திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஆறாம் பகுதி – தொடரச்சி

தன் புகழ்ச்சியும் தன் வியத்தல் சார்ந்த மிதத்தல் பார்ட்டிகள் தவிர, இதுசார்ந்த உள்க்கலவரம் சுமந்து திரிகிற எழுத்தாளர்கள் உளர். அவர்கள் வேறு ஜாதி. சில வெளிநாட்டுக்காரர்களைக் கூட வெச்சிக்கிறதுதான். பெரிய நடிகர் கட்அவ்ட்டோடு புகைப்படம் எடுத்துக்கிர்றதுல ஒரு கிக் இல்லியா ? அதைப்போல. அவாள்கிட்ட வந்து யாராவது இலக்கியம் பத்திப் பேச்சு எடுக்கணுங்கறதில்லை… அடுத்தாள் இலக்கிய கர்த்தான்னு இவனுக்கு மோப்பம் கிடைச்சாலே போதும்… உனக்கு இந்த எழுத்தாளனைத் தெரியுமான்னு பேரே வாயில் நுழையாத வெளிநாட்டு ஆசாமியைப் பத்தி ஆரம்பிச்சிருவார்கள்… வெளிநாட்டு சாப்பாட்டை எப்பிடிச் சாப்பிட என்று கையில் ஸ்பூனும் கையுமா திகைக்கிறாப்ல ஆயிப் போகும். இல்லன்னு நீ சொல்லி, அவன் காதாறக் கேக்கணும். அவன் பேசணும். நீ படிச்சிருக்கேன்னு பதில் ஆராம்பிச்சா… ஆசாமி விட்ரும் ஜுட். ஏன்னா அவனே படிச்சிருக்க மாட்டான்!

இலக்கிய தீபாவளியில் வேடிக்கைகளுக்குப் பஞ்சமேயில்லை. சில ஆள் எழுத ஆரம்பிக்கு முன்னமே தானே தலைல அட்சதை போட்டுண்டேதான் இலக்கிய-திவசம் ஆரம்பிப்பான். இலக்கியத்தில் இதுவரை செய்யாத புதுமை- புது உத்தி… இலக்கியத்தை நையப் புடைக்கிற புது சுத்தி அது. அட உனக்குப் புதுசு மாப்ள. வாசிக்கிறவனுக்குக் கொட்டாவி வருதே.

அன்னிக்கு ஒரு பெண் எழுத்தாளர் வந்திருந்தாள். நவீன படைப்ப்ாளியாம் அவள். அவளே சொன்னதுதான். தனுவுக்கு அவளைத் தெரியாது. தனிப் பத்திரிகை பெண்களுக்கென அவள் குடிசைத் தொழில் போல ஆரம்பித்திருக்கலாம்… பெண்ணுரிமை என ஆவேசம் கண்ட பார்ட்டி. தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் பிழை திருத்தணும் என்று சொன்னாள். கதை ஒரு பெண் வயசுக்கு வந்த நிகழ்ச்சிகளை விலாவாரியாய்… உபாதைவாரியாய்ன்னு வெய்யி… விவரித்த கதை. அச்சில் அரசல் புரசலாய்ப் படித்திருந்தான்.

‘என்னங்க கதை இது ? ‘ – என்றான். ‘ஏன் ? ‘ என்றாள் கொந்தளித்து. பயமாயிட்டது- கடைசியில் பார்த்தால் விவகாரம் வேறு- அவளே அதன் ஆசிரியை. ஹா தமிழின் ஆகச் சிறந்த படைப்பைத் தந்திட்டு வந்து அமைதியா உக்காந்திருக்கம். ஒரு பிரஸ் மேற்பார்வை – அதும் ஆம்பளை… ஓசி டா, எச்சி டா பார்ட்டி… கேள்வி கேக்கறதா ?…

இலக்கிய (முடி)சிலிர்ப்புகள்!

பெண்கள் தங்கள் சமாச்சாரங்களைத் தாமே எழுத முன்வருகிற ‘இலக்கியத் திட்டத்தில் ‘ அவள் இயங்குகிறாள். பெண்ணிலைவாத நல்லாத்மா. வாழ்க. இப்படி ஆட்கள் ஆணாதிக்க சமுதாயத்தை எதிர்த்துக் குரலெடுக்கிறதாய்த் தாங்கள் நம்பிக்கை கொண்டிருக்க, நீ எழுது கண்ணம்மா. நாங்க ரசிக்கிறோம்… என ஆணாதிக்கவாதிகள் ஊக்கி உசுப்பி விட்டாகிறது. பெண் – வீடுன்ற அமைப்பை விட்டு அவளாகவே வெளிய வந்திட்டா இன்னும் நல்லதுதானே ? ‘வசதி ‘தானேய்யா!

வரதட்சிணை தராதோர் சங்கம்னு ஆரம்பிச்சிரேய்யா ? எத்தனை மெம்பர்ஸ் இருக்காங்க-ன்னானாம்…

இப்போதைக்கு நானும் என் அஞ்சி பொண்ணும்… என்றானாம் இவன்.

– அந்தக் கதையாட்டம் இருக்கே ?

சிலாளுகளுக்கு இடங் கிடைச்சாப் போதும்… கூட வார ஆளுகள்லாம் மட்டக்குதிரைன்னு அட்டகாசப் பேயாட்டம் எடுக்கிறதில் தனி உற்சாகம். நம்ப ‘ஷ ‘ மாதிரின்னு சொல்லலாம். தலையெழுத்துடா. இதும்பேரு இலக்கிய உலகமாடா. அவனவனுக்குத் தெரிஞ்சதை அமைதியா வந்தமா எழுதினமா போனமான்னு இருக்கலாம்…

தமிழில் இலக்கியம் வளரவில்லை-ன்னு விமரிசகன் ஆவேசமாத் திட்டியாறது. அது ஒரு ஃபேஷன். அவாள் அறியாத இலக்கிய உலகமான்னு உள்சிலிர்ப்புதான். வேறென்ன ? கேட்டா… இலக்கியவாதிக்கு இந்த உள்க் கொம்பு அவசியம்டா. அவன்தான் எழுத்தாளன். அட அது அவனது வாக்கிங் ஸ்டிக் போல. அதைத் தட்டி விட்றாதீங்கப்பா. அவன் வாழ்றதே அந்த பிரமைலதான்னு சமாதானம் பண்றாங்க. இவன் நடையைவிட வாக்கிங் ஸ்டிக்கை நம்பினா என்ன செய்யிறது. இலக்கிய சப்பாணிகள்!

நல்லிலக்கியம் வார்த்தை அலைகளை விட மெளனத்தைச் சுமந்ததாய் இருக்கிறது. புயல் அல்ல அது. தென்றல்… வரும்… தலைகோதும். மெளனத் தாலாட்டு. தாயின் உச்சிமுகர்தல். பிரியத்தைப் பகிரும். புரட்சிதாய்யா… என்றாலும் அது அமைதியாய்ப் பரிமாறப்படும் ஆந்திரச் சமையல் காரக் குழம்பு. எதிரணியையும் புன்னகையுடன் சமாளிப்புத் திறனுடன் அமைதியாக அணுகுகிற வல்லமை கொண்டது அப்பெரும் படைபபுகள். தன் சிலாகித்தல் அதில் இராது. தளர்வான ஆதரவான புன்னகை. பிற வளாகங்களை மதிக்கிற சுய துணிச்சல். எடுத்தெறிந்து பேசுகிற பாவனை அற்ற எளிமை. பிறர் குரலை மதிக்கிற விமானதளம் அமைத்துத் தருகிற விவாததளம் அது அல்லவா ? அது பேய்போல புளிய மரம் தேடி அலையாது. வாசகனை பேய்பிடித்தாப் போல பாவித்து அவன் உச்சிமயிரைப் பிடித்து ஆட்டாது. வார்த்தைகளைச் சுமந்து திரியாது. வாசகனைச் சுமக்கச் சொல்லி கட்டாயப் படுத்தாது. சிக்கல்களையும் சுத்திகரிக்கப்பட்ட எளிமையுடன் அது சீட்டாட்டத்தில் வெற்றி பெற்ற எளிமையுடன்- சீட்டைக் கவிழ்த்து விட்டுப் புன்னகைக்கும்.

பன்னீர்ப் புகையிலையை கோலியாய் உள்ளொதுக்கிப் புன்னகைக்கிற ஜாம்பவான் தாத்தா.

அவனுக்கு அந்தப் பெரியவர் ஞாபகம் வந்தது. உனக்கு அரவிந்தரைத் தெரியாது… ஸ்ரீ அன்னை பற்றித் தெரியாது… அவர் குரலின் சிறு வருத்தம் அவனைச் சட்டென்று தீண்டியது. மிக அடக்கத்துடன், நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் – என்றான்.

பொதுவாக இப்படி சமாச்சாரங்களை சற்று உள்ஹாஸ்ய வேடிக்கையான மந்தகாசத்துடன் – படைப்பு மாதிரிகளில் எதிர் இருக்கே… இது ஒரு மாமிச அம்சம்! – என்று எள்ளலுடன் தனு அணுகுவது உண்டுதான்.

எப்படியோ அவனுக்கு அவரைப் பிடித்திருந்தது.

– சார் புனைப்பெயரில் எழுதறீங்களா ?

– தைரியமா, சொந்தப் பெயரிலேயே எழுதறேன்… என்கிறார் அவர்.

—-

/தொ ட ரு ம்

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts