நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘….ELLE ETAT FORT DESHABILLEE

ET DE GRANDS ARBRES INDISCRETS

AUX VITRES JETAIENT LEUR FEUILLEE

MALINEMENT, TOUT PRES, TOUT PRES. ‘

– Arthur Rimbaud

காற்றுச் சுழன்றுசுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மரங்கள் உக்கிரம்வந்து ஆடிக்கொண்டிருந்தன. மூங்கிற்புதர்களில் மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்புவது ஓசையல்ல, பிடாரிகளின் ஓலம். தொலைதூரத்தில் கீழ்வானத்தில் வெட்டும் மின்னற்கீற்றுகள். அவற்றின் ஒளியில் சரசரவென ஓடி மறையும் பாம்புகள். மலைகளிரண்டு ஒன்றோடொன்று மோதித்தெறிக்கும் வகையில், மின்னலைத் தொடர்ந்த இஇடியோசை. இடிக்குப் பலியாகி மளமளவென்று எங்கோ முறியும் கிளைகள், சாயும் மரங்கள். தப்பிப் பிழைத்து ஓடுகின்ற நரிகள், அவற்றின் ஊளைகள். அக்காட்சியைப் பார்த்து மிரளும் ஆந்தைகள், அவற்றின் அலறல்கள்.

சில்வியின் உடல் வெடவெடத்தது. இதுபோன்ற இரவுகள் அவளுக்குப் புதியதல்ல. காட்டுப் பன்றிகளையும், முயல்களையும், தப்பிக் கரையொதுங்கும் கடலாமைகளையும், சில சமயங்களில் இவளது விருப்பத்திற்குமாறாக, கொளுத்திய பந்தங்களை நோக்கிப் பாயும் பெருமீன்களை வெட்டிப் பிடிப்பதற்கும், போர்த்துகீசியர்கள் காலத்திலேயே முற்றிலுமாக வேட்டையாடப் பட்டு அழிந்துபோன தொதோ(Dodo) பறவைகள் இரவுநேரத்தில் வலம்வருவதாக உலவும் கதைகளை நம்பிக்கொண்டு அவற்றைத்தேடி அலையவும் சில்வியாவின் தந்தை ‘குரூபா ‘; இதுபோன்ற இரவுகளையே தேர்ந்தெடுப்பான். இவளது சகோதரன் லூதர், எப்போதும் கபானில் தங்குவதில்லை. கறுப்புநதியை ஒட்டியக் கரும்புப் பண்ணையில் சிலகாலம் அடிமையாகவிருந்தவன், பண்ணை முதலாளி ‘லொரான்ஸ் அர்த்துய்ர் ‘ ஐத் தாக்கிவிட்டுக் காட்டில் புகுந்துகொண்டான். எப்போதும் குடித்துக் கொண்டிருப்பான். எனவே சில்விக்குக் காடுகளில் இரவு நேரங்களில் தந்தையுடன் அலைவதென்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது; ஆனால் இன்றைய இரவு அப்படிப்பட்டதல்ல.

வித்தியாசமான இரவு. கைலாசத்தோடு அநேக பகற்பொழுதுகளில் அருகருகே உட்கார்ந்து, கொட்டுகின்ற அருவிகளின் சாரலில், சூரிய ஒளியை மறுத்துநிற்கும் அடர்ந்த மரங்களின் நிழலில் இனிக்க இனிக்கப் பேசியிருக்கிறாள். அவன் பேசுகின்ற அழகை, அரை மயக்கத்தோடு அவதானித்திருக்கின்றாள். அப்போதெல்லாம் தோன்றாத, உடலிற் பரவாத, நெஞ்சில் ஊறாத தாபம் இன்றைக்கு, இந்த இரவில், இந்தக் கணத்தில் அவனது அண்மையில் ஏற்பட்டிருக்கிறது. இருட்டின் கோர விளையாட்டினால் ஏற்பட்ட அவளது அச்சத்தைத் தணிக்கும் வகையில் கைலாசம், அவனது ஆண்மை. அருகில் சில்வியா இவளது பெண்மை. இடிக்கும் மின்னலுக்குப் பதிலளிக்கும்வகையில் இருவரும் அணைத்தவாறிருந்தனர். அறிவும், உணர்ச்சியும் மல்யுத்தம் நடத்தின. சில நேரங்களில் உணர்ச்சி மிகச் சுலபமாய் வென்றுவிடும்.. இங்கேயும் அதுதான் நடந்ததது. யாார் முதலில் அணைத்தது என்ற கேள்விக்கு இடமில்லை. இருட்டும் தனிமையும் இருவரையும் ஒருவராக்கியிருந்தது, உமையொருபாகனாய் வடிவெடுத்திருந்தனர். மோகத்தின் வசப்பட்டுப் பளபளத்த அவளது கறுத்த உடல், இவனது இந்திரியங்களை இயக்கவாரம்பித்திருந்து சில நொடிகள் கழிந்திருந்தன. இருவரது கைகளும் கால்களும், அவைகளின் எதிர்த் திசைகளில், இன்ப மூலங்களைத் தேடியலைந்தன. தழுவலில் இவளது கறுத்த பெரிய முலைகள் அவனது பரந்த மார்பில் இறங்க முயற்சித்து முகம் தாழ்ந்தன. அவனது எச்சிலூறிய அதரங்களில் இவளது பெரிய அதரங்கள் பற்களோடு பதிந்திருக்க, இருவருமே இமைகள்மூடி மயக்கத்திலிருந்தனர். நட்சத்திர ஒளியில், கைலாசத்தின் நீண்ட கரங்களின் முரட்டுத்தனமான இறுக்கத்தினை இவளது உடலிற் தாபத்துடனும், மனத்தில் ஏக்கமுமாக சுகத்தின் பிரவாகத்தில் மூழ்கி அனுமதிக்கிறாள். அவளது ஆடையை அவன் விரல்கள் மெல்லக் களைய முயற்சித்தபோது மயக்கத்திலிருந்த பெண்மை விழித்துக் கொண்டது.

‘கைலாசம் வேண்டாம். உங்கள் ஊர்ப் பெண்கைளைப் பற்றியும், கற்புக்குக் கொடுக்கும் மரியாதைப்பற்றியும் தெய்வானை நிறைய சொல்லியிருக்கிறாள்.. உன் அம்மாவின் எதிர்பார்ப்பிற்குரிய பெண்ணாக நான் நடந்துகொள்ளவேணும்… ‘

‘உள்ளது.. மெல்ல வார்த்தையாடு. நீ சொல்வது நிஜமானப் பேச்சு. வந்த காரியம் மறந்தாகிவிட்டது. என்மனசு சஞ்சலமுற்றுவிட்டது. என்னை மன்னிக்கவேணும் சில்வி ‘ இருவரும் விலகிக்கொண்டார்கள்.

‘போகட்டும்.. உன்னை நிந்திப்பதற்கில்லை. இந்தபடிக்காய் நடந்து கொண்டதற்கு இருவருமே பொறுப்பு. வார்த்தையாடலுக்கு நேரமில்லை சற்றுநேரத்திற்கு முன்னாலே, இருவர் நம்மைப் பின் தொடர்வதாகத் தோன்றியதே அது உண்மையா ? இல்லைப் பிரமையா ? ‘

‘ இதுவரை பிரமையில்லை என்றே நினைக்கிறேன். என் உள்மனது அதனை மறுக்கிறது. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து ஆர் என்று

பார்ப்போம். ‘

ஒரு பெரிய மின்னலொன்று அடிவானில் தோன்றிக் கீழ் நோக்கி இறங்கியது.

‘கைலாசம் என்னால் எதையும் பார்க்க இயலவில்லை. அனைத்துமே இருட்டாக இருக்கின்றது. என் கண்பார்வை போய்விட்டதா ? ‘

‘பைத்தியக்காரி..! எதையாவது உளறாதே! மின்னலைப்பார்த்ததால் வந்த கோளாறு. ஏற்கனவே இருட்டைத் தவிர இங்கே வேறென்ன தெரிகிறது. மறுபடியும் விழிகளிரண்டையும் சிறிதுநேரம் மூடி மீண்டும் திற, எல்லாம் பிரவேசமாகும் ‘

அவன் கட்டளைக்குப் பணிந்து, சில்வி அவ்வாறே செய்தாள்.

‘ ரொம்ப சரி. நான் என்னவோ ஏதோவென்று பயந்துவிட்டேன். அதோ….! ஒன்றையொன்று பின்னியிருக்கும் தென்னைகளை இங்கிருந்து பார்க்க முடிகின்றது. துர்க்கைக்கல், இங்கிருந்து பார்ப்பதற்கு இருட்டை விலக்கிக்கொண்டு எழுந்து நிற்பது தெரிகிறது. வா பக்கத்திற் போகலாம். ‘ அவனது கையினைப் பற்றிக் கொண்டு எழுந்து நின்றாள்.

இருவரும் எழுந்து நிற்பதற்குக் காத்திருந்ததுபோல, அவர்கள் நின்ற இடத்துக்கு நேரெதிரே இருவர் வந்து நின்றனர். அவர்களின் கறுத்த உருவமும் தலையொட்டிச் சுருண்டிருந்த கேசமும் அவர்கள் ஆப்ரிக்கர்கள் என்பதனை வலியுறுத்தின. முதலாவதாக நின்றிருந்தவனின் குரலைக் கேட்டதும் சில்விக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர வந்தன. அவளது சகோதரன் லூதர் அவன். இரண்டாவது மனிதனை யாரென்று அவளுக்குத் தெரியாது. அந்தக் குரல் ஏற்கனவே அவளுக்குப் பரிச்சயமானது. லூதர் இரவு நேரங்களில் தங்களுடைய கபானுக்கு நேரம் கழித்து வரும்போதெல்லாம் அவனைத் துரத்திவந்து வெளியில் நின்றவாறே அவனை அழைக்கும் குரல். அந்த நேரத்திலெல்லாம் சில்வியின் தந்தை குருபா ஆவேசமுற்றிருக்கிறார். அவனது சகவாசம் வேண்டாமென எச்சரித்திருக்கிறார். அவன் மதிப்பதில்லை. குடிபோதையிற் கண்டதை உளறிவிட்டு அந்தக் குரலுக்குரியவனோடு ஓடி இருட்டில் மறைந்து விடுவான். இருவரும் இப்படித் தங்களைத் துரத்திக்கொண்டு வருவார்களெனச் சில்வி எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை, வேறு காரனத்தை முன்னிட்டு இங்கே வந்திருப்பார்களா என்ற ஐயமும் அவளிடம் எழாமலில்லை.

புதிய மனிதர்கள் இருவரும் ஆப்ரிக்க மொழிகலந்த பிரஞ்சில் பேசினர். கைலாசத்துக்குச் சரியாக விளங்கவில்லையெனினும், சில்விக்கு விளங்கியது. அவர்கள் பேசுவது கிறேயொல் மொழி. அவர்கள் வீட்டில் பேசுகின்ற மொழி. அவர்கள் பேசப்பேச இவள் மொழிபெயர்த்தாள்.

லூதர்தான் முதலாவதாகப் பேசினான்.

‘இப்போது மிஸியேவுக்கு (ஐயாவுக்கு) என்ன பதில் தெரிவிப்பது. ஒவ்வொரு நாளும் அவர்கைளைப் பின் தொடர்ந்து, இன்றைக்கு முக்கியமான தருணத்தில் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும்படி ஆகி விட்டதே! ‘

‘ என்னைக் குற்றம் சொல்லாதே! எதனையும் உருப்படியாகச் செய்யாதவன் நீ.. நேற்றும் அப்படித்தான் அந்த அம்மாவிடம் கொஞ்சம் மிரட்டி உண்மையை வரவழைத்திருக்கலாம். இப்போது இது மாதரியானதொரு இருட்டில் அவர்கைளைப் பின் தொடர்ந்து சங்கடப்பட வேண்டியதில்லை. அதனை விடுத்து எதையெதையோ உருட்டி அங்கே தேடவாரம்பிக்க, அந்த அம்மா கபானுக்குள் நுழைந்துவிட்டது. ‘

‘ நீ மட்டுமென்ன ? யோக்கியமா ? அந்த அம்மாவை இப்படித் தாக்கியிருக்கவேண்டாம். முதலுக்கே மோசம் வந்திருக்கும். அந்த அம்மா மட்டுமே உண்மையான ரகசியங்கைளை அறிந்தவர். அவர்களுக்கேதேனும் நடந்திருந்தால் மிஸியே நம்மைக் கொன்றே போட்டிருப்பார். ‘

‘ சரி.. சரி இருவரும் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் பொழுது விடிந்துவிடும். பயல் கைலாசமும், சில்வியும் எங்கே போய்த் தொலைந்தார்கள். அவர்களிருவரும் நாம் தேடுவதைத்தான் தேடிவந்திருக்கிறார்கள். அதிக தூரங்கூடப் போயிருக்க வாய்ப்பு இல்லை. என்ன செய்யலாம் ‘

‘அதுதான் ஆச்சரியமாகவுள்ளது. எப்படி இருவரும் மாயமாய் மறைந்தார்கள் ? அந்தப் பயல் கைலாசத்துக்குக்கு ஏதேனும் மாய வித்தைகள் தெரியுமோ ? ‘

‘இருக்கலாம். இந்தியர்கள் மாயவித்தைகள் அறிந்தவர்கள். நம்முடைய ஆப்ரிக்க இனத்தைப் போன்றே அவர்களுக்கும் வசியம், பில்லி சூனியம், மாரணம் (மந்திரத்தாற் கொல்லுதல்), வூடு (Voodoo), பலிகள் போன்றவற்றில் கை தேர்ந்தவர்கள். நம்முடைய எஜமானரும் மாயவித்தைகள் தெரிந்தவர் என்பதை என் இஇரண்டு கண்களால் பார்த்திருக்கிறேன் ‘

‘அப்படியா! எனக்கும் நம்முடைய மிஸியேவை பார்க்கவேண்டுமென்கின்ற வெகு நாட்களாக ஆசை. எப்போது அழைத்துப் போவாய் ? ‘

‘ அதற்குக் காலம்வரும். அழைத்துப் போகிறேன். இப்போது வேண்டாம். ஐயாவும் அதனை இப்போதைய சூழலில் விரும்பமாட்டார். சரி சரி இங்கே வெட்டியாய்ப் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டு மீண்டும், போர் லூயிக்குத் திரும்புவோம். காமாட்சி அம்மாளுடைய கபானுக்குச் சென்று காத்திருப்போம்.. எப்படியும் உனது தங்கையும், கைலாசமும் திரும்பியாகவேண்டும். என்ன நடக்கின்றது ? பார்ப்போம் ‘.

அவ்விருவரும் வடக்குத் திசைநோக்கி எட்டி நடந்து மீண்டும் காட்டுக்குள் புகுந்தனர்.

அவர்கள் போகவும் மேகத்தைக் கலைத்துக்கொண்டு நிலா வெளிப்பட்டது. காற்று முற்றிலுமாக அடங்கியிருந்தது. வானம் தூறல் வானமாக மாறியிருந்தது. இஇந்துமகா சமுத்திரத்தின் இரைச்சலும், ஆப்பிரிக்கமக்கள்வசிக்கும் பகுதியிலிருந்து பாட்டும் ஆட்டமும் கேட்டது. றபாணம், மற்றும் போபரை* வேகமாக அடித்துக்கொண்டு அதனிசைக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தனர். பறங்கியரின் கரும்புப் பண்ணைகளில் வேலைசெய்பவர்கள் தங்கள் உடல் வலியை மறக்க இரவு நேரங்களில் இம்மாதிரி குடித்தும் பாடியாடி மகிழ்வது வழக்கம்.

கைலாசத்திற்கும், சில்விக்கும் மனதிற் தைரியம் ஏற்பட்டது.. கைலாசம் மெல்லச் சில்வியின் தோளைப்பற்றி அழைத்தான்.

‘வா.. இனிப் பயமில்லை. துர்க்கைப் பீடம் அருகிற்தானுள்ளது. அம்மா குறிப்பிட்ட இடம், துர்க்கைப் பீடத்திற்கருகில் , சற்றுமுன்னர் நீ சுட்டிக்காட்டிய இரண்டுதென்னைகள் பின்னியுள்ள இடம்…. ‘

அவன் முன்னே செல்ல, அவனையொட்டியே சில்வியும் சென்றாள்.

மெள்ள இருவரும் துர்க்கைப் பீடத்தருகே நெருங்கி நின்றார்கள், பிணைந்துள்ள இரு தென்னைகளையொட்டிப் பார்வையைக் கொண்டுபோனார்கள். பெரிய பள்ளமொன்று வெட்டப்பட்டிருந்தது. பள்ளம்முழுக்க மழைநீர். பலநாட்களுக்கு முன்னதாகவே கள்ளிப்பெட்டி வேறொருவர் கைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பது தெளிவாயிற்று.. சில்விக்கு ஏமாற்றாமாகவிருந்தது. கைலாசம் முகத்தில் எந்த வெளிப்பாடுமில்லை.

‘கைலாசம்.. உங்கள் அம்மாவிற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள். இந்தப் படுபாவிகளும் எதற்காக நம்மைப் பின்தொடர்ந்துவந்தார்கள் எனத் தெரியவில்லையே ? என் தந்தை சொன்னது சரியாகிவிட்டது. என் சகோதரன் ஏதோ தகாதசெயலில் ஈடுபட்டிருக்கின்றான் என்பது நிச்சயம். தவிர உங்கள் அன்னைக்கு எதிராகவென்றால், என் தந்தையின் கோபம் அவன்மீது மேலும்கூடுமே தவிர, ஒருக்காலும் குறையாது. எனது மனதிற்குக்கூட சங்கடமாகவுள்ளது. உங்கள் அன்னைக்குத் தெரியவந்தால் எங்கள் குடும்பத்தைப் பற்றிய அவரது அபிப்ராயம் சிதைந்துவிடுமோ ? நம்மிரு குடும்பங்களுக்கிடையில் பகைவந்து சேருமோவென்று, மிகவும் அச்சமாகவுள்ளது. ‘

‘ என் அன்னையின் குணவிசேடங்களை அறிந்துமா இப்படியான முடிவுக்குவந்தாய். உன் மீதும், உன் குடும்பத்தார் மீதும் என் அன்னைக்கு அளவுகடந்த பிரியமும் உள்ளது. அந்தப் பிரியத்திற்கும், நம்பிக்கைக்கும் பங்கமெதுவும் ஏற்பட்டுவிடாது. வீணாக அஞ்சவேண்டாம். வா சீக்கிரம் கபானுக்குத் திரும்புவோம். அன்னையும், என் தங்கை தெய்வானையும் நமக்காகக் காத்திருப்பார்கள். ‘ சில்வியை அழைத்துக் கொண்டு மேற்குத்திசையை நோக்கி நடந்தான்.

கைலாசமும் சில்வியும் கபானை அடைந்தபோது விளக்கேற்றிவைத்துக்கொண்டு பின்னிரவிலும் தூங்காமல், காமாட்சி அம்மாளும் தெய்வானையும் .இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

காமாட்சி அம்மாவின் பார்வை கைலாசத்தின் கைகளில் விழுந்தது..

‘என்ன நேர்ந்தது மகனே ? பெட்டியைக் கொண்டுவரவில்லையா ? ‘

‘ அம்மா.. உள்ளே சென்று பேசுவோமே. இந்த அகாலநேரத்தில் இப்படி வெளியே நின்று நாம் வார்த்தையாடுவது நல்லதல்ல. ‘

நால்வரும் உள்ளே நுழைந்து மணையிட்டு அமர்ந்தார்கள்.

‘ அம்மா யாரோ நமக்கு முன்னதாக அப்பெட்டியைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ‘

‘ என்ன சொல்கின்றாய். இங்கேயும் நமக்கு எதிரிகளா ? ஈஸ்வரா! கடவுளே என்ன சோதனையிது. ? இனி யாரிடம் முறையிடுவேன் ? ‘

‘அம்மா. கஸ்தியேதும்வேண்டாம். எல்லாம் நல்லதுக்கே என்று நினை. எந்த ஆபத்தும் நம்மை அண்டாது ‘

‘ எனக்கு ஆபத்தென்றால் வருத்தப்பட என்ன இருக்கிறது. என் கண்மணிகள் உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது ‘

‘அம்மா.. இப்படித் தொடர்ந்து எங்களுக்குத் தெரியாமல் ஏதோ ரகசியத்தினை மறைத்துவைத்து எவ்வளவு நாைளைக்குத் துன்புறப் போகிறாய் ? எங்களிடம் உண்மையைச் சொன்னாலென்ன ? நானும் தெய்வானையும் சின்னைப் பிள்ளைகளா ? எதனையும் சந்திக்கின்ற உடல் வலிமையும் மனவலிமையும் எங்களுக்கு உள்ளது என்பதை நீ உணரமறுக்கிறாய். ‘

‘ உண்மை மகனே. உங்களிடம் ஆரமம்பத்திலேயே சொல்லியிருக்கலாம். ஆனால் உன் தந்தை அதற்கான காலம் வரும் அப்போது சொல் என்றார். நம் குடும்பத்து ரகசியத்தை அறிந்த இன்னொரு நபர் நம்மோடு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுத் தீவுக்கு வந்தவர் இங்கிருக்கிறார். அவரது ஒப்புதலில்லாமல் அந்த ரகசியத்தை சொல்லிவிடக்கூடாது. அவர் வரட்டும். அவரது அனுமதி பெற்று அனைத்தையும் ஆதியோடந்தமாகச் சொல்கிறேன். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். குறிப்பாகத் தெய்வானையின் மீதொரு கண் வைத்திரு. குழந்தாய் சில்வி உன்னுடைய தயவும் எங்களுக்கு நிறைய வேண்டும் ‘ என்ற காமாட்சி அம்மாளின் கைகளைப்பற்றி சில்வி கண்களில் ஒத்திக் கொண்டாள்.

திடாரென வெளியே கூச்சல் கேட்டது. இரண்டொரு கறுப்பர்கள் முன்னே ஓட அவர்களைத் துரத்திக் கொண்டு குதிரைகள். ‘ ‘ போல் ‘ கரும்புப் பண்ணையிற் குழப்பமாம். அங்கிருந்த கறுப்பு அடிமைகளிற் சிலரை வெட்டிப்போட்டுவிட்டு மற்ற அடிமைகள் தப்பித்திருக்கின்றார்கள் ‘, என்ற செய்தி பரவியது. நாளை நடக்கவிருப்தை நினைத்து போர் லூயி (Port Louis) கறுப்பின மக்களுக்கு மட்டுமல்ல இந்தியமக்களுக்கும் தூக்கம் போயிற்று.

/தொடரும்/

*the bobre, the ravane, the maravane and the triangle. New ingenuous instruments never heard before. The bobre is a long wooden bow kept arched over a large gourd-like, rough skinned, hollow fruit (the calebasse) by a vegetal string, this being hit by a stout wooden rod. Its mournful twang has however, sadly, been lost over the years and it is no longer part of a sega music team. The ravane is a hide, pulled taught over a wooden circular frame. Tightened even more to a vibrant limit over a fire-wood flame, and sometimes ringed with bells, it is at the heart of the sega ‘s beat.

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts