பிறந்த மண்ணுக்கு – 3

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

அ முகம்மது இஸ்மாயில்


5

பேருந்து நிறுத்துமிடம் பக்கத்துல கடை வைத்திருந்தார் அல்லவா முத்து அவரை ஞாபகமிருக்கிறதா ? சரி அவருக்கென்ன ? என்று கேட்கிறீர்களா ? அவருடைய மகன் கதிரவன் வெளிநாட்டுக்கு போய் வேலை பார்த்து வருகிறான் அல்லவா ? அவனுக்கு திருமணம். வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்புகிறான். அவன் ஊருக்கு வரக் கூடாது என்று தான் இந்த பிரச்சினை. அப்படி அவன் என்ன தவறு செய்து விட்டானென்று கதிரவனை வரக்கூடாது என்று ஊர் மக்கள் கூடி நின்று குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என்று நீங்கள் கேட்கிறீர்களா ? அவன் ஒரு தவறும் செய்ய வில்லை, அவன் வேலை பார்க்க சென்றான் அல்லவா ஒரு வெளிநாடு- அந்த நாட்டில் ஒரு தொற்று நோய் பரவிக் கிடந்தது. அந்த நாட்டிலிருந்து திரும்பி வருவதால் எங்கே நம்ம ஊரில் வசிக்கும் அனைவருக்கும் அந்த வியாதி அவன் மூலமாக வந்து ஒட்டிக் கொள்ளுமோ என்ற அச்ச உணர்வே பிரச்சினைக்கு காரணம்.

முத்து நடேசனிடம் உதவியை நாடினார், “என்ன நடேசா இது ? என் பையனுக்கு கல்யாணம் வைச்சிருக்கேன் வியாதி.. பரவுது அது இதுன்னு சொல்லி பயமுறுத்துறாங்க.. என் பையன் இங்கே வர முடியாதுன்னா எங்கே தான் போவான்” என்று அழுது தீர்த்தார்.

நடேசன், “என்ன வியாதின்னு ஒண்ணும் விபரம் தெரியல.. வா போய் பேசி பார்ப்போம்” என்று கூறி முத்துவை அழைத்துக் கொண்டு பிரச்சினை செய்யும் அந்த கூட்டத்தாரிடம் வந்தார்.

கூட்டத்தார் நடேசனை பார்த்ததும் மரியாதையுடன், “வாங்க நடேசன் வங்க” என்று எல்லோரும் வரவேற்றார்கள்.

நடேசன் கொதித்தார், “நான் வர்ரது இருக்கட்டுமய்யா.. முத்து மகன் வர்ரத பத்தி என்ன முடிவு பண்ணி வச்சிருக்கீங்க.. அத சொல்லுங்க..” என்று.

அந்த கூட்டத்தில் ஒரு பெரியவர், “நடேசன், நீங்க இப்படி பேசறதுல நியாயம் இருக்கு.. ஏன்னா முத்து உங்க பால்ய சிநேகிதன்.. நீங்க பேசித்தான் ஆவணும்.. ஆனா அவர் மவன் இங்கே வரக்கூடாதுன்னு பேசறது உங்களையும் சேர்த்து காப்பத்ததான் அத மறந்துடாதீங்க..” என்றார்.

நடேசன், “ அந்த வியாதிய பத்தி என்ன தெரியும் உனக்கு.. “ என்றார்.

அவர், “எனக்கு தெரியும் அது பேர் சார்ஸ்” என்றார்.

நடேசன், “அது என்ன சார்ஸோ பிசாஸோ.. அது போய் தொலையட்டும்.. முத்து மவன் இங்கே வரத்தான் செய்வான்.. நான் சொல்றேன்.. ஏதாவது தண்டிக்கனும்னா என்னை தண்டிங்க..” என்றார்.

ஒருவர் பேசினார் அவர் பெயர் சண்முகம் முத்துவுக்கு நல்ல பழக்கம் தான்.அவர் பேசுகிறார் கேளுங்கள், “ஐயா, நீங்க புரியாம பேசறீங்க, இப்படி உங்க கிட்ட பேசறதுக்கு என்னை மன்னிச்சுடுங்க.. நாங்க ஏதோ முத்து மேல பகைய வளர்த்துகிட்டு திட்டம் போட்டு வரக் கூடாதுன்னு சொல்றதா நினைக்கறீங்க.. அதான் இல்ல.. எங்க வீட்ல புள்ள குட்டிங்கள்ளாம் இருக்கு.. நாளைக்கு வியாதி பரவுனுச்சுன்னு வைங்க.. என்ன செய்ய முடியும்.. சொல்லுங்க ?” என்று பொறிந்து தள்ளினார்.

இப்பொழுது வேறொரு பெரியவர் பேசினார், “நீங்க பெரிய மனுஷன் உங்கள மீறி எதுவும் நடக்காது அப்படி முத்துட மவன் வந்துட்டான்னா நாங்க இந்த ஊரை காலி பண்ணிட்டு போக வேண்டியது தான்” என்றார்.

நடேசன் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன் ஒரு குரல் கேட்டது, யாரும் ஊர காலி பண்ணி போ வேண்டியதில்ல” என்று, எல்லோரும் திரும்பி பார்க்க தமிழ்வாணன் நின்று கொண்டிருந்தான்.

ஒரு பெரியவர், “தம்பி நீங்க சின்னவர்.. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது தம்பி” என்றார்.

தமிழ்வாணன், “ஒத்துக்கறேன்..நான் சின்னவன் தான்.. ஆனா மருத்துவம் படிச்சிருக்கறதால எனக்கு தெரியும் அந்த வியாதிய பத்தி” என்றான்.

நடேசன் சந்தோஷத்தில் தமிழ்வாணனை உற்சாகப்படுத்தினார், “நல்லா எடுத்து சொல்லு தம்பி.. அது என்ன வியாதின்னு தெரியட்டும்” என்றார்.

தமிழ்வாணன் உறுதியுடன் தொடர்ந்தான், “ஐயா, நான் சொல்றத எல்லோரும் கவனமா கேளுங்க.. நம்மகிட்ட உள்ள குறை ஆராய்ச்சி பண்ணாம முடிவெடுக்குறது தான்.. ஒரு வியாதி வந்தா அத போக்க போராடணுமே தவிர அத கண்டு பயந்து ஊர விட்டே ஓட கூடாது.. பொதுவா வியாதிங்கறது உடம்புல ஏற்படற குறைபாடு அவ்வளவு தான்.. நீங்க இப்ப பயப்படறதா சொல்ற இந்த சார்ஸ்ங்கறது மூச்சு திணறல் சம்மந்தப்பட்ட வியாதி.. அதுக்கு காய்ச்சல் அதிகமா இருக்கணும்.. மூணு நாளைக்கு மேல நீடிச்சிச்சுண்ணா, சார்ஸ் சம்மந்தப்பட்டவர்களோட பழகியிருந்தான்னா சார்ஸ் இருக்கக் கூடும்னு சந்தேகப்படலாம்.. அவ்வளவு தான்” என்றான்.

முத்து ஆர்வத்துடன், “தம்பி எம்மவனுக்கு அந்த மாதிரி காய்ச்சல் எல்லாம் இல்ல தம்பி என் பையன் நல்லா தான் இருக்கான்” என்றார்.

தமிழ்வாணன், “நீங்க கவலைப்படாதீங்க” என்று முத்துவிடம் கூறிவிட்டு அந்த கூட்டத்தின் பக்கம் திரும்பி, “இப்ப கதிரவன் வரும் போது அவனுக்கு காய்ச்சல் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்குவோம்.. அப்படி எதுவும் இல்லைன்னா அவனை ஊருக்கு வர அனுமதிப்பீங்களா ?” என்றான்.

பெரியவர், “அது அப்ப பார்த்துக்கலாம்.. ஒரு வேளை காய்ச்சல் இருந்துச்சுன்னா அப்ப என்ன செய்யலாம் அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க” என்றார்.

தமிழ்வாணன், “ நியாயமான கேள்வி.. காய்ச்சல் இருந்தால் நம்ம ஊரு ஏர்போர்ட்லேயே செக் பண்ணி தான் அனுப்புவாங்க.. சரி காய்ச்சல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுக்கு நான் பொறுப்பு.. ஊருக்கு வெளியில இருக்கிற பெரியப்பாவுக்கு சொந்தமான வீடு ஒண்ணு இருக்குறது உங்களுக்கு நல்லா தெரியும்.. கதிரவன் வந்தவுடன் மூணு நாள் அங்கே தங்கட்டும்.. சுய பாதுகாப்பு சாதனங்கள வரவழைச்சு போட்டுகிட்டு நான் மட்டும் அவனை கவனிச்சிக்கிறேன்.. அப்படி அவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லண்ணா நீங்க எல்லாம் நான் சொல்றதுக்கு கட்டுப்படணும்” என்று பெரிய மனுஷன் மாதிரி பேசி முடித்தான்.

எல்லோரும் அப்படி இப்படின்னு பேசி ஒரு வழியாக தமிழ்வாணனுக்கு கட்டுப்படுவதாக கூட்டாக அறிவித்தார்கள். நடேசனுக்கு அளவிட முடியாத சந்தோஷம்.

சொன்னது போல் முத்து வந்தான். அவனுக்கு ஊர் வந்ததும் லேசாக காய்ச்சலாக தான் இருந்தது. தமிழ்வாணன் வெளியூரிலிருந்து அண்ணன் ரவிக்குமார் மூலம் வரவழைத்த ரப்பராலான கையுரை, மேலங்கி, சுவாசக் கவசம் போன்றவற்றை அணிந்து கொண்டு கதிரவனிடம் தங்கியிருந்தான். முதல் நாள் விடிந்தது. தேவிகாவுக்கு மட்டும் விடியவில்லை அவள் இருளில் இருப்பதாகவே உணர்ந்தாள். தமிழ்வாணனை நினைத்து உருகாத நேரமில்லை, வெளியே பேசவும் முடியவில்லை தேட்டங்களை மனசுக்குள்ளேயே மென்று முழுங்கினாள்.

மீதமுள்ள இரண்டு நாளும் கழிந்தது. நான்காம் நாள் கதிரவன் வெளியே வந்த போது நம் கதிரவன் குணமடைந்திருந்தான். இப்படியே மூன்று நாள் பத்தாது என்று ஒரு வாரம் தங்கியிருந்தனர். அதன் பிறகு ஊரே திரண்டு வந்து தமிழ்வாணனை வரவேற்றது. கதிரவன் திருமணம் இனிதாக நடந்தேறியது. தமிழ்வாணனை பாராட்டாதவர்களே இல்லை. நடேசன், மல்லிகாவுக்கு பெருமையாக இருந்தது.

தமிழ்வாணன் ஊர் மக்களை பற்றி சிந்தித்தான். மருத்துவம் பற்றி அவர்களுக்கு எளிய முறையில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற யோசனை பிறந்தது.

அவன் படித்த பள்ளிக் கூடம் சென்று தலைமை ஆசிரியரிடம் கலந்துரையாடினான். சிறுவர்களுக்கு உடற்பயிற்சி என்று ஒரு பாடம் ஏற்கனவே உண்டு. தமிழ்வாணன் உடல் ஆரோக்கியம் பற்றி ஒரு பாடம் வேண்டும் என்று கூறி காய்ச்சல், ஜலதோஷம் போன்ற வியாதிகள் பற்றியெல்லாம் விளக்கமாக எடுத்து கூறினான். உணவு முறைகள் பற்றி எடுத்து கூறினான். சுகாதாரம் பற்றி எடுத்து இயம்பினான். அன்றாடம் குளிக்க வேண்டும், நகம் வெட்ட வேண்டும், கழிவறை சுத்தமாக வைக்க வேண்டும் இப்படியாக எதையும் விட்டு வைக்க வில்லை, எதையும் சொல்ல கூச்சப்படவுமில்லை.

தேவிகா ஒரு யோசனை கூறினாள் அதாவது பள்ளி மாணவர்களுக்காக ஒரு கையேடாக எழுதி பாடமாக வைக்கலாமே என்று. கடைசியில் அதை எழுதி முடிக்கும் பொறுப்பு தேவிகாவிடமே வந்தது. அதை செவ்வனே செய்து முடித்து அனைவரது பாராட்டையும் பெற்றாள். அது சிறந்த முறையில் அந்த ஊரிலேயே அச்சிடப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும் வந்தது.

தமிழ்வாணனின் மருத்துவ வார்த்தைகளை தேவிகா தேர்ந்த எழ்த்தாளரை போல் அதிகம் படிக்கத் தெரியாதவர்களுக்கும் புரியும் வண்ணம் எழுதியிருந்ததாலும், மருந்து மாத்திரை பற்றியெல்லாம் எழுதாமல் நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டில் எந்த வகை மருத்துவ குணங்கள் உள்ளன் என்பது பற்றியே இருந்ததாலும் கிட்டத்தட்ட எல்லோருமே ஆளுக்கொரு பிரதி வைத்திருந்தனர்.

அதன் பிறகு அந்த ஊரில் மருத்துவரே தேவை யில்லை என்று கூறும் அளவிற்கு ஆகி எல்லோருமே ஒரு மருத்துவரை போல் செயல்பட்டனர். எல்லோரும் வியாதிக்காரர்களை கண்டால் “சீக்காலி” என்று முன்னாளில் செய்தது போல் ஒதுங்கி விடாமல் அருகில் சென்று, வீட்டில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் தமிழ்வாணன் என்று எல்லோரும் பாராட்டும் போது நடேசனும் மல்லிகாவும் “இதையெல்லாம் பார்க்க தாமோதரன் இல்லையே” என்று அழுது புலம்பினர். நான் கூட தமிழ்வாணனை இப்பொழுது பாராட்டி விட்டுத் தான் வந்தேன்.

நான் “தமிழ்வாணா, மருத்துவம் இன்னய தேதிக்கு வியாபாரம் ஆகி விட்டது. சேவை என்ற உணர்வு நோய்வாய்ப்பட்டு மரணித்து விட்டது. ஆனால், நீ வியாதிக்கு மருந்து தேடாமல் வியாதியையே ஒழிக்க போராடி வருகிறாய். உன் சேவை மனப்பான்மை எல்லோருக்கும் வரணும் குறைந்தபட்சம் எல்லோரும் பாராட்டவாவது செய்யணும்” என்றேன்.

தமிழ்வாணன் அடக்கமாக, “அதெல்லாம் ஒண்ணுமில்லை, நான் ஒண்ணும் பெருசா செஞ்சுடலையே” என்று என்னிடம் சொன்னான்.

அன்றிலிருந்து ஊர் மக்கள் எல்லோரும் எதையாவது சாப்பிட்டால் அதன் மருத்துவ குணங்களை சொல்லி விட்டு தான் சாப்பிட்டார்கள்.

மீன் சாப்பிடும் போது, “ இந்த வகை மீனை சாப்பிட்டால் தலைவலியே வராதாம்” என்றனர்.

கடையில் தேத்தணி குடிக்க சென்றால், அந்த கடையின் அறிவிப்பு பலகையில், “அன்றாடம் தேத்தணி குடித்து வந்தால் வாதம் வராமல் தடுக்கும்” என்று எழுதப் பட்டிருந்தது.

பழக்கடையில், “அன்னாசி பழம் சாப்பிட்டால் அதில் உள்ள மேங்கனீஸ் எலும்புக்கு நல்லது” என்று கடைக்காரர் சொன்னார்.

காய்கறிக்கடையில், “பூண்டு சாப்பிட்டால் ஜல்தோஷத்துக்கு நல்லதாம்” என்று பேசிக் கொண்டார்கள்.

“அன்றாடம் சாப்பாட்டுல ஏதாவது ஒரு வகை கீரை சேர்த்துக்க”, “முட்டைக்கோஸ் சாப்பிடுவது அல்சருக்கு நல்லது”,

“ஆப்பிள் சாப்பிட்டால் வயிற்றுபோக்கு நின்றுவிடும்”,

“ரத்த கொதிப்பா ?.. ஆலிவ் ஆயில் எடுத்துக்க”,

“நிலக்கடலையில குரோமியம்னு ஒண்ணு இருக்காம் அது ரத்தத்துல உள்ள இனிப்பை கட்டுபாடா வைச்சிருக்காம்” என்று சிறு குழந்தை முதல் பெரிய முதியவர் வரை இதையே தான் முன்மொழிந்து வழிமொழிந்தார்கள்.

நடேசனும் மல்லிகாவும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். தேவகி அங்கு உட்கார்ந்து ஒரு தலையணைக்கு உரை தைத்து கொண்டிருந்தாள்.

நடேசன் தமிழ்வாணனை பற்றி பெருமித்ததுடன், “எனக்கு கூட இந்த அளவுகு மரியாதை கொடுத்ததில்லை ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

மல்லிகா “அந்த பெருமை நீடிச்சிருக்கணும் அதான் இப்ப எனக்கு..” என்று கவலையுடன் கூறினார்.

நடேசன், “நீயேன் இப்படி சொல்றே..நீடிக்காதா என்ன ?” என்றார்.

மல்லிகா, “ அதில்லங்க, நாளைக்கே அவனுக்கு கல்யாணம் ஆவுதுண்ணு வைங்க.. என்ன ஆகும் ?” என்றார்.

நடேசன், “ஏன்.. என்ன ஆகும் ?” என்றார்.

மல்லிகா, “என்னங்க புரியாம பேசறீங்க தமிழ்வாணன் டாக்டருக்கு படிச்சிருக்கான்.. அவன் யாரை கல்யாணம் பண்ணப் போறான்னு தெரியலை.. நிச்சயமா ஒரு டாக்டரை பார்த்து தான் கல்யாணம் பண்ணுவான்.. அதுக்கப்பறம் இங்கேயே இப்ப வைச்சிருக்கானே இந்த சின்ன கிளினிக்கை வைச்சிக்கிட்டு இங்கே இருப்பானா.. இல்ல.. பட்டணத்துல போய் பெரிய ஆஸ்பத்திரி கட்டி அங்கே இருப்பானா ?” என்றார்.

நடேசன் பதில் ஏதும் சொல்லாமல் கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்தார்.

மல்லிகா தேவிகா இருக்கும் திசையில் திரும்பினார். தேவிகா கண் கலங்கியபடி இருந்தாள்.

மல்லிகா பதட்டமாக, “என்ன தேவிகா என்ன ஆச்சு ?” என்றார்.

தேவிகா சமாளித்தாள், “அது.. ஒண்ணுமில்லை.. ஊசி கைல குத்திடுச்சு” என்றாள். ஆனால் “குத்தினது கைல இல்ல.. மனசுல தான்” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள்.

நடேசன், “பெரிய காயம் ஒண்ணுமில்லைல..” என்றார்.

மல்லிகா, “நீங்க வேற.. லேசா கைல குத்திடுச்சு அவ்வளவு தான். அப்படியே பெரிய காயமா இருந்தா நம்ம தமிழ்வாணண்ட சொல்லி மருந்து போட சொல்லிடலாம்” என்று சொல்லி சிரித்தார்.

தமிழ்வாணன், “என்ன ? என்ன பத்தி ஏதோ நியூஸ் ரீல் ஓடுறாப்ல இருக்குது” என்று அப்போது தான் உள்ளே வந்தான்.

மல்லிகா, “உனக்கு நூறு வயசு தான் போ.. நியூஸ் ரீலெல்லாம் ஒண்ணுமில்லை தேவிகா கைல ஊசி குத்திடுச்சு அதான் உங்க பெரியப்பா பதட்டப்பட்டாங்க நான் சொன்னேன்.. தமிழ்வாணன் வந்தா மருந்து போட சொல்லலாம்ன்னு.. அவ்வளவு தான்” என்றாள்.

தமிழ்வாணன் துடித்தான், “தேவிகாவுக்கு என்னாச்சு கைல.. எங்கே என்ட்ட காட்டு” என்று.

தேவிகா, “அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று முகத்தில் வெறுப்பைக் காட்டிக் கொண்டு ஓடினாள்.

தமிழ்வாணன் தேவிகாவின் முக மற்றத்தை கண்டு, “என்னாச்சு இவளுக்கு” என்று அவனுக்குள் சொல்லிக் கொண்டான்.

—-

தொடரும்

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation

author

அ முகம்மது இஸ்மாயில்

அ முகம்மது இஸ்மாயில்

Similar Posts