கடிதத்திலே பெர்னார் குளோதன் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்ட ஓலை நறுக்குகள் அவரிடம் இருப்பதாக சொல்லியிருக்கிறார். ‘

‘பெர்னார்குளோதன் யாரு ? ‘

‘என் நண்பன் பெர்னார் ஃபோந்தேனுடைய கொள்ளுத்தாத்தாண்ணு ஒரு செளகரியத்துக்காக வச்சிக்கலாம் தப்பில்லை. அவர் துய்மா காலத்திலேயும், பின்னாடி துய்ப்ளெக்ஸ் காலத்திலேயும் இங்கே இருந்திருக்கார். ‘

‘துய்ப்ளெக்ஸ் கேள்விப்பட்டிருக்கேன், துய்மாவெல்லாம் தெரியாது. சரி அந்தக் கடிதாசியை எங்கப்பா போட்டிருப்பார்னு எப்படி சொல்றீங்க. ‘

‘மறுபடியும் உங்க செத்துப்போன மாமனாரத்தான் நான் கூப்பிட்டாகணும். அவர்தான் உங்கப்பா எழுதினார்னு உறுதியாகச் சொன்னவர் ‘

‘அப்படியா ? எனக்குக் குழப்பமா இருக்குதுங்க. அதற்கு நான் என்ன செய்யணும். ‘

‘நீங்க ஒத்தாசை செஞ்சா முயற்சி பண்ணிப் பார்க்கலாம். ‘

‘எப்படி ? ‘

‘அதாவது உங்க அப்பா இறந்ததுக்கப்புறம் வீட்டையொழிச்சு, எடுத்துக் கொண்டுவந்த பொருட்களையெல்லாம் என்ன செஞ்சீங்க ? ‘

‘அவர் கண்டதை மூட்டைக் கட்டிவச்சிருப்பார். அதனால பலதைக் குப்பையிலே போட்டு எரிச்சுட்டோம். ஆனால் சிலதை புதுப்பாக்கதுல எங்க ஊரு திண்ணை வாத்தியார் கிஷ்டப் பிள்ளையிடம் கொடுத்துவச்சிருந்தார். அவரைக் கேட்டால் தெரியும். ‘

‘என்ன பேரு சொன்னீங்க ? ‘

‘புதுப்பாக்கம் கிஷ்டப்பிள்ளை. எங்க அப்பாவுடைய பால்ய சிநேகிதர். ‘

‘நிச்சயமா அவர்கிட்டேதான் இருக்கணும். இந்தப் பேரை உங்க மாமனார் வாயாலும் கேட்டிருக்கோம். அவர்தான் உங்கப்பாவிடம் பெர்னார் குடும்பத்துக்குக் கடிதம் எழுதுண்ணு யோசனை கொடுத்திருக்கிறார். ‘

‘அப்படியா ? அவரை வேண்டுமானாப் போய்ப் பார்க்கறீங்களா. இப்பவும் கிராமத்திலதான் இருக்கிறார். ஆனால் கிழவி ஒரு மாதிரி. யாரையும் சுலபத்துல கிட்டச்சேர்க்காது. ‘

‘நீங்க உதவி பண்ண முடியுமா ?. உங்க கிராமத்துக்குக் கிட்டத்துல போவீங்களா ? ‘

‘நானா ? அங்கே எங்களுக்கு இருந்ததையெல்லாம் விற்றுட்டு வந்தாச்சே. எங்க சொந்தபந்தத்துக்கு நல்லது கெட்டது நடந்தா அந்தப் பக்கம் போவேன். மற்றப்படி அங்கே தலைவச்சுப் படுக்கிறதில்லை. ‘

‘அப்படான்னா நாம மூவரும் காரெடுத்துக்கொண்டு மதியம் போய் வந்திடலாமா ? ‘

‘திடாரென்று எப்படி ? ஒண்ணு செய்யலாம். அடுத்த ஞாயிற்றுக் கிழமை கிராமத்துக்குப் போகலாம். கிஷ்டபிள்ளை பேரன் இங்கேதான் கிட்டத்துல ஒரு ஸ்கூல்ல படிக்கிறான். அவனிடம் தகவல் சொல்லி அனுப்பிடறேன். ‘

‘நீங்க இவ்வளவு ஒத்தாசை செய்வீங்கண்ணு நான் நினைக்கல. என்னோட சினேகிதன் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவான் ‘.

‘பதிலுக்கு நீங்க எனக்கொரு ஒத்தாசை செய்யணுமே. ‘ கண்களை அகலத் திறந்து விழுங்கிவிடுவதுபோலக் கேட்டபோது, வேலு தடுமாறினான்.

‘என்ன சொல்லுங்க. அவசியம் செய்யறேன் ‘

‘பயப்படாதீங்க உங்களை வேறேதும் செய்யச் சொல்லை. நீங்கதான் பார்த்தீங்களே. ரிக்ஷாகாரர் பொண்டாட்டியை பிரசவத்துக்குப் பெரிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போயிருக்கார். கோலேழ் கல்வேயில் படிக்கிற பசங்களை அழைச்சுகிட்டு வரணும். நான் இனி ரிக்ஷா பார்த்து அனுப்பறது சிரமம். உங்க கூட பேசிகிட்டு இருந்ததில நேரம் போனது தெரியலை. சித்தே உங்க சைக்கிள்ல அழைச்சிட்டு வந்திடுங்கிளேன். ‘

‘எங்கூட உங்க பசங்க வருவாங்களா ? ஸ்கூல்லதான் அனுப்புவாங்களா ? ‘;

‘நான் போன் போட்டு ஸ்கூல்ல சொல்லிடறேன். நீங்கப் பயப்படாதீங்க! ‘ என்றவள் பார்த்த பார்வை வேலுவை பயமுறுத்தத்தான் செய்தது.

/தொடரும்/

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts